என்னைப் பற்றிய பாடல் – 23

This entry is part 10 of 29 in the series 23 ஜூன் 2013

(Song of Myself)

என்னுரிமைத் தோழன்

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்


தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

நீ யாரென நான் கேட்ப தில்லை

எனக்கது முக்கிய மில்லை

எதுவும் செய்ய இயலா தவன்

ஏதேனும் தன்னிடம் இல்லா தவன்

ஆயினும் உன்னை

என்னுள் ளத்தின் உள்ளே வைத்துப்

பின்னிக் கொள்வேன் !

பருத்திக் காட்டு கடும் உழைப்பு

அல்லது

கழிப்பறைச் சுத்தப் பிழைப்பு

ஊழிய னுக்கு

வலது கன்னத்தில் சாய்ந்து

குடும்ப உரிமையில்

ஓர் முத்தம் கொடுப்பேன்.

அடுத்தென் ஆத்மா விடம்

உரைப்பேன் வாக்குறுதி ஒன்று !

ஒருபோதும் நான் அவனைக்

கைவிடப் போவ தில்லை !

 

 

கருத்தரிக்க ஏற்புடைய

காரிகை யோடு

சுறுசுறுப்பு மதலைகள் உருவாக்க

விரைவாக முனைவேன் !

மரணப் படுக்கையில் மீளாத

மனிதன் ஒருவனின்

படுக்கைத் துணி சுருட்டி

அறைக் கதவைத் தாழிடுவேன்

மருத்துவனும்

மதப் பாதிரியும் வெளித் தள்ளி !

கவிழ்ந்து விழும் மனிதனைக்

கை தூக்கி விடுவேன்

மேலே

எதிர்ப்பிலா வலுவோடு !

 

 

எல்லாம் இழந்தவனே !

என் உதவி உனக்குண்டு !

இறைவன் பரிவில்

உனக்கில்லை ஒரு வீழ்ச்சி !

ஏற்றிக் கொள்

உன் பாரம் முழுதும்

என் தோள் மீது !

ஓய்வெ டுத்துக் கொள் !

நானும் அவனும்

உன்னருகில் இரவு முழுதும்

உறங்கா திருப்போம் !

ஐயமில்லை

நோய் எதுவும் தாக்கா துன்னை

உன்னைத் தழுவினேன்

என்னுரிமைத் தோழனாய்.

பொழுது புலர்ந்து நீ

விழித்தெழும் போது உனக்குப்

புரியும் நான்

உரைத்த தெல்லாம்

சரியென்று !

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 18, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !காரைக்குடி கம்பன் கழகம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய.செல்லப்பா says:

    ‘புல்லின் இதழ்கள்’ என்ற பெயரில் வால்ட் விட்மனின் கவிதைகளை ச.து.சு.யோகியார் மொழிபெயர்த்துள்ளதாக ஞாபகம். (ஐம்பது வருடங்களுக்கு முன்பு). உங்கள் மொழிபெயர்ப்பு சுவையாக இருக்கிறது.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply to கவிஞர் இராய.செல்லப்பா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *