ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை

author
2
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 29 in the series 1 டிசம்பர் 2013

villavankothai28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை .

 

வில்லவன்கோதை

தமிழக அரசு பதிப்பித்த 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: ‘தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனை அறியலாம்.

அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.’ –  என்று துவங்குகிறது அந்த கட்டுரை.

இத்தகைய வரிகள்  கிருஷ்ணன் குறிப்பிட்டதைப்போல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தவித  குழப்பத்தையும்  மனக்குமுறலையும் இதுவரை ஏற்படுத்திவிட்டதாக தெரியவில்லை. மேற்போக்காக குறை பேசுவோர் இது போன்று எதைவேண்டுமானாலும் பேசலாம்.

அரசு புத்தகத்தில்  தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்திருக்கக்கூடுமென்று இவர்களை மனதிற்கொண்டு தான் ஜக்கிரதையாக  சொல்லப்பட்டிருப்பதாய் நினைக்கிறேன்.

அறிவியல்  ! தொழில்நுட்பம் !

இரண்டுமே ஒன்றுக்கொன்று இணைந்த  செயல்பாடுகள்.

ஒன்றிலிருந்து இன்னொன்று.

ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை .

அறிவியல் தொழில்நுட்பத்தின் கருவரை.

அறிவியல் இன்றி தொழில் நுட்பம் இல்லை

வானத்தில் பறப்பது நீரினில் மிதப்பது அவரவர் எண்ணங்கள் !

புலவர்களின் தொலை நோக்குப்பார்வை ,  கவிஞர்களின் கனவு !  –  அதுதான் அறிவியலின் இலக்கு  !

எட்டிபிடிக்கவேண்டியது  தொழில் நுட்பம்.

ஜெர்மானியர்களின் அறிவியல்  திறன்  – ஜப்பானியர்களின் தொழில் நுட்ப அறிவு.

இப்படி சொல்லலாம்.

எடுத்த எடுப்பிலேயே எதுவும் முளைத்து விடாது. அதுவும் உருப் பெற பல கட்டங்களை கடந்தாக வேண்டும். அது எல்லாரும் அறிந்ததுதான்.அதன் ஆரம்ப புள்ளியே அறிவியல்  சிந்தனைதான்.

அன்று அறிவியலும் தொழில் நுட்பமும்  சேர்ந்தேயிருந்தது. இன்று  வெவ்வேறு  பெயர்களில் உலவுகிறது.அவ்ளவுதான்.

அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமெண்ட்)  கண்டறிதல் (ஃபைண்டிங்ஸ்) என்றெல்லாம் இன்று பேசுகிறோம்.அன்று அத்தனையும் அன்றைக்கேற்ப்ப ஒரே சட்டியில்தான் இருந்தது. இன்று தனித்தனி கிண்ணங்களில் பரிமாறப்படுகிறது

செம்புலபெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே

என்று இருமனம் கலப்பதைதான் சங்ககாலப்புலவர் கவிதையில் பேசுகிறார் . கிருஷ்ணன் பேசுவதைப்போல் மண்ணியல் அறிஞராய் வெளிப்பட அல்ல.செம்புலனை அறியாமற் இருநெஞ்சம் கலப்பதை புலவர் பேசமுடியாது. அந்த வண்ணம் மண்ணுக்கு வந்தது Fe2o3 என்ற இரும்பு ஆக்ஸைடால் என்று தனிதனி சொற்களால்  இன்று சொல்லலாம்.

‘வலவன் ஏவா வானூர்தி’ என்று எழுதிய  புலவரின் தொலைநோக்குப் பார்வைதான் அறிவியலின் இலக்கு.அது அவருக்கிருந்த விண்ணியல் சிந்தனையை நினைவூட்டும். .அவர் விண்ணியல் வல்லுனர் என்று அவர் நினைத்திருக்க முடியாது. புலவர் என்ற சொல்லிலேயே செறுக்குற்றிருக்கக்கூடும். அப்படி ஓர் ஊர்தி முன்னால் இருந்தது என்றும் எவரும் பேசவில்லை. பறப்பது மிதப்பது எல்லாமே தொலைநோக்கு சிந்தனையாளர்களின் பார்வை.

ஆவணப்படுத்த இயலாமற் போன காலத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

அன்று மொழியிலும் இலக்கியத்திலும் நக்கீரனை போன்ற எதிர்வினைகள் இருந்தன.வள்ளுவனுக்கு தான் எழுதிய திருக்குறளை நிரூபணம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலையில்,இலக்கியத்தில் அன்று நிரூபணத்துக்கு அரங்கேற்றம் என்று பேசப்பட்டது தொழில்நுட்பத்தில் அதற்கு அவசியமேற் படவில்லை.

ஏன்  எதற்கு எப்படி என்ற கேள்விகள் வரும் போதுமட்டுமே அறிவியல் துளிற்கிறது.. அதனுடைய அடுத்த படிகள்தாம் கோட்பாடு சோதனை ,நிரூபணம்  எல்லாம்.அன்று தோன்றிய சித்தமருத்துவம் அப்படித்தான்.

எரிபொருள் இல்லாமல் விமானம் பறந்திருக்க முடியுமா? அகக் கனற்சிப் பொறியில்லாமல் (இண்டெர்னல் கம்பஷன் என்ஜின்) விமானம் பிறந்திருக்க முடியுமா? ரப்பர், அலுமினியம் போன்ற பொருள்கள் இல்லாமல் அது உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக பெர்னூலி கொள்கை தெரியாமல், நியூட்டனின் விதிகள் தெரியாமல், பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் இருந்திருக்க முடியுமா? என்றெல்லாம் இன்று கிருஷ்ணன்  பேசலாம்.

தமிழர்கள் சாகா வரம் பெற்றஅணைகளைக் கட்டியிருக்கிறார்கள். இன்றைய அறிவியல் அறிவாளிகள் வியக்கின்ற கலைக்கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். கண்கவர்  சிற்பங்களைச் கற்களில் செதுக்கியிருக்கிறார்கள். உலகமே திருடும்  செப்புச் சிலைகளை வடித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆக்குவதற்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அறிவியல் சிந்தனைகளும் இருந்திருக்கவேண்டும்.

மேற்கத்திய உலகில்கூட, நாம் இன்று அறிவியல் என்று சொல்லிக்கொள்ளும் நவீன அறிவியல் பிறந்தது 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோவுக்குப் பிறகுதான். அதற்கு முன்பே இந்திய அறிஞர்களுக்கு அறிவியல் முறைகளைப் பற்றிய ஓர் அடிப்படை அறிவு இருந்திருக்கிறது. இல்லாவிட்டால், 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் பாஸ்கரரிடமிருந்து லீலாவதி, பீஜகணிதம் போன்ற நூல்கள் பிறந்திருக்க முடியாது.

பாஸ்கரருக்கு நுண்கணிதம் (கால்குலஸ்) பற்றிகூட அடிப்படை அறிவு இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதன் இன்றைய உபயோகம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கமுடியாது.

அடித்தளமிட்ட அடுத்த நாளே அடுக்கு மாடி எழுப்பமுடியாது.

அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே இன்று இருக்கும் பிணைப்பு இயல்பானது.. அறிவியல் இல்லையென்றால், தொழில்நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால், அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்பது வள்ளுவர் வாக்கு. பண்டைய தச்சருக்கு அவர் உருவாக்கிய வண்டி எவ்வளவு பளு தாங்கும் என்பதுபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். பளுவை எவ்வாறு வண்டியில் பரப்பி வைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கு ‘தகைப்பு (ஸ்ட்ரெஸ்) என்றெல்லாம் பேசத் தெரிந்திருக்காது. ‘திரிபு’ (ஸ்ட்ரெயின்) பற்றி கட்டுரையெல்லாம் எழுதத் தெரிந்திருக்காது.

தஞ்சை பெரிய கோயில் 1,000 ஆண்டுகளாகியும் அப்படியே நிற்கிறது. கடல்மல்லைக் கோயில் சந்திக்காத புயல்கள் இல்லை, ஆனாலும் நிமிர்ந்து நிற்கின்றது. மாறாக, தொழில்நுட்பம் வலுப்பெற்றிருக்கும் இந்நாளில், சில ஆண்டுகள் முன்பு கட்டிய அடுக்குமாடி வீடுகள் காற்றடித்தால் தள்ளாடுகின்றன  . இதற்கு  இன்றைய   ஈடுபாடற்ற தொழில் நுட்பமும்தான்.

பெரிய கோயிலைக் கட்டியவரும் கடலோரக் கோயிலைக் கட்டியவரும் மாமேதைகள் மட்டுமல்ல.இன்றைய அறிவியல் மேதாவிகளையே விஞ்சியவர்கள். அவர்கள் அன்று அமைத்த பெருநகர வரைபடங்கள் அவைகளை நமக்குணர்த்தும். . அன்றைய தொழில்நுட்பத்தில் அறிவியலின் உச்சத்தை அடைந்தவர்கள் .  அவர்களுக்கும் அறிவியலுக்கும் இருந்த தொடர்பு மறைமுகமானது.

எனவே, மாணவர்களிடம் நம் முந்தையர் செய்த விந்தைகளைப் பற்றிக் கூறும்போது, அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கு அறிவியலே அடிப்படை என்று கூரவேண்டும்.அறிவியற் சிந்தனைகளின்றி தொழில் நுட்பம் எப்போதுமே தோன்ற முடியாது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். அதிகக் கருவிகளும் அடிப்படை அறிவியல் ஞானமும் இல்லாமலே முன்னோர்களால் அரிய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அவர்களின் வழிவந்த நமக்குத் தொழில்நுட்பமும் அறிவியலும் தனித்தனி தட்டுகளில் கிடைக்கிறது.அவை உலகத்தின் சொத்துக்கள். அவற்றின் துணையால் நம்மாலும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று அழுத்திச் சொல்ல வேண்டும்.

எந்த காலத்திலும் அறிவியற்சிந்தனைகளின்றி தொழில் நுட்பம் உச்சத்தை அடைந்திருக்க முடியாது.

தன் குழந்தையை எல்லா கட்டங்களிலும் பெற்றவன் கொஞ்சி மகிழ்வதில்லை.ஒவ்வொரு காலங்களிலும் அது மாறுகிறது. பழமை பேசி பூரிப்பவர்கள் எப்போதுமே அதை பேசித்திரிவதில்லை. மேதாவிகள்தாம் இதை பெரிதாக குறை பேசுகிறார்கள்.

வலுவான அடித்தளமின்றி என்றைக்குமே கோபுரங்கள்  உயர்வதில்லை.

கடந்தகாலங்களை நினைவில் நிறுத்துதல்  இழிவொன்றும் இல்லை.தன்னிடம் என்னன்ன இருந்தது என்னன்ன இருக்கிறது என்றறியாதவன் என்றைக்குமே அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.

அறிவியலில் அடுத்த புள்ளிதான் தொழில் நுட்பம். ஆனாவுக்கு அடுத்த எழுத்துதான் ஆவன்னா !

 

பாண்டியன்ஜி (வில்லவன் கோதை )

pandiangee@gmail.com

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *