ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8

This entry is part 35 of 42 in the series 29 ஜனவரி 2012


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“நானிந்த இழிந்த ஆடையில் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று நினைப்பீரா ?  சல்வேசன் அணி உடையை மிடுக்காக உடுத்திய நானிந்தச் சாதா உடையில் எப்படி நடமாடி வருவேன் ?  நீங்கள் என் கோலத்தை மாற்றி விட்டதை உணர வில்லையா ?  நேற்று ஓர் மனித ஆத்மாவின் விழிப்பு என் கையில் இருந்தது !  அவரது பாழான வாழ்விலிருந்து அவருக்கு விடுதலை என்னால் அளிக்க முடிந்தது !  உமது கொடைப் பணத்தை நாங்கள் ஒப்புக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் மதுக் குடிப்புக்கும் மன மயக்கத்துக்கும் அடிமை ஆகி விட்டார் ! (அழுத்தமாக) அதற்கு நான் உங்களை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை !  என் கைப் பொம்மையை உமது இரும்புப் பீரங்கி தகர்த்தால், நான் உம்மை மன்னித்து விடலாம் ! எனக்கொரு குழந்தை இருந்து அதன் உடலை உமது வெடி மருந்து நொறுக்கிச் சிதைத்தால் நான் உம்மை மன்னிக்கலாம் !  ஆனால் ஓர் ஆத்மாவை என்னிட மிருந்து பிரித்து அதை ஓர் ஓநாயின் ஆத்மாவாக மாற்றினால் நான் உம்மை மன்னிக்க போவதில்லை ஒருநாளும் ! அது மாபெரும் படுகொலை செய்வதை விடக் கொடுமை யானது !”

பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)


மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

 

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

 

நாடக உறுப்பினர்:

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(மூன்றாம் அங்கம்)

அங்கம் – 3 பாகம் – 8


இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  மேடம் பிரிட்டினியின் மாளிகை.

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.

அரங்க அமைப்பு :  மேடம் பிரிட்டினி முன்னறையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள்.  இரண்டாம் மகள் சாரா நாற்காலியில் அமர்ந்தொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.  மூத்த மகள் பார்பரா சல்வேசன் ஆர்மி உடுப்பணியன்றி சாதாரண வீட்டு உடை அணிந்து கவலையோடு உலவி வருகிறாள். சாராவின் காதலன் சார்லெஸ் லோமாக்ஸ் உள்ளே நுழைகிறான்.  சார்லஸ் அணி உடுப்பில்லாத பார்பராவை நோக்கி ஏன் அணியவில்லை என்று கேட்கிறான்.  சல்வேசன் ஆர்மி பொதுக்கூட்டத்தைப் பற்றி உரையாடுகிறார்.  அப்போது பீரங்கி தொழிற்சாலை அதிபர் ஆன்ரூ அண்டஷா·ப்ட் வருகிறார்.  ஆன்ரூவுக்குப் பிறகு அவரது பீரங்கித் தொழிற்சாலையை யாரிடம் விட்டுச் செல்வது என்ற பிரச்சனை எழுகிறது.  தாய் வற்புறுத்தியும் ஏற்காமல் மகன் ஸ்டீ·பன் தனக்கு அப்பதவி வேண்டாம் என்று ஒரே சிந்தனையில் தள்ளி விடுகிறான்.  பாரபரா, ஸாரா, சார்லஸ், அடாப்·பஸ் அடுத்த நாள் பீரங்கித் தொழிற்சாலைக்கு விஜயம் செய்யப் போவதாக முடிவு எடுக்கிறார்.

(முன்வாரத் தொடர்ச்சி)

ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்:  பார்பரா கண்மணி !  பீரங்கித் தொழிற்சாலை இருக்குமிடம் வெகு சுத்தாமான எழில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிற்றூர்.  உனக்கு மிகவும் பிடிக்கும் !  நீ அங்கு வருவாய் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அடால்·பஸ்:  குறிப்பாக அதன் அருகில் வழிபட மெதாடிஸ்ட் கிறித்துவ ஆலயம் ஒன்று கூட அமைந்துள்ளது.

ஆன்ரூ:  ஒன்றில்லை கண்மணி இரண்டு தேவாலயங்கள் உள்ளன.  ஒன்று பழையது அடுத்தது புதியது.  இரண்டுக்கும் ஏராளமாய் என் வெடி மருந்து விற்பனைக் கொடை அளிக்கிறேன்.  அத்துடன் ‘ஒழுக்க நெறிக் குழுவகம்’ ஒன்றும் உள்ளது.  ஆனால் அதற்கு அந்தப் பகுதியில் யாரும் ஆதரவு தருவதில்லை.  காரணம் அவர் அழுத்தமான மதவாதிகள்.  நாத்திகர், அக்நாத்தியர் அருகில் வசிப்பது என் வெடி மருந்துக் கிட்டங்கிக்குப் பாதுகாப்பில்லை என்று எனக்கு எச்சரிக்கை செய்கிறார்.

அடால்·பஸ்:  ஆயினும் அவர் உமக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை அல்லவா ?

பார்பரா:  அப்பா !  அவர்கள் உமது கட்டளைகளுக்கு அடிபணிவாரா ?

 

ஆன்ரூ:  நான் யாருக்கும் ஆணை இடுவதில்லை பார்பரா கண்மணி ! நான் சொல்வ தெல்லாம் இதுதான்.  “ஜான் ! உன் குழந்தை நலமா ?  உன் மனைவி நோயிலிருந்து குணமாகி விட்டாளா ?”  அவரது பதில் “ஓ மிக்க நலம் அருமைக் கோமானே ! நன்றி உமக்கு” என்பார்.

அடால்·பஸ்:  மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் !  தொழிற்சாலையில் ஊழியர் எப்படி ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்கச் செய்கிறீர் ?

ஆன்ரூ:  நான் எதுவும் செய்வதில்லை ! அவரே நெறியைக் கடைப்பிடிக்கிறார்.  ஏழை எளியவருக்கு நான் வேலை கொடுத்தாலும். ஊதியம் தந்தாலும் பிறகு ஓரிரு வருடத்திற்குள் மாறி விடுகிறார்.  எதிர்த்து என் மீது போர் தொடுக்கிறார்.  ஏன் எல்லா ஊழியரும் எதிரிகளாய் ஆகிவிடுகிறார்.  நான் இவரோடு போராடுவதில்லை.  அவருக்குச் சுதந்திரம் உள்ளது.  விருப்பப்படி வேலை செய்கிறார். நல்ல ஊதியம் கிடைக்குது.  முடிவில் ஏராளமாக லாபம் எனக்கு கிடைக்குது.

அடால்·பஸ்:  (ஏளனமாய்ச் சிரித்து) சரிதான் முடிவில் நான் நேற்று சொன்னது போல் ஆச்சு !

பார்பரா:  நேற்று என்ன சொன்னார் உம்மிடம் அப்பா ?

ஆன்ரூ:  சொல்லக் கூடாது நான் !  சொல்லாமலும் இருக்க முடியவில்லை.  அதாவது நான் உன்னை வருத்தம் அடையச் செய்து விட்டேனாம் !  அது உண்மையா ?

பார்பரா:  “நானிந்த இழிந்த ஆடையில் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று நினைப்பீரா ?  சல்வேசன் அணி உடையை மிடுக்காக உடுத்திய நானிந்தச் சாதா உடையில் எப்படி நடமாடி வருவேன் ?  நீங்கள் என் கோலத்தை மாற்றி விட்டதை உணர வில்லையா ?  நேற்று ஓர் மனித ஆத்மாவின் விழிப்பு என் கையில் இருந்தது !  அவரது பாழான வாழ்விலிருந்து அவருக்கு விடுதலை என்னால் அளிக்க முடிந்தது !  உமது கொடைப் பணத்தை நாங்கள் ஒப்புக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் மதுக் குடிப்புக்கும் மன மயக்கத்துக்கும் அடிமை ஆகி விட்டார் ! (அழுத்தமாக) அதற்கு நான் உங்களை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை !  என் கைப் பொம்மையை உமது இரும்புப் பீரங்கி தகர்த்தால், நான் உம்மை மன்னித்து விடலாம் ! எனக்கொரு குழந்தை இருந்து அதன் உடலை உமது வெடி மருந்து நொறுக்கிச் சிதைத்தால் நான் உம்மை மன்னிக்கலாம் !  ஆனால் ஓர் ஆத்மாவை என்னிட மிருந்து பிரித்து அதை ஓர் ஓநாயின் ஆத்மாவாக மாற்றினால் நான் உம்மை மன்னிக்க போவதில்லை ஒருநாளும் ! அது மாபெரும் படுகொலை செய்வதை விடக் கொடுமை யானது !”

 

ஆன்ரூ:  (ஆச்சரியமாக)  என் மகள் இப்படி எளிதாய் மனமுடைவாளா ?  நீ ஓர் நெஞ்சைக் காயப் படுத்தி அதில் தடம் ஏதும் இல்லாமல் செய்ய முடியுமா ?

பார்பரா:  (மனம் தளர்ந்து)  ஓ !  நீங்கள் சொல்வது சரிதான் !  மனிதன் தன் ஆத்மாவை இப்போது இழப்பதில்லை !  அப்படி என்றால் எனது நம்பிக்கை என்னவாகும் ?

அடால்·பஸ்:  (சிரித்துக் கொண்டு) சாத்தான் வெகு, வெகு சாமர்த்திய மானவன் !

பார்பரா:  (அழுத்தமாக)  நீயும் ஒரு சாத்தானாக இருக்கலாம் அடால்·பஸ் ! ஆனால் கடவுள் சில சமயம் உன் மூலமும் பேசுவார் !  (தந்தையின் கையை எடுத்து முத்தமிட்டு)  நீங்கள் என் மகிழ்ச்சியை மீண்டும் எனக்களித்து விட்டீர் அப்பா !  என் ஆழ்மனது இப்போது உணர்கிறது அதை, என் ஆன்மா கலங்கிப் போனாலும் !

ஆன்ரூ:  நான் சொல்கிறேன் நீ இப்போது சிலவற்றைக் கற்றுக் கொண்டாய் !  ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக நீ நினைக்கிறாய் !  இல்லையா ?

பார்பரா:  அப்பா !  அது சரி ! முதலில் என்னை நீங்கள் உருவாக்கிய மரணத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்வீர் !  அங்கு நான் அதிகமாய் கற்றுக் கொள்ள முடியும் ! அந்த பயங்கர முரண்பாட்டு அரணுக்குள் ஏதோ சில உண்மைகள் இருக்க வேண்டும் !  வா அடால்·பஸ் ! நாமங்கு போவோம் !

அடால்·பஸ்:  பார்பரா !  நீதான் என் காவல் தேவதை கண்மணி !  (அண்டர்ஷா·ப்டைப் பார்த்து)  வாருங்கள் அங்கே போவோம் !  (பார்பரா பின்னால் செல்கிறான்)

ஸ்டீ·பன்:  (மெதுவாக தந்தையை நெருங்கி)  அடால்·பஸ் பேச்சை பொருட் படுத்தாதீர் அப்பா !  அவன் சாதுவான ஆண்மகன் !  கிரேக்க மொழி அறிஞன் !  ஆனால் அவன் கோட்டிக்காரன் !  மனப் பிறழ்ச்சி உள்ளவன் !

(தொடரும்)

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 29 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஉம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *