கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 9 in the series 1 ஜூலை 2018

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

  1. அரைகுறை ரசவாதம்

 

ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்

இறுகிய கருங்கல்லாகவும் காலம்….

 

நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு

என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்

வனைந்துபார்க்கிறேன்.

 

நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு

இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்

நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து.

 

கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.

 

 

  1. மால்

 

கற்றது கையளவெனினும் கடல்முழுக்கப் பொங்கும் பால்

முற்றிய பித்துநிலையில் மனதில் முளைத்துவிடுகிறது வால்

புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய நுழைக்கவோ கால்

சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி

அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.

காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்

உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்

வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்.

 

Series Navigationஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..அவரவர் நிலா!
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *