ஆண் பாவங்கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 11 of 18 in the series 14 பெப்ருவரி 2016

அழகர்சாமி சக்திவேல்

மருத்துவம் சொல்கிறதாமே
சிறுநீர் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று
நானும் எனது அண்ணனும் தினமும்
சிறுநீர் குடிக்கும்
கழிப்பறைப் பீங்கான் பாத்திரங்கள்…
கழிப்பறையின் ஓர் ஓரத்தில்
நானும் என் அண்ணனும் அடுத்தடுத்து..

அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாவது
ஆண்களின் அழுக்கு அருவியில் எங்கள் குளியல்
அறைக்குள் அகப்பட்டுக் கொண்ட
என் அப்பா பீங்கானின் வாழ்க்கையோ
படு மோசம்…

எங்களிடமும் சொல்லுதற்கு ஒரு கதை உண்டு…
உங்களுக்கு ஓர் அருவருப்பான கதை..
எங்களுக்கோ ஒரு வேதனைக் கதை.

கதைக்கு முன் ஒரு கேள்வி…

ஆணாதிக்கம் நிறைந்த தமிழ் இலக்கிய உலகம்..
பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளை
போட்டி போட்டுக் கவிதையாக்கும்…
காதல் கவியரசு பட்டமும் பெறும்..
ஆனால் யாராவது ஒருவர்
ஆணின் அந்தரங்கம் வர்ணித்தால்
அருவருப்பு கொள்ளும்… ஏன்?

ஆணின் அந்தரங்கமும் அழகானது ஐயா.
தினமும் எங்கள் முன்னால்
அழகிய தம்புராக்களாய்.
ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதமாய் மீட்டுவான்..
நாங்கள் எப்போதும்
வாய் பிளந்து ஆச்சரியத்தில்…

ஆனால் அவன் மட்டும் வித்தியாசமாய்..
ஐந்து மணி நேரம் கூட என் முன் நிற்பான்
எப்போதும் ஓர் ஏக்கப் பார்வை.
ஏதோ ஓர் பசியில் பிச்சைக்காரனாய்

யாராவது ஆண் வந்தால் மட்டும்
துடிதுடிப்பான்
தன் தம்புராவைத் தாறுமாறாய் மீட்டுவான்
அடுத்தவன் தம்பூரா
அவன் பசிப் பார்வைக்குள்

“தூ”
அடுத்தவன் காறித்துப்பிய எச்சில்
என் அண்ணன் முகம் முழுவதும் மட்டும் அல்ல
என் முன் நிற்பவன் மனம் முழுதும்
ஒரு அவமானக் குளியல்..

எத்தனை தடவை அவன் அவமானக் குளியல்கள்?
என்னில் கணக்கில்லை.
ஆனாலும் மனம் தளராத அவன்..

எனக்குள் ஒரு கேள்வி
எல்லோரையும் போலவே இருக்கிறது
இவன் தம்புராவும்…
மீட்டல்களில் மட்டும் வேறு ஒரு ராகம்…
சமூகம் சொல்லும் சரிகமபதநி இலக்கணம்
இந்த ராகத்துக்குள் இல்லை.
ஆனால் இதுவும் ஒரு ராகம் தானே?

கடைசியில் ஒரு ஆண் வந்தான்
என் முன் இருப்பவன் மீட்டிய அதே ராகம்
அவனும் மீட்டினான்…
இருவரும் இப்போது என்
அப்பா அறைக்குள்…கசமுசா கானங்கள்..
எனக்குள் ஏதோ ஒரு சந்தோசம்…
அவன் தனிமை தீர்ந்த நிம்மதி

ஐயகோ..
எல்லாமே ஒரு நிமிடம் தான்..
அதற்குள் திமுதிமுவென போலிஸ் கூட்டம்…
வாங்கடா வெளியே…மிருகங்களா..
காக்கி உறுமல்கள்…
கசங்கிய ரெண்டு ஆடுகள் வெளியே வந்தன
தொடை நடுங்கின..

இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா?
காக்கிப் புலிகள் அந்த ஆடுகளை மிதித்தது.
கை விலங்கு கொண்டு ஆடுகளைக் கவ்வியது.
தர தர இழுப்புக்குள் துவண்ட ஆடுகள்…

அந்த ஆடு புலியின் ஆட்டக் கொடூரம்..
நானும் என் அண்ணனும் அதிர்ச்சியில்
இப்போதும் வாய் பிளந்தோம்.

போகும்போது ஒரு காக்கி டவுசர்
என்னில் மூத்திரம் பெய்தது..
அவன் மூத்திரத்தில் ஒரு கெட்ட நாற்றம்..
ஓர் காதல் குற்றம் என்ற
சமூக மூட நம்பிக்கையின்
செத்த பிண நாற்றம்.
சட்டம் இடம் தராததால்…
பொது இடத்தில் காமம் குற்றம் எனத்தெரிந்தும்
வழிதெரியாது…
கழிப்பறைகளையே காதல் கூடங்களாக்கும்
ஆண் பாவங்களை அடிமைப்படுத்தும்
ஓர் அல்லூறு நாற்றம்.

a_sakthivel@hotmail.com

Series Navigationவிஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *