இசை!

This entry is part 4 of 6 in the series 8 ஜனவரி 2023

கிறிஸ்டி நல்லரெத்தினம்

++

இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா….. கவனம் சார் … மெதுவா… மெதுவா…

அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா தியேட்டர்.

எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல – அவருதாங்க படம் காட்டற புறெஜெக்டர் மிசின ஓட்டறவர். அம்மாட தம்பி…. நல்ல மனுஷன்.. கழுத்தில தங்கமால போட்டுண்ணு வெள்ள வேஷ்டி வெள்ள சேட் போட்டு சும்மா ராஜா மாதிரி தியேட்டர் முன்னால் நிக்கிறத பாக்கணுமே. பேரு தாஸ்….. சனங்க ‘தாஸ் சார்’ ணுதான் கூப்பிடுவானுங்க. என்னா கூப்பிடறது?… அவர பேர் சொல்லி கூப்புட ஆருக்கு துணிவு வருமாம்?

அவரு கண்ணாலமே பண்ணிக்கல. எங்க ஊட்டல சாமி அறைக்கு அம்பிட்டு இருக்கிற கடைசி அறையிலதான் அவருக்கு வாழ்க. பகல் பன்னிரண்டுக்கு சாப்பிட்டுகிணு போனார்னா செக்கண்ட் ஷோ முடிஞ்சு நடுச்சாமம்தான் வீடு வருவாரு.

எங்க வீட்ட பாத்தீங்களா சார்? மூணு அறையும் மண்டபமும். பெரிசும் இல்ல சிறிசும் இல்ல. முன் அறையில அம்மா – அப்பா, நடு அறை சாமி அறை. நமக்கு ஹால்லதான் படுக்கை படிப்பு எல்லாம். ஹால் மூலையில யன்னலுக்கு பக்கத்தில இருக்கிற லொடல் மேசையில் குந்திக்கணு படிக்கிறதா பாசாங்கு பண்ணுவன். 

“டேய் சின்னி, நீ ஒரே புள்ள. படிச்சி பெரிய ஆளா வரணும். மாமா பின்னால் தியட்டர், படம் எண்டு சுத்தாத தெரிஞ்சிதா?. பள்ளி முடிஞ்சி தியட்டர் பக்கம் போனா தோல உரிச்சிடுவன்” எண்ணு அப்பா ரொம்ப பக்குவமா சொல்லி வைப்பாரு.

நான் கேட்டனா? போவன், மாட்டிகினுவன்….. சும்மா மொங்கி எடுத்துருவாரு அப்பா.

அம்மா ரொம்ப அன்பு. “சும்மா சும்மா அவன் தோள்ள குந்திகினு…. அவன் படிப்பான்…. என்ன, மாமாவோடதானே இருக்கான். மத்த பசங்கள போல ஊர்சுத்தி, பீடி சிகறட் புடிச்சிகினா இருக்கான்?”

அப்பாவுக்கு அலுத்துவிடும்… “எக்கேடு கெட்டாலும்….. நீயாச்சு உம் புள்ளையாச்சு”.

நா அப்பிடி ஒண்ணும் படிப்பில வெங்காயம் இல்லீங்க சார். ஸ்கூலுக்கு ‘கட்’ பண்ணுற பழக்கம் இல்லீங்க. போனனா, படிச்சனா, வந்தனாணு இருக்கும் ஐயாவோட வாழ்க்க. ஆனா இந்த தியேட்டர் சனியன்தான்….. ஐய… சனியன் எண்ணா சொன்னன்? தப்பு சார்…… தப்பு …. தப்பு. என்ன அடிச்சா மாமா தியேட்டருக்கு இழுத்துகிணு போனாரு? நானில்ல வலிய, காந்தமும் ஊசியும் போல, சும்மா போய் ஒட்டிகிணு இருக்கன்.

தியேட்டரில் எல்லாருக்கும் எம்மேல ரொம்ப மதிப்பு . தாஸ் சாரோட மருமகன்னா சும்மாவா?

தியேட்டர் பல்கனி படிக்கட்டில ஏறி பீக்கைப் பக்கம் திரும்பினா மாமாவோட ‘புறஜக்சன் றூம்’ கதவு. “உத்தரவின்றி உள்ளே நுழைய தடை ” எணு கொட்டை எழுத்தில போர்ட்டு . நா சும்மா கதவுல ரெண்டு தட்டு தட்டினா மாமா வந்து “சின்னவா, வா, வா…… இந்த றீல….” எணு ஏதாவது வேல சொல்லுவாரு.

மாமா வெளியில வெள்ள வேஷ்டி, சேட் போட்டுகிணு இருப்பார் எணு சொன்னனா? ஆனா புறெஜெக்டர் ரூமுக்குள்ள ஆளே மாறி! எல்லாத்தையும் கழற்றி வீசிணு பெனியனும் கொட்டக்களிசானும் போட்டுகிணு சும்மா பைல்வான் மாதிரி நிப்பாரு. ‘ஏ மாமா… ஒரு பேன் மட்டும்தான் சுத்துது. மணியம் சேர் கிட்ட சொல்லி ஒரு ஏசி வச்சிகிறதானே?’ ன்னு ஒரு முற கேட்டேன். மணியம் சேர்தான் தியேட்டர் முதலாளிங்க .

மாமா சொன்னாரு: “சின்னவா….ஏசி காத்துல தூவானத்த துப்புமில்ல…. அந்த ஈரம் பிலிமில பட்டு அப்புறம் புறஜக்டருக்குள்ள பூந்திரிச்சினு வச்சிக்க, அப்புறம் அத அரிசி குத்தத்தான் பாவிக்கணும்” எனு சொல்லி சிரிச்சார் மாமா.

மாமாக்கு இந்த வேல எல்லாம் அத்துப்படி. அவருதான் கட் அவுட் வரையிற தர்மா அண்ணனுக்கு படம் ஓட்டறதில இருக்கிற எல்லா டெக்கினிக்கையும் படிப்பிச்சாருன்னா பாத்துக்குங்களேன். மாமாக்கு ஏதும் வருத்தம் வாதைன்னா தர்மா அண்ணன் கையில்தான் மிசின்.

 நா ரூமுக்குள்ள புகுந்தன்னா எங்கிட்ட என்ன வேல சொன்னாலும் ‘டக்’ணு ஒரு பேச்சு பேசாம செஞ்சிருவன். ஆனா புறஜெக்டர்ல கார்பன் கம்பு மாத்திற மாதிரி டேஞ்சர் வேல தாஸ் மாமாவே செஞ்சிடுவார். “சின்னவா, கம்பு கொதிக்குமில? கை பட்டா பொரியல்தான் ” … சொல்லி சிரிப்பார்.

ஊரே என்ன ‘சின்னி’ எணு சென்னாலும் மாமாவுக்கு நா ‘சின்னவா’  தான்!

‘புறெஜக்சன் ரூம்’ இல ரெண்டு பெரிய புறேஜெக்டர் மெசினில றீல் லோட் பண்ணி தயாராக இருக்கும். ஒண்ணு ஓடி முடிய மத்தது ஆரம்பம். மாமா ரெண்டு மெசின் சுவிச்சையும் கேபிள் கட்டி இணைச்சி வைச்சிருப்பாரு. கேபிளை இழுத்தா ஒண்ணு ‘ஆப்’ ஆகி மற்றது ‘ஆன்’ ஆகும்.

படம் பாக்கிறவனுக்கு இந்த சனியன் ஒன்றும் புரியாது. இந்த ‘சேஞ் ஓவர’ மாமா மட்டும் தானுங்க செய்வாரு. ஏன்னா டைம் மிஸ் ஆச்சுனா திரைல வெள்ள லைட் அடிச்சி பசங்க விசில் அடிச்சி ஒரே ரகளையாயிடும்.

என்ன, கிழமை முழக்க நமக்கு மாமா வோடதான் வேலேணு சார் நினைச்சீங்களாக்கும்? எனக்கும் ஆசதான். ஆனா அப்பா கும்மி எடுத்துடுவாரில்ல. சனி ஞாயிறுதான் ஐயா தியேட்டர் வாசி. பகல் பத்தரை ஷோவுக்கு புறெஜெக்ஷன் ரூமுக்கு போனா மால ஐஞ்சு மணிக்குத்தான் ஐயா ஊட்டுக்கு வருவாராக்கும் .

மாமா சும்மா றீல லோட் பண்ணி அப்புறம் கதிரையில சாஞ்சி கால ஆட்டிக்கிணு தம் அடிக்கிற ஆள் இல்ல. புறஜெக்சன் றூமுற்கும் தியேட்டருக்கும் நடுவில இருக்கிற சுவரில இருக்கிற சதுர ஓட்டைக்கால திரையில காமிக்கிற படத்த பார்த்துகிணே இருப்பாரு. ஒரு கை சவுண்ட் டயலில இருக்கும். படத்தில் திடீரனு ஒரு பயங்கர காட்சி வருதுணு வச்சுகங்க….. சவுண்ட் டயல ஒரு சுத்து சுத்தி உச்சத்திற்கு திருகி விடுவார். பாக் கிறவுண்ட் மியூசிக்…. அதான் சார், பின்னணி இசை காத புளக்கும். தியேட்டரில பல பசங்க துள்ளி குதிச்சி பின்னால் திரும்பி மாமாட தலய சதுர ஓட்டைக்குள்ளால பாத்து தூஷணத்தில ஏதோ சொல்லி திட்டி படத்த தொடந்து பாப்பானுக. மாமாவுக்கு இதுல ஒரு குஷி. “சின்னவா, பசங்க சும்மா துள்ளுனாங்கல்ல “ணு சிரிசுணே பெருமையா சொல்லுவாரு.

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறி அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே….. “வீல், வீல் . வீல் ” எணு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு. தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி கதிரையில் வைச்சி……. அத கேக்காதீங்க சார். கதிரைய நனைக்சிட்டானுக எண்ணா நம்புவீங்களா சார்?

மாமா சில நேரத்தில பெரிய மனுஷங்க போல தத்துவமா பேசுவாரு. எனக்கு அப்படித்தான் தோணும். “மருமகா… வாழ்க்கையில பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லேனா என்னா ருசி இருக்கு? காலேல முழிச்சாப்ப அந்த குருவி காக்கா சத்தம், நம்ம பூசாரி மாரியம்மன் கோவில்ல இருந்து ஓதற மந்திரம், உங்க அம்மா காபி கலக்கறப்ப கரண்டி டம்ரல்ல மோதி வாற டிங்கு, டிங்கு சத்தம், அடுத்த வீட்டு மங்களம் மாமி பாடற காயத்திரி மந்திரம்…ம்ம்ம்….. இது இல்லாம விடிஞ்சா சப்பனு இருக்குமில்ல?” 

அவரு சொல்லறதும் வாஸ்த்தவம்தாணு எனக்கும் படுறது.

மாமாட்ட எந்த கெட்ட பழக்கமுமில்லீங்க. தம் அடிப்பார். அம்புட்டுத்தான்.

ஆனா போன ரெண்டு வருஷமா “சின்னவா, தொடந்தாப் போல வேல செஞ்சனா, நெஞ்சு வலிக்குதுடா. ரீல தூக்கி மெசினில மாட்ட மூச்ச இளைக்குதுடா. இந்த நாசமாப் போற இருமல் வேற…. “.

ராஜா மாதிரி இருந்த மனுஷன் இப்ப கொஞ்சம் கூனத் தொடங்கிற்றாருங்க.. ஆனா அவருக்கு படம் காட்டுறதில் இருந்த அந்த விசுவாசம் ஒண்ணும் கொறஞ்சதா தெரியல்ல. இப்பவும் ஒரு கையில் சவுண்ட் டயல்….. திரையில ஒரு கண்.

“பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாத வாழ்க ஒரு வாழ்க்கையா?”

பட இன்டவெல்ல ரூமுக்கு வெளியில் பல்கனியில நின்னுகினு தம் அடிச்சிகிணு

கீழ மரத்தடியில் பேசிக்கினு நிக்கிற ஜோடிகள பாத்து மாமா சொல்றாரு: “சின்னவா, பாரு…. புது ஜோடி…..அவ வெக்கத்தில கால மடிச்சி நெலத்தல வரையிறா. பையன் அவ கண்ணுக்குள்ள எதையே தெடறான்…. இந்த இடதலதான் ‘டைட்டானிக்கில’ வாற பேக் கிறவுண்ட் மியூசிக்க போடணும்.,,, ம்.. ம். ம். ம் .. ம்ம்ம்ம்.”

மாமா மெல்ல வாய்க்குள்ள மியூசிக் போடரார்…. அதில மாமாவுக்கு ஒரு சொகம்.

 இன்னா சார்? நடந்து மூச்சு இழுக்குதில்ல. வாங்க சார் , நயினா கடையில ஒரு கோலா குடிச்சிகிணு மிச்சத சொல்லறன்.

“நபினா, சாருக்ரு கூலா ஒரு பார்லி ஒடையுங்க. குடியுங்க சார்.

எங்க சாரு உட்டன்?

ஆ., ஆ., ஆமா மாமாவுக்கு நாசமாப்போற நெஞ்சு வலி வந்ததா.,,,,,

அண்ணைக்கி வெள்ளி கிழம. நா ஸ்கூலு முடிஞ்சி வீட்ட வந்தனா….. வாசலுல கூட்டம். எல்லாரும் என் மூஞ்சிய பாக்கிறா. தோள்ல திடந்த ஸ்கூல் பைய களத்தி நிலத்தில் போட்டுணு, செருப்ப களட்டி உதறிதள்ளிக்கணு படியில் ஏறி மண்டபத்த பார்க்கிறன். மண்டப நடுவுல மரக்கட்டில்… பாய் மட்டும் போட்டு தலயில தலாணி வச்சு மாமா தூங்கறார். மூக்கில பஞ்சடைச்சி கால் பெருவிரல் ரெண்டையும் வெள்ள துணியால் கட்டி……

ஓடிப்போய் முட்டுக்கால் போட்டு மாமாட கைய புடிக்கி நா குலுங்கி குலுங்கி அழறன். மாமாட கை ஐஸ் கட்டி மாதிரி குளிருது. “மாமா, என்ன உட்டுட்டு எங்க போனீங்க…… மாமா…. மாமோவ்”

அப்போ ஒரு சத்தம் கூட இல்ல. ஏ குரல் மட்டும் தான் கேக்குது.

அம்மா வந்து தோளுல தொட்டு “எழும்புடா செல்லம்….. மாமா போயிட்டார்டா….. ” அம்மாவால இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல தோணல. ஆனா அவ கைப்பிடி என் தொளில் இறுகுது. அவ சோகத்தோட வலிம எனக்கும் புரியறது.

அப்போ ஒப்பாரி வைக்கிற பாட்டிமாரும் இன்னும் வரல. அதனால நிசப்தம்.

‘பேக்கிரவுண் மியுசிக் இல்லாம என்னடா சின்னவா வாழ்க்க. அதான்டா எல்லாம்’ …… மாமா சொல்லறது மனசுல கேக்குது!

ஊருக்கே சவுண்டு கொடுத்த மாமா இப்ப அமைதியா தூங்கறார்.

எங்கும் அமைதி!

( முற்றும்)

இசை!

கிறிஸ்டி நல்லரெத்தினம்

++++++++++++++++++

இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா….. கவனம் சார் … மெதுவா… மெதுவா…

அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா தியேட்டர்.

எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல – அவருதாங்க படம் காட்டற புறெஜெக்டர் மிசின ஓட்டறவர். அம்மாட தம்பி…. நல்ல மனுஷன்.. கழுத்தில தங்கமால போட்டுண்ணு வெள்ள வேஷ்டி வெள்ள சேட் போட்டு சும்மா ராஜா மாதிரி தியேட்டர் முன்னால் நிக்கிறத பாக்கணுமே. பேரு தாஸ்….. சனங்க ‘தாஸ் சார்’ ணுதான் கூப்பிடுவானுங்க. என்னா கூப்பிடறது?… அவர பேர் சொல்லி கூப்புட ஆருக்கு துணிவு வருமாம்?

அவரு கண்ணாலமே பண்ணிக்கல. எங்க ஊட்டல சாமி அறைக்கு அம்பிட்டு இருக்கிற கடைசி அறையிலதான் அவருக்கு வாழ்க. பகல் பன்னிரண்டுக்கு சாப்பிட்டுகிணு போனார்னா செக்கண்ட் ஷோ முடிஞ்சு நடுச்சாமம்தான் வீடு வருவாரு.

எங்க வீட்ட பாத்தீங்களா சார்? மூணு அறையும் மண்டபமும். பெரிசும் இல்ல சிறிசும் இல்ல. முன் அறையில அம்மா – அப்பா, நடு அறை சாமி அறை. நமக்கு ஹால்லதான் படுக்கை படிப்பு எல்லாம். ஹால் மூலையில யன்னலுக்கு பக்கத்தில இருக்கிற லொடல் மேசையில் குந்திக்கணு படிக்கிறதா பாசாங்கு பண்ணுவன். 

“டேய் சின்னி, நீ ஒரே புள்ள. படிச்சி பெரிய ஆளா வரணும். மாமா பின்னால் தியட்டர், படம் எண்டு சுத்தாத தெரிஞ்சிதா?. பள்ளி முடிஞ்சி தியட்டர் பக்கம் போனா தோல உரிச்சிடுவன்” எண்ணு அப்பா ரொம்ப பக்குவமா சொல்லி வைப்பாரு.

நான் கேட்டனா? போவன், மாட்டிகினுவன்….. சும்மா மொங்கி எடுத்துருவாரு அப்பா.

அம்மா ரொம்ப அன்பு. “சும்மா சும்மா அவன் தோள்ள குந்திகினு…. அவன் படிப்பான்…. என்ன, மாமாவோடதானே இருக்கான். மத்த பசங்கள போல ஊர்சுத்தி, பீடி சிகறட் புடிச்சிகினா இருக்கான்?”

அப்பாவுக்கு அலுத்துவிடும்… “எக்கேடு கெட்டாலும்….. நீயாச்சு உம் புள்ளையாச்சு”.

நா அப்பிடி ஒண்ணும் படிப்பில வெங்காயம் இல்லீங்க சார். ஸ்கூலுக்கு ‘கட்’ பண்ணுற பழக்கம் இல்லீங்க. போனனா, படிச்சனா, வந்தனாணு இருக்கும் ஐயாவோட வாழ்க்க. ஆனா இந்த தியேட்டர் சனியன்தான்….. ஐய… சனியன் எண்ணா சொன்னன்? தப்பு சார்…… தப்பு …. தப்பு. என்ன அடிச்சா மாமா தியேட்டருக்கு இழுத்துகிணு போனாரு? நானில்ல வலிய, காந்தமும் ஊசியும் போல, சும்மா போய் ஒட்டிகிணு இருக்கன்.

தியேட்டரில் எல்லாருக்கும் எம்மேல ரொம்ப மதிப்பு . தாஸ் சாரோட மருமகன்னா சும்மாவா?

தியேட்டர் பல்கனி படிக்கட்டில ஏறி பீக்கைப் பக்கம் திரும்பினா மாமாவோட ‘புறஜக்சன் றூம்’ கதவு. “உத்தரவின்றி உள்ளே நுழைய தடை ” எணு கொட்டை எழுத்தில போர்ட்டு . நா சும்மா கதவுல ரெண்டு தட்டு தட்டினா மாமா வந்து “சின்னவா, வா, வா…… இந்த றீல….” எணு ஏதாவது வேல சொல்லுவாரு.

மாமா வெளியில வெள்ள வேஷ்டி, சேட் போட்டுகிணு இருப்பார் எணு சொன்னனா? ஆனா புறெஜெக்டர் ரூமுக்குள்ள ஆளே மாறி! எல்லாத்தையும் கழற்றி வீசிணு பெனியனும் கொட்டக்களிசானும் போட்டுகிணு சும்மா பைல்வான் மாதிரி நிப்பாரு. ‘ஏ மாமா… ஒரு பேன் மட்டும்தான் சுத்துது. மணியம் சேர் கிட்ட சொல்லி ஒரு ஏசி வச்சிகிறதானே?’ ன்னு ஒரு முற கேட்டேன். மணியம் சேர்தான் தியேட்டர் முதலாளிங்க .

மாமா சொன்னாரு: “சின்னவா….ஏசி காத்துல தூவானத்த துப்புமில்ல…. அந்த ஈரம் பிலிமில பட்டு அப்புறம் புறஜக்டருக்குள்ள பூந்திரிச்சினு வச்சிக்க, அப்புறம் அத அரிசி குத்தத்தான் பாவிக்கணும்” எனு சொல்லி சிரிச்சார் மாமா.

மாமாக்கு இந்த வேல எல்லாம் அத்துப்படி. அவருதான் கட் அவுட் வரையிற தர்மா அண்ணனுக்கு படம் ஓட்டறதில இருக்கிற எல்லா டெக்கினிக்கையும் படிப்பிச்சாருன்னா பாத்துக்குங்களேன். மாமாக்கு ஏதும் வருத்தம் வாதைன்னா தர்மா அண்ணன் கையில்தான் மிசின்.

 நா ரூமுக்குள்ள புகுந்தன்னா எங்கிட்ட என்ன வேல சொன்னாலும் ‘டக்’ணு ஒரு பேச்சு பேசாம செஞ்சிருவன். ஆனா புறஜெக்டர்ல கார்பன் கம்பு மாத்திற மாதிரி டேஞ்சர் வேல தாஸ் மாமாவே செஞ்சிடுவார். “சின்னவா, கம்பு கொதிக்குமில? கை பட்டா பொரியல்தான் ” … சொல்லி சிரிப்பார்.

ஊரே என்ன ‘சின்னி’ எணு சென்னாலும் மாமாவுக்கு நா ‘சின்னவா’  தான்!

‘புறெஜக்சன் ரூம்’ இல ரெண்டு பெரிய புறேஜெக்டர் மெசினில றீல் லோட் பண்ணி தயாராக இருக்கும். ஒண்ணு ஓடி முடிய மத்தது ஆரம்பம். மாமா ரெண்டு மெசின் சுவிச்சையும் கேபிள் கட்டி இணைச்சி வைச்சிருப்பாரு. கேபிளை இழுத்தா ஒண்ணு ‘ஆப்’ ஆகி மற்றது ‘ஆன்’ ஆகும்.

படம் பாக்கிறவனுக்கு இந்த சனியன் ஒன்றும் புரியாது. இந்த ‘சேஞ் ஓவர’ மாமா மட்டும் தானுங்க செய்வாரு. ஏன்னா டைம் மிஸ் ஆச்சுனா திரைல வெள்ள லைட் அடிச்சி பசங்க விசில் அடிச்சி ஒரே ரகளையாயிடும்.

என்ன, கிழமை முழக்க நமக்கு மாமா வோடதான் வேலேணு சார் நினைச்சீங்களாக்கும்? எனக்கும் ஆசதான். ஆனா அப்பா கும்மி எடுத்துடுவாரில்ல. சனி ஞாயிறுதான் ஐயா தியேட்டர் வாசி. பகல் பத்தரை ஷோவுக்கு புறெஜெக்ஷன் ரூமுக்கு போனா மால ஐஞ்சு மணிக்குத்தான் ஐயா ஊட்டுக்கு வருவாராக்கும் .

மாமா சும்மா றீல லோட் பண்ணி அப்புறம் கதிரையில சாஞ்சி கால ஆட்டிக்கிணு தம் அடிக்கிற ஆள் இல்ல. புறஜெக்சன் றூமுற்கும் தியேட்டருக்கும் நடுவில இருக்கிற சுவரில இருக்கிற சதுர ஓட்டைக்கால திரையில காமிக்கிற படத்த பார்த்துகிணே இருப்பாரு. ஒரு கை சவுண்ட் டயலில இருக்கும். படத்தில் திடீரனு ஒரு பயங்கர காட்சி வருதுணு வச்சுகங்க….. சவுண்ட் டயல ஒரு சுத்து சுத்தி உச்சத்திற்கு திருகி விடுவார். பாக் கிறவுண்ட் மியூசிக்…. அதான் சார், பின்னணி இசை காத புளக்கும். தியேட்டரில பல பசங்க துள்ளி குதிச்சி பின்னால் திரும்பி மாமாட தலய சதுர ஓட்டைக்குள்ளால பாத்து தூஷணத்தில ஏதோ சொல்லி திட்டி படத்த தொடந்து பாப்பானுக. மாமாவுக்கு இதுல ஒரு குஷி. “சின்னவா, பசங்க சும்மா துள்ளுனாங்கல்ல “ணு சிரிசுணே பெருமையா சொல்லுவாரு.

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறி அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே….. “வீல், வீல் . வீல் ” எணு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு. தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி கதிரையில் வைச்சி……. அத கேக்காதீங்க சார். கதிரைய நனைக்சிட்டானுக எண்ணா நம்புவீங்களா சார்?

மாமா சில நேரத்தில பெரிய மனுஷங்க போல தத்துவமா பேசுவாரு. எனக்கு அப்படித்தான் தோணும். “மருமகா… வாழ்க்கையில பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லேனா என்னா ருசி இருக்கு? காலேல முழிச்சாப்ப அந்த குருவி காக்கா சத்தம், நம்ம பூசாரி மாரியம்மன் கோவில்ல இருந்து ஓதற மந்திரம், உங்க அம்மா காபி கலக்கறப்ப கரண்டி டம்ரல்ல மோதி வாற டிங்கு, டிங்கு சத்தம், அடுத்த வீட்டு மங்களம் மாமி பாடற காயத்திரி மந்திரம்…ம்ம்ம்….. இது இல்லாம விடிஞ்சா சப்பனு இருக்குமில்ல?” 

அவரு சொல்லறதும் வாஸ்த்தவம்தாணு எனக்கும் படுறது.

மாமாட்ட எந்த கெட்ட பழக்கமுமில்லீங்க. தம் அடிப்பார். அம்புட்டுத்தான்.

ஆனா போன ரெண்டு வருஷமா “சின்னவா, தொடந்தாப் போல வேல செஞ்சனா, நெஞ்சு வலிக்குதுடா. ரீல தூக்கி மெசினில மாட்ட மூச்ச இளைக்குதுடா. இந்த நாசமாப் போற இருமல் வேற…. “.

ராஜா மாதிரி இருந்த மனுஷன் இப்ப கொஞ்சம் கூனத் தொடங்கிற்றாருங்க.. ஆனா அவருக்கு படம் காட்டுறதில் இருந்த அந்த விசுவாசம் ஒண்ணும் கொறஞ்சதா தெரியல்ல. இப்பவும் ஒரு கையில் சவுண்ட் டயல்….. திரையில ஒரு கண்.

“பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாத வாழ்க ஒரு வாழ்க்கையா?”

பட இன்டவெல்ல ரூமுக்கு வெளியில் பல்கனியில நின்னுகினு தம் அடிச்சிகிணு

கீழ மரத்தடியில் பேசிக்கினு நிக்கிற ஜோடிகள பாத்து மாமா சொல்றாரு: “சின்னவா, பாரு…. புது ஜோடி…..அவ வெக்கத்தில கால மடிச்சி நெலத்தல வரையிறா. பையன் அவ கண்ணுக்குள்ள எதையே தெடறான்…. இந்த இடதலதான் ‘டைட்டானிக்கில’ வாற பேக் கிறவுண்ட் மியூசிக்க போடணும்.,,, ம்.. ம். ம். ம் .. ம்ம்ம்ம்.”

மாமா மெல்ல வாய்க்குள்ள மியூசிக் போடரார்…. அதில மாமாவுக்கு ஒரு சொகம்.

 இன்னா சார்? நடந்து மூச்சு இழுக்குதில்ல. வாங்க சார் , நயினா கடையில ஒரு கோலா குடிச்சிகிணு மிச்சத சொல்லறன்.

“நபினா, சாருக்ரு கூலா ஒரு பார்லி ஒடையுங்க. குடியுங்க சார்.

எங்க சாரு உட்டன்?

ஆ., ஆ., ஆமா மாமாவுக்கு நாசமாப்போற நெஞ்சு வலி வந்ததா.,,,,,

அண்ணைக்கி வெள்ளி கிழம. நா ஸ்கூலு முடிஞ்சி வீட்ட வந்தனா….. வாசலுல கூட்டம். எல்லாரும் என் மூஞ்சிய பாக்கிறா. தோள்ல திடந்த ஸ்கூல் பைய களத்தி நிலத்தில் போட்டுணு, செருப்ப களட்டி உதறிதள்ளிக்கணு படியில் ஏறி மண்டபத்த பார்க்கிறன். மண்டப நடுவுல மரக்கட்டில்… பாய் மட்டும் போட்டு தலயில தலாணி வச்சு மாமா தூங்கறார். மூக்கில பஞ்சடைச்சி கால் பெருவிரல் ரெண்டையும் வெள்ள துணியால் கட்டி……

ஓடிப்போய் முட்டுக்கால் போட்டு மாமாட கைய புடிக்கி நா குலுங்கி குலுங்கி அழறன். மாமாட கை ஐஸ் கட்டி மாதிரி குளிருது. “மாமா, என்ன உட்டுட்டு எங்க போனீங்க…… மாமா…. மாமோவ்”

அப்போ ஒரு சத்தம் கூட இல்ல. ஏ குரல் மட்டும் தான் கேக்குது.

அம்மா வந்து தோளுல தொட்டு “எழும்புடா செல்லம்….. மாமா போயிட்டார்டா….. ” அம்மாவால இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல தோணல. ஆனா அவ கைப்பிடி என் தொளில் இறுகுது. அவ சோகத்தோட வலிம எனக்கும் புரியறது.

அப்போ ஒப்பாரி வைக்கிற பாட்டிமாரும் இன்னும் வரல. அதனால நிசப்தம்.

‘பேக்கிரவுண் மியுசிக் இல்லாம என்னடா சின்னவா வாழ்க்க. அதான்டா எல்லாம்’ …… மாமா சொல்லறது மனசுல கேக்குது!

ஊருக்கே சவுண்டு கொடுத்த மாமா இப்ப அமைதியா தூங்கறார்.

எங்கும் அமைதி!

( முற்றும்)

Series Navigationஆணவம் கன்மம் ….பாலையும் சிலப்பதிகாரமும்
author

கிறிஸ்டி நல்லரெத்தினம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *