அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 26 in the series 22 செப்டம்பர் 2013

ஹேமா

அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை.

இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் அதற்கும் தலையாட்டுவாள்.

என்னை பொறுத்தவரை எனக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தி. அப்பாவிற்கும் நாய்க்கும் பொதுவாய் ஒத்துப் போனதில்லை. அதைக் கண்டால் அவருக்கு பிடிப்பதில்லை அல்லது பிடிக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அம்மாவிற்கு என் தங்கையின் தலைப்பேனின் மீதுள்ள ஆர்வம் போல அப்பாவிற்கு நாய். அவர் நாயை அடிப்பதை ஒரு அழகிய சம்பிரதாயமாய்க் கருதி, அதை ரசித்து செய்வதாக தோன்றும். தெருவில் நாயைப் பார்த்தவுடன் உற்சாகத்திற்கு  இணையான ஒரு உணர்ச்சி அவர் முகத்தில் தெரியும், ரகசியமாய் யாருக்கோ தெரியாமல் குறும்புத்தனம் செய்யப் போகும் குழந்தையைப் போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நோட்டமிட்டபடி, நாயின் கவனத்தை கவனமாய் தவிர்த்து, அரைச் செங்கல்லாக பார்த்து ஒன்றை எடுத்துக் கொள்வார். இது வரை அவர் முழுக்கல்லால் நாயை அடித்து நான் பார்த்ததில்லை. அதைப் பிடிப்பதில் ஏற்படக்கூடிய வசதியின்மை காரணமாய் இருக்கக் கூடும்.

அந்த செங்கல், அவர் கைப்பட்டதும் மட்டையில் அடிப்பதற்காக பிடிக்கப்பட்ட பந்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடும். அதன் கனத்தை அளவிடுவது போல மெதுவாய் இரண்டு மூன்று முறை ஊஞ்சலாட்டுவது போல ஏற்றி இறக்குவார். அதன் பிறகு கையை பின்தள்ளி விசையோடு கல்லை முன்னோக்கி வீசினாரென்றால், அது நாயை ஏதேனும் ஒரு பகுதியில் தாக்காமல் கீழே விழாது.

ராமருக்கு பாணம் போல அப்பாவிற்கு அரைக்கல். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற வழக்கே அவர் அகராதியில் கிடையாது. அரைக்கல் கிடைக்கும் போதெல்லாம் அதை வீட்டின் இடப்பக்கத்தில், நான் பிறப்பதற்கு முன்பே எதற்காகவோ தோண்டப்பட்டு காரியம் முற்றுபெறாத்தால் பாதியிலேயே கைவிடப்பட்ட பள்ளத்தில், போட்டு வைத்திருப்பார். அங்கே மட்டுமின்றி வீட்டைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலவற்றைப் போட்டும் வைத்திருப்பார். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் நாயைச் சந்தித்தால் எடுப்பதற்கு வசதியாய் அப்படி போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.

நாயை அடிப்பது அப்போது அவருக்கு ஒரு  விருப்பமான பொழுது போக்கென்றே தோன்றியது. அவரது குறிக்கு இலக்காவது தெருவில் அநாதையாய் திரியும் நாய்கள் மட்டுமே! ஏனோ வளர்ப்பு நாய்களை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டார். அது அவற்றின் முதலாளிகள் மீது அவர் வைத்திருந்த மரியாதைக்காகவோ அல்லது வீண் வம்பு வளர்க்க விரும்பாத காரணத்திற்காகவோ இருக்கக் கூடும்.

அம்மாவிடம் ஒரு முறை கேட்டதற்கு அப்பத்தா நாய் கடித்து இறந்ததிலிருந்து அப்பா நாய்களை அடிப்பதாகக் கூறினாள். இச்செயலை அப்பா செய்ததால் அதில் நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே நம்பினாள். நான் அதிகமாக நீதிக்கதைகளைப் படித்து வளர்ந்ததால் உயிரைத் துன்புறுத்துவது பாவம் என்று கருதினேன். இதன் காரணமாக தெரு நாய்களின் மீது அளவிற்கு அதிகமான அன்பு இல்லையென்றாலும் ஒருவித பரிதாபம் தோன்றியது.

இத்தகு பெருமைகளைக் கொண்ட அப்பாவின் நாயடி தொழில் நான் வளர வளர சற்றே தேய்ந்தாலும், அதன் மீது பாசம் வைத்து வளர்க்கும் அளவிற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நாய் குட்டியின் வருகைக்குப் பின் அவருக்கும் எனக்குமான உறவு கூட சற்று தளர்ந்து போயிருந்தது.

பொதுவாய் ஒவ்வொரு வாரமும் தொலைபேசும் போது, ஊரில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வைத்து சொல்வார் அப்பா. நாயின் வருகைக்குப் பின் அது குறைந்து போனது.

அடுத்தடுத்த நாட்களில், நாயை தன் அருகில் படுக்க அனுமதிப்பது, அதற்கென்று கீழத் தெருவிற்கு போய் மாட்டுக் கறி வாங்கி வருவது போன்ற  அப்பாவின் நாய் வளர்ப்பு பிரதாபங்கள் தொலைபேசி வழியாக காதில் விழுந்து, நம்பிக்கையின்மையை மேலும் அதிகமாக்கியதால் எனக்கு அவரது மனநிலையைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. அது தந்த கவலையில், ஜீன் விடுமுறையில் ஊருக்கு செல்ல விமான நுழைவுச் சீட்டுகளை ஏற்பாடு செய்தேன்.

வீட்டிற்குள் நுழையும் போதே, அங்கே புன்னகையுடன் எதிர் கொண்ட அம்மாவை முந்திக் கொண்டு ஓடி வந்து கால்களை நக்கி வரவேற்க முயன்றது இளம் நாயாக வளர்ந்திருந்த நாய்குட்டி. சங்கீதா சட்டென்று திண்ணையின் மீது தவ்வி உட்கார்ந்து கால்களை மடித்துக் கொண்டு அதை அசூயையுடன் பார்த்தாள். ரேணு தாயின் மடியில் அமர்ந்தபடி நாயை சந்தேகமாய் பார்த்தது. நாய், யாரென்று அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு மூச்சிறைக்க என்னை சுற்றி வந்துவிட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த அவர்களை அண்ணாந்து பார்த்தது.

அம்மா சிரித்தபடி, “ராமு கடிக்க மாட்டான். தைரியமா வாங்க” என்றாள். அதைத் தூக்கிக் கொண்டாள். எனக்கு தெரிந்து என் தெருவில் வளரும் மூன்றாவது ராமு இது. இதனோடு தான் தங்க வேண்டுமா என்று விழிகளாலேயே கேட்டாள் சங்கீதா. அவளின் கண் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் திகைக்கத் தேவையின்றி, இந்த ஆறு வருடங்களில் அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தேன். பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் பக்கம் பார்வையைத் திருப்பி அவளைப் பின் தொடர்ந்தேன்.

அப்பா தோட்டத்தில் இருந்த நாய் வீட்டை செப்பனிட்டுக் கொண்டிருந்தார். “வாப்பா! நல்லாயிருக்கியா, பயணமெல்லாம் நல்லாயிருந்ததா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்,

“இவ்வளவு நேரமா வெளிய தான் இருந்தேன். இப்பத்தான் இதை முடிச்சுடலாம்ன்னு வந்தேன். இன்னும் கொஞ்சம் தான்! உள்ள உட்காருங்க, வந்திடறேன்” என்றுவிட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.

சாப்பிடும் போது ரேணுவிடம், ராமுவின் விளையாட்டுகளையும் பயங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரது தற்குறிப்பேற்றிய பேச்சில் ரேணு மயங்கி, அடுத்து வந்த நாட்களில், நாயின் ஒவ்வொரு அசைவிற்கும், குரைப்பிற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க தொடங்கி, ஐந்து நாட்களில் ஒரு சொற்பொருள் அகராதி போடுமளவு  முன்னேறியிருந்தாள்.

ராமுவிற்கு பேருக்கு தான் தோட்டத்தில் வீடு, அதன் இருப்பு முழுவதும் நாங்கள் புழங்கிய எங்கள் வீட்டிற்குள் தான். சமையலறையிலிருந்து படுக்கையறை மெத்தை வரை அனைத்தையும் பயன்படுத்த முழு உரிமையையும் பெற்றிருந்தது அது.

“நாம வேணுமானால் அதோட வீட்டிற்கு போயிடலாம்!” என்றாள் சங்கீதா நக்கலாக.

வீட்டு விருந்தாளி என்ற மரியாதைக் காரணமாகவோ என்னவோ அது அவளை மட்டும் அவ்வளவாக  சீண்டுவதில்லை. எனக்கு அதன் இருப்பு பழகிவிட்டது என்றாலும், அது எப்போதும் காலை நக்க முயற்சிப்பது மட்டும் சங்கடமாய் இருந்தது.

ரேணு அதனோடு நன்றாக சினேகமாகி விட்டிருந்தாள். அப்பா எங்கே போனாலும் உடன் ரேணுவும் ராமுவும் போய்வந்தார்கள். அவர்கள் மூவரும் ஒரு சிறந்த கூட்டணியை அமைத்துவிட்டதாய் தோன்றியது. அப்பா ஊரில் அனைவருக்கும் பெருமையாய் பெயர்த்தியைக் காட்டினார். ராமுவும் ரேணுவைக் காணும் போதெல்லாம் வாலை வேகமாய் ஆட்டி மகிழ்ச்சியைக் தெரிவித்தான். ரேணுவிற்கு எங்கள் ஊர் பெட்டிக் கடைகளில் விற்ற தேன்மிட்டாய்களை மிகவும் பிடித்து விட்டது. வீட்டிற்கு வரும் போது கைநிறைய மிட்டாய்களை அள்ளி வருவாள். அதன் சுகாதாரத்தைப் பற்றிய சந்தேகத்தில் சங்கீதா மறுப்புக் குரல் எழுப்பியது கூட அவளை பாதிக்கவில்லை.

கொஞ்சம் நாட்களில் ராமு என்னை சலனப்படுத்தாத அளவிற்கு மாறிப் போயிருந்தான். அல்லது நான் அவனுக்கேற்றார் போல மாறிவிட்டேன். அப்பா சுறுசுறுப்பாய் சுற்றி வந்ததே, எனக்கு ராமுவைப் பிடிக்க போதுமான காரணமாய் இருந்தது. சங்கீதாவும் அதைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கிளம்பும் போது எடுத்துச் செல்ல மிளகாய்த் தூளும், சாம்பார்ப் பொடியும்  அரைத்து பேக் செய்வதில் கவனம் செலுத்தி, ராமுவைப் பற்றிய கவலைகளைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

ஊருக்கு செல்லும் நாள் நெருங்க நெருங்க நெஞ்சிலிருந்து கவலைப் பந்து  மேலெழுந்து தொண்டையை அடைக்க ஆரம்பித்தது. அம்மா, அப்பாவின் முகங்களிலும் வேதனையைக் காணமுடிந்தது. மறுநாள் விமானத்திற்கு பெட்டியெல்லாம் கட்டி கூடத்தின் ஒரு மூலையில் வைத்துவிட்டு திண்ணையில் அமர்ந்த போது அப்பா பக்கத்தில் அமர்ந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அப்படி அமர்வது மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களெல்லாம் உள்ளே படுத்துவிட்டிருந்தார்கள். அந்த நேரத்து மௌனத்தைக் கலைக்க மனமின்றி நான் மரங்களுக்கிடையே மறைந்திருந்த நிலவைத் தேடிக் கொண்டிருந்தேன்.

திடீரென்று, “ஏம்ப்பா! ரொம்ப சிரமப்பட்டு வேலை செய்யாத! வீட்டில கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்ப்பா. இல்லைன்னா வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போகும்” என்றார் அப்பா .

சங்கீதா நான் ஓவர் டைமில் மூழ்கிக்கிடப்பதை மாமனார் மாமியாரிடம் சொல்லியிருக்கிறாள்!

“இந்த வயசுல குழந்தையோட நேரத்தை செலவு செய்யலைன்னா, பின்னால நினைச்சா கூட அதுக்கு வாய்ப்பு வராதுப்பா!”

அதை ஆமோதிப்பது போல மௌனமாய் இருந்தேன்.

பிறகு என்ன நினைத்தாரோ,

‘நீ வேலைக்குன்னு ஊரவிட்டு கிளம்பி போயிட்ட பிறகு வெறிச்சுன்னு போயிடுச்சுப்பா! நீ சின்னதா இருந்தப்ப நான் வேலைய விட்டு வீட்டுக்கு வந்தா, நான் வரத எப்படி தெரிஞ்சுப்பியோ, ஓடி வந்து வாசல்ல நிப்ப. நானும் அதை எதிர்பார்த்து எதையாவது வாங்கிட்டு வருவேன்”

அவர் என்ன வாங்கி வருவார் என்ற ஆர்வம் மேலோங்க உள்ளும் புறமும் அலைந்தது எனக்கு நன்றாய் நினைவிருந்தது.

“பெரிசா ஆக ஆக ஓடி வரலைன்னாலும் என்னோட வரவ நீ மனசுக்குள்ள எதிர் பாக்கறது நல்லா தெரியும். பக்கத்துல உட்காருவ அன்னிக்கு பள்ளியில என்ன நடந்ததுன்னு சொல்லுவ . . .”

அப்போதெல்லாம் அப்பாவுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. என் சாதனைகளைச் சொல்லி அவரை ஆச்சரியபடுத்த முயற்சித்திருக்கிறேன்.

“நீ சிங்கப்பூருக்கு கிளம்பி போன பிறகு இனி வாழ்க்கையில என்ன இருக்குன்னு தோண ஆரம்பிச்சுது.”

ஆரம்பத்தில் தினமும் தொலைபேசி பிறகு வேலைப்பளுவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக குறைத்து, திருமணத்திற்கு பின் வாரம் ஒருமுறையாக மாறிப்போனது.

“ராமு வந்த பெறகு சித்த பரவாயில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் .

எனக்கு பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது.

மறுநாள் வாடகைக் காரில் ஏறுகையில் ராமுவிடம்,

“பை சொல்லுடா ராமு!” என்றார் அப்பா. ராமு உடல் பதற வாலை ஆட்டிக் கொண்டிருந்தான்.

ரேணு ராமுவிற்கு கை காட்டிவிட்டு உள்ளே ஏறினாள்.

கார் நகர ஆரம்பித்ததும்,

“ஏம்ப்பா நாம இவங்களையெல்லாம் கூட்டிட்டு போகக்கூடாது?” என்றாள்.

பதிலேதும் சொல்லாமல் நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்பாவும் அம்மாவும் ராமுவும் தூரத்தில் கலங்கலாய் தெரிந்தார்கள்.

Series Navigationஆன்மீகக் கனவுகள்சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
author

ஹேமா

Similar Posts

Comments

  1. Avatar
    ஸ்ரீராம் says:

    அருமை. நாயைக் கல்லால் அடிப்பவர் என்று வந்தவுடன் ஒரு விரோதத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் கதை மனதைத் தொட்டது. சங்கீதா என்பது நாயகியின் மகளா? நாயகியின் ஓவர்டைம் வேலை பற்றி மாமியார், மாமனாரிடம் சொல்லி விட்டாள் போல’ என்று வருவதால் சந்தேகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *