கருணாகரன் கவிதைகள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆய்க்கினை

இனியும் யாரும் வரவேண்டாம்
போதும் இந்த ஆய்க்கினைகள்

அம்மா, ஈரத்தின் வாசனையை
கடல் தர மறுத்தபோது
ஆறும் குளமும் தங்களுடலில்
இரத்தத்தின் வெம்மையையும்
கண்ணீரின் சூட்டையும் ஏற்றபோது
எங்கள் பாதைகளில்
இருள் உறைந்தது அழுகுரல்களின் வேர்களில்.

போர் விரும்பிகள்
குதிரைகளையும் ஆயுதங்களையும்
போர் வீரர்களையுமே
தங்களின் கனவில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் மனமுட்கள் குவிந்து
எல்லாப்பாதைகளும் அடைபட்டாயிற்று

அமைதியற்ற குருவி
தன் இரையை எங்கே தேடுவது?
குருதியோடும் மண்ணில்
விளைந்து கொண்டிருக்கும் புழுக்களுக்கிடையில்
வரலாற்றின் முகம் குரூரமடைகிறது
தோற்றுவிழும் குதிரையின் முகத்தோடு.

வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட
தெருக்களில் ஒலிக்கும்
சாவுப்பாடலுக்கு யார் இறுதி அஞ்சலியைச் செலுத்துவது?
தினமும்
ஒப்பாரி சொல்லியழுத பெண்கள் மூர்ச்சையற்றுப் போய்க்கிடக்கிறார்கள்
ஒவ்வொரு வீட்டிலும்.

தியாகிகளின் பட்டியலை
யாரோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
“அந்த வானொலி“யில் வரும் செய்திக்கு
யாராலும் ஏற்கப்படாத மரியதைக்கு
எந்த நிறமுமில்லை.
அது எல்லாருடைய காலடியிலும் கிடந்து நசிபடுகிறது
வன்மத்தின் ஊனம் கசிய.

வீரம் விளைந்ததாக நம்பப்படும் நிலத்தில்
அழுகுரல்கள் விளைகின்றன
நீங்கள் விலக்க முடியாத முகங்களில்.

எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்கமுடியாத வீரத்தின் முன்னே
நான் எறிவேன்
நாயின் மலத்தை இந்த வரலாற்றின் விதி முன்னே.

00

புலன் மறுப்பு

புண் நாறிப் பழுத்த காலத்தில்
புலன்களுக்கு விதிமுறைகள் வந்தன
அவர்களிடம் வாய்மட்டுமே இருந்தது
பலருக்கும் காதுகளே அனுமதிக்கப்பட்டன.

அவர்கள் பேசுவதற்காகவே படைக்கப்பட்டிருந்தார்கள்
நாங்கள் கேட்பதற்கே அனுமதிக்கப்பட்டோம்.

ஐம்புலன்களும் யாருக்கும் தேவையில்லை
என்றொரு விதி வந்தபோது
எல்லோரும் மௌத்தைக் கொடுத்து
அதை வரவேற்கும்படியாயிற்று
அதன்பிறகு
அந்த விதிக்கு எல்லோரும்
விருந்தாகிப் போனார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகள்
இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன
பிணங்களின் நடுவில்..

எப்போதும் பிணங்களை ஆராதிப்பதே
ஒவ்வொருவரினதும் பொறுப்பான செயல்
என்ற விதி எழுதப்பட்டுள்ளது
சேற்றில் விழுந்து நாறும் நாட்களின் மீது.

தோல்வியும் அவமானமும்
சுற்றிவளைத்தபோதும்
எல்லோருடைய குரல்வளையிலும்
நெருப்பு மூண்டபோதும்
யாரும் அதைக்காட்டிக் கொள்ளவேயில்லை.

ஆறாவது விதியும் நூறாவது விதியும்
உறைந்தது ஒருசிறு வினையற்றும்
சவக்குழியில்.

எதற்கும் பெறுமதியில்லை
யாருக்கும் மதிப்பில்லை
உனக்குத் துப்பாக்கியைக் கையாளத்தெரியுமா
அந்த வித்தையை அறிந்தவர்கள்
எதுவும் செய்யலாம்.

இதோ மகுடம்
சூடிக்கொள்ள முதல்
உன்னுடைய விசுவாசம் குறித்து
நிரூபித்துக்கொள்

விவசாயிகளுக்கு பயிரிடுவதைத் தவிர வேறெதைத்தான் தெரியும்
மருத்துவர்களுக்கு நோயைவிட்டால் வேறு கதிதானென்ன
கடலோடியிடம் கடலின் ஞாபகங்களைத்தவிர
வேறெதுதானுண்டு
உத்தியோகத்தர்கள் சனங்களையும் விதிகளையும் வைத்துக் கொண்டு
என்னதான் செய்ய முடியும்

துப்பாக்கியோ எல்லாவற்றுக்கும் மேலானது
யாரையும் நிறுத்தவும் இயக்கவும் முடிந்த
அதன் விசையில்
எல்லாவற்றுக்கும் மேலான அதன்
பேருருவில்
உனது வரலாறும் நிகழ்காலமும்
அடக்கம்.

இதோ
புலன்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு கருவியைக்
கொண்டு உங்களின் சுதந்திரத்தை அறியுங்கள்.

00

அபாயவெளி

பொய்யின் எல்லா அழகும்
ஒரு நொடியில் மறைந்தபோது
முதல்முறையாக அவர்கள் கண்டார்கள்
யதார்த்தத்தின் அபாய வெளியையும்
ஒரு நாளின் இதயத்தையும்

இருளும்
மாய வர்ணங்களும் படர்ந்திருந்த
ஒரு நிலப்பரப்பில்
முதற்குமிழி உடைந்த கணத்தில்
பேச்சோசையெழுந்தது
பாட்டோசை கேட்டது
பாங்கொலியோடு சூரியோதயம் நிகழ்ந்தது.

உடைந்த மாளிகையின்
அடியில்
இருளடர்ந்த பதுங்குகுழியின்
உள்ளே
முதற்தடவையாக ஒளி சுவறியதைக் கண்டேன்

ஊற்றுவாய்கள் அடைபட்டிருந்த
ஆழ்பதிவில்
சிலுவை முளைத்திருந்தது.
சிலுவைக்கருகில்
கைவிடப்பட்டிருந்த வாளில்
ஒட்டியிருந்த நெருப்புத்துளிகளில்
பறிக்கப்பட்ட உயிர்களின்
கடைசி வாக்கு மூலங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன

கல்லாக்கப்பட்ட முகங்களை
முத்தமிடத்துடிக்கும் தாயொருத்தியின் நிழல்
கண்ணீரில் மிதக்கக்கண்டேன்
அப்போது
கல்லாக்கப்பட்ட முகங்களிலிருந்து
பீறிட்டெழுந்தது
ரத்தம்

சிதிலமாகியிருந்த நாட்களில்
விதிக்கப்பட்டிருந்த
கோடுகளை அஞ்சிய குழந்தைகளை
வாரியணைத்துக் கொண்டு போகும்
வயோதிபனிடம்
இருக்குமா இன்னும்
வாசலற்றிருந்த சமாதியின் தடயங்கள்.

00

சிலுவை, இறுதி முத்தம், தண்டனை, உண்மை
என்பவற்றுக்கான முகாந்திரம்

மாம்பூக்கள் நிரம்பிய முற்றத்தில்
இன்று கோலமில்லை
கண்ணீர்த்துளிகளைப் பெருக்கிய காலையில்
ஒரு
மூடப்பட்ட சவப்பெட்டி
கடக்க முடியாத நிழலாய்
சாட்சியாய் வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கும் உங்களுக்குமிடையில்

ஓலங்கள்
அழுகை
கோபம்
வசைகள்
மன்னிப்பில்லை
மகிமையில்லை
பெருந்துக்கத்தின் முன்னே
எல்லா வேஷங்களும் களையப்படுகின்றன
அவர்களை
அழவிடுங்கள்
அவர்கள் வசைபாடட்டும்
அவர்கள் அப்படித்தான்
உண்மையைப்பேச விரும்புகிறார்கள்.
உண்மையைப் பேசுவதற்காக
ஒரு உயிரைக் கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது
அதுவும் இந்தக்கணத்தில் மட்டுமே
அவர்களால் அப்படிப் பேசமுடியும்

திறக்கப்படாத சவப்பெட்டியில்
ஒரு சாவியுண்டு
அதுதான் இப்போது
உண்மையைத்திறக்கிறது

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட
வாக்கு மூலம்

எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்

உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனை;குரிய தல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்

நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா

காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்

00

அகாலம்

இந்தத்தலையைக் கிள்ளியெறியுங்கள்
அவமானங்களைச் சகிக்க முடியாது
இனியும்
முட்டாள்தனங்களுக்காகவும்
கோழைத்தனத்துக்காகவும்
உயிரும் குருதியும்
நான் தரவேண்டுமெனில்
இதோ என்னுடைய தலை.

போகட்டும்
மிச்சமிருக்கும் துயரமெல்லாம்
;
நெருப்பையும் ரத்தத்தையும்
இன்னும் நினைவிற் சேமித்து வைத்திருக்க முடியுமா
அவமானங்களால் நிரம்பியிருக்கும் துயருக்குள்
சிதைந்த சொற்களின் ஓலத்தோடு
துடித்துக் கொண்டிருக்கிறது
நிராகரிக்கப்பட்ட இதயம்.
.

கண்ணீருக்குள் மிதக்கின்றன
சொல்ல முடியாது தத்தளிக்கும்
உண்மையும்
வெல்ல வழியற்ற
காலமும்.

இந்த வெயிலில்
மழைக்காக காத்திருக்கும்
செடிகளிடமும் புற்களிடமும்
இலையுதிர்ந்த மரங்களிடமும்
என்னுடைய ரகசியங்களைப் பகிர்ந்துள்ளேன்.

அந்த ரகசியங்களில்
வெளிப்படையாகப் பேசுவதற்கிருந்த
நாலு வார்த்தைகள்
சூரிய ரேகைகளாய் ஒளிரும்
அன்பின் துளிகள்
அழுக முடியாத
நாறமுடியாத
உண்மையின் குருதி
அபாயங்கள் சூழும் எதிர்காலத்தைக்கடந்து போவதற்காக
துலங்கிய சிறு வழி
என்று மிகச் சிலவேயிருந்தன

என்றபோதும்
அதைப்பகிர்வதற்கு யாருமேயில்லை

என்னிடம் முகமூடிகள் செய்யும்
நுட்பமில்லை
அதனால்
நண்பர்கள் அந்நியர்களாகிவிடுகிறார்கள்
அல்லது
பகைவர்களாகி விடுகிறார்கள்.

ஆடுகள் கோழிகள் பன்றிகள் மாடுகள்
மனிதர்கள்
எல்லாமும் ஒன்றென்றே மதிப்Pடு செய்யப்படுகிறது.

உன்னிடம் எது இருக்கிறது என்பது முக்கியமல்ல
நீ
யாதாயிருக்கிறாய்
என்பதுமல்ல
உன்னிடம் முகமூடிகளுண்டா
கவசங்களுண்டா
நீளமான நாக்கும்
வளையக் கூடிய முதுகும் உண்டா
தோத்திரங்களும்
வழிபாட்டுச்சூத்திரங்களுமுண்டா என்பதே
எதிர்பார்க்கப்படுகிறது.

அவமானப்படுத்தல்களால் நிரம்பிய தலையை
எடுத்துவிடுங்கள்

கூனல் முதுகு இல்லையென்பதற்காகவும்
தொங்கும் நாக்கில்லாமற்போனதற்காகவும்
மாற்றாகத் தருகிறேன் அதை.

00

பலி

பீரங்கிகளை அதிகம் நம்பும் நாட்களில்
உலர்ந்து போகின்றன
எல்லா வார்த்;தைகளும்
எல்லாக்கனவுகளும்

இப்போது
ஒரு சொல்லுக்கும் மதிப்பில்லை
கண்ணீர் மிக்க ஒளியுடையதாகக் கண்டேன்
மண்டியிட்டழுகின்றேன்
பீரங்கியின் முன்னே
வெட்கம்தான் என்றபோதும்.

யாரையும் காப்பாற்ற முடியவில்லை
யாருடைய கண்ணீரையும் துடைக்கவும் முடியவில்லை
கண்முன்னே
பலிடப்படுகின்றன கனவுகளும் நம்பிக்கைகளும்

பொறிகளின் மேல்
நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்
உடைந்து விழுகிறது பாலம்

பீரங்கிக்கில்லை
இதயமும் கருணையும் என்றறிந்தபோதும்;
மண்டியிட்;டழுகிறார்கள்
முதியபெண்கள்

என் செய்வேன்
என் செய்வேன்

முள்முருக்க மரங்கள் பூத்துச் சொரியும்
ஒழுங்கையில் போகிறாள்
வசைகளோடு
ஒரு பெண்
அவளைத் துயிலுரிந்த நிகழ்காலம்
பைத்தியக்காரியாக்கவும் துடிக்கிறது.

பீரங்கி அவளைத் தோற்கடித்து விட்டது

பைத்தியக்காரர்களின் கூடாரத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
பீரங்கி
தோற்கடித்து வருகிறது
எல்லோரையும்
சிதைந்த நாட்களைக் கூட்டியள்ளி
சிதையிலேறு
எல்லாம் முடிந்ததென்று

பீரங்கிகளை அதிகம் நம்பும் காலத்தில்
புலன்கள்
கல்லறைக்குள் வைக்கப்படுகின்றன
உயிரைச் சிலுவையிலறையுங்கள்
இல்லையென்றால்
கண்ணீரில் கரைத்து
பதுங்கு குழிக்கடியில் புதைத்து விடுங்கள்.

பலியிடுங்கள்
உங்களைப் பலியிடுங்கள்
பலியிட முடியாதபோது
பீரங்கிவருகிறது பலிகொள்ள
எல்லாவற்றையும் விட
எல்லாவற்றையுமே விட
துப்பாக்கிகள்
பச்சையுடைகள்
சப்பாத்துகள்
வலிமையாகிவிட்டன
இந்தப்பூமியையும் விட
இந்த வானத்தையும் விட

இது பீரங்கிகளை அதிகம் நம்பும் காலம்

எனது வார்த்தைகள்
வெளியே வீசப்பட்டிருக்கின்றன
உலர்ந்த சருகாய்
குப்பையாய்

பீரங்கியின் வடிவில்
முட்டாள்தனமா
முட்;;;டாள்தனத்தின் வடிவில்
பீரங்கியா

விகாரையின் முன்னே
போர்க்கலங்களின் படையல்
தேமாப்பூக்களைச் சூடிய
பீரங்கிகளை
வழிநீளம் இழுத்துச் செல்கிறார்கள்.

பிக்குகளின் நிழலை நசித்துச் செல்கின்றன
பீரங்கிகள்.

00

Series Navigationதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)சம்பத் நந்தியின் “ ரகளை “
author

Similar Posts

Comments

  1. Avatar
    சோமா says:

    பீரங்கிகளை அதிகம் நம்பும் காலத்தில் புலன்கள் கல்லறைக்குள் வைக்கப்படுகின்றன உயிரைச் சிலுவையிலறையுங்கள் இல்லையென்றால் கண்ணீரில் கரைத்து பதுங்கு குழிக்கடியில் புதைத்து விடுங்கள்….சகோதரர் கருணாகரனுக்கு…தமிழ் நாட்டில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு உங்களுடைய கவிதைகளை வாசிக்கிறேன்……உணர்விருந்தும் ஒரு சுயநலத்துடன் வேடிக்கை பார்த்த கயவர்கள்தான் நாங்கள்…..இது ஒரு கயைமை நிலைமை……வெட்கப்படவேண்டியது நாங்கள்தான்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *