உண்மையின் உருவம்

This entry is part 21 of 21 in the series 21 அக்டோபர் 2012

”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?” என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதியவை அனைத்தும் மீண்டும்மீண்டும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய நீண்ட உரையில் முடிவாக ஒரே ஒரு வரியைச் சொல்வதற்குமுன்னால் குறைந்தபட்சம் பத்துவரிகளாவது அடுக்கிச் சொல்லி, இறுதியாக அந்த முடிவுவரியைச் சொல்வதுதான் அவர் பழக்கம். தொடக்கத்தில் சொல்லப்படும் பத்து வரிகளையும் வசதியாக மறந்துவிட்டு, அதன் இறுதிவரியைமட்டும் முக்கியத்துவப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை….” என்றேன்.

நண்பர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். என் பேச்சை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இன்னும் தயக்கம் இருப்பதுபோலத் தெரிந்தது. ஒரு பெருமூச்சோடு, “என்னதான் இருந்தாலும் நிலநடுக்கத்தால் தவிக்கிறவர்களிடம் இது கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்வது அழகாகவா இருக்கிறது?”  என்று இழுத்தபடி கேட்டார். “அழகுக்காக பேசிய தலைவர் அல்லர் அவர். உண்மைக்காக பேசிய தலைவர். அவரால் அப்படித்தான் பேசமுடியும்” என்றேன்.

”காந்தியின் தினசரி  நடவடிக்கைகளில் பிரார்த்தனைக்கு முக்கியமான இடமுண்டு. பிரார்த்தனைமூலம் கடவுளுக்கு நன்றி சொல்வதும் கடவுளின் அருளை வேண்டுவதும் அவருடைய வழிமுறை. இந்தப் பணி இறைவனின் திருப்பணி. என் வழியாக இறைவன் தன் பணியைச் செய்துமுடிக்கிறார் என்று சொல்வதுதான் அவர் வழக்கம். சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த மேற்குவங்க அமைச்சர்களிடம் இந்தியக் கிராமங்களில் வாழும் ஏழைமக்களுக்காகத்தான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதையே ஆசிகளாகச் சொன்னார் காந்தி. அவருடைய வைஷ்ணவ ஜன தோ  என்று தொடங்குகிற அவருடைய பிரார்த்தனைப் பாடலுடைய பொருள் அவருடைய உள்ள உணர்வைப் பிரதிபலிக்கும் தன்மை உடையது. ஏழைகளுக்கு இரங்குபவன் யாரோ, ஏழைகளுக்காக தன் உழைப்பை அளிப்பவன் யாரோ, எல்லோரையும் சமமாக மதித்து நடப்பவன் யாரோ, எல்லோரையும் அன்பால் அரவணைத்துச் செல்பவன் யாரோ அவனே வைணவன் என்னும் பொருளை விரிவான அளவில் அந்தப் பிரார்த்தனைப் பாடல் முன்வைக்கிறது. தன் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறவர்கள் அனைவரையும் அந்தப் பாடலைப் பாடவைத்தார் காந்தி. அப்படிப் பாடுவதன்மூலம் அந்தக் கருத்துகளை உணரும்படி செய்தார். மீண்டும்மீண்டும் மனத்தில் பதியவைப்பதன்மூலம் அவற்றை ஏற்கும்படியும் அவற்றின்மீது நம்பிக்கைகொள்ளும்படியும் செய்தார்.”

நண்பர் பொறுமையில்லாமல் என்னையே பார்த்தார். “இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று கேட்க நினைக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டபோது தலையசைத்தார்.  ”இருப்பதால்தான் சொல்கிறேன். என் அந்தராத்மா கட்டளையிட்டுள்ளது, என் அந்தராத்மா அதை ஏற்கவில்லை, என் அந்தராத்மா அதை நம்புகிறது என்பது போன்ற சொற்களை பல இடங்களில் காந்தி பயன்படுத்துகிறார். காந்தி மட்டுமல்ல, காந்தி காலத்துப் பெரியவர்கள் அனைவரும் அப்படிப் பயன்படுத்தியிருகிறார்கள். ஒரு நல்ல செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் கருணை என்றும் ஒரு மோசமான செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் சாபம் அல்லது கோபம் என்றும் சொல்வது வாய்வழக்கில் எப்போதும் இந்த மண்ணில் உள்ளதுதான். அப்படிப்பட்ட உணர்வின் அடிப்படையில்தான் ருஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சியைப் பராசக்தியின் கருணையாலும் கடைக்கண் பார்வையாலும் நிகழ்ந்த்தாகப் பாரதியார் குறிப்பிடுகிறார். அழிவை அதே பாரதியார் காளியின் ஊழிக்கூத்து என்று மனம் துடிக்க எழுதுகிறார். அப்படிச் சொல்வதும் எழுதுவதும் உலகவழக்குக்கு மாறானதல்ல என்று நாம் உணரவேண்டும்.”

”தீண்டாமையையும் பெண்கள்மீதான அடக்குமுறையையும் ஒழிக்கமுடியாமல் போனால் மிகவிரைவிலேயே இந்துமதம் தன் உயிர்ப்பாற்றலை இழந்துவிடும் என்று ஞானதீபம் உரைகளில் மீண்டும்மீண்டும் விவேகானந்தர் குறிப்பிட்டுச் சொல்வதைப் பார்க்கலாம். அவரையடுத்து இவ்விரண்டு அம்சங்களையும் உரிய முக்கியத்துவத்தோடு பேசியவர் காந்தி. தீண்டாமை என்பது இந்துமதத்தின் இயல்பான குணமல்ல என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி. இதனால் இந்துமதத்தின்  வேரறுக்கவந்த தீய சக்தி என்று மற்றவர்கள் தன்னைத் தூற்றுவதைக் கொஞ்சம்கூட அவர் பொருட்படுத்தவில்லை. கேரளப் பயணத்தின்போது நாராயணகுருவைச் சந்தித்த தருணத்தில் தீண்டாமைபற்றி விவாதித்ததாகவும்  நாராயணகுரு தீண்டாமைக்கு சாஸ்திர சம்மதம் இல்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்ததாகவும் குறிப்புகள் உண்டு. அந்தப் பதிலால் காந்தி மேலும் ஊக்கம் பெற்றார். 1934 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தி. ஏறத்தாழ எட்டு மாத காலம். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுக்க வலம்வந்தார் அவர். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என எல்லா விதங்களிலும் இடைவிடாமல் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்தார். ஏறத்தாழ இரண்டுகோடி மக்கள் காந்தியை நேரில் காணவும் அவருடைய உரையைக் கேட்கவும் அவருடைய பயணத்தின் நோக்கத்தை உணரவும் செய்தார்கள். தீண்டாமை ஒழியப் பாடுபடுமாறு சென்ற இடங்களிலெல்லாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஹரிஜன சேவைக்காகத் தேவைப்படும் பெரும்தொகையை ஒவ்வொரு கூட்டத்தின்போதும் மக்களிடமிருந்து நேரிடையாக நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அப்பயணத்தின்போதுதான் அவர் குற்றாலத்துக்கு வந்தார். அங்குள்ள அருவியில் நீராடிவிட்டுச் செல்லலாம் எனத் தொண்டர்கள் அழைத்தபோது காந்தி அதற்கு இணங்கவில்லை. “என்றைக்கு என் ஹரிஜன சகோதரர்கள் இந்த அருவியில் மற்றவர்களைப்போல குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அன்றைக்கு நான் குளித்துக்கொள்கிறேன். அவர்களுக்கில்லாத குளியல் எனக்கும் வேண்டாம்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குற்றாலத்தைத் தொடர்ந்து  திருநெல்வேலிக்கு அருகில் காந்தி தங்கியிருக்கும் தருணத்தில்தான் பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அச்செய்தி அவரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தேசத்தையே இருட்டில் ஆழ்த்தியிருக்கும் தீண்டாமையால்தான் உப்பு சத்தியாகிரகத்தை ஒட்டியே கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய சுதந்திரம் தள்ளிப்போனது. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, தெய்வத்தின் முன்னால் நிற்பதுகூட தீட்டு என்று எடுத்ததற்கெல்லாம்  தீண்டாமையைக் கடைபிடித்துவந்தவர்களின் எண்ணங்களை மாற்றும் மாபெரும் செயலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை அவர் உடனடியாக மேற்கொண்டார். தீண்டமையை இந்த நாட்டைவிட்டு ஒழிப்பது தம் தலையாய கடமையாக வகுத்துக்கொண்டார் நாட்டில் நிகழக்கூடிய மோசமான ஒவ்வொரு செயலுக்கும் தீண்டாமைக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதாகவே அவர் நினைத்தார். ஒரு கிராமத்துப் பெரியவரின் மனநிலையில் இந்தத் தீண்டாமை ஒழிந்தால்தான் எல்லாப் பேரழிவுகளிலிருந்தும் நமக்கு மீட்சி கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஹரிஜன சேவை செய்யாவிடில் உயிருடன் இருக்கமுடியாது என்று உண்ணாவிரதம் பூண்ட காந்தியடிகளுக்குத் தீண்டாமை ஒழியவேண்டும் என்கிற தியானம் ஒன்றைத் தவிர வேறு எண்ணமே கிடையாது. திருநெல்வேலியிலிருந்து கிளம்பி ராஜபாளையத்தை நோக்கி அவர் பயணம் தொடங்கியது. வழியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலெல்லாம் தீண்டாமைபற்றியும் பீகார் நிலநடுக்கம் பற்றியும் மனமுருகப் பேசினார். ஒரு பெரியவருக்கே உரிய தொனியில் ”ஜனகன் அரசாட்சி செய்த தேசம், சீதை பிறந்து வளர்ந்து ராமாயணத்தைப் பாரத நாட்டுக்கு அளித்த தேசம், பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் புனிதமான தேசபக்தியோடு தொண்டு செய்கிற தேசம், இப்படிப்பட்ட சிறப்புகளையெல்லாம் கொண்ட தேசத்திலே தீண்டாமை என்னும் தீய வழக்கத்தை தெய்வத்தின் பெயராலும் சாஸ்திரத்தின் பெயராலும் கடைபிடித்து, மனிதர்களில் ஒரு பிரிவினரை மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக நாம் நடத்திவரும் அநியாயத்துக்காகவே இறைவன் இந்த நில அதிர்ச்சியை அளித்துவிட்டான். அந்தத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருக்கவேண்டியது இந்தியர்களாகிய நம் கடமை. ஹரிஜன சேவைக்கான நிதியை அளிப்பதுபோலவே, இன்றுமுதல் பீகார் நில அதிர்ச்சி நிதிக்கும் தாராளமாக நிதி உதவி வழங்கி ஆதரிக்கவேண்டும்”  என்று கேட்டுக்கொண்டார். அன்றுமுதல் இரண்டு பிரிவுகளாக நிதிவசூல் செய்யப்பட்டது. இறைவன் நிகழ்த்திய சோதனை என்று நில அதிர்ச்சியைச் சொன்ன காந்திதான் தாராளமாக நிதி வழங்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தன் உருக்கமான உரையால் மக்களின் மனசாட்சியை அசைத்தார். அன்று ஆட்சியில் இருந்த ஆங்கில அரசோ அல்லது வேறெந்த அமைப்புகளோ பீகாரின் மீட்சிக்கு உதவவில்லை. காந்தியும் காங்கிரஸ்காரர்களும்தான் துணைநின்றார்கள்.”

என் நீண்ட பேச்சை மெளனமாகக் கேட்ட நண்பரின் முகத்தில் ஓரளவு தெளிவின் வெளிச்சம் படரத் தொடங்கியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. ”ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் இன்னும் இருக்கிறது” என்று மீண்டும் தொடங்கினார் அவர். “இது நீங்களாவே சொல்லக்கூடிய விஷயமா,  இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்குமா?” என்று இழுத்தார்.

நல்ல வேளையாக என்னிடம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட தி.சே.செள.ராஜன் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி என்னும் புத்தகம் இருந்தது. அதில் நான் சொன்ன தகவல்களைப் படித்த நினைவும் இருந்தது. அந்தப் புத்தகத்தை என் நூலகத்திலிருந்து எடுத்து மெதுவாக அவர் முன்னால் வைத்தேன். “தமிழ்நாட்டில் காந்தி சுற்றுப்பிரயாணம் செய்தபோது, அவரோடு துணையாகவும் பயண ஏற்பாடுகளைக் கவனிப்பவராகவும் இருந்த ராஜன். தன் பயண அனுபவங்களையெல்லாம் அவர் இப்படி ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். நான் சொல்லும் குறிப்புகள் எல்லாம் இதில் உள்ளன”  என்று சொன்னபடி புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தேடி எடுத்துக் காட்டினேன். நண்பர் அதை ஆர்வமுடன் படித்துமுடித்தார். ”இறைவனால் நிகழ்ந்த விளைவு என்று காந்தி சொல்லும்போது, அதில் ஒரு கையறு நிலையும் ஆற்றாமையும்தான் தொனிக்கிறதே தவிர வேறெந்த தொனியும் தெரியவில்லை. நாடுமுழுக்க அலைந்து அழுது அல்லற்பட்ட அந்த மக்களுக்காக நிதி திரட்டியது எவ்வளவு பெரிய விஷயம்”  என்று சொல்லி மலைப்பாகப் பேசத் தொடங்கினார். முடிவாக “ஒரு கவிஞர் இப்படி மாற்றிச் சொல்லலாமா சார்?” என்று சொல்லிவிட்டு நாக்குச் சப்புக்கொட்டினார். புன்னகையைத் தவிர அவருக்குப் பதிலாகக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.

பொதுவாக மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு அவர் கிளம்பிச் சென்றுவிட்டார். நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்தைந்து ஆண்டுகள் பறந்துவிட்டன. நாம் காந்தியை இழந்தும் கிட்டத்தட்ட அதே அளவு ஆண்டுகள் கழிந்துவிட்டன. காந்தி அளவுக்கு உயர்வானவரும் நம் நேசத்துக்குரியவருமான ஒரு தலைவர் இன்னும் நம்மிடம் உருவாகிவரவில்லை. காந்தி உரைத்த அல்லது  எழுதிய கருத்துகளின் உள்ள உண்மையின் வலிமைதான் அல்லது அதைச் சகித்துக்கொள்ள இயலாமைதான் அவரைப்பற்றி மீண்டும்மீண்டும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசவைக்கின்றன. அன்று இரவு உணவுக்குப் பிறகு ராஜனின் புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். படிக்கப்படிக்க அந்தப் பயணக்காட்சிகள் என் கண்முன்னால் அசையத் தொடங்கின. 140 பக்கங்கள்மட்டுமே கொண்ட அந்தப் புத்தகத்தை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகங்களின் வரிசையில்தான் வைக்கவேண்டும்.

தீண்டாமைக்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. தீண்டாமை என்னும் தொற்றுநோய் ஒழியவேண்டும். தீண்டாமை ஒழிந்தால்தான் இந்துமதம் பிழைக்கும், மக்கள் பிழைப்பார்கள் என்று செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி.  பலர் மனம் அவரைப் பின்பற்றியது. சிலர் மனம் துடித்தது.  பல ஆண்டுகளாகப் பரவி, வேரூன்றிய கொடிய பழக்கம் வேரோடு ஆட்டம் கொடுத்தது. வேரும் ஒடிந்துவிட்டது. மரம் சிறுகச்சிறுகச் சாய்ந்துவருகிறது. காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட  சுற்றுப்பிரயாணம் சரித்திரத்தில் இடம்பெற்றது. இதைக் காந்தி சகாப்தம் என்றே சொல்லலாம். பின்வரும் சந்ததியர்களும் மறக்காமலிருக்கவேண்டி இச்சரித்திரத்தை நூலாக எழுதியிருப்பதாகத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ராஜன்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தன் சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டில் அடியெடுத்துவைத்தார் காந்தி. அதுவரைக்கும் காந்தியின் பயண ஏற்பாடுகளை இந்திய ஹரிஜன சேவா சங்கத்தலைவரான தக்கர் பாபா கவனித்துக்கொள்ள, கன்னியாகுமரியில் அவருடன் இணைந்துகொண்டார் ராஜன். ஒவ்வொரு நாளும் செல்லவேண்டிய ஊர்கள், கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகள், தங்கவேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் கச்சிதமாக வடிவமைத்ததில் ராஜனுக்குப் பெரும்பங்குண்டு. அதைத்தவிர காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசும் பணியையும் அவர் ஏற்றுக்கொண்டார். நாளொன்றுக்கு சராசரி நூற்றைம்பது மைல்களுக்குக் குறையாமல் பிரயாணம் செய்துகொண்டு, பத்து மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்துகொண்டு , ஓர் இரவு தங்கிய இடத்தில் மறு இரவு தங்காமல் காற்றைப்போல பறந்துகொண்டிருந்த காந்தியோடு அப்பயணம் முழுக்க இருபது பேர் இருந்தார்கள். குஜராத்தியர் ஒன்பதுபேர். தமிழர்கள் ஐந்துபேர். பெண்கள் மூவர். இந்துஸ்தானிகள் இருவர். ஜெர்மானியர் ஒருவர்.

சீனிவாச ஐயங்கார், வைத்தியநாத ஐயர், மாசிலாமணிப்பிள்ளை,  வீரபாகுப்பிள்ளை, அவிநாசிலிங்கம் செட்டியார், கிருஷ்ணசாமி ஐயங்கார், சாம்பசிவ ஐயர், ராஜாஜி, ஸ்வாமி சகஜானந்தர், கோடம்பாக்கம் கணேசன் போன்ற முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் பயண வழிகளில் இணைத்துக்கொண்ட ராஜன் மிக எளிய காங்கிரஸ் தொண்டர்கள் தாமாகவே மனமுவந்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளையும் முக்கியத்துவம் கொடுத்து இணைத்துக்கொண்டதையும் ஊக்கம் குன்றாமல் காந்தி அந்த இடங்களில் உரையாடியதையும் புத்தகம் முழுக்கப் பார்க்கமுடிகிறது.  குற்றாலம், தூத்துக்குடி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, மானாமதுரை, மேட்டுப்பாளையம், குன்னூர், கோயம்புத்தூர், போத்தனூர், திருச்சி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நாகை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், சென்னை என ஏராளமான இடங்கள்வழியாக காந்தியின் பயணம் தொடர்ந்தது.  ஒவ்வொரு இடத்திலும் காந்தியின் பயணம் ஒரு புதுவித அனுபவத்தைப் பெறுவதை சுவாரசியமாகக் குறிப்பிடும் ராஜனின் எழுத்தாளுமை பாராட்டுக்குரியது.

நாங்குநேரிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் ஏதோ ஒரு குக்கிராமம். வெறும் பத்து குடிசைகள் மட்டுமே உள்ள பகுதி அது. அந்த ஊரைச் சேர்ந்த தொண்டரின் வேண்டுகொளுக்கிணங்க காந்தியின் வாகனம் அங்கே நிற்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேரை அங்கே திரட்டி நிகழ்ச்சியில் பங்கெடுக்கவைக்கிறார் அந்தத் தொண்டர். எப்படித் திரட்டினாரோ என்று எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஹரிஜன சேவா நிதிக்காக தாராளமாகப் பணமுடிப்பு கொடுக்கிறார் அவர். வாகனம் செல்வதற்கு வசதியில்லாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த வேறொரு தொண்டர் தம் வசிப்பிடத்துக்கு காந்தி வருகை புரியவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒரே இரவில் இருநூறு மீட்டர் நீளத்துக்கு புதுமணல் பரப்பி ஒரு சாலையையே நிறுவி காந்தியை அழைத்துச் செல்கிறார். ”என் இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள் அவசியம் இல்லை. லட்சக்கணக்கில் செல்வமும் தேவையில்லை. உண்மையான மனிதன் ஒருவன் இருந்தால் போதும், அந்த ஒரு மனிதனின் செயல் இந்த உலகத்தையே வென்றுவிடும்”  என்று அடிக்கடி சொல்லக்கூடிய காந்தியின் வார்த்தைகளுக்கு விளக்கமாக அந்தத் தொண்டர்கள் வாழ்ந்துகாட்டியிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. ஏறத்தாழ எண்பதாண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தொண்டர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இப்போது எப்படி இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

காந்தியின் பிரயாண சமயத்தில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் குழுவைச் சேர்ந்த நாகை ராஜாராம் பாகவதர் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர் தன்னுடைய நாடகத்துக்கு காந்தி வரவேண்டுமென்றும் அப்படி வருவதாயிருந்தால் அன்றைய தினம் கிடைக்கும் தொகை முழுதும் ஹரிஜன இயக்கத்துக்கு அளித்துவிடுவதாகவும் சொல்லியனுப்பினார். முதலில் காந்திக்கு அதில் விருப்பமில்லை. ஆனாலும் பாகவதரின் குணநலன்களைப்பற்றியும் அவர் நடத்தும் நாடகங்களின் நோக்கத்தைப்பற்றியும் விவரமாக எடுத்துரைத்த பிறகு கோவை வரும் சமயத்தில் நாடகம் நடைபெறும்போது ஐந்து நிமிட அளவு நேரமொதுக்கி வருவதாக ஒப்புக்கொண்டார். அத்துடன், அன்றைய நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் முழுசையும் ஹரிஜன சேவை நிதிக்காகக் கொடுத்துவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார். ஒருநாள் வசூல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் என்கிற நிலையில் ஆயிரத்தைந்நூறு ரூபாயை ஹரிஜன சேவை நிதியின் கணக்கில் முன்பணமாகக் கொடுத்துவிடவேண்டும் என்றும் நிகழ்ச்சியன்று வசூலாகும் தொகையில் பாக்கித் தொகையை பீகார் நலநிதிக்குக் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பாகவதர் அவ்வாறே முன்பணம் கொடுத்தார். நந்தனார்  சரித்திர நாடகத்துக்கு காந்தி வருகை தருவார் என்று விளம்பரமும் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் நாடக அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார் காந்தி. துரதிருஷ்டவசமாக அன்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என்றாலும் அதைக் காட்டிகொள்ளாமல் காந்தியை கெளரவமான முறையில் வரவேற்று, நன்கொடை வழங்கி, உபசரித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார் பாகவதர்.

திருப்பூரில் கதர் வியாபாரிகள் சங்கத்தார் காந்தியைக் கண்டு தம் குறைகளை முன்வைத்தார்கள். கதர் விற்பனை குறைந்துபோனதைப் பற்றியும் மூலதனம் முடங்கிப்போனதைப்பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்கள். கதரின் திசையைநோக்கி வழிநடத்திய காந்திக்கு அவர்கள் வாழ்வுக்கு வழிசொல்லும் பொறுப்பும் இருக்கிறது என்பதுபோல அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. இதுவரை அகில இந்திய சர்க்கா சங்கத்தாரிடமிருந்து கிடைத்துவந்த உதவிகள் திடீரென நின்றுவிட்டதால் கதர் உற்பத்திக்கும் தொழிலுக்கும் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது  என்று முறையிட்டார்கள். நூல் நூற்பதையும் கதர் விற்பனையையும் முக்கியப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்தியிடமிருந்து ஆதரவான முடிவை எதிர்பார்த்து அவர்கள் அப்படிப் பேசினார்கள். அந்த எண்ணத்துக்கு மாறாக, அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை அலசி முன்வைக்கும் விதமாகப் பேசத் தொடங்கிவிட்டார் காந்தி. “இந்தியாவிலேயே முதன்முதலாக கதர் இயக்கத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு. அதிலும் திருப்பு தலைமை வகித்து இந்தியாவின் மற்ற பாகங்களுக்கெல்லாம் கதரை உற்பத்தி செய்து அளிக்கும் இடத்தில் இருந்தது. கதர்க்கு கிராக்கி அதிகமாகவே பல வியாபாரிகள் சீக்கிரமாகப் பணம் திரட்டிவிடவேண்டும் என்கிற ஆசையில் தொழில்முறையில் ஒழுங்கீனமாக நடக்கத் தொடங்கினார்கள். இதுவே சரிவுக்குக் காரணம். இதற்கிடையில் நாடு முழுக்க பல இடங்களில் சர்க்கா சங்கங்கள் உருவாகி கதர் உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திருப்பூர் கதருக்கு வரவேற்பு குறைந்துபோய்விட்டது.  மேலும் திருப்பூர் கதரில் பலவித ரகங்கள் இல்லை. மற்ற இடங்களில் சந்தைக்குத் தேவைப்படும் விதத்தில் கதர் உற்பத்தியில் மாற்றம் கொண்டுவந்து வெற்றி பெற்றார்கள். நீங்கள் அப்படி செய்வதில்லை. அதுவே உங்கள் தோல்விக்குக் காரணம்.  இந்திய சர்க்கா சங்கம் எவ்வளவு காலம் உங்களுக்கு உதவி செய்யமுடியும்? பத்து ஆண்டுகள் தொடர்ந்து உதவி செய்தபிறகுகூட நீங்கள் உங்கள் தொழிலை லாபகரமாகச் செய்யத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் வியாபாரத்துக்குப் பொருத்தமான்வர்கள் அல்ல என்றுதான் நான் நினைப்பேன். கால நிலையைக் கவனித்து சமயத்துக்கு ஏற்றமாதிரி துணிகளைத் தயாரித்து விற்பனை செய்தால் உங்கள் தொழிலுக்கு ஒருபோதும் இடையூறு நேராது” என்று உபதேசம் செய்து அனுப்பிவைத்துவிட்டார்.

பெண்களுகென்று பிரத்யேகமான கூட்டங்களும் இந்தப் பிரயாணத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிர்ப்பதைப் பார்க்கமுடிகிறது. ராஜபாளையம், விருதுநகர், மதுரை ஆகிய இடங்களில் அவை நடந்தன. அக்கூடங்களிலும் ஹரிஜன சேவைக்காகவும் பீகார் நலநிதிக்காகவும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. பல பெண்கள் தம் ஆபரணங்களைக் கழற்றி அங்கேயே தம் பங்களிப்பாக வழங்கினார்கள்.

தேவகோட்டையில் தீவிரமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிற நாட்டார் சமூகத்தினரில் முக்கியமான நூறுபேரைத் தேர்ந்தெடுத்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் கேட்பவர்  மனம் நெகிழும்படி பேசினார் காந்தி. “மலையாள நாட்டில் காணாத தீண்டாமை. தமிழ்நாட்டின் தொடாத தீண்டாமை. இந்தியா முழுதும் ஆலயம் நுழையமுடியாத தீண்டாமை. நாட்டார் நாடாகிய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடை அணியாத் தீண்டாமை. அங்கே நாட்டார் என்கிற குடிமக்கள் உயர்ந்த சாதி. ஹரிஜனங்கள் தாழ்ந்த சாதி. ஆண்மக்கள் இடுப்பில் முழத் துண்டுக்குமேல் கட்டக்கூடாது. மேலே துணி சட்டை போடக்கூடாது. குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக்கூடாது. பெண்மக்கள் மார்பில் துணி போடக்கூடாது. இவையனைத்தும் தீண்டாமைக்கு அறிகுறிகளாக உள்ளன. இவையெல்லாம் அகல நீங்கள்  பாடுபடவேண்டும்”  என ஆன்ம உணர்ச்சி, ஜீவகாருண்யம், தயை, தர்மநியாயம் அனைத்தையும் ஒருங்கே திரட்டி, சிறு குழந்தைகளுக்கும் புரியும்வகையில் முக்கால்மணி நேர அளவுக்கும் அதிகமாக ஹரிஜனங்கள் சார்பாகப் பேசினார். ஆனாலும் இறுதியில் அவர்கள் தம் வழக்கத்தை விடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தபோதிலும் தம் கருத்தை வலியுறுத்த காந்தி தயங்கவில்லை.

சிவகாசியில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலமணிநேரம் காத்திருந்து காந்தியின் உரையைக் கேட்டார்கள். அந்தக் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் குமாரசாமி ராஜாவின் கைவிரல் வைரமோதிரம் தொலைந்துபோய்விடுகிறது. விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மதுரையை அடைந்தபோது நள்ளிரவைக் கடந்துவிடுகிறது நேரம். வெகுநேரமாகக் காத்திருந்து கலைந்துபோன மக்கள் காந்தி வந்துவிட்டார் என்கிற செய்தியைக் கேட்டு மீண்டும் திரளாகச் சேர்ந்துவிடுகிறார்கள். தங்கியிருந்த சுப்பராயன் பங்களாவிலிருந்து வெளிப்பட்டு சிறிதுநேரம் காந்தி பேசியபிறகுதான் கலைந்து போனார்கள்.

காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சில சுவையானவை. தம்மைப் பார்க்கவந்த தொண்டர்கள் என்பதற்காக, அவர்கள் பிழைசெய்யும்போது காந்தி ஒருபோதும் சலுகை காட்டியதில்லை.  ஒவ்வொன்றையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தும் முனைப்புள்ளவராகவே எல்லாச் சமயங்களிலும் நடந்துகொண்டார். தூத்துக்குடிக்கு அருகில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் முப்பதாயிரம் பேருக்கும் மேலாக மக்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பகட்டான முறையில் விளக்கலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஆடம்பரத்தைக் கண்டு அவர் மனவருத்தம் கொண்டார்.   ஏழைப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த தொகையில் இப்படி ஆடம்பரமான முறையில் ஏற்பாடு செய்வது தவறு என்று சுட்டிக்காட்டினார். அவர்கள் கொடுத்த பணமுடிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட செலவுக்கான கணக்கைத் தான் உடனே பார்க்கவிரும்புவதாகச் சொல்லி, அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்தார். வசூலான தொகை இரண்டாயிரத்தறுநூறு ரூபாய். நிகழ்ச்சிக்கான செலவு ஐந்நூறு ருபாய். பாக்கி பணமுடிப்பாக வழங்கப்பட ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் கணக்கு விவரம் அவருக்கு வருத்தத்தையே அளித்தது. பொதுப்பணம் வசூலிப்பதைப்பற்றியும் சிக்கனமாகச் செலவு செய்வதைப்பற்றியும் அறிவுரைகளை வழங்கினார். விளக்கலங்காரத்தை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு மின்சார ஒப்பந்தக்காரர் இலவசமாகவே செய்து கொடுத்தார் என்று விழாக்குழுவினர் எடுத்துச் சொன்னபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஒப்பந்தக்காரரே நேரில் வந்து சொல்லவேண்டியதாயிற்று. பிறகுதான் அதை அரைமனத்தோடு ஏற்றுக்கொண்டார் காந்தி. பொதுப்பணத்தில் எப்போதும் இருபதில் ஒரு பங்கைமட்டுமே  செலவு செய்யவேண்டும் என்றும் ஐந்தில் ஒரு பங்கைச் செலவு செய்வதில் நியாயமே இல்லை என்றும் நேருக்கு நேர் சுட்டிக் காட்டிச் சொன்னார்.

கோடம்பாக்கம் கணேசன் நடத்திவந்த ஹரிஜனத்தொண்டைப் பற்றியும் சகஜானந்தர் நடத்திவந்த நந்தனார் பள்ளியைப் பற்றியும் அவற்றின்மீது காந்திக்கு உருவான அபிமானத்தைப்பற்றியும் இந்த நூலில் விரிவான அளவில் ராஜன் பதிவு செய்திருக்கும் பகுதி மிகவும் முக்கியமானது.

எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டாத ஒரு புத்தகம் தமிழ்நாட்டில் காந்தி. கண்ணால் பார்க்கமுடியாத ஒரு மாபெரும் தலைவர் நாம் வாழும் பகுதிக்கு வந்து சென்றிருக்கிறார், நம் மூத்த தலைமுறையினரிடம் உரையாடியிருக்கிறார் என்பதை இப்புத்தகம் வழியாக உறுதிப்படுத்திக்கொள்வது ஒரு விசித்திரமான அனுபவம்.

—————————————

Series Navigationதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
author

பாவண்ணன்

Similar Posts

27 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    நிகழ்வுகள் அவ்வப்போது பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான், நாளைய தலைமுறையினருக்கு நம் சரித்திரம் உண்மையாகப் போய்ச் சேரும். அந்த வகையில் திரு ராஜன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை இந்தக் கட்டுரை நமக்குக் கொடுத்திருக்கிறது. புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா? எந்தப் பதிப்பகம் போன்ற தகவல்கள் மேலும் நன்மை பயக்கும்.

  2. Avatar
    Indian says:

    As usual and as expected, Thinnai is being politically correct and does not publish my comments which are not offensive but unpalatable.Truth does that.
    Whom are you trying to please? The Congress wallahas? The Islamists? Or fear of your site being shut down?

  3. Avatar
    K A V Y A says:

    பீஹாரில் நிலநடுக்கத்தை கடவுள் அம்மக்களுக்குத் தந்த தண்டனை என்று காந்தி குறிப்பிட்டதாக ஒருவர் சொன்னதைத் தான் கேட்டதாகவும் அஃது உண்மையா என்று தன்னிடம் தன் நண்பர் வினவ, அவருக்குப் தான் பதில் சொனந்தாகவும் தொடங்குகிறார் கட்டுரையாசிரியர். பின்னர் நாமும் அப்பதில் என்ன என்று ஆவலாகப்படிக்கத் தொடங்குகிறோம். அப்பதிலை இவர் சொல்லாமல், ராஜன் என்ற காந்திகாலத்தவர் காந்தியுடன் தான் பெற்ற‌ அனுபவங்களைப்பற்றி எழுதிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி அதைப்பதிலாக தம் நண்பருக்குச் சொல்கிறார்.

    கட்டுரை அதோடு முடிந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்படி முடியுமிடத்திலேயே கட்டுரை நீண்டுவிட்டது. ஆசிரியர் மேலும் இழுத்து ராஜனின் பிற அனுபவங்களைச் சொல்லி, நூலின் விமர்சனமாக அமைத்து மிகவும் நீளமாக்கி விட்டார். பின்னூட்டமிட்ட திண்ணை வாசகர், எல்லாவற்றையும் மறந்து விட்டு ராஜனின் நூலில் நிலைத்துவிட்டார். எங்கே கிடைக்கும் அந்நூல் என்று கேட்கிறார். திண்ணையிலே புத்த‌க‌க்க‌டை வைத்துவிட்டால் ந‌ல‌ம்.

    ஒரு கட்டுரை ஒரு கருத்தை மையமாக வைத்தே தொடங்கி முடிந்தால் தெளிவாக இருக்கும். எல்லாவற்றையும் போட்டுக்குழப்பி விரவினால் அயர்ச்சியும் எரிச்சலும்தான் மிஞ்சும் வாசகருக்கு.

    பலபல செய்திகள் சொல்லப்படுகின்றன. எல்லாமே ஒரு கதாநாயகனின் கவர்ச்சியில் தன்னையிழந்த ஒரு இரசிகன் உணர்வுகளைப்போலவே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழனின் விதி. நிறகச்சொன்னால், குனிவான்; குனியச்சொன்னால் கும்பிடுவான்; என்ன செய்ய?

    காந்தி பீஹார் நிலநடுக்கத்தைப்பற்றிச் சொன்னதற்கு ராஜனினிடம் பதிலைத்தேடிய பாவண்ணனுகென்று சொந்தமாக எந்தக்கருத்தும் இல்லையா என்பது வியப்பாக இருக்கிறது. இல்லை ராஜனின் கருத்துதான் பாவண்ணனுடையதுமா ?

    நிறைய எழுதலாம். ஆனால் பல பின்னூட்டங்களாகும். அவை பற்றி இப்போது எழுதாமல் ஒரு கருத்தில் மட்டுமே தற்போது நிலைகொள்வோம். சொல்லுங்கள் வாசகர்களும் முயன்றால் நல்லது: /ஓரிடத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிகிறார்கள் இயற்கை நிகழ்வால்; சுனாமி, நிலநடுக்கம், பெரும்புயல், அல்லது இரயில் விபத்து. ஒரு பெரிய தலைவர் அதைப்பார்த்து, கடவுள் இவர்களுக்குத் தண்டனை கொடுத்துவிட்டார் என்கிறார். விளக்கம் கேட்டால், இவர்கள் தம் வாழம் போது தவறொன்றைச் செய்துவிட்டார்கள். எனவே கடவுள் கோபம் கொண்டு இவர்களை அழித்துவிட்டார்.//

    அந்த‌த் த‌லைவ‌ரை உண்மையில் உருவ‌மென்று போற்றுவோமா? சொல்லுங்கள் ப்ளீஸ்.

  4. Avatar
    K A V Y A says:

    // ஒரு நல்ல செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் கருணை என்றும் ஒரு மோசமான செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் சாபம் அல்லது கோபம் என்றும் சொல்வது வாய்வழக்கில் எப்போதும் இந்த மண்ணில் உள்ளதுதான். அப்படிப்பட்ட உணர்வின் அடிப்படையில்தான் ருஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சியைப் பராசக்தியின் கருணையாலும் கடைக்கண் பார்வையாலும் நிகழ்ந்த்தாகப் பாரதியார் குறிப்பிடுகிறார். அழிவை அதே பாரதியார் காளியின் ஊழிக்கூத்து என்று மனம் துடிக்க எழுதுகிறார். அப்படிச் சொல்வதும் எழுதுவதும் உலகவழக்குக்கு மாறானதல்ல என்று நாம் உணரவேண்டும்.”//

    இடி இடிக்கிறது கடுமையாக. குழந்தைகள் பேசிக்கொள்கின்றன: சாமியே அனுப்புகிறார் இடியை என்று. குஸ்டரோகிகளைக்கண்டு ஒதுக்கிவைத்தார்கள். தங்கள் கரும வினையை அனுபவிக்கிறார்கள் என்று. இப்படி வாழ்க்கையில் நொந்து வேதனையில் வாழ்பவர்களை ஈவு இரக்கமில்லாமல் கடவுளால் தண்டிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் சரி. எதுவரைக்கும் தெரியுமா? நீங்களே அக்கொடுமையை அனுபவிக்க நேரும்போது, அல்லது உங்கள் உற்றார் ஒருவர் அனுபவிக்கும்போது, எவராவது, ”இவன் என்ன பாவம் செய்தானோ அனுபவிக்கிறான்!’என்று உங்கள் காது படச்சொன்னால் எப்படியிருக்கும்? மூடநம்பிக்கைகளுள் இஃதொரு அபாயகரமான பாவகரமானச் செயல்.

    மருத்துவரும் அப்படிச்சொன்னால்? விஞ்ஞானிகளும் அப்படிச்சொல்லிவிட்டால்? மருந்தெங்கே? குணப்படுத்தலெங்கே? நிலநடுக்கம் எப்போது நேரப்போகிறது என்று இப்போது சொல்ல முடியாவிட்டாலும், எப்போதாவது சொல்ல முடியும்படி ஆராய்ச்சி செய்கிறார்கள். சுனாமி வருவதை முன்கூட்டியே கண்டு எச்சரிக்கிறார்கள். இவர்களெல்லாம் உங்களைப்போல காந்தி மாதிரி நம்பி இரக்கமற்ற சொற்களைப் பேசி நம்பிக்கொண்டிருந்தால் என்னவாகும்?

  5. Avatar
    K A V Y A says:

    //இந்த அருவியில் மற்றவர்களைப்போல குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அன்றைக்கு நான் குளித்துக்கொள்கிறேன். அவர்களுக்கில்லாத குளியல் எனக்கும் வேண்டாம்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.//

    பாவண்ணன் உணர்ந்துதான் எழுதுகிறாரா இல்லை குருட்டாம்போக்கில் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து நீர்வீழ்ச்சிகளைக்கொண்ட ஊர். தமிழகத்தில் பேர்போன சுற்றுலாவிடம். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன், அங்கே தலித்துக்கள் குளிக்ககூடாது. மற்ற ஜாதியினருக்குத்தான். இஃதொன்றும் வியப்பில்லை. ஊர் பொதுக்கிணற்றில் நீர் இரைக்கக்கூடாது. பொதுக்கோவிலுக்குள் நுழைய முடியாது. இப்போது மதுரை, நெல்லை, இராம்நாதபுரம் மாவட்டங்களில் நடக்கிறது இன்றும். அன்று இல்லாமிலிருந்திருக்குமா?

    காந்தியார் குற்றாலத்துக்குக் குளிக்கச்சென்றார். அப்போது அவரிடம் தலித்துகள் இங்கு குளிக்க அனுமதி கிடையாது. அவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று தெரிய‌ப்ப‌டுத்தினார்க‌ள்.

    உடனே காந்தி, அப்படியா? அப்படியானால், நானும் இங்கு குளிக்கவில்லை ! என்று அவர்களுக்கு அனுமதியோ அன்று நான் குளிப்பேன்””என்றாறாராம் பாவண்ணன் எழுதுகிறார்.

    உண்மையின் உருவம் என்ன செய்திருக்க வேண்டும்? இவனுக குளிச்சா அவனுகளுக்கு ஊத்திக்கிடுமோ ? பார்க்கத்தானே போறேன்” என்று பத்து தலித்துக்களை அழைத்து என்னுடன் வாருங்கள்; நாம் குளிப்போம்; எந்தப்புடுங்கி என்ன செய்துவிடுவான் என்று பார்ப்போம் ? என்று சொல்லியிருக்கவேண்டுமா வேண்டாவா? வைத்திய்நாதையர் செய்யவில்லையா?

    தென்னாப்பிரிக்கவில் வெள்ளையனை எதிர்த்து கறுப்பருக்கும் இந்தியவம்சாவளியினருக்காகவும் போராடத்தெரிந்த காந்தி, தமிழ் உயர்ஜாதியினரை எடுத்து போராடத் தெரியவில்லையா?

    தேவ‌கோட்டைச்செட்டிமாருட‌ன் காந்தியின் அனுப‌வ‌த்தை பாவ‌ண்ண‌ன் இப்ப‌டிச்சொல்கிறார்:

    //முக்கால்மணி நேர அளவுக்கும் அதிகமாக ஹரிஜனங்கள் சார்பாகப் பேசினார். ஆனாலும் இறுதியில் அவர்கள் தம் வழக்கத்தை விடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தபோதிலும் தம் கருத்தை வலியுறுத்த காந்தி தயங்கவில்லை.//

    அதாவ‌து அச்செட்டியார்க‌ள் தீண்டாமையைக்க‌டைபிடித்து த‌லித்துக‌ளை கீழாக‌ ந‌டாத்துவ‌தை, காந்தி அவ‌ர்க‌ளிட‌ம் கெஞ்சிப்பேசிப்பார்த்தாராம், ஒன்னும் முடிய‌வில்ல‌யாம்.

    என்ன‌ப்பா க‌தையிது?

  6. Avatar
    தங்கமணி says:

    ஏன் சுனாமி வந்தபோது, கிறிஸ்துவை கும்பிடாததால்தான் இந்துக்களை கிறிஸ்து அழித்துவிட்டார் என்று பிரச்சாரம் செய்து மதமாற்றம் செய்யமுனைந்தார்களே?

    இந்தோனேஷியாவில் சுனாமியில் முஸ்லீம்கள்கொல்லப்பட்டபோது, அவர்கள் அல்லாவின் கொள்கையை மறந்து கேளிக்கை விடுதிகள் நடத்தியதால்தான் அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டார் என்று முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்தார்களே?

    இவர்களெல்லாம் உண்மையின் உருவம் இல்லையா? :-)

    காந்தி கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்துக்களை, தீண்டாமையை வெறுக்க செய்யவேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கலாம். அவர் அவரது கடவுளை பரப்ப அதனை சொல்லவில்லை. ஒரு சமூக தீமையை தடுக்க அதனை சொல்லியிருக்கிறார். பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பதால் காந்தி உண்மையைத்தான் சொன்னார்.

    1. Avatar
      K A V Y A says:

      எவர் செய்தாலும் அது அபாயகரமான பாவச்செயல். எந்தக்கடவுள் பெயரைச்சொன்னாலும். குழந்தைகளைப்பறி கொடுத்து விட்டு பெற்றோர் துடிக்கிறார்கள். அவர்களிடம் போய், உங்களுக்கு இது கடவுளே கொடுத்த தண்டனையெனறால்? அந்தக்கடவுளுக்கே பொறுக்காது இந்தப்பாவிகளின் பேச்சு.

      குழ‌ப்ப‌மாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்.

      இரு க‌ருத்துக‌ள்: 1 ம‌னித‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளை அவ‌ர்க‌ளுக்குக் கட‌வுள் கொடுத்தாரென்ப‌து
      2. தீண்டாமையைக்க‌ண்டு ஒன்றும் செய்யாம‌ல் நான் குளிக்க‌ மாட்டேன் என்று சொன்ன‌து.

      த‌னித்த‌னியாக‌ப் பிரித்து எதைச் ச‌ரியாக‌ச் செய்தார் என்று சொன்னால் மேலே பேச‌லாம் த‌ங்க‌ம‌ணி. தெளிவாக‌ எழுத‌வும்.

  7. Avatar
    தங்கமணி says:

    காவ்யா,
    அது ஒரு புகழ்பெற்ற விவாதம். நீங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியம். ஒரு புறம் நேருவும், தாகூரும் நின்றுகொண்டு மறுபுறம் காந்தியை வைத்து விமர்சித்தார்கள்.
    ஏனெனில், அந்த பிகார் நிலநடுக்கத்தை, பிகாரிகள் தீண்டாமையை பின்பற்றுவதற்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னார்.
    தாகூர் காந்தியின் கருத்தை விமர்சித்து எழுதிய கட்டுரையை தனது பத்திரிக்கையில் முழுவதும் பிரசுரித்துவிட்டு, அதற்கு பதிலும் எழுதினார்.
    பேரழிவுகளுக்கு மனிதனின் ஒழுக்கவீனங்கள் ஒரு காரணம் என்று தான்கருதுவதாகவும், இருந்தாலும் அந்த கருத்துக்கு ஆதாரம் இல்லை என்றும் காந்தி ஒப்புகொண்டு எழுதினார்.

    1. Avatar
      Kavya says:

      But here, we dont go into what was his defence; and how it engaged the attention of the VIPs and the common ppl.

      We are here entering into the ethics of such statement that goes beyond personalities. Whihever his justification, the Statement is inhuman.

  8. Avatar
    புனைப்பெயரில் says:

    ஓராயிரம் நல்லது காந்தியால் நடந்திருக்கலாம்… ஆனால், சிலர் கண்ணுக்கு அது தெரியாது… ஒன்றிரண்டு சறுக்கல்கள் மட்டுமே தெரியும்…

    1. Avatar
      K A V Y A says:

      சறுக்கல்களை சறுக்கல்கள் என்று காந்தி பக்தர்கள் ஒத்துக்கொண்டால் பிரச்சினையேயில்லை.

  9. Avatar
    தங்கமணி says:

    //உண்மையின் உருவம் என்ன செய்திருக்க வேண்டும்? இவனுக குளிச்சா அவனுகளுக்கு ஊத்திக்கிடுமோ ? பார்க்கத்தானே போறேன்” என்று பத்து தலித்துக்களை அழைத்து என்னுடன் வாருங்கள்; நாம் குளிப்போம்; எந்தப்புடுங்கி என்ன செய்துவிடுவான் என்று பார்ப்போம் ? என்று சொல்லியிருக்கவேண்டுமா வேண்டாவா? வைத்திய்நாதையர் செய்யவில்லையா?

    //
    இதுமாதிரி டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு, ஜார்ஜ் புஷ் இப்படி செஞ்சது தப்பு, அவன் ஒரு வீணாப்போனவன் என்று பேசுவது போல பேசுவது எளிது.

    இறங்கி நின்று செய்வது கடினம்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி முயற்சிக்கிறார்கள்.

  10. Avatar
    K A V Y A says:

    //இதுமாதிரி டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு, ஜார்ஜ் புஷ் இப்படி செஞ்சது தப்பு, அவன் ஒரு வீணாப்போனவன் என்று பேசுவது போல பேசுவது எளிது. இறங்கி நின்று செய்வது கடினம்.//

    ஆனால் காந்தி தனக்கு வேண்டியயிடத்தில் செய்தார். தென்னாப்பிரிக்காவில் குஜராத்திகள் ஏராளமிருக்கக்கண்டார். அவரே ஒரு குஜராத்தி வியாபாரிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் வாதாடத்தான் போனார். அங்கே இந்தியவம்சாளியினர் – கணிசமான குஜராத்தியர் – கறுப்பர்களுடன் சேர்ந்து தீண்டாமையை (அபார்தீட்) அனுபவிக்கக்கண்டார். அவரின் குருதி துடித்தது.

    இங்கே தமிழ்நாட்டில் அவருக்குக் குருதி துடித்திரிந்தால், குற்றாலத்தில் குளிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கமாட்டார்; அங்கேயே,யாரடா அங்கே, எனக்கு இங்கேயே ஒரு பந்தல் போடு உண்ணாவிரதமிருக்க!’என்று கர்ச்சித்து, சாகும் வரை உண்ணாவிரதம், தமிழ் உயர்சாதியினர் தலித்துக்களை இந்த நீர்வீழ்ச்ச்சியில் குளிக்க அனுமதிக்கும் வரை! என்று மிரட்டல் விட்டிருந்திருப்பார். செய்யவில்லை. தேவகோட்டையிலும் செய்யவில்லை. ஏன்? மடலில் சொல்கிறேன்.

  11. Avatar
    Kavya says:

    //மலையாள நாட்டில் காணாத தீண்டாமை. தமிழ்நாட்டின் தொடாத தீண்டாமை. இந்தியா முழுதும் ஆலயம் நுழையமுடியாத தீண்டாமை. நாட்டார் நாடாகிய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடை அணியாத் தீண்டாமை. அங்கே நாட்டார் என்கிற குடிமக்கள் உயர்ந்த சாதி. ஹரிஜனங்கள் தாழ்ந்த சாதி. ஆண்மக்கள் இடுப்பில் முழத் துண்டுக்குமேல் கட்டக்கூடாது. மேலே துணி சட்டை போடக்கூடாது. குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக்கூடாது. பெண்மக்கள் மார்பில் துணி போடக்கூடாது. இவையனைத்தும் தீண்டாமைக்கு அறிகுறிகளாக உள்ளன. இவையெல்லாம் அகல நீங்கள் பாடுபடவேண்டும்//

    இப்படி தேவகோட்டையில் காந்தி சொன்னதாக பாவண்ணன் அல்லது ராஜன் சொல்கிறார்.

    கரிஷ்மா நிறைந்த மாபெரும் தலைவர். எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். வெள்ளைக்காரனை எதிர்த்தவர். அவரே சுதந்திர போராட்டத்தில் உச்சகட்டத்தில் தலைமை தாங்கி வெற்றியும் கண்டவர். உலக வரலாற்றில் நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.

    ஆனால், இவரால் தீண்டாமையைப்பற்றிப் பேசத்தான் முடிந்தது. தீண்டாமைக்குத் தலித்துக்ள ஆளாவதைத் தன்கண்முன்னாலே காணத்தான் முடிந்தது. செட்டியார்களையும், பார்ப்ப்னர்களையும், முதலியார்களையும், கவுண்டர்களையும், நாயுடுக்களையும் (கீழவெண்மனி புகழ்!) மற்றும் பல தமிழ் ஜாதியினர்களின் கடைபிடித்த இச்செயலை வெறும் சொற்களால் வறுபுத்துதத்தான் செய்ய முடிந்தது. (இவ்வரிகளைப்பாருங்கள்: //ஆனாலும் இறுதியில் அவர்கள் தம் வழக்கத்தை விடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தபோதிலும் தம் கருத்தை வலியுறுத்த காந்தி தயங்கவில்லை//)

    //கண்ணால் பார்க்கமுடியாத ஒரு மாபெரும் தலைவர் நாம் வாழும் பகுதிக்கு வந்து சென்றிருக்கிறார், நம் மூத்த தலைமுறையினரிடம் உரையாடியிருக்கிறார் என்பதை //

    என்று உணர்ச்சிவசப்படும் பாவண்ணனும் அவரைப்போன்றே உணர்ச்சிவசப்படும் மற்றவரும் ஏன் காந்தி வெறும் சொற்களை உதிர்த்துவிட்டு போய்விட்டார் என்ற கேள்விக்குப் பதில் சொல்லலாம்.

    என் பதில்: அவர் அவர்களைப் பகைக்க விரும்பவில்லை. தன்னலம் பொதுநலத்தை விழுங்கி விட்டது.

  12. Avatar
    இளங்கோ says:

    # காந்தி வெறும் சொற்களை உதிர்த்துவிட்டு போய்விட்டார் என்ற கேள்விக்குப் பதில் #…

    காவ்யா சொல்வதை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது..

  13. Avatar
    A.K.Chandramouli says:

    சபாஷ் காவ்யா. நீங்கள் உங்கள் பார்ம்க்கு வந்து விட்டீர்கள். அடுத்து காந்தி உயர் ஜாதியை சேர்ந்தவர் அதனால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வந்த இடத்திலேயே உட்கார்ந்து எவ்வளவு வருஷம் ஆனாலும் சரி பிரட்சினையை தீர்க்காமல் சென்று விட்டார் என்று கூறுங்கள். அதுதான் சரி. நான் உங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்.

  14. Avatar
    கோவை எம் தங்கவேல் says:

    காந்தியைப் பற்றி பேசியும், நினைவு கூர்ந்தும் என்ன ஆகப் போகிறது. இந்தியாவெனும் சுதந்திர நாட்டில் 65 ஆண்டுக்கும் மேலாக பசியும், பட்டினியும் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறது.

    ஆளும் ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்து உண்டு பெருத்து நெளிந்து கொண்டிருக்கிறார்களே? பழம் பெருமையைப் பேசிப்பேசி வீணாய் போனது மட்டும் தான் மிச்சம்.

    காந்தி போன்ற மனிதர்களுக்கு அக்கால சமூகம் கொடுத்த மரியாதையை ஊழல் அரசியல்வாதிக்கும், மக்களை ஏமாற்றிப் பிழைப்போருக்கும் இன்றைக்கு கொடுத்து வருகின்றார்களே? இப்படிப் பட்ட சமூகத்தில் காந்தி இனி செல்லாக்காசு !

    1. Avatar
      Kavya says:

      கட்டுரை ஒரு வரலாற்றைப்பற்றி அதாவது 40களில் நடந்தவை பற்றிச் சொல்கிறது. அக்காலத் தமிழகத்தைப்பற்றி நாம் இங்கு விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தமிழகம் வேறு; இன்றைய தமிழகம் வேறு.

      தயவு செய்து கட்டுரைப்பொருளைப்பற்றிப் பேசவும்.

  15. Avatar
    Dr.S.Soundarapandian says:

    மகாத்மா காந்தியை ‘உயர் ஜாதிக்காரர்’ என வருணிப்பது தவறு.ஜாதியைப் பார்ப்பவராக இருந்திருந்தால் ஏன் நீக்ரோக்களுக்காகத் தென்னாப்பிரிக்காவில் போரடவேண்டும்?தேவகோட்டைக்குப் பக்கத்து ஊரான காரைக்குடி எனது சொந்த ஊர்!காந்தி அங்கு அன்று பேசியதற்குப் பலன் கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும்!இன்று நாட்டார்களிடம் அப்படிப்பட்ட தன்மை எதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.நாமக்கல் கவிஞர் பாடியதுபோலக் கத்தியின்றிப் போராடியவரல்லவா காந்தி மகான்!துப்பாக்கியேந்திப் போராடியவர்கள் தமிழினத்தை எப்படி அழிக்க வழிவகுத்தனர் என்றுதான்அண்மையில் பார்த்தோமே?

    1. Avatar
      Kavya says:

      //மகாத்மா காந்தியை ‘உயர் ஜாதிக்காரர்’ என வருணிப்பது தவறு. ஜாதியைப் பார்ப்பவராக இருந்திருந்தால் ஏன் நீக்ரோக்களுக்காகத் தென்னாப்பிரிக்காவில் போரடவேண்டும்?//

      Dr !
      அவர் பனியா என்று எங்கும் நான் சொல்லவில்லை. அவர் தமிழ்நாட்டு உயர்ஜாதிக்கார்ர்களை எதிர்க்க முடியவில்லை என்பதுதான் சொல்கிறேன். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனை எதிர்க்க முடிந்த காந்தியால், தமிழ்நாட்டில் உயர்ஜாதி, இடை ஜாதியினரை எதிர்க்க முடியவில்லையே. ஏன்? உங்கள் ஊர்க்கார்ர்கள் அவர் சொல்லியும் கேட்கவில்லையென்றுதானே கட்டுரையை முடிக்கிறார் பாவண்ணன்?

      1. Avatar
        Kavya says:

        //தேவகோட்டைக்குப் பக்கத்து ஊரான காரைக்குடி எனது சொந்த ஊர்! காந்தி அங்கு அன்று பேசியதற்குப் பலன் கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும்!
        இன்று நாட்டார்களிடம் அப்படிப்பட்ட தன்மை எதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.நாமக்கல் கவிஞர் பாடியதுபோலக் கத்தியின்றிப் போராடியவரல்லவா காந்தி மகான்!துப்பாக்கியேந்திப் போராடியவர்கள் தமிழினத்தை எப்படி அழிக்க வழிவகுத்தனர் என்றுதான்அண்மையில் பார்த்தோமே?//

        டாக்டர் சார்!

        பாவண்ணன் 40 களில் காந்தியார் செயத தமிழ்நாட்டுப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறார். அன்று குற்றாலத்தில் குளிக்கத் தலித்துகளுக்குத் தடை என்றும் அறிகிறார் காந்தி. அங்கு மட்டுமன்று: தமிழகமெங்கும் தலித்துகள் மேல் தீண்டாமை எல்லா ஜாதியினராலும் தொடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால் அவர் எதுவும் செய்ய முடியவில்லை என்பது கட்டுரையில் இறுதியில் பாவண்ணன் நமக்குச் சொல்கிறார். அதற்கும் இன்றைய நிகழுகளுக்கும் என்ன தொடர்பு டாக்டர் சார்?

        Pavannan’s purpose is to extol Gandhi but he ends up in denigrating him w/o being aware of it. 
        உண்மையின் உருவம் என்பதற்குப்பதிலாக உருவத்தின் உண்மை வடிவம் என்றே தலைப்பிடப்பட்டிருந்திருக்க வேண்டும் !:-)

        சுதந்திரம் பெற்று வெகு நாட்கள் அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர்ந்தது. இன்னும் உண்டு. அப்படியே சில உயர்ஜாதியினர் அக்கொடிய பழக்கத்தை விட்டாலும், அது காந்தியால் என்றில்லை. வேறுபலரால் என்பதே என் கருத்து.

        காந்தி 40 ல் சொன்னார்; நாங்கள் 80 ல் விட்டோமென்றா சொல்கிறீர்கள்? அன்றே ஏன் விடவில்லை? This is the respect you gave him then?
        அன்று நாங்கள் மோசம். காந்தி சொல்லியும் கேட்கவில்லை. இன்று நாங்கள் திருந்தி விட்டோம் என்றால் –

        இன்று காந்தியில்லை. பின் உங்களைத் திருத்தியவர் ஆரார்?

  16. Avatar
    K A V Y A says:

    நீங்கள் கொடுத்த உயர்ஜாதி அடையைத்தள்ளி வைத்துவிட்டு, நான் கொடுத்தவைகளைப் படியுங்கள்;

    கரிஷ்மா charisma நிறைந்த மாபெரும் தலைவர். எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். வெள்ளைக்காரனை எதிர்த்தவர். அவரே சுதந்திர போராட்டத்தில் உச்சகட்டத்தில் தலைமை தாங்கி வெற்றியும் கண்டவர். உலக வரலாற்றில் நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.”

    இவ்வடைகளுக்குளடங்கியும் இவர் சொல்லப்படுகிறார்.

    உயர்ஜாதியினர்தான் இவரின் தமிழக சுற்றுப்பிரயாணத்தின் ஸ்போன்ஸோர்ஸ். மேலும் இவர் ஜாதீயக்கொள்கைகளுக்கு ஆதிமூலமான‌ வருணாஷரமத்தை சுப்பிரமணிய பாரதியாரைப்போல கட்டிப்பாதுக்காக்க வேண்டுமென நினைத்து வாழ்ந்தவர். பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்னும் பொருள்படி தஞ்சாவூரில் இவராற்றிய உரைப் புகழ் வாய்ந்தது.

    வருணங்கள் இருக்கவேண்டும். ஆனால் சாதிகள் இருக்கக்கூடா. இதையே திண்ணைக்கட்டுரையொன்றில் ஒரு எழுத்தாளர் சொன்னார் வேறுவிதமாக: சாதிகள் அவசியம். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் வேண்டா. சாதிகள் என்றால் சமம் என்றால் ஏன் தீண்டாமை? என்று கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை இந்த மூவரும்.

    காந்தி தீண்டாமை ஒழிப்புக்கு தமிழக‌த்தில் செய்தது உதட்டளவுப்பேச்சே. (lip service_ வேறொன்றும் இல்லை. தலித்துகள் மேல் தீண்டாமை பார்ப்ப்னரமட்டுமன்றி, மற்றெல்லா உயர், இடை, கடை ஜாதியினர் வீசினார்கள். அவர்களையெல்லாம் பகைக்க முடியுமா? அவர்களைப் பகைத்துக்கொண்டு, தலித்துகளுக்கு சமூக நீதி கொடுத்தால், சுதந்திரப்போராட்டம் என்னவாவது?

    திருனெல்வேலியில் பிள்ளைகளையும் மதுரையில் தேவர்களையும் கோவையில் கவுண்டர்களையும் எதிர்த்து உங்களால் ஏதாவது செய்யமுடியுமா சந்திரமவுளி? சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். இவர்கள் மூவரும் தீண்டாமையில் திளைத்து வாழ்ந்தவர்கள். தூத்துக்குடி சைவசித்தந்த சபையின் ஆண்டுவிழாவில் நடந்த பொது போஜனத்தில் அனைவருக்கும் பந்தி. தலித்துகளுக்கு மட்டுமில்லை. அவர்க்ளும் பிச்சைக்காரர்களும் ஒன்றாக வெளியே நிறுத்தப்பட்டார். அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச்சென்ற மறைமலை இதைக்கண்டு கொதித்த எழுதிய கட்டுரையை, ”சாதிகளும் சழக்குகளும்” நூலில் காண்க. சைவ சித்தாந்தம் என்றாலே சைவப்பிள்ளைகள்தான். மதுரை ஆதினம் சாதிச்சர்டிப்கேட்டை எடுத்து காட்டவில்லையா நிருபர் கூட்டத்தில் மதுரையில்?

    இன்றும் தீண்டாமையை விரும்புகிறார்கள் என்பது அவ்வப்போது வரும் செய்திகளில் அறியக்கிடப்பது. இவர்களைப் பகைக்க முடியுமா நம்மால்? தமிழகமே உயர் ஜாதியினரின் கைகளில்தானே? காந்தியால் முடியுமா? போன மாதம் ஒரு அருந்ததி ஜாதியார் தமிழக சட்டசபை சபாநாயகராகி இருக்கிறார். உண்மையின் உருவத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொய் உருவம் என்று வருணிக்கப்படும் ஜெயலலிதா செய்து காட்டியிருக்கிறார். செருப்புத்தைப்பவர், மலம் அள்ளும் தொழிலைச்செய்தவர் வம்சாவளியில் வந்த ஒருவரை இன்று, மஹா கனம்பொருந்திய சபாநாயகர் அவர்களே என்று விளிக்கும் நிலை இன்று. காந்தியார் இருந்திருந்தால் நடந்திருக்குமா?

    பாவண்ணன் முரணாகச்சொல்கிறார் இக்கட்டுரையில். சுதந்திரத்துக்குத் தடை தீண்டாமை என்று காந்தி கருதினாரென்று. உண்மையில் தீண்டாமை ஒழிப்பை கையிலெடுத்து ஆவேசமாக எடுத்துப் போராடியிருந்தாரென்றால், பிரிட்டிசார் இன்றும் இருந்திருப்பார். ஏனெனில் உயர் ஜாதியினரை அவர்கள் நன்றாகக் கவனித்துக்கொண்டுவர, இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால், அவர்கள் வெள்ளை ஆட்சியை எதிர்க்கவேண்டியதாயிற்று. காந்தி அவர்களுக்கு உதவினார் என்பது ஒரு சாரார் கருத்தாகும். அக்கருத்தை உறுதி செய்கிறார் பாவண்ணன் தன்னையறியாமலே என்பது என் புரிதல்.

  17. Avatar
    A.K.Chandramouli says:

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஜாதி வேற்றுமையைப் பற்றி கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கப் போகிறீர்கள். உங்களின் கவலை சமுதாய உணர்வுள்ளவர்கள் எல்லோருக்கும் இருக்கிறது.அதை இத்தனை ஆண்டுகளாக பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் இதுபோன்ற பின்நூட்டங்களிலேழுதியும் வருவதைத் தவிர உருப்படியாக என்ன செய்தோம் . இதுபோல் எழுதுவது மூலமாக இருவருக்கும் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகும் இடைவெளியைக் குறைப்பதற்கு உர்ப்படியான செயல் திட்டம் கொடுங்கள். நீங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் வசைபாடி தீர்த்து விட்டீர்கள்.இப்போது காந்தியும் மாட்டிக் கொண்டார். ஒவ்வொருவரிடத்திலும் குற்றம் கண்டு பின்னூட்டம் இடுவதனால் என்ன பலன். ஆக்கபூர்வமான செயல் திட்டம் கொடுக்கப் பழகுங்கள்.

  18. Avatar
    Sanjeevi says:

    K A V Y A

    <>

    பள்ளி பருவத்திலேயே காந்தி பற்றி படித்து அவர்தான் எனக்கு பெரிய inspiration . நான் வன்முறையை ஆதரிப்பவனாக இல்லாமல் இருப்பதற்கு அவர் ஒரு பெரிய காரணம். இன்று காந்தியில்லை, இப்போ சொல்லுங்கள் எனக்கு inspiration ஆராம்.

    எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொன்னது போல் தீண்டாமையை ஒழிக்க அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களிடம் பேசினார், காந்தி அவர்களை தாழ்த்தியவர்களிடம் பேசினார். ஒருவர் ‘தாழ்ந்து போகாதே, அடங்க மறு ‘ என்று பேசுகிறார் இன்னொருவர் ‘தீண்டாமை பாவம் அப்படி செய்யாதீர்கள்’ என்கிறார். நோக்கம் ஒன்று ஆனால் தொனி வேறு வேறு. காந்தி மனமாற்றமே முக்கியம் என்று நினைக்குறார் (நானும்).

  19. Avatar
    Sanjeevi says:

    K A V Y A

    இந்தியா அப்போது எப்படி இருந்தது என்று எண்ணிப்பார்கக வேண்டும். பயணங்கள் எவ்வளவு கடினமானது?. அதனுடனஒப்பிடும்போது இந்தியா எவ்வளவு பெரியது?. நீங்கள் சொல்வது போல் காந்தி ஒவ்வொரு இடத்திலும் செயல்பட வேண்டும் என்றால் 100 காந்திகள் குளோனிங் முறையில் செய்து வெளியிடப்பட்டிருக்க வேண்டும்

  20. Avatar
    இராட்டை says:

    பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம் இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான் நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.”

    ““என்னைப் பொருத்தமட்டில்பீஹார் பேரழிவிற்கும் தீண்டாமை எதிர்ப்புப் பிரசாரத்திற்கும் இடையில் ஒரு வலிமையான தொடர்பு உள்ளது. பீஹார் பேரழிவு என்பது நாம் யார், இறை என்பது எத்தகையது என்பன குறித்த ஒரு உடனடியானதும் அதிர்ச்சியளிப்பதுமான ஒரு நினைவூட்டல் மட்டுமே; ஆனால் தீண்டாமை என்பதோ நூறாண்டு நூறாண்டு காலமாக நமக்குக் கையளிககப்பட்டு வந்துள்ள ஒரு பேரழிவு. இந்து மனிதாபிமானத்தின் ஒரு பகுதியை நாம் அலட்சியம் செய்ததன் மூலம் நாம் நம்மீதே இட்டுக்கொண்ட சாபம் அது.பீஹார் பேரழிவு உடலைத்தான் அழித்தது.; தீண்டாமை மூலமாக நம்மை வந்தடைந்த பேரழிவோ ஆன்மாவையே உளுத்துப் போகச் செய்கிறது. எனவே, இன்னும் இந்த ஆன்மா விடுவதற்குச் சிலமூச்சுகளே இருக்கும் நிலையில், தீண்டாமை என்கிற பாவத்திலிருந்து நாம் நம்மைத் தூய்மை செய்துகொண்டு, தூய இருதயங்களுடன் நம்மைப் படைத்தவனை அணுக வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த பீஹார் பேரழிவு அமையட்டும்”

    – Harijan, 2-2-1934, and The Hindu, 26-1-1934

    மேலும் படிக்க >> பீகார் பூகம்பமும் காந்தியும் http://on.fb.me/150NO0X

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *