கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8

This entry is part 30 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சென்ற வாரம் கிறிஸ்துவம் ஐரோப்பாவில் கோலோச்சிக்கொண்டிருந்த மத்திம காலத்தில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்களின் டெம்போரல் லோப் வலிப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியது, அது எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது, அவர்களை மற்ற கிறிஸ்துவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்த்தோம். இந்த புனிதர்கள் தங்களுக்கு இயேசு காட்சியளித்தார் என்பதையும், மேரி காட்சியளித்தார் என்பதையும் உலகுக்கு சொன்னதும் அது எவ்வாறு கிறிஸ்துவத்தை வலுப்படுத்தியது என்பதையும் அறிந்தோம்.

ஒரு சமூகத்தின் உள்ளே இருக்கும் பாதிப்புகள், சூழ்நிலைகள் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள்களையும் பாதிக்கின்றன. அந்த சூழ்நிலைகளே, இந்த வலிப்பின் மூலம் தோன்றும் பிரமைகளுக்கும், காட்சிகளுக்கும் பொருள் எந்த மாதிரியான பொருளை இந்த வலிப்பு நோயாளர்களுக்கு அளிக்கின்றன என்பதும் இங்கே ஆய்வுக்குரியது.

கத்தோலிக்க மதம் வலுவற்ற நிலையிலும், ஆனால் மாறுபட்ட கிறிஸ்துவ இறையியல்களும், கிறிஸ்துவ இறையியல் பரிசோதனைகளும் அதிகமாக நடந்துகொண்டிருந்த அன்றைய அமெரிக்காவின் சூழ்நிலையில் உருவாகிற ஜோஸப் ஸ்மித் அமெரிக்காவுக்கே உரித்தான ஒரு மதத்தை, அதாவது இயேசு கிறிஸ்து அமெரிக்காவுக்கு வந்தார் என்பது போன்ற பொருளை அந்த காட்சிகளில் அடைகிறார்.

மத்திய காலத்தில் கிறிஸ்துவம் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் வந்த டெம்போரல் லோப் வலிப்பு நோயாளர்கள் தாங்கள் கண்ட காட்சிகள் ஏற்கெனவே இருக்கும் அரசியல் ரீதியில் வலிமையான கிறிஸ்துவ இறையியலின் தொடர்ச்சியாகவே தங்களை காண்கிறார்கள். அதுவும் ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெண்மணி இரண்டு கிறிஸ்துவ நாடுகளுக்கு (பிரான்ஸ், இங்கிலாந்து) இடையே நடந்த நூறாண்டு போரில் பிரான்ஸுக்கு வெற்றி வர வேண்டும் என்று இறைவனால் அனுப்பப்பட்டதாக கூறுவதும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது. அந்த இறுக்கமான போர்ச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஜோன் ஆப் ஆர்க் அந்த போர்ச்சூழலில் ஒரு பக்கத்துக்கான வெற்றிக்காக, அதுவும் தான் எந்த நாட்டை சார்ந்தவரோ அந்த நாட்டின் வெற்றிக்காக இறைவனால் அனுப்பப்பட்டதாகவும், வழிநடத்தப்படுவதாகவும் நினைத்துகொள்வது எந்த அளவுக்கு சூழ்நிலையால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

உலக மக்கள் அனைவருக்கும் சொல்வதற்காக, ஒரே மூச்சில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட செய்தியை, தங்களது சூழ்நிலைக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத செய்தியை, இப்படிப்பட்ட ”இறைவனால் வழிநடத்தப்படுகிறவர்கள்” சொல்வதில்லை. இவர்களுக்கு வரும் ஒவ்வொரு செய்திக்கும் அந்தந்த சூழ்நிலையே காரணமாகிறது. அந்த தனிநபரின் நெருக்கடிகளின் போது அவருக்கு தோன்றும் கருத்துக்களே இறைவனின் வாசகங்களாக அவர்களால் கூறப்படுகின்றன. இதுவே ஜோஸப் ஸ்மித், பஹாவுல்லா, ஜோன் ஆப் ஆர்க் இன்னும் இது பலரின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுகிறது. இதுவே இவர்களை அவநம்பிக்கையோடு மற்றவர்கள் அணுக முகாந்திரமாகவும் அமைந்துவிடுகிறது.

புராடஸ்டனிஸம் தோன்றிய காலம் 1500களில் விவசாயிகள் புரட்சி ஐரோப்பாவில் வெடித்தது. இது peasants war என்று அழைக்கப்படுகிறது. இந்த விவசாயிகளின் புரட்சி1524–1526 காலத்தில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இந்த விவசாயிகளின் போரை தூண்டியவர்களாக நிகோலஸ் ஸ்டோர்க்(Nicholas Storch), தாமஸ் முண்ட்ஸர் Thomas Müntzer ஆகியோர் கூறப்படுகின்றவர்கள். இவர்களே அனபாப்டிஸ்ட் கிறிஸ்துவ இயக்கத்தை தோற்றுவித்தவர்களாகவும் கூறப்படுகின்றனர். இவர்கள் நேரடியாக பரிசுத்த ஆவி (holy sprit) மூலமாக காட்சிகளை பெறுவதும், அதன் மூலம் இவ்வுலக வழிமுறைகளை அறிந்துகொள்வதையும் முக்கியமாக கருதினர். இவர்களை இன்றைக்கு பரவி வரும் பெந்தகொஸ்தே கிறிஸ்துவ இயக்கத்தின் மிக மிக முன்னோடிகள் எனலாம்.

இவர்கள் விவசாயிகளின் போர் தலைவர்களாகவும் அதன் ஆன்மீக தலைவர்களாகவும் இருந்தார்கள். இவர்களின் வார்த்தையில் கடவுளின் வார்த்தைகள் பைபிளோடு முடிந்துவிடவில்லை. இதனை “living word of God” என்று அழைத்தார்கள். அதாவது பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டவர்கள் தங்களது இறையாவேசத்தில் இறைவனின் வார்த்தைகளையும் தீர்க்கதரிசனங்களையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் என்று போதித்தார்கள். ஆகவே வெறும் பைபிளின் உள்ளே இருக்கும் வார்த்தைகளையே வைத்துகொண்டு உலக விவகாரங்களில் முடிவுக்கு வருவது தவறு என்றும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் புதிய புதிய உயிருள்ள இறைவனின் வார்த்தைகள் வந்துகொண்டேயிருக்கும் என்று கூறினார்கள். பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு இறைவசனங்களை தருவதை மதத்தின் முக்கியமான பகுதியாக அறிவித்துகொண்டனர்.

உதாரணமாக முண்ட்சர் தனது உரைகளில் மேரியும் அப்போஸ்தலர்களும் ஞானஸ்னானம் செய்தவர்கள் அல்ல என்றும், தண்ணீர் மூலம் ஞானஸ்னானம் அடைவது கீழானது என்றும் பரிசுத்த ஆவியால் ஞானஸ்னானம் அடைவதே மேலானது என்றும் கூறினார்.
நிக்கோலஸ் ஸ்டார்க் தனது உரைகளில் கனவுகள், இறை காட்சிகள், இறையாவேசத்தில் வரும் தீர்க்கதரிசனங்களே முக்கியமானவை என்று கூறினார். இருவருமே இதோ உடனே உலகம் முடிவடைந்து இயேசு வரப்போகிறார் என்று தங்களது பரிசுத்த ஆவி தூண்டுதலில் கூறியதாக கூறினர். இவர்களால் தூண்டப்பட்ட விவசாயிகளின் போர் மிகப்பெரிய அழிவை ஐரோப்பாவுக்கு கொண்டுவந்தது. இந்த இருவருமே ஐரோப்பிய கம்யூனிஸத்தின் மூத்த முன்னோடிகளாக கருதப்படுகிறார்கள். முல்ஹாசன் நகரத்தை ஆக்கிரமித்த முன்ஸ்டரது படைகள் அங்கு முதன் முதல் கம்யூனிஸ அரசாங்கத்தை நிறுவனம் செய்தனர். 1525இல் battle of Frankenhausen என்ற போருக்கு முண்ட்ஸரது 8000 விவசாயிகள் படையும் அன்றைய பிரபுக்கள் படையை எதிர்கொண்டது. அந்த போரில் கடவுள் நம் பக்கமே இருப்பார் என்று இறைவசனம் கூறியிருந்தார். முண்ட்ஸரது படைகள் படுதோல்வி அடைந்து இவர் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். சித்ரவதையின் முடிவில் தனது தவறுகளை ஒப்புகொண்டு கத்தோலிக்க மதத்தை தான் ஏற்றுகொள்வதாக கூறியபின்னால், அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார். கத்தோலிக்க சர்ச்சால் அவரது தலையும் உடலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன.


அன்று இவர்களது தத்துவத்தின் விளைவாக தோன்றிய அனபாப்டிஸம் என்ற கிறிஸ்துவ பிரிவு (2) அதனுள் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அன்னிய பாஷை பேசுவதையும், நடனமாடுவதையும், பரிசுத்த ஆவியால் விழுவதையும் ஊக்குவித்தது. In Germany some Anabaptists, “excited by mass hysteria, experienced healings, glossolalia, contortions and other manifestations of a camp-meeting revival”.[2] ஆகவே இது இன்றைய பெந்தகொஸ்தே இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்துள்ளது என்று அறியலாம். பெந்தகொஸ்தே இயகக்தினரை இன்றைய நியூரோஅறிவியலறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.

பெந்தகொஸ்தே கூட்டங்களில் கத்துதலும், தாறுமாறாக நடந்துகொள்ளுதலும், அன்னிய பாஷை பேசுவதாக கூறிகொண்டு பேசுவதும், வலிப்பு வந்தாற்போல நடந்துகொண்டு பரிசுத்த ஆவி வந்ததாக கூறிக்கொள்வதும் பார்க்கலாம். இதனை self induced epileptic seizure என்று அழைக்கிறார்கள்.

இவை பெந்தகொஸ்தே கூட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள். இவர்கள் பரிசுத்த ஆவி தங்கள் மீது இறங்குவதாக கூறிக்கொள்கின்றனர்.


குழந்தைகளையும் இது போன்ற வழிகளில் இந்த பெற்றோர் ஊக்குவிப்பதை இந்த வீடியோவில் காணலாம்.

அன்னிய பாஷை பேசுவதாக கூறினாலும் இது pseudolanguage என்று அறிவியல் ஆய்வுகளில் வரையறுக்கப்படுகிறது. இது கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவ போதகர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியால் அன்னிய தேசங்களின் பாஷைகளை பேச சக்தி கொடுக்கப்பட்டோம் என்று காண்பிக்க இவ்வாறு பொய்யான மொழி பேசுவது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அன்னியபாஷை என்பது உலகத்தில் எங்குமே பேசப்படாத மொழிகளைப்போல பொய்யாக பேசுவது. அதனாலேயே இது பொய்மொழி என்று அறிவியல் வரையறுக்கிறது.
இவ்வாறு பொய்மொழியை பேசுவது சில மணிநேரங்கள் பழக்கப்படுத்திகொண்டாலே யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர்
http://psycnet.apa.org/journals/abn/95/1/21/
Glossolalia as learned behavior: An experimental demonstration.
Spanos, Nicholas P.;Cross, Wendy P.;Lepage, Mark;Coristine, Marjorie
Journal of Abnormal Psychology, Vol 95(1), Feb 1986, 21-23. doi: 10.1037/0021-

பெந்தகொஸ்தே (Pentecostalism) இயக்கத்திலுள்ளவர்கள் மத்தியில் மற்ற புராடஸ்டண்ட் கிறிஸ்துவ மதத்திலுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் மனபிறழ்வு நோய்களை விட ஆறு மடங்கு அதிகமாக காணப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது (3) இது ஏன் என்பது பொதுவாக ஒரு பெந்தகொஸ்தே இயக்கத்தின் கூட்டத்துக்கு செல்பவருக்கு எளிதில் புலப்படலாம்.

பெந்தகொஸ்தே இயக்கத்திலிருந்து வெளியேறிய பலரும் இது ஒரு முக்கியமான பிரச்னை என்று கருதி பேசுகிறார்கள் (4)

இணைப்புகள்

1) http://en.wikipedia.org/wiki/Nicholas_Storch
http://en.wikipedia.org/wiki/Thomas_M%C3%BCnzer

2) George Williams, The Radical Reformation (Philadelphia: Westminster Press, 1962), 443

3) http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8088740
Religious affiliation and psychiatric disorder among Protestant baby boomers.
Koenig HG, George LK, Meador KG, Blazer DG, Dyck PB.
Duke University Medical Center, Durham, NC 27710.

4) http://expentecostalforums.yuku.com/topic/4328#.Ty9dnMVSR8s
http://www.ex-christian.net/topic/35446-anxiety-disorders-and-pentecostalism/

 

 

 

Series Navigationதற்கொலைமும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா
author

ஆர் கோபால்

Similar Posts

3 Comments

  1. Avatar
    r.jayanandan says:

    the video dances in this article, looks like our marriamman temple samiyadigal, in the odukkai drum sounds.
    THE LANGUAGE & THE WAY OF THE PREACHERS are mesmerizing people into mad state and those addicted dances.

  2. Avatar
    தங்கமணி says:

    @ஜெயாநந்தன்
    நீங்கள் சொல்லுவது நல்ல ஒரு உவமை என்றாலும், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறேன்.மாரியம்மன், பஜனை போன்றவைகளில் ஒரு இசையும் தாளமும் இருக்கின்றன. அதன் இசைக்கேற்ப உடல் ஆடுகிறது. தலை ஆடுகிறது. இங்கே சிறுவர்கள் கீழே உண்மையிலேயே வலிப்பு வந்தவர்கள் போல உதறுகிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வலிப்பு வந்து இழுத்துகொள்கிறார்கள்.

  3. Avatar
    R. Jayanandan says:

    sir,
    there is a tendency in the epilepsy literature to think of an epilepsy network as a localized phenomenon, e.g., large cluster of neurons restricted to sharply delineated region such as the hippocampus.

    At it most fundamental level of description of the occurrence of an epileptic seizure represents a qualitative changes in the dynamic change in activities.

    R. Jayanandan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *