அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 26 of 34 in the series 6 ஜனவரி 2013

cinema_rasanai

மா.பாலசுப்பிரமணியன்

IMG_5233
திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின்  வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு மூத்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்தவர்களை படப்பெட்டி இதழின் ஆசிரியர் குழு சார்பாக மா.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நூலை  இயக்குனர்கள்  மகேந்திராவும் வசந்தும் இணைந்து வெளியிட முதல் பிரதிகளை இயக்குனர் பாலாஜி சக்திவேல் , கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் , காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன் , அருண் ஸ்டுடியோ டாட் காம் நிறுவனர்  அருண் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விலாசினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
பாலு மகேந்திரா தனது உரையில் சினிமா ரசனை பற்றிய கல்வி முறையாக பள்ளிகளில் இடம் பெறவேண்டும் என்று தான் இருபது வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். ஏனைய ஊடகங்களின் தாக்கத்தை விடவும் சினிமாவின் தாக்கம் பூதாகரமானது எனவே அதை இரண்டாம் வகுப்பிலிருந்தே துவங்க வேண்டும் என்று கூறினார். இந்த நூலை எழுதியதற்காக சினிமா உலகம் அம்ஷன் குமாருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறினார்.

IMG_5229
இந்திரன் தனது உரையில் சினிமாவை மேம்போக்காக அணுகுவது தவறு என்று கூறினார். ஒருசமயம் எழுத்தளர் கி.ராஜநாராயணனுடன் பதர் பாஞ்சாலி படம் பார்த்தபொழுது அதில் ஒரு காட்சியில் தண்ணீரின் மேல் பரப்பில் ஒடி விளையாடும் பூச்சி பற்றி கவனம் ஏற்பட்டது. அந்த பூச்சி எழுத்தாணி பூச்சி என்றும் அதன் வருகை  மழையின் அறிவிப்பு என்றும்  கி.ரா.சொன்னார் . அது போலவே படத்திலும் அக்கட்சிக்கு பிறகு மழை காட்டப்பட்டு அதன் விளைவுகளும் காட்டப்பட்டன, இதையெல்லாம் அறிந்து கொள்ள முறையான ரசனைப் பயிற்சி வேண்டும் என்றார் இந்திரன்
ஆசிரியர் சுபகுணராஜன் தன்னை அம்ஷன் குமாரின் மாணவன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். சினிமா உருவாவதற்கு கேமராவோ ப்ரோஜக்டரோ முக்கியமல்ல மனதுதான் அதை உருவாக்குகிறது என்று அம்ஷன் எழுதியிருந்தது என்னை பாதித்தது.. அதனாலேயே இருபத்தி நாலு பிரேம் விட்டு விட்டு காட்டப்பட்டு ஆனால் அதில் ஒரு தொடர்ச்சியை தரும் சினிமாவை காட்சிப்பிழை என்று தான் கருதுவதாகக் கூறினார். தமிழில் பெல பெலாசின் புத்தக மொழிபெயர்ப்புக்கு அடுத்ததாக வெளிவந்த அம்ஷன் குமாரின் சினிமா ரசனை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.ஒரு பரந்துபட்ட தளத்தில் சினிமாவின் வகைமைகள் பலவும் இதில் எழுதப்பட்டுள்ளன என்றார் .
இயக்குனர் வசந்த் சினிமா ரசனை தன்னை மிகவும் பாதித்த நூல் என்றார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்திராத தனக்கு இது போன்ற நூல்கள் தான் பலவற்றையும் கற்றுக் கொடுத்தன என்றார். அம்ஷன் குமார் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிப்பது தனக்கு ஒரு பிரமிப்பைத்தருவதாகவும் தெரிவித்தார். இந்த நூலில் அவர் எந்த படத்தையும் மட்டம் தட்டவில்லை. வாசகர்கள் தாங்களாகவே ரசனையை வளர்த்துக்கொண்டு படங்களின் தரத்தை அளவிடும் பயிற்சியை அவர் தன் பண்பட்ட எழுத்தின் மூலம் செய்துவிடுகிறார் என்றார்.
யுடிவி தயாரிப்பாளர் தனஞ்சயன்:
இப்பொழுதெல்லாம் ரசிகர்கள் படம் பார்க்கத்துவங்கிய ஐந்தாம் நிமிடத்திலேயே  அது பற்றிய தங்களது விமர்சனங்களை டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிற்கு அனுப்பிவிடுகிறார்கள். ஒரு படம் நிலை கொள்ளவே நேரமாகும் . உலக சினிமாவை அப்படி புரிந்து கொள்ள முடியாது என்றார் .அம்ஷன் குமார் இதில் உ.லக சினிமாவை எவ்வாறு புரிந்து கொள்வது என்று  துல்லியமாக காட்டியுள்ளார் என்றும் சினிமா ரசனை நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும் கூறினார் .
இயக்குனர் பாலாஜி சக்திவேல் புத்தகத்தின்  சில பகுதிகளை ரசித்து  படித்துக் காட்டி தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்.இது ஒரு பாட புத்தகம் என்று கூறினார்..
அருண் இதில் சினிமா கோட்பாடுகள், குறும் படங்கள் , ஆவணப்படங்கள் மற்றும் சிறந்த  உலகத் திரைப்படங்கள் ஆகியன சிறப்பாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திரைப்பட கல்லுரி மாணவர்கள் அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நூலாசிரியர் அம்ஷன் குமார் தனது ஏற்புரையில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். விமர்சனம் செய்வது தனக்கு பிடித்தமானதாக இல்லை என்றும் பல தருணங்களில் விமர்சனம் செய்வது ஒரு அவசரக்காரனின் செயல் போன்று தோன்றுவதாகவும் கூறினார். விமர்சனம் செய்வதற்கும் அடிப்படையாக நல்ல ரசனை தேவை என்று குறிப்பிட்டார்.சிறந்த திரைப்படங்கள் இலக்கியங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்துஆராயவே நேரம் போதாது என்றார். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியக்கும் பாரதி தன்னை மாபெரும் ரசிகனாய் உருவகிக்கிறார் என்றார். தில்லியில் பாலியல் கொடுமையில் உயிரிழந்த மாணவியின் நினைவிற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டபின் கூட்டம் முடிவுற்றது.
—மா.பாலசுப்பிரமணியன்

சினிமா ரசனை
அம்ஷன் குமார்
(விரிவான இரண்டாம் பதிப்பு )
367  பக்கங்கள் விலை ரூ 275.
சொல் ஏர் பதிப்பகம்
30-ஏ, கல்கி நகர்,
கொட்டிவாக்கம்
சென்னை 600 041
solaer@outlook.com

Series Navigationதமிழ் ஆவண மாநாடு 2013எரிதழல் கொண்டு வா!
author

Similar Posts

Comments

  1. Avatar
    punaipeyaril says:

    ஒரு பக்கத்திற்கு 75 பைசா என்பது ரசனையாக இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *