ஜென் ஒரு புரிதல் – 27

This entry is part 1 of 30 in the series 15 ஜனவரி 2012

சத்யானந்தன்

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம்.

ஒரு வானம்பாடியின் கானம்
——————————–

ஒரு வானம்பாடியின் கானம்
என்னைக் கனவினின்று வெளியே
இட்டு வரும்
காலை ஒளிரும்

———————————

வசந்தத்தின் முதற் தூறல்
எத்தனை மகிழ்வாய்
பெயரில்லா மலை
———————————

கங்கையின் மணற் துகள்கள்
போல் நீ
எத்தனை உட்கொண்டாலும்
அது ஜென்னின் ஒரு
பா பிடிபடுவதற்கீடு ஆகாது
பௌத்ததின் மர்மம் வேண்டினாய் எனில்
அது இது தான்
எல்லாம் உன் மனதில் உள்ளது

———————————-

வசந்தத்தின் தொடக்க நாட்களில்
வானம் நீலமாய்
கதிரவன் பெரியதாய் உஷ்ணமாய்
எல்லாமே பசுமையாய் மாறும்
பிட்சுவின் கப்பரையுடன்
என் ஒரு நாள் உணவுப் பிச்சை கேட்க
நான் கிராமம் நோக்கிச் செல்வேன்
கோயிலின் வாயிலில் குழந்தைகள்
என்னைச் சூழ்வர் குதூகலித்து
என் கைகளைப் பற்றி நான்
நிற்கும் வரை
கப்பரையை ஒரு வெள்ளைப் பாறையின்
மீது வைத்து
என் பையை ஒரு மரக்கிளையில் மாட்டி விடுவேன்
முதலில் நாங்கள்
நீண்ட புற்களைப் பற்றி
இழுபறி விளையாடுவோம்
பின் ஒரு உதை பந்தை மாற்றி மாற்றி
காற்றில் உதைத்துப் பாடுவோம்
விளையாடுவோம்
நான் எத்த அவர் பாட
அவர் உதைக்க நான் பாட
காலம் மறந்து போகும்
மணிகள் பறக்கும்
கடந்து செல்வோர் என்னைச் சுட்டி
“நீ ஏன் ஒரு முட்டாள் போல நடந்து கொள்கிறாய் ?” என்பர்
பதில் சொல்லாமல் தலையை அசைப்பேன்
நான் எதேனும் சொல்லலாம். ஆனால் ஏன்?
என் மனதில் உள்ளது என்ன என்று நீ கேட்டால்
காலத்தின் துவக்கம் முதல் ‘இது தான்; இது மட்டும் தான்’

————————————————–
நான் இன்று அங்கே
போயாக வேண்டும்
நாளை பிளம் மலர்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாகிவிடும்

————————————–

ஒரு நண்பனுக்கு மறுவினை
———————————

விடாப்பிடியான மூடத்தனத்துடன்
நான் தனியே வாழ்கிறேன்
மரங்களின் மூலிகைகளின் தோழமையுடன்
தவறுகளினின்று சரியைக் கற்க இயலாத அளவு
சோம்பேறியாய்
பிறரைக் கண்டுகொள்ளாமல்
என்னைப் பார்த்து நானே
நகைக்கிறேன்
எலும்பான முழங்கால்களை உயர்த்தி
நான் நீரோடையைக் கடக்கிறேன்
என் கையில் ஒரு சாக்குப் பை
வசந்ததின் நல்லாசியுடன்
இவ்வாறு வாழ்ந்து
நான் எல்லா உலகத்துடனும்
சாந்தத்தில் இருக்கிறேன்

உன் விரல்கள் நிலவைச் சுட்டும்
ஆனால் நிலவு உதிக்கும் வரை
அவை பார்வை அற்றவை
நிலவுக்கும் விரலுக்கும் என்ன தொடர்பு?
அவை தனித் தனி வடிவங்களா
அல்லது பிணைக்கப் பட்டவையா?
அறியாமை என்னும் ஆழ்கடலுள் அமிழ்ந்த
தேடலின் துவக்கத்திலுள்ளோருக்கான கேள்வி இது
ஆனால் படிமத்தைத் தாண்டிப் பார்த்தால்
அங்கே நிலவும் இல்லை விரலும் இல்லை

இலையுதிர்கால நிலவு
————————–
நிலவு எல்லாப் பருவங்களிலும் வரும்
ஆனால் அது பனிக்காலத் தொடக்கத்தில் தான்
ஆகச் சிறந்து விளங்கும்
இலையுதிர் காலத்தில் மலைகள் விரிந்திருக்கும்
நீர் தெளிவாக ஓடும்
எல்லையற்ற வானில் ஒரு பிரகாசமான வட்டம்
ஏனெனில் ஒவ்வொன்றும் தனது இருப்பால்
பரந்து ஊடுருவி நிறைந்திருக்கிறது
முடிவற்ற வானம் மேலே; இலையுதிர்கால பனி என் முகத்தின் மீது
அபூர்வமான என் உதவியாளர்களுடன் நான்
மலைகளில் சுற்றித் திரிகிறேன்
உலகின் தூசியின் ஒரு துகள் கூட இங்கில்லை
நிலவின் பிரகாசமான ஒளிக்கதிர்கள்
மற்றோரும் நிலவை அவதானிப்பர் என்றே நினைக்கிறேன்
அது எல்லா தரப்பு மக்களுக்கும் ஒளி வழங்கும்
இலையுதிர்காலத்துக்குப் பின் இலையுதிர்காலமாக
நிலவு வந்து போகிறது
அந்தமின்மைக்காக மக்கள் அதை வியந்து நோக்குவர்
புத்தரின் மொழிகளும் “எனோ” *வின் போதனைகளும்
நிச்சயமாக இதே போன்ற நிலவுக்குக் கீழே தான் நிகழ்ந்தன
நான் இரவு முழுதும் நிலவே கவனமாயிருக்கிறேன்
எந்த வழிப்போக்கன் மிக அதிகமாக நிலவொளியில்
சயனித்திருப்பான்?
யாருடைய வீடு அவ்வொளியை அதிக பட்சமாய் விழுங்கும்?

(*எனோ என்பது ஜப்பானியப் பெயர். இவர் ஹுய் நெங் என்னும் சீன ஜென் ஆசான்)

“ஐ சிங்”* சொல்கிறது மகிழ்ச்சி என்பது இவற்றின் கலவை
——————————————————————
உஷ்ணம்-குளிர்ச்சி
நல்லது-கெட்டது
கருப்பு-வெள்ளை
அழகு-விகாரம்
பெரியது-சிறியது
மேதை-மூடத்தனம்
நீண்டது-குட்டையானது
பிரகாசம்-இருள்
உயர்வு-தாழ்வு
பகுதி-முழுமை
ஓய்வு-விரைவு
அதிகரிப்பு-குறைவு
தூய்மை-அழுக்கு
மெது-விரைவு

(ஐ சிங் என்பது சீனத்தின் மிகவும் புராதனமான மறை நூல். மாற்றங்கள், தனி மனித மற்றும் பிரபஞ்ச அளவில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என வான சாஸ்திரமும் ஆன்மீகமும் இணைந்த நோக்கு உடையது. ஒரு எண் கோணம் இதன் மையப் பொருளாகும். ஒவ்வொரு கட்டத்திலும் பின் வரும் எட்டு சக்திகள் அல்லது இயற்கை வடிவுகள் வருகின்றன. பூமி, மலை, நீர், காற்று, இடி, தீ, ஏரி, வான்வெளி. ஐ சிங் கி.மு 2000 அல்லது 500 என இரு கருத்துகள் உண்டு)

தாமரை
———
முதலில் தெற்கு சொர்க்கத்தில்
தோன்றிய தாமரை
நம்மைப் பல யுகங்களாக
மகிழ்வு படுத்தியிருக்கிறது
அதன் வெள்ளை இதழ்கள்
பனித்துளி போர்த்தியும்
கரும்பச்சை இலைகள்
குளம் முழுதும் பரவி
அதன் மணம் படித்துறை வரைக்கும்
விரிந்திருக்கும்
குளிர்வாய் கம்பீரமாய்
அது சேற்றிலிருந்து மேலெழும்புகிறது
மலைகளுக்குப் பின்
சூரியன் மறைந்து விட்டது
ஆனால் நான்
இருளிலிருந்து கிளம்ப முடியாமல்
சிறைப்பட்டு விட்டேன்

செடிகளும் பூக்களும்
————————-
என் குடிலைச் சுற்றி
செடிகளையும் பூக்களையும் வைத்தேன்
நான் காற்றின் விருப்பத்திற்கு
அடி பணிகிறேன்

———————————

திருடன் ஒன்றை விட்டுச் சென்றான்
நிலவை என்
சாளரத்தருகில்

———————————

காற்றுகள் நின்று விட்டன
ஆனால் மலர்கள் விழுந்து கொண்டே
பறவைகள் அழைக்கும்
ஆனால் மௌனம் ஒவ்வொரு பாடலையும்
ஊடுருவும்

———————————

மர்மம்! அறியவியலாதது
கற்க இயலாதது
கனோனின் (போதிசத்துவரின்) நெறி

———————————-

இவ்வுலகு
மலையில் அமிழும் எதிரொலி
ஏதுமற்றது
உண்மையானதல்ல

மென்பனிக்குள்
முவாயிரம் சரடுகள்
அச்சரகுகளுக்குள்
வீழும் மென்பனி

அப்பனி என் குடிலை
மூழ்கடிக்கும் போது
என் இதயமும்
விழுங்கப் பட்டு விடுகிறது

————————————

ஒரு தீயை வளர்க்க
இலையுதிர் காலம்
சருகுகளைச்
சேர்த்து விட்டுச் சென்றது

————————————-

எண்ணங்கள் எல்லாம் தீர்ந்தபின்
நான் காட்டுக்குள் சென்று
ஒரு இடையனின்
தேட்டத்தைச் சேகரிப்பேன்

சிறிய நீரோடை
காட்டுப் புதர்கள் ஊடே
வழி காண்பது போல்
நானும் சத்தமின்றி
தெளிவானவனாய்
வெளிப்படையானவனாய்
மாறுகிறேன்

————————————–

கவிதைகள் கவிதைகளென்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகள் ஆகா
என் கவிதைகள் கவிதைகளில்லையென்று
நீ அறியும் போது
நாம் கவிதை பற்றிப் பேசலாம்

—————————————

Series Navigationவெறுமன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *