அந்தக்கரணம்

This entry is part 2 of 6 in the series 8 ஜனவரி 2023

உஷாதீபன்

தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை அடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மனிதன், வயது ஆக ஆகத்தான் அனுபவங்களை அடைகிறான். வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், ஏற்படும் வெற்றிகள், தோல்விகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள், அதனால் ஏற்படும் வருத்தங்கள், துயரங்கள், இழிவுகள், இப்படிப் பலவற்றாலும் பக்குவமடைகிறான். விட்டேற்றியாய் இருந்த தன்னிடம், காலம் எப்படியான மாற்றங்களையெல்லாம் தோற்றுவித்திருக்கிறது என்று அறுதியிட்டு நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே அவன் நடத்தை வியப்பாய் இருக்கிறது. மனிதன் தனக்குத்தானே பக்குவம் அடையும்போது மனது பெருமிதம் கொள்கிறது. எதிராளியின் செயல்களைப் பார்த்து நிதானம் கொள்ள முடிகிறது. தவறுகளைப் பொறுத்துக் கொள்வது சாத்தியமாகிறது. இப்படித்தான் இருக்கும் என்றும், போகப் போகச் சரியாகும் என்றும் பொறுமை காக்க முடிகிறது. இப்படிச் செய்யலாமா என்று யோசியுங்களேன் என்று எதிராளிக்கு விவேகமாக அறிவுரை சொல்ல முடிகிறது. மற்றவர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை அளந்து பேச முடிகிறது. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று பகுத்துப் பார்த்து தணிக்கை செய்து கொள்ள முடிகிறது. சொல்லுவதை விட சொல்லாமல் விட்டுவிடுவதே நன்று என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. காலம் கற்பிக்கும் என்று அமைதியடைய முடிகிறது. இம்மாதிரி நிதானம் இல்லாதோரின் நடத்தைகளையும், பேச்சுக்களையும் காணும்போது அமைதியாக நின்று மனதுக்குள் சிரிக்க முடிகிறது.

மனிதர்கள் ஏன் இப்படி அவசரப் படுகிறார்கள்? என்று தோன்றுகிறது. யாரெல்லாம் பக்குவமானவர்கள் என்று நினைத்தோமோ அவர்களே நிலை தடுமாறும்போது மனது ரொம்பவும் சங்கடப்பட்டுத்தான் போகிறது. நம்மின் கணிப்பு எப்படித் தவறானது என்றும் எங்கே நமது சிந்தனையில் ஓட்டை விழுந்தது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பது முதுமொழி. யாருக்கும் அடிசறுக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மனிதன் காலம் பூராவும் பக்குவமடைந்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அவனது செயல்களின் மூலமாகவும், அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களின் மூலமாகவும். முழுக்க முழுக்க அனுபவ முதிர்ச்சி ஏற்பட்டு பழுத்த பழமாக யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படி ஒருவரும் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அப்படியான ஒருவர் உங்களுக்குத் தென்படுவதுபோல் இருந்தால் அவரது உள்ளே நன்றாக நீங்கள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். பொது இடங்களில் அவர் அமைதி காப்பவராகக் காட்சியளிப்பார். அவரைச் சுற்றியுள்ள வளமான  சூழ்நிலையில் நழுவி ஓடி ஒளிந்து கொள்பவராக அவர் இருக்கக் கூடும். அதிகம் வாய்திறந்து பேசாது, எல்லாம் அறிந்து கடந்த ஞானி போல் மென்மையான புன் சிரிப்போடு மட்டுமே இருந்து உங்களை வசீகரம் செய்பவர்கள் இங்கே அநேகம். அவர்கள் வாயைத் திறந்தால்தான் தெரியும் வள்ளல்.

இப்படியான பல்வேறுபட்ட நிலைகளிலும், சாதாரணச் சராசரி நிலையிலும், அன்றாடம் நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருக்கக்கூடும். நமது மன ஓட்டங்களில் மனிதர்கள் அநேகரை நாம் உள் வாங்கியிருக்கலாம்.

ஆனாலும் இப்படியான எல்லாவற்றிலிருந்தும் கடந்து மிகவும் பாவப்பட்டது முதுமை. மிகுந்த கருணையின்பாற்பட்டது. அன்பின் வழியிலானது. தியாகத்தின் அடிப்படையிலானது. நம் சமூகத்தால் கருத்தாகக் கவனிக்கப்பட வேண்டியது. கவனிக்கத் தவறியது. கவனிக்கப்படாமல் போனதால் பெருகியது. சொல்ல வந்த இந்த விஷயம்தான் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.

எனது நடைப் பயிற்சியில் நான் அன்றாடம் சந்திக்கும் இடம் அந்த முதியோர் இல்லம். அந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்தது என் மனம். அவர்களை அனுதினமும் பார்ப்பதில் ஏதோ ஒரு திருப்தி. என்னவோ ஒரு நெருக்கம். என் தந்தையைப் போல் பலர் அங்கே. அதனாலேயே அந்த மானசீக விளைவோ? தினமும்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

மிகப் பரந்த நீண்ட புல்வெளி. நடுவே அந்தக் கட்டடத்தை நோக்கிய நடைபாதை. கேட்டிலிருந்து வெளியே நின்று நேரே பார்த்தால் அந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகி அமர்ந்து கொண்டு தன் வேலையில் ஈடுபட்டிருப்பதைச் சில சமயம் காண முடியும். அது ஒரு பெண்மணி. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் வாழ்க்கையை அந்த முதியோர் இல்லத்திற்கு என்று அர்ப்பணித்தவர். அங்குள்ள வயதான பெரியவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வதுதான், தான் பிறந்து வந்த வாழ்க்கைக்கான முழு அர்த்தம் என்று தன்னை வரித்துக் கொண்டவர்.

நான் அந்தப் பகுதியில் நடக்கையில் என்னை அறியாமல் கால்கள் நின்று போகும் அங்கே. அந்தப் புல்வெளியை நோக்குபவனாய் நின்று உள்ளே நடமாடும் பெரியவர்களை, வயதான முதியவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பேன். புல்வெளிக்கு நடுவே போடப்பட்டிருக்கும் ஈஸிசேரில் அமர்ந்து வானத்தைப் பார்த்த மேனிக்கே படுத்துக் கிடப்பார் ஒருவர். இன்றைய தேதியில் இந்தப் பரந்த வானம் மட்டும்தான் எனக்குச் சொந்தம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும் எனக்கு. ஒருவர் ஏதோ பலத்த சிந்தனையில் நீள நடந்து கொண்டிருப்பார். பார்வை முற்றிலுமாகத் தாழ்ந்திருக்கும். எவரையும் பார்க்க விருப்பமில்லை என்பதாகவும் தோன்றும்.  ஒருவர் அந்தத் திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் இருப்பார். இன்னொருவர் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த இல்லத்திற்கான சாலையையே தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பார்.

யாரை எதிர்நோக்குகிறார். தன் மகனையா? மகளையா? தன் மனைவியையா? உறவுகளையா? வருகிறேன் என்று சொன்னார்களே? ஏன் வரவில்லை? வழக்கமாய் இன்று வருவானே? இந்த நிமிடம்வரை தகவல் இல்லையே? முன்னதாக ஒரு தகவல் கொடு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? கேட்கிறானா? என்றுதான் கேட்டிருக்கிறான் என் பேச்சை. வளரும் காலங்களில் அவன் அம்மாவின் பேச்சைக் கேட்டான். பிறகு மனைவியின் பேச்சைக் கேட்கிறான். இன்று என் பேரன்களின் பேச்சைக் கூட அவன் கேட்பதில்லையே?

அப்பா, அப்பா, தாத்தாவ ஏம்ப்பா அங்க கொண்டு விட்டிருக்கே…? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவோம்ப்பா….பாவம்ப்பா…தாத்தா அங்க இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை….அவர அங்க போய்ப் பார்க்கிறது எனக்கு என்னவோ போல இருக்குப்பா….மனசுக்குச் சங்கடமா இருக்கு…

உங்கம்மாட்டச் சொல்லு…அவ ஓ.கே.ன்னா நானும் ஓ.கே…சரியா? அந்தக் குழந்தைக்குப் புரிந்தது அவனுக்கு ஏன் புரியவில்லை?

இந்தக் கடன்காரன் அப்படித்தான் சொல்வான். பெண்டாட்டியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிபவன். அவள் பின்னாலேயே அலைபவன். அந்தப் பிஞ்சுக்கு இருக்கும் இரக்கமும் கருணையும் கூட இவனுக்கு இல்லை. டி.வி.க்கு முன்னால் அமர்ந்து சினிமாவைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சொந்த வாழ்க்கையின் தவறுகளை அவன் உணர்வதில்லை. அதன் தாக்கம் அவனிடமில்லை. நெஞ்சில் ஈரமில்லாமல் எப்படி வளர்ந்தான்? நிறையச் சொல்லி வளர்த்திருந்தும் ஏன் அவன் மனதில் எதுவும் படியவில்லை?

இந்த பார்…அவர் என் அப்பா…என் கூடத்தான் இருப்பார்…அவரை வேறே எங்கேயும் கொண்டு விட முடியாது. அந்தத் தப்பெல்லாம் என்னால் செய்ய முடியாது.  எங்கப்பா அம்மா என்னை அப்படி வளர்க்கலே…அந்த மாதிரி ஏதாச்சும் எண்ணம் உன் மனசுல இருந்திச்சுன்னா அதைத் துடைச்சு எறிஞ்சிடு….. – நான் சொன்னேனே…இவன் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறான். இவனுக்கு ஏன் அந்த புத்தி இல்லை?

நீங்க கவலைப் படாதீங்கோ…உங்க பொண்ணு எங்க பொண்ணு மாதிரி…எனக்குப் பெண் குழந்தை இல்லாத குறையை உங்க பொண்ணு தீர்த்துட்டா….இப்படிச் சொன்ன, நானா இங்கே தள்ளப்பட்டேன். அன்பின் உருவமாய் என் தாயைப் பார்ப்பதுபோல் என் வீட்டுக்கு வந்த திருவிளக்காய் அவளைப் பார்த்தேனே…? அவளுக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது? மொத்தமே நான்கு பேர் இருக்கும் அந்த அத்தனை பெரிய வீட்டில் நானும் இருப்பது அவளுக்கு ஏன் பாரமானது? அதைப் பாரம் என்று சொன்ன போது என் பையன் ஏன் அதற்குத் தலையாட்டினான்? ஏன் அப்படி மௌனமாயிருந்தான். அவள் நினைப்பது, சொல்வது தவறு என்று தெரிந்தும் ஏன் அவன் தடுக்கவில்லை? அவள் அழகில் மயங்கிக் கிடக்கிறானா? காமம் அவனைக் கட்டிப் போட்டிருக்கிறதா? அந்தப் படுகுழியில் விழுந்து கிடக்கிறானா? அந்தக் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள அந்த வீட்டில் நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என்பதாக எண்ணம் கொண்டு விட்டானா? ஒரு தந்தை தன் மகனின் சந்தோஷமான வாழ்க்கைக்கு என்றேனும் குறுக்கே நிற்க முடியுமா? சின்னஞ்சிறிசுகள், அப்படித்தான் இருக்கும் என்றுதான் ஒதுங்கிக் கொள்வார் தந்தை என்று ஏன் அவனுக்குத் தெரியவில்லை?

முதலில் அவனைக் கட்டி, பிறகு தன்னை வெட்டி விட்டிருக்கிறாளா அவள்? அடி பெண்ணே…உன் பெற்றோர்கள் உனக்கு இதைத்தான் சொல்லித் தந்தார்களா? புகுந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ பாடம் கற்று வந்தாயா? எந்தத் தாய் தந்தை தன் வாரிசுகளுக்கு இப்படிச் சொல்லித் தந்தாலும் அது தவறல்லவா? நான் அப்படி வளர்க்கவில்லையே என் மகனை? பின் எப்படி அவன் இப்படி மாறிப் போனான்? அவனுக்கு என்று சுய சிந்தனை ஒன்று இருக்கிறதா இல்லையா? மனசாட்சி என்ற ஒன்று அவனுக்கும் உண்டுதானே?

ஆனாலும் அவனை இன்று நான் எதிர்நோக்குகிறேன். எனது  இந்த நிலையிலும் அவனை அவ்வப்போது பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். நன்றாயிருக்கிறாயா? உடல் நலம்தானே? உன் மனையாள் எப்படியிருக்கிறாள்? குழந்தைகள் சௌக்கியமா? தீபாவளி சந்தோஷமாகக் கொண்டாடினீர்களா?  பொங்கல் நல்லாக் கழிஞ்சதா? குழந்தைகள் நல்லாப் படிக்கிறதா? அப்பப்பா…இந்த மனது ஏன்தான் இப்படி அடித்துக் கொள்கிறதோ? எதற்காக இப்படிக்கிடந்து தவதாயப் படுகிறதோ? என்று அமைதி கொள்வது? என்று ஆனந்தம் பெறுவது? என்று ஞானம் அடைவது? சாவு ஒன்றில்தான் எல்லாமும் சாத்தியமா?

வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்.  அவர் அப்படியென்றால் அந்த இன்னொருவரைத்தான் பாருங்களேன். அடேயப்பா! கலங்காத மனதுடையவரோ இவர்? என்ன ஒரு கம்பீரம்? என்ன ஒரு தெளிவு அந்த முகத்தில்?

எத்தனை  வயதானாலும் நான் எங்கிருந்தாலும் எனது நியமங்களை விட முடியாது என்பதுபோல் குளித்து, பளீரெனத்  தலைசீவி, பட்டையாக விபூதி பூசிக் கொண்டு அகலமாக நெற்றியில் குங்குமம் திகழ தன் வீட்டு வாசலில் விச்ராந்தியாக அமர்ந்திருப்பதுபோல் அந்த இல்லத்தின் வாயிலில் அமர்ந்து அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருக்கிறார்.  யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என்பதான தோற்றம். அவருக்கிருக்கும் தைரியமான மனநிலை மற்றவர்களுக்கு ஏனில்லை? முதிர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி விளைவுகளைத்தானே ஏற்படுத்த வேண்டும். ஏன் மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுகிறது. எல்லாவற்றையும் கண்டும், கேட்டும் உலகம் இப்படித்தான் என்பதான சமநிலை ஏன் வரமாட்டேன் என்கிறது?

முதியவர்களாகச் சேர்ந்து ஒரே இடத்தில் கூடியிருந்தாலும் அவர்களின் மனங்களும், எண்ண ஓட்டங்களும் வேறு வேறுதானோ? ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியிலான பற்றற்ற நிலை. அல்லது பற்றுள்ள நிலை. பற்றற்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அத்தனை சுலப சாத்தியமா அது? அதற்கான பயிற்சியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நிலை கொள்ளாமல் தவிக்கும் இந்த மனதைக் கட்டுப்படுத்துவது என்பது என்ன அத்தனை சீக்கிரத்திலேயே முடியக் கூடிய ஒன்றாகவா இருக்கிறது. மனம் ஒரு குரங்கு. அதுவும் தனிமையில் அது எப்படியெல்லாம் தன் கட்டறுத்துக் கொண்டு பாய்கிறது? வெகு ஆழத்திற்குச் சென்று எப்படி வேகமாய் மேலெழும்புகிறது. தன் கயிற்றை அறுத்துக் கொண்டு வேகமாய் எங்கெல்லாம் பாய்கிறது? எந்த மனநிலையில் யார் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அந்த முதியவர்கள் வெளியில் சுதந்திரமாய் நடைப் பயிற்சி செல்லும் என்னை மாதிரிப் பலரையும் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்?.

என்ன போய் என்ன செய்ய? எல்லாம் வெறும் சுயநலம். அவனவன் அவன்பாட்டைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சுயநலமிகள்.  வீச்சும் விறைப்புமாய் நடந்து செல்கிறாயே? உனக்கும் என்னை மாதிரி ஒரு நாள் முதுமை வராமலா போகும்? என்னைப்போல் கண்கள் பஞ்சடைந்து, காதுகள் மந்தமாகி, கால்களும் கைகளும் தளர்ந்து, உடல் வெம்பி, உன்னை நீயே வெறுக்கும் நிலை உனக்கும் ஏற்படாதா என்ன? நீ என்ன மார்க்கண்டேயனா? அல்லது இளமை கழியாமல் இருக்க வரம் வாங்கி வந்தவனா? என்னவோ அந்நியனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாயே? நாங்களும் மனிதர்கள்தான். உன்னைப் போல் இருந்து, வாழ்ந்து கழித்துக் கடந்து  வந்தவர்கள்தான். உனக்கு இன்று இருக்கும் இளமையை நானும் கண்டவன்தான். அதை வெகு நிதானமாய் நின்று ரசித்து அனுபவித்து அநாயாசமாய்க் கடந்து இன்று இந்த நிலையில் முதியவன் என்கிற பெயரில் இங்கு வந்து அநாதையாய்க் கிடப்பவன். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டு விட்டது. நன்றி கெட்ட உலகம்.

எப்படியெல்லாம் அவனை வளர்த்தேன். எப்படியெல்லாம் அவனின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். என்னென்னமாதிரியெல்லாம் கஷ்டப்பட்டு, உழைத்து, பணம் சேர்த்து அவனைப் படிக்க வைத்தேன். என் உடல் நலத்தைக் கொஞ்சமேனும் நோக்கியிருப்பேனா? என் ஆசைகள் என்று எதையேனும் நிறைவேற்றிக் கொண்டேனா? என் தேவைகள் என்று தோன்றிய எல்லாவற்றையும் எப்படியெல்லாம் விலக்கிக் கொண்டேன்? போதும், போதும் என்று எப்படியெல்லாம் என் வாழ்க்கையின் எல்கைகளைச்  சுருக்கிக் கொண்டேன். எல்லாம் அவனுக்காக. அவனின் உயர்ந்த வாழ்க்கைக்கு நான் கண்ட கனவுகள் அவைகள். ஈன்ற மகனைப் பெரிதுவந்து, அவனைச் சான்றோன் என்று கேட்பதற்காக. அன்று அது மட்டுமே எனது லட்சியமாக இருந்தது. அது மட்டுமே எனது ஆசைகளாக இருந்தது. அவனது அணு அணுவான வளர்ச்சிதான் என் கண்களில் மின்னிக் கொண்டிருந்தன. நான் நினைத்ததை அடைந்தேன். அவனை எங்கு அமர்த்த வேண்டும் என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. என் லட்சியம் நிறைவேறியது. அது போதும் எனக்கு. அது போதும் எனக்கு. அது போதுமா? அது போதுமா?                                                                                                 

ஆனாலும் இந்த மனது ஏன் நிலை கொள்ள மறுக்கிறது? ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது? உள்ளம் பெருங்கோயில்…ஊன் உடம்பு ஆலயம்… மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்…! இந்த அந்தக்கரண கர்மேந்திரியங்கள் மற்றும்  ஞானேந்திரியங்களின் பின்னணியில் சிந்தனையை ஒருங்கிணைத்து இது இது – இவையிவை இவ்வாறுதான் அவ்வாறல்ல என்கிற ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். அந்தப் பக்குவத்தை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த முதிர்ச்சி எனக்குக் கிட்டும்.  உள்ளொளி பெருக்க ஆத்ம விசாரம்…!

 நானாகத்தானே இங்கு வந்தேன். யாருக்கும் நம்மால் இடைஞ்சல் கூடாது என்று நான்தானே இதைத் தேர்வு செய்து கொண்டேன். பின் ஏன் இப்படிக் கிடந்து மறுகுகிறது? ஏன் எல்லாவற்றிலுமிருந்து விலக மறுக்கிறது?

அதெல்லாம் முடியாது. முதியோர் இல்லமா? என்னப்பா உங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா? நான் எதுக்கு இருக்கேன்? உங்களை அங்க விடுறதுக்கா? அதுக்கா நீங்க என்னைத் தயார் பண்ணினீங்க? அர்த்தமில்லாமப் பேசாதீங்க…நீங்க இல்லைன்னா நான் இல்லை…இத மறந்துட்டு நான் இருப்பேன்னு நீங்க எப்படி நினைச்சீங்க? – சொல்வான், சொல்லி நிறுத்துவான் என்று எதிர்பார்த்தேனே? நினைத்தமாதிரி இருந்தது. ஆனால் ஏன் சொல்லவில்லை? எது தடுத்தது அவனை? அவர்களின் சுதந்திரமான நல் வாழ்க்கைக்கு நான் எந்தவகையில் இடைஞ்சலாக இருப்பேன்? வீட்டுக்குக் காவல் போல் கிடந்திருப்பேனே? பொறு…பொறு…

இங்கே வந்துதானே இப்படி நினைக்கிறாய்? அங்கிருக்கும்போது உன் நினைப்பு அப்படியா இருந்தது?

நான் என்னைக்குமே ராஜாடா…? நா யாருக்கும் இடைஞ்சலா இருக்க விரும்பலை. எனக்கு இருக்கவே இருக்கு முதியோர் இல்லம். காசை விட்டெறிஞ்சேன்னா…இருக்க இடம் கொடுக்கிறான்…வயித்துக்கு சோறு போடுறான்…படுக்க எடம் கொடுக்கிறான்…அவ்வளவுதானே…என் பென்ஷன் பணம் இருக்கு…அது போதும் எனக்கு…காலை வீசிப் போட்டபோது யாருமே தடுக்கவில்லையே? ஏன்? நானாக வாயை விட்டு மாட்டிக்கொண்டேனோ? அவளும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவனும் வாயைத் திறக்கவில்லை. சரியான அமுக்குளி. அவன் அம்மாவைப் போல்தானே இருப்பான் அவனும். காலம் என்னை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டதே!

நானாவது பரவாயில்லை. அந்தப் பென்ஷனுக்குக் கூட வழியில்லாமல் எத்தனை பேர் இங்கு வந்தும் மகனின் கையை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்? சீ! இது ஒரு பிழைப்பா? கொண்டு வந்து தள்ளியவனிடம் எப்படிக் கை நீட்டி வாங்குவது? அவன் என்ன தருவது? நானென்ன வாங்குவது? அப்படியா அவனை வளர்த்தேன்? பாவி, படு பாவி…! விளங்க மாட்டான் அவன்.

சே…சே…!!!நம் வாயால் அதைச் சொல்ல வேண்டாம். எங்கே இருந்தாலும் நன்றாக, நலமாக, ஆரோக்யமாக, சந்தோஷமாக இருக்கட்டும். கோபத்தில் ஏதேனும் நினைத்துக் கொள்ளப் போக, அது பலித்து வைக்கப் போகிறது. நான் வாழ்ந்து முடித்தவன். அவன் வாழ வேண்டியவன். என் கண்ணெதிாிலே இல்லாவிட்டாலும், எங்கோ சௌக்கியமாய் இருக்கட்டும். அவ்வப்போதுதான் வருகிறானே. அப்பொழுதுதான் பார்க்கிறேனே…அது போதும் எனக்கு. அந்த சந்தோஷம் போதும். தீர்க்காயுஷ்யமஸ்து…!

நா இல்லாம நீங்க சீரழியத்தான் போறீங்க…என்னை என்ன பாடு படுத்தினீங்க…? – பாவி அவள் பழியாய்ச் சொன்னாளே…அது பலிக்கிறதோ? அவளையும் நான் சந்தோஷமாகத்தானே வைத்துக் கொண்டேன். புண்ணியவதி. கச்சிதமாகக் கடமைகள் முடிந்ததும் அவளும் முடிந்து போனாள். நான்தான் கிடந்து சீரழிகிறேன். என்ன வாழ்க்கை இது?

உள்ளுக்குள் குமைகிறாரோ அந்தப் பெரியவர்? தனக்குத்தானே அழுது மாய்கிறாரோ? சே! என்ன சோகம் இது? செயலால் தவறாத மனிதர்களுக்கு இப்படியெல்லாம் சீரழிவு வரலாமா? தியாகத்தையே அடிப்படையாய் கொண்டு வாழ்ந்து நின்றவர்களுக்கு இம்மாதிரியெல்லாம் துன்பங்கள் எழலாமா? என்னே கொடுமை இது!

மனதில் அந்தப் பெரியவர்களைப் பற்றி என்னென்னவோ எண்ண அலைகள் எனக்கு. தினமும் ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைகள் விரிகின்றன. இவையெல்லாம் வெறும் கற்பனைகளா என்ன? இன்றைய நடைமுறைகள்தானே? நிச்சயமாக அங்கிருக்கும் ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்தானே? அல்லாமல் அவர்கள் இங்கு வரவேண்டிய காரணம்தான் என்ன? இப்படி யாருடனும் பேசப் பிடிக்காமல் அவரவர்கள் தனித் தனித் தீவுகள் போல் ஒற்றையாய் நடமாடிக் கொண்டிருப்பதன் அர்த்தம்தான் என்ன? வெறும் நடை பிணம் போல் அவர்களின் செயல்கள் உணர்த்துவதுதான் என்ன?

ஒரு நாள் அந்த முதியோர் இல்லம் போனேன். என் தந்தையின் நினைவு நாளை அவர்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற உந்துதல் எனக்கு. குறிப்பிட்ட அந்த நாளில் அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண ஏற்பாடு. தேவையான பணத்தைக் கட்டினேன்.

அந்த நாளும் வந்தது. எல்லோரும் அமர்ந்தாயிற்று. எனக்கு முன்னே இலை விரிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அவர்கள் வழக்கமாய் வைத்துக்கொள்ளும் தட்டு. திடீரென்று அந்தச் சத்தம்.

தனக்கு முன்னே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அந்தச் சுவற்றைப் பார்த்து வீசினார் அந்தப் பெரியவர். அவர் உடம்பெல்லாம் அப்படியொரு படபடப்பு. நடுக்கம்.

எனக்கு தட்டு வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு. அறிவில்ல….இலையைக் கொண்டாந்து போடு…நாயே….

அதிர்ந்து போய் நின்றது அந்த அம்மாள்,

”அநாவசியமாப் பேசாதீங்கய்யா…உங்க வயசுக்குப் பொருத்தமாயில்ல….” சொல்லி விட்டு அமைதியாய் அவரைப் பார்க்கிறது. அந்த முகத்தில் எதிராளியைப் புரிந்து கொண்ட அனுபவ முதிர்ச்சி.

எல்லாந் தெரியும்…இலையைக் கொண்டா….

அந்த உறாலே அமைதி காத்தது. சற்று நேரத்தில் இலை வந்தது அவருக்கு.

எல்லோரும் என் தந்தையின் பெயர் சொல்லி அவர் ஆத்மா சாந்தியடைவதற்கு இறைவனைப் பிரார்த்தித்து நின்றனர். கண்களை மூடி அங்கே நிலவிய அந்த மௌனக் கணங்கள் என்னால் மறக்க முடியாத தருணங்கள். தந்தையின் நினைவில் கண்களில் இரண்டு சொட்டுக் கண்ணீர்.

அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட என் கவனம் அந்தப் பெரியவர்கள் சுவைத்து உண்ட அந்தக் காட்சிகளையே மனக் கண்ணில் வாங்கின.

பாயசம் உண்டா இல்லையா? மீண்டும் அந்தப் பெரியவர். சுற்றிலும் மௌனச் சிரிப்பலைகள்.

உண்டு சாமி…உண்டு…ஜவ்வரிசிப் பாயசம்…

கொண்டா…கொண்டா…

எல்லாருக்கும் வாழைப்பழம் வச்சிருக்கியே…எனக்கு?

இதோ கொண்டாரேன்…நீங்க சத்தம் போட்டீகள்ல…அதுல மறந்துட்டேன்…

அந்த சாருக்கு இன்னொண்ணு போடு….சாப்டுங்க சார்…

என்னைப் பார்த்துக் கூறினார்.

வழக்கமா ஒரு காய்தான் இருக்கும் இன்னைக்கு உங்களால மூணு…அப்பளம் கிடையாது. அதுவும் இன்னைக்கு உங்களால….வாய் இனிக்க, மனசு இனிக்க பாயசமும் இன்னைக்கு மட்டும்தான்… – அவராகவே சொல்லிக் கொண்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டார். சிரித்த வேகத்தில் அவர் வாயிலிருந்து பருக்கைகள் வெளியே தெரித்தன.

சற்று நேரத்திற்கு முன் அப்படித் தட்டைத் தூக்கி எறிந்தவரா இவர்?

கையைக் கழுவிக் கொண்டு வெளியேற முனைந்தேன் நான்.

நல்லாயிருப்பீங்க…ஆசிர்வாதம்….

     எல்லோரும் நன்றி தெரிவித்துக் கொண்டு அவரவர் இடங்களுக்குச் சென்றனர். கடைசியாக அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு நான் கிளம்பிய போது அந்தப் பெரியவர் சொன்னார் –

”இங்க நாங்க இருபத்தஞ்சு பேர் இருக்கோம். எங்க எல்லாருக்கும் சோப்பும், தேங்காயெண்ணையும், வாங்கிக் கொடுங்க…..உரிமையோட கேட்கறேன்…என் பையன்ட்டச் சொன்னா செய்யமாட்டான். காதுலயே விழாத மாதிரிப் போயிடுவான்…அவன்தான் வர்றதேயில்லையே…பின் எங்கிருந்து சொல்ல? …உங்களப் பார்த்தா அவன் போலவே இருக்கு. ஏதோ சொல்லணும் போலத் தோணித்து….அதான்…

அந்தப் பெரியவர் வாய்விட்டுக் கேட்டது என் தந்தையே என்னிடம் கேட்டது போலிருந்தது எனக்கு. உடனடியாகக் கடைக்குச் சென்று மொத்தமாக அவைகளை வாங்கி எல்லோருக்கும் வரிசையாக விநியோகித்தேன். மீதியைப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தேன்.

அங்கிருந்து நான் கிளம்பிய போது அவர் சொன்னார்.

”முதுமை எல்லாருக்கும் பொதுவாக்கும். அதை மட்டும் மறந்துடாதீங்கோ…உங்க உதவியை நாங்க மறக்கமாட்டோம்….அடிக்கடி வரணும் நீங்க….எங்க எல்லாரையும் தொடர்ந்து ஆதரிக்கணும்….என் ஆசீர்வாதம்…”

அவர் மனதின் பாதிப்பு பலவற்றையும்  உணர்த்தியது எனக்கு.

Series Navigationபுற இயக்கி !ஆணவம் கன்மம் ….
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *