ஜென் ஒரு புரிதல் பகுதி 6

This entry is part 8 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சத்யானந்தன்

மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் மற்றும் வழிபாடு இந்த இன்றியமையாத தொண்டைப் புரிகின்றன. இதன் மறுபக்கம் மதங்களின் எல்லைக் கோடு சம்பந்தப் பட்டது. சர்ச்சையே இப்படி ஒரு எல்லைக் கோடு கிடையாது என்பது தான். என் மதம் எப்போதோ எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டது. எல்லைக் கோடு என்பது எழுப்பப் படக் கூடாத கேள்வி என்றே நிறுவப்பட்ட மதங்களின் பக்கமிருந்து அதன் வழி நடப்போரும் அதன் பீடங்களில் இருந்து பேசுவோரும் வாதிடுகின்றனர்.

மதங்கள் மானுட பரிணாமத்தின் ஒரு உயர் நிலை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. பிரச்சனையே பரிணாம வளர்ச்சி மதங்கள் ஊன்றியவுடன் நின்று போனது என்னும் நிலைப்பாடே. இந்த நிலைப்பாட்டால் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய விபரீதம் மதங்களின் நற்கூறுகளையும் சேர்த்தே நிராகரிக்கும் ஒரு தலைமுறை உருவானது. ஏனையர் இன்னும் கடுமையாக இந்தச் சடங்குகளிலும் நூல்களிலும் யாவும் தீர்வு காணும் என்னும் வறட்டு சித்தாந்தத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். இந்தத் தேக்க நிலையை உடைக்க இந்து மற்றும் பௌத்த மதங்களில் போற்றத்தக்க மறு மலர்ச்சிகள் நிகழ்ந்தன (அந்த மறுமலர்ச்சி மத நிறுவனங்களால் நிராகரிக்கப் பட்டது மிகப் பெரிய சோகம்). ஜென் அத்தகைய மறுமலர்ச்சியின் தத்துவ வடிவம். மனித குல பரிணாமம் முடிவற்றதாகும். அறிவியலிலும் தொழில் நுட்பத்தில் மட்டுமல்ல. ஆன்மீகத்திலும் மேற்செல்லும் மானுட ஆற்றல் அளப்பரியதாகும். இந்த ஆற்றலின் தொட்டே தொடர்ந்து பரிணமிக்கும் கட்டாயம் அவனுக்கு உள்ளது.

மானுட வரலாற்றின் அற்புதங்கள் அவலங்கள் இரண்டுமே மனிதமனத்திலிருந்து ஊற்றெடுத்தவை. மனித மனத்தின் இயங்குதல் சீராதனல்ல. இந்தச் சீரின்மை அதன் இயல்பு என்னும் புரிதல் ஒன்றே மனத்தை மையமாக்கி அதே சமயம் மனதுள் பதிவாகியுள்ள புறவுலகு தொட்ட கண்ணோட்டத்தைக் கடந்து செல்ல உதவும்.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ”ஷிஹ்டே’ யின் சிந்தனை இது:

யாரும் காணவில்லையா?
—————————-

யாரும் காணவில்லையா?
மூவுலகிலும் மாயையால் கிளர்ந்தெழும் அமைதியின்மை
எண்ணங்களின் அணிவகுப்பு நின்றால் மட்டுமே
மனம் தெளிவடையும்
மரணமில்லை ஜனனமில்லை
எதுவும் வருவதில்லை போவதில்லை

நிலவின் ஒளியை அவதானி
நீளுலகின் நாற்புறமும் அதன் ஒளிவெள்ளம்
முழுமையான வெளியில் முழுமையான ஒளி
தூய்மைப் படுத்தும் அதன் பிரகாசம்
நிலவு வளர்கிறதென்றும் தேய்கிறதென்றும்
சொல்கிறார்கள்
ஆனால் அது மங்கி நான் பார்த்ததே இல்லை
மாய முத்துப் போல அது ஒளிரும்
பகலிலும் இரவிலும்

வேலிகள் இல்லாதது என் உறைவிடம்
யதார்த்தமான உண்மையே அதைச் சூழ்ந்திருக்கிறது
சில நேரம் நான் நிர்வாணம் (விடுதலை) என்னும்
சிகரத்தில் ஏறுவேன் வேறு சமயம்
சந்தனத்தில் ஆன கோயிலினுள் விளையாடுவேன்
ஆனால் பெரும்பாலும் நான் சலமின்றி இருக்கிறேன்
லாபத்தைப் பற்றியோ புகழைப் பற்றியோ பேசுவதில்லை
ஒரு நாள் கடல் முழுக்க மல்பேரி மர வனமாக ஆனாலும்
அது என்னை பாதிக்காது

நிலவை எதுவாக உருவகப்படுத்தி இருக்கிறார்? உருவகத்திற்கு நிலவை ஏன் தேர்ந்தெடுத்தார்? ஜென் பதிவுகளில் நாம் காண்பது மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் கூடிய வார்த்தைகளின் தேர்வு. தேடலின் கிடைக்கும் தரிசனங்கள் தொடக்கத்தில் மிகவும் உற்சாகமளிப்பவை. மளமளவென்று பல கதவுகள் திறப்பதாகத் தோன்றும். முழுதும் உணர்ந்தது போன்று ஒரு பரவசம் கூட ஏற்படலாம். அந்நிலை நிஜ வாழ்க்கையில் ஒரு சறுக்கல் ஏற்படும் போது மாறிவிடும். படிப்படியாக ஒரு சோர்வும் தொய்வும் ஆட்கொண்டு தற்காலிகமாக தொடங்கு புள்ளிக்கே வந்தது போல ஒரு வெறுமை கவிந்து விடும். இன்னிலையை அமாவாசை எனலாம். ஆனால் அப்போதும் நாம் கட்ந்து வந்த ஒளிமிகுந்த பாதையை மட்டுமே நினைவிற் கொள்ள வேண்டும். ஏற்ற இறக்கங்களை அல்ல. தற்காலிகப் பின்னடைவுகள் மீண்டும் தேடலில் தீவிரம் என்னும் இடையறாத் தொடர் முயற்சியின் நிலைகளையே – அப்போது கிடைக்கும் பிரகாசமானதும் மங்கியதுமான தரிசனங்களையே- அவர் நிலவாக உருவகப் படுத்தி உள்ளார்.

ஆன்மீகத் தேடல் என்பது மனம் ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றிற்கு நகருவதல்ல. மனம் தேடல் வழி பரிணமிப்பதின் வெவ்வேறு நிலைகளை உணருவதாகும். ஜென் இந்த உணர்வைப் பற்றிய புரிதலுக்கு மிகவும் அண்மைக்கு இட்டுச் செல்லும். மேலும் வாசிப்போம்.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (74)தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *