ஒரு தாயின் கீதா உபதேசம் ..!

This entry is part 28 of 29 in the series 24 மார்ச் 2013
 
(இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது)
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

வாசல்ல யாருன்னு சித்தப்  போய்ப்  பாரேன்டா ஆனந்த்… நிழலாடறது… ஊஞ்சலிலிருந்து  தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு.

இருங்கோ பெரீம்மா பார்த்துட்டு வரேன்….சொல்லிக் கொண்டே ஆனந்த் ரேழியைக் கடந்து செல்கிறான்.

யாரு…? என்றபடியே அந்த கனமான மரக் கதவை இன்னும் லேசாக திறக்கவும்..

நான் தான்டா ஆனந்து… முனுசாமி …! மெல்லிய குரலில் தனது கல்லூரித் தோழனின் குரலைக் கேட்டதும் ஆனந்துக்கு பகீர் என்றது.

டேய்…நீ ஏண்டா இங்க வந்தே..? ஆனந்தின்  குரலில் அவசரம்.ஐயோ பெரீம்மா வேற இங்க தான் பக்கத்துல இருக்கா…நீ போய்  பஸ் ஸ்டாப்ல நில்லு…நான் ஷர்ட் போட்டுண்டு வந்துடறேன்…..போ…சீக்கிரம் போ….பாக்கி அங்க வந்து பேசறேன்.

சரிடா ஆனந்து….  நீ …வந்துடு சீக்கிரம்…நான் காத்துட்டு நிப்பேன்.

அறைக்குள் அவசரமாக நுழையப் போன ஆனந்தை  பெரியம்மா அலமேலுவின் குரல் இழுத்து நிறுத்தியது.

யாருடா…வந்தது? சொல்லிட்டுப் போகணும்னு தோணலையா நோக்கு?

தயக்கத்துடன்…ம்  ….ம்,, ….முனுசாமி வந்திருந்தான்….காலேஜுல என் கூடப் படிக்கிறவன்.

அவனுக்கு இங்க என்ன வேலை…நம்மாத்துல.? இல்ல…உன்னண்ட தான் என்ன காரியம் பேசணும்?

ஐயோ பெரீம்மா சித்த வாயக் கிளறாமச்  சும்மா இரேன்.இப்படி நீ ஆரம்பிச்ச உன்னோட ‘அக்ரஹார எக்ஸ்பிரஸ் ‘ நிறுத்தாமல் சாதி, மதம்,,இனம், காதல், கொலை, தற்கொலைன்னு  ஊரெல்லாம் சுத்தி சுத்தி கடைசீல கூவத்துக்கிட்ட நின்னு தான் மூச்சு வாங்கும்..!

அது சரி…வெளில எல்லாம் கெட்டுக் கிடக்கு. உனக்கு ஏதானும் ஒண்ணு ஆச்சுன்னா நான் தானே உன் அம்மாக்கு பதில் சொல்லணும்.எங்களை நம்பித்தானே உன்னை படிக்க இங்க விட்டுட்டு போயிருக்கா.

இனிமேல் இப்படியெல்லாம் யாரையும்  நம்மாத்து வாசல்ல வந்து நிக்கச் சொல்லாதே. தெரிஞ்சுக்கோ. நம்மாத்துல வயசு வந்த பொண்ணு கல்யாணி இருக்கா.. நினைவிருக்கோ நோக்கு? காலம் கெட்டுக் கெடக்கு. அதட்டும் குரல் பெரியம்மாவுக்கு.

சிரிப்பு வந்தது ஆனந்துக்கு…ம்ம்…இருக்கு…

இருக்கு…. என்னைத் தேடிண்டு தான் யாரும் இங்க வரக் கூடாது…நான் போகலாமோல்லியோ….நான் கொஞ்சம் பக்கத்துல போய்ட்டு இப்போ வந்துறேன்…பெரீம்மா.இப்பவே மணி ஏழாறது….நேரத்தோட ஆத்துக்கு வரணும்…இல்லையானா நான் ரேழிக் கதவப் பூட்டிடுவேன்…நோக்கு அப்பறம் திண்ணையில் தான் படுக்கை. புரிஞ்சுதா? அப்படியே வரும்போது நாளைக்கு ரசத்துக்கு கொஞ்சம் கொத்தமல்லியும் தக்காளியும் வாங்கிண்டு வந்துடு…வெறுங்கையை வீசீண்டு ….”மறந்தே போயிட்டேன்னு”….சாக்கு சொல்லீண்டு வந்து நின்னாப் பார்த்துக்கோ …ஆமாம்…! என்று உறுமினாள் .

ம்ம்..சரி..சரி…வாங்கிண்டு வரேன்….என்றவன் தன்னை விட்டால் போதும் என்பது போல ஷர்ட்டை மாட்டிக் கொண்டு பட்டன் போட்டபடியே  வாசலைக் கடந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைகிறான் ஆனந்த்..

கல்யாணி அடுக்களையில் சப்பாத்தி செய்யும் வாசனை வீடு பூரா மணத்துக் கொண்டிருந்தது. இருபத்தொன்பது வயதாகியும் இன்னும் பிறந்த வீடே கதி என்று இருப்பவள். வரன் வரும்போதெல்லாம் இதாவது அமைய வேண்டுமே என்று எண்ணும் போதே தட்சிணையில் தட்டிப் போய்  பழைய படி பாம்பு கடித்த பரமபத காயாக கீழே இறங்கி நின்று விடுவாள் கல்யாணி. கல்யாணம் என்பது பெயரோடு இருப்பதால் தானோ என்னவோ   வாழ்க்கையில் அது வருமா வராதா என்ற பயம் கூட லேசாக எட்டிப் பார்த்தது அவளுக்கு. தன கூடப் படித்த தோழிகளுக்கு அவர்கள் குழந்தைகள் கூட பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இவளுக்கு மணமேடை வரை  கூட செல்ல விசா கிடைக்க வில்லை.

அலமு……அலமு…..!  வரும்போதே அதிகாரத் தொனியில் மனைவியை அழைத்தபடியே உள்ளே நுழைகிறார் கிருஷ்ணஸ்வாமி .

ஏன்னா….நான் இங்கே தானே இருக்கேன்….! ஏன் இப்படிக் கூச்சல் போடறேள்? யாருக்கு என்னாச்சு?

மணி எட்டாறது….இப்ப என்ன ஜோலி வெளில ஆனந்துக்கு …?  யாரோ ரெண்டு மூணு ரௌடி பசங்களோட தெண்டரான்….என்ன பிரச்சனயை நம்மாத்துக்கு எடுத்துண்டு வந்து நிக்கப் போறானோ, தெரியலியே …. உன் தங்கை பிள்ளை …நான் தான் சொன்னேனே படிக்க வைக்கணும்ன்னு  நினைச்சால் வயசு வந்த பசங்களை இப்படி சொந்தக்காரா ஆத்தில் விட்டுட்டு போறதுக்கு பதிலா ஹாஸ்டல்ல விட்டுட்டு போயிருக்கலாம். இப்ப அவன் என்ன பண்ணினாலும் நாம தான் ஜவாப்தாரி…! காலம் வேற கெட்டுக் கெடக்கறது. வெளில பேசறதைக் கேட்டால் வயசுப் பசங்கள வளர்க்கறது இந்தக் காலத்துல பிரம்ம பிரயத்தனம் பண்றாப்பல. எதுக்கும் உன் தங்கைகிட்டக்க காதில் போட்டு வைய்யி . நாளைக்கு ஏதாவது ஒண்ணு  கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா வீணா நம்ம தலை உருளக் கூடாதோன்னோ..!

ஆமாம்னா…நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான். நேக்குத் தான் இதெல்லாம் தோணலை. ஆனந்த்  நாளுக்கு நாள் ரொம்ப மாறிண்டே வரான். அவனோட சேத்தி சரியில்லை. நானும் கவனிச்சுண்டு தான் இருக்கேன். இன்னிக்கு வரட்டும்….கேட்டுடறேன். போனாப் போகட்டும்னு பார்த்தால் ரொம்பப் பண்றான். சுலோச்சனாவுக்கும் ஃபோன் பண்ணி அவனை ஒரு நல்ல ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கச் சொல்லலாம். போதும் ரெண்டு வருஷம் நாம உள்ளூரில் இருந்துண்டு பார்துண்டாச்சு. இனி மகளே அவள் சமத்துன்னு நாம இதிலேர்ந்து நைசா கழண்டுக்கணும். நம்ம குடும்பத்து கவலையே நமக்குத் தீர மாட்டேங்கறது. இதுல அவளோட கவலை வேற நாம ஏன் சுமக்கணும் ? இந்தப் பிள்ளையை ஒண்ணொண்ணா சொல்லி மேய்க்க நாம என்ன கடமைப் பட்டவாளா? இப்பவே நான் அவளுக்கு ஃபோனைப் போட்டுப் பேசி நாளைக்கே இங்க வரச் சொல்றேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கல்யாணி…”அம்மா…..ஏன்மா அப்படிச் சொல்றே? பாவம்மா ஆனந்த்….அவனும் நம்மோடவே இருந்துட்டுப் போட்டுமே நமக்கும் ஒரு துணை தானே? சித்தி உன்னைத் தான் தப்பா நினைச்சுக்கப் போறா….நீ ஃபோன் பண்ணாதே…என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

அலமேலு தன தங்கை சுலோச்சனாவிடம் விஷயத்தை போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள்.

“அதாண்டி சுலோ..நான் சொல்றதைச் சொல்லிட்டேன்….நேக்கும் வயசாறது….சுகர், பிபி…..இத்தோட கல்யாணியோட கல்யாண கவலை வேற….நீ சீக்கிரம் வந்து உன் பிள்ளையை ஹாஸ்டல்ல போடு…இதோ பாரு இப்போ கூட அவன் ஆத்துல இல்லை…வெளில போயிருக்கான்….சொன்னாக் கேட்டாத் தானே..? நீ தப்பா நினைச்சாக் கூட நேக்குப் பரவாயில்லை…எனக்கு இந்த வயசில் இந்தத் தலை வலி வேண்டாம்…உன்  அத்திம்பேரும் பாவம்…ரொம்பப் புலம்பறார்..!

“சரி….நான் நாளைக்கே வரேன்….என்ற சுலோவின் பதிலில் நிம்மதி அடைந்தவளாக , நீ  கண்டிப்பா வந்துடு ..ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கைபேசியை அணைக்கிறாள்  அலமேலு.

மனைவி அலமேலு தனக்கு சாதகமாக எடுத்த முடிவில்  மேற்கொண்டு ஏதும் பேசாமல் நிம்மதியாக  கை கால் அலம்பிக் கொண்டு சாப்பிட அமர்ந்தார் கிருஷ்ணசுவாமி.

சொல்லிட்டியா….? நான் தான் சொல்லாதேன்னு உள்ளேர்ந்து கரடியாக் கத்தறேனே…..காதுலயே வாங்கிக்கலைம்மா நீ..என்று கல்யாணி சமையலறை விட்டு வெளியே வருகிறாள்.

நோக்கொண்ணும் தெரியாது. பொழுது விடிஞ்சு பொழுது போனா வரும் செய்தியைப் பார்த்தால் தலையைச் சுத்தறது. காலேஜ் பசங்க எந்த நேரம் என்ன செய்வான்னே தெரியலை..குடிப்பழக்கம், டிரக்கு, கேர்ள் ஃபிரண்டு இந்த வம்பில் மாட்டும் வயசு இது !   இது நம்ம மேற்பார்வையில் வந்தால், நம்ம தலை உருளும்.  ஏன் கவனிக்க வில்லைன்னு பழி நம்ம மேல் விழும் ! இவனும் சொன்னாக் கேட்க மாட்டேங்கறான். எதுலயாவது மாட்டிண்டு நின்னா…..! அதான்…அவாவா பிரச்சனையை அவா அவா பார்த்துக்கட்டும்.எதோ இந்த ரெண்டு வருஷம் கழிஞ்சதே பெரிசு. என்று கல்யாணியின் வாயை அடைத்தவளாக  கொட்டாவி விட்டபடி…நானே “ராமா…கிருஷ்ணா…கோவிந்தான்னு” இருக்கணும்னு நினைக்கறேன்….என்று வாயருகே சொடக்குப் போட்டபடி…..”ஹூம்ம்ம்ம் ” என்று அலுப்புடன் சொல்லிக் கொண்டே ஊஞ்சலை விட்டு எழுந்திருக்க ஊஞ்சல் ஆடாத ஆட்டம் ஆடி நிற்கிறது..

பஸ் ஸ்டாப்பில் முனுசாமி தனது கைபேசியில் வந்த குறுஞ் செய்தியை ஆனந்திடம்  காட்டிய படி…..பார்த்தியாடா…இதுக்குத்தான் அம்புட்டு அவசரமா நான் வந்தது….நீ தான் தலைமை தாங்கறே …என்னடா சொல்றீங்க சிவா, அர்விந்த், கோபிநாத்….சரி தானே …”ஆனந்த் தான் ஹெட் …இவனே  இருக்கட்டும் ”  இப்போ பானர்  எழுதறோம்….நாளைக்கு காலீல கட்டி  பஸ் ஸ்டாண்ட் வாசலண்ட போயி உட்கார்றோம்…நீயும் உனக்குத் தெரிஞ்ச அம்புட்டு பேத்துக்கும் மெசேஜ் கொடுத்துடு……சரியா..?  டேய்…பேசுடா….இவனைப் பாருடா…பயந்தாங்கொள்ளி பக்கோடா..!

டேய்…என்னா முனுசாமி…நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்றே? என்னால இதுக்கெல்லாம் தலைமை தாங்க முடியாதுடா சாமி…நானே என் பெரியம்மா வீட்டில் வந்து புண்ணியத்துக்கு தங்கி இருந்து படிக்கிறேன்…இதுல நான் இருக்கேன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்…..பின்னாடி டப்பா  கட்டி விட்டுடுவாங்க….! என்ன ஆள விடுங்கடாச் சாமி…நான் போறேன்….வீட்டில் தேடுவாங்க…இப்பவே லேட் ..நம்மால திண்ணையில எல்லாம்  தூங்க முடியாதுப்பா.

அட…என்னடா இவன் இப்படிச் சொல்றான்…இவனையாடா நாம நம்பிகிட்டிருந்தோம்…..டேய்..மச்சி….இவன் சரியான தயிர்சாதம்டா..! இதுங்களத் திருத்த முடியாது….நீங்கள்ளாம் ஏண்டா காலேஜுக்கு படிக்க வாறீங்க? பேசாம “மாங்கல்யம் தந்துனானேனா…” ன்னு மூக்கைப் பிடிச்சுக்கிட்டு, குடுமி வெச்சுக்கிட்டு…தட்சிணை தரேளா?…ன்னு போக வேண்டியது தானே…?

இதைக் கேட்டதும் ஆனந்துக்கு  ரத்தம் சூடேறுகிறது. “அடேய்ங்…கொக்க…. மக்கா….போட்டேன்னு வெய்யி அப்படியேப்  பொடிமாஸ் ஆயிடுவே …! நீங்கள்ளாம்  பேசராப்புல ஆயிடுச்சு இப்ப என் நிலைமை…! நான் மட்டும் இந்நேரம் என் ஊரில் என் சொந்த வீட்டில் இருந்தா நெலமையே வேற. பெரியம்மா வீட்டில் இருக்கும்போது இதெல்லாம் வேண்டாமேன்னு பார்க்கறேன்….சொன்னாப் புரிஞ்சுக்கிட்டு விடுங்களேன்டா…என்கிறான் ஆனந்த்..

அரே …காதுல காலிப்ஃப்ளவரை  வச்சுப் பார்காதடா …! உன் உதாரெல்லாம் சும்மா….உள்ளாங்காட்டிக்கி ..! உனக்கு மட்டும் ‘தில்’ இருந்தா தைரியமா வாடா பார்க்கலாம். மறுபடியும் கூட இருந்து உசுப்பேத்தும் நண்பர்கள் மத்தியில் சிக்கித் தவிக்கிறான் ஆனந்த்..

இப்படி சொல்லிச் சொல்லியே என்னை உங்க விளையாட்டுல சேர வெக்கிறீங்க இல்ல….சுத்த மோசம்டா நீங்க…என்று மீண்டும் மறுத்து பேசுகிறான் ஆனந்த்.

அடடா..இவரு பெரிய “அக்மார்க் பிராண்ட்”  வாழ்கையில ரிஸ்க் எடுக்கறதெல்லாம் சும்மா ரஸ்க் சாப்பிடறது மாதிரி நெனைக்கோணும் டா  அத்த விட்டுப் போட்டு…..பெரியம்மா….ஸ்ட்ரிக்ட்….பெரியப்பா லூஸுன்னு …கதையெல்லாம் அடிக்கப் படாது..! “மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்….அப்படீங்குற ‘தில்லும் திண்ணாக்கமும்’  தாண்டா  நம்ம கெத்து…அத்த கெடாசிட்டு சும்மா தயிர்சாதமும் மாவடு ஊறுகாயும் தின்னுப்போட்டு எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார்னு இருக்கலாமாடா ஆனந்து …? மஜா பண்ணுடா ஆனந்து …காலேஜு லைஃப்ல இதெல்லாம் சகஜமப்பா..அரியர் வெக்காம எஞ்சினீயர் ஆக முடியாது…..ஸ்ட்ரைக் பண்ணாத கல்லூரி  மாணவன் இருக்க முடியாது தெரியாதோ நோக்கு தெரியாதோ…? என்று கிண்டலடிக்கிறார்கள்.

மெல்ல மெல்ல ஆனந்த்  ரசத்துக்கு வாங்க வேண்டிய தக்காளியை மனதில்இருந்து பின்னுக்குத் தள்ளி விட்டு…”ஒகே… திண்ணையில் தூங்கலாம் இன்று” என்று சொல்லிக் கொண்டு சமாதானமாகி நடுநிசி வரைக்கும் அரட்டை அடித்துக் கொண்டும்  “நீதி கிடைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ” என்று கொட்டை எழுத்தில் எழுதிய பானர் தயார் செய்து கொண்டும் .அவர்களுக்கு வந்த மெசேஜை மற்ற மாணவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துக் கொண்டும் இருந்து விட்டு கடைசியில் கிளம்பி வீட்டின் வாசத் திண்ணையில் வந்து படுத்துக் கொண்டு தன்னை ஒரு ‘ஹீரோ’வாக கற்பனை செய்து கொண்டு உறங்கக்  கண்மூடும் போது மணி மூன்று அடித்து ஓய்ந்தது.

விடியற்காலை கல்யாணி அக்கா வாசலைத் தெளித்து விட்டு மீதம் இருக்கும் தண்ணீரை இவன் முகத்திலும் தெளித்து விட்டு ” டேய்…ஆனந்த் ..! எழுந்து உள்ள வந்து படு…வா ” என்று அழைத்து விட்டு கூடவே….ஆச்சுடா…இன்னிக்கு உன் அம்மா வரப் போறா….உன்னை ஹாஸ்டலில் கொண்டு போய் விட…இங்க உன்னைக் கட்டிக் காக்க சரிப்படாதுன்னு உன் பெரீம்மா சொல்லிட்டா…தெரியுமோ? என்று தூபம் போட்டு விட்டுப் போன கல்யாணி, அவள்  சொன்னது காதில் விழுந்ததும். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த ஆனந்த் , “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா….” என்று விசிலடித்தபடியே உள்ளே நுழைகிறான். அவன் மனசு சொல்லியது இன்றிலிருந்து இந்தச் சிறையிலிருந்து உனக்கு விடுதலை….. ஹாஸ்டல் தான் சுதந்திரம்…என்று. நிம்மதி பெருமூச்சுடன் அறைக்குள் இருக்கும் கட்டிலில் சாய்கிறான்.

டீ …அலமு…! அவன்ட்ட கண்டீஷனாச் சொல்லிடு இன்னிக்கு…என்ன ? என்று கேட்கும் கணவரைப் பார்த்தாள் .

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ..அவன் இஷ்டப் படி இருந்துட்டுப் போகட்டும்…என்று காற்றுப் போன பலூனாக அடங்கினாள்  அலமேலு..

சொன்னபடியே கிளம்பி பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்து வீடு செல்ல ஆட்டோவை எதிர் பார்க்க….தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.
ஏன் ஒரு ஆட்டோ கூட இல்லை..எண்ணியவல்லாகத் திரும்பிய சுலோச்சனா அங்கு ஓரமாக இருந்த ஆட்டோவின் அருகில் சென்று…
“இந்தாப்பா ஆட்டோ… காந்தி நகர் போகணும் ” என்றதும்.

இன்னைக்கு ஆட்டோ வராதும்மா….ஸ்ட்ரைக்…என்று சொல்லிவிட்டு அந்த சீட்டில் சுருண்டு படுத்துக் கொள்கிறான் அவன்.

என்னது…!  ஸ்ட்ரைக்கா…? உங்களுக்கு என்னப்பா வந்தது இப்படி திடீர் திடீர்னு? …மாசத்துல அஞ்சு நாள் இப்படி ஆட்டோ பந்த் பண்ணினா எங்க கதி என்ன?

ம்ம்….அரசு அம்மாட்ட கேட்க வேண்டிய கேள்வி இது….எங்கிட்ட வந்து காலீல கேட்டா….? என்று லுங்கியை இழுத்துத் தலைக்கும் சேர்த்துப் போர்த்திக் கொள்கிறான்.

கொஞ்சம்..காந்தி நகர் வரைக்கும் வாயேன்பா………விஷயம் தெரியாமல் கிளம்பி வந்துட்டேன். என்று கெஞ்சியதும்.

“இருநூறு ரூபாயாகும்” சரியா? என்கிறான்.

சமயத்துக்கு ஏத்தாற்போல ஆதாயம்…ஆதாயம்…! மனசு ஊளையிட்டது….”எதற்காகக் கொடுக்க வேண்டும் இருநூறு ரூபாய்….ஐம்பது ரூபாயில் சேர வேண்டிய இடம் அது…மானம் கெட்டவனே…..மாமனா மச்சானா…? ரத்தம் கொத்திக்க வீர வசனம் பேச வேண்டும் போலத் தான் இருந்தது….’அடக்கி வாசிடீ  சுலோச்சனா…என்று உள்ளிருந்து வந்த குரல்…அடங்கிப் போய் “சரி தரேன் வா…” என்று இதுவும் இன்று காந்தி கணக்கு என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள். அவளது   மனசு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.

வழியெல்லாம் பெட்டிக் கடை முன்பு அன்றைய செய்தித் தாளின் தலையங்கச் செய்தியாக  ” மாணவர் உண்ணாவிரதப் போராட்டம்”
முழு கடையடைப்பு” அனைத்துக் கல்லூரியும் காலவரையறையின்றி மூடல் ” “காலிகளுக்குப் பயந்து அயல்நாட்டு அழகி மாடியிலிருந்து குதிப்பு,”  என்று வித விதமான தலைப்பில் கொட்டை கொட்டையாக எழுதி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது…கூடவே…. வழக்கம் போல “மாணவர்கள் பலி”  “சிறுமி பலாத்காரம்” “மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு  அரை பவுன் திருட்டு” என்றெல்லாம் தமிழ் நாட்டின் மானத்தை தொங்க விட்டு அது காற்றில்  பறந்து கொண்டிருந்தது.

படிக்கப் படிக்க, சந்திரபாபு பாடிய “டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே உலகம் போறப் போக்கைப் பாரு தந்தனத் தில்லாலே….”
என்று நினைத்துப் பார்த்தது. அவர்களெல்லாம் தீர்க்கதரிசிகள்….சொல்லிவிட்டுப் பறந்து விட்டார்கள்..காலம் கெட்டுப் போச்சு நினைத்துக் கொண்டே தான் பயணம் செய்யும் ஆட்டோவின் எண்ணை மனதுக்குள் குறித்துக் கொண்டாள்…அப்படியே கண்ணாடி வழியாக அந்த டிரைவரின் முகத்தையும் பார்த்து வைத்துக் கொண்டாள் . இதனால் தானே சொந்த அக்கா விட்டில் கூட படிக்கிற பையனை வைத்துக் கொள்வதற்கு யோசிக்கிறார்கள்..

எதிர் சாரியில் வரும் ஆட்டோவைப் பார்த்ததும்…சுலோச்சனா …”ஏம்பா….ஆட்டோ ஓடுது போலிருக்கே…? நீ சும்மா சொன்னியா ஸ்ட்ரைக்குன்னு..?

அவன் திரும்பிப் பார்த்தபடியே , எல்லாம் ஒண்ணுக்கு நாலு மடங்கு கொடுத்தா ஓடும்…இப்ப இங்க ஓடலியா ? என்கிறான்.

உன்கிட்ட லைசென்ஸ் எல்லாம் சரியா வெச்சிருக்கியா? மீண்டும் வந்த கொக்கிக் கேள்வியில் திகைத்தவனாக…

ஏன்மா….? இல்லாதையா ஓட்டுறேன்…பத்து வருஷ சர்வீஸு …! என்கிறான்.

இல்ல நான் நீ கேட்ட பணத்தைக் கொடுத்துருவேன். நான் போகப் போற வீடு டிராஃபிக் போலீஸ் ஆபீசர்  வீடு. எங்கண்ணன் தான்.
ஒருவேளை அவரு எதாச்சும் உன்கிட்ட கேட்டு,  அதை உன்னால கொடுக்க முடியலையின்னு வெய்யி….! அதான்..முன்னாடியே கேட்டுக்கிறேன்….நீ ரோட்டைப் பார்த்து ஓட்டுப்பா.. !…என்றவள் மனசுக்குள் அவன் பயந்து போனதை எண்ணி சிரித்துக் கொள்கிறாள் சுலோச்சனா.

ஏம்மா….இப்படிநானும் புள்ள குட்டிக் காரன் தானே. டீசல் விக்கிற விலையைப் பார்தீங்கல்ல .நெனச்ச போதெல்லாம் விலைய  ஏத்திட றானுங்க. நாங்க மட்டும் எங்கிட்டுப் போவோம்? மாசத்துல பாதி நாள் பந்த். ஸ்கூல் சவாரி மட்டும் தான் ஒழுங்கா போவுது. மத்தபடி கிராக்கி ரொம்ப கம்மி. அதான்..வந்த சவாரியை விட வேணாம்னு கூட கேட்குறோம் . போவட்டும்மா…நீங்க அம்பது ரூபாயே கொடுங்க போதும். பாக்கியை நான் காந்தி கணக்குல எழுதிக்கிடறேன்.

எதை…?

பாக்கி நூத்தம்பது ரூபாயைத் தான்.

ஹுக்கும் …..நல்லாத்தான் பேசறே போ. நியாயமா உழைச்சு சம்பாதிக்கும் பணமே நிலைக்க மாட்டேங்குது. இதுல அடிச்சுப் புடிச்சு அடுத்தவங்க வயித்தெரிச்சலோட கொடுக்கிற எந்தப் பணம் ஓட்டும்?  அதான் சொன்னேன்..என்றவள்…இதோ வீடு வந்துடுச்சு அங்க நிறுத்து…..இந்தா நியாயமான அம்பது ரூபாய்…நியாயமா சம்பாதிக்க ஆரம்பி. அப்போ தான் உன் மனசாட்சி கூட உன்னைக் கண்டு பயப்படும். சொல்லிக் கொண்டே இறங்கி  திரும்பிப் பாராமல் வீட்டை நோக்கி நடக்கிறாள் சுலோச்சனா.

“ஏம்மா இன்னும் பத்து ரூபா தந்தால் என்ன ?  ஸ்டிரைக்கில எப்படி அஞ்சாம ஓட்டி வந்திருக்கேன் !”

சுலோச்சனாவுக்கு அது காதில் விழவில்லை.

அவளை இறக்கி விட்டு விட்டு தப்பித்தோ பிழைத்தோம் என்று தலை தெறிக்கப்  பறந்தது ஆட்டோ.

அம்மா…அம்மா.! சித்தி வந்தாச்சு….கல்யாணி உள்ளே குரல் கொடுத்து கத்திக் கொண்டே வாசல் வரைக்கும் வந்து சுலோச்சனாவின் கையில் இருந்த பையை வாங்கிக் கொள்கிறாள்…வாங்கோ சித்தி…சித்தப்பா சௌக்கியம் தானே?

ம்ம்ம்…இருக்கார்…என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆட ஆரம்பிக்கிறாள்.

“வாடிம்மா சுலோ….சொன்னபடியே வந்துட்டே….ரொம்ப சந்தோஷம் ” என்ற அலமு…அனைத்து உபசரிப்புக்குப்  பிறகு மெல்ல விஷயத்தைப் பக்குவமாக ஆரம்பித்து சொல்கிறாள்.

ஆமாம்….நீ சொல்றது சரி தான். பொழுது விடிஞ்சு பொழுது போனா வெளில போற பிள்ளை வீட்டுக்கு வந்தபின்ன தான் உயிரே வருது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா செய்தி வரும்போதே மனசு பதைக்கிறது. உன்கிட்ட எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ சொல்றாப்பல அவனை ஹாஸ்டல்ல சேர்த்துடலாம். ஒண்ணும்  பிரச்சனை இல்லை. என்றவள் “ஆனந்த்…ஆனந்த்…என்று அழைத்தபடியே அவனது அறைக்குள் எட்டிப் பார்க்கிறாள்.

அங்கு அவன் எப்போதோ வெளியே சென்று விட்டதற்கான அறிகுறி தெரியவே….அதான் காலேஜே இன்னிக்கு லீவாச்சே…இவ்ளோ சீக்கிரத்தில் இவன் எங்கே எழுந்து போயிருப்பான்…? என்று பொதுவில் கேட்க.

நேத்திக்கு அவன் வந்த நேரம் என்ன தெரியுமா? நடுராத்திரி மூணு மணி இருக்கும். என்று மேலும் சொல்கிறாள் அலமேலு.

அச்சச்சோ….என்னதிது…ரொம்ப அநியாயமா இருக்கு…இருங்கோ நான் கேட்கிறேன்..என்ன தான் பண்றான் ராத்திரி இவன்?
இப்படி இருந்தால் என்னத்த சொல்றது? அலுத்துக் கொள்கிறாள் சுலோச்சனா.

சரிக்கா..நான் கொஞ்சம் இங்க காலேஜ் வரைக்கும் போயிட்டு வரேன். துணைக்கு கல்யாணியை அழைச்சுண்டு போறேன்…அப்படியே என்னிக்கு காலேஜ் திறப்பா எந்த ஹாஸ்டல்ல சேர்க்கலாம்னு ஒரு பார்வை பார்த்தால் தான் தேவலை…இல்லையா?  என்கிறாள்.

“இந்த ஸ்டிரைக் சமயத்தில் பெண்கள் வீதியில் போவதே ஆபத்தானது. நீங்க போய் கல்லூரிக் கதவு திறக்கப் போவுதா ?”

அவர்கள் அஞ்சவில்லை . அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்யாணியும், சுலோச்சனாவும் கல்யாணியின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு காலேஜை நோக்கி செல்கின்றனர்.

போகும் வழியில் அங்கங்கே பஸ் மறியல், போராட்ட, ஊர்வலம், அதன் நடுவில் கோரிக்கைகளுக்குத் தேவையான புகைப் படத்தின் பானரைப்   பிடித்தபடியே “நீதி வேண்டும் நீதி வேண்டும்…எங்களுக்கு நீதி வேண்டும்..” என்று கத்திக் கொண்டே செல்லும் மாணவ ஊர்வலங்கள்..

என்ன கல்யாணி….நீ ஒரு காலேஜ் பிரின்சிபலா  இருந்தா இது போன்ற நடவடிக்கைக்கு எது மாதிரி ரியாக்ட் பண்ணுவே? இப்படியா அரசியல் எண்ணங்களுக்கு மாணவர்களை ஊக்கம் கொடுப்போம்,

நானா இருந்தா…சொல்லிடுவேன்….எவனாவது ஸ்ட்ரைக் பண்ணினா கண்டிப்பா  அவனுக்கு ஹால் டிக்கெட் தரமாட்டேன்னு நோடீஸ் போர்ட்ல எழுதி போட்டுட்டு அவன வேற எதைப் பத்தியும் நினைக்க விடாமல் செய்து விடுவேன்….அதுதானே சரி சித்தி.

ம்ம்ம்…சரி..சின்னப் பசங்களுக்குப் புரியாது…கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருப்பாங்க ..பெரியவங்க நாம தான் சொல்ற விதமா சொல்லணும். ஆனாலும் இந்த  அரசியல் விஷயத்துல கல்லூரி மாணவர்களைத் தூண்டி விடுவது சமூகக் குற்றம். இதை நாம சும்மா விடக் கூடாது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே…காலேஜும் வந்து விட..அதன் வாசலில் பெரிய பானர் கட்டி….அதன் கீழே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்….இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்? யாரோ சொன்னதும் அப்படியே செய்யத் தான் தெரியும் ..ஏன் எதற்கு என்ற கேள்வி கூட கேட்க தோன்றாதோ? அந்தக் கூட்டத்தின் நடுவே ஆனந்தும்  அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும்…”தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உள்ளுக்குள் துடித்துப் போனாள்  சுலோச்சனா.

இத்தனை வருஷத்தில் ஒரு நாள் அவனை நாம் பட்டினி போட்டிருப்போமா கல்யாணி? …இப்போப் பாரேன்..நிலைமையை. என்றவள் நம்ப முடியாதவளாக…திகைப்பில் நிற்கவும்.

கூட்டத்தில் மைக்கில் யாரோ பேச ஆரம்பிக்கிறார்கள்.அதில் ஏதோ அரசியல் கட்சி முன்னோடியாக இருப்பது மட்டும் புரிகிறது.
“போராடுவோம்…நீதி கிடைக்கும் வரை போராடுவோம்…இல்லையேல் ஆயுதத்தைக் கையிலெடுப்போம் …மாணவர்களின் சக்தி சுனாமியைப் போன்றது….நீதி கேட்கப் புறப்பட்டு விட்டோம் இனி தயங்க மாட்டோம்…இறுதிவரை உண்ணாவிரதமிருந்து போராடி ஜெயிப்போம்……”இலங்கையில் நீதி கிடைக்கத் தனிப்பட்ட சர்வதேச விசாரணை அவசியம்”  குரல் கொடுக்க இங்கிருந்தே எங்கள் படை..மாணவர்களின் கடல் போன்ற அணி திரட்டு..” என்று பேசிக் கொண்டே போகிறார் அவர்.

கல்யாணி…இந்தப் பேச்சைக் கேட்டியா…? சும்மா இருக்குற சங்கை எப்படி ஊதி ஊதி ஊரைக் கூட்டறான் பாரேன்..இந்த மாதிரிப் பேச்சாலத் தான் நாடே கெட்டு நாசமாப் போச்சு. இப்போ படிச்சிட்டிருக்கிற பசங்களைத் தூண்டி விட்டு மாணவர்கள் என்றாலே என்னவோ அராஜகம் செய்ய அத்தனைத் தகுதியும் ரெடிமேடா இருக்கிறாப்பலன்னா  இருக்கு இவா சொல்றது. பெத்த வயிறு பத்திண்டு எரியறது.
அவா அவா  வாயைக் கட்டி வயித்தைக் கட்டி…லட்ச லட்சமா பணத்தைக் கொட்டி காலேஜ் காலேஜா பார்த்து அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்து சேர்த்தா….படிச்சு முடிச்சுட்டு குழந்தைகள் வெளில நல்ல படியா வந்து ஒரு வேலையில்  உட்காரும்…நாம, பெத்தவா கொஞ்சம் மூச்சு விடலாம்னு நினைச்சா…இதென்னடா வம்பாப் போச்சு.? அரசியல்ல இவங்களைக் கோத்து விட்டு குளிர் காயிர கையாலாகாத் தனம்..

இங்கே இவர்கள் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே….அருகில் ஒரு பஸ் எரிக்கப் பட்டு…கத்தலும், கூச்சலும்…ஆர்ப்பாட்டமுமாக…..இதில் தாங்கள் எதற்காக இதைச் செய்கிறோம் என்றே புரியாமல் “இளங்கன்று பயமறியாது’ என்பது போல கண்மூடித் தனமாக அவர்களுக்குள் இருக்கும் வெறியை வெளிக் கொண்டு வந்து சேதாரம் செய்கிறார்கள்.

சுலோச்சனாவால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவளுக்குள் எழுந்த நெருப்புப் பொறி இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க தன்னாலும் முடியும் என்ற முடிவோடு…அங்கு பேசிக் கொண்டிருந்தவரிடம் சென்று….”ஐயா….கொஞ்சம் அந்த மைக்கைத் தரீங்களா…..இத்தனை நேரம் நீங்க பேசினீங்க…..நாங்க கேட்டோம்…இப்போ நாங்க….சமுதாயம்…தாய்க்குலம் பேசப் போகுது….கொஞ்சம் நீங்களும்..இங்க கூடியிருக்கும் மாணவர்களும் கேட்க வேண்டும்…என்று கணீரென்று சொல்லியபடியே மைக்கை கைப் பற்றுகிறாள்…

என்ன தான் பேசப் போறாங்க.என்ற ஆவலில் மைக் கைமாறுகிறது. கூட்டத்திலும் அமைதி நிலவுகிறது. சுலோச்சனா “வேண்டாம் சித்தி….ப்ளீஸ் வந்துடு…” என்று கண்களால் கல்யாணி சொல்லும் எந்த கெஞ்சலையும் சட்டை செய்யாமல்…அருகில் போலீஸ் இருக்கும் பாதுகாப்பும்  மீறி தன மகன் இருக்கிறான் இந்தக்  கூட்டத்தில் என்ற தைரியமும் ஒன்று சேர..தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள்…அவளது குரல் கணீரென்று ஆலயமணி போல அங்கங்கு வைத்திருக்கும் அத்தனை குழல் பெருக்கி வழியாக சென்று கொண்டே ஒவ்வொருவரின் இதயத்தையும் தட்டத் தயாராகிறது.

” அன்பான மாணவர்களே…உங்கள் சக்தி பெரிது தான். ஆனால் படிக்கிற காலத்தில் அதை உங்களின் சுய முன்னேற்றத்திற்கு நீங்கள் உபயோகப் படுத்துங்கள்.ஒரு சிறிய பிரச்சனையை ஒன்றுமில்லாமல் செய்ய அதைவிடப் பெரிய பிரச்சனையால் தான் முடியும். அது போலத் தான் இப்போது உங்களைத் யாரோ தூண்டி விட்டு பரீட்சைகள் நெருங்கும் இந்த நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு இப்படி சமுதாயச் சிக்கலில் உங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள்.ஏவு கணைகளாய் உங்களை ஏவி விட்டுத் தங்களுக்கு கவசமாகவும்  வைத்துள்ளார்கள் !

இதாவது உங்களுக்குத் தெரியுமா? என்னமோ….இதில் கலந்து கொண்டால் தற்காலிகமாக நீங்கள் உங்கள் ப்ராஜெக்ட்,லேப்,டெஸ்ட்,
ரெகார்ட் வொர்க்,இதிலிருந்து விடுதலை கிடைக்கும் எண்ணம் மட்டும் உங்களுக்கு இருக்கும். அதையும் தாண்டி கல்லூரி  விடுமுறை…..காலவரையற்ற விடுமுறை…! இதில் யாருக்கு என்ன லாபம்.?.விடுமுறை உங்களுக்கு என்ன சுகம் தந்தது..? வேகாத வெயிலில் பசி என்றால் என்ன என்று தெரியாத நீங்கள் எல்லாரும் இப்போது உண்ணாவிரதம் என்ற பேரில் பசியோடு உலர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இதனால் அரசியலில் அல்லது நாட்டில் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடப் போவதில்லை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எரிந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும் இது வரையில் அப்படியேதான் இருக்கிறது யாராலும், எந்த போராட்டத்தாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்படியே அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அது அரசியல் சட்டத்தால் மட்டும் தான் முடியுமே தவிர….உங்களின் கொந்தளிப்பால் இயலாது…என்று மனசுக்குள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் இப்போது  வாழ்க்கையில் பொறுப்பேற்கும்  தருணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு அரசியல் வில்லுக்கு அம்பாகி அழிந்து போக வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குத் திணிக்கப் படுவது அநியாயம். அரசியல்வாதிகளுக்கு மாணவர் இலவச ஏவு கணைகள் அல்ல !

அந்த அராஜக வில்லை முறிக்கத் தான் இன்று… இங்கு…. நாங்கள்…..உங்களைப் பெற்ற தாய்மார்கள் வந்திருக்கிறோம். எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க…ஆம்…உங்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் எங்கள் “தாய்மார்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டம்….எங்கள் குழந்தைகளை அரசியல்வாதிகளின் கையில் இருந்து காப்பாற்ற ” புறப்படுங்கள் தாய்மார்களே….வீட்டுக்குள் இருந்து வெறும் செய்தியும், சீரியலும் பார்த்து அழுதது போதும்… போதும்….! புறப்படுங்கள் ..!

யார் கல்லூரி மாணவர்களைப் பகடைக் காயாக்கி குளிர் காய்கிறார்களோ அதே மாணவர்களைக் காக்கும் பொருட்டு தாய்மார்களாகிய நாமும்  உண்ணாவிரதம் இருப்போம்…வாருங்கள்…திரளுங்கள்…ஒன்று கூடுங்கள்…சமூகம் என்பது நாம் தானே..? நம் குழந்தைகளுக்கு ஒன்று என்றால்..ஒரு இழப்பு வந்து விட்டால் அந்த இழப்பும் வலியும் நமக்குத் தானே? ..அது நேராமல் நம் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்.

மாணவர்களே…! நீங்கள் வருங்காலத்தில் குடும்பத்தைத்  தாங்கும் கோபுரத்  தூண்கள்…! உங்களை  ஓட்டுக்கும் நாட்டுக்கும் ஏவுகணைகளாக ஆக்க விடாதீர்கள் ! உங்களை ஏவி விட்டு ஆதாயம் தேடும் அனுபவசாலிகளை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

“பசியோடு இருக்கும் படைவீரர் சண்டை செய்ய முடியாது” என்று நெப்போலியன் கூறுகிறார்.பட்டினி கிடக்கும் உங்களை வலுவிழக்கச் செய்யத் தான் இந்த ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. அரசியல் தலைவர்கள் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டு கட் அவுட்டில்
நிற்க, படித்து வேலைக்குப் போய் உங்கள் வாழ்கையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள பொறுப்பை மறந்து தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் காரர்களின் கையிலிருக்கும் லத்திக்கு இரையாகாதீர்கள் .

ஏற்கனவே உங்களை சினிமா மோகமும்…ஹீரோக்களின் ஆதிக்கமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இப்போது அரசியல் தூண்டிலுகுள்ளும் புழுவாக உங்களையே மாட்டி வேடிக்கை பார்க்கும் போது ..பெற்ற எங்களால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை..!

ஆதி காலத்தில் அதாவது ராஜா காலத்தில் போர் புரிய வீட்டுக்கொரு பிள்ளையை கட்டாயமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற ஒரு நியதி.அந்தப் போரில் சில நேரங்களில் அவனுக்கு வீர மரணம் நேரும்.. அன்றும் பெற்றவள் பயந்து பயந்து தான் வளைய வந்தாள் இன்றைய நாகரீக மாற்றங்கள் மட்டும் என்ன  பெரிதாக செய்து விட்டது? அன்றைக்கு இருந்த அதே நிலை தான்…மீண்டும் அதே பாதுகாப்பின்மை தான். அதே பயம் தான்.இப்படிப் பட்டப்  படிப்பு அறிவு  நமக்குத் தேவையா?  இப்படியாவது கல்வி தேவையா?  கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவ மாணவியின்  உயிரும் உத்தரவாதமின்றி அராஜகத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட அவலநிலை உருவாகிக் கொண்டு வரும் வேளை இது..! இதிலிருந்து பொறுப்பையோ பாதுகாப்பையோ அந்த நிறுவனங்கள் ஏற்காத போது  நாமாவது கவனிக்க வேண்டாமா?  தயவுசெய்து  அரசியலுள் கல்லூரி மாணவர்களை நுழைக்காதீர்கள். வேரிலே விஷத்தைக் கலந்தது போதும் இப்போது வித்திலும் விஷத்தை ஏற்றாதீர்கள். நாளைய இந்தியா இவர்கள் கையில்…கலப்படமில்லாமல் காக்கப் படட்டும்.. இவர்கள் காணும் உலகம் புதிது. ஆதலால் மாணவர்களே….எழுந்திருங்கள்…உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்…..! கல்லூரி திறக்கட்டும் !

இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,.உண்மை சூடேற்ற ஆரம்பித்தது…!  இது சுட்ட உண்மை !  சுடாத உண்மை இல்லை….!

என்னய்யா…இது நீ பாட்டுக்கு அந்தம்மா கையில் மைக்கை கொடுத்துட்டு வாயைப் பார்த்துட்டு நிக்கிறீங்க ..அந்தம்மா நமக்கு எதிரால்ல பேசிட்டு இருக்கு…போயி மைக்கைப் பிடுங்குங்கப்பு….! கூட்டத்தில் இருந்து ஒரு குரல்.

“அம்மா தாயே ! வீட்டுக்குப் போங்க. உங்களைக் கும்பிடுறோம். அடுப்பிலே சோறு பொங்கி நீங்க தின்னுங்க !   நாங்க உண்ணா விரத மிருந்தால் நீங்க  பார்க்காத மாதிரி போங்க !” கூட்டத்தில் முணுமுணுப்பு ஆரம்பமானது.

அட…இருல்ல …எம்மாந்தூரம் போகுதுன்னு பார்ப்பம்……………………போலீசு வேற இருக்கு…அங்கிட்டு காலேஜு பசங்க வேற..பப்ளிக் கூட்டத்தைப் பார்தீல்ல…இப்ப எங்கிட்டிருந்து மைக்கைப் புடுங்குறது….அத்த நீ செய்யலாமுல்ல …பெரீசா சொல்ல வந்துட்டியா ….? மைக்கைக் கொடுத்தவன் தவிக்கிறான்.

இவரு என்ன இப்படிப் பேசுறாரு…இத்த நம்ம தலைவரு கேட்டா உனக்கு சங்கு தாண்டி…! என்று சொல்லிக் கொண்டே நகரந்தான் அவன்.

தலைவா….பார்த்து தல….எதுனா செஞ்சு வெச்சுப்புடாதே…மொதலுக்கே மோசம் போயிருவோம்….என்று மைக்கை வாங்கப் பரபரத்தவர்….திரும்பிப் பார்க்கும் தருணத்தில்..!

“ஊருக்கு உழைத்தால் உதைபட்டுச் சாவாராம்.”  சர மாறியாக கருங்கல் வந்து  பேசிக் கொண்டிருக்கும் சுலோச்சவின் தலையைப் பார்த்து குறி வைத்து விழுகிறது…!.

எதிர்பாராத தாக்குதலால் அப்படியே மயங்கிச் சரிந்தவளை பார்த்து ஓடோடி வருகிறான் ஆனந்த்.கல்யாணியும் கதறிக் கொண்டு போய் பிடிக்கிறாள்.

ஐயோ….அம்மா…! என் அம்மா மேலே எவண்டா கல்லெறிஞ்சது ? ஆக்ரோஷத்தோடு கேட்டுக் கொண்டே ரத்தம் வழிந்து கொண்டு மயங்கிக் கிடக்கும் அன்னையைத் தாங்கிய ஆனந்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கூட்டம்….திரண்டு…..என்னது../ ஆனந்தோட அம்மாவா? என்று பரபரப்போடு செயல் படுகிறார்கள்.

கூட்டத்தில் “மாணவன் கல்லெறிந்து மகளிர் காயம்..” என்று யாரோ பத்திரிகைக்குச் தலைப்புச் செய்தி தந்து கொண்டிருந்தார்கள்.

என்னாது? மாணவன் கல்லெறிந்தானா ..? நல்லாருக்கு நியாயம்….நாம எங்கடா இத்தச் செஞ்சோம்…? நியாயம் சொன்ன ஆனந்தோட அம்மாவைத் தூக்கப் பார்த்தங்கடா….. இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது.

அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் , அதில் சுலோச்சனாவை  ஏற்றிக் கொண்டு முதலுதவி அளிக்க கல்யாணியும்,ஆனந்தும் தோழர்களும் மருத்துவமனை நோக்கிப் பறக்கிறார்கள்.

நியாயம் தராசில் கனமாக நிற்கத் தொடங்கியது.

ஒரு நிமிசம் யோசித்துப் பாருங்கடா…நம்ம அம்மாவும் இப்படித் தானே? நம்மளுக்கு இது மாதிரி எதிர்பாராமல் தாக்கப்பட்டு உயிருக்கு எதுனா ஆகி போச்சுனா இப்ப நாம துடிக்கிறாப்பல தானே துடிப்பாங்க…அவங்க நியாயத்தைத் தான் பேசினாங்க….! அவங்க பேசினது  தான் நிஜம். மாணவர்களின் மனங்கள் மருத்துவமனை நோக்கித் திரும்பியது.

பாரதக் குருச்சேத்திரக் களத்தில் கிருஷ்ண பராமாத்மா “போருக்குப் போக வேண்டும் அர்ஜுனா” என்று கீதை  ஓதினார்.   கலியுகத் தாய் ஒருத்தி கல்லூரி மாணவர் படிக்கும் போது, அரசியல்  போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிய கீதா உபதேசம் செய்து தலையில் கல்லடி பட்டாள் !

=======================================

Series Navigationவெளுத்ததெல்லாம் பால்தான்!காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

6 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இன்றைய தமிழகச் சூழலை மனதில் கொண்டு வரையப்பட்டுள்ள சிறப்பான புனைவு இது. ஆனந்து எவ்வாறு நண்பர்களின் ஊக்குவிப்பால் போராட்டத்தில் ஈடுபடுகிறான் என்பதும் அவன் சுலோசனாவிடம் வசமாக மாட்டிக்கொண்டான் என்றுதான் முதலில் எண்ணத்தோன்றியது. ஆனால் மைக்கைப் பிடித்து சுலோசனா அவ்வாறு துணிவாக பொது மக்கள் சார்பாகவும், குறிப்பாக பெற்றோரின் சார்பாகவும் குரல் கொடுப்பார் என்பது சற்றும் எதிர்ப்பாராரது! இது நல்ல கற்பனையுடன் கூடிய திருப்பம்.

    கல்லூரி மாணவர்கள் செய்வது சரியோ,தவறோ என்ற வாதம் ஒருபுறமிருந்தாலும், அவர்களின் பெற்றோர் படும் பாடு பற்றி யாரும் எண்ணிப்பார்த்ததில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்துள்ளார் கதாசிரியர் சிதம்பரம் ஜெயந்தி சங்கர் ! வாழ்த்துகளும் பாராட்டுகளும் ,,,டாக்டர் ஜி. ஜான்சன்..

  2. Avatar
    Dr.G.Johnson says:

    இது உண்மைச் சம்பவமெனில் அந்த தாயின் துணிச்சலையும் சமயோசிதச் செயலையும் நான் பாராட்டுகிறேன்…இதை புதிய கீதா உபதேசம் என்று கூறியுள்ளதும் அருமை! கல்லடி பட்டதால் மாணவர்களின் மனதில் மாற்றம் உண்டானது என்று கதையை முடித்துள்ள விதமும் நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    வடை போச்சே கதை தான்… நடப்பது வேதனையான சமூக நிகழ்வு… அதில் தேவை ஆபரேஷன்.. ஆனால், கதைகள் என்பன ஆப்ரேஷன் கத்தியை வைத்து முதுகு சொறியும் கதையாய் உணர்ச்சி சொறிதலாகவே இருக்கு. டில்லி மேட்டரில் முந்தி கொண்டவர் இதில் வடைபோச்சே என்று இவர் எழுதி விட்டார். தேவை கட்டுரைகளும், அறிக்கைகளும், நேரடி நிதர்சன அறிவுரைகளுமே – சமூக விடயங்களில்.. ஒவ்வொருவனும் கல்லடி தன் வீட்டுக்காரனுக்கு தெரிந்தவர் மேல் விழுந்தான் தான் திருந்துவான் என்றால் இங்கு தேவை 50 கோடி கற்கள்…

  4. Avatar
    karthik says:

    Story is too good. Please think same thing happend for people in srilanka. Ok, Please ask the student to stop protest But why don’t you people enter into protest without watching serials.

  5. Avatar
    கௌரி says:

    அநியாயமாக மாணவர்களின் வாழ்வைப் பாழாக்கி அதில் குளிர் காய்ந்து தனக்கு அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் இக்கால அரசியல் வாதிகளுக்கு சரியான சவுக்கடியாக இருந்தது இந்தத் தாயின் கீதோபதேசம்! இது சுலக்ஷனாவின் தவிப்பு மட்டுமல்ல, ஜெயஸ்ரீ, கௌரி போன்ற தாய் மார்களின் ஒட்டு மொத்தக் குரல்!
    இதில் கதை என்பதையும் தவிர்த்து ஒரு தாயின் பய உணர்வும் வெளிப்பட்டது.
    நன்றி மேடம்
    கௌரி

  6. Avatar
    v. sivanandam says:

    நிகழ்கால சம்பவங்களைக்கொண்டு கதை எழுதுவதில் தங்களின் திறமைக்கு ஈடு இணை யாருமில்லை!

Leave a Reply to karthik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *