பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.

This entry is part 1 of 10 in the series 29 ஜூலை 2018

இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை.
இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை.
இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை.
இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை.

எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை.
எந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து.
எந்த தொலைவண்டியும் கவிழவில்லை.
எங்கும் துப்பாக்கிச் சூடு இல்லை.

எப்படிப் பொங்கி வரும் கவிதை?

நடிகன் வாய்ப்புக் கொடுத்தால் இக்கால நாயகன்.
அரசியல் தலைவனோ , எழுத்து விற்பனை மாயவனோ
பணம் பண்ண வழி செய்தால் அவனும் இந்த யுக நாயகன்.
அடுத்த நாயகன் வரும்வரை
செய்திக் கவிதைகள்
பட்டியல் கவிதைகள்
சிறப்புக் கவிதைகள்
மறுப்புக் கவிதைகள்.
சினிமாக் கவிதைகள்

இப்படிப் பொங்கி வரும் கவிதை.

கவிதையாய் இல்லையென்றால் என்ன
கைவசம் உள்ள கசடுகள்
புகழ்ந்து தள்ளினால்
நானும் பெருங்கவிஞன்.

கவிதை வேஷம் கட்டி துக்கம் கொண்டாடும்
ஆனால்

கட்சி விசுவாசம் காசுக்கு வழி
என்ற சந்தோஷம் வழிந்தோடும்.
எந்த
காத்திருப்பும் கவிதைக்காக அல்ல.
—-

Series Navigationதொண்டைச் சதை வீக்கம்
author

மஞ்சுளா நவநீதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *