ஒரு ரத்தக்கண்ணீர்

This entry is part 8 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா

அதோ அங்கே
ஒரு “கிரஹப்ரவேசம்”
மாவிலை தோரணங்கள்.
மங்கலப்புகை மூட்டம்.
கொம்புகளை ஆட்டிக்கொண்டு
உள்ளே நுழைந்தாள் “கோ மாதா”

மாடல்ல மற்றையவை என்று
வள்ளுவனும்
இதைத்தான் குறிப்பிட்டான்.
ஆ வை
அன்னையாக‌க்க‌ருதுவ‌தில்
பிழையில்லை.
ஆனால்
த‌மிழ் அன்னையை ம‌ட்டும்
தெருவோர‌ம்
எச்சில் இலைக‌ள்
எப்போது குவியும் என்ற‌
இட‌த்தில் இருத்திவிட்டு
“ஹோம‌ங்க‌ள்” கொடி க‌ட்டுகின்றனவே!

ல‌க்ஷ்மி ஹோம‌ம்
க‌ண‌ப‌தி ஹோம‌ம்
……..
ம‌ந்திர‌ங்க‌ள் திகு திகு வென்று
எரிகின்ற‌ன‌.
ஸ்லோக‌ங்க‌ள் எனும்
ஆக்கிர‌மிப்பு செய்த‌
ஓசைக்கூச்ச‌ல்களின்
“(கோ)மூத்திர‌ ஜ‌ல‌த்தில்”
த‌மிழ‌னின் வீடு
க‌ழுவி விட‌ப்ப‌டுகிற‌து.

ஹோம‌ங்க‌ள்
எந்த‌ பெய‌ரில் இருந்தாலும்
அவை எத‌ற்கு எழுந்த‌ன‌ தெரியுமா?
இந்த‌ ம‌ண்ணின் ப‌ழ‌ங்குடிக‌ளை
(ஆராய்ச்சியாள‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி
அவ‌ர்க‌ள்
திராவிட‌ (தாஸ‌)த் த‌மிழ‌ர்க‌ள்
அல்ல‌து
த‌மிழ்த்திராவிட‌ர்க‌ள்)
துண்டு துண்டாக‌ வெட்டி
ய‌க்ஞ‌த்தில் போட்டு எரிய‌ விட்டு
அந்த‌க்கால‌ டாஸ்மாக் ச‌ர‌க்கான‌
சோம‌க்க‌ள் குடித்துக்க‌ளித்து
பாடிய‌ “ரிக்கு”க‌ளே
ரிக் வேத‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளும்
சூக்த‌ங்க‌ளுமாய்
புகை ம‌ண்டி ந‌ம் மூச்சை
திண‌ற‌ வைத்த‌ன‌.
நம் சுவடுகளை அழித்துவிட‌
அணி வகுத்தன.

“பல்யாக சாலை முது குடுமிப்பெருவழுதி”
என்றெல்லாம் மேற்கோள் காட்டலாம்.
சிந்து வெளி தமிழன்
அந்த அயலவர்களால்
சாய்க்கப்பட்ட போதுதான்
இந்த நாய்க்குடை காளான்களில்
இந்த குரைப்பு சத்தங்கள் கேட்டன.

அர‌ப்பா ந‌க‌ர‌த்து அழிவின் விளிம்பில்
ஆரிய‌ம் கிளைத்த‌து
திராவிட‌ம் இளைத்த‌து.
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
உர‌சிய‌ ர‌த்த‌ங்க‌ளின்
உற‌வு பூத்த‌ ஓசைக‌ளே இவை.

சங்கத்தமிழுக்குள் வேதம் இருந்ததா?
வேத‌த்துள்ளே ச‌ங்க‌த்த‌மிழ் இருந்த‌தா?
திற‌வு கோல் ச‌ம‌ண‌த்த‌மிழிட‌மே உண்டு.
அது திற‌ந்து காட்டும் வெளிச்ச‌ம்
சிந்துவெளித்த‌மிழே ஆகும்.

ச‌ம‌ என்ற‌ தூய‌ த‌மிழ்ச்சொல்
ச‌மை என்ப‌த‌ன் ம‌ரூஉ.
எல்லாம் ஒன்றாய் ப‌க்குவ‌ம் அடைவ‌தே ச‌ம‌ம்.
அதுவே ஆழ்னிலை ச‌மைய‌ம்
எனும் தியான‌ம்.
ச‌ம‌ண‌த்த‌மிழும் சிந்துத்த‌மிழே.
சமம் பற்றிய சிந்தனையே அது.
சிந்துவெளி படிவங்களின்
கோட்டோவியங்கள்
தமிழ்ச்சிந்தனையின் வெளிப்பாடுகள்.

ம‌லையைக்கெல்லி எலி பிடிப்ப‌து
அல்ல‌ இந்த சிந்த‌னை.
த‌மிழ்ச்சொல்லின் வேர் ஊடி
நுணுகிச்சென்றால்
அதுவே ம‌ற்றுமொரு
“கார்ப‌ன் டேட்டிங்”.
வேதத்திற்கு வ‌ரி வ‌டிவ‌ம்
த‌ந்த‌து தேவ‌ நாக‌ரி எனும்
த‌மிழின் ப‌ண்டை வ‌டிவ‌மே.
“நகர்” என்பது தூய தமிழ்ச்சொல்.
நகர்தல் என்பதன்
“வினை ஆகுபெயர்” அது என்று
தமிழ் இலக்கணம் சொல்லும்.
இலக்கணம் என்பது
வடமொழி என்றால்
தேவநேயப்பாவாணர் கோட்பாட்டில்
அதற்குள்ளும்
தமிழின் வேர் மறைந்து இருக்கும்.
“இலங்கு என்றால்
விளங்கு.. சுடர்விடு..என்று பொருள்.
இலங்கு இலக்கு ஆகி
இலக்கணம் ஆனது.

தீ என்ற சொல்லே தே ஆனது.
“வாக்ஸ் பாபுலி வாக்ஸ் தே”
(“மக்கள் குரலே தேவன் குரல்”)
என்ற கிரேக்க லத்தீன் சொற்களில்
வரும் “வாக்”
தமிழ்ச்சொல் வாக்கு ஆகும்.
தீ (நெருப்பு)
என்பதே பண்டை இறை வடிவம்.
அதுவே தே ஆகி தேவ ஆனது.

மேலை நாட்டு மேய்ப்பர்கள்
கணவாய் வழியே வரும்போதே
கொண்டு வந்த ஓசைகளே
வேதங்கள் ஆகின.
இதன் வேர் நோக்கி இறங்கினால்
சிந்துத்தமிழன் தொடர்பு கொண்ட‌
அந்த மேலைநாட்டு மொழியே
இங்கு ஓசை கிளப்பின.
இந்த ஒலித்தலின்
கருமூலத்தில் எல்லாம்
தமிழின் ஒலி மூலம் இருப்பதை
ஆராய்ந்து அறியலாம்.

வரலாற்று பின்னல் முடிச்சுகளில்
கால் மாறி கை மாறி
குரல் மாறி கரு மாறி
வந்த “விபீடணச்சிந்தாந்த”
வடிவங்களே இவை.

ஐந்திணை வாழ்க்கை
சிந்து வெளித்தமிழன் வாழ்ந்தது.
தமிழர்கள் ஐந்திறத்தார்
என அறியப்பட்டனர்.
“பஞ்சமனுசா” என்று
ரிக் வேதம் பழிவாங்கத் துடித்ததும்
சிந்து வெளித்தமிழர்களே.
மிகவும் வலிவு பெற்ற‌
ஐந்திறனே “இந்திரன்” ஆனான்.
சிலப்பதிகாரமும்
இந்திரனுக்கு விழா எடுத்தது
நாம் அறிவோம்.
ஆயினும்
அந்த அயலவரின்
கைபிள்ளை ஆகினான் அவன்.
ரிக் வேத நாதனாக மாறியதே
இனவழித்திருப்புமுனையின் பேரழிவு.
(எத்னிக் கேடஸ்ட்ராஃபி).

சிந்து வெளித்தமிழனின்
நூற்றுக்கணக்கான‌
அணைக்கட்டுகளின்
கோட்டைகளின்
உள் கூடு அறிந்த இந்திரன்
ஹோமக்கள் நுரைத்த‌
போதையில் விழுந்தான்.
அவனால்
சிந்து வெளித்தமிழன்
சிதைக்கப்பட்டான்.

ஒரு “வாட் 69ம்
ஷேம்பெய்னும்”
ரஷ்ய கம்யூனிசக்கோட்டையை
தரை மட்டம் ஆக்க முடிந்தால்
இந்த “சோம”க்கள்ளே போதுமே.

அந்த பகைவர்களுக்கு.
“சோமக்கள்ளும்” “இந்திரனும்”தான்
அந்த அயலவர்களின்
கன ரக பீரங்கிகள்.

1..3..4
1..3..6
1..4..1
1..5..1,6
1..6 ல் 5லிருந்து 10 வரையுள்ள வரிகள்
1..8 ல் 1லிருந்து 6 வரையுள்ள வரிகள்
………
………

இப்படி நூற்றுக்கணக்கான “ரிக்” வரிகள்.
இந்திரனை
போர் வெறியின் முறுக்கேற்றி
முழக்கிப்பாடுகின்றன.
(ஆதாரம்..”அரப்பாவில் தமிழர்”
எழுதியது “குருவிக்கரம்பை வேலு”)

நம் உள்ளூர் வேலு
உங்களுக்கு கிள்ளுக்கீரை என்றால்
“வால்கா முதல் கங்கை வரை..”
எழுதிய‌
ராகுல் சாங்கிருத்யாயன்
ம‌ற்றும்
“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” எழுதிய‌
பண்டித நேரு
போன்றவர்களும்
தமிழின்
பண்டைய‌
மண்டையோட்டுக்குள் தான்
உலகத்தின் நாகரிக தொட்டில்
ஆடியது என்று
கோடு காட்டுகிறார்களே.

தமிழா!
குத்தாட்டம் குதியாட்டம்
எல்லாம் போதும்.
இதனால் நீங்கள்
மீண்டும் “வானரர்கள்” ஆகும்
அபாயம் வெகு தூரத்தில் இல்லை.
அச்சம் தவிர்.
அதற்கு முன் இந்த‌
உறக்கம் தவிர்.

அதோ நாதஸ்வரம்
மீண்டும் அழைக்கிறது அங்கே!
புதும‌னை புகுவிழா எனும்
“நூத‌ன‌ கிர‌ஹ‌ப்ர‌வேசம்”..
இன்னும் ந‌ம்மை
ந‌ம் எலும்பு மிச்ச‌ங்க‌ளைக்கூட‌
மாஞ்சுள்ளிக‌ளின் உருவ‌க‌த்தில்
அந்த‌ அக்கினிக்கு தீனியாக‌
கொடுத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

எல்லாம் முடிந்து
தட்சிணை கொடுத்தாகி விட்டது.
உனக்கு
மனம் “த்ருப்தி”யாகி விட்டது.
இருப்பினும்..
தமிழா..
உன் நிழலில் எல்லாம் இன்னும்
ரத்தக்கண்ணீர் தான்.

==ருத்ரா

Series Navigation“ஆம் ஆத்மி”பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *