இருமல்

This entry is part 8 of 9 in the series 20 டிசம்பர் 2020

தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது …

அந்த இரண்டு வார இருமலை இன்றைக்கு தொடர்வண்டிப்பயணத்தில்  தீர்த்துவிட வேண்டும் என்று அவனின் தீர்மானமாக இருந்தது .. அது எப்படி என்று அவன் கண்டுபிடித்து விட்டான்.

மியூசியத்தை  ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்தபோது அவர் எதிரில் டாஸ்மாக் என்ற பலகை தெரிந்தது .அந்த வேறு உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்ணில் பட்டது .வேறு எங்கேயும் போய் தேட வேண்டாம் இங்கேயே இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் .

தொடர் வண்டி மியூசியம் ஒன்றை எங்கோ பார்த்த்தாக ஞாபகம் வந்தது. எங்கு என்பது சட்டென ஞாபகம் வரவில்லை. உள்நாட்டிலா.. வெளிநாட்டிலா.. யோசித்தால் தெரிந்து விடும். ஞாபகம் வரும் .

.அவனுக்கு அன்றையப் பயணத்தில்  ஒரு அரை நாள் வாய்த்திருந்தது. பக்கமிருந்த மியூசியத்திற்கு செல்லலாம் என்று ஆசைப்பட்டான் .பல நாட்கள் அந்த உலகத்துக்கு வந்தவன். ரொம்பவும் பிடித்தமானது  அந்த இடம். பல நவீன நாடகங்கள் அங்கு நடக்கும் அப்போதெல்லாம் போயிருக்கிறான் .ஆனால் மியூசியம் மானுடவியல் கண்காட்சி,  நவீன ஓவியக் கண்காட்சி என்று ஐந்து அடுக்குகளுடன்  இருப்பதை அவன் கவனித்ததில்லை ..பல சமயங்களில் தன்னை நவீன ஓவியத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள நவீன ஓவியங்கள் இருக்கும் ஒரு கட்டிடத்திற்குச் சென்று பார்த்திருக்கிறான். மற்றபடி அந்த வளாகத்தில் இருக்கும் மற்றக்  கண்காட்சிகளை பார்க்க அவனுக்கு வாய்த்ததில்லை .அவன் வாங்கியிருந்த அந்த சீட்டில் 6 கட்டடங்களுக்கான மொத்தமான தொகை 15 ரூபாய் என்று இருந்தது .ரொம்பவும் குறைவு தான் .

ஆனால் வெயில் உரத்து தன் பார்வையை சொல்லிக்கொண்டிருந்தது .சாயங்காலத்தில் அல்லது இரவு நேரத்தில் மழை வந்துவிடும் என்று சூசகமாக சொல்லிக்கொண்டிருந்தது .நவீன ஓவியக் கண்காட்சிச் சென்றபோது அவனுக்குப் பரிச்சயமான பலபேர் ஓவியங்கள் அங்கிருந்தன தனபால் ஆதிமூலம் நந்தகோபால் விஸ்வம் என்று ஆச்சரியமாக இருந்தது இவர்களெல்லாம் உயிருடன் இருந்தபோது அவர்களை எப்படியாவது ஒரு முறையாவது அவன் சந்தித்திருக்கிறான். அது முக்கியமான விஷயமாக இப்போது பட்டது .அவர்கள் எல்லாம் எவ்வளோ பெரிய ஆளுமைகள் அவர்களை சந்தித்து இருக்கிறோம் .இதுபோன்ற ஒரு நிரந்தர ஓவியக் கண்காட்சியில் அவர்கள் இடம்பெற்றிருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது .அதற்கு பக்கத்திலிருந்த சிறுவர் அரங்கில் சென்ற பொழுது எங்கும் தூசியாக இருந்தது .ஆனால் பரவாயில்லை   ..இன்னும் பல நாட்டு நாகரிகங்கள் பற்றிய தகவல்கள் ..படங்கள் தென்பட்டன .இரண்டாவது மாடியை அவன் கடந்து வந்த போதே இது அவ்வளவுதான்  போங்க என்றார் அங்கிருந்த ஒரு காவலாளி ….அவர்   “ தோண்ட முடியல நிறைய பாறைகள். உள்ள போயி மாட்டிட்டான் . எல்லாம் முடிஞ்சு போச்சுது ” என்று உட்கார்ந்த வாக்கில் இருந்த வயதான பெண்மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .அனேகமாக அவர்கள் சுர்ஜித் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவனின் ஞாபகத்தில் வந்தது சுர்ஜித் வில்சன் என்று கோடிட்டு சில பத்திரிகைகள் செய்திகளை போட்டிருந்தார்கள் .ஆழ்குழாய் கிண்ற்றில் விழுந்து செத்த குழந்தை .

ஸ்பெசல் மியூசியம் என்று  காணப்பட்ட பகுதிக்கு சென்றபோது எல்லாம் குப்பையாக ஒருவகையில் முகம் சுளிக்க கூடியதாக இருந்தது . மரச்சிற்பங்கள் நிறைய இருந்தன.அவனுக்கு பின்னால் வந்த வெளிநாட்டு யாத்திரிகர்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் நேர்த்தி மற்றும் அழகிற்குத் தொந்தரவாக அந்தக்குப்பைகாட்சி இருந்தது. வெளிநாடுகளில் இருக்கிற இது போன்ற மியூசியம்களை அவன் பார்த்திருக்கிறான் .எவ்வளவு சரியாக பராமரிக்கப்பட்டு குறிப்பாக குளிர்சாதன அறைக்குள் அவை  பாதுகாக்கப்பட்டிருக்கின்றன ..ஆனால் இவையெல்லாம் …இங்கு சிற்பங்களும் ஓவியங்களும் தூசு கிடைக்கப் பெற்றிருந்த்து பாக்யம் போலிருந்தது.  சென்னை நகரின் வளர்ச்சி பற்றிய பல விவரங்கள் அந்த கண்காட்சியில் இருந்தன வெவ்வேறு காலகட்டத்தில் ஊர்  பற்றிய சித்திரங்கள் .குறிப்பாக ஆங்கிலேயர் பற்றிய ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களை பற்றிய சிற்பங்கள் அவை மிகுந்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .அதை எல்லாம் அவன் தவறவிட்டிருந்தால்  வருத்தம் ஏற்பட்டிருக்கும் இந்த பகுதிக்கு பல முறை அவன் வந்திருக்கிறான். ஆனால் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது அடுத்திருந்த மானுடவியல் சம்பந்தமான கட்டத்தை தாண்டி தான் அவன் வந்திருந்தான். ஆனால் தேங்கியிருந்த மழை நீர் அதன் முகப்பைத் தாண்டி செல்ல அவனுக்கு எந்த உற்சாகம் தரவில்லை. மழைநீர் தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டியபோது தொண்டை கமறல் அதிகரித்தது. ஒருவகை மூச்சிரைச்சல் வந்தது. தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்தது..

ஆனால் அதை மட்டும் விட்டு வைப்பானேன் என்று அந்த பகுதிக்குள் நுழைந்த போது முகப்பு இருட்டாகத்தான் இருந்தது. எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவனிடம் டிக்கட்டைக் காட்டினான் .அவன் அங்கு ஒரு பொம்பள கருப்பா இருக்கு பாருங்க அங்க போய் கொடுங்க என்றான். அந்தப் பெண் உட்கார்ந்திருந்த இடம் சற்று இருட்டாகத்தான் இருந்தது. ஏன் இவ்வளவு குறைந்த மின் ஒளியில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் கையிலிருந்த கைபேசி ஒலித்து கொண்டு இருந்தது.  அந்த இடத்தில் மின்ஒளியை  சற்று கூட்டியிருக்கலாம். யாரும் அக்கறை கொள்ளாதது அவனுக்கு வியப்பளித்தது .அந்த கட்ட்டிம் இரண்டு மூன்று என்ற மாடிகளுக்கு  உட்பட்டது என்பதால் அந்த கட்டிட எண்  இடத்தில் சீட்டில் ஓட்டை போட்டு அந்த பெண் உள்ளே அனுப்பினாள்.

அவனுக்கு அந்த அரங்கம் ஆச்சரியம் ஊட்டியது. பல போர் தந்திரங்களை கொண்ட ஆயுதங்கள் இருந்தன .சிந்துவெளி நாகரிகம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகளை பற்றிய பல மண்பாண்டங்கள், பிற பொருட்களும் இருந்தன .2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர் என்ற குறிப்புகள் அவனுக்கு ஆச்சரியம் ஊட்டியது. இப்போது கீழடி 2500 ஆண்டுகள்தான் ஆதிச்சநல்லூர் அதற்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் அதற்கு முற்பட்ட எல்லாம் ….குழப்பங்கள் இருந்தன .பிறகு ஆதிவாசிகள் பற்றி  பகுதிக்குச் சென்றான். பலியிடும் ஆயர்கள் நீலகிரி வாழ் மக்களும் பற்றிய பல சித்திரங்கள் இருந்தன. குறிப்பாக அவர்கள் வாழும் வீடுகள் அவர்கள் அணியும் பொருட்கள் பற்றிய விவரங்கள் அந்த புகைப்படங்கள் எல்லாம்  ஆச்சரியம் ஊட்டின.  இரண்டு நாளாய் கொஞ்சம் மழை பெய்திருக்கிறது .அந்த மழை சாரல் உள்ளே புகுந்து இருக்கவேண்டும் பல இடங்களில் தரையில் நீர்கோர்த்து இருந்தது அல்லது மேல் பகுதியிலிருந்து நீர் சொட்டி அங்கு நீர் வந்திருக்கலாம் என்று நினைத்தான். அவனுக்கு அந்த இடம் பிடித்திருந்தது .15 ரூபாயில் நவீன ஓவியங்களும் தேர் சிற்பங்களின் சிறப்பு கண்காட்சியும் போர்க்கால ஆயுதங்களும் மானுடவியல் கண்காட்சியும் சென்னை நகரம் பற்றிய கண்காட்சியும் என்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.ஆனால் ஆறுதலாக இருமல் குறையவில்லை. சட்டென கண்களில் நீர் கோர்க்க இருமிக் கொண்டான். தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் என்று சொல்லிக் கொண்டான்…

 அவன் வெளியே வரும்போது  பூம்புகார்  சார்ந்த ஒரு அரங்கம் தென்பட்டது சில பொருட்கள் இருக்கலாம்  தூரத்திலிருந்தே அதை பார்த்துவிட்டு அவன் மெல்ல வெளி பகுதிக்கு நகர்ந்து விட்டான். எங்கும் படம் எடுக்க அனுமதியில்லை என்பதால் கூர்ந்து பார்க்க ஏதுவாக இருந்தது. இல்லாவிட்டால் படம் எடுப்பதிலேயே பொழுது போயிருக்கும். கவனமும் சிதறியிருக்கும். இப்போது கவனம் முழுக்க இருமல் மீது வந்து விட்டது.

சாலை  உள்ளே வந்து பார்த்தபோது தென்பட்ட  மதுபான கடை எங்கிருக்கிறது  என்று தேடுவதற்காக  அவன் கண்கள் வலதுபுறமாக அலைந்தன  . வலது பக்கம் செல்லலாம் என்று அவன் சென்ற போது இருந்த விலை உயர்ந்த விடுதிகள்  தென்பட்டன. நிச்சயமாக சாதாரண மக்கள் குடிக்கிற மதுபானக்கடை இந்த பக்கம் இருக்காது என்று எதிர் பக்கம் போகச் செய்தது ..எதிர்ப்பக்கம். இரண்டு நிமிட நடைக்கு பின்னால் அந்த மதுபான கடையை அவன் தெரிந்து கொண்டான்  வழக்கமாக ரொம்ப அபூர்வமாக அவன் குடிக்கிறதைக் கொண்டிருந்தான். எங்காவது வெளியூர் போகிறபோது மட்டும்தான் வாய்த்தது..உள்ளூரில்  வாய்ப்பதில்லை அதுவும் வாகன தடைச் சட்டங்கள் வந்த பின்னால் வாகன ஓட்டிகள் குடித்துவிட்டு ஓட்டினால்  பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் வந்தபின் அவனுக்கு நிறைய எச்சரிக்கைகள் இருந்தன அந்த எச்சரிக்கைகள் உள் மனதிலேயே தோன்றியிருந்தன .மற்றும் பல குடிக்கிற  நண்பர்களும் எச்சரித்திருந்தார்கள் பத்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும் என்று பலரும் எச்சரிக்கையாக .பத்தாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை என்பது மனதில் பயத்தை கொண்டு வந்திருந்தது .அதனால் அப்படி ஏதாவது நிகழ்ந்து விடக் கூடாது என்று அவனும் ஜாக்கிரதையாக இருந்தான்.

பத்தாயிரம் அப்படி எல்லாம் ஒன்னுமில்ல அடுத்த நாளு போலீஸ் ஸ்டேஷன் போனா இரண்டாயிரம் மூவாயிரம்லெ முடிச்சிடலாம். பதிவு பண்ணி இருந்த்தெ  அவங்களே  அழிச்சிருவாங்க ..காசெ வாங்கிட்டு ….. போலீஸ்காரங்க வருமானத்துக்கு இது ஒரு வழியாய் இருக்கு. அவ்வளவுதான்.

 ஆனாலும் அவன் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருந்தான் இதெல்லாம் தேவையில்லை என்றுதான் நினைத்திருந்தான். மனைவியின் அறிவுரைகள் எப்போதும் மனதில் வந்து கொண்டிருந்தன.  நேற்று இரவு வந்த பேருந்து அவனின் தூக்கத்தை கலைத்திருந்தது. தொடர்வண்டியில் வந்தால்  மூத்தோர் சலுகையில் 120 ரூபாய் தான் ஆகும் ஆனால் வேறு வகையில் ,எந்த வகையிலும் டிக்கெட் கிடைக்கவில்லை . பேருந்து குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் 1600 ரூபாய் என்றார்கள். மிகவும் அதிகமாகத்தான் இருந்தது .ஆனால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அவன்  பதிவு செய்திருந்தான். அதுவும் தீபாவளிக்கு அடுத்த நாள் எந்த வகையிலும் டிக்கெட் கிடைக்க வழி இல்லை .வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு வந்தான் ஆனால் அந்த வண்டியில் குளிர்சாதனம் அவ்வளவு சரியாக வேலை செய்யவில்லை  உள்ளே ஒருவகை புழுக்கமாக இருந்தது .வெளியிலிருந்த மழையும் குளிர் காற்றும் உள்ளே வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் குளிர்சாதனம் செய்யப்பட்ட வசதியால் ஜன்னல் கதவைத் திறக்க முடியவில்லை ,ஒருவகையில் எரிச்சல் தான் வந்தது .அந்த பேருந்தில் இருந்த தூங்கும் வசதி அசவுகரியமானது. படுக்கைகள் இரட்டையாக இருந்தன  பக்கத்தில் இருந்தவன் இளைஞனாக தான் இருந்தாலும் .40 வயது கூட இருக்காது ஆனால் அவன் தூங்க ஆரம்பித்த பின்னால் வெளியிட்ட குறட்டை அவனைத் தூங்க விடவில்லை .மதியம் கூட அவன் பகல் தூக்கம் எதுவும் மேற்கொள்ளவில்லை . ஆனால் தூக்கம் வரவில்லை அவனுக்கு தெரிந்த பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டான்  பிறகு 300 ஆம் என்னில் இருந்து ஒவ்வொன்றாக கூட்டி 500  ஒருவரை சொன்னான். பிறகு அதிலிருந்து ஒவ்வொன்றாக கீழே இறங்கி வந்து மெல்ல மெல்ல 100க்கு வந்தான்.  அதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது 100லிருந்து மறுபடியும் கீழேப்  பிடித்துக் கொண்டு வந்து பூஜியத்துக்கு வந்து விட்டான். ஆனால் தூக்க நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தூக்கம் வரவில்லை என்றால் அவன் பெரும்பாலும் ஹீலர் பாஸ்கரின் வார்த்தைகளை மனதில் கொள்வான். படுக்கையிலேயே உட்கார்ந்து கொள்வான்..தூக்கம்  வருகிற போது அப்படியே படுக்கையில் சாய்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .ஆனால் இப்போது தன் படுக்கையை ஒருவன் பகிர்ந்து கொண்டு  இருக்கிறான் .அதனால் அப்படி உட்கார சாத்தியம் இல்லை .அவனும் தூங்க முயன்று குறட்டை சப்தம் பிடிக்கிறபோது தூக்கம் வரும் என்று நினைத்தான் .நல்ல வேலை இருமலை அடக்கிக் கொள்ளும்விதமாய் இருந்தது  பெரிய ஆறுதல் தந்தது.

ஆனால் விடியலின் வெளிச்சம் தென்பட்ட போது கொஞ்ச நேரம் தூங்கி இருப்பது அவனுக்கு தெரிந்தது .தூக்கமில்லாமல் இந்த இரவைக் கழிப்பதில் எப்படி சிரமம் இருந்தது  இந்த நாளை எப்படி கடத்தப் போகிறோம் என்ற பயம் வந்தது . இன்றைய நாள்……

 மியூசியத்தில் எங்காவது ஒரு மூலையில் உட்கார்ந்து தூங்கவேண்டும் என்று கூட நினைத்திருந்தான்  .ஆனால் வாய்க்கவில்லை டாஸ்மாக் கடையை அவன் இடது புறம் சென்று தேடியபோது அவன் கண் பார்வையில் பட்டது  அட்டைப் பெட்டிகள்  .முகப்பில் இருந்த பெரிய பெரிய பிளாஸ்டிக் அட்டைப் பெட்டிகள் அவனைப் பயமுறுத்தின .ஒருஆள் சென்றதற்கான சென்று வருவதற்கான இடைவெளி போல் இருந்தது .அங்கு சென்ற போது வழக்கமான ஜன்னல் கம்பிகள் ஊடே மதுபாட்டில்களை வைத்திருந்தார்கள் .வரிசையில் நாலைந்து பேர்கள் இருந்தார்கள் அவர்கள் செல்லட்டும் என்று காத்திருந்தான் பிறகு 200 ரூபாயை நீட்டி ஏதாவது விஸ்கி  என்றான் .அவன் இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னான் அது ஏதோ எதுவும் அவனுக்கு தெரியவில்லை .ஏதாவது ஒரு நல்லது என்றால் போதும். அவன் ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஒரு விஸ்கி பாட்டிலை கொடுத்தான்

 இருமல் வேறு ஒரு வாரமாய் துரத்திக் கொண்டிருந்தது பிராண்டி குடித்தால் அது குளிர்ச்சி.. நிவாரணம் தருமா என்பது சந்தேகமாக இருந்தது. விஸ்கி சூடு என்று கேள்விப்பட்டு இருந்தான்.  அது ஏதாவது  நிவாரணம் அளிக்கும்என்று தான் அவன் நினைப்பில் இருந்தது. பக்காடியா சாப்பிடு என்று ஒரு நண்பர் சிபாரிசு செய்திருந்தார். செவன் அப்புடன் சேர்த்து சாப்பிடச் சொன்னார். அது பிராண்டியா, விஸ்கியா என்று கேட்டான் .அவருக்குத் தெரியவில்லை. நல்ல சரக்கு என்றார்.

 . அங்கேயே நின்றபடி விஸ்கி பாட்டில் மூடியைத் திறக்க முற்பட்டான் அதைச் சாதாரணமாக திறக்க முடியவில்லை .பையில் தேடி போது இருந்த பெட்டிச் சாவியை எடுத்து அதன் முனைகளை கீறி அந்த லேபிள்களை சிதைத்தான். அப்போதும் அந்த மூடி சுலமாக வரவில்லை .மறுபடியும் சிரமப்பட்டு அந்த சாவியைக் கொண்டு அந்த சீல் போடப்பட்ட பாகத்தை கிழித்தெறிந்து விட்டு இருந்த ஒரு இடத்தை பிடிக்க மூடி கையோடு வந்தது .கையிலிருந்த ஒரு நூறு மில்லி தண்ணீர் இருந்த பாட்டிலை எடுத்து அதனுள் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் கொண்டான். விஸ்கி தொண்டையில் இறங்கும் போது ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது . இதமாகவும். சாப்பிடுவதற்கு முன் இது போதும் .பிறகு இரவில் இது பயன்படும் என்று நினைத்தபடி கீழே இறங்கிய போது ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் தென்பட்டது .நல்ல ஓட்டலில் சாப்பிட வேண்டும் என்பதுதான் அவனின் முற்பகல் ஆசையாக இருந்தது ஆனால் ஆம்பூர் பிரியாணி ஓட்டலில் என்ன விசேஷமாக இருக்கும் என்று யோசித்தான். உள்ளே நுழைந்தான் .சிக்கன் பிரியாணி என்று சொன்னபோது 110 ரூபாய் வாங்கிக்கொண்டு ஒரு டோக்கனை கொடுத்தான் ஒரு தாடிக்காரன். குறுந்தாடிதான். அழுக்கு பனியன் போட்டிருந்தான்..இன்னொரு இடத்தில் கொடுத்தபோது ஒரு முட்டையுடன் கொஞ்சம் சாதம் கிடைத்தது. அவனும் அழுக்கு பனியன் அணிந்திருந்தான்.நின்று கொண்டே சாப்பிட வேண்டும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பலகையை தான் சாப்பாட்டு மேஜை .அவன் இடம் தேடினான். ஒருவன் நின்று சாப்பிட்டு விட்டு கிளம்பிய நேரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளலாம் என நினைத்தான். ஆனால் அவன் சாப்பாட்டு தட்டில் நிறைய சாதம் மிச்சம் வைத்திருந்த்தைக் கண்டுபிடித்தான் .இவ்வளவு சாதத்தை வீணாக்கிறவன் …அதிகமா குடித்திருப்பான். சாப்பிடும் மனநிலை இல்லாமல் இருப்பான் .ஏன் இவ்வளவு சாப்பாட்டை வீணாக்கினான் . அவனுக்கு சந்தேகமாகத் தான்  இருந்த்து அடுத்து வந்தவன் அழுக்குச் சட்டையுடன் இருந்தான் ..அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு கையை காட்டினான். முழு முட்டையும் மூன்று நான்கு கோழித்துண்டுக்களும் அவனுக்கு ஆறுதலாக இருந்தன அந்த அரிசி நீளமாக இருந்தது ஆம்பூர் பிரியாணி என்பதற்கான அடையாளம் இதுதானா. பக்கம் அறிந்தவன் அருகிலிருந்த சிறு பக்கெட்டிலிலிருந்து தயிர் பச்சடியை நிரம்பப் போட்டுக்கொண்டான்.  அதில் வெங்காயம் அதிகமிருந்தது  அவனும் எட்டிப் பார்த்துவிட்டு சாம்பாரையும் மட்டும் போட்டுக்கொண்டான் .இருமல் அடிக்கடி வரும் நேரத்தில் தயிர்பச்சடி எதற்கு என்று தவிர்த்தான். அவன் அது சிக்கன் குழம்பு ஆக இருக்கும் என்று நினைத்தேன் .ஆனால் அது சாதாரணமாக இருப்பது தெரிந்தது. நிறைய கத்தரிக்காய் துண்டுகள் இருந்தன ஆம்பூர் பிரியாணிக்கு கறிக்குழம்பு தர மாட்டார்கள் போலிருக்கிறது .வெறும் கத்தரிக்காய் குழம்பு தான் என்பது தெரிந்துவிட்டது .அதன் பெயர் மறந்து விட்டது. வயதாகிவிட்டது. தொடர்வண்டியில்  சலுகை வாங்கும் வயதாகிவிட்டது. நிறைய மறதி.

ஐந்து நிமிடம் முன்னால் ஊத்தி கொண்ட விஸ்கி தலைக்குள் ஒரு வகை போதையை கிளப்பி விட்டது தெரிந்தது . கசகசவென்று மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தார்கள்.தொடர்வண்டி வழக்கமாய் அறிவிக்கப்பட்ட நடைமேடையில் வரவில்லை .கடைசி நேரத்தில் பத்து நிமிடம் இருக்கும்போது அறிவிப்புப் பலகையில் நடைமேடை எண்  போடாமல் பலகையில் காட்டிக் கொண்டு இருந்தார்கள் .அப்போது அவனுக்கு திக்கென்றது . ஆறாவது மேடையில் வருமென்று முன்னர் அறிவித்தபடி அவன் கையிலிருந்த மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாnன் 4-வது மாடியிலிருந்து 5-வது மாடி தாண்டி  மாடிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்திருந்தான் .இப்போது அரைமணிநேரம் ஆனபின்னால் நடைமேடை பற்றிய அறிவிப்பு வரும் என்று காத்திருந்தான் காரணம் அந்த அறிவிப்பு பலகையில் நடைமேடை என்ற இடத்தில் முன்பு ஆறு என்று போட்டிருந்தது இப்போது மாற்றிவிட்டு எதுவும் காட்டாமல் இடைவெளியோடு அந்த பலகை இருந்தது. அது பயம் ஊட்டியது .தூத்துக்குடி செல்லும் தொடர்வண்டி ஐந்தாவது நடைமேடையில் இருந்தது அது சென்ற பின் தான் எடுப்பார்களா அவன் கைபேசி எடுத்து தொடர்வண்டி என்னை போட்டான் அது இன்னும் தாம்பரத்திற்கு வரவில்லை கொஞ்சம் தாமதம் என்று தெரிந்தது. 15 நிமிடத்திற்கு பிறகு நடைமேடை  மாற்றப்பட்டு இருப்பதை அறிவித்தனர்.  கையிலிருந்த பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி கீழே இறங்குவது சிரமமாக இருந்தது. மூச்சிரைத்தது. .அவன்  பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஏழைப்பெண் தெலுங்கில் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தாள் . இறுதியில் அந்த கேள்விகள் அப்படியே  இருந்தன அவர்கள் என்னவாகி இருப்பார்கள் ஏழாம் நடை  மேடைக்கு வண்டி வருவது உனக்கு தெரியுமா பெண்ணே …. பலர் அவசரகதியில் ஓடிவந்தார்கள்.

 அவனின் இருக்கை சுகமாகத்தான் இருந்தது இடையில் வாங்கிய புளிசாதம் ஒரு வகையில் ஆறுதல் தருகிற மாதிரி விதமாகத்தான் இருந்தது. நேற்று இரவு சரியாக தூங்கவில்லை இன்றைக்கு நன்றாக தூங்கவேண்டும் கழிப்பறைக்கு சென்று அவன் கையில் இருந்த பாட்டிலையும் கையில் இருந்த நீர் பாட்டிலையும் கொண்டு ஒரு புது திரவத்தை உருவாக்கிக் கொண்டான். மதுவும் சாதாரண குடிநீரும் கலந்தன. இதை ஊற்றிக் கொள்ள கழிப்பறைதானா கிடைத்தது. சற்று அருவருப்பாக உணர்ந்தான்.  இந்த பாட்டில் திரவம் தீரும் வரை அந்த அருவருப்பு இருக்கலாம்.

அவன் இருக்கையில் வந்து உட்கார்ந்து பாட்டில்  மீது ஒரு துண்டை சுற்றியபடி மெல்ல தொண்டையை நனைக்க ஆரம்பித்தான. இதமாக இருந்தது ஆறுதலாக இருந்தது. இன்றைக்கு நன்றாக தூங்கி விடலாம் என்றுதான் அவன் நினைத்தான் ஒரு பெரிய கொடுங்கனவாக நேற்று தூக்கம் இல்லாமல் போய்விட்டது இன்றைக்கு இரவு நன்றாக தூங்க வேண்டும். யாராவது சாப்பாட்டுக்கு ஆர்டர் கேட்டு வருவார்களா என்று காத்திருந்தான் நல்லவேளை வந்தவனிடம் வெஜிடபிள் பிரியாணி என்று தேர்வு செய்துகொண்டான், ஒரு துண்டு சுற்றப்பட்ட அந்த போத்தலை மெல்ல மெல்ல தொண்டைக்குள் இறக்க அவனுக்கு இதமாக இருந்தது ..போதை வந்திருந்தது .அவனுக்கு பிடித்திருந்தது .

யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தான். கையில் இருந்த போத்தலை ஒரு கைக்குடையில் சற்றே மறைத்திருந்தான்.துண்டு காணாமல் போய் விட்ட்து போல் இருந்தது.

எழுத்தாளர் ஜே .கே தொடர்வண்டியில் போகும் போது குளிசாதனப்பெட்டி ( ஏசி ) பயணத்தைத் தவிர்ப்பாராம். அதில் உட்கார்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது அந்த வாசத்தை பரப்பி விடும். மற்றவர்களுக்கு தொந்தரவாகிவிடும் என்பதால் .

தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது இப்போது குறைந்து விட்டது. ஆல்கஹாலுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்  … ” அடிக்கொரு முறை தும்மும் சளி பிடித்த டீசல் என்ஜின் ” என்று யாரோ கவிஞர் சொன்னது ஞாபகம் வந்தது.  அப்படித்தான் தன் உடம்பு ஆகிவிட்டதாக நினைத்தான் .

ஹைதராபாத் சென்ற ஒரு தரம் கடும் கோடை. உடம்பு நசநசத்து சிரமம்  தந்தது. குளித்தே ஆக வேண்டிய நிலை. பெட்டியின் கழிப்பறைக்குச் சென்று தண்ணீர் போத்தலை சிதைத்து சிறு குவளை போலாக்கி  தண்ணீர் சேகரித்து குளித்துவிட்டான். அதை கவனித்த ஒருவர்  இதெல்லாம் பண்ணக்கூடாது.தவறு..யாராவது புகார் தந்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று சொன்னபோது உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது.அதற்கப்புறம் அப்படியானக் குளியலுக்கு அவன் ஆசைப்பட்ட்தில்லை.

……..வழக்கமாய் .11 மணிக்கு தான் தூக்கம் வரும் ஆனால் நேரத்தைப் பார்த்தான் 8 தான் ஆகியிருந்தது தொடர்வண்டி வந்தபோது 5 மணி .. இப்போது எட்டு மணி அந்தப் பக்கத்து இருக்கைகளில் ஆக்கிரமித்து கொண்டவர்கள்  சாப்பிட்டு தூங்க ஆரம்பித்தார்கள் .பேச எதுவும் இல்லை என்பது போல் அந்த மூன்று பேரும் முடங்கி விட்டார்கள் .மற்ற இரு இடங்கள் காலியாக இருந்தன.அவனுடையது பக்கவாட்டு இருக்கை .  தொடர்வண்டியின் சத்தம் தாலாட்டாகி தூங்கி விட்டார்களா . இல்லை .ஓய்வு கிடைத்தது என்று சவமாகி விட்டார்களா அவனுக்கு போதை சுகமாய் இருந்தது. அவன் அந்த விஸ்கி பாட்டில் பாதியை தீர்த்து இருந்ததால் சீக்கிரம் தூக்கம் வந்து விடும் என நினைத்தான் .,

 . போத்தல் திரவத்தை விழுங்கும் போது கழிப்பறை ஞாபகம் வந்தது. சிறுநீரும் மலமும் கலந்த வாடை திரவத்துள் இருந்து வந்தது. அவனுக்கு வழக்கமாய் 11 மணிக்கு தான் தூங்குவான். அன்றைக்கு எட்டு மணிக்கே போதையில் தூக்கம் வந்து விட்டது .தடக்தடக் சப்தத்தை உருவகித்துக் கொண்டே படுத்து விட்டான் .

 காலையில் எழுந்தபோது அவன் விளக்கை போட்டான் எதிர்த்த இருக்கைகளில் இருந்தவர்கள் இடம் மாறி இருந்தார்கள் அல்லது அவர்கள் கீழே இறங்கி விட்டார்கள் முன்பு ஒரு தம்பதி  கூட இருந்தார்கள் .40 வயதில். மிகவும் இணக்கமாக தான் இருந்தனர். அவனுக்குப் பார்க்கப் பிடித்திருந்தது இரவில் அவர்கள் தயிர்சாதம் சாப்பிட்டார்கள் காலையில் கூட  இடையில்  விழிப்பு வந்தபோது அவர்களை பார்த்த ஞாபகம் இருந்தது .ஆனால் இப்போது அவர்கள் இல்லாதது போலத் தோன்றியது வேறு இரண்டு ஆண்கள் அந்த இருக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் இனிமேல் தூக்கம் வராது என்று தோன்றியபோது எழுந்து உட்கார்ந்துகொண்டாள் பற்பசையை பற்களில் இட்டுக் கொண்டான் அது கொஞ்சம் உயர்ந்த விலையுள்ள பற்பசை தான் .தொடர்ந்து வந்த பல்வலி அவளை அந்தப் பசையை  வாங்கச் செய்திருந்தது .பல்துலக்கி விட்டு வந்து விளக்கை போட்ட போது எதிர்த்த இருக்கையில் இருந்தவன் உனக்கு லைட் எதுக்கு  எனக் கேட்டார். .அவர் தெலுங்கில் தோரணையில் இருப்பது போல் சொன்னார் எதற்கு சிரமம் என்று அவனும் அணைத்துவிட்டு முகநூலில் ஏதாவது செய்தி இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தான்.ஏதாவது கெட்ட வார்த்தையை தெலுங்குக்காரன் விளக்கை அணைக்காமல் இருந்தால் உதிர்ப்பான் என்ற பயம் தொடர்வண்டி சட்டெனக் கிறிச்சிட்டு நிற்பது போல் மனதில் ஏறியிருந்தது.

பல தொடர்வண்டிப்பயணங்களில் நடக்கும் இடத்தில் கூட பலர் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.கழிப்பறைக்குச் செல்ல முடியாது. பெரும்பாலும் வடக்கத்தியத் தொழிலாளர்களாக அவர்கள் இருப்பார்கள்.  அதிகாரிகளிடம் புகார் செய்தும் எதுவும் நிகழாது. பதிவு செய்தப் பெட்டிகளில் இப்படி பலர் ஏறுவது இறங்குவதும் தூங்குவதும் கட்டுப்படுத்த முடியாதது போல ஆகிவிட்டது . இம்முறை அப்படி எந்தக்கூட்டமும் இல்லை என்பது ஆறுதல் தந்தது.  ஆறுதல் தருவதற்கே இப்பயணம் என்பதாய் நினைத்துக் கொண்டான்.இப்போதைய ஆறுதலுக்கு  மது வேறு துணையாக இருந்தது .

இந்த ஆறுதல் நீடித்தால் நன்றாக இருக்கும் .இருமலைக்கூட விரட்டி விடும்.

 அவனின் நண்பர் ஒருவர் இரவில் குடிப்பார். வேலைக்கு போகிற நாளாக இல்லாமல் இருந்தால் காலையில் குடிக்க ஆரம்பித்து விடுவார். பனியன் கம்பனி வேலை . இன்னைக்கு தான் வேலை இல்லையே என்பதைச் சொல்வார். அப்படி ஒரு பரிசோதனையாக இப்போதைக்கு மீதியிருக்கும் பாதி பாட்டிலைத் தீர்த்துவிடலாம் என்று அவன் நினைத்தான் .இதுவரைக்கும்  இப்படி செய்தது இல்லை. காலையில் குடித்ததில்லை. அபூர்வமாய் இன்றைக்கு காலையில் அதை குடித்துவிட்டு ஒரு புது அனுபவமாக எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்தான்.. புது இடம் . இது எப்போதும் வாய்க்காது.

 தொடர்ச்சியாக வந்தது இருமல். இதை தவிர்ப்பதற்காகவே வேறு வழியில்லாமல்  குடிக்க வேண்டுமென்று தோன்றியது இந்த விஸ்கி சூடு உள்ளே போய் இந்த கொலை இருமலை, சளியை கரைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அப்படித்தான் அவன் வாங்கியபோது  வேண்டும் என்று விரும்பி வாங்கி வந்தான். பிராண்டி குளிர்ச்சி .விஸ்கி சூடு அது இருமலை கரைத்து விடும் என நம்பியிருந்தான். அவை இப்போதைக்கு இருமலை கரைக்கத் தான் தனக்கு தேவை என்று பட்டது . தேனீர் சாப்பிடவில்லை பல்துலக்கி ஆகிவிட்டது கொஞ்சம் தண்ணீர் குடித்தாகி விட்டது இனி அடுத்த நடவடிக்கையை இந்த வேலையை செய்ய வேண்டும் அதற்காக புது முயற்சியாக காலையிலேயே அதை குடிப்பது என்று முடிவெடுத்தான்.தொடர்வண்டி கூட இப்படி ஏதாவதைக் குடித்து விட்டுதான் தலைதெறிக்க ஓடுவதாகத் தோன்றியது.

 இது ஒரு புது அனுபவம் இது போல் எப்போதும் இருந்ததில்லை அடுத்து என்ன அனுபவம் நிகழப்போகிறது என்று அவனுக்கு தெரியாது ஆனால் இப்போதைக்கு காலையில் குடிக்கிற புது முதல் அனுபவம் . அனுபவத்தை உள்வாங்கத் தயாராகி தண்ணீர் பாட்டிலில்  அந்த விஸ்கி துளிகளை கலக்க  ஆரம்பித்தான். காபி, தேனீர் விற்றுச்சென்றவர்கள் அவனைப் பார்த்தப்டியேச் சென்றார்கள்,  காபி, தேனீர்  வாசம் மீறி மது வாசம் அவர்களை எட்டியிருக்குமா .. தண்ணீர் இல்லாமல் தொடர்வண்டியில் முகம் கழுவ, கழிப்பறைக்குச் செல்ல அவஸ்திப்பட்டது எப்போதும் பயமுறுத்தும் அவனை. கழிப்பறையில் கழுவிக்கொள்ள சிறு மக்கு , அல்லது அடிப்பாகம் நீக்கப்பட்ட போத்திலை உபயோகப்படுத்த தயாராக பல சமயம் பயணங்களில் இருந்திருக்கிறான். இப்போது இலாகா வாடிக்கையார்களைத் திருப்திப் படுத்தும் விதமாய் நல்ல பாத்திரங்களை இரும்புச் செயினில் கட்டி வைத்திருப்பது ஆறுதல் அளித்திருக்கிறது.அவனைக்கூட இருமல் செயின்தான் கட்டிப் போட்டிருக்கிறது.  மனைவியிடம் சொன்னால் அதைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்வார். அப்படி சொல்லி மூன்று நாட்கள் இரவில் பால் சாப்பிட்டான். நண்பர் ஒருவர் அது எதுக்கு. பாலை ரொம்பவும் அவாய்டு பண்னு என்று அறிவுரை சொன்னார்.

ஆகா  …மறுபடியும் ஒரு தூக்கம் வாய்த்ததை குறித்து   

ஆகா என்று சொல்லிக் கொண்டு எழுந்தான், தொடர் வண்டி ஒரு மணி நேரத் தாமதம் என்பதை முன்னர் கைபேசி காட்டியது. இப்போது என்னவாகியிருக்கும்

பக்கமிருந்த இருக்கைகள் காலியாக இருந்தன

டயம் ஆயிந்தா .

ஸ்டேசன் ஒச்ச்சிந்தி.

பரபரவெனப் போர்வையையும் மற்ற பொருட்களையும் சுருட்டி பையுள் திணீத்தான்.

நெஞ்சு படபடக்க இறங்க முற்பட்ட போது வண்டி நின்றது.

நடை மேடையில் உட்கார்ந்து கையில் இருந்தவைகளைச் சரிசெய்து கொண்டான். கைபேசியின் மின்னேற்றியை மறந்து விட்டது ஞாபகம் வந்தது. வண்டியின் பெட்டிகளை அடைத்துக்கொண்டிருந்த சப்தம் கேட்டது.

அவன் வந்த பெட்டி இறுக்கமாக உள்ளிலிருந்து மூடப்பட்டு விட்டது. எழுந்து சென்று பலம் கொண்ட மட்டும் தட்டினான்.

இப்படி தண்ணி அடிக்கிற நாளில் ஏதாவது உறுத்தலாய் நடந்து விடும். இப்போது கைபேசியின் மின்னேற்றி  தொலைந்து விட்டது. ஒரிஜினல், அறுநூறு  ரூபாயாவது ஆகும். உறுத்தலாய் ஏதோ போதை மாதிரி உடம்பில் ஏறுவது அவனுக்குப் பிடிக்காததாக இருந்தது.   இன்னொரு தூக்கத்தைற்குத் தயாராவது பாக்யம் என்று பட்டது. கதவை திறக்கச் சொல்லி தொடர்வண்டிக்குள் சென்று கால்களை நீட்டி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று பட்ட்து அவனுக்கு. குறுகிய இடமாக இருந்தாலும் கால்களை நீட்டிப்படுக்க தொடர்வண்டிபயணம்  ஏதுவாகி வருவது ஞாபகம் வந்தது.. குறுகிய இடத்துள்  தூங்கப் பழக்கப்படுத்திய தொடர்வண்டிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது போல் நினைத்தான்  அவன். இருமலுடன் தூங்க பழக்கப்பட்டு போயிருப்பதையும் நினைத்தான் .

Series Navigationநண்பன் என்பவன்கவிதையும் ரசனையும் – 7
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    அருமையான கதை வாசகருக்குப் படிக்கக் களைப்பின்றி செல்கிறது. மின்னேற்றி என்பது புதிய சொல்லாக்கம்

Leave a Reply to valavaduraiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *