அவரவர் நிழல்  

This entry is part 1 of 13 in the series 30 அக்டோபர் 2022

 எஸ்ஸார்சி

 

 

’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான்   இருந்தாள்.

  யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும் ரயில் வண்டியினுள் ஒரே களேபரமாக இருந்தது.  வண்டி மதுரையத்தாண்டி  திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியில்  அந்த ஸ்லீப்பர் கோச்சில்  இப்படி ஒரு கலவரம். பத்து பயணிகளுக்கு அங்கே கூடி கன்னா பின்னா என்று  சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘  பாதி ராத்திரில்ல  இது  பாத் ரூம் போயி வந்த நாயி  கம்முனு படுக்க வேண்டியதுதானே, வயசு எழுபது தொட்டுகிட்டு இருக்கும் போல தலமுடியப்பாரு  வெள்ளப்பொறா கணக்கா  திருவிகிட்டு கெடக்கு. இதுல  அய்யாவுக்கு  இது  கேக்குதாம்  இது’

‘எங்க போனாலும் இவுனுவ இமுச பெரிய இமுச .  கழுதங்க  அது  அதுக்குன்னு ஒரு எடம்  இருக்கு.  அவ்வெடத்துக்கு போவுலாம் நெஞ்ச நிமித்திகிட்டு  திரும்பிவந்துடலாம்ல. இங்க வண்டிக்குள்ள என்னாத்துக்கு அசிங்கிதம். பொது எடத்துல எதுக்கு அய்யா  இப்பிடி’

‘ இந்த கேடுகெட்ட  பேமானிய போயி  அய்யா கொய்யான்னு சொல்றீக’

இப்படி வேறு.

கம்பம் நகரில் ஒரு இலக்கியக்கூட்டம். இந்த காலமான காலத்தில் இலக்கியக்கூட்டம் நடப்பதே அதிசயம்.  கொரானா அவரவர்களை வீட்டோடு முடக்கிப்போட்டு ஆண்டுகள் சில ஆனது.  கிடைத்த  இடுக்கில் சிலர் அதிசயமாய் நிகழ்ச்சிகள் நடத்திப்பார்த்தார்கள் .

 தமிழில் இராமாயணம் படைத்திட்ட   கம்பருக்குத்தான்  இந்தக் கம்பம் நகரில் ஒரு இலக்கியக்கூட்டம்.’ கம்ப ராமாயணத்தில்  படகோட்டி குகன் தான்  அந்த ராமனை ஆகப்பெரிய பீடத்தில் தூக்கி நிறுத்தியவன்’ இதுதான் தலைப்பு. அவனைப்பேச அழைத்து இருந்தார்கள். கம்பம் போய் வரவேண்டும்.  கம்பம்  நகருக்குப்  போகாமல் இருக்கலாமா, மனம் ஒத்துக்கொண்டால் பரவாயில்லை.. யார் ஒருவரைக்கூப்பிட்டு மேடையில் உட்காரவைத்து மைக்கும் கொடுத்து பேசச்சொல்கிறார்கள்.  நீட்டய்ச்சால்வை போடுகிறார்கள்.

 கம்பம் நகருக்கு ரயில் வசதிதான் இல்லை.  திண்டுக்கல்லுக்கும்  சரியாய் ரிசர்வேஷன் டிக்கட் கிடைக்கவில்லை. தேஜஸ் ரயிலில் எப்படியோ ஒரு டிக்கட் கிடைத்தது.  அவன் பெருங்களத்தூரிலிருந்து   ஓலோ கார் வைத்துக்கொண்டு எழும்பூர் போனான்.  தேஜஸ் ரயில்  தாம்பரத்தில் நிற்காதாம்  அது விஷயம் அன்றுதான் தெரிந்துகொண்டான்.

 திண்டுக்கல்லில் தேஜஸ் ரயிலை விட்டு  இறங்கினான். ஒரு  பேருந்து பிடித்தாக வேண்டும்.,  அது   பெரியகுளம், தேனி, சின்னமனூர் உத்தமபாளையம் என்று  ஒரு மூன்று மணி நேரம் உருட்டு உருட்டென்றும். அப்படி  உருட்டினால் அந்தக்கம்பம் போய்ச்சேரலாம். அப்படித்தான் அவன் திண்டுக்கல்லில்  ரயிலைவிட்டு இறங்கி அந்தக் கம்பத்திற்கு பஸ்  பிடித்தான்.   இலக்கியக்கூட்டத்திற்குப் பத்திரிகை பெரிய சைசில்   அச்சிட்டிருந்தார்கள். ஒரு  நூறு  பேருக்கு அதனில்  பெயர்  இருந்தது. முன்னிலை  முன்னிலை என்று ஐம்பது பேருக்கு இருக்கலாம்.    அழைப்பிதழில்  ஜனங்களின் பேர் போடுவதில் பல நன்மைகளுண்டு.  கூட்டச்செலவுக்குக்காசும் பேரும். கூட்டத்திற்கு  ஆட்களின் வருகையும் கூடும். ஒவ்வொன்றிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இலங்கைக்கு  அரசன்  ராவணன். அவனைப்  போரில் வென்றான் ராமன்.  அந்த கங்கையில் படகோட்டினான்  குகன்.  குகனோடு  உறவு போற்றிய  அயோத்தி ராமனே உயர்ந்தவன் அவன்  வளைத்து வளைத்துப்பேசினான்.   நெடிய கைதட்டல் வாங்கினான்.

‘ பேசுனாலும் அது அதுல ஒரு அர்த்தம்  இருக்கணும் இப்படிக் கூட்டத்தில் அவன் காது படவே ஓரிருவர்  பேசிக்கொண்டார்கள். இதைவிட என்ன வேண்டும் ஒரு பேச்சாளனுக்கு. ஒரு சால்வை போர்த்தி  ரூபாய் ஐயாயிரம் கவரில் போட்டுத்தான் கொடுத்தார்களே.  இலக்கியக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் இதைவிடப்பெரியதாய்  என்ன செய்வார்கள். அவனுக்கு ரயிலுக்கும் பேருந்துக்கும் சாப்பாட்டிற்கும் எனப்போனதெல்லாம் போக காசு  ஒன்றும் மிச்சமில்லை. கூழுக்காகக்கவி பாடும் கூனக்கிழவி நம் கிழவி என்று அவ்வையாரையேச் சொல்கிறார்களே அது நமக்கும்கூட   ஒரு  நியாயம் சொல்லத்தான் சொல்கிறது. அவனே சமாதானம் செய்துகொண்டான்.

கம்பம் போகும் போது சவுகரியமாகத்தான் பயணம் இருந்தது. திண்டுக்கல் வரை சொகுசு ரயிலில் அல்லவா பயணித்துப் பேருந்து பிடித்தான் . திண்டுக்கல்லிலிருந்து மூனார் செல்லும் பேருந்து.  கம்பம் நகரில்  அவனுக்கு ’யூனிவெர்சல்’ என்னும்  பழைய லாட்ஜில் ரூம் போட்டிருந்தார்கள். அவன் லாட்ஜ் அறையில் சற்றுப் படுத்துப்பார்த்தான்.  எழுந்தான்.  தலைமுடியை அழுத்தி வாரி முடித்தான். பவுடர் போட்டபின் முகம் இன்னும் கோரமாய்த் தெரிகிறது.அதற்காக பவுடரை விடத்தான் முடிகிறதா என்ன?

கம்பத்தில்  அதே  லாட்ஜுக்காரர்களே  ’போடி ஹொட்டெல்’  நடத்துகிறார்கள். இந்தக்கலிகாலத்தில்  தமிழகத்தின் இந்தக் கோடி நகரில் சுவையாய்ச்  சூடாய் டிபன் கிடைக்கிறது. மணக்கும் காபியும்தான். நல்ல ஹோட்டலில்  சிற்றுண்டி. அதற்கும்  ஒரு ராசியிருக்கத்தான் வேண்டும். திருப்தி பட்டுக்கொண்டான்.

திண்டுக்கல்லில் திரும்பவும் வந்து ரயில் பிடிக்கவேண்டும். சட்டு புட்டென்று கூட்டம் முடிந்த கையோடு கிளம்பினான். ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்தான். கம்பம் நகரப்புதிய பேருந்து நிலையம். கழிவறைக்குச்சென்று வந்தான், ‘பத்து ரூவாதான் நீ எதானா போயிக்க’ சட்டமாய்ச்சொன்னார் பொறுப்பில் இருந்தவர்.’ யாரும் கழிவறைக்கு வருவதில்லையாம்.  கட்டண வசூல் கட்டுப்படியாகவில்லை.’ அவரே  புலம்பினார்..  

திண்டுக்கல் பஸ் ஒன்றில் ஏறி அமர்ந்தான். லொடக் புடக் என்று அந்த வண்டி கம்பத்தை விட்டுப்புறப்பட்டது. அரசுப்பேருந்து.  ஜன்னல்  மூடும் திறைகள் கிழிந்து கிழிந்து தொங்கின. பெருந்தலைவர்  காமராஜ்  ஆட்சிக்காலத்தில்  இந்தப் பேருந்தை எல்லாம் வாங்கியிருப்பார்கள்.

திண்டுக்கல்லிலிருந்து நேராகச்  சென்னைக்கு   ரிசர்வேஷன் டிக்கட் கிடைக்கவில்லை. விருதுநகரிலிருந்து சென்னைக்குக் கிடைத்தது. செகண்ட் ஏசி.    போர்டிங்க்  மட்டும் திண்டுக்கல் எனப்போட்டிருந்தார்கள். இரவு பன்னிரெண்டு மணிக்கு திண்டுக்கல் ஸ்டேஷனில் ஏறியாகவேண்டும்.  பேருந்தில் மூன்று மணி நேர  கடக் புடக் பயணம்.பிறகு திண்டுக்கல் வந்தடைந்தான். ஒரு கொடைக்கானல் வாழைப்பழமும் இரண்டு  ஆறிப்போன சமோசாவும் சாப்பிட்டு இரவு உணவு முடிந்தது.  சாலையில் போக்கு ஆட்டோவை க்காணவில்லை. தனி ஆட்டோ பிடித்தான் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தான். ஹோ என்று கிடந்தது பிளாட்பாரம். ரயிலுக்குக்காத்திருந்த அவன் அரைத்தூக்கத்திலிருந்தான். குருவாயூர் வண்டி இரவு பன்னிரெண்டுக்கு திண்டுக்கல்  ரயில் நிலையம் வந்தது. இவன்  ஏற வேண்டிய பெட்டியை த்தேடினான். கோச் டிஸ்பிளே போர்டு  அதெல்லாம்  அங்கு இல்லை.  ரயில்வேகாரர்கள் சொல்வதை வைத்து  அந்த அடையாளம்   பார்த்து  நின்றவன்  பெட்டியில் சரியாக ஏறிக்கொண்டான்.  நடு நிசி. பெட்டியில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். இவனுக்கு  ஒதுக்கப்பட்ட படுக்கையைத்தேடி கண்டு பிடித்தான். அதனில் யாரோ காலை நீட்டி உறங்கிக்கொண்டிருந்தார்கள். குளிர்சாதன வசதிப்பெட்டி நல்ல உறக்கம்தான்.

கோச்சுக்குப்பொறுப்பு அதிகாரி அரைத்தூக்கத்தில் இருந்தார். அவனுக்கு ஒரு காலி பெர்த்தைக்காட்டினார்.’ இதுல படுங்க பாக்கலாம்’ என்றார். அவனுக்குக் குறிக்கப்பட்ட படுக்கை எண் இல்லை. எதுவாயிருந்தால் என்ன, எதோ ஒன்று ஏறிப்படுத்தான். உறங்கினான். சர்க்கரை வியாதிக்காரன். இரவில் குறைந்தது இரண்டு தரம் விழித்து பாத் ரூம் போவான். பாதி இரவு முடிந்து போனதால் ஒருமுறை எழுந்தான். பாத் ரூம் போனவன் திரும்பிவந்தான். அவன் படுத்திருந்த இடத்தில் போர்வை கன்னா பின்ன என்றுதான் கிடந்தது. அதனில் கை வைத்து இழுத்ததுதான் தாமதம்,

‘அய்யோ  பொம்பள கைய புடிச்சி இழுக்குறான் கைய புடிச்சி இழுக்குறான்’ கூவினாள் ஒரு பெண். நடுத்தர வயது. பெட்டியில் இருந்தவர்கள் லைட்டைப்போட்டார்கள். ’ஆ ஊ’ என்று கத்தினார்கள். அதற்குள்ளாய் இரண்டு போலீசுகாரர்கள் வந்து நின்றார்கள்.

அவன் கத்திப்பார்த்தான். அவன்  சொன்னதை யாரும் காதில் வாங்கினால்தானே. கோச் பொறுப்பதிகாரி வந்தார்.

‘ஏம்மா இந்த சீட்டுக்கு ஏன் நீ வந்தாய். உனக்கு வேற  பெர்த்துல்ல  குடுத்து இருந்தேன்’

‘ நீங்க எனக்கு குடுத்த சீட்ல  ஜோல்டிங்  ரொம்ப அதிகமா இருந்திச்சி. கண்ண மூடவே முடியல. அதான் எனக்கு அலாட்டான  சீட்ட வந்து பாத்தன் அது காலியாயிருந்துது. சரி படுப்பமேன்னு படுத்தேன். தூங்கிட்டேன். தூக்கத்துல  யாரோ போர்வயை இழுக்கறது தெரிஞ்சிது.  நல்ல தூக்கம் அதான் கத்திட்டேன்’

அவன் கண்களோ குளமாகியிருந்தது.

‘ சார் பாத் ரூம் போயிட்டு வந்தன் பெர்த்ல  போர்வ கன்னா பின்னான்னு கெடக்கு போலன்னு கை வச்சி பாத்தேன்.  மங்கலான  லைட் வெளிச்சம் வேற. அவுங்க சத்தம் போட்ட பெறகுதான் அந்த எடத்துல  ஒரு அம்மா படுத்து இருக்கறதே எனக்கு தெரியும்.’

அவன் விளக்கம் சொன்னான். மீண்டும் கண்களைத்துடைத்துக்கொண்டான்.

போலீசுகாரர் ஒருவர்’ நீங்கதான்   சொல்லுணும்.  அதான்  இங்க  ரொம்ப முக்கியம்.  இப்ப  என்னம்மா சொல்றீங்க’ அந்தப்பெண்ணைப்பார்த்து  வினவினார்.

’பெரியவர் சொல்றதுதான் சரி.’. அந்தப்பெண் சட்டெனச்  சொல்லிமுடித்தாள். கோச் சின் பொறுப்பு அதிகாரியும் அதனை ஆமோதித்து நிம்மதியடைந்தார்.

’அவுங்க அவுங்க போங்க’  ஒரு போலீசுகாரர் சத்தமாய்ச்சொன்னார்.

சுற்றி நின்றவர்கள் ‘ அட  இதுல ஒண்ணும்  விஷயம் இல்ல இத வுடுங்க’ சொல்லி விட்டு அவரவர்கள் பெர்த்தில்  படுத்துக்கொண்டார்கள்.

 இப்போது  அவன்அவனுக்கு ஒதுக்கப்பட்ட  சரியான பெர்த்தில் போய்ப் படுத்துக்கொண்டான்.  சீட்  உலுக்கி உலுக்கி  எடுத்தது.  ஜோல்டிங்க்  இருக்கத்தான் செய்தது.  பொழுது  அனேகமாய் விடிந்து விட்டிருந்தது. சற்றைக்கெல்லாம் தாம்பரம் வந்துவிடும்..  தாம்பரத்தில் இந்த வண்டி நிற்கும். கம்பம் இலக்கியப்பயணத்தை  அவன் எங்கே மறப்பது.

————————————————————————-

Series Navigationபனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *