இரு கவிதைகள்

This entry is part 6 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

முகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் 

 

 

எனக்கு முகநூல்

மிகவும் பிடித்திருக்கிறது .

அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் .

 

எனக்குப் பிடிக்காதவர்களை

மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.

மனதுக்கு ரொம்பவும்

இதமாக இருக்கிறது .

 

பெண்களை நான்

மிகவும் மதிப்பவன் .

அவர்கள் வீர சக்ரா

வாங்கும் அளவுக்குத்

தைரியசாலிகளாக முகநூலில்

வளைய வருகிறார்கள் .

அவர்கள்

பேட்டை ரௌடிகளை

போலீசில் ஒப்படைப்பதும்

எச்சில் ஒழுக எழுதுபவனை

வார்த்தைகளால்

கண்டதுண்டமாக்குவதும் ,

எனக்குப் பிடித்திருக்கிறது ..

 

தமிழில் எனக்குத் தெரியாத

பலநூறு கெட்ட வார்த்தைகளை

அவர்கள் தம் கட்டு உரைகளில்

கற்றுக் கொடுத்ததற்கும் நன்றி .

 

எங்கும் பிரசுரமாகாத

யாராலும் படிக்கமுடியாத

கவிதை என்னும் கிவிதைகளை

தினமும் இங்கு

பார்க்கிறேன் .

எப்படி கவிதை

எழுதக் கூடாது என்பதை

எனக்குக் கற்பிக்கும்

ஆசான்கள்   அவை .

 

‘ மோடி சரியில்லை

கருணாநிதி சரியில்லை

ரஜனி சரியில்லை

ஜெயலலிதா சரியில்லை

அந்த டி .வி  சரியில்லை

இந்த சினிமா சரியில்லை ‘

முகநூல்கார

ஒப்பாரிகளுக்கிடையே

மனதுக்கு இதமாய்

மணிகண்டன்கள் .

.

பாட்டையாவின் குறும்பு,

போகனின் வெகண்டை

கோகுலின் வெடிப்பு

மாமல்லனின் சுரீர்

விமலாரமணியின் பளார்

எல்லாம் எனக்கு

வேண்டியிருக்கிறது !

 

வெள்ளத்தில் நகரும்,

அதன் நகரும் மனிதர்களும்,

ஆடுகளும், மாடுகளும், நாய்களும்

மூழ்கிக் கொண்டிருக்கையில்

விரல்க் கறை  பத்தி ,

பத்தி பத்தியாய்க்

கவிதை எழுதும்

கெவிங்கனையும்

இங்குதான்  (வெறுப்புடன் )

பார்க்கிறேன் .

 

இருந்தாலும் , முகநூலை

நான் மிகவும் நேசிக்கிறேன் .

அதனை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன்.

—-

 

புதுமுகத்துடன்  ஒரு சம்பாஷணை 

 

” கவிதை எழுதுபவரா நீர் ? ”

 

“ஆமாம் ”

 

” யாரையெல்லாம் தெரியும் ?
” கம்பன் இளங்கோ

பாரதி கவிமணி

பசுவய்யா பிச்சமூர்த்தி … ”

 

“போய்ச் சேர்ந்த

ஆட்களை விடும் !

இப்போ இருப்பவர்கள் ? ”

 

“மனுஷ்யபுத்திரன் குட்டி ரேவதி

ரெங்கநாயகி ஜயபாஸ்கரன்

வைதீஸ்வரன் சுகுமாரன்

கலாப்ரியா.தேவதச்சன் …”

 

” எப்படி பழக்கம் ? ”

 

“படிச்சு தாங்க  ”

 

” நேரே இல்லியா ?

என்ன ஆளுய்யா !

எந்த ஊரு உமக்கு ?

நெல்லையா ? தஞ்சையா ?

மதுரையா ? கோவையா ?

பாண்டிச்சேரியா ?

கன்யாகுமரியா?

அனந்த புரமா ?

வடக்கன் குளமா ? ”

 

” இதெல்லாம்இல்லீங்க .

தேனிக்கு பக்கம் .

ஆண்டிப்பட்டிங்க ! ”

 

” ஒண்ணும் சரியில்லே ,

உமக்கு

நல்லாத் தெரிஞ்ச ஆளும் இல்லே

சொல்றாப்புல ஒரு ஊரும் இல்லே

கவிஞராவது  .

கஷ்டம்தான்யா ”

 

—————————————————————————————————————-

Series Navigationஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்காதலர் தினம்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *