எடை மேடை

This entry is part 23 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தன்னைத்தானே நீதிமானாகக்
கற்பித்துக் கொள்ளும் ஒருவன்
பார்க்கும் அனைத்தையும்
எடையிட்டுக் கொண்டிருக்கிறான்.

கடந்து செல்லும் ஒரு பெண்ணை
உற்று நோக்குகிறான்.
அவள் திரும்பப் பார்த்தால்
மகிழ்வடைகிறான்.
பிடித்தமானவள் என்றோ
உத்தமி என்றோ
குறியீடு இடுகிறான்.

அவள் அசட்டையாய்க்
கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள்
வேறு யாரையும் நோக்கிப்
புன்னகைத்தால் அவன் கணிப்பில்
வேசையாகிறாள்..

குழந்தையைப் போலக்
கடக்கும் சிலரை என்ன செய்வது
என்று தெரியவில்லைஅவனுக்கு..
அதுபோல் அவனைக்கண்டு
வினையற்றுக் கடக்கும்
அவனுடைய மனைவியையும்..

அதிர்ச்சியடையும் அவன்
கணிக்கும் கண்களை மூடி
தன்னை ஆராயத் துவங்குகிறான்
தன்னைப்போன்ற பிம்பத்தை.,
அதன் கணிப்புகளை அவதானத்தை

அதன் அலட்சியத்தை.
அதன் கர்வத்தை .,போக்கை
அந்த எடையிடலை., சுமத்தலை..
யாராக இருக்கிறோம் அந்த தருணத்தில்
என எண்ணும்போது உள் மறைகிறான்.
எடைமேடையும் காலியாகிறது.

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)ஒரு விதையின் சாபம்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *