இதுவும் அதுவும் உதுவும் – 2

This entry is part 33 of 44 in the series 30 அக்டோபர் 2011

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an ancient text, is more in the Latin Americal genre of..’ என்று ஆரம்பித்து இதெல்லாம் சகஜம்’பா தோரணையோடு எழுதிக் கொண்டு போகலாம். ’அம்மா இன்னிக்கு செத்துப் போனாள். இல்லே அது நேற்றா?’ என்று ஆல்பர்ட் காமு எழுதிய ‘அந்நியன்’ கதைத் தொடக்கம் எத்தனை கட்டுரைகளுக்கு மூல ஊற்று!.

தமிழ், ஆங்கில எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் இரண்டாவது ஆங்கில நாவல் ‘The muddy river’. இதில் அங்கி இழந்த பாதிரிகளோ, இருவழி புரட்சிக்காரர்களோ, கிரேக்கத்து ஹெலனோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தில்லி, அசாம், உல்பா, தீவிரவாதிகளால் கடத்தப்படும் அரசாங்க இஞ்சினியர்கள், சாவு, காதல், காமம், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், அவற்றை நிறுவவதில் ஊழல், தமிழும், பெங்காலியும், அசாமியர்களுமான கதாபாத்திரங்கள் – பலதும் நாவலில் உண்டு.

அப்புறம் கம்பீரமான நடை. நிமிர்ந்து உட்கார்ந்து கவனமாக வாசித்து அனுபவிக்க வேண்டிய, சாய்வு நாற்காலிகளுக்கு சரிப்படாத புத்தகம் இது. இதுவும் வேற்றுமொழி நாவலில் எதிர்பார்க்கக் கூடியதுதான். .

நாவலாசிரியர் சொல்லும் கதையே நாவல் பாத்திரம் எழுதும் ’கதைக்குள் இன்னொரு கதை’யாக விரிவது நாவலை சுவாரசியமாக்குகிறது. புதினமும், கதைக்குள் கதையும் இணங்கியும் பிணங்கியும் இறுதிவரை நடப்பது பி.ஏ.கேயின் Tiger Claw Tree (புலிநகக் கொன்றை) தொடங்கிப் பரிச்சயமான நறுக்குத் தெறித்தாற்போன்ற அற்புதமான ஆங்கில நடையில். வாழ்வின் அசாதாரணமான முரண்களையும் அவற்றின் அங்கதத்தையும் போகிற போக்கில் விவரித்துப் போகிற நேர்த்தியை The Muddy River-லும் காணலாம். ஆனால் இந்த இரண்டு நாவல்களும் வெவ்வேறு வகை – ழானர்.

நாவலின் கதைச் சுருக்கம் இப்படிப் போகிறது –

மத்திய அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன். தில்லியின் பாதுகாப்பான சர்க்கார் ஆபீஸ், கோப்பு, குறிப்பு, செக்ரட்டரி, அமைச்சர் இத்யாதி நடமாடும் தெய்வங்களோடு ஒட்டியும் வெட்டியும் உறவாடுவது, மற்றபடிக்கு சுவாசிப்பது, பிரியமான மனைவி சுகன்யாவோடு சுகிப்பது என்று நகர்கிற வாழ்க்கை சமீபத்தில் ஒரே மகளான குழந்தை பிரியாவை மஞ்சள் காமாலையில் பறிகொடுத்ததும் அலைக்கழிய ஆரம்பிக்கிறது. போதாக்குறைக்கு ஆபீஸில் வேறே அல்பமான மேலதிகாரி, கேண்டீன் டீ சூடு ஆறிப் போய் வாயில் வைக்க வழங்கவில்லை என்பதற்காக கேண்டீனையும் நிர்வகிக்கும் ரமேஷோடு மோதுகிறார். டீ தயாரிப்பது, அதன் வெப்ப நிலை, மேலதிகாரி அறையில் வெப்ப நிலை, அவர் டீ குடிக்காமல் கோப்பையை வைத்திருப்பதால் எத்தனை நிமிடம் ஆறாமல் இருக்கும் இன்னோரன்ன நுணுக்கமான விவரணைகளோடு அவரைச் சீண்டி ரமேஷ் ஆபீஸ் நோட் போட, அந்தாளுக்கு பனிஷ்மெண்ட் போஸ்டிங்க். அசாம் சலோ. அசாமில் அரசாங்க மின் உற்பத்தி கார்ப்பரேஷனுக்கு அதிரடி பணிமாற்றம். அங்கே இருந்து போனமாதம் தான் சீனியர் எஞ்சினியர் ஒருத்தரை தீவிரவாதிகள் கடத்திப் போய் 4 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்கிறார்கள். அசாமில் தீவிரவாதிகளோடும், சாதாரணர்களோடும், அதிகார வர்க்கத்தின் இதர தூண், தூசி துப்பட்டைகளோடும், காண்ட்ராக்டர்களோடும் ரமேஷுக்கு ஏற்படும் அனுபவங்கள் நாவலாக விரிகின்றன. இந்த அனுபவங்களை (அல்லது இவற்றை அடிப்படையாக வைத்து, நிகழ்ந்த அனுபவங்களை, நிகழாத கற்பனை சம்பவங்களை) ரமேஷ் தன் முதல் நாவலாக எழுதுகிறான். அவன் மனைவி சுகன்யா அந்த நாவல் உருவாக உருவாக தன்னையும், ரமேஷையும் அதில் வேறு மனிதர்களாக உணர்ந்து ரசிப்பதோடு, ரமேஷின் நாவலில் கதாபாத்திரங்களான அவனுடைய இரண்டு நண்பர்களுக்கும் அத்தியாயங்களின் பிரதிகளை மின்னஞ்சலில் அனுப்புகிறாள். சுகன்யாவும், இந்த நண்பர்களும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் The Muddy River நாவல் வெளியில் நடக்க, பெரும்பாலான கதை நிகழ்வு ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் நடக்கிறது. அந்த ’நிகழ்வில்’ எத்தனை சதவிகிதம் உண்மை, எது ரமேஷின் கற்பனை என்று கடிதங்கள் தகவல் பகிர்ந்து கொள்கின்றன.

புரியலை என்று யாராவது கையை உயர்த்தினால், நம்ம பதில் – படிச்சுப் பாருங்க ப்ளீஸ். தானே புரியும்.

இந்தக் கட்டுமானத்தில் பிஏகே உயர்த்தியிருக்கும் புதினம் ஒரு வினாடி ரோலர் கோஸ்டர் பயணமாக (அல்லது பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் தலை கிறுகிறுக்கச் சுற்றுவது) விரைகிறது. மறுவினாடி கலீடாஸ்கோப் காட்சிகளாக விளையாட்டு காட்டுகிறது. தொடர்ந்து மார்ஃபீன் கனவுகளாக ஒன்றின் மீது ஒன்றாக முன்னது முற்றும் அழியும் முன் படிந்து அலாதியான அமைப்பை (palympset) உருவாக்குகின்றது. இவற்றோடு, இலக்கு நிர்ணயிக்கப்ப்பட்டு கதையும் முன்னேறுகிறது. மரங்களும், பறவைகளும், காந்தியுமாக ஆரம்பமாகும் ரமேஷின் ‘நாவலுக்குள் நாவல்’, அதே போல் முடிவடைவது பிஏகேயின் புனைகதை ஒழுங்கமைதி பற்றிய அக்கறையைக் காட்டக் கூடும் என்று சொன்னால் அவருக்கு விமர்சனம் இருக்குமோ?

ஆபீஸ் மேஜையில் நக்னமாக, குறி விரைத்து நிற்க தலைகீழாக சிரசாசனம் செய்யும் அரசு அதிகாரி, கடத்தல் காரர்களை சந்திக்கப் போகும் இடத்தில் இரண்டு பெண்கள் டேப் ரிக்கார்டர் கொண்டு வந்து ரமேஷ் கேட்டு அனுபவிக்க வைக்கிற அசாம் நாட்டுப்புற இசை, பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலப்பரப்பு, குடிப் பழக்கத்திலிருந்து பக்தரை விடுவிக்க, காணிக்கை வைக்கிற இனிப்பில் ரோமத்தை ஒட்டித் தரும் யோகி (எங்கே இருந்து பிடுங்கிய முடி என்று நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்), தில்லி துர்க்மான் கேட்டில் சந்தோஷமாகப் பேசியபடி மாதுளம்பழம் விற்று, அடுத்த நிமிடத்தில் குடல் சரியக் குத்தப்பட்டு இறக்கும் இளைஞன், பாங்க் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் அரவம் பூண்டு ஆவேச்மாக தாண்டவ நிருத்தம் புரியும் பருமனான சிவன் வேஷ நடிகர், நண்பர்களின் சாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுப்பதற்காகவே சொந்த ஊரான திருநெல்வேலியில் விடாப்பிடியாகத் தங்கி இருந்து, ராத்திரி ஏழு மணிக்கு உறங்கப் போகும் தொண்ணூறு கடந்த முதியவர்கள், இண்டர்நெட் மூலம் ‘கம்பெனி கொடுக்க’ வரும் பெண், போலீசாரால் ஆசனவாயில் எதேதோ நுழைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட, (லெனினை வண்டையாகத் திட்டும்) மார்க்சிஸ்ட், பழைய புள்ளிவிவரங்களால் வசீகரிக்கப்படும் வயதான சோஷலிஸ்ட்கள், ரவீந்த்ரநாத் தாகூரின் சிதை எரிந்து அடங்கும் முன்பே, கால் கட்டை விரலையும் எலும்புகளையும் நினைவுச் சின்ன்ங்களாக பறித்து எடுத்து ஓடும் வங்காளிகள், இன்கிரிட் பெர்க்மென் படங்களை நுணுக்கமாக ரசிக்கிற மற்றப்படி எளிய ரசனையுள்ள காண்ட்ராக்டர் இப்படி குறிப்பிடப்படுவதும், பாத்திரங்களும், பங்கு பெறும் சூழலும் நாவல் முழுக்க வருவதைக் காண்கிறோம்.

கதைக்குள் கதை அமைப்பு நாவலாசிரியருக்கு ஒரு தனி புஜபலத்தை அல்லது ஒன்–அப்-மேன்ஷிப்பைக் கொடுக்கிறது என்பது உண்மை. படிக்கும் வாசகனுக்கோ, விமர்சகனுக்கோ ஏதானும் விமர்சனம் எழுந்தால், அது என்னவாக இருக்கும் என்று அனுமானம் செய்யப்பட்டு, நாவலின் கடிதப் போக்குவரத்து வெளியில் உடனே குறிப்பிடப்பட்டு விடுகிறது. மின்சார டிரான்ஸ்பார்மர்களை நிறுவுதல் குறித்து நுணுக்கமாகத் தொழில் நுட்பத் தகவல்களை இவ்வளவு தர வேண்டுமா என்று நான் யோசித்தபடி வாசித்துப் போக, ரமேஷின் நண்பர் சுகன்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இதையே குறிப்பிடுகிறார் என்பது இதற்கு ஓர் உதாரணம். காண்ட்ராக்ட் ஊழல்கள் பற்றிய கதையாடலைப் புரிந்து கொள்ள அந்தத் தகவல் அவசியம் என்று பின்னால் புரிந்தது.

இப்படியான பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை பிஏகேயிடம் கேட்டேன் – நாவல் ஏன் பெரும்பான்மையான பக்கங்களில் டைப் ரைட்டரில் தட்டச்சு செய்தது போன்ற எழுத்துருவில் அச்சாகி இருக்கிறது? ரமேஷ் சந்திரனின் நாவல் manuscript பக்கங்கள் டைப் செய்யப்பட்டவை என்பதால் The Muddy River நாவலிலும் அவை அதேபடியான அச்செழுத்துக்களில் வருவது பொறுத்தமாக இருக்கும் என்று காப்பி எடிட்டருடன் விவாதித்து முடிவு செய்ததாகச் சொன்னார். பாக்கியவான். நான் என் புத்தகங்களின் காப்பி எடிட்டர் யாரென்று அச்சடித்து வெளிவந்த புத்தகத்தைப் புரட்டித்தான் தெரிந்து கொள்கிறேன். எல்லா தமிழ் எழுத்தாளர்களும் இதேபடிதான் இருக்கிறார்கள்.

லார்க்கின், பார்ஸ்டர், எட்வர்ட் டயர், எஸ்ரா பவுண்ட், தாமஸ் ஹார்டி, ஆந்தணி பர்ஜஸ், ஜான் பெட்ஜமென் என்று எல்லா நூற்றாண்டுகளிலும் இருந்து ஐரோப்பிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், காந்தி, மேலும் காந்தி. ரமேஷ் மூலமும் மற்ற பாத்திரங்கள் மூலமும் இவர்கள் சொன்னதையும் எழுதியதையும், அங்கங்கே ஒரு வாக்கியம் இரு வாக்கிய மேற்கோள்களாகக் காட்டியபடியே கதையை நகர்த்திப் போகிறார். பிரஞ்சுப் புரட்சி போன்ற சரித்திர நிகழ்வுகள் பரிச்சயமானவர்களாக ஆங்கில இலக்கிய வாசகர்களை அனுமானம் செய்து கொள்ளலாம் என்பதால் ரோபஸ்பியர் பற்றிய குறிப்பும் அதே போன்ற மற்ற சரித்திர, மார்க் ஷகாலின் ஐரோப்பிய ஓவியம், ஜ்யோதீந்த்ரநாத் தாகூரின் இந்திய ஓவியம், தில்லி வில்லியம் கிரசெண்டில் தண்டி யாத்திரை சிற்பம் பற்றிய குறிப்புகளும் உறுத்தாமல் கதையில் பொதிந்துள்ளன. பிஏகே என்ற கிரிக்கெட் ரசிகரையும் நாவலில் இனம் காணலாம். சுகன்யாவை, ப்ராட்மென் வெளுத்து வாங்கிய தாத்தா கால கிரிக்கெட்டின் ரசிகை ஆக்கியிருப்பது உதாரணம்.

முன்னாள் மார்க்சிஸ்ட்கள் பலரும் பிரிட்டீஷ் ‘ஆராதகர்கள்’ (anglophile) என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் ரமேஷுக்குப் பிடித்த பிபிசி பேட்டியாளர் டிம் செபாஸ்டியனை எனக்கும் பிடிக்கிறது. ரமேஷ் போல், ஸ்காட்டிஷ் பின் ஸ்ட்ரைப் சூட் தான் நானும் விரும்பி அணிவது. பிஏகேயும் இன்னொரு ஆங்கிலோஃபைல் ஆக இருக்கக் கூடும்.

நாவலைப் படிக்கும்போது, பிஏகேயோடு (அல்லது ரமேஷ் சந்திரனோடு) நான் உடன்படுகிற இன்னொரு விஷயம் உடல் வாடை பற்றிய எழுத்து. ‘காமத்தில் கொஞ்சம் நாற்றமும் கலந்து இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்’ என்பார் வைக்கம் முகம்மது பஷீர். பிஏகேயும் பஷீர் ரசிகரோ என்னமோ.

கடத்தப்பட்ட எஞ்சினியர் கோஷின் மனைவி நந்திதாவால் ஈர்க்கப்படுகிற ரமேஷ் சொல்கிறான்

Her smell, part feral and part fruity, is heady. (புனுகு வாடையும் பழவாசனையும் கலந்த, கிறுகிறுக்க வைக்கும் உடம்பு நெடி)

அசாமில் கூட வேலை பார்க்கும் அனுபமா பற்றி – இவள் மேலும் மோக வசப்படுகிறான்.

Anpuama is sweating. The aroma is bewitching. As we cross the timber shop crunching shavings of wood underfoot, the resinous aroma of timber snuffs Anupama’s. (புதிதாகச் சீவிய மரத் தூளின் வாசத்தோடு கலந்து வரும் வியர்த்த பெண் உடல் வாடை).

நாவலின் முக்கியமான பாத்திரங்கள் ரமேஷும் மனைவி சுகன்யாவும். படித்த உயர் நடுத்தர வர்க்கம். தம்பதிகள் என்றாலும் ஒவ்வொருவரின் individual space-ஐ மதிப்பவர்கள். அங்கு அத்துமீறல் ஏற்படுத்தக் கூடாது என்ற கண்ணியம் நிறைந்தவர்கள். என்றாலும் அவ்வப்போது ஆக்கிரமிப்புக்கான ஆயத்தம் நடப்பதும் உண்டுதான். மனிதர்கள் ஆயிற்றே. எப்போதும் ஒரே மாதிரியாக இயங்க முடியுமா? போதாக்குறைக்கு ரமேஷுக்கு காப்பி டிகாஷன் கூட சரியான பத்த்தில் இறக்க வராது. சுகன்யா நல்ல காப்பி தயாரித்துக் கொடுப்பது அத்துமீறல் என்றால் ரமேஷும் நானும் கவலைப்படப் போவதில்லை.

ரமேஷ் தன் நாவலில் சொல்லுவது இது –

In grief, Sukanya was tyrannous. She did things, she knew, I abhorred. She brought home manicured, diamond-studded astrologers. She played ghazals played by effeminate, moonstruck morons. She expected these everyday nothings to work on my temper.

பி.ஏ.கேயின் வசீகரமான ஆங்கில நடைககு ஒரு சிறு எடுத்துக்காட்டு –

The climb to Bedni Bugyal was steep and cypress and spruce quickly gave way to dwarfed rhododendron. We passed the tree line and were entering the moss and lichen zone when the weather was seized by a demon. The wind became a whirling dervish. Presently the rain froze and came down in an unremitting fusillade of pellets.

புரண்டு புரண்டு படுத்து அகப்பயணமாக, வெட்டி விசாரத்தில் ஈடுபடுவதே இலக்கியத் தரம் வாய்ந்த நாவல் என்று திடமாக நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிற தமிழ்ச் சூழலில், நாவலின், சிறுகதையின் எழுதி வைத்த முகத்தை மாற்ற முயன்று கொண்டிருக்கும் வெகு சிலருக்கு இம்மாதிரி நாவல்கள் உற்சாகம் அளிப்பவை. நான் மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.

சொல்ல மறந்து விட்டேனே, நாவல் தமிழில் பிஏகேயால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மின்பிரதியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் பெயர் ‘கலங்கிய நதி’. அது அச்சுக்கு வரும்முன் அறிமுகப்படுத்துவதையும் பொதுப் பகிர்வில் கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆங்கில மூலம், தமிழில் மிக இசைந்த மொழியாக்கமாகி இருப்பதை மட்டும் சொல்ல எந்தத் தடையும் இல்லை.
88888888888888888888888888888888888888888888888888888888888888888888
கமல் ஹாசன் அலுவலகத்தில் அவரோடும், திரைக்கதை ஆசிரியர் அதுல் திவாரியோடும் (த்ரோகால், தசாவதார் இந்தி வசனம்) காஞ்ச்ச் இலையாவின் புத்தகம் பற்றி படப்பிடிப்புக்கு நடுவே பேசிக் கொண்டிருந்தேன், மேசையில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘கிறிஸ்துவமும் தமிழ்ச் சூழலும்’ தட்டுப்பட்டது. ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலையின் மாணவர். படிக்க சுவாரசியமான புத்தகம்.
புத்தகத்தில் இருந்து –
தமிழில் நாட்டார் விவிலியம் (Appocripha) உண்டு. விவிலியத்தில் இல்லாத, உள்ளூர்ச் சூழ்நிலை சார்ந்த நிகழ்வுகள். நோவா பிரளய நேரத்தில் கப்பல் கட்டும் பகுதி, கன்யாகுமரி மாவட்ட நாட்டார் பாடலில் சொல்லப்படுகிறது –
ஆனைக்கு ஒரு கூடு செய்யடா – இப்போ
அய்யப்பன் ஆசாரி நீயடா,
பூனைக்கு ஒரு முறி செய்யடா – நீ
பூச்சாண்டி முறையைக் காட்டாதேடா
நரிக்கும் கீரிக்கும் கூடு – நாராயணா நீ செய்யடா
ஓரிக்கொரு கூடு செய்ய ஓச்சன் ஆசாரி போதுமே
கழுதைக்குக் கூடுவேறே வேணுமே
காசி செய்து வைத்தால் போதுமே
அண்டி ஆசாரியும் அறுத்துத் தள்ளுறான்
அண்டிக் கண்ணன் பப்பு எடுத்துச் சீவுறான்
நொண்டி ஆசாரியும் கணக்குப் பார்க்கிறான்
கோரச் சாமியும் நெட்ட முளக்கோலை வைத்து வரையறான்
இப்பகுதிகள் குமரி மாவட்டச் சூழலில் நோவாவின் கப்பல் – பேழை உருவாகிற உணர்வை கச்சிதமாக ஏற்படுத்தும். மொழியாக்கம் நம் முன்னோர்களுக்கு சுலபமாகக் கைவந்த சமாசாரம். வார்த்தைக்கு வார்த்தை முனைந்து செய்யப்படும் அதிரடி மொழிபெயர்ப்புகளுக்காக அவர்கள் மெனக்கெடவில்லை.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
பிரசாந்த் பூஷனை உச்ச நீதிமன்ற வளாகத்தில் ராமசேனைக் காரர்கள் அடித்து உதைத்திருக்கிறார்கள். அவருடைய காஷ்மீர் பற்றிய நிலைபாடு பிடிக்காமல் செய்ததாகச் சொல்கிறார்கள். இதுதான் செய்தி. பத்திரிகை இணைய தளங்களில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிற பலர் (அல்லது வெவ்வேறு பெயர்களில் சிலர்) அவரவருக்கு சௌகரியமான ஆங்கிலத்தில் இது குறித்து எழுதித் தள்ளுவதின் சாராம்சம் –
— மன்மோகன் சிங் சர்க்கார் தான் மறைமுகமாக இவர்களைத் தூண்டி விட்டு இப்படிச் செயல்பட வைக்கிறது. ராம சேனை என்ற பெயர்? அது ஏமாற்றத்தான். ——-
போகிற போக்கில் சகலமான பழியும் சர்தார் சாகேப் மேல் விழ வாய்ப்பு உண்டு.
‘என்னய்யா சோர்வா வர்றே?’
‘ராத்திரியிலே இருந்து வயத்துக் கடுப்பு’
‘தண்ணியைக் காய்ச்சிக் குடிச்சியா?’
‘மெட்ரோ வாட்டர்.. காய்ச்சினாலும் குடிக்க என்னமோ போல இருக்கு’
‘சரியா சுத்தப் படுத்தியிருக்க மாட்டாங்க. மாநில அரசு கிட்டே நிதி எங்கே இருக்கு? கஜானா காலி செஞ்சு வச்சுட்டுத்தானே கலைஞர் போயிருக்காரு’
‘அவரவா செஞ்சாரு? எல்லாம் அந்த வெள்ளைக்காரம்மா மன்மோகன் சிங் கிட்டே சொல்லி அவர் பிரனாப் கிட்டே சொல்லி..’
‘இந்த ஆட்சி ஒழிஞ்சாத்தான்’யா நிம்மதி..’
கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு – ‘குத்தம் செஞ்சவன் ஆப்டலேன்னா பொத்த கோ#ட்டியைத் தூக்குலே போடு’.
இப்போதைக்கு மன்மோகன் சிங் தான் பொத்தக் கோ#ட்டி.
எல்லாப் பழியும் எம்.எம்.எஸ் மேலே என்பது எழுதப்படாத தலப்பா விதி
88888888888888888888888888888888888888888888888
எஸ்.பாலசந்தரின் ’பொம்மை’ படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
வித்தியாசமான திரைப்படங்கள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று தலை காட்டும் 2011-ல் இந்தப் படத்தை எடுக்க முடியும். 1964-ல் யோசிக்கவே துணிச்சல் வேண்டும். கதாநாயகன், நாயகி என்ற சம்பிரதாயத்தை உடைத்து ஹாலிவுட் பாணி கதை. எழுதி நடித்து, இசையமைத்து இயக்கியவர் வீணை எஸ். பாலச்சந்தர்.
வி.எஸ்.ராகவன் இளமையாக, தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவது கம்மியாக மெயின் வில்லனாக வருகிறார். இப்போது எல்லோரும் மறந்துவிட்ட நகைச்சுவை நடிகர் + மிமிக்ரி கலைஞர் சதன் படம் முழுக்க கலகலக்க வைக்கிறார். பழைய படங்களில் எருமை மாட்டின் மீது கோவணமும் அப்பளக் குடுமியுமாக ஆரோகணித்து ஊர்வலம் போவது இவர் டிரேட்மார்க் ஆக்‌ஷன் – இந்தப் படத்தில் இல்லை. ‘போனால் போகட்டும் போடா’ பாட்டில் குலை நடுங்க வைக்கும் கோட்டான், கழுகு குரலெல்லாம் இவருடையதுதான். அதுவும் எஸ்.பாலச்சந்தருக்குத் தேவைப்படவில்லை.
சி.எஸ்.தேசிகன் என்பதுதான் தயிர்வடை தேசிகனின் முழுப் பெயர் என்று இந்தப் படம் பார்த்துத்தான் தெரிந்தது. வியாசருக்கு மகாபாரதம் எழுத பிள்ளையார் scribe ஆக இருந்தது போல் எழுத்தாளர் சாண்டில்யனுக்கு தயிர்வடை தேசிகன் தான் scribe என்று எத்தனை பேருக்குத் தெரியும்? யவனராணியிலும் கடல்புறாவிலும் ரசஞ்சொட்டும் வர்ணனைகள் தேசிகனின் பேனாவிலிருந்து வந்தவையாக்கும்.
60-களின் சென்னை விமான நிலையம் வேலைக்கு ஆள் வராத கவர்மெண்ட் ஆபீஸ் போல் வெறிச்சிடுகிறது. சர்வ சாதாரணமாக சகலரும் உள்ளே புகுந்து புறப்படுகிறார்கள்.
ஆட்டோ என்ற வாகனமே இல்லாத சென்னையா 1964-ல்? டாக்சிகள் தான் படம் முழுக்க நெரிசல் இல்லாத வீதிகளில் உருள்கின்றன.
படத்தில் டைட்டில் கார்டுகளே கிடையாது. படம் முடிந்து பாலச்சந்தர் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் திரையில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
நடிகர்கள் அறிமுகத்தில் கடைசியாக நாலு பேர் – துணைப் பாத்திரங்களில் நடித்தவர்கள். அதில் தாட்டியாக, முன்வழுக்கையோடு நிற்பவர் பெயர் ‘கணபதி பட்’ என்று சொல்லப்படுகிறது.. எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியின் முதல் கணவர்!
பாடகர்கள் மூன்று பேரில் முதலில் அறிமுகம் வீரமணி (ஐயப்பன் வீரமணிதான்). கெச்சலாக உயரமாக ஓரத்தில் நிற்கும் இளைஞர் கை கூப்பி நிற்க, கடைசியாகச் சொல்லப்படும் – ஏசுதாஸ்.

Series Navigationஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்பறவைகளின் தீபாவளி
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

13 Comments

  1. Avatar
    பாரதி மணி says:

    நன்றி, முருகன். அர்த்தமுள்ள, ஆழமான விமர்சனம். பி.ஏ. கிருஷ்ணன் சந்தோஷப்படுவார்.

    தில்லியில் ராஷ்டிரபதி பவன் பின்னால் வில்லிங்டன் கிரஸெண்ட்.

    பாரதி மணி

  2. Avatar
    Thenammai says:

    மிக அருமை முருகன் சார். விமர்சனம் படிச்சே அசந்து போய் இருக்கிறேன். பாரதி மணி சார் பின்னூட்டம் என்றது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னுடைய கவிதைகள் வெளிவந்துள்ளதா எனப்பார்க்கும் ஆவலைக் கூட இது இரண்டும் கட்டுப் படுத்தி விட்டது. என்ன ஒரு அழகான மொழி நடை.. பிரம்மாதம்..

  3. Avatar
    Sainath. says:

    ennaku piditha silla varigal,

    அண்டி ஆசாரியும் அறுத்துத் தள்ளுறான்
    அண்டிக் கண்ணன் பப்பு எடுத்துச் சீவுறான்
    நொண்டி ஆசாரியும் கணக்குப் பார்க்கிறான்
    கோரச் சாமியும் நெட்ட முளக்கோலை வைத்து வரையறான்

  4. Avatar
    டோண்டு ராகவன் says:

    இப்பின்னூட்டம் புலிநக கொன்றை பற்றியது. அதில் வந்த ஒரு காட்சி இன்னொரு சிறுகதை போலவே இருந்தது. அது பற்றி ஜெயமோகனுடன் விவாதித்தேன். அவருக்கு நான் இட்ட மின்னஞல் பரிவர்த்தனையிலிருந்து:

    //தீபம் ஜூலை 78 இதழில் வந்த கதை ஐசக் அருமைராஜன் என்பவர் எழுதிய “மீன் நாற்றம்” என்னும் கதை. அக்கதையை ஒரு காட்சியாக புலிநகக்கொன்றையில் பி.ஏ. கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார் (ஒரு தொழிலாளப் பெண்ணை வாலிபன் கையை பிடித்து இழுத்து பிடிபட்டு அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வது இரு கதைகளிலுமே வருகிறது). இரு கதைகளிலும் இம்முடிவை எதிர்பார்க்காத சம்பந்தப்பட்ட அப்பெண் அழுதுகொண்டே சவ ஊர்வலத்தில் கலந்து கொள்கிறாள்.

    நீங்கள் (ஜெயமோகன்) கூறியிருந்தது போல கிருஷ்ணனே இந்தப் பெயரில் (ஐசக் அருமைராஜன்) தீபம் இதழில் இக்கதையை எழுதியிருப்பாரோ?//

    ஜெயமோகனின் பதில்:
    //ஐசக் அருமைராசன் எங்களூர் எழுத்தாளர். எனக்கு தமிழாசிரியர். கீறல்கள் வலியவீடு போன்றநாவல்களை எழுதியவர்.

    உங்கள் குறிப்பின்படி இரண்டையும் பார்த்தால் இங்கிருந்து எடுத்தது போலத்தான் இருக்கிறது. ஆனால் இந்தவிஷயத்தை நான் மேலே பேச விரும்பவில்லை.

    பொதுவாக இந்தவகை விஷயங்களை நான் பேசுவதில்லை. அது வம்பு தரத்துக்கு போய்விடுகிறது//

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  5. Avatar
    era.murukan says:

    டோண்டு சார், நீங்கள் குறிப்பிடுவது முழுக்கப் புனைவு இல்லாத, நடந்த சம்பவம் (மற்ற விவரங்கள் வேண்டாம்). பிஏகேயும் ஐசக் அருமைராஜனும் இதற்குப் பார்வையாளர்களாக இருந்திருக்கலாம். நாங்குனேரியில் நடந்தது கன்யாகுமரியில் செவிவழிச் செய்தியாகக் கூடப் போய்ச் சேர்ந்து ஐசக்கைப் பாதித்திருக்கலாம்.புலிநகக் கொன்றையில் சுயசரிதைக் கூறுகள் அதிகம் – அது பிஏகேயின் முதல் நாவல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நான் உட்பட பல எழுத்தாளார்களுக்கும் பொதுவானது ‘முதல் நாவல் – மெய் மெய் போலும்மே’.

    1. Avatar
      ஜெயமோகன் says:

      டோண்டு அவர்கள் இந்த விஷயத்தை மேலும் விசாரித்திருக்கவேண்டும். என்னுடைய முதல்பதிலுக்குப்பின் அவர் தொடரவில்லை.

      அந்த நிகழ்ச்சி ஓர் உண்மைச்சம்பவம். தினதந்தியின் பிரபலமான செய்தி. அச்செய்தியின் அடிப்படையில் இரு கதைகளும் எழுதப்பட்டுள்ளன. பி ஏ கிருஷ்ணனின் நவாலில் 90 சதவீதம் உண்மைச்சம்பவங்களும் செய்திகளும்தான். அதை ஒரு இலக்கியவடிவமாக முயன்றுபார்த்த நாவல் அது

      ஜெ

  6. Avatar
    டோண்டு ராகவன் says:

    //டோண்டு அவர்கள் இந்த விஷயத்தை மேலும் விசாரித்திருக்கவேண்டும்.//

    அதைத்தான் இங்கு இப்போது செய்தேன். முருகனிடம் விசாரித்தேன், அவர் நிகழ்வின் பின்புலத்தைக் கூறினார். இப்போது நீங்களும் அதை உறுதி செய்தீர்கள்.

    மேட்டர் ஓவர்.

    சமீபத்தில் 1966-ல் குமுதத்தில் மீரா என்னும் தலைப்பில் ஒரு தொடர் கதை வந்தது. யாரோ ஒரு புதுமுகம் எழுதியிருந்தார். சில நாட்களிலேயே அக்கதை ஆங்கில எழுத்தாள்ர் எட்கர் வேலஸ் எழுதிய Sinister man என்னும் நாவலின் காப்பி என ஒரு கடிதம் வந்தது.

    இன்னொரு கடிதமோ பிரபல துப்பறியும் கதாசிரியர் மேதாஃவி அவர்கள் எழுதிய “மர்மப் பெட்டி” தான் மீராவின் ஒரிஜினல் என இன்னொரு கடிதம் வந்தது.

    இப்போது ஏனோ அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பி.கு. மீரா கதையை அப்படியே நிறுத்தி விட்டார்கள்.

  7. Avatar
    GovindGocha says:

    யார் , எங்கே, எப்போது எனும் ஆராய்ச்சி விடுத்து, பெண்ணின் அழுகை வர நேர்ந்த மனநிலை கூறுகளை ஆராய்ந்து இருக்கலாம்… கையைப் பிடித்து இழுத்த போது, மீறல் நிலையாக கொண்டதும் – கையைப் பிடித்திழுக்கும் போதான ஆணின் மனநிலை, பின் மாட்டிக் கொண்டவுடன் பெண் தாண்டிய உணர்வுநிலையால் தற்கொலை செய்து கொண்டது, ;;; அதே மாதிரி அப்பெண் தான் அத்துமீறலுக்கு உள்ளான போது அந்த ஆணின் மீதான எண்ணம் பின் அவனே தற்கொலை செய்து கொண்ட போது கண்ணீரென… – அது அவன் கண்ட இழப்பாலா… இல்லை அவளுக்கே உண்டான கழிவிரக்க நிலையால என்பது போன்ற அலசல் தளநிலைக்கு செல்லவில்லை…. அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சொல்வது போல், “சுகம் எங்கேடா இருக்கு… அது சொறியிற இடத்திலடா…” என்பது போல் தான் அதிகமான தமிழ் இலக்கியப் படைப்புகள். அதனால் தான் இன்னும் ஆல்பர் காம்யூவின் “அந்நியன்” கதை தரத்திற்கு இங்கு இல்லை…. ஆழ்மனத் தேடல் புதினங்கள் மிகமிகக் குறைவு… ஏதாவது இருப்பின் சொல்லவும்… படிக்கலாம்… புரிந்த தமிழ் மொழியில் இருப்பின்….

  8. Avatar
    Kavya says:

    “எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியின் முதல் கணவர்!”

    ஒருத்திக்கு இரு ஆண்கள் துணைவர்கள். முதலில் அவளை மணந்தவன் ஒருவன். அவன் மரணித்தபின் மணந்தவன் இன்னொருவன்.

    இப்போது இங்கு கூறப்படும் வரலாற்று நிகழ்வுக்கு வருவோம்.

    வி.என்.ஜானகிக்கும் கணபதி பட்டுக்குமே ஊரறிய திருமணம். பின்னர் ஒரு ஆண் குழந்தை அத்திருமணபந்தத்தில் சாட்சியாகப் பிறந்தது. இருவருக்குமிடையில் சிலகசப்புணர்வுகள் புக, அதை ஒரு அன்னிய ஆடவனான எம்.ஜி.ஆர் தெரியவந்தார் தன்னோடு நடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி.

    ஆங்கிலத்தில் பச்சையாக இதை செடக்சன் Seduction என்று ஒரே போடாகப் போட்டுவிடுவார்கள். பிறர் மனை நோக்காது பேராண்மை என்றும் நம் புரட்சித்தலைவர் சொல்வார் (நான் சொல்லும் புரட்சித்தலைவர் வள்ளுவர் !) Xianity makes it one of the ten Commandments: Thou shall not covet thy neighbour’s wife. No religion permits it. No culture permits it if it believes in the institution of marriage, family and settled society on fixed norms in the larger interest of all.

    பிறனில் பெண்களைக் கவர நினைக்கும் பெண் பொறுக்கிகள் செய்யும் முயற்சிகளில் ஒன்று அப்பெண்கள் தங்கள் மண வாழ்க்கையில் நன்றாக இருக்கின்றனரா என்பதைக் கண்டறிந்து, if they are unhappy in their marriage, ஊடுருவுவது. எம்.ஜி.ஆர அதைச் செய்தார் என்று அவரே ஆ.வியில் எழுதி விட்டார். அஃதோடு நில்லாமல், ஒரு நாள் ஜானகி இரவோடு இரவாக அவர் வீட்டிற்கு வந்து விட்டார். பட் போலிசில் கம்ப்ளியின்ட் கொடுக்க எம்.ஜி.ஆர் சிறையில் தள்ளப்பட அவர் அண்ணன் வெளியில் கொண்டுவந்ததாக தன் சுயசரிதத்தில் எழுதியிருக்கிறார். போலீசு தன்னை லத்திக்கம்பால் அடித்தது என்றும் எழுதியிருக்கிறார். சுயசரிதையின் பெயர்: நான் ஏன் பிறந்தேன்!

    பட் மறைந்தவுடந்தான் எம்.ஜி.ஆர் ஜானகியை மனைவியாக ஏற்க முடிந்தது. அதுவரை வைப்பாட்டி என்றுதான் சொல்லலாம். எம்.ஜீ.ஆர் மரணித்த பின் அமெரிக்காவில் வாழ்ந்த தன் பையன் – அதாவது பட்டுக்குப் பிறந்தவன் – வீட்டில்தான் ஜானகி மரணித்தார். என்ன வினோத வாழ்க்கைச் சித்திரமிது !

    ஆனால் மோகன் கொடுக்கும் மரியாதையைப் பாருங்கள். எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.ஜானகியின் முதல் கணவராம் பட். What perversion !!!

Leave a Reply to era.murukan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *