ஒரு வைர‌ விழா !

This entry is part 30 of 31 in the series 4 நவம்பர் 2012
சட்டசபைக்கு வைரவிழா
ஜனநாயகம் சுடரேந்தி
இருள் அகற்றி இன்றோடு
அறுப‌து ஆண்டுக‌ள்!

ஆனாலும் சுடரேந்திய‌ கையில்
“மெழுகுவ‌ர்த்தியே” மிச்ச‌ம்.
மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள்
அசைபோடுகின்றார்க‌ள்
கும்மிருட்டை தின‌ந்தோறும்.

ச‌ட்ட‌ச‌பைக்கு
நினைவுத்தூண் பிர‌ம்மாண்ட‌ம்.
ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் தான்
காண‌வில்லை.

அவ‌ர் தொட்டுக்க‌ட்டிய‌தால்
தீட்டு ஆகிப்போன‌து என்று
தீண்டாமை பேசுகின்றார்.
ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம்
காலொடிய‌ விட்டு விட்டு
தூண்க‌ள் நிறுத்துகின்றார்.
இந்த பொய்க்கால் குதிரைக்கும்
கொண்டாடுவோம்
வைர‌விழா.

இது
இவ‌ர்க‌ளின்
அர‌சிய‌ல் காழ்ப்பு உண‌ர்ச்சிக்கு
வைர‌விழா.

ல‌ஞ்ச‌த்தால்
அர‌சிய‌ல் க‌ற்ப‌ழிந்து போன‌த‌ற்கும்
வைர‌விழா.

அர‌சிய‌ல் ச‌ட்ட‌ப்புத்த‌கத்தின்
அத்தியாய‌ங்க‌ள் எல்லாம்
ஊழல் க‌ரையான் அரித்த‌ பின்னே
அட்டைக‌ள் ம‌ட்டும் எஞ்சிய‌
அவ‌ல‌ங்க‌ளின் அணிவ‌குப்புக்கும்
வைர‌விழா.

வாக்குப்பெட்டிக்குள்
க‌ன‌த்த‌ இருள்
குத்த‌கை எடுத்திருக்க‌
குத்து விள‌க்குக‌ள்
ஏற்றிக் கொண்டாடும்
வைர‌விழா.

ஜ‌ன‌நாய‌க‌ம் முட‌மாகிப்போன‌பின்
இந்த‌ ப‌ள‌ப‌ள‌த்தூண்களா
அதற்கு
முட்டு கொடுக்க‌ப்போகின்ற‌ன‌?

உன‌க்கு மின்சார‌ம் த‌ர‌மாட்டேன்.
உன‌க்கு த‌ண்ணீர் த‌ர‌மாட்டேன்…என‌
மொழிப்ப‌ற்று அக‌ழி யாக‌
த‌னித்த‌னிக்கோட்டைக‌ள்
உருவாகிய‌ பின்னே
“சாரே ஜ‌ஹாம்ஸெ அச்சா”கீத‌ம் கூட‌
அப‌ஸ்வ‌ர‌ம் ஆகிப்போன‌து.
இருந்தாலும் அதுவே இசைஅமைக்க‌
கொண்டாடுவோம் வைர‌விழா.

நம் “பாரதவிலாஸ்” கட்டிடத்துள்
“அர‌க்குமாளிகைக‌ள்” க‌ட்டும்
க‌றுப்புப்ப‌ண‌ அர‌க்க‌ர்க‌ள்
மறைவாய் நின்று
ரிப்பன் வெட்டி
திறப்புவிழா நடத்தும்
அபாயங்கள் நம் தோள்மீது.
இருப்பினும் கொண்டாடுவோம்
வைர‌விழா.

அசோக‌னின் வ‌ளையாத‌
சிங்க‌த்தூண் கூட
ஒரு புத்த பாசத்தில்
த‌மிழ்நாட்டைத்தாண்டி
கூனிக்குறுகி…..
ஈழத்தை
தமிழனின் சவக்காடு ஆக்கிய‌
அந்த‌ சிங்க‌ள‌த்தானுக்கே
வ‌ளைந்து நெளிந்து
ச‌ல்யூட் அடிக்கிற‌து.

இது என்ன‌
ராஜ‌ (அ)த‌ர்ம‌ம் என்று
தெரிய‌வில்லை?
ந‌ம‌க்கு எதுவும்
தெரிய‌த்தேவை இல்லை.
என்பது தானே
இவர்களின் “அர்த்த சாஸ்திரம்.”

அதனால் தான்
இன்னமும்
த‌மிழ‌ன் என்ற‌
த‌ட‌ம் தெரியாம‌ல்
முக‌ம் தெரியாம‌ல்
அக‌ம் தெரியாம‌ல்
த‌ட‌விக்கொண்டிருக்கிறான்..
த‌மிழ‌ன்.

காகித‌த்தில் போட்டாலும்
க‌ம்பியுட்ட‌ரில் போட்டாலும்
ஓட்டு போடும் ப‌ட்ட‌ன்க‌ள்
அத்தனையும் வைர‌ங்க‌ள்.

ஆனாலும்
வைரங்கள் அவ‌ர்க‌ளுக்கு
ப‌ட்ட‌ன்க‌ள்  ந‌ம‌க்குத் தான்.

இருந்தாலும்
வைர‌விழா அழைக்கிற‌து.
வாருங்க‌ள் எல்லோரும்
கொண்டாடுவோம்.

எதுவாயினும்
எப்படியாயினும்
“ஓட்டு”போற்றுதும்!
“ஒட்டு”போற்றுதும்!
வெள்ளையரின்
வேட்டுகள் நடுவிலும்
நாற்றுகள் பாவி நட்டுவளர்த்து
நம் நாளம் நிரப்பிய‌
“ஓட்டு போற்றுதும்!”
“ஓட்டு போற்றுதும்!”

=====================================================ருத்ரா

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !தடங்கலுக்கு வருந்துகிறோம்
author

ருத்ரா

Similar Posts

7 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்பின் திரு ருத்ரா அவர்களுக்கு,

    கவிதையுள் மின்னும் ஒவ்வொரு வரியும் ரிவிட் அடித்தது போல நச் சென்று…அருமை..!

    ///உன‌க்கு மின்சார‌ம் த‌ர‌மாட்டேன்.
    உன‌க்கு த‌ண்ணீர் த‌ர‌மாட்டேன்…என‌
    மொழிப்ப‌ற்று அக‌ழி யாக‌
    த‌னித்த‌னிக்கோட்டைக‌ள்
    உருவாகிய‌ பின்னே
    “சாரே ஜ‌ஹாம்ஸெ அச்சா”கீத‌ம் கூட‌
    அப‌ஸ்வ‌ர‌ம் ஆகிப்போன‌து.
    இருந்தாலும் அதுவே இசைஅமைக்க‌
    கொண்டாடுவோம் வைர‌விழா.////

    இது தான் பெரிய ரிவிட்…!

    மிக்க நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    தீபத் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம்,
    அன்றாவது வருமா நம் மின்சாரம்?…டாக்டர்.ஜி.ஜான்சன்.

  3. Avatar
    e.paramasivan ruthraa says:

    நன்றி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே!உங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி.

    ஜனநாயக தோ”ரண”வாயில் அல்லவா!
    போருக்குப்பிறகும்
    நமக்கு “விழு”ப்புண்கள் தான்.
    பெட்டிக்குள் ஓட்டுகள் “விழு”ந்த பிறகு
    ஏற்பட்ட “புண்கள்” எத்தனை?எத்தனை?

    தேசிய ஒருமைப்பாட்டுக்கீதம்
    நம் காதில் விழுவதே இல்லை.
    மைல்கற்கள் அறுபது ஆண்டு
    என்று காட்டினாலும் அது
    ஆறு பூஜ்யங்களைத்தான் காட்டுகிறது.

    பூஜ்யம் ஒன்று…
    சுதந்திரம் இன்னும்
    நமக்கு “அர்த்தப்படவில்லை”

    பூஜ்யம் இரண்டு…
    முந்த்ராவில் ஆரம்பித்து கிரானைட் கல் வரை
    நீண்டு கொண்டேயிருக்கிறது
    ஊழல் பேய் நிழல்.

    பூஜ்யம் மூன்று…
    ஓட்டு போடுவது இன்னும்
    நமக்கு கும்பமேளா மட்டுமே.

    பூஜ்யம் நான்கு…
    வறுமைக்கோடு…பூமியை விழுங்கிவிட்டார்கள்.
    இருப்பினும்
    இந்த பூமத்திய ரேகை மட்டுமே பாக்கி.

    பூஜ்யம் ஐந்து…
    நம் கல்லாப்பெட்டி “ஸ்விஸ் பேங்கில்”.

    பூஜ்யம் ஆறு…
    அழியாத “நான்கு வர்ணத்தில்”
    இன்னும் நம் மூவர்ணக்கொடி.

    அன்புட‌ன்
    ருத்ரா

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா,

    ஆறு முகமே ஆறு !
    ஆண்டவன் கட்டளை ஆறு !

    “ஆறு பூஜியங்கள்” கவிதையே ஒரு பெரிய புராணம் போல் நீள்கிறது. ஜாதிவாரிச் சலுகை, பதவி, உதவி, இட ஒதுக்கீடு பாரதப் பசுஞ் சோலையில்,ஓங்கி வளர்ந்த கம்பத்தில் வந்தே மாதரம் பாடுது !
    ///பூஜ்யம் ஆறு…
    அழியாத “நான்கு வர்ணத்தில்”
    இன்னும் நம் மூவர்ணக்கொடி.///
    ஒற்றை நிறச் செங்கொடியும், உதய சூரியன் அத்தமிக்கும் கருப்புக் கொடியும் நாட்டுக்கு நல்ல பயன் தருமா ?
    சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    e.paramasivan ruthraa says:

    அன்புள்ள திரு பரமசிவம் அவர்களே

    என் கவிதை தங்கள் ரசனையால் பாராட்டப்படும்போது தான் பட்டை தீட்டப்பட்டு வைரங்கள் ஆகின்றன.உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.

    அன்புடன் ருத்ரா

  6. Avatar
    e.paramasivan ruthraa says:

    விஞ்ஞானத்தமிழ் வித்தகர் திரு சி.ஜெயபாரதன் அவர்களே

    அந்த ஆறு பூஜ்யங்களுக்குள்ளே புதைந்துகிடக்கும் அரசியல் புராணங்களை
    அருமையாய் பட்டியல் இட்டு காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    அன்புடன் ருத்ரா

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *