ஆழ் கடல்

This entry is part 5 of 31 in the series 20 அக்டோபர் 2013

டாக்டர் ஜி. ஜான்சன்

தரங்கம்பாடி கடல் எப்போதுமே இறைச்சலுடன்தான் காணப்படும். அந்த அலைகளின் ஓசை யாரோ ஒரு பண்டைய புலவனின் காதிலோ அல்லது சோழ மன்னனின் செவியிலோ கீதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்தப் பகுதிக்கு தரங்கம்பாடி என்று அழகான தூய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். தரங்கம்பாடி என்பதற்கு ” பாடும் அலைகள் ” என்பது பொருளாகும்.
Bungalow_on_the_Beach,_Neemrana_Hotels,_in_Tranquebar,_Tamil_Nadu

ggggg

tranquebar-2

images
அதன் அலைகள் தொடர்ந்து வந்து கரையோரத்தில் உள்ள பாறைகள் மீது முட்டி மோதி பெரும் ஓசையுடன் சிதறி விழும். கரையோரத்தில் உள்ள மாசிலாமணி நாதர் சிவன் கோவிலின் வலது புறத்தில் நிறைய கருங்கல் பாறைகள் குவிந்திருக்கும்.

இந்தக் கோவில்தான் தரங்கம்பாடியின் புராதனச் சின்னமாக இன்றும் விளங்குகிறது. இது பதினான்காம் நூற்றாண்டில் 1306 ஆம் வருடத்தில் முதலாம் மாயவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னனால் தரப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது. இன்று கடல் உள்ளே புகுந்துவரும் நிலையில் இந்தக் கோவிலின் சுவர்கள் இடிந்து கடலுக்குள் மூழ்கும் நிலையில் உள்ளது.

அவ்வாறு சிதறிக் கிடக்கும் பாறைகளின் பின்னணியில் அந்த ஊரின் சரித்திரம் புதைந்துள்ளது. அந்த பழம்பெரும் சரித்திரத்தை இன்றும் , இனி என்றும் கூறும் வண்ணம் சற்று தொலைவிலேயே ஒரு வலுவான கோட்டை உள்ளது. அதுதான் ” டேன்ஸ்போர்க் கோட்டை ” ( Dansborg Fort ).

மாசிலாமணி நாதர் கோவிலின் வலது பக்கத்தில் கடலில் மூழ்கியும் மூழ்காமலும் கிடக்கும் பெரும் பாறைகள் கிடக்கும் இடத்தில்தான் முன்பு துறைமுகம் ஒன்று இருந்துள்ளது. அதைக் கட்டியவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் அந்த கோட்டையையும் கட்டியவர்கள்.

டென்மார்க் நாட்டின் வணிகர்கள் அங்கு வருமுன் தரங்கம்பாடி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

வணிகம் செய்ய அங்கு வந்த டென்மார்க் நாட்டின் கடற்படைத் தளபதி ஓவே ஜெடீ ( Ove Gjedde ) என்பவர் தரங்கம்பாடியில் ஆழ்கடல் உள்ளதை அறிந்து அங்கு துறைமுகம் அமைத்து ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் ஈடுபட விரும்பினார்.

அப்போது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அங்கு 1620ஆம் ஆண்டில் டேன்ஸ்போர்க் கோட்டையைக் கட்டினார். அவர்களுக்குத் தரப்பட்ட தரங்கம்பாடி பகுதியைச் சுற்றிலும் பலம் வாய்ந்த சுவர்களும் எழுப்பப்பட்டன.

1620 ஆம் வருடத்திலிருந்து 1845 ஆம் வருடம் வரையில் தரங்கம்பாடி டென்மார்க் நாட்டின் காலனியாக ஆளப்பட்டது.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கோட்டைக்குள் படைவீரர்கள் தங்கும் தளம், சமையல் பகுதி, பண்டகச்சாலை, சிறைச்சாலை பகுதிகள் உள்ளன. மேல் தளத்தில் தலைமையகமும் ஆளுநரின் இருப்பிடமும் அமைந்திருந்தது.

தரங்கம்பாடியின் வீதிகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டன. பல மாடி வீடுகளும் அன்று கட்டப்பட்டன. அவற்றில் சிலவற்றை இன்றும் காணலாம்.

ஐரோப்பியாவில் நடந்த நெப்போலியன் போரின் முடிவில் 1808 ஆம் வருடம் தரங்கம்பாடி ஆங்கிலேயர்களின் கைவசம் வந்தது .பின்பு 1814 ஆம் வருடத்தில் டென்மார்க்கிடம் மாறியது. இறுதியாக 1845 ஆம் வருடத்தில் அவர்கள் தரங்கம்பாடியை ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டனர்.

இன்று அந்த கோட்டையில் காலனித்துவ பொருட்கள் வைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி மற்றொரு விதத்திலும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்குதான் இந்தியாவின் முதல் கிறிஸ்துவ

சீர்திருத்த சபையின் ( Protestant ) இறைத் தூதர்கள் ( Missionaries ) வந்து இறங்கினார்.

ஜெர்மனி நாட்டிலிருந்து அவர்கள் வந்தனர். பார்த்தலோமேயூஸ் சீகன்பால்க், ஹீன்ரிச் புலுச்சோ என்ற அவ்விருவரும் 1705 ஆம் வருடம் தரங்கம்பாடியில் ஏசுவின் நற்செய்தி போதிக்கத் துவங்கினர். அவர்கள் கட்டிய சீயோன் தேவாலயம்தான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் ஆலயம் ( The first Protestant சர்ச் in India ). அது 1701 ஆம் வருடத்தில் கட்டப்பட்டது. இன்று அது புது எருசலேம் தேவாலயமாக தமிழ் சுவிஷேச லூத்தரன் திருச்சபையால் நன்கு பராமரிக்கப் படுகின்றது.

தமிழ் கூறும் நல்லுலகில் வேறொரு மாபெரும் வரலாற்று சிறப்பும் தரங்கம்பாடிக்கு உள்ளது. இந்திய மொழிகளில் முதல் மொழியாக தமிழ் அச்சில் பொறிக்கப்பட்டு அழகு கண்டது இந்த தரங்கை எனும் தரங்கம்பாடியில்தான்!

அச்சில் ஏற்றப்பட்ட அந்த முதல் தமிழ் நூல் ஏசுவின் நற்செய்தி கூறும் புதிய ஏற்பாடு.

ஜெர்மானியரான சீகன்பால்க் தமிழ் கற்று புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்தார். அது அனைத்து மக்களுக்கும் சேரவேண்டும் என்ற ஆவலில் நூல் வடிவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

தமிழ் எழுத்துக்களை ஜெர்மனிக்கு கொண்டு சென்று அவற்றை அச்சில் வார்த்தார். இங்கிலாந்து அரசி ஒரு அச்சு இயந்திரம் தந்தார். அதைக் கப்பலில் தரங்கம்பாடிக்கு கொண்டு வந்தார். அங்கு அச்சுக்கூடம் அமைத்து, பொரையாரில் காகிதப் பட்டரையும் உருவாக்கி புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு வினியோகித்தார். இது நடந்தது 1714 ஆம் வருடத்தில்.

1727 ஆம் வருடத்தில் முதன்முதலாக இந்தியாவில் நாள்காட்டி ( Calender ) தரங்கை அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது!

சீகன்பால்க் 40,000 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் அகராதியையும் உருவாக்கி வெளியிட்டார். அதில் தமிழ்ச் சொல் , அதை உச்சரிக்கும் முறை, ஜெர்மன் மொழியில் அதன் பொருள் ஆகிய மூக்கூறுகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் கற்ற இரண்டு வருடங்களில் ஆவர் தமிழ் மொழியில் பதினான்கு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

சமயப் பணி, தமிழ்ப் பணியுடன், கல்விப் பணியிலும் அந்த இருவரும் ஈடுபட்டனர். தரங்கம்பாடியில் அவர்கள் தொடங்கிய புலுச்சோ துவக்க தமிழ்ப் பள்ளி இன்றும் உள்ளது. அதோடு ஒர் உயர்நிலைப் பள்ளியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் இன்று தரங்கையில் இயங்கி வருகின்றன.

இதுவரை பாடும் அலைகள் கொண்ட தரங்கம்பாடியின் புகழ் பாடினேன். இனி நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன். கதை சிறியதுதான்.

என்னுடைய அண்ணன் பீட்டர் அப்போது தரங்கம்பாடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அண்ணி ஹில்டா துவக்கப் பள்ளி ஆசிரியை.

நான் மருத்துவம் பயின்ற போது விடுமுறைகளில் அங்கு சென்று விடுவேன்.

அண்ணியின் தம்பி தாஸ் பி,ஏ, முடித்துவிட்டு சென்னை மெஸ்டன் கல்லூரியில் பி.டி. பயின்று வந்தார். அவரும் வந்துவிடுவார்.

விடுமுறையைக் கழிக்க அருமையான கடற்கரை ஊர் தரங்கம்பாடி. தினமும் படகுகளில் புதிதாக வந்து இறங்கும் மீன், இறால், கணவாய் , நண்டு ஆகியவை நிறைய கிடைக்கும்.

மாலையில் நாங்கள் கோட்டை அருகில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொள்வோம்.கடற்காற்று ஜிலு ஜிலுவென்று வீசும்.

ஒரு நாள் காலையில் நாங்கள் நீச்சலடிக்க முடிவு செய்தோம். தாஸ் திருச்சியில் காவேரி அன்றாடம் நீச்சல் அடித்து குளிப்பவர். நான் சிதம்பரத்தில் குளம், ஆற்றில் நீந்திப் பழகியவன்.

நாங்கள் கிளம்பும்போதே கடல் ஆழம் என்று சொல்லி அண்ணி தடுத்தார், எங்களுக்கு இளம் இரத்தம். புறப்பட்டு விட்டோம்!

கடலில் இறங்கி ஓரமாகத்தான் நீச்சல் அடித்தோம். கொஞ்ச நேரம்தான். பெரிய அலை வந்து திரும்பியபோது அருகில் இருந்த தாஸ் காணவில்லை! பதறிப்போன நான் தேடியபோது அவர் கைகளை உயரே தூக்கி தத்தளிப்பது தெரிந்தது. அவர் மூழ்கி மூழ்கி மேலே எழுந்தார்!

நான் எதையும் யோசிக்காமல் அவரை நோக்கி நீச்சல் அடித்தேன். கொஞ்ச நேரத்தில் அவரின் கையைப் பற்றிக் கொண்டேன். கால் வைத்து பார்த்தபோது தரை தட்டுப்படவில்லை .

ஒரு கையில் அவரைப் பிடித்துக்கொண்டு மறு கையால் நீச்சல் அடிக்க முயன்றேன். முடியவில்லை. அப்போது அடுத்த பெரிய அலை கரையை நோக்கி வந்தது. அடுத்த நிமிடம் காலில் ஏதோ தட்டுப்பட்டது. இருவரும் அதை கைகளால் இறுக்க பற்றிக்கொண்டோம்!

அலை மீண்டும் கடலுக்குள் பின்வாங்கியதும் நாங்கள் சிதறிக் கிடந்த பாறைகள் மீது இருப்பது தெரிந்தது

அவற்றில் ஒட்டியிருந்த மட்டிகளும் சிப்பிகளும் கைகளிலும் கால்களிலும் சரக் சரக் என வெட்ட வெட்ட, இரத்தம் வழிந்தோட கரையேறினோம்!

( முடிந்தது. )

Series Navigationமருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டுஉலகெலாம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

18 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தரங்கம் பாடியின் 500 வருடப் பூர்விக வரலாற்றைச் சிறப்பாக திண்ணையில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி. ஐரோப்பியரான போர்ச்சுகல், பிரெஞ்ச், பிரிட்டன் போன்று டச்சுக்காரரும் தமிழகத்தின் தரங்கம் பாடியில் தடம் வைத்தார் என்பதும், அங்கேதான் கிறித்துவரால் இந்தியாவின் முதல் அச்சகம் நிறுவப் பட்டது என்பதும், முதன் முறை நான் அறிந்து கொண்ட அரிய தகவல்.

    பாராட்டுகள் டாக்டர் ஜி. ஜான்சன்.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    கதைன்னு படிச்சுக்கிட்டே போனேனா என்ன ஆச்சரியம் பாருங்கள். கதையில்லை. வரலாறு.

    இந்ததடவை மருத்துவர் நம்மை ஏமாற்றவில்லை. வரலாறே எழுதிவிட்டார்.

    அவர் வாழ்க்கை நிகழ்வுக‌ளுடன் விரவிய‌ சிறப்பாக எழுதப்பட்ட சிறுவரலாறு.

    தேங்க்ஸ் சார். படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.

    (இப்படி நகைச்சுவையாக நான் எழுதக்காரணம், (முதல் 3 வரிகள்தான்) வரலாற்றை ‘நகைச்சுவையும் வித்தியாசமானவையும்’ என்ற பொதுத்தலைப்பில் போட்டிருக்கிறார்கள். இங்கே என்ன நகைச்சுவையிருக்கிறது? தாரங்கம்பாடியைப்பற்றிச்சொன்னால் வித்தியாசமானவையா? எனவே பொதுத்தலைப்பின் பொருத்தம் பின்னூட்டத்திலாவாது இருக்கட்டுமென எழுதினேன். நிறைய பொதுத்தலைப்புக்களை உருவாக்கி விட்டால், வரலாறு அல்லது பயண அனுபவம்’ என்ற தலைப்பில் போட்டுவிடலாமே?)

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    //நலல வேளை சிறுகதையில்லையிது.
    // என்பது முதல்வரி. விட்டுப்போயிட்டு. சேர்த்துபடிக்கவும்.

  4. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு.திரு ஜான்சன்,

    அருமையான வரலாற்றுத் தகவல்களுக்கு நன்றி. இறுதியில் குறிப்பிட்டுள்ள சம்பவமும் திக்..திக்..

    அன்புடன்
    பவள சங்கரி

  5. Avatar
    வாணிஜெயம் says:

    தரங்கம்பாடியின் வரலாறு தெரிந்து கொள்ள வாய்ப்பை வழகியதற்கு நன்றி மருத்துவர் அவர்களே…

  6. Avatar
    ஷாலி says:

    டாக்டர்.ஜான்சன் அவர்களின் ஆழ்கடலில் இன்னும் மூழ்கி சில வரலாற்று முத்துக்களை ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் “தமிழ்நாட்டின் தரங்கம்பாடி”ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து எடுத்துள்ளேன். சில சுவராசியமான வரலாற்று தகவல்களை பார்ப்போம். தரங்கம்பாடி ஊரின் அசல் பெயர்.

    // மாசிலாமணீஸ்வரர் கோவில் என்ற பெயரிலான சிவன் கோவில் ஒன்று தரங்கம்பாடியில் உள்ளது. இக் கோவிலில் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தியேழாவது ஆட்சியாண்டுக் (கி.பி.1305) கல்வெட்டொன்றுள்ளது. இக்கல்வெட்டில், ‘சடங்கன்பாடியான குலசேரன் பட்டினத்து உடையார் மணிவண்ணீசுரமுடையார்க்கு’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. தொடக்கத்தில் சடங்கன்பாடி என்ற பெயரில் தரங்கம்பாடி அழைக்கப் பட்டுவந்ததும், குலசேகரபாண்டியன் தன்பெயருடன் தொடர்புபடுத்தி குலசேகரன்பட்டினம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளான் என்பதும் இக்கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.

    தஞ்சை நாயக்கமன்னனான அச்சுதப்ப நாயக்கரது கல்வெட்டொன்று முற்றுப்பெறாத நிலையில் தரங்கம் பாடி மாசிலாமணீஸ்வரர் கோவிலில் கிடைத்துள்ளது. 1614 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ‘சடங்கன்பாடி’ என்றே தரங்கம்பாடி குறிப்பிடப்பட்டுள்ளது.
    கிறித்தவரான அடிமைகள்:
    தரங்கம்பாடியில் வாழ்ந்து வந்த செர்மானியக் கிறித்தவர்களுக்கு, செர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது சீகன்பல்கின் தொடக்ககாலப் பணியாக இருந்தது. இப்பணியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, புதிய கிறித்தவர்களை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றுவதில் அவர் எதிர்கொண்ட முக்கிய இடர்ப்பாடாக சாதியிருந்தது.
    கிறித்தவராகத் திருமுழுக்குப் பெற விரும்பியோர் தம் சாதியின் எதிர்ப்பை முதலில் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. கிறித்தவராக மதம்மாறியவர்கள் எந்தச் சாதியினராய் இருந்தாலும், அவர்கள் பறையர் சாதி யினராகவே கருதப்படலாயினர். அவருக்கு நெருப்புக் கொடுக்கவும், பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள். கிறித்தவராக மாறிய கணவன் மனைவியரும், பெண்களும் சமூக விலக்கத்திற்கு ஆளானார்கள். கிறித்தவராக மாறியோர் தாம் பிறந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டதுடன் இறந்து போனவர்களாகக் கருதப்பட்டனர். இக்காரணங்களால் கிறித்தவ சபையன்றை நிறுவமுடியவில்ல. (ஆர்னோ லெக்மான் 2006:42-43).. இத்தகைய சமூகச் சூழலில், அப்பகுதியில் நிலவிய அடிமைமுறை அவர்களுக்குக் கைகொடுத்தது.
    கி.பி.1715 வாக்கில் கத்தோலிக்க சமயம் சார்ந்திருந்த அடிமைகள் சிலரை விலைக்கு வாங்கி, கிறித்தவ சபை ஒன்றை நிறுவினர். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கிறித்தவர்களாக்கப்பட்ட இவர்களைப் போன்றோரை ‘பணக்கிறித்தவர்’ என்றழைத்தனர் (மேலது 43-44).
    கிறித்தவரான அடிமைகள்:
    தரங்கம்பாடியில் வாழ்ந்து வந்த செர்மானியக் கிறித்தவர்களுக்கு, செர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது சீகன்பல்கின் தொடக்ககாலப் பணியாக இருந்தது. இப்பணியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, புதிய கிறித்தவர்களை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றுவதில் அவர் எதிர்கொண்ட முக்கிய இடர்ப்பாடாக சாதியிருந்தது.
    கிறித்தவராகத் திருமுழுக்குப் பெற விரும்பியோர் தம் சாதியின் எதிர்ப்பை முதலில் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. கிறித்தவராக மதம்மாறியவர்கள் எந்தச் சாதியினராய் இருந்தாலும், அவர்கள் பறையர் சாதி யினராகவே கருதப்படலாயினர். அவருக்கு நெருப்புக் கொடுக்கவும், பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள். கிறித்தவராக மாறிய கணவன் மனைவியரும், பெண்களும் சமூக விலக்கத்திற்கு ஆளானார்கள். கிறித்தவராக மாறியோர் தாம் பிறந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டதுடன் இறந்து போனவர்களாகக் கருதப்பட்டனர். இக்காரணங்களால் கிறித்தவ சபையன்றை நிறுவமுடியவில்லை (மேலது:43). இத்தகைய சமூகச் சூழலில், அப்பகுதியில் நிலவிய அடிமைமுறை அவர்களுக்குக் கைகொடுத்தது.
    கி.பி.1715 வாக்கில் கத்தோலிக்க சமயம் சார்ந்திருந்த அடிமைகள் சிலரை விலைக்கு வாங்கி, கிறித்தவ சபை ஒன்றை நிறுவினர். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கிறித்தவர்களாக்கப்பட்ட இவர்களைப் போன்றோரை ‘பணக்கிறித்தவர்’ என்றழைத்தனர் (மேலது 43-44).
    தரங்கம்பாடி மறைத்தளமும் சாதியும்:
    தொடக்கத்தில் பெரும்பாலும் பறையர் சமூகத் தினரே தரங்கம்பாடி மறைத்தளத்தில் கிறித்தவராயினர் (மேலது 142). டென்னிஸ் ஹட்சன் என்பவர் தரங்கம் பாடி சபைகளில் 90% பறையர் கிறித்தவர் இருந்தனர் என்று கருதுகிறார் (மேலது 216). இம்மக்கள் மீதான தரங்கம்பாடி மறைத்தளத்தின் அணுகுமுறையை ஹய்கிலிபோவ் (2013:143) பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
    கிறித்தவத்தைத் தழுவியவர்களில் மிகப் பெரும் பாலோர் தீண்டத்தகாதோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான கிறித்தவச் சபைகளிலும், பள்ளிகளிலும், கிறித்தவக் கிராமங்களிலும், தரங்கம்பாடி மறைத்தள வரலாறு முழுவதிலும் ஒரு தலித் கூட கிறித்தவ சபை ஊழியராகத் திருநிலைப்படுத்தப்படவில்லை. இந்தி யாவில் பணியாற்றி வந்த அய்ரோப்பிய மறைப் பணி யாளர்களுக்கும் அய்ரோப்பாவில் இருந்த மேலதிகாரி களுக்கும் இடையே இது தொடர்பான வெளிப்படை யான ஆழமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
    இவ்வகையில் தரங்கம்பாடியின் புதிய ஜேருசலம் தேவாலயத்தில் உதவி உபதேசியாராகப் பணிபுரிந்து பின்னர் உபதேசியாரான ஆரோன் (1698ஃ9-1745) என்பவர் 28 டிசம்பர் 1733 இல் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். இந்தியாவின் முதல் சுதேச குரு இவர்தான். தரங்கம்பாடி மறைத்தளத்தின் தொடக்ககால வரலாற்றில் குரு நியமனத்தில் சாதி முக்கிய பங்கு வகித்துள்ளது.
    பறையர் சமூகத்தைச் சேர்ந்த இராஜநாயக்கன் என்பவர் தஞ்சை மராத்திய மன்னரின் படையில் ‘சேர்வைக்காரன்” என்ற பதவி வகித்து வந்தார். மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கராக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த இவர் லூத்தரன் சபைக் கிறித்தவராக மாறியவர். 1729 இல் உபதேசியாராக நியமிக்கப்பட்டார்.
    1740 இல் குருவாகப் பதவி உயர்வு இவருக்கு வழங்கவேண்டிய சூழலில் சாதியின் அடிப்படையில் அது மறுக்கப்பட்டு தியாகு என்பவருக்கு வழங்கப் பட்டது. என்றாலும் இராஜநாயக்கனின் திறமையைப் புறக்கணிக்க இயலாத நிலையில் ‘மூத்த உபதேசியார்’ என்ற பட்டத்தை வழங்கிச் சமாளித்தனர்.
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=25047&Itemid=139 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=25246&Itemid=139

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    கட்டுரைக்கு ஆழ்கடல் என்ற தலைப்பை ஏன் மருத்துவர் வைத்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. ஷாலி ஆழ்கடலில் நீச்சலடித்து வருகிறாரே!

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் திரு சி. ஜெயபாரதன் அவர்களே, பாராட்டுக்கு நன்றி. தமிழ் அச்சில் எறிய சிறப்பு தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சீகன்பால்க் நிறைய ஓலைச் சுவடிகளும் தேடி சேர்த்துள்ளார். அவற்றை தம் நூலகத்தில் பத்திரப் படுத்தினார். அவை தற்போது லண்டன் பிரிட்டிஷ் பொருட்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் உலக நீதி எனும் ஓலைச் சுவடியும் உள்ளது. அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். அது இப்போது டென்மார்க் நாட்டில் கோப்பன்ஹேகன் அரசு பொருட்காட்சியாகத்தில் உள்ளது. இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழர் நாகரீகத் தொன்மையையும் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவர் சீகன்பால்க் . அவரைப் பற்றி தமிழ் இலக்கியவாதிகள்கூட அறியாமல் போனது வேதனைக் கூறியதே! ………டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    திரு IIM கணபதி ராமன் அவர்களே , வெறும் வரலாற்றை மட்டும் எழுதினால் ஆர்வத்துடன் நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்றுதான் இதை இறுதியில் ஒரு கதையுடன் முடித்துள்ளேன். இப்போதெல்லாம் சிறுகதை எழுதுவதற்க்கு வரம்புகள் விதி முறைகள் இல்லை என்றுதான் பிரபல எழுத்தாளர்கள் கூறி வருகின்றனர்…படிக்க சுவையாக இருந்தாலே போதுமானது…. டாக்டர் ஜி. ஜான்சன்.

  10. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி வணக்கம். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.. அன்புடன் ஜான்சன்.

  11. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு வாணி, ஆழ்கடல் படித்து அதனுள் மூழ்கியுள்ல வரலாறு அறிந்துகொண்டு பாராட்டியதற்கு நன்றி…..அன்புடன் ஜான்சன்.

  12. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ஷாலி அவர்களுக்கு வணக்கம். தரங்கம்பாடி பற்றி தாங்கள் தந்துள்ள தொடர்பு அஞ்சல் மூலம் கீற்று அக்டோபர் இதழ் கண்டு வியந்தேன். அதில் திரு ஆ. சுப்பிரமணியன் அவர்களின் ” தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி ” எனும் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். அதில் அவர் கூறியுள்ள பல உண்மைகள் நான் இதுவரை படிக்காதவை. அவை மிகவும் பயனுள்ளவை. அவற்றில் சில மட்டுமே எனக்குத் தெரிந்தவை. அதை வைத்துதான் நான் ” ஆழ் கடல் ” எழுதினேன்.

    எங்கள் சபையான தமிழ் சுவிஷேச லூத்தரன் திருச்சபை உருவான இடம் தரங்கம்பாடி. இந்தியாவின் முதல் சீர்திருத்த இறைப்பணியார்களான சீகன்பால்க்கும் ஹீன்றிச் புளுச்சோவும் தரங்கம்பாடி வந்து சேர்ந்தபோது, அவர்களை கப்பல் தலைவன் மூன்று நாட்கள் தரை இறங்க விடவில்லை. கடல் பிரயாணத்தின்போது அவன் ஓர் இளம் பெண்ணை துன்புறுத்தியபோது இவர்கள் இருவரும் தலையிட்டு தடுத்துள்ளனர். அதனால் அவன் அவர்களை தரை இறங்க விடவில்லை.

    அதன்பிறகு வேறொரு கப்பல் அதிகாரியின் உதவியுடன் தரங்கம்பாடி கடற்கரையில் இருவரும் இறக்கப்பட்டனர்.

    அங்கும் அவர்களுக்கு வரவேற்பு சரியில்லை. அவர்கள் அங்கிருந்து தரங்கம்பாடிக்குள் நுழைய ” டேன்ஸ்பர்க் ” கோட்டையின் ஆளுநர் ஜே. சி. ஹசியுஸின் உத்தரவு பெறவேண்டும். அவனின் வரவிற்காக இருவரும் சுடு மணலில் கொளுத்தும் வெயிலில் காலை முதல் மாலை வரை கால் கடுக்க நின்றனர். மலையில் வந்தவன் டென்மார்க் அரசரின் கடிதத்தைப் பார்த்தான். இவர்களின் வருகையால் அவனது ஊழல்கள் அம்பலமாகிவிடுமோ என்று பயந்தான். அவர்களின் வருகை அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்புடன்தான் அவர்களை ஊருக்குள் அனுமதித்தான்!

    இந்த வரலாற்றில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவெனில் அப்போது சீகன்பால்கின் வயது 24! இது ஆச்சரியம் அல்லவா? நன்றி…..அன்புடன் …டாக்டர் ஜி. ஜான்சன்

  13. Avatar
    Dr.M.Senthilkumar says:

    உன் எழுத்து கோட்டையால் டேனிஷ்கோட்டையை காக்கிறாய்
    நன்றி

  14. Avatar
    Dr.M.Senthilkumar Asst.prof.(phy) kumbakonam says:

    சென்று வந்தேன் என்பதை விட நெடு நேரம் நின்று வந்தேன் அவ்வளவு அழகு தரங்கம்பாடி.

    கடற்கரையை கண்ணிலும்,கணினியிலும் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி

  15. Avatar
    Dr.G.Johnson says:

    உதவிப் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் அழகான கவிதை வரிகள் பாராட்டுக்கு நன்றி…………டாக்டர் ஜி.ஜான்சன்.

  16. Avatar
    NAVIN says:

    My name navin from tharangambadi
    and studying mechanical engineering at trichy. I don’t know this news just before reading this. thanks for your information
    and I am really proud to be living TRANQUEBAR

  17. Avatar
    Dr.G.Johnson says:

    Thank you Mr.Navin for your comments. I am glad you too are from Tranquebar. I was there when my brother Mr.G.Peter was the Principal of the T.E.L.C. Teachers Training Institute there. Now I am in Malaysia. I miss the Tranquebar beach very badly. Hope to visit some time in the near future. With kind regards…. Dr.G.Johnson.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *