ஜென் ஒரு புரிதல் பகுதி 8

This entry is part 39 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா என்னும் ஊடகம் எல்லோரது கவனத்தையும் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு ஈர்க்கிறது. அப்படி சினிமா பற்றி பேச எல்லோருக்குமே ஒரு காரணம் இருக்கிறது. எழுத்து அல்லது அச்சு ஊடகத்தின் ஒப்பற்ற தனிச்சிறப்புகளை நன்கறிந்த எழுத்தாளர்களுக்கே நல்ல சினிமாவைக் காப்பாற்ற எனவும் வணிக சினிமாவை விமர்சிக்க எனவும் சினிமா மீது கவனம் மிகுந்து விட்டது. ஏனையோர் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

சினிமா பற்றி பேசுவோர் ஒரு இயக்குனர் எந்த அளவு முக்கியமானவர் என்றும் அவர் இன்ன இன்ன வித்தைகள் செய்து அந்தப் படத்தை உருவாக்கினார் என்றும் குறிப்பிடுவார்கள். சினிமாவை இயக்குனர் தான் முன்னெடுத்துச் செல்கிறார் என்பது தெளிவானது. அதே போல் ஆன்மீகம் பற்றிய எல்லாப் பதிவுகளிலும் மனம் மையப் படுத்தப் படும். ஜென் பதிவுகளிலும் இதைக் காணலாம். மனம் ஒரு கருவியா? வாகனமா? இல்லை அதுவே தான் இயக்குனரும் மனிதன் நடிகனுமாகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை ஒற்றைச் சொல்லில் இல்லை.

நிழலான சினிமா பற்றிப் பேசி நமக்கு அலுக்காதது மட்டுமல்ல. இன்னும் இன்னும் பேச எத்தனையோ இருக்கின்றன. நிஜமான ஆன்மீகம் பற்றிப் பேச ? கண்டிப்பாக நிறையவே இருக்கிறது. ஜென்னில் நாம் காணும் பதிவுகள் நிஜம் பற்றிய நமது பிரமைகளை உடைத்து நிஜத்துடன் நம்மைக் கைகுலுக்கச் செய்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் நமது தேடலின் திசையை மற்றும் அதன் தீவிரத்தை அடையாளம் கண்டு கொள்கிறோம்.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “பாங்க் யுன்” பதிவில்

மனம் கண்ணாடியில் பிம்பம் போல
—————————————-

மனம் கண்ணாடியில் பிம்பம் போல
அது ஒரு பொருளின் பிம்பமே பொருளின் வடிவம் அதில் இல்லை
ஆனாலும் அது உள்ளது – இல்லாமலில்லை

இருப்பதின் மீது நமக்குக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை
இல்லாததோ நிரந்தரமற்றது
இந்தப் புதிரை விடுவித்த சாதாரண
மனிதர் தானே நாம் வணங்கும் தவ யோகிகள் ?

மாற்றங்களின் மீது மாற்றங்கள்
ஐந்து மூலக்கூறுகளை நாம் தெளிவாகக் காணும் போது
உலகில் வெவ்வேறாயிருந்தவை எல்லாம்
ஒன்றாய் ஐக்கியமாகின்றன

தர்மத்தின் உருவில்லா உடல்கள் இரண்டு எவ்வாறு
இருக்க இயலும் ?
மூர்கத்தனமான இச்சைகளைத் தொலைத்து
உள்ளுணர்வு மேம்படும் போது
உத்திரவாதமளிக்கப் பட்ட அந்த நிலம்
எங்கே என்னும் கேள்வி பற்றிய
எண்ணங்கள் மறைந்து விடுகின்றன

தாக்குப் பிடித்துத் தொடரும்
விடாப்பிடியைக் கொல்ல வேண்டும்
அதை கொன்றவுடன் மனம் சாந்தி பெறும்
இந்நிலையை மனம் ஒருங்கிணைக்கும் போது
ஒர் இரும்புக் கப்பல் மிதக்கத் தயார்

நான் என்று ஏதுமில்லை
பிரிதொன்று என்றும் ஏதுமில்லை
பின் நெருக்கத்திற்கோ முறிவிற்கோ வாய்ப்புண்டா?

அங்கே சென்றடைய தியானம் புரிவதை விட்டு
விடுங்கள் என்பதே என் பரிந்துரை மாற்றாக
நேரடியாக கையருகிய நிஜத்தை வசப்படுத்துவீர்

வைரச் சூத்திரம் இதுதான்
அனுபவம் மிக்க நம் உலகிலிருந்து
விலக்கப்பட்டது ஏதுமில்லை

தொடக்கத்திலிருந்து இறுதி வரை அது
நம் பொய்யான அடையாளங்களை
கண்கூடாக்கும்

ஜென் தடத்தில் ஒவ்வொரு சிந்தனையாளரிடமிருந்தும் ஒவ்வொரு அரிய கண்ணோட்டம் நமக்கு ஆன்மீகம் பற்றிக் கிடைக்கிறது. “பாங்க் யுன்”னின் இந்தப் பதிவில் “தாக்குப் பிடிக்கும்” எண்ணத்தையே கொன்றழிக்க வேண்டும் என்கிறார். இது நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. தப்பித்துத் தாக்குப் பிடித்து தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வது உயிரினங்களிடையே இயல்பாயிருப்பது.

தாக்குதல் வரும் போது தப்பிக்க, தாக்குப் பிடிக்க நான் செய்தவை எல்லாம் அனிச்சையானவை தானே? அந்த எண்ணத்தையே கொன்றழித்தால்? எந்த இருப்பில் எந்த அடையாளத்தில் இயங்கி வந்தேனோ அது இல்லை என்றாகியிருக்கக் கூடும். அதன் பிறகு? ஒரு அடையாளம் மரித்து விடும். பின் நான் எதுவாக மறுபிறவி எடுத்திருப்பேன்? ஒரு புள்ளியில் தொக்கி நின்ற என் அடையாளம் பேரண்டத்தின் ஒரு பிரம்மாண்டத்தின் அங்கமென்னும் புரிதல் நிகழ்ந்திருக்குமோ? அடையாளம் பற்றியதே இந்தக் “கொன்றழி” என்னும் அழுத்தம் திருத்தமான அறைகூவல் என்பது நமக்கு கவிதையை முடிக்கும் போது “தொடக்கத்திலிருந்து இறுதி வரை அது நம் பொய்யான அடையாளங்களை கண்கூடாக்கும் ” எனும் போது அர்த்தமாகிறது.

“அனுபவம் மிக்க நம் உலகம்” என்பதையும், “ஐந்து மூலக்கூறுகளை நாம் தெளிவாகக் காணும் போது உலகில் வெவ்வேறாயிருந்தவை எல்லாம் ஒன்றாய் ஐக்கியமாகின்றன” என்பதையும் பொருத்திப் பார்க்கும் போது நாம் மனிதனுக்கும் மனிதன் தவிர்த்த ஏனயவை அனைத்திற்கும் உள்ள ஒரே வேறுபாட்டை உணர்கிறோம். ஐந்து மூலக்கூறுகள் என்பது ஒற்றுமை. அனுபவங்களே வேற்றுமை. இந்த அனுபவங்கள் அனைத்தும் மனதின் பிரதிபலிப்புக்களே. அதைத்தான் தொடக்கத்திலேயே “மனம் கண்ணாடியில் பிம்பம் போல- அது ஒரு பொருளின் பிம்பமே பொருளின் வடிவம் அதில் இல்லை
ஆனாலும் அது உள்ளது – இல்லாமலில்லை” என்று குறிப்பிடுகிறார். ஸ்தூல வடிவம் இல்லாத மனத்தை ஒரு பிம்பத்துடன் ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது! புற உலகின் பிம்பமாகவே இருக்கும் மனம் அக உலகில் ஆழவே அடையாளங்களைத் தியாகம் செய்து முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சு போல் முன் அறிந்திராத ஒரு விழிப்பில் கண் திறக்கிறது. விழிப்பு பிம்பங்களிலிருந்து அசலை நமக்கு வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த வேறுபாட்டை உணர மேலும் வாசிப்போம்.

Series Navigationநிலாக்காதலன்நேரம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *