ஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30

This entry is part 13 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

subrabha

செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான  சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,பி. நரசிங்கராவின் மாபூமி போன்ற திரைப்படங்கள், சாந்தா தத் மொழிபெயர்த்த  தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின்  செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை  இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன

. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , தமிழ் அன்பர்களைத் தேடும் முயற்சியில் ஆரம்பத்தில் வெகுவாக ஈடுபட்டேன். நிஜாம்  ஆட்சி காலத்தலைநகரான ஹைதராபாத், பிரிட்டிஸாரால் ராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செகந்த்திராபாத் நகரங்களின் முக்கிய இடங்களைச் சுRRRற்றிப்பார்த்தggggg பின்பு ஒரு வகை தனிமையே மிஞ்சியது. மோண்டா மார்க்கெட் வீதி  மேனன் கடையில்,  செகந்திராபாத் தொடர்வண்டி நிலைய எதிர் கடைகளில் சபரிமலை உபாயங்கள் விற்கிற அளவு தமிழ் வெகுஜன இதழ்கள் விறுவிறுப்பாக விற்றன. அமுதசுரபி, கலைமகளுமே அதிக பட்ச இலக்கிய இதழ்களாக செகந்திராபாத் தமிழர்களால் கருதப்பட்டன.எப்போதும். செகந்திராபாத் பிள்ளையார் கோவில், கீஸ் ஹைஸ்கூல் ஆகியவற்றில் தென்பட்ட பிராமணர்கள் அந்நியப்பட்டவர்களாகவே இருந்தனர். செகந்திராபாத் ரயில்வேதுறையில் ஏகப்பட்ட தமிழர்கள் இருப்பது செய்தியாகவே இருந்த்து. அவர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. கீஸ் ஹைஸ்கூலில் நடக்கும் வருடாந்திர பிரமாண்ட ராமநவமி விழாக்கள் சபா நாடகங்களையும், பிராமண கலாச்சாரத்தையும் அவர்களின் நேசத்தையும் பறைசாற்றின.கண்டோன்மெண்ட்களில் ராணுவத்துறையினரின் பிரிவுகளில் பணியாற்றும் தமிழர்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களும், த்மிழ் மீதானப் பற்றும் அவர்கள் ராமநவமியினருக்கு எதிர்வினையாகவும் இருந்தன. தொடர்வண்டி நிலையப்பகுதிகளிலும், கிளார்க் டவர் பார்க், கண்டோன்மெண்ட் கார்டன் பூங்காக்களிலும், திவோலி அஜந்தா திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடல்கள் போதும் தமிழர்களைக் காண முடிந்தது.உஸ்மானியா பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் பழமைவாதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களுடனான நெருக்கம் இல்லாத சமயத்தில் ஆந்திர மாநிலத் தமிழர் பேரவை  அமைப்பினர் ஆசுவாசம் தந்தனர்.அவர்களில் கிருஸ்ணசாமி மட்டுமே ஓரளவு இலக்கிய உணர்வு கொண்டவராவார்.மற்றவர்கள்  திராவிடக் கழகத்தின் சார்பான தீவிர அக்கறையாளர்களாக இருந்தனர்.

இலக்கிய சார்புக்குத் துணையாக யாரும் இல்லாத ஏக்கத்தில் திரிந்தபோது தென்பட்ட சில நண்பர்களோடு உள்ளூர் படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அக்கறையில் ” கனவு “  இதழை  ஆரம்பித்தோம். அதற்கு முன்னோடியாக பம்பாய் தமிழ்ச்சங்கத்தின் ஏடு, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க கேரளத்தமிழ் ஆகிய இதழ்கள் இருந்தன.அங்கு நான் சென்று இரண்டாண்டுகளுக்கு மேலாகியிருந்தது. ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகர தமிழர்களின் முகமாக அது இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையாக  இருந்த்து. முதல் இரண்டு இதழ்களில் உள்ளூர் படைப்பாளிகளின் சுமாரான கவிதைகள், சுமாரான சிறுகதைகள், துணுக்குகள், உள்ளூர் தமிழர்களின் மனக்குமறல்கள் என் வெளிப்படுத்தினோம். படைப்பு ரீதியான சமரசமோ, நவீன இலக்கிய அக்கறையின்மையோ, நானே பணம் முதலீடு செய்கிற அலுப்போ எல்லாம் சேர்ந்து ” கனவை “ தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கான இதழாக்கி தமிழகத்திலிருந்து படைப்புகளை பெறச்செய்தது..முதல் இரண்டு இதழ்களின் ஆக்கத்தில் கூட இருந்த இரு நண்பர்கள் விலகிப்போயினர் .சென்னையில் தீபம் திருமலை அச்சாக்கத்தில் உதவி புரிந்தார். உள்ளூர் படைப்பாளிகளுக்கான உள்ளூர் பக்கங்கள் என்ற பகுதி பின் இணைப்பாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

கன்வு இலக்கிய வட்டத்தின் மாதக்கூட்டங்களை கண்டோன்மெண்ட் கார்டன் பூங்கா, க்ளாக் டவர் பார்க் என்று நடத்தினேன். டெக்கான் கிரானிக்கல் போன்ற பத்திர்ரிக்கைகளில் கனவு  இலக்கிய வட்டச் செய்தி நடக்கும் நாளில்  இன்றையச் செய்திகளில் இடம் பெற்று கவனத்தை ஈர்ர்க்கும். கி.ரா, ஜெயந்தன், அசோகமித்திரன் என்ற வகையில் ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றின அறிமுகமாக அவர்களின் நூல்கள் பற்றின அறிமுகமாகவும் படைப்பு வாசிப்பு நிகழ்ச்சிகளாகவும் அவை அமைந்தன. பங்கு பெறுபவர்களில் சிறந்த உரைக்கும் படைப்பிற்கும்” கனவி”ற்கு  புத்தக அறிமுகத்திற்கு வரும்  நூல்களைப் பரிசாக தருவேன். ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கினை அடையும் நண்பர்கள் கூட்டம்.கனவின் படைப்புத்தரம் உள்ளூர் நண்பர்களுக்கு  சிரம்மாக இருந்தாலும் அதை கவனத்துடனே பார்த்து வந்தார்கள். கனவு  செகந்திராபாத்தின் நாலைந்து புத்தக்க் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றாலும் விற்பனையாகாமல் கிடக்கும்.       ஆயிரக்கணக்காணோனோர் தமிழர்கள் கூடும் மேற்ச்சொன்ன நிகழ்ச்சிகளின் போது கெஞ்சிக் கூத்தாடி ஒரு மேஜை மீது ” கனவு  “இதழ்களைப் பரப்பி வைப்பேன். கனவா, அதன் பலன் உண்டா, இலக்கியமெல்லா யார் படிப்பாங்க, என்னமோ தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கம், தமிழ் மறந்திரக்கூடாது. அதனாலே சிரம்ப்பட்டு இங்கெல்லாம் வர்ரோம் என்ற ரீதியில் ” கனவை”ப்  பார்ப்பவர்கள் கருத்தைச் சொல்வார்கள். அந்தப் பெரும் ஜனத்திரளுக்கு எதிராக ” கனவு ” தன் செயப்பாட்டை தொடர்ந்து கொண்டிருந்தது.

விடுமுறையில் ஊர் வருகிற போது கோவை விஜயா பதிப்பகத்தின் புத்தகக்கண்காட்சி, வாசகர் திருவிழாக்களில் கலந்து கொண்ட போதெல்லாம் புத்தகக்கண்காட்சி கனவினை விஜயா பதிப்பகம்  வேலாயுதம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அவரும் சரியென்று புத்தக பண்டல்களுடன் செகந்திராபாத்தில் புத்தகக் கண்காட்சியை நட்த்த  வந்தார். விற்பனை வெகு சுமார். நஸ்டம். புத்தகங்கள் மத்தியில் நூறு ரூபாய் தாளை வைத்து  புத்தக விற்பனையை அடுத்த ஆண்டில் செய்யப்போவதாகச் சொன்னார். அடுத்த ஆண்டு  அவர் வரவில்லை. எங்களையே செய்யச் சொல்லி பதிப்பகங்களிடம் சிபாரிசு செய்தார். அடுத்த ஆண்டு முதல் நாங்களே ஏற்பாடு செய்தோம்.

அசோகமித்திரன், சுஜாதா, நா.பார்த்தசாரதி முதல் மாபூமி பட இயக்குனர் நரசிங்கராவி, பாடகர் கத்தார், கவிஞர் காசி ஆனந்தன்  வரை பலரை கண்காட்சி பேச்சாளர்களாக அழைத்தோம். பெரும்பாலும் அப்பளம், வடாகம் தயாரிப்பு, சமையல் குறிப்புகள், ஆன்மீக நூலகள்,ஜோஸ்ய நூல்கள்  விற்றன. நவீன இலக்கிய நூல்கள் வெகு குறைவே நர்மதா, வானதி  முதல் அன்னம் வரை புத்தங்களை அனுப்பி ஊக்குவித்தாலும் அவர்களுக்கும் திருப்தியில்லை. ஆனாலும் புத்தங்களை மக்களிடம் கொண்டு போகிற வேலை என்பது மட்டும் தொடர்ந்தது. புத்தக்கண்காட்சியின் பாதிப்பாய் ராமநவமி, இந்து கலாச்சார விழாக்களிலும்  மற்றவர்களின் சிறு புத்தகக் கடைகள் இடம் பெறுவது தொடங்கியது. மயிரால் மலையை இழுக்கிற வேலையை பெரும்பாலும் நான் தனியாளாகச் செய்து கொண்டிருந்தேன். புத்தகக் கண்காட்சி சமயங்களில்  வரும் மூட்டு வீக்கமும், உடல் உபாதைகளும்,ஒவ்வாமையும் என்னைச்சிரம்ப்படுத்தும்.

.வெளிமாநிலத்தில் வருகின்ற இலக்கிய இதழ் என்பதால்  தமிழகப் படைப்பாளிகள் அக்கறையுடன் பங்கேற்றனர்.  சுந்தரராமசாமி, க.நா.சுவின் கவிதைகள் கூட இடம்பெற்றன. நகுலன் பத்துக்கும் மேற்பட்ட கதைகள், பல கவிதைகள், புத்தக விமர்சனங்கள், கோபிகிருஸ்ணன், சுரேஸ்குமார இந்திரஜித்.தமிழவன், எஸ்.ராமகிருஸ்ணன்,,ஜி.முருகன்,சு.வேணுகோபால், இரா.நடராசன்,தஞ்சைப்பிரகாஷ்,பிரம்மராஜன்,பழமலை,தேவதேவன்,பொன்னீலன்  என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.பிரமிளின் இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு மட்டும் அவருக்கு சிறு சன்மானம் தந்திருக்கிறேன்.இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படிப்பாளிகள் பெருமளவு எழுதியிருக்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள் செகந்திராபாத்திலிருந்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்தபின்பு  திருப்பத்தூரில் ஓராண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் இருந்த ஜெயமோகன் நான்கு இதழ்களைத்தயாரித்தார். அதில் சுந்தரராமசாமி சிறப்பிதழ், அசோகமித்திரன் சிறப்பிதழ் குறிப்பிடத்தக்கவை.அவரின் படைப்புகள் செகந்திராபாத்தில் இருந்த போதே பல ” கனவு “ இதழ்களில்  வெளிவந்திருக்கின்றன. சிற்ந்த சிறுகதையாளர்களுக்கான ” கதா” பரிசை ஒரே ஆண்டில் இருவரும் பெற்றிருந்தோம். அவர் தொகுத்த  தற்கால மலையாளக்கவிதைகள்”கனவி”ன் ஒரு சிறப்பிதழாகவும் வந்திருக்கிறது. பாவண்ணன் தயாரிப்பிலான கன்னடக் கவிதை சிறப்பிதழ், நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் சிறப்பிதழ், சிறுகதைகள் சிறப்பிதழ், சிங்கப்பூர் உலகப்புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தபின்னதான சிங்கப்பூர் சிறப்பிதழ்,  அய்ரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தபின்னான புலம்பெயர்ந்த எழுதாளர்களின் படைப்புகள் கொண்ட இதழ்கள், இலங்கைச் சிறப்பிதழ், சினிமா நூற்றாண்டை ஒட்டி  யமுனா ராஜேந்திரன் தயாரித்த சினிமா சிறப்பிதழ்கள் போன்றவற்றை குறிப்பிடத்தக்க  இதழ்களாகச் சொல்லலாம்.இலஙகிச் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்த போது ஏற்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலையும். தீவிர விமர்சனங்களும் அவ்விதழை அரசியல் கட்டுரைகளும் தீவிர விமர்சனங்களும் கொண்ட படைப்புகளை நீக்கிவிட்டு சாதாரண இதழாகக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்திற்கானது. எனது வாசகர்கள் படைப்பாளிகளாக மாறியபோது இடம் தர முடிந்தது. எனது ஆதர்ச எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று இதழ்கள் வந்தன் என்பதும் எனக்குப் பெருமைதான்.

”கனவி’ன் இருபதாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  ”கனவி”ல் நான் குறைவாகத்தான் எழுதியிருக்கிறேன். .புதிய எழுத்தாளர்களின் மேடையாக இருந்திருக்கிறது. வெகு சொற்பமான  எழுத்தாளர்களின் படைப்புகள் வெகுஜன இதழ்களில் வெளிவருவதால்  வெகுஜன, இலக்கிய இதழ்களுக்கான இடைவெளி குறைந்து போயிருப்பதாக சொல்லப்பட்டாலும்  அவ்வாறில்லை. புதிய எழுத்துக்கான மேடையாக ”கனவு” இருந்திருக்கிறது. வெகுஜன எழுத்தின் மாற்று அம்சங்களை அவை கொண்டிருக்கிறது.

சொந்த ஊரான திருப்பூர் வந்த பின் கனவு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கனவுக்கு இது முப்பதாம் ஆண்டு. செகந்திராபாத்தில் வசித்து  வந்த போது வெளி மாநிலத்திலிருந்து வரும் இதழ் என்ற சலுகை நோக்கில் பெருமளவில் படைப்புகளை அனுப்பிய எழுத்தாள நண்பர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன். சொந்த மாநிலத்திற்கு வந்த பின்பு அதை உணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து இளம் படைப்பாளிகளின் களமாக “ கனவு” இருக்க வேண்டும் என்ற எனது  எண்ணம் பொருளாதாரக்குறைபாடுகளின் காரணமாக பல சமயங்களில் கனவாகப் போய்விடுகிற துரதிஸ்டமாய் அமைந்து விட்டதும் வருத்தமானதே.திருப்பூரில் ” கனவி”ன் இலக்கிய கூட்டங்களுக்கு செகந்திராபாத் கூட்டங்கள் போலவே குறைவானவர்களே வருகிறார்கள். உள்ளூர் சந்தா வெகு குறைவே.கடந்த 18 ஆண்டுகளாக மருத்துவர் முத்துசாமியுடன் இணைந்து தாய் வழிக்கல்வியை மையமாகக் கொண்ட தாய் தமிழ்ப்பள்ளியுடன் இயைந்து செயலாற்றி வருகிறேன்.மாற்றுக் கல்விக்கான குறியீடாக தாய்தமிழ்பள்ளி விளங்கி வருகிறது. தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்படும் கதைசொல்லி நிகழ்ச்சிகளும்,ஆண்டுக்கொரு முறையான ” கதை சொல்லி திருவிழா “ வும், தமிழ்நாடு முழுக்க இருந்து ” கதை சொல்லி போட்டி”க்காக வரும் சிறுவர் கதைகளும், என்னை சிறுவர் கதைகள்  எழுதத் தூண்டியிருக்கிறது. ” புதுயுக கனவு “ அமைப்பின்  திரைப்பட திரையிடல் முயற்சிகள் மாற்றுத் திரைப்படங்களை ரசிக்க ஏதுவாகிறது.மத்திய அரிமா சங்கத்துடன் இனைந்த ஆண்டு குறும்பட விருதுகள் குறும்பட படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. பெண் எழுத்தாளர்களுக்கான “ சக்தி விருது “ம் கூட  திருப்பூர் வந்த பின்  சுற்றுசூழல் நடவடிக்கைகளில் அக்கறை கொண்டு வருவதால் அது சார்ந்த படைப்புகள், செயப்பாடுகள்  நுகர்வுக் கலாச்சாரத்தின் எதிரான நியாய வணிக, கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துவதாக அமைந்து வருகின்றன..எனது தொடர்ந்த படைப்புகளில் இடம் பெறும் உதிரிமக்களும், விளிம்பு நிலைப்பிரதிநிதிகளும் வெகு ஜனக்கலாச்சார இயல்பைக்கேள்விக்குறிக்குளாக்குபவர்களாகவே உள்ளனர்.  ஒருவகையில் என் தொடர்ந்த செயல்பாடுகள் மாற்று கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியதாக  இயைந்து இருப்பதை யோசித்துப் பார்க்கையில் தெரிகிறது. இது திட்டமிடப்பட்டதாக இல்லாவிட்டாலும் உள்ளுணர்வின் செயல்பாடகவே அமைந்திருக்கிறது.இது  இன்றைய நுகர்வு கலாச்சார எதிர்ப்புணர்வின்  மாற்றுக்கலாச்சாரக் குறியீடாகவே எனககுப் படுகிறது.

————————————————

Series Navigationரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவுயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *