இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்

author
2
1 minute, 19 seconds Read
This entry is part 20 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

தொலை பேசி அடர்த்தி வளர்ச்சி:

இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி வேகவேகமான வளர்ச்சி. அதை ஒரு எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்று சொல்லலாம். எளிதான முறையில், எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்பதை x, x2, x3 ……..என்ற வீதத்தில் வளர்வது என்று வரையறுக்கலாம். எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சியைக் குத்து வேக வளர்ச்சி என்று தமிழாக்கம் செய்யலாமா? கீழிருக்கும் வரைபடம்1 இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியைக் காட்டும். தொலை தொடர்பு வளர்ச்சிக்கான அலகாக தொலைதொடர்பு அடர்த்தி என்ற கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது. தொலை தொடர்பு அடர்த்தி என்பது 100 ஜனங்களுக்கு எத்தனை தொலைபேசிகள் என்ற கணக்கு. 2000-க்குப் பின்னால் எவ்வளவு குத்தாக தொலை தொடர்பு அடர்த்தி உயர்ந்துள்ளது  என்பதை வரைபடம்-1-ல் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். வரைபடம்-1 லிருந்து இந்தியாவின் தொலை தொடர்பு குறித்தான சில உண்மைகள் தெளிவாகின்றன.

  • மொத்த தொலைபேசி(Total tele-density) அடர்த்தி சராசரி குத்து வேகத்தில் வளர்ந்துள்ளது.  மார்ச், 2012 நிலவரப்படி, மொத்த தொலைபேசி அடர்த்தி 78.66%. (வரைபடத்தில் 2010 வரையிலான நிலை வரையப்பட்டுள்ளது)
  • நகர்ப்புறத் தொலைபேசி(Urban tele-density) அடர்த்தி, சராசரி குத்து வேகத்தை விட மேலும் வேகமாய் வளர்ந்துள்ளது. மார்ச்,2012 நிலவரப்படி, நகர்ப்புறத் தொலைபேசி அடர்த்தி 169.55%. அதாவது கிட்டத்தட்ட ஒரு நகர்ப்புறவாசி இரண்டு தொலைபேசிகள் வைத்துள்ளார்.
  • கிராமப்புற தொலைபேசி அடர்த்தி,(Rural tele-density) சராசரி குத்து வேகத்தை விடக் குறைவான வேகத்தில் வளர்ந்துள்ளது. மார்ச், 2012 நிலவரப்படி, கிராமப்புற தொலைபேசி அடர்த்தி 39.22%.
  • மேற்சொன்ன தகவல்களிலிருந்து இன்னொரு உண்மை தெளிவாகிறது. நகர்ப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கும் கிராமப் புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கும் இடை வெளி இருப்பது மட்டுமல்ல,; அந்த இடை வெளியும் குத்து வேகத்தில் வளர்கின்றது. இது டிஜிட்டல் இடைவெளி( Digital divide) எனப்படும். இதை வரைபடம்-1லிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

வரைபடம்-1

தொலை தொடர்பு கொள்கைகளும் தொலைதொடர்பு வளர்ச்சியும்:

வரைபடம்-1 தொலை  தொடர்பு வளர்ச்சிக்கும், தொலைதொடர்பு கொள்கைகளுக்கும், தொலைதொடர்பு ஒழுங்கு முறை அமைப்புக்களுக்கும் இருக்கும் கூட்டுறவினயும் (correlation) சொல்லும்.

  • இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) , தொலைதொடர்பு விவகாரங்கள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு வழக்குமன்றம்( Telecom Dispute Settlement and Appellate Tribunal(TDSAT)) என்ற அமைப்புக்கள் நிறுவப்பட்ட காலகட்டத்திற்க்குப்(2000) பின்னால் வளர்ச்சி வேகம் கொண்டுள்ளது.
  • மூன்று முக்கியமான தொலை தொடர்பு கொள்கைகள் , இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சிக்கு உதவியுள்ளன. செல்பேசி அழைப்புக்களில், செல் அழைப்பு பெறுவோர் கட்டணம் செலுத்துவர் ( Receiving Party Pays(RPP)) என்ற முறைக்குப் பதிலாக செல் அழைப்பு செய்வோர் கட்டணம் செலுத்துவர்(Calling Party Pays(CPP)) என்ற முறை 2003-ல் அமலுக்கு வந்தது. இரண்டாவதாக தொலை தொடர்பு செயல்வலைகள்(Telecom networks) தங்களுக்குள் இணைத்துக் கொள்ளும் போது அழைப்புக்கள் ஒரு செயல் வலையிலிருந்து இன்னொரு செயல்வலையில் பயணிப்பதால் ஒரு செயல்படுநர்( Operator), இன்னொரு செயல்படுநருக்குப் பரஸ்பரம் செலுத்த வேண்டிய இணைப்புப் பயன்பாட்டுக் கட்டணங்கள் (Interconnection Usage Charges (IUC)) குறைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. முக்கியமாக ’அணுக்கப் பற்றாக் குறைக் கட்டணம்’(Access Deficit Charge(ADC)) என்று கம்பி சார் தொலை தொடர்பு செயல்படுநருக்குத் தர வேண்டிய கட்டணம் குறைக்கப்பட்டுக் கொண்டே வந்து, 2008-ல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்றாவதாக 2003-ல் அமலாக்கப்பட்ட ஒருங்கிணந்த தொடர்புச் சேவைக்கான உரிமம் (Unified Access Service License(UASL) என்ற புதுக் கொள்கை. UASL உரிமமுள்ளோர் எல்லாவிதமான தொலைதொடர்பு சேவைகளையும்- கம்பி சார்ந்தது(Wireline), கம்பியில்லாதது(Wireless) , முழு அலைவிலானது (Full mobility), கட்டுப்பாடான அலைவிலானது(Limited mobility) என்றெல்லாம்- வழங்க வகை செய்தது. புது UASL கொள்கை, 4-8 செயல்படுநர்கள் வரை பல உரிமம் பெற்ற பகுதிகளில் சேவை தர வாய்ப்பும் ஊக்கமும் கொடுக்க தொலை தொடர்புச் சேவையில் போட்டி அதிகரித்தது. இதனால் , செல் பேசி அழைப்புக் கட்டணமும் குறையக் குறைய, குறைந்த கட்டணம் செல்பேசிகளின் எண்ணிக்கை மேலும் குத்து வேகத்தில் வளர வளர, ஒரு நேர்மறை வளர்ச்சிச் சுழல் (positive growth cycle) ஏற்பட ஏதுவாகியது. இதை வரைபடம்-2 மூலம் புரிந்து கொள்ள முடியும்.

வரைபடம்-2

(Policy Changes Vs Tariffs and Subscriber Base- Trend

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொலை தொடர்பு வளர்ச்சி நிலை(மார்ச்,2012 நிலவரம்):

மொத்தத் தொலை பேசிகளின் எண்ணிக்கை 951.34 மில்லியன்கள். இவற்றில் செல் பேசிகளின் எண்ணிக்கை மட்டும் 919.17 மில்லியன்கள். நகர்ப்புறத் தொலைபேசிகள் 65%. கிராமப்புறத் தொலைபேசிகள் 35%. மார்ச், 2012 நிலவரப்படி கம்பியில்லா செல்பேசி சேவை வழங்குவதில் முதல் ஐந்து நிலைகளில் இருக்கும் செல்பேசி நிறுவனங்கள்  கீழே இருக்கும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.

செல் பேசி நிறுவனங்கள் செல்பேசி

எண்ணிக்கை

(மில்லியன்கள்)

மொத்தச்

சந்தைப் பங்கு

(%)

கிராமப்புறச் சந்தைப் பங்கு

(%)

பாரதி ஏர் டெல் 181.28 19.72 23.46
ரிலையன்ஸ் 153.05 16.65 10.52
வோடா ஃபோன் 150.47 16.37 19.44
ஐடியா 112.72 12.26 18.72
பி.எஸ்.என்.எல் 98.51 10.72 10.68

 

பாரதி ஏர் டெல் சந்தைப் பங்கில்- மொத்தத்திலும், கிராமப் புறச் சந்தையிலும் முன்னனியில் உள்ளது. பி.எஸ்.என்.எல், செல் பேசி சேவையில் ஐந்தாவது நிலையில் இருப்பதோடு மட்டுமல்ல, கம்பிசார்( wireline) மற்றும் கம்பியில்லா சேவைகளையும் சேர்த்து 2010-11 நிதி ஆண்டில் ரூபாய்  6384 கோடி  நட்டத்தோடு இயங்குகிறது. கம்பியில்லா செல் பேசி சேவையில் மாத சராசரி வருவாய் ஒரு பயன்படுத்துவோரிடமிருந்து( Average Revenue Per User(ARPU)) ரூபாய் 97. ஒரு தனி நபரின் மாத சராசரி செல்பேசிப் பயன்பாடு (ஜி.எஸ்.எம்)(Minutes of Usage(MOU)) 346 நிமிடங்கள். இணையவலை( internet) மற்றும் அகண்ட அலைக்கற்றை இணைப்புக்கள்( Broad band connections) 22.86 மில்லியன்கள்.

தொலை தொடர்பு வளர்ச்சி- சந்திக்கும் சவால்கள்;

  • இந்தியாவில் தொலை தொடர்பு சந்தைப் போட்டி கடுமையான போட்டி. ஒவ்வொரு உரிமப் பகுதியிலும்( license area) மொத்தம் உரிமம் பெற்ற   செல்பேசி நிறுவனங்கள் 15. அவற்றில் குறைந்த பட்சம் 8 உரிமத்தார் தீவிரமாகப் போட்டியிடுகின்றனர். வெளிநாடுகளில் கூட நான்கு நிறுவனங்களுக்கு மேல் போட்டியில்லை. சந்தைப் போட்டியின் அளவை நிர்ணயிக்கும் ஹெர்ஃபிண்டால்-ஹிர்ஸ்மென் (Herfindahl-Hirschman Index) என்ற குறியீட்டின் மதிப்பு இந்திய செல் பேசிச் சந்தையில் 0.19. இந்தக் குறியீட்டின் மதிப்பு 0- 1 என்ற இடைவெளிக்குள் இருக்கும். மதிப்பு கூடக் கூட போட்டியின் குறைவையும் சந்தையில் தனிஆதிக்கத்தின் விரிவையும் குறிக்கும். மதிப்பு குறையக் குறைய போட்டியின் தீவிரத்தைக் குறிக்கும். இந்த வகையில் இந்திய செல்பேசிச் சந்தையில் நிலவும் போட்டி கடும்போட்டி. இதனால் சந்தையில் பகிர்மானமும், அலைக்கற்றைக்கான தேவையும் கூடுகிறது.
  • போட்டி கடுமையாய் இருப்பதால் செல்பேசிக் கட்டணக் குறைப்பை சந்தாதாரர்களைச் சேர்க்கும் உத்தியாக செல்பேசி நிறுவனங்கள் பயன்படுத்தின. சந்தாதாரர் எண்ணிக்கையைக் கூட்டவும் மாதப் பயன்பாட்டு நிமிடங்களை (MOUs) அதிகப்படுத்தவும் முடிந்தால் , மொத்த வருவாய்க் கோட்டினை (Gross Revenue Curve) மேல் நோக்கி நிமிர்த்த முடியும் என்ற  வணிக உத்தியை இந்த நிறுவனங்கள் கையாண்டன. ஆனால் , இப்போது மாத சராசரி வருவாய் ரூபாய் 97 என்று இருக்கும் போது, இன்னும் கட்டணக் குறைப்பு  இனி எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை. இந்தக் கட்டத்தில், சந்தாதாரர்களில்/ வாடிக்கையாளர்களில் 80%-க்கு மேற்பட்டோர் முன்செலுத்தும் (Pre-paid subscribers) வகையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நன்று.
  • இது வரை அகில இந்திய அளவிலான ஒரு 2-ஜி உரிமத்திற்கான (a pan- India License)  மதிப்பு 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட ஏல மதிப்பான ரூபாய் 1658 கோடி . 2-ஜி உரிமத்தோடு அலைக்கற்றையும் (2*-4.4 MHz in the case of G.S.M technology and 2*2.5MHz in the case of CDMA technology)  சேர்த்துத் தரப்பட்டது. 2-ஜி அலைக்கற்றை ஊழலுக்குப் பின்னால், உச்ச நீதி மன்றம் 122 உரிமங்கள் செல்லுபடியாகாதவை என்று தீர்ப்பளித்த போது அலைக்கற்றை ஏலத்தையும் உத்தரவிட்டதின் பின்ணணியில், இனி உரிமத்தோடு 2-ஜி அலைக்கற்றை சேர்த்துத் தரப்படாது ஏலம் விடப்படும். 2-ஜி ஜி.எஸ்.எம் 1800 Mhz-அலைக்கற்றையில் ( 1800MHz band), தலா 5 Mhz-க்கு அகில இந்திய அளவிலான குறைந்த பட்ச மதிப்பு(reserve price) ரூபாய் 14000 கோடி என்று அரசு நிர்ணயித்துள்ளது. CDMA தொழில் நுட்பத்தில் இது 1.3 மடங்கு கூடுதலாயிருக்கும். செல்பேசி நிறுவனங்கள், இது அதிகமான மதிப்பு என்றும் , இதனால் 2-ஜி செல்பேசி சேவையின் கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசாக்கள் கூடும் என்றும், சாதாராண மக்களுக்கான பேச்சு சேவை(voice service) தரும் 2-ஜி செல் பேசி வளர்ச்சி பாதிக்கப்படும் என்று வாதிக்கிறார்கள். ஆனால் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் புதிய அடிப்படை ஏல மதிப்பு 3-4 பைசாக்களுக்கு மேல் விலையின் கூடுதல் இருக்காது என்று கணக்கிடுகிறது. ஏற்கனவே 3-ஜி ஏலத்தில் பங்கு கொண்டு அதிக ஏல மதிப்பில் நிதி ஆதார நெருக்கடியில் இருக்கும் செல் பேசி நிறுவனங்கள் , புதிய 2-ஜி ஏலத்தையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மொத்தத்தில், ஏற்கனவே நிலை நின்றுள்ள பெரிய செல் பேசி நிறுவனங்கள், புதிய செல் பேசி நிறுவனங்களைக் காட்டிலும் புதிய  2-ஜி  அலைக்கற்றை ஏலச் சவாலை சந்திக்க முடியும். புதிய தொலை தொடர்பு ஒழுங்கு முறைச் சூழல் தொலை தொடர்பு நிறுவனங்களிடையே சேர்மானங்களையும், உடைமையாக்கல்களையும்

( mergers and acqusitions) ஊக்குவிக்கலாம்.

  • நகர்ப்புறத் தொலை பேசி அடர்த்தி 170% என்பதால் , நகர்ப்புறச் சந்தையில் ஒரு தேக்கம்  அல்லது குறைந்த வீதத்திலான வளர்ச்சி தான் சாத்தியம். இதன் பின்ணணியில், கிராமப்புறத் தொலை பேசி அடர்த்தி இன்னும் 39%-என்ற் அளவில்  இருப்பதால், கிராமப் புறச் சந்தை வேகமான வளர்ச்சிக்கும், சந்தையில் பெரும் பங்கைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. இன்னும் இருபது வருடங்களில் இந்திய கிராமப்புறச் சந்தை இன்றைய தெற்கு கொரியா, கனடா போன்ற நாடுகளின் மொத்த நுகர்வோர் சந்தையை விடப் பெரிதாகவும்,இப்போதுள்ள இந்தியாவின் நகர்ப்புறச் சந்தையை விட ஏறத்தாழ நான்கு மடங்கு பெரிதாகவும் இருக்கும். கிராமப் புறச் சந்தையின் பரிமாணம் அமெரிக்க டாலர்கள் 577 பில்லியன்களாய் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.( TRAI( McKinsey&Company, “the bird of Gold: The Rise of Indian Consumer Market,” McKinsey Global Institute, May,2007) இந்தப் பின்ணணியில் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வணிகத் தொலை நோக்கை கிராமங்களின் மேல் செலுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், ARPU ஏற்கனவே ரூபாய் 97 க்கு சரிந்து  இருப்பதால், தொலை தொடர்பு நிறுவனங்கள், கிராமப் புறங்களில் குறைந்த அடக்கத்தில்(low cost) சேவை அளிக்கும் வணிக உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம். இப்போதே, செல்பேசி நிறுவனங்கள் செல்பேசி கோபுரம்( Mobile towers) போன்ற கட்டமைப்புக்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் கட்டமைப்பில் செலவிடப்படும் மூலதனம்(Capital expenditure(CAPEX)) பகிர்மானம் ஆவதால், லாபம் ஈட்ட வாய்ப்பு அமைகிறது. அதே போல செயல்பாட்டுச் செலவுகளும்(Operating expenditure(OPEX)) பகிர்மானம் ஆகும் போது, கிராமப் புறச் சேவையை லாபகரமாக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. குறைந்த பட்சம் வரி, வட்டிக்கு முன்பு வருவாய்( Earnings Before Interest and Tax(EBIT)) நேர்மறையாய் (positive)  இருக்க வேண்டும்.
  • டிஜிட்டல் இடைவெளி பற்றி முன்னே குறிப்பிட்டோம். இந்த இடைவெளியைக் குறைக்க யாவருக்குமான சேவைக்கடமை  நிதி (Universal Service Obligations Fund(USOF)) தொலை தொடர்புத் துறையின் கீழ் இயங்குகிறது. 2012-13 நிதி ஆண்டின்( Financial year) ஆரம்பத்தில் இந்த நிதியில் மீதமிருக்கும்  தொகை ரூபாய் 21839 கோடி. கிராமப் பொதுத் தொலைபேசிகள், கிராமப் புற தனிநபர் தொலை பேசிகள், செல் கோபுரக் கட்டமைப்புகள், அகண்ட அலைக்கற்றை இணைப்புகள் என்று பல திட்டங்களுக்கான சகாய நிதி ஆதாரம்(subsidy support), இந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. கிராமப் புறஙகளில் நகர்ப்புறங்களின் வசதிகள் கிடைக்கப்பெற வேண்டுமானால் டெலி-மருத்துவம் (Tele-medicine), டெலி-கல்வி,(Tele-education) இ-வியாபாரம்(e- business/e-trading) போன்ற தகவல் மற்றும் கணிணி சார்ந்த தொழில் நுட்ப(Information&Communication Technology(ICT)) உத்திகள் பயன்படுத்தப்பட வேண்டும். இது சாத்தியமாக கிராமப் புறஙகளில்  கணிணிகளின் பெருக்கம்  வேண்டும். மேலும் கணிணி சார்  பணிகளும், மென்பொருள்களும்(Software) பெரும்பாலும் ஆங்கிலத்திலே உள்ளன. நம்மூர் மக்களின் வாழ்வாதாரம் ஒட்டிய அளிப்புகளைத்(applications) தரும் நம்மூர் மொழிகளில் இயங்கும் மென் பொருள்கள் இயற்றப்பட் வேண்டும். அகண்ட அலைக்கற்றை அதிக அளவில் கிராமங்களுக்கு கண்ணாடி இழை (Optical Fibre) ஊடகங்கள் வழி சென்று சேர்க்கப்பட வேண்டும். இன்னும் செல்பேசி கோபுரங்கள் எல்லைக்குள் வாராத கிராமப் புறப் பகுதிகளை உள்ளடக்க , தொலை நோக்கில் வேண்டிய செல் பேசி கோபுரங்கள், பி.டி.எஸ் (BTS) போன்ற கட்டமைப்புகள் கணக்கிடப்பட்டு ,USOF -ல் இருக்கும் மீத நிதியை கிராமப் புற ICT வளர்ச்சிக்குப் பயன்படுத்துவத்தின் மூலம் கிராமங்களும் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை நுகர ஏதுவாகும். இந்த கிராமப் புற ICT வளர்ச்சி உத்தியில் உள்ளூர் மக்களும் பங்கு பெறும் இயக்கமானால் வளர்ச்சி உரிய எல்லோருக்கும் சேர்வது மட்டுமன்றி, வளர்ச்சியும் நிலை நிறுத்தப்படும். முக்கியமாக, பெண்கள் குழுக்கள் பங்கு கொண்டால், கிராமப் புறத்தில் பெண்ணுரிமை சமூக பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் நிலைநாட்டப்படும். வங்காள தேசத்தின் கிராமின் உதாராணம் ( Grameen Model) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாலை, தண்ணீர், மின்சாரம் போன்று , அகண்ட அலைக்கற்றையும் கிராமங்களில் உத்தரவாதப் படுத்த வேண்டும்.
  • தொலை தொடர்பு சேவை மூலதனச் செறிவான தொழில். மிக அண்மைய நவீன தொழில் நுட்பத்தால் (state-of-the-art technology) செயல்படுவது. இதனால் வெளி நாட்டு முதலீடும், நவீன தொழில் நுட்பமும் இன்றியமையாதாய் இருக்கிறது. இந்திய அரசு தொலை தொடர்புத் துறையில் 74% வரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் (ஏப்ரல்2000- செப்டம்பர், 2011) தொலை தொடர்புத் துறை ஈர்த்துள்ள அந்நிய முதலீடு 12,456 மில்லியன் டாலர்கள். இந்த வகையில் தொலை தொடர்புத் துறை மூன்றாவது தரத்தில் இருக்கிறது. ஆனால், அண்மைய உச்ச நீதி மன்றத்தின் 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தை ஒட்டிய 122 உரிமங்கள் செல்லுபடியாகா என்ற தீர்ப்பின் எதிரொலியாய், அரசு தாக்கல் செய்திருக்கும் முறையீடு இன்னும் நிலுவையில் இருக்கும் நிச்சயமில்லா சூழலில்  அந்நிய முதலீட்டில் தேக்கம் ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 2-ஜி ஏலத்தில் எவ்வளவு அந்நிய தொலை தொடர்பு நிறுவனங்கள் அக்கறை காட்டும் என்பது கேள்விக்குறி. அந்நிய முதலீட்டை ஈர்க்க வேண்டிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை அரசு வேகப்படுத்தினால் , தொலை தொடர்பின் வளர்ச்சி மேலும் உறுதி செய்யப்படும்.

முடிவுரை:

இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியைப் போல், குறிப்பாக செல் பேசி வளர்ச்சியைப் போல் ஒரு சராசரி இந்தியனைத் தொட்ட வளர்ச்சி அண்மையில் இதுகாறும் இல்லை என்று சொல்லலாம். இந்தியாவின் சமூகப், பொருளாதார மாற்றத்தின் கருவிகளில் ICT -யை  மிகத் திறமையாகப் பயன்படுத்தலாம்.  இது சாத்தியமாக, மூலதனம், தொழில் நுட்பம், சரியான ஒழுங்கு முறை நெறிகள் போன்றவை முக்கியம். இவற்றை விட, 2-ஜி ஊழல் அதிர்ச்சிக்குப் பின், நேர்மையான, திறமையான தலைமையும்(leadership) தேவை என்றும் சொல்ல வேண்டும்.

References

www.trai.gov.in

www.dot.gov.in

 

 

 

Series Navigationஇருள் மனங்கள்.நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    வளர்ச்சி includes corruptions level as well. you can say that too biggest வளர்ச்சி. 200 cr. via cheque — amount has been transferred to othersie and without any company names again transfered back the money when CBI just started raids.. all are biggest வளர்ச்சி.

  2. Avatar
    paandiyan says:

    560cr dealing happened in share basis and that too with all fraud documents. all are too good வளர்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *