அதிர வைக்கும் காணொளி

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

 

கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றியீட்டியதுவும், இன்னும் முடிவுறாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போராட்டங்களும், இலங்கையின் ஆகாரங்களைப் பாதித்திருக்கும் ஆசனிக் விஷம் சம்பந்தமான பிரச்சினைகளும், விலைவாசி ஏற்றங்களுக்காகக் கிளர்ந்தெழும் மக்களும், டெங்கு நோய் மரணங்களும் நோயின் பரவலும் என இலங்கை அரசுக்குப் பல தலைவலிகள் அண்மையில் தோன்றியிருக்கின்றன. அவற்றோடு தலையை பல துண்டுகளாகச் சிதறடிக்கக் கூடிய இன்னுமொரு பாரிய தலையிடிக்கு இலங்கை அரசாங்கமானது தற்பொழுது முகங் கொடுத்திருக்கிறது.

 

‘இலங்கையின் கொலைக் களங்கள்’ எனும் தலைப்போடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களால் தொகுக்கப்பட்ட புதிய காணொளியொன்று சேனல் 4 எனும் பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்பட்டதும், இலங்கையானது அதன் சர்வதேச விம்பம் தொடர்பான சிக்கல்களுக்கு மீண்டும் உள்ளாகியிருக்கிறது. கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டின் போது முதன்முதலாக ஒளிபரப்பப்பட்ட இக் காணொளியானது, அதன் பிறகு கடந்த ஜூன் மாதம், பதினான்காம் திகதி சேனல் 4 அலைவரிசையிலும் ஒளிபரப்பப்பட்டது. இப்பொழுது உலகம் முழுவதிலுமுள்ள பல செய்தி வலைத்தளங்களில் இவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக் காணொளியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனேகமான காட்சிகள் கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குற்றவாளிகளின் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் இக் காணொளியில் பதிவாகியிருக்கின்றன.

 

கிட்டத்தட்ட 48 நிமிடங்கள் ஓடக் கூடிய, யுத்தக் குற்றங்கள் நடைபெற்றதாக சாட்சிகளோடு ஒப்புவிக்கும் இந்த ஆவணப் படமானது, இலங்கையின் நற்பெயருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென்பது பார்த்தவுடனேயே தெளிவாகிறது. இக் காணொளியானது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் முடிவுகள் பற்றியும் பேசியிருப்பதோடு, இறுதி யுத்தமானது, ஒரு பொது மகனுக்குக் கூட எந்தப் பாதிப்பும் நேராத வண்ணம் செய்யப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை எனச் சொல்லிக் கொள்ளும், உலகிலேயே நேர்மையான இராணுவத்தைத் தான் கொண்டிருப்பதாக மார் தட்டிக் கொள்ளும்  இலங்கை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலையும் முன் வைத்திருக்கிறது. மனிதக் கேடயங்களாக அதிக எண்ணிக்கையான பொதுமக்களைப் பாவித்து அவர்களை இன்னல்களுக்குள்ளாக்கியமை சம்பந்தமாக இக் காணொளியானது, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இம் முறைப்பாடுகள் மூலமாக இலங்கையானது, சேனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேர்ந்திருப்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் இக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் படுகொலைக் காட்சிகள் பொய்யானவை என நிரூபிப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் தொழில்நுட்பவியலாளர்கள் பின்னால் ஓட நேர்ந்திருக்கிறது.

 

இலங்கை இராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படக் கூடிய சிலரால், கைகளும் கண்களும் கட்டப்பட்டு நிர்வாணமாக இருக்கும் சிலர் துப்பாக்கியால் சுடப்படுவதைப் போன்ற காட்சியைக் கொண்ட ஒரு காணொளியை இதற்கு முன்பும் சேனல் 4 அலைவரிசை ஒளிபரப்பியிருக்கிறது. இலங்கை அரசாங்கமானது, அந்தக் காணொளிக்கு பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு மட்டுமன்றி, தனது தொழில்நுட்பங்களின் மூலம் அக் காணொளி பொய்யானது என்பதற்கான சாட்சிகளையும் முன் வைத்தது. எனினும், ஐக்கிய நாடுகளின் போர்க் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டனால் சர்வதேச அளவிலான தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்றைக் கொண்டு அக் காணொளி உண்மையானது என நிரூபிக்கப்பட்டது. எவ்வாறாயினும் அக் காணொளி கிளப்பிய சர்வதேச அலைகள் அதிர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டமெனக் குறிப்பிடப்படும் இப் புதிய காணொளி வெளியாகியிருக்கிறது. இக் காணொளியை அடிப்படையாக வைத்து, இலங்கையானது தன் மேல் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காவிடின், இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு அது காரணமாக அமையுமென, ஐக்கிய நாடுகள் அமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

தமக்கெதிரான இக் காணொளி தொடர்பாக, இலங்கை அரசாங்கமானது தனது கருத்தினை பலவிதமாகத் தெரிவித்து வருகிறது. சேனல் 4 அலைவரிசையானது விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் திட்டமிட்டுச் செய்திருக்கும் சதி இதுவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதாபய ராஜபக்ஷ சொல்லிக் கொண்டிருக்கிறார். இது முற்றுமுழுதாகப் பொய்யால் நிரம்பியிருக்கும் ஒரு காணொளி எனவும் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், யுத்த காலங்களில் இராணுவமானது எப்பொழுதுமே பொதுமக்களைக் காப்பாற்றிப் பாதுகாத்ததாகவும், இராணுவம் ஒரு போதுமே அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யவில்லையெனவும் சுட்டிக் காட்டியிருக்கிறார். இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்றும் கூட அரச பாதுகாப்போடு மிகவும் நலமாக இருப்பதாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், அதற்கு உதாரணமாக கடற்புலிகளின் தலைவரான சூசையின் மனைவி, பிள்ளைகளும், அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனது மனைவி உட்பட இன்னும் 11,000 உறுப்பினர்களும் தம்மால் நன்கு பராமரிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகம், இலங்கை பாராளுமன்ற அமைச்சர் விஜேசிங்ஹவிடம் இது சம்பந்தமாகக் கருத்தை வினவிய போது அவரும் கூட பணத்துக்காக எதையும் செய்பவர்களே இக் காணொளியைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

 

அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் இவ்வாறு சொன்ன போதும், இந்த ஆவணப்படமானது உலகம் முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டாயிற்று. தற்பொழுது இந்த ஆவணப்படமானது யூட்யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லையாயினும், உலகம் முழுவதிலுமுள்ள பிரபல அச்சு ஊடகங்களில் இக் காணொளி குறித்தான விமர்சனங்களும் மக்களது கருத்துக்களும் தினமும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே, இலங்கை அரசும், அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு இப்படி ஆவேசமாக மறுப்புக் கருத்துக்களை சொல்லித் திரிவதை விடவும், தாம் குற்றமற்றவர்களெனில், அதனை நிரூபிப்பதுதான் சரியானது. அத்தோடு, இக் காணொளியில் காண்பிக்கப்படும் சம்பவங்களது உண்மைத்தன்மை குறித்து நீதியானதும், முழுமையானதுமான விசாரணையொன்றை நடத்தி அதன் முடிவுகளை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டியதுவும் அரசின் கடமை.

 

ஒருவேளை, சேனல் 4 முன்வைக்கும் குற்றச்சாட்டானது உண்மையானது எனில், ஒரு சிறுபான்மை இனத்துக்கு அரசினால் இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பாரிய அநீதத்தை அதன் மூலம் கண்டுகொள்ளலாம். அவ்வாறான அநீதத்தை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தால் அக் குற்றச் சாட்டிலிருந்து இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது. சேனல் 4 தொலைக்காட்சியானது தன் மீது பொய்க் குற்றச்சாட்டொன்றை முன் வைத்திருந்தால், இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரும் ஒரு காணொளியை ஒளிபரப்பச் சொல்லி பிரித்தானிய சட்டமன்றத்திடம் தைரியமாகக் கோரலாம்.  அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருப்பதுபோல இக் காணொளியில் காண்பிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை எனில், அதனை நிரூபிப்பதற்காக சேனல் 4 ஊடக நிறுவனத்துக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் வழக்குத் தொடர முடியும். அதைச் செய்ய ஏன் தயங்குகிறது அரசு? அவை மட்டுமே இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்கும்.

 

இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால், பிரித்தானியாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோ இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பது அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பினால் அல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் அப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் அந் நாடுகளிடம் மறைந்திருக்கின்றன. அந் நாடுகளிடம் எவ்வளவுதான் அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்காமல் தன் மீது சாட்டப்பட்டுள்ள இக் குற்றச் சாட்டிலிருந்து விலகிக் கொள்ள இலங்கை அரசாங்கத்தால் முடியாது. தன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றச் சாட்டுக்களிலிருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்வதைப் போல இதிலிருந்து அரசாங்கத்தால் இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இது சர்வதேசம் முன் வைத்திருக்கும் யுத்தக் குற்றச் சாட்டு.

 

இதற்கு முன்பும் இலங்கையில் முன்னைய ஆட்சிகளின் போது அரசாங்கத்தினாலேயே பல மனிதப் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. என்ற போதும் இதற்கு முன்பு இது போன்ற சாட்சிகளுடன் கூடிய பாரிய குற்றச்சாட்டு பிற நாடுகளிலிருந்து அரசைக் குறி வைத்து முன்வைக்கப்படவில்லை. பிற நாடுகளைத் தவிர்த்து, அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள பொதுமக்கள் கூட அரசை நோக்கி எந்தக் குற்றச் சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் படுகொலைகளுக்கும், ஆட்கடத்தல்களுக்கும் நீதமான விசாரணையொன்றை நடத்தி, நீதியை நிலைநாட்டும் விதத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லி எந்தச் சமூகமுமே கோரவில்லை. அப் படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது. தம்மை எதிர்த்து எவரும் வரமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த அரசுகள் மிகத் தைரியமாக குற்றங்களைச் செய்யத் தொடங்கின. எல்லா மரங்களையும் கொத்திச் செல்லும் மரங்கொத்திப் பறவையானது வாழை மரத்தில் கொத்தப் போய் மாட்டிக் கொள்வதைப் போல இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது இக் காணொளி விடயத்தில் மாட்டித் தவிக்கிறது.

 

முப்பது வருட கால யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக, நாட்டு மக்களிடம் ஒவ்வொரு முறையும் மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது, யுத்த வெற்றி தினத்தை வருடந்தோறும் கொண்டாடுகிறது. இலங்கை ஜனாதிபதி பற்றிய ஏதேனுமொரு நற்செய்தியை தினந்தோறும் ஒளிபரப்பாத அரச ஊடகங்கள் இல்லவே இல்லை. இவ்வாறாகவும், அச் செய்திகளில் யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்படவேயில்லை எனக் கூறியும் நாட்டு மக்களின் மத்தியில் தனது ஆட்சி குறித்துக் கட்டியெழுப்பியிருக்கும் பிரமாண்ட விம்பமானது, சட்டென உடைந்து நொறுங்கிவிடும் அபாயம் சேனல் 4 உடன் இக் குற்றச் சாட்டு குறித்து மோதுவதில் இருக்கின்றதென்பதை அரசாங்கம் உணர்ந்தே இருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் இலங்கைக்குள் இக் காணொளி குறித்து பொதுமக்களிடம் என்னென்ன கதைகள் பரப்பினாலும், அக் கதைகளை எடுத்துக் கொண்டு பிரித்தானியா வரை செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

 

எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

mrishansha@gmail.com

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

19 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால், பிரித்தானியாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோ இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பது அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பினால் அல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் அப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் அந் நாடுகளிடம் மறைந்திருக்கின்றன. //

    பிரிட்டனோ,அமெரிக்காவோ,ஐரோப்பா நாடுகளோ தங்கள் நலனுக்காக தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கலாம்.இது இயல்பானதுதான். ஆனால் 80% சதவிகித பெரும்பான்மை ஹிந்துக்களை கொண்ட இந்து தர்ம பரிபாலன ஹிந்துஸ்தான்; தன் சொந்த ஹிந்து அப்பாவி சகோதரர்கள் ஒன்னரை லட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைக்க சுள்ளி எடுத்துக்கொடுத்த அவலத்தை எங்கு போய்ச் சொல்லி அழ. இந்திய இந்துக்களும்,இலங்கை இந்துக்களும் கும்பிடுவது ஒரே சாமி ஹரியையும்,ஹரனையும் தானே. ஆனால் இந்திய சு.சாமிகளும் RAW சாமிகளும் அருள் பாலித்து வரங்கொடுப்பது ராஜபட்சே நரபலி பூசாரிக்கே!

    காஷ்மீர் பண்டிட் அகதிகளுக்கு அழுது ஒப்பாரி வைக்கும் வட இந்திய ஹிந்துக்கள்,தென்னிந்திய,ஈழத்து ஹிந்துக்களை,மீனவர் துயரங்களில் பங்கு கொள்ள மறுப்பதும் மறப்பதும் தர்மமா? இதுதான் மனுநீதியோ?
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! ஆட்சியாளர்கள் மறந்துவிடவேண்டாம்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்புச் சகோ. ரிஷான்,

    வழமைபோல் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல மிகத் தெளிவான நேரடியான கட்டுரை!

    //இம் முறைப்பாடுகள் மூலமாக இலங்கையானது, சேனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேர்ந்திருப்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் இக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் படுகொலைக் காட்சிகள் பொய்யானவை என நிரூபிப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் தொழில்நுட்பவியலாளர்கள் பின்னால் ஓட நேர்ந்திருக்கிறது.//

    மக்கள் இன்னும் மாக்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். பழைய ஏமாற்று காலமெல்லாம் மலையேறிவிட்டது. இது மனித இனத்திற்கு சக மனிதனால் ஏற்படுத்தும் மனிதாபிமற்ற கொடூரம் என்ற வகையில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிகழ்வாகிவிட்டது . இதற்கு சரியான தீர்ப்பு வரும்! வரவேண்டும்….

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    உலகத்தை இந்த காணொளி அதிர வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. காரணம், தலைவிரித்தாடிய புலிகளில் கடந்த கால செயல்பாடுகள். தந்தை செல்வா காலத்திற்கு பின்னான பிரபாகரன் கால தலைமையிலான இயக்கம் அழித்தொழிப்பில் தான் விடை காண முடியும் என்ற நிலையெடுத்ததே.. இலங்கை தமிழ் முஸ்லீம்களை விரட்டியடித்தார்… கட்டுப்பாட்டை மீறி தான் காதல் கொண்டவுடன் விதி மாற்றினார். மாத்யையா என்னா ஆனார்..? இலங்கையும் இந்தியாவுமா கொன்றது. பத்மனாபா கொலையில் கருணாநிதியின் கருத்து பிடிக்காமல் அவரை எதிரியாகவே பாவித்த பிரபாகரனின் செயலாம் திமுக தூரப் போனது. பிரபாகரனுக்கு கை கொடுத்தால் இழுத்து படுகுழியில் தள்ளி மேலேறி போக மட்டுமே செயல்படுவார் என்று கருணாநிதிக்கு தெரிந்தே இருந்தது. அமிர்தலிங்கத்தை கொன்றது … நித்தம் நித்தம் தாக்குதல், பெண் புலிகள் சிறார் புலிகள் என்று பார்த்த தமிழரை எல்லாம் தீவிரவாத குண்டுகளாக்கி சிதறடித்து விட்டு தானும் தன் குடும்பமும் நீச்சல் குள வாழ்வு வாழ்ந்ததை காணொளியில் பார்த்ததால் , சாமான்ய தமிழனின் துயரின் போது பிரபாகரனின் நினைவு வருவதால் உலகம் தூரப் போகிறது. ஏன்..? இலங்கையை விட பிரபாகரனால் அழிக்கப்பட்ட தமிழர்களே அதிகம். இப்போது தமிழகத்தில் போராடுபவர்கள் சாமான்ய ஈழத் தமிழனுக்கு போராடாமல் புலிகளை உயர்த்தி கோஷம் போடுவதால் அவல நிலை. நேற்று வரை முஷ்டி உயர்த்தி கோஷமிட்ட சீமான், ஈழ விதவையை மணப்பேன் என்றவர், தன் ஜாதி, மதம் சார்ந்த பணக்கார தோப்பும் துறவும் உள்ளவரை மணந்து செட்டிலானார். தமிழகத்தையே கொள்ளையடித்த (சசிகலா)நடராஜன் தரும் இரண்டு ஏக்கரும் புறம் போக்கும் முள்ளி வாய்க்கால் நினைவிடம் எனும் கொடுமை. நாகரீகமான, ஜனநாயக நிலைப்பாடு உள்ளவர்கள் சாமான்ய ஈழத் தமிழனுக்கு உதவு இட்டுக்கட்ட்டை. இலங்கைக்கு போகக் கூடாதாம், வர்த்தக உறவு கூடாதாம், புறக்கணிக்க வேண்டுமாம் ஆனால், அவனிடமிருந்து தீர்வு வேண்டுமாம். நிஜத்தில் கல்லறை வாய்க்கால் கண்டவர்கள், கற்பனை கானலில் காவிரிப் பாசனம் பண்ண துடிக்கிறார்கள். ஏழை ஈழ சாமன்ய மக்களுக்கு குரல் கொடுப்போம், தமிழர் என்றல்ல… யாராயிருப்பினும் மனிதர் என்பதால். இந்திய மீனவர்களுக்கு கவலைப்படுவோம்… எந்த ஈழத் தமிழனாவது உலகில் எங்காவது இந்திய மீனவனுக்கு குரல் கொடுத்திருக்கானா..? உண்ணாவிரதம் இருந்திருக்கானா..? தீக்குளித்திருக்கானா…? இந்தியா எனும் கட்டுக்குள் இருந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் நமது தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம். கருனாநிதியும், ஜெயும் ஏன் இணைந்து மீனவர்களுக்கு போராடலாமே..? நமக்காக அடுத்தவன் வர மாட்டான்…

  4. Avatar
    சரவணக்குமார் says:

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று – கண்ணதாசன்

    ஆம்!..உண்மைதான்!.. மனிதன் தன் வாழ்வு இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கும் என்றுதான் எண்ணுகிறான்.. தன் மரணத்தை எண்ணிப் பார்த்திராத அந்த மனிதன்.. அவன் எதிர்பார்த்திராத ஒரு சமயத்தில்.. மரணம் ஒரு திருடனைப் போல் அவன் வாழ்வில் நுழைந்து அவனை காவிச் சென்று விடும் என்பதை அவன் என்றுமே எண்ணிப் பார்ப்பதில்லை!..

    தனது மரணம் இப்படித்தான் நடைபெறப் போகிறது என்பதை ஒரு மனிதன் முன் கூட்டியே அறிந்திருந்தால்.. அவன் நிட்சயம் தவறான பாதையொன்றில் தன் வாழ்க்கையை அமைக்க மாட்டான்!.. தன் வாழ்நாளில் பிறருக்கு தீங்கிழைக்க மனதாலும் நினைக்க மாட்டான்!.. மண்.. பெண்.. பொன் ஆசைகளுக்கு அடிமையாக மாட்டான்!.. பெயரையும் புகழையும் சம்பாதிக்க நினைக்க‌ மாட்டான்!…

    மாறாக தான் உயிருடன் உள்ளவரை மனித குலத்திற்கு தன்னாலியன்ற நன்மைகளை செய்து.. மனிதர்களை பிளவு படுத்தும் மனக் குரோதத்தையும்.. இன பேதத்தையும் கூடவே மத பேதத்தையும் பெரிது படுத்தாமல்.. அனைவரையும் சக‌ மனிதர்களாக பாவித்து.. அவர்களை அரவணைத்து.. அவர்களுடன் அன்புடன் பழகி.. அவர்களை ஒன்றிணைத்து தன் இறுதி மூச்சுவரை ஒரு மாசற்ற உண்மையான மனிதனாக வாழ முயற்சிப்பான் அல்லவா!!..

    ஆனால் என்ன செய்வது .. தனக்காக மரணம் என்ற ஒன்று காத்திருக்கிறது.. அது எந்த நிமிடத்திலும் நிகழலாம் என்பதை எண்ணிப் பார்க்காத அந்த‌ மனிதன்.. தான் இந்த உலகில் நிரந்தரமாக இருக்க வந்தவன் என்ற எண்ணத்தில்.. தன் சொந்த‌ சுபாவத்தால் தன்னையும் கெடுத்து.. பிறரையும் கெடுத்து.. ஒரு தன்னலவாதியாக வாழ பழகி விட்டானே!

    ஆம்.. அன்று வன்னிப் பிரதேசத்தில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த‌ பிரபாகரன்.. இப்படியெல்லாம் தான் எதிர்பார்த்திராத சமயமொன்றில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மரணம் என்ற ஒன்று நேரிடப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால் அவரது வாழ்க்கைப் பாதை திசை திருப்பப் பட்டிருக்கும்.. அவருடைய போராட்டம் ஆரோக்கியமான வழியொன்றில் நகர்த்தப்பட்டிருக்கும்.. தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிரபாகரன்.. அதேபோல் பிறரது குடும்பங்களுக்கும் ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயற்சித்திருப்பார்!..

    ஆனால் தனது வாழ்வு இப்படித்தான் என்றும் வழமுடன் நிலைத்திருக்கும் என்று எண்ணிய பிரபாகரன் தனது மனைவி மதிவதனியை விதம் விதமாக பொன்னாலும் பொருளாலும் பட்டுச் சேலைகளாலும் அலங்கரித்துப் பார்த்த அதே சமயத்தில்.. அவர் ஆட்சி செலுத்திய வன்னிப் பிரதேசத்திலோ எதனையோ பெண்கள் மாற்றிக் கட்டுவதற்கு கூட மாற்றுத் துணியில்லாமல் அவதிப்பட்டதை கண்டு கொண்டதில்லை!..

    தனது மகன் சார்ள்ஸ் அன்ரனியும் மகள் துவாராகாவையும் வெளி நாட்டிற்கு பட்டப் படிப்புக்காக அனுப்பி வைத்த அவரால்… தன்னினத்தின் மற்றைய குழ்ந்தைகளின் கல்வியை பற்றி.. அவர்கள் எதிர்காலத்தை பற்றி சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை!..

    வன்னிப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருந்த மாணவர்களையும் மாணவிகளையும் அவர்களது கல்வியை துறக்க வைத்து .. தனது படையணிகளில் பலோத்காரமாக இணைய வைத்து.. கொடும் போருக்கு அனுப்பி வைத்த போதெல்லாம்.. அவர்களும் தன்னுடைய பிள்ளைகளைப்போல் ஒரு பெற்றோர் பெற்ற பிள்ளைகள்தானே என்று எண்ணிப் பார்த்ததில்லை!….

    தன்னுடைய கடைசி மகன் பாலச்சந்திரனுக்கு கூட வீட்டில் நல்ல உணவும்.. விளையாடுவதற்கு வெளிநாட்டு விளையாட்டுப் பொருட்களும்.. நீந்துவதற்கு நீச்சல் தடாகமும் அமைத்துக் கொடுத்த பிரபாகரன்.. வன்னிப் பிரதேசத்தில் சுமார் 60 வீதத்திற்கு மேற்பட்ட‌ குழந்தைகள் குடிப்பதற்கு பாலோ.. உண்பதற்கு சீரான உண்வோ இல்லாமல் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்ற யூனிசெஃப்வின் அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டதில்லை!..

    அந்த குழந்தைகளின் பசிக்கும் பட்டினிக்கும் போசாகின்மைக்கும் காரணம் மகிந்தா உணவுப் பொருட்களை வன்னிக்கு தடை செய்ததுதான்.. என்று அந்த பழியை மகிந்தாவின் தலை மீது சுமத்தி விட்டு அதிலிருந்து தந்திரமாக விலகிக் கொண்டார் … இந்த காலப் பகுதியில் பல கோடி டாலர் பெறுமதியான ஆயுதங்களை உலகின் பல பாகங்களில் இருந்து வன்னிக்குள் கடத்திவர வழி தெரிந்த‌ அவருக்கு.. அந்த குழந்தைகளுக்கு தேவையான போசாக்கான உணவுகளை வன்னிக்குள் கடத்திவர வழி தெரியாமல் போயிருக்குமா என்ன‌?..

    பிரபாகரன் காலத்தில் வன்னியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் மாடி வீடு கட்டி வழமுடன் வாழ்ந்தவர்கள் அல்ல.. அவர்களில் பெரும்போலோர் விவசாயிகளாகவும் அன்றாட கூலி வேலை செய்து பிழைபவர்ககளுமாகவே வாழ்ந்து வந்தார்கள்.. அவர்களிடமே ஐயாயிரம் தா.. பத்தாயிரம் தா.. இல்லையேல் உன் பிள்ளைகளில் ஒன்றை தா.. என்று நிபந்தனை போட்டவர்தான் அவர்.. வெளி நாடுகளில் இருந்து கோடிகோடியாக புலிப்பினாமிகள் பணம் திரட்டி அனுப்பிய போதும் போதவில்லை அவருக்கு..அந்த பணத்தை கூட செலுத்த வழியில்லாத எத்தனையோ ஏழைகள் தாங்கள் பெற்று வழர்ந்த தங்கள் பிள்ளைச் செல்வங்களை அவர் போர் வெறிக்கு தாரை வார்ப்பதை தவிர வேறு வழியொன்றும் இருக்கவில்லை அவர்களுக்கு….

    அந்த பிள்ளைகளில் பலர் பெண் பிள்ளைகள் என்றும் பாராமல்.. தனது அடியாட்கள் மூலம் பலோத்தாகரமாக இழுத்து வரும்படி கட்டளையிட்ட போதெல்லாம்.. தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே.. அவளுக்கு ஒரு இப்படி ஒரு அவல‌ நிலை ஏற்ட்டால் தனது மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை அவர் சிறிதளவேனும் எண்ணிப் எண்ணிப் பார்த்ததில்லை..

    அவருக்கு மட்டும் மனச் சாட்சி என்று ஒன்று இருந்திருந்தால்..தனது மகள் துவாராகாவின் கழுத்தில் தங்கச் சங்கலி போட்டு.. கைகளில் பூச்செண்டு கொடுத்து அழகு பார்த்த அவர்.. அந்த அப்பாவி எழை மக்களின் மகள்களின் கழுத்தில் சயனைட் குப்பி மாலை அணிவித்து கைகளில் துப்பாக்கி கொடுத்து அழகு பார்த்திருக்க மாட்டார்!..

    அவர் மட்டும் அன்று மனது வைத்திருந்தால்.. மனிதாபிமானத்துடன் செயல் பட்டிருந்தால் இன்று தமிழர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது எனபது யதார்த்தமான‌ உண்மையாகும்..

    எனது தொடர்கட்டுரையின் இடைச் செருகலின் இறுதிப் பகுதி இது.. இந்த மூன்று பாகங்களிலும் கடந்த காலத்தில் இலங்கையில் தமிழீழம் அமைக்க புறப்பட்ட பிரபாகரனின் உண்மை முகத்தை அறிந்திராத‌ தமிழக இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர் சமூகத்தினர்.. அவரைப் பற்றி சரிவர‌ அறிந்திராத‌.. அவர்களுக்கு மறைக்கப்பட்ட பல உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன….

    அன்புமிக்க‌ தமிழக இளைஞர்களே!..

    நீங்கள் நினைப்பதுபோல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழமொன்றே தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு என்று அன்று கற்பனைகூட செய்து பார்த்திராத‌.. முன்னொரு காலப் பகுதி ஒன்றில்.. உங்கள் தமிழக தன்னலவாத அரசியல்வாதிகள்போல.. எங்கள் தன்னலவாத‌ தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி தங்களுக்கு ஒரு வழமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டதுதான் இந்த தமிழீழ கோரிக்கை..

    நாளடைவில் அது பிரபாகரனுக்கு கைமாறி.. அவரது இரும்புப் பிடியில் சிக்கி தவித்து சீரளிந்தது அது.. அதன் பலனாக எங்கள் இலங்கை தமிழர் சமுதாயம் தங்கள் இல்லிடங்களையும்.. உடமைகளையும் கூடவே தங்கள் உற்றார் உறவினர்களையும் பிள்ளை செல்வங்களையும் கண்முன்னே பறி கொடுத்தார்கள் .. இன்று முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இலங்கை அதிபர் மகிந்தாவே காரணம் என்று கூக்குரலிடும் நீங்கள் ஒன்றை மட்டும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. அதாவது இந்த பேரழிவுக்கு வித்திட்டு அதை வழர்த்தெடுக்க‌ முக்கிய காரண கர்த்தாவாக செயல்பட்டவர் இன்று அறிந்தோ அறியாமலோ நீங்கள் பின்பற்றும் இந்த‌ பிரபாகரன் என்பவர்தான்!..

    தமிழ் சிங்கள விவசாயிகளுக்கு நீர் வழங்கி வந்த மாவிலாறு குளத்தை பூட்டி அதன் மூலம் அதை எப்படியாவது திறக்க வேண்டிய ஒரு இக்கட்டான‌ நிலைமைக்கு மகிந்தாவின் அரசாங்கத்தை தள்ளிச் சென்று.. அதன் மூலம் ஓய்ந்து போயிருந்த போரை முதன் முதலில் வலுக்கட்டாயமாக ஆரம்பித்து வைத்தரும் பிரபாகரன் அவர்களே!..

    இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் அந்த குளத்தை திறக்க வைக்க இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சி வெற்றியளித்தது.. புலிகளையும் அந்த இராணுவ நடவடிக்கை பின்வாங்க வைத்தது.. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறிய இலங்கை இராணுவம்.. விடுதலை புலிகளை எப்படியாவது சரணடைய வைத்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது..

    இந்த காலகட்டத்தில் புலிகள் தோல்வியை சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள்.. இந்த சமயத்தில் புலிகளை சரணையும்படி இலங்கை இராணுவம் வேண்டுகோள் விடுத்தது.. அந்த வேண்டுகோளை ஏற்று புலிகள் சரணடைந்திருந்தால் பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. ஆனால் அதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை.. அவருடைய அடுத்த திட்டம் இந்த போரில் சர்வதேசத்தை தலையிட வைத்து எப்படியாவது தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதாக அமைந்திருந்தது..

    அதற்காக அவர் மனித நேயமற்ற ஒரு வழியை கையாண்டார்.. அதாவது பொது மக்கள் மத்தியில் இருந்து இலங்கை இராணுவத்தை தாக்குவதன் மூலம்.. இலங்கை இராணுவம் தனது தாக்குதலை பொது மக்களையும் நோக்கி நடத்தும் அப்போது அந்த போர் நிறுத்தப்படும்.. இதனால் தாங்கள் தப்புவதற்கு ஒரு வழி பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.. ஆகவே இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுடன் பொது மக்களாக கலந்திருந்து இலங்கை இராணுவத்தை நோக்கி தாக்குதலை நடந்தியது பிரபாகரனின் புலிக் கூட்டம்… இதை நன்கறிந்திருந்த சர்வ தேசமும் மௌனம் சாதித்தது….

    ஏற்கெனவே சிங்கள பொது மக்களையும் தமிழர்களின் எதிரிகளாக சித்தரித்து அவர் பிரச்சாரம் செய்து.. அந்த பிரச்சாரத்திற்கு வலுவேற்ற தென்னிலங்கை சிங்கள பொது மக்கள் மத்தியில் பல குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தார் பிரபாகரன்.. இந்த தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான சிங்கள பொதுமக்கள் பரிதாபமாக செத்து மடிந்திருந்தார்கள்..

    ஆகவே தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினரை இழந்த ஒவ்வொரு சிங்கள தாயும் புலிகளை பழிவாங்க‌ இன்னொரு உறுபினரை இந்த போருக்கு அனுப்பி வைத்திருந்தாள்.. அதனால் இலங்கை இராணுவம் ஒரு புதிய வலுவையும் பெற்றிருந்தது. புலிகளை எப்படியாவது அழித்தொழிப்பது என்ற முழு மூச்சுடன் முன்னேறிய அந்த இராணுவம்.. புலிகள் பதுங்கியிருந்த இடங்களை நோக்கி முழு மூச்சுடன் தங்கள் தாக்குதலை நடத்தியது.. தற்போது அனைத்தையும் இழந்து..செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில்.. தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு.. தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக சரணடைய முற்பட்ட புலிகள்.. இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..

    இப்போது சொல்லுங்கள் முள்ளிவாய்க்கால் மனித படுகொலைகளுக்கு மகிந்தா மட்டுமா குற்றம் சாட்டப்பட வேண்டியவர்?.. இதற்குரிய முக்கிய காரணகர்த்தாவான பிரபாகரனை தூயவராக சித்தரிப்பதில் எந்த வகையில் நியாயம் இருக்கிறது?..

    உண்மையில் இலங்கையில் புலிகளின் தலைமையில் அமைக்கப்பட இருந்த தமிழீழம் இலங்கை தமிழர்களுக்காகவா?.. இல்லை!.. இல்லவே இல்லை!! தமிழர்களுக்கு அந்த தமிழீழம் எந்த வகையிலும் ஒரு விடுதலையை பெற்றுத் தந்திருக்க மாட்டாது!.. அது புலிகளுக்காக.. பிரபாகரனையும் அவரது வெளிநாட்டு துதிபாடிகளையும் ஒரு பகட்டான வாழ்க்கையின் வாழ வைப்பதற்காக!..

    புலிகளின் காலத்தின் இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள் உங்களுக்கு தெரியுமா?..தொலைக் காட்சியில் சினிமா படம் பார்ப்பது முதல் வானொலியில் சினிமா பாடல் கேட்பது வரை பிரபாகரன் வடக்கு கிழக்கை தனது அதிகாரத்தினால் அடக்கியாண்ட காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தன‌.. அவரது கட்டளையை மீறி எவராது வீடுகளில் படம் பார்த்தாலோ அல்லது அல்லது வானொலியில் சினிமா பாடல் கேட்டாலோ அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.. இப்படி சாதாரண மனித‌ அபிலாசைகளுக்கே தடை விதித்த பிரபாகரனின் தமிழீழத்தில் எப்படி இலங்கை தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்க முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்!..

    அதனால்தான் சுமார் நான்கு வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்ற அடக்க முரையாளர் கொலை செய்யப்பட்டபோது இலங்கை தமிழர்கள் எவருமே அவருக்கு அனுதாபம் தெரிவிக்க முன்வரவில்லை…. ஏன் இன்றுவரை இந்தியாவில் நீங்கள் நடத்தும் உங்கள் போராட்டம் எதற்குமே தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லையே!.. ஏன் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக‌ ஒரு போஸ்டர்கூட யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ ஒட்டப்படவில்லை!..

    ஆம் இவைகள் ஒன்றுமே எங்களுக்குத் தேவையில்லாத ஒன்றுதான் இலங்கை தமிழர்கள் கருதுகிறார்கள்.. அதுமட்டுமல்ல நீங்கள் தமிழகத்தின் நடத்தும் போராட்டங்களும்.. அங்கு வருகை தரும் அப்பாவி சிங்கள மக்கள் மேல் நீங்கள் நடத்தும் தாக்குதல்களும்.. மீண்டும் தங்கள் வாழ்க்கையை ஒரு மரணப் பள்ளத்தாக்கிற்குள் தள்ளிச் சென்று விடுமோ என்று அஞ்சுகிறார்கள்!..

    அன்புமிக்க தமிழக இளைஞர்களே!..

    மாணவர்களே!.. இன்று நீங்கள் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்காக கண்ணீர் வடித்து அந்த சிறுவனுக்கு சிலை வைக்கும் முயற்சிவரை முன்றேறியிருக்கிறீர்கள்.. அன்றொருநாள் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் ஒன்று கலந்து வாழ்ந்து வந்த முஸ்லீம்களையும் தமிழர்களின் எதிரிகளாக சித்தரித்த பிரபாகரன் அவர்களை உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட போது எத்தனையோ பாலச்சந்திரன்கள் கதறியழுதபடி தங்கள் பெற்றோருடன் வெளியேறிச் சென்றார்கள் தெரியுமா?..

    அது மட்டுமல்ல இந்த கட்டுரையின் தலைப்பாக இணைக்கப்பட்டிருக்கும் படத்தை பாருங்கள்.. வன்னியில் பாடசாலை மாணவிகளும் குடும்பப் பெண்களும் புலிகளால் பலோத்காரமாக இராணுவ பயற்சியளிக்கப்பட்டபோது பாலச்சந்திரனைவிட பல வயது குறைந்த இந்த நான்கு வயது சிறுவனுக்கும் அவர்களுடன் சேர்த்து பயிற்சியளிக்கப்பட்டது.. மண் அளைந்து விளையாடும் அந்த சிறுவனின் சிந்தனையில் போர் வெறியை தூண்டி விடும் இந்த பயிற்சி எத்தனை பரிதாபமானது.. எத்தனை கொடுமையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்!.. இந்த வகையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் எவ்வளவோ கொடுத்து வைத்தவன் அல்லவா!..

    கிழக்கிலங்கையில் தமிழர்களுடன் புட்டும் தேங்காய் பூவும்போல் வாழ்ந்த முஸ்லீம்களை அங்கும் தமிழர்களின் எதிரிகளாக்க அவர்கள் மசூதிகளில் தொழுகை நேரத்தில் நுழைந்து புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்கள் மத்தியில் எத்தனையோ பாலச்சந்திரன்களும் இருந்தார்களே!.. அவர்கள் உங்கள் கண்களில் பட்டதில்லையா? அவர்கள் மதத்தால் வேறுபட்டவர்களாக் இருந்த போதியிலும் அவர்கள் தாய் மொழியும் எங்கள் தமிழ்தானே என்று நீங்கள் சிந்தித்து பார்த்ததில்லையா?..

    மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளை கூட சுவரில் மோதி புலிகள் அன்று நடத்திய கொடுமை உங்களுக்கு தெரியுமா?.. பிரபாகரனின் ஆசியுடன் நடத்தப்பட்ட இந்த படுகொலைகளுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருக்கின்றன.. அவற்றில் ஒரு ஆதாராமாக இந்த வீடியோ லிங்கை இணைத்திருக்கிறேன்.. இதை பார்த்தாவது உங்கள் சிந்தனைகளை திசை திருப்பிக் கொள்ளுங்கள்!….

    சினிமாக்காரர் ச்ச்சீமான் தனது சினிமாதனத்திகே உரிய கற்பனை வளத்துடன் பிரபாகரனை உங்கள் முன் சுபாஸ் சந்திபோஷின் லெவலுக்கு சித்தரித்து உங்கள் சிந்தனைகளை மழுங்கடித்திருக்கிறார்.. பிரபாகரனின் உண்மை முகம் அப்படிப்பட்டத்தல்ல.. அன்று இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி அகிம்சை போராட்ட வழியிலும் சுபாஸ் சந்திரபோஷ் ஆயுதப் போராட்ட வழியிலும் முன்னெடுத்தார்கள்.. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்ததில்லை.. பகைத்துக் கொண்டதில்லை..

    சுதந்திர வேட்கை கொண்ட அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள என்றுமே முயற்சித்ததில்லை.. மாறாக இருவருமே தங்கள் தங்கள் வழிகளில் அந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.. இந்த காலகட்டத்தில் சுபாஸ் சந்திரபோஷிற்கு “நேதாஜி” என்ற பட்டப் பெயரை வழங்கியவர் சாட்சாத் மகாத்மா காந்தி அவர்கள!.. அதே போல சுபாஷின் போராட்டம் தோல்வியை சந்தித்த சமயத்தில் சிங்கப்பூரில் வைத்து மகாத்மா காந்திக்கு “தேசபிதா” என்று பட்டமளித்து அவரை கௌரவித்தவரும் சாட்சாத் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களே!..

    ஆனால் எமது இலங்கை தீவில் தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்காக உண்மையான் விடுதலை வேட்கையுடன் புறப்பட்ட மற்றைய இயக்கங்களை.. தனது தலைமை பதவி வெறிக்காக‌ அழித்து.. தமிழீழ போராட்டத்தை வலுவிழக்கச் செய்து.. முடிவில் அதை இல்லைதொழிக்க காரணமாக இருந்தவர் நீங்கள் போற்றும் இந்த பிரபாகரன் என்பவர்தான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!…

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இவர் உண்மையில் ஒரு இலங்கைத்தமிழரா என்பது என் ஐயம்.
      இப்படிப்பட்ட பிரபாகரன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இணையங்களில் பலர் விளக்கங்கள் அளித்திருப்பதைப் படித்திருக்கிறேன்.

      உண்மையான இலங்கைத் தமிழர் அதாவது யாழ்ப்பாணத்துத் தமிழர் ஒருவர் இங்கு வந்து சொன்னால்தான் நம்ப முடியும்.

    2. Avatar
      paandiyan says:

      இவர்கள் சக ஈழ தமிழர்களை போட்டு தள்ளும்போது மகிழந்தவர்கள்தான் இன்று இலங்கை ராணுவத்தை கொலைகாரன் என்று வர்னனை பண்ணுகின்றார்கள். இவர்கள் பண்ணினால் அது கொலை இல்லை போலும்.

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    சரவணக்குமார் அற்புதம். இது மெயின் அயிட்டமாக வர வேண்டியது. மீள் பதிவு செய்யுங்கள்- தனிக்கட்டுரையாக. என்ன உங்களை சிங்கள அடிவருடி என்று தமிழ் உணர்வாளர்கள் முத்திரை குத்துவர்.

    1. Avatar
      ஷாலி says:

      //என்ன உங்களை சிங்கள அடிவருடி என்று தமிழ் உணர்வாளர்கள் முத்திரை குத்துவர்.//

      புனைபெயரார் எழுத மறந்ததை நாம் அவர் சார்பாக எழுதி விடுவோம்.இப்ப படியுங்கள் சரியாக இருக்கும்.

      “அற்புதம் சரவணகுமார்! என்ன உங்களையும் உங்களை பாராட்டுகிற என்னையும் சிங்கள அடிவருடி என்று தமிழ் உணர்வாளர்கள் முத்திரை குத்துவர். உணர்வற்ற ஜடங்கள் உச்சி முகர்ந்து உவகையடைவர்.”

  6. Avatar
    suvanappiriyan says:

    சரவணக் குமார்!

    அருமை. 60 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் எனது தாத்தா வியாபார நிமித்தமாக போய் வருவாராம். அந்த நாளில் அமைதியான அந்த இலங்கையையும் கடந்த 20 வருடங்களாக அந்த இலங்கை விடுதலைப் புலிகளால் சீரழிந்ததையும் என்னிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார். உங்கள் கட்டுரையும் எனது தாத்தாவின் நினைவுகளை மீட்டி விட்டது.

    இனியாவது அனைத்து மக்களும் ஒற்றுமையாக இலங்கையை முன்னேற்றப் பார்ப்பார்களாக!

  7. Avatar
    ஷாலி says:

    சேர, சோழ, பாண்டியர்கள் மாறி மாறி அடித்துக்கொண்டு தமிழ் ஒற்றுமை பண்பாட்டை கட்டிக் காத்தது போல் ஈழ விடுதலை இயக்கங்கள் அனைத்தும் சிங்கள அரசை எதிர்க்கும் ஒரு வழிமுறையாக தமிழ் இயக்கங்கள் தலைவர்களை தொண்டர்களை போட்டுத் தள்ளினர்.இதில் கை ஓங்கி நின்றது பிரபாகரனின் விடுதலைப் புலி இயக்கம்.இங்கு பிரபாகரனுக்கு யாரும் நற்சான்று பதக்கம் குத்தவில்லை என்பதை கருணா ஆதரவு சரவணக்குமார் புரிந்து கொள்ளவேண்டும்.

    இறுதி கட்ட போரில் சமாதானம் பேசி வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போராளிகள் மற்றும் அப்பாவி பொது மக்கள் ஒன்னரை லட்சம் பேரை ஒரு ஜனநாயக அரசு இரக்கமின்றி படு கொலை செய்தது சரியா?
    புலிகள் செய்த கொடுமையின் காரணமாக அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதை சரவணக்குமார் நியாயப்படுத்தலாம்,ஆனால் ஜெனாப்.சுவனப்பிரியன் நியாயப்படுத்தலாமா?இஸ்லாமிய வேதம் இதைத்தான் சொல்கிறதா?”ஒரு கூட்டத்தார் மீது உள்ள வெறுப்பு உங்களை நியாயத்தை விட்டும் விலக்கி விடக்கூடாது” என்ற குர்ஆன் வசனம் எச்சரிப்பது உண்மையா இல்லையா?

    செத்தவர்கள் அனைவரும் ஹிந்துத்கள்.இந்த அப்பாவி ஆண்,பெண்,முதியவர்கள்,குழந்தைகள் அனைத்து இந்துக்களையும் பிரபாகரன் பெயரால் தகனம் செய்த ராஜ பக்செயை ஆதரிப்பவன் ஒரு ஹிந்துவாக இருக்க தகுதியுடையவனா?
    மாபெரும் பலம் பெற்ற இராவணன் நிராயுதபானியாகிய போது “இன்று போய் நாளை வா!” என்று கூறிய ஸ்ரீ இராமனை வழிபடும் ஒரு இந்து, இந்த பாசிச படுகொலையை ஆதரிக்கலாமா?கொல்லப்பட்டவர்களில் எவருமே பிரம்மன் தலையில் பிறந்தவர்களில்லை என்பதுதான் காரணமோ? இனி கொல்லப்படவேண்டியது தமிழ் இந்துக்கள் அல்ல.இந்து சாதீயமே!

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      என்பதை கருணா ஆதரவு சரவணக்குமார் புரிந்து கொள்ளவேண்டும்.——> பிரபாகரன் , கருணா தாண்டி தமிழர்கள் இலங்கையில் இருக்கிறார்கள். எதிர்க்கருத்தை எதிரி கருத்து என்று பிரபாகரன் நிலை கொண்டதால் தான், கண்ணாடி பிம்பம் முதற்கொண்டு எதிரில் இருப்பதெல்லாம் எதிரி என்றே பிரபாகரன் பார்த்துப் போனார்.

  8. Avatar
    ஷாலி says:

    அப்பன் பிரபாகரன் செய்த கொலைகளுக்கு பரிகாரமாக அவன் மகன் பன்னிரண்டு வயது சிறுவன் பாலச்சந்திரனை படுகொலை செய்லாம் என்று எந்த வேதம் சரி காண்கிறது என்பதை அருள்கூர்ந்து கூறுங்கள் என்று, அன்பர் புனைபெயரில்,பாண்டியன்,ஜெனாப்.சுவனப்பிரியன் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      எந்த வேதமும் சொல்லவில்லை. அச் சிறாரை எதிரிகள் அடுத்த வாரிசாக பார்ப்பர். அழித்தொழிக்கும் முறையில் வேரை மட்டுமல்ல விழுதுகளையும் அழிப்பர். பிரபாகரன் கையில் எந்த இலங்கை அதிகாரவர்க்கத்தின் வாரிசு கிடைத்திருந்தாலும் இதையே அவரும் செய்திருப்பார். அதனால் தான் நார்வே சொல்வதை கேட்போம் என்று பாலசிங்கம் தலையில் அடித்துக் கேட்டார்… கண்மூடித்தனமான தலைமையின் மீதான மாயை வேண்டாம். அது பிரபாகரன் என்றாலும் கருணா என்றாலும் ராஜ்பாக்‌ஷே என்றாலும்…….

  9. Avatar
    Ramprasath says:

    அன்பின் புனைப்பெயரில்,

    இந்த ஆக்கத்திற்கு தொடர்பில்லாத இடுகை இது. ஆதலால் ஆக்கத்தின் ஆசிரியர் இதனை பொருட்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கோள்கிறேன். தாங்கள் யாரென்று தெரியாததால் இந்த ஆக்கத்தை பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது குறித்து வருந்துகிறேன்.

    உங்களுக்கு நினைவிருக்கலாம். 2012 ல் பொறுப்பு என்ற தலைப்பில் என் ஒரு சிறுகதை திண்ணையில் வெளியானது. அதற்கு நீங்கள் ஒரு இடுகை இட்டிருந்தீர்கள். ‘இக்கதையை முதலாகக் கொண்டு நீங்கள் தொடர்கதை எழுதலாம்’ என்று. தொடர்ந்து நான் எழுதி, அந்தக் கதை ஒரு நாவலாக உருவம் பெற்று ‘காவ்யா பதிப்பகம்’ வாயிலாக நாவல் தொகுதி புத்தகமாக வெளியாகியிருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற தலைப்பிலான அந்த நாவல் புத்தகக்கண்காட்சியில் கிடைக்குமிடம்,

    காவ்யா பதிப்பகம் – ஸ்டால் 491 & 492
    டிஸ்கவரி புக் பேலஸ் – ஸ்டால் 334
    நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் (ஸ்டால் எண் நினைவில் இல்லை)

    என் மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்ப இயலுமா? உங்களிடம் சில தகவல்களை பகிர விடும்புகிறேன்.
    எனது மின்னஞ்சல் ramprasath.ram@googlemail.com

    நட்புடன்,
    ராம்ப்ரசாத்
    http://ramprasathkavithaigal.blogspot.in/

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

    படுகொலைகளில் தமிழர்கள் மட்டிலும் கொல்லப்படவில்லை. பயங்கரவாத விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் அப்பாவி சிங்களர்களும் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    விடுதலைப்புலிகள் என்ற பெயரில் ஹிந்துஸ்தானத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஈழத்தில் நிகழ்த்திய பேரழிவுகள் எண்ணிலடங்காது.

    ஈழத்தில் ஒரு காலத்தில் குட்டிமணி, ஜெகன் போன்று சிங்கள பேரின வாதத்தை எதிர்கொண்ட வீரப்போராளிகளின் அடியொற்றி ஆரம்பித்து — ஒரு காலத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பண உதவியைப் பெற்று ஹிந்துஸ்தானத்தின் கேந்த்ர சர்க்காருடைய நம்பிக்கையும் சம்பாதித்த ஒரு இயக்கம் —

    கழுதை தேய்ந்து கட்டெறும்பாய்…….

    உலக பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக வளர்ந்து தமிழர்களுக்கு உலக முழுதும் அபவாதத்தைப் பெற்றது என்றால் மிகையாகாது.

    ஈழத்தில் நடந்த படுகொலைகளை ந்யூரம்பர்க் விசாரணை போன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமானால் …. அங்கு நடந்த அத்தனை படுகொலைகளையும் விசாரிக்க வேண்டும். அதை விசாரணைக்கு உட்படுத்த ஹிந்துஸ்தானத்தில் மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

    இருபது கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்து பதினைந்து நாட்களில் ஒருவன் கழுத்தை ஒருவன் கடித்துக் குதறும் ஒரு நிலைமையில் இது சாத்யமில்லை.

    ஃப்ளெக்ஸ் தட்டிகள் ஏந்தி தமிழகத்தில் பொதுச் சொத்துக்களை நாசம் செய்தோ அல்லது ஸ்ரீலங்காவிலிருந்து ஹிந்துஸ்தானத்திற்கு தரிசனத்துக்கு வரும் அப்பாவி பௌத்த சஹோதரர்களை தாக்குவதாலெல்லாம்….. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை உலகப் பொது விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்ற பேத்தலை பித்துக்குளிகள் ஏற்பார்கள்……….

    இன்றைய முக்ய தேவை ஈழத்தில் இருக்கும் தமிழ் பேசும் ஹிந்துக்கள், முஸல்மான் கள் மற்றும் க்றைஸ்தவர்கள் இவர்களிடையே ஒற்றுமை. இவர்களுக்கு அச்சமில்லாது ஸ்ரீலங்காவில் வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை பெற்றுத்தரவேண்டியது மிகவும் அவசியம். ஸ்ரீ லங்கா சர்க்காருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாது இது சாத்யமில்லை.

    மேலும் ஹிந்துஸ்தான சர்க்கார் ஸ்ரீலங்கா தமிழர்களுக்காக கொடுத்த பணம் அனைத்தும் தமிழர்களுக்காகத் தான் செலவிடப்பட்டுள்ளதா? அதனால் ஈழத்தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா போன்ற விஷயங்கள் சார்ந்த வெள்ளை அறிக்கையை …..

    ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் அக்கறை உள்ள ஒவ்வொரு ஹிந்துஸ்தானத் தமிழனும் கேந்த்ர சர்க்காரிடமிருந்து பெற முயற்சிக்க வேண்டும். மொழி மற்றும் மத வித்யாசமின்றி ஹிந்துஸ்தானத்து மக்களின் வரிப்பணத்தில் இருந்து இந்த உதவித்தொகை ஸ்ரீலங்கா சர்க்காருக்கு அளிக்கப்பட்டது என்பதை நினைவு கூறுதல் அவசியம்.

  11. Avatar
    புனைப்பெயரில் says:

    கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். இது பற்றியும் அந்த புத்தக முன்னுரையில் இருக்குதா :)
    நான் யாரென்று சொல்லவேண்டுமென்றால், ஒரு பித்தன். பாதங்கள் பல திசைகளில் போய், எண்ணங்கள் பல வழி போய், நேர்கோட்டு மையத் திசையென்று எதுவும் கிடையாதென்று கண்டவன். சித்தர்கள் வாக்கு மேல் எதுவும் இல்லை.. அது படி வாழ்ந்தால் மோனமே வாழ்வு என நினைப்பவன். காட்டாறாய் ஓடும் நான் முதலும் முடிவும் அசைவற்ற நிலையென்று அறிந்ததால், வானத்தின் கடலின் பிரமாண்டத்தில் கரையும் நாளுக்காய் காத்திருப்பவன்.

  12. Avatar
    Robert Raja (mathil) says:

    பிரபாகரன் வாழ்கை முழுவதும் பயத்திலேயே வாழ்ந்தவர். அவரை யாராவது கொலை செய்டுவிடுவார்கள் என்று எப்போதும் பயந்துகொண்டிருந்ததே பல அழிப்புகளுக்குக் காரணம். எனது அண்ணன் சிதம்பராக் கல்லூரியில் அவருடன் படித்தவர் அந்தக் காலத்தில் இருந்தே அவருக்கு அந்தப் பயம் இருந்தது. கல்வியன் காடு செட்டியுடன் கூட்டுவைத்து துரையப்பாவை சுட்டது அந்தப் பயத்தை அதிகரித்தது. எவளவு பேரை கொலை செய்திருக்கிறார். எத்தினை பேர் புலிகளின் சிறையில் இருந்திருக்கிறார்கள். எவ்வளோ சித்திரவதைகள். கடைசியில் மக்களை பணயமாக வைத்து விமானம் குண்டுபோட மண்மூட்டை போல மக்களைப் பயன்படுத்தினார்கள். இப்பிடியெல்லாம் நடக்க கே.பி இன் சொல்லைக் கேட்டு தன்னைக் காப்பாத்த சரணைடைந்து மாண்டு போனார். பிரபாகரனை கொழும்புக்கு கூட்டிவந்து சார்ள் அன்டனியை சரணடையச் சொன்னார்கள். அவர் படத்தை எடுத்து பிரபாகரனுக்கு காட்டினார்கள். பிரபாகரனை கொண்டு பாலச்சந்திரனை சரணடைய வைத்தார்கள். அவர் படத்தை எடுத்து பிரபாகரனுக்கு காட்டினார்கள். இரண்டு படத்தையும் பார்த்த பிரபாகரன் எல்லா போராளிகளையும் சரண்டைய ஓடர் குடுத்தார். நானும் சரண்டைந்தேன். முழுப் பகுதியையும் பிடித்து முடித்ததும் பிரபாகரனையும் முடித்தார்கள். கொழும்பில் வைத்து சிங்கள ராணுவம் எனக்கு கைதொலைபேசியில் சரணடைந்த பிறகு டக்ளஸ் சித்திரவதை செய்யும் படத்தை காட்டி எனக்கு அடித்தார்.

  13. Avatar
    paandiyan says:

    //இறுதி கட்ட போரில் சமாதானம் பேசி வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போராளிகள் மற்றும் அப்பாவி பொது மக்கள் ஒன்னரை லட்சம் பேரை ஒரு ஜனநாயக அரசு இரக்கமின்றி படு கொலை செய்தது சரியா?
    //
    இறுதி கட்ட போரில் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியது தவறு இல்லையா. போர் உட்சகட்டம், மக்கள் பாதுகாப்பு இடங்களில் போங்கள் என்று எந்த மகா ஆத்மா சொன்னது? பேரை சொல்லவும்.

Leave a Reply to சரவணக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *