எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)

This entry is part 28 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)

‘ஆர்வி’ என்கிற – 1950 -80 களில் பிரபலமாக விளங்கிய திரு ஆர்.வெங்கட்ராமன் என்கிற எழுத்தாளரை இன்றைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ‘கலைமகள்’ ஆசிரியர் குழுவில் முக்கிய உறுப்பினரான அவர் அற்புதமான ‘கதை சொல்லி’. ‘சுதேசமித்திரன் வார இதழி’ல் அவர் எழுதிய ‘கனவு மயக்கம்’ தொடர்நாவலையும், தனி நூலாக வந்த திரை உலகப் பின்னணியில் அமைந்த ‘திரைக்குப்பின்’, ‘யுவதி’ மற்றும் வரலாற்று நாவலான ‘ஆதித்தன் காதல்’ போன்ற ரசமான படைப்புகளையும் என்னைப் போன்ற அன்றைய வாசகர்கள் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறவாமல் அசைபோடுவதே அவரது எழுத்தின் பெருமைக்குச் சான்றாகும். அவரது நாவல்களைப் போலவே அவரது குறுநாவல்களும் சிறுகதைகளும் திகட்டாதவை.

கலைமகள் நிறுவனம் 1950ல் துவங்கிய ‘கண்ணன்’ என்கிற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, இருபதாண்டுகளுக்கு மேலாகப் பல சாதனைகளை நிகழ்த்தியவர் ஆர்வி. இன்று பிரபலமாக விளங்கும் ‘அம்பை’, ஜோதிர்லதா கிரிஜா, ஜே.எம்.சாலி, ‘ரேவதி’ என்கிற ஹரிஹரன், லெமன், காலம் சென்ற புவனை கலைச்செழியன் போன்றவர்கள் அவரால் உருவானவர்கள்தாம். 70களில் எனது சிறுகதைகளையும், நான் எடுத்த புகைப்படங்களையும் ‘கண்ணனி’ல் வெளியிட்டு, குழந்தை எழுத்தாளராகவும் என்னை உற்சாகப்படுத்தியவர். அதன் மூலமாகத்தான் ஆர்வியுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

நான் சென்னை செல்லும் போதெல்லாம் தவறாமல் சந்திப்பவர்களில் அவரும் ஒருவர். சந்திக்கும் போதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர் என்று அலட்சியப்படுத்தாமல் பாசத்துடன் வரவேற்றுப் பேசுவார். என் நண்பரும் சக தலைமை ஆசிரியருமான திரு.புவனை கலைச்செழியன் எனது மாவட்டக்காரர் என்பதால் அவரைப்பற்றி ஒவ்வொரு தடவையும் அக்கறையுடன் விசாரிப்பார். அதே போல என் நண்பரைப் பார்க்கும் போதும் என்னைப் பற்றி விசாரிப்பார். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர் போன்று இளம் எழுத்தாளர்களிடம் பாசம் காட்டிய பத்திரிகை ஆசிரியர் வேறு யாரையும் நான் கண்டதில்லை.

பின்னாளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ‘கண்ணனை’ வளர்த்த அவர், நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்த் விலகினார். அவருடன் ‘கண்ணனு’ம் நின்று போயிற்று. குழந்தை இலக்கியத்தின் ஒரு மறக்க இயலாத சகாப்தமாய் இன்றும் நினைவில் இருக்கும் ‘கண்ணன்’ நின்று போனது குழந்தைகளுக்கும், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரும் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

‘கண்ணனி’லிருந்து விலகிய பின் அவர் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பிறகு ஒரு முறை சந்தித்தேன்.1993ல் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நானும் சென்னை செல்வது குறைந்து போனதால் அவரது தொடர்பு விட்டுப் போயிற்று.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் தொடர் கொள்ள, ‘கலகி’ பத்திரிகை மூலம் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. ‘பாலம்’ என்கிற அறிவிப்பின் மூலம் வாரந்தோறும் பலரும் தம் விருப்பங்களைத் தெரிவித்து, சம்பந்தப்படடவர்கள் பதிலளிக்கும் ஒரு நல்ல ஏற்பாட்டை’கல்கி’ செய்து வந்தது. அதில் ஒரு வாரம் ஆர்வி அவர்கள, பல ஆண்டுகளுக்கு முன் ‘வானதி பதிப்பகம்’ வெளியிட்ட தனது ‘ஆதித்தன் காதல்’ நாவலை மறு பிரசுரம் செய்ய, அதன் பிரதி தன்னிடமோ பதிப்பகத்தாரிடமோ இல்லாததால் அதனை தனது ரசிகர்கள் யாரேனும் வைத்திருந்தால் கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதிர்ஷ்டவசமாக என்னிடம் அந்த நாவல் இருந்தது. ஆர்விக்கு நன்றிக் கடனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி இருந்த எனக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. உடனே ஆர்வி அவர்களுக்கு எழுதினேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. பிரதி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்று இருந்த நிலையில் அது கிடைத்து இருப்பதோடு அதுவும் அவரது அன்பர்களில் ஒருவனான என் மூலம் சாத்தியமாகி இருப்பதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து, பிரதியை அனுப்பித் தருமாறும், மறுபிரசுரமானதும் புதிய பிரதி ஒன்றினை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுதினார். நானும் உடனே அனுப்பினேன். சில மாதங்களுக்குப் பிறகு ‘வானதி பதிப்பகம்’ மறுபிரசுரமான ‘ஆதித்தன் காதல்’ நாவலின் பதிய பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தது. அதன் பிறகு ஆர்வியிடம் தொடர்பில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகு, நண்பர் ‘ரேவதி’ மூலம் எண்பதாண்டு நிறைவுக்குப்பின் ஆர்வி அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து மனம் கனக்க அவருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். 0

வே.சபாநாயகம்.

.

Series Navigationவெறுமைசகிப்பு
author

வே.சபாநாயகம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    டோண்டு ராகவன் says:

    ஆர்வி அவர்கள் கண்ணனில் உருவாக்கிய அசட்டுப் பிச்சு, குண்டுச்சீமா, லீடர் மணி ஆகியோரை நான் மறவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    1. Avatar
      singaravelan says:

      அசட்டுப் பிசசு – comics-a rathnabala -vil padichiruken. the character hails from tiruchy in the comic story.

      Vaa! nostalgia – ipothu antha comics-lam kidaikuma – so that i can read/enjoy along with son and daughter.
      Mr. Dondu can you help

Leave a Reply to டோண்டு ராகவன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *