சென்னை மழையில் ஒரு நாள்

This entry is part 5 of 17 in the series 6 டிசம்பர் 2015

Chennai rains

கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா தபால்துறை ஊழியர்.

33 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டப்பட்ட போது நகரை சுற்றிலும் வயல்கள் தான்.நகரே ஒருவருடைய வயல் தான்.கிராமம் இரும்புலியூர்.வீட்டுக்கு பக்கத்துக்கு மனை தேசமுக்தி அம்மன் கோயில் நிலம்.தனியார் வசம் இருந்த கோவில் என்பதால் கோவில் நிலத்தை கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் விற்று பங்கு போட்டு கொண்டார்கள்.ஆனாலும் வங்கிகள் கடன் கொடுக்க கூடிய அளவு சான்றிதழ்கள் இல்லாததால் சில மனைகள் காலியாக உள்ளன். தெருமுனையில் பல ஏக்கர் நிலம் கந்தசாமி கோவிலுக்கு பக்தர் ஒருவரால் எழுதி வைக்கப்பட்ட நிலம்.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால் ?பக்தர்கள் அந்த நிலத்தை விற்க முடியவில்லை. பல ஏக்கர் பரப்பளவில் கருவேலமரங்களும் குப்பைகளும் சூழ்ந்த பகுதியாக விளங்குகிறது.

சுற்றிலும் இருந்த வயல்கள் அனைத்தும் மறைந்து வீடுகளாகவும் ,அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி விட்டன.பள்ளியில் படித்த காலத்தில் விடுமுறையின் போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வயல் கிணற்றில் குளிப்போம்,சக்தி கிணறு,முனு ஆதி கிணறு,ரூபன் கிணறு என்று அதன் உரிமையாளர்கள் பெயரில் இருந்த அவை அதே பெயர்களில் அல்லது அவர்களின் பெற்றோர் பெயரில் நகர்களாகி விட்டன.பெருகி வரும் மக்கள் தொகையில் இந்த மாற்றம் தவிர்க்கபட்டிருக்க முடியுமா.பழைய கிராமமான இரும்புலியூரில் இந்த மழையிலும் எங்கும் தண்ணீர் புகவில்லை.ஆனால் சில லட்சம் மக்கள் தொகையில் இருந்து கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சென்னை புதிதான வாழ்விடங்களை,தரிசுநிலங்களை,புன்செய் நிலங்களை வீடுகளாக மாற்றாமல் எப்படி பெருகி வந்த மக்கள்தொகையை உள்வாங்கி இருக்க முடியும்.

ஒரு மாதமாக வீட்டினுள் தண்ணீர் வருவதும் போவதுமாக இருந்தது. கீழே அண்ணனின் குடும்பம் வசிக்கிறது.முதல் தண்ணீர் வருகையின் போது குளிர் சாதன பெட்டி, துணி வெளுக்கும் இயந்திரம்,கட்டில்கள் போன்றவை கீழே கற்கள்,மர ஸ்டூல்கள் மேல் வைக்கப்பட்டன.தெருவில் கட்டப்பட்ட முதல் சில வீடுகளில் ஒன்று என்பதால்(இதற்க்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி விட்டன)உயர்ந்து வந்த தெருவின் உயரத்தை விட தாழ்ந்து விட்டது வீடு.கடந்த வாரம் அடித்த மழையில் 5 அடி தண்ணீர் வீட்டினுள் வந்து விட்டது.மூன்று கார்களும் பெருமளவு தண்ணீரில் மூழ்கி விட்டன.டி டி கே நகரிலேயே வீட்டினுள் தண்ணீர் வந்த ஒரே வீடு என்ற பெருமை தகர்ந்து அனைத்து வீடுகளுக்கும் அந்த நிலை ஏற்பட்டது.

மாடி இல்லாத வீட்டை சேர்ந்தவர்கள் மாடி இருப்பவர்களின் வீடுகளில் வந்து தங்கினார்கள்.எல்லை பிரச்சினை,கால்வாய் நீர் பிரச்சினை,நகர்வாழ் மன்ற பொறுப்பு பிரட்சினை,மர இலைகள் விழும் பிரச்சினை,காதல் பிரட்சினையால் எதிரிகளாக வாழ்ந்து கொண்டிருந்த பலரும் அதை எளிதாக கடந்தார்கள்.

உதவி செய்ய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த கூட்டம் தான் என்னை பிரமிக்க வைத்தது.நான் ஒரு மருத்துவன்.இந்திய ராணுவத்தில் மருத்துவனாக 14 ஆண்டுகள் பணியாற்றியவன்.அரசின் செலவில் பணியின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நடந்த இயற்கை சீற்றங்களை ,அதில் ஏற்பட்ட பாதிப்பை ,அதை மக்கள் எதிர்கொண்ட விதத்தை கண்டிருக்கிறேன்.கட்சிகளின் சார்பாக,சாதிமத இயக்கங்களின் சார்பாக,தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக இங்கு உதவ வந்த மக்களை போல எங்கும் கண்டதில்லை.

பெங்களூருவில் பணியில் இருப்பதால் செவ்வாய் முதல் சென்னை வர விமானம்,ரயில் ,பஸ்,கார் என அணைத்து வழிகளிலும் முயன்று கொண்டு இருந்தேன்.விமானம்,ரயில்,பஸ் டிக்கெட் அனைத்தும் பயனற்று இருந்த நிலையில் புதன் இரவு பெங்களூருவில் இருந்து தனியார் பேருந்தில் புறப்பட்டேன்.அன்று சாலை காலியாக இருந்தது.ஆனால் டோல் வாங்கப்பட்டு கொண்டிருந்தது.வியாழன் காலை கோயம்பேட்டை அடைந்து அங்கிருந்து மெட்ரோ ரயிலில் (அடையாறு ஆற்று செல்லும் வழியில் உள்ள பாலங்கள் வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு இருந்தது.)ஆலந்தூர் வந்தடைந்தேன்.மெட்ரோ ரயிலில் இருந்து மூழ்கிய கடைகளையும்,வாகனங்களையும் ,தண்ணீர் நிரம்பிய சாலைகளையும் பார்த்தேன்.அதை கொண்டே எந்தவித முடிவுக்கும் வர முடியாது.ஹெலிகாப்ட்டர் மூலம் ஆய்வு எனபது எந்த விதத்தில் உதவும் என்று எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. பணியின் காரணமாக பல்வேறு ஹெலிகோப்டேர்களில் பயணித்து இருக்கிறேன்.மக்களை மீட்க ,உணவு பொருட்களை வழங்க ,படங்களை எடுக்க ஹெலிகோப்டேர்கள் சரி.ஆனால் எவ்வளவு சேதம்,எவ்வளவு பணம் ஒதுக்கலாம் என்ற ஹெலிகாப்ட்டர் ஆய்வு என்ற முட்டாள்தனம் தேவையா என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

சில அத்தியாவசிய மருந்துகள்,புதிய,பழைய மொபைல்கள்,டார்ச் லைட்டுகள், மாற்றுடை,மழை பூட் ,மழை உடை .சாக்கலேட் ,பிஸ்கட் பாகேட்கள்,கூரான கத்திகள்,அடிப்படை மருத்துவ உபகரணங்களை ராணுவத்தில் முதுகில் சுமக்க வழங்கப்படும் பையில் போட்டு கொண்டு வந்தேன்.மெட்ரோ ரயில் பரிசோதனையின் போது பையில் இவை இருந்ததால் ஸ்கேன் செய்தவர் நிறுத்தினார்.முன்னாள் ராணுவ வீரரான காவல்பணியாளர் என் அடையாள அட்டையை பார்த்தவுடன் புரிந்து கொண்டு அனுப்பி வைத்தார்.

இயற்கை பேரழிவுகளின் போது உதவிக்கு செல்லும் யாருக்கும் ஆயுதங்கள் முக்கியம் எனபது கசப்பான உண்மை.பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தி தான் உதவிகளை பெற வரும் மக்களை ஒழுங்கபடுத்த முடிந்திருக்கிறது.அனைத்தும் இழந்த நிலையில் வரும் உதவியை வெறியோடு பெற்று கொள்ள போட்டி கொள்ளும் நிலை எங்கும் ஏற்படும் ஒன்று தான்.கடற்படையில் மருத்துவனாக இருக்கும் என் நண்பன் ஒருவனிடம் இருந்து அவனை அடித்து மருந்துகள் அடித்து கொண்ட செல்லப்பட்ட நிகழ்வும் உண்டு.ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை.ஆனாலும் உதவி செய்ய செல்லும் குழுக்கள் கண்டிப்பாக குழுவாக தான் செல்ல வேண்டும்.மிகவும் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.தங்களிடம் ஆயுதம் இருப்பதை மக்கள் உணருமாறு நடந்து கொள்ள வேண்டும்.தன உடைமைகளை,உறவுகளை,வாழ்வாதாரங்களை திடீர் என்று ஒரே நாளில் இழந்த மனிதர்களின் மனநிலை எப்படி வேண்டுமானாலும் மாறும். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

சென்னை ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில் நிலையம் சென்று தாம்பரம் செல்லும் முடிவை கைவிட்டேன்.பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தன.அதில் ஏறி தாம்பரம் சென்றேன்.பேருந்தில் அந்த சூழலிலும் சில்லறைக்காக சண்டை.அரசு இது போன்ற சூழல்களில் மிக வேகமாக முடிவெடுத்து மக்களுக்கான வசதிகளை இலவசமாக்க வேண்டும்.கடும் மழையில், தன் வீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட பணிக்கு முதலிடம் தந்து வரும் பணியாளர்களிடம் சண்டை போடுவது சரியா என்று நாம் அனைவரும் யோசிக்க வேண்டும்.தாம்பரத்தில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து இரும்புலியூர் வந்தேன்.அங்கிருந்து நடந்து வீட்டுக்கு.

இவற்றை விலாவாரியாக விவரிக்க முக்கிய காரணம் எவை எவை இயங்கியவை என்பதையும் இதே சூழலில் பல்வேறு மாநிலங்களில் எவை இயங்கும் என்பதையும் ஒப்பிட தான். காவலர்கள் அனைத்து இடங்களிலும் இருந்தனர்.கோயம்பேட்டிலும் ஆட்டோ ஓட்டுனர்கள் பணிக்கு வந்திருந்தனர்.கடைகளும் திறக்க பட்டிருந்தன.

மழையின் போது சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விடும்.அதை தவிர்க்க வீட்டில் உள்ள அணைத்து பாத்திரங்களையும் பயன்படுத்தி மழைநீரை பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் டாங்கியை திறந்து வைத்து விட வேண்டும்.அதில் அதிக தண்ணீர் சேர பலகைகளை குறுக்கு வாக்கில் சாய்த்து வைக்க வேண்டும்.மாடி வீடுகளில் தண்ணீர் தட்டுபாடு இல்லை என்றால் பலரும் தங்க முடியும்.

ஆச்சரியமாக அன்று (வியாழன்) மதியம் மின்சாரம் தாமபரத்தில் மீண்டும் தரப்பட்டது.கீழ்வீட்டில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியின் மின்சாரத்தை அண்ணன் நிறுத்தி வைத்திருந்தான்.ஆனால் கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்ற மோட்டார் போட வேண்டுமானால் அதை ஆன் செய்ய வேண்டும்.மொட்டோரும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.அதை சென்று பார்வையிட்ட அவன் மோட்டர் போட முடிவெடுத்து கட்டையின் துணை கொண்டு மோட்டர் போட்டான். இது செய்ய கூடாத ஒன்று.ஆனாலும் தண்ணீரின் தேவைக்காக எடுக்கப்பட்ட முடிவு.நல்ல வேலையாக மின்சார கசிவு இல்லை.ஆனால் முடிந்த அளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

என் இளைய மகளுக்கு காய்ச்சல்.மனைவிக்கும் இருநாட்களாக காய்ச்சல் சுரம். அண்ணன் என் மனைவி,மகள்களை அழைத்து சென்று பெங்களூருவில் உள்ள என் அரசு குடியிருப்பில் விட கிளம்பி விட்டான். அங்கு சென்று சில நாட்கள் இருங்கள் என்ற என் கோரிக்கையை மற்ற குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கிய நிகழ்வு இது.மற்ற மாநிலங்களுக்கும் சென்னை பேரழிவை எதிர்கொண்டதர்க்கும் இடையே உள்ள மிக பெரிய குறைபாடு இது.மிக மிக பெரிய தவறு

வசதி,உறவுகள் ,நட்புகள் உள்ளோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வாய்ப்பு கிடைக்கும் போது வெளியேறி பாதுக்காப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும்.நூறு கிலோமீடர் தொலைவு வந்து உறவுகளின் வீடுகளிலோ,விடுதிகளிலோ தங்கலாம்.மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வெளியேறி விடுகிறார்களோ அதை போல பல மடங்கு மீட்பு பணிகள் எளிதாகின்றன.நெருப்பு பற்றி கொண்டு இருந்தால்,பயங்கர தொடரும் நிலநடுக்கம் என்றால் அதே பகுதியில்,அதனை நெருங்கிய சுற்றுவட்டாரத்தில் இருப்போமா .இவற்றை விட தண்ணீர் வலிமை வாய்ந்தது.காட்டு தீ பரவுவதற்குள் கூட பலரை காப்பாற்றி விட முடியும்.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து பெரும்பானமையானோர் தப்ப முடியும்,காயமடைந்தவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு வர முடியும்.ஆனால் தண்ணீரிடம் இவை எதுவும் சாத்தியமே கிடையாது.இன்னும் 10 அடி தண்ணீர் ஏறி இருந்தால் இரண்டாம் மாடியில் இருப்பவர் கீழ்வீட்டில் வெள்ளம் புகுந்து விட்டது என்பதால் எதிர் வீட்டில் முதல்மாடியில் இருந்தவர்களுக்கு எந்த வித உதவியும் செய்ய முடியாமல் இருக்கும் நிலை தான். சில நொடிகளில் ஏறி வந்த தண்ணீரின் அளவினால் பாதிக்கப்பட்டு அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களின் நிலை தான்.

நான் ஒரு அரசு பணியாளன்,மருத்துவன்,அரசியல்வாதி,சமூக பணியாளன் கடை வைத்து இருக்கிறேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இருக்கிறேன் என்றால் ஞாயம் இருக்கிறது.இவர்களும் நல்ல உடல்நிலை கொண்ட,நீச்சல் தெரிந்த,உணவுக்கும் பாதுகாப்பான இருப்பிடத்திற்கும் பாதிப்பு இல்லாதவர்கள் என்றால் சரி.மற்றவர்கள் ஏன் வெளிவர மறுத்து அங்கேயே இருந்தார்கள் என்ற கேள்வியை அனைவரும் தங்களுக்குள் எழுப்பி பார்த்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும் ,சுற்றிலும் தண்ணீர் என்ற நிலையில் வயதானவர்களுக்கோ ,குழந்தைகளுக்கோ உடல்நல கோளாறு என்றால் என்ன செய்ய முடியும். தான் பணிபுரியும் மருத்தவமனைக்கு பின்புறம் வசித்தாலும் அங்கு 48 மணி நேரம் செல்ல முடியாத நிலை தான் பல மருத்துவ பணியாளர்களுக்கு ஏற்பட்டது.பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல முடியாதவர்கள் கூட்டமாக உயரமான இடங்களில் தங்க வேண்டும்.அவர்களின் தகவல்கள் அனைத்தையும் குடியிருப்பு சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள்,கவுன்சிலர்கள்.கட்சி பகுதி செயலாளர்கள் வைத்து இருக்க வேண்டும்.ஒருவரை தொடர்பு கொண்டால் எளிதாக அங்கு வசிப்பவர்களின் உடல்நிலை,தேவைகள் பற்றி அறிந்து கொள்வதை விட மீட்பு பணி செய்பவர்களுக்கு பெரிய உதவி செய்ய முடியாது.

இரண்டு நாட்களாக ராமாபுரத்தில் வசித்து வந்த பெற்றோரோடும்,தம்பியோடும் நேரடி தொடர்பு இல்லை, காவல்துறை எச்சரிததால் முதல் மாடி குடியிருப்பில் இருந்து நான்காம் மாடி குடியிருப்புக்கு மாறிவிட்டார்கள் என்ற செய்தி மட்டும் தான் இருந்தது மதியம் தாமபரத்தில் இருந்து கிளம்பி பேருந்தில் ஆலந்தூர் வந்தடைந்தேன்.அங்கு இருந்து சித்தப்பா மகள் என்னை காரில் அழைத்து சென்று ராமாபுரம் பாலத்தை தாண்டி இறக்கி விட்டாள்.காலையில் பட்ரோடு வரையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது என்று சொன்னாள்..மதியம் நான் செல்லும் போது நந்தம்பாக்கம் தாண்டி போரூருக்கு சற்று முன் வரை போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது..ராமாபுரம் திருப்பத்தில் படகுகள் இருந்தன.காவல்துறையினர் ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தனர்.

நான் ராணுவ மருத்துவன்,பெற்றோரை பார்க்க செல்கிறேன் ,மருந்துகளை எடுத்து செல்கிறேன் என்றவுடன் காவல்துறை அதிகாரி என்னை ஒரு படகில் ஏற்றி விட்டு நான் செல்லும் இடத்திற்கு அழைத்து செல்ல உத்தரவிட்டார்.ஆனால் அது சாதாரண படகு.ராமாபுரம் இடுகாட்டுக்கு அருகே அடையாற்றில் சென்று கலக்கும் கால்வாயில் தண்ணீர் வேகமாக செல்வதால் அந்த படகு இடுகாடு முன் உள்ள சத்யா நகர் பகுதி வரையே செல்லும் என்று ஓட்டுனர்கள் கூறியதால் அதில் இருந்து இறங்கி மோட்டார் உள்ள படகுக்கு மாறினேன்.மழை பூட்களும் மழை உடையும் அணிந்து இருந்ததால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஏறினாலும் உடைகளில் எந்த ஈரமும் இல்லை.உதவி செய்ய,மீட்பு பணி புரிய சரியான உடைகள் மிக மிக அவசியம்.மோட்டார் படகினில் லைப் ஜாக்கெட் எதுவும் இல்லை. மீனவர்களும் எந்தவித பாதுக்காப்பு உபகரணங்களும் இன்றி படகுகளை செலுத்தி கொண்டு இருந்தனர்.இது மிக மிக தவறு.இடுகாட்டினை படகினில் தாண்டி அஷ்வினி அடுக்குமாடி குடியிருப்பு (300 க்கும் மேற்பட்ட வீடுகள்)செல்லும் சாலையை சென்றடைந்தேன்.அங்கு தண்ணீர் குறைவாக இருந்ததால் படகு செல்லாது என்று இறங்கி நடந்து சென்றேன்.அங்கு யாரோ ஒருவரின் வீட்டில் உடல்நல குறைவு கொண்ட ஒருவரை மீட்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு வந்த செய்தியின் அடிப்படையில் உள்ளே வசிக்கும் பலரையும் காவல்துறை ஆய்வாளர் முகுந்தன் எங்கே உள்ளார் என்று விசாரித்து கொண்டிருந்தார் .நான் பார்த்தவரை யாருக்கும் தெரியவில்லை. இவரை கேட்டால் சொல்வார் என்று யாரையும் சொல்லவும் இல்லை. தெளிவான தகவல்களை திரட்டி வைத்திருக்கும் பணியை குடியிருப்பு பகுதிகளில்
ஓரிருவர் செய்வது மிக அவசியம்.

தண்ணீர் வரவு குறைந்துவிட்டதால் நான்காம் மாடியில் இருந்து முதல் மாடிக்கு பெற்றோரும்,தம்பியின் குடும்பமும் திரும்பி விட்டார்கள்.அவர்களும் கிளம்பி பாதுகாப்பான இடத்திற்கு வர மறுத்து விட்டார்கள்.சில மருந்துகள் ,மற்றும் மொபைல் போனை கொடுத்து விட்டு அங்கிருந்து திரும்பினேன்.வந்தால் படகு ஏறும் இடத்தில படகுக்காக பலரும் போட்டி.

ஆனால் ஒருவரை தவிர்த்து மற்றவர்கள் யாரும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டியவர்கள் அல்ல.சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தன் நண்பன் குடும்பத்துக்கு பாலும்,உணவும் எடுத்து சென்று தர முயற்சிப்பவர்,தன் நண்பனின் குடும்பத்தை சந்தித்து அவர்களை பற்றிய தகவலை தர வந்த தன்னார்வலர்.பொருட்களை வாங்க வேண்டியவர்கள் .இந்த பக்கம் NDRF வீரர்கள் மற்றும் அவர்களின் படகு இருந்தது.அவர்கள் பயிற்சி பெற்ற ,நீச்சல் அறிந்த,ஆட்களை தூக்கி செல்லும் வலிமை கொண்ட வீரர்கள்.அவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களும் இருந்தன.ஆனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த குழப்பம் இருநதது.மாட்டி கொண்டவர்களை அங்கிருந்து அழைத்து வரும் பணி தான் அவர்களுக்கு இடப்பட்ட பணி.அவர்கள் அதற்கான ஆட்களை தேடி கொண்டு இருந்தார்கள்.ஆனால் 100க்கு 99 பேர் பால் வேண்டும்,உணவு பொட்டலங்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்து கொண்டிருந்தார்கள்.காவல்துறையினர் வந்து சீர்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.NDRF வீரர்களை போல பல மடங்கு இளைஞர்கள் உதவிக்கு போட்டி போட்டு கொண்டு இருந்தது அவர்களுக்கு ஆச்சரியம் தந்த நிகழ்வு.ஆனால் அபாயத்தை உணராமல் இருந்த நிலை அவர்களுக்கு மேலும் ஆச்சரியம் அளித்திருக்க கூடும்.

வெளியேற வேண்டும் என்றால் 100,1000 கிலோமீட்டர் வெளியேற வேண்டும் என்று அர்த்தம் அல்ல.இந்த வரலாறு காணாத மழையிலும் அருகில் உள்ள ஆலந்தூரில் பல தெருக்களில் கூட தண்ணீர் தேங்கவில்லை.மாதவபுரம் போன்ற பள்ளமான பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியது.பழைய ஊர்கள் அனைத்துமே மேடான பகுதிகளில் அமைக்கப்பட்டவை.அங்கு உணவு,மருத்துவ வசதிகள் செய்து தருவது அரசு

நிர்வாகத்துக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் எளிது.

எப்படி செல்வது என்று யோசித்து
கொண்டு இருந்த போது பஜனை கோவில் தெரு வழியாக நடந்து செல்லலாம்.அங்கு நீர் குறைந்து விட்டது என்று ஒருவர் சொன்னார்.அதனால் படகுக்காக காத்திருக்காமல் தண்ணீரில் நடந்து சென்று ராயலா நகரில் இருந்த மாமா வீட்டில் இருந்தவர்களை சந்தித்தேன்.அங்கிருந்து பஜனை கோவில் தெருவழியாக நடந்து செல்லும் போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் என்னை போரூர் முக்கிய சாலைக்கு அழைத்து செல்ல ஏற்றி கொண்டார். தமிழ்நாட்டின் மிக மிக தைரியமான மக்கள் அதிகம் இருக்கும் துறை ஆட்டோ ஓட்டுனர்கள் தான் என்று உறுதியாக சொல்வேன்.நான் ஏறிய வண்டியில் விளக்கு வேலை செய்யவில்லை,நான் இறங்கி நடந்து செல்கிறேன் என்று சொல்லியும் அவர் விடவில்லை. அவர் வாகனம் ஓட்ட நான் டார்ச் அடித்து கொண்டே வந்தேன்.பல வழிகளில் சாலையின் இடையே வெட்டப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்தது.லாவகமாக பல சந்துகளின் வழியாக தண்ணீரில் வண்டியை ஒட்டி சென்று என்னை மெயின் ரோட்டில் விட்டு விட்டார்.

மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீர் வேகமாக ஓடும் கால்வாயின் மேல் படகின் மூலம் செல்வதை விட எளிதாக பல ஆயிரம் பேரை இந்த வழியின் மூலம் அடைந்திருக்க முடியும்.,உதவி இருக்க முடியும்.உள்ளூர் மக்கள் காவல்துறையினர்,அரசு நிர்வாகம்,ராணுவ வீரர்களோடு இணைந்து பணியாற்றும் வகையில் மாநில அரசு ஊருக்கு ஒரு சிலரையாவது தயார் செய்ய வேண்டும்.கவுன்சில்லர் பதவிகளில் நிற்க அதிகபட்ச வயதுவரம்பாக 40 அல்லது 45 யை வைத்து அவர்களுக்கு பேரிடர் மேலானமையில் பயிற்சிகள் தரலாம்.பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்றவர்கள் தான் தேர்தலில் நிற்க முடியும் என்று கொண்டு வந்தால் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியினரை பயிற்சிக்கு அனுப்புவார்கள்.பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் நிற்க பல்வேறு கட்டுபாடுகள் உண்டு.

மெயின் ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோ மூலம் ஆலந்தூர் வந்தேன். அங்கு சித்தப்பா வீட்டில் உணவு அருந்தி விட்டு மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு வந்தடைந்தேன்.அங்கு நல்ல கூட்டம்.வெளியூர் செல்லும் வண்டிகளில் முந்துவோருக்கு இடம் கிடைத்தது.பெங்களுரு செல்லும் கர்நாடக அரசு பேருந்தில் இரவு 12 மணிக்கு ஏறி பெங்களூரு திரும்பினேன்

Series Navigationபிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்அய்யனார் கதை
author

பூவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *