அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு

This entry is part 4 of 14 in the series 20 மார்ச் 2016

 

இப்போது பிடிக்கிறது

உன்னை

 

ஒவ்வொருவருக்கும்

ஒரு

குடும்ப்பப்பெயருண்டு

 

என் குடும்பத்திற்கு

என்னால் பெயர்வர

எண்ணியிருக்கும்போது

என்னை

உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள்

 

உண்மையில் நான்

உன்குடும்பத்தைச்சேர்ந்தவனல்ல

ஆதியில்

என்குடும்பத்தின் பெயர்

வேறு

 

வரலாற்றுச்சதியில்;

சகதியில் வந்ததுதான்

உன்பெயர்

 

உன்பெயரில் இயங்க

ஒருபோதும் உடன்பாடில்லை

அதுபோல்

இன்னொருபெயரில் இயங்க

எள்ளளவும் விருப்பமில்லை

 

 

என்ன செய்வது?

ஏதாவது ஒரு

குடும்பத்தைச்சேர்ந்தவனாக

இருக்கவேண்டுமே?

 

எனவேதான் நான்

உன்

குடும்ப உறுப்பினன்

 

இதுவரை

உன்னையும்

உன்னைப்போன்றவர்களையும்

பிடிக்காது எனக்கு

ஆனால்

உன்னைப்போல் யாருமில்லை

 

உன்பெயர்போல்

ஒருபெயரும்வேண்டாமென்பவர்கள்

என்னைப்போல் மிகச்சிலரே

நாங்கள்

உலகின் சிறுபான்மை

மிகச்சிறுபான்மை

நாங்கள்தாம்

சிறுபான்மையின் குரல்

 

இன்னும் சிலர்

உன்முகவரி

இருந்துவிட்டுப்போகட்டுமே

என்பவர்கள்

ஆனால்…தன்

குடும்பத்தைத்தாண்டிச்

சிந்திப்பவர்கள்

 

இன்னும்சிலர்

என்னினும்

ஆழமாய்ச்சிந்திப்பவர்கள்

 

பிறப்பே

சாபம் என்பவர்கள்

சகித்துக்கொண்டே

சவம் ஆனவர்கள்

 

அங்கே

பெண்களின் நிலையோ

பேசாநிலை

பெருமூச்சாய்

முடிகிறநிலை

 

அவர்கள்

வேளிவரமுடியாப்

பச்சைப்பசுங்கிளிகள்

 

சிலர்

பச்சையாகவே

உன் வாரிசு என்கிறார்கள்

 

நீங்கள்

போதித்ததைக்காட்டிலும்

புதிதாய்ப்போதிக்கிறார்கள்

உங்கள்

போதையில் இருக்கிறார்கள்

 

இவர்கள்

உங்கள்

கங்கானிகள் ஆனதால்

உங்கள்பெயர்

களங்கமானது

 

அன்பையும்

மனிதத்தையும்

மருந்தெனவும் எண்ணாதவர்களால்

எப்படிப் புனிதம்கிட்டும்

 

 

அதனால்தான்

நீங்கள் அபினென்று

அழைக்கப்படுகிறீர்கள்

நீயும் அபின்தான

உன்கோட்பாடுகளில்

அபத்தமிருக்கிறது

ஆபத்தில்லை

குப்பைகளதிகம்

கூட்டிப்பெருக்கலாம்

வஞ்சணைகளுண்டு

கொடூரமில்லை

 

எங்களைப்பிரித்துப்

பார்த்தாய்

ஆலயத்திலேயே எங்களை

வேளியே நிறுத்தி

வேடிக்கைபார்த்தாய்

 

ஆலய நுழைவு

ஆர்ப்பாட்டம் நட்த்தினோம்

வீதியில் நடக்க

வேண்டிக்கிடந்தோம்

 

பின்பு

ஆலயத்திற்குள்வர

நாங்களே விரும்பவில்லை

 

ஆண்டவனால் எதுவும்

ஆகாதென்பதை அறிந்துகொண்டோம்

 

ஆண்டவனே

குருக்களிடம்

கூனிநிற்குபோது

ஆண்டவனா தேவை?

ஆண்டன் சந்நிதியில்

ஆயிரம் நடக்கிறது!

ஆண்டவன் என்ன செய்தான்?தெளிவுபெற்றோம்

 

இப்படியான உன்

அதர்ம ஏற்றத்தாழ்வுகளுக்காக

அலட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டோம்

 

நாங்களே விரும்பி

கர்ப்பகிரகத்திற்குள்

நுழைந்து  திரும்பினால்

எங்கள்

தலை ஒன்றும்போகாது

 

விழிப்புற்றால்

வெற்றிபெறுவோம்

உணர்ந்துகொண்டோம்

 

நெருக்கடியில்லாத

நிழல்மடி

உன்குடும்பம்

 

யாரோடும்

நாங்கள் போக

யாரும்

எங்களோடு சேர

தடுப்பவரில்லை

தண்டிப்பவருமில்லை

 

அளப்பரிய சுதந்தரத்தை

அள்ளித்தருகிறாய்

விளைவு?

உன்னையும் கேள்விகேட்கிறேன்

உலகையும் கேள்விகேட்கிறேன்

 

இவ்வளவு சுதந்தரமாய்

கைவீசி நடக்க

கைகொடுத்துதவும் உன்னை

பிடிக்கிறது எனக்கு

 

அடுத்தவீட்டில்

நடப்பதைப்பார்த்து

நெஞ்சம் குமைகிறது

எனினும்

நிம்மதி எஞ்சுகிறது

 

ஒருவகையில்

நான் கொடுத்துவைத்தவன்

 

வானமளக்க

வாய்ப்பிருக்கிறது

 

அவரவர் காட்டும்

அக்கறையைப்பார்த்து

உன்மீது

அக்கறைபிறக்கவில்லை

அனுதாபம்வரவில்லை

 

 

ஆனந்த

சுதந்தரபெருமையில்

பெருமிதம்கொள்கிறேன்

 

உன்னைப்போல் யாரும்  தாராளமாய் இல்லையே!

 

விதிகளைப்பேசி

உயிர்களின்

விதிகளின்முடிவை

கங்கானிகள் எடுத்தால்

கடவுளிருந்து என்னபயன்?

கடவுளென்பதன் பொருளென்ன?

 

தேவை

நீயா கடவுளா?

பெரிய கேள்வி

 

இரண்டுமில்லை

இது என்

எளியபதில்

 

குழப்பத்தில் இருக்கிறது

உலகம்

 

நீயும் அபின்தான்

எப்போதும் சொல்வேன்!

 

அப்படிச்சொல்லவும்

சொல்லித்திரியவும் தந்த

உன் தாராளம் கருதி

உன்னைப்பிடிக்கிறது

எனக்கு

 

(5.1.2014 அன்று அதிகாலையில் சிந்தித்து காலை 9மணிக்கு எழுதியது. நிறைவாய் எழுதிமுடித்தநாள் 9.1.2014)

Series Navigationசொற்களின் புத்தன்பிரேமம் ஒரு அலசல்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *