கவிதைகள்

This entry is part 33 of 41 in the series 8 ஜூலை 2012

கண்ணெதிரே

சிறிது சிறிதாக
மறந்து வருகிறேன்
இன்னாருக்கு கணவன் என்பதை
இன்னாருக்கு தகப்பன் என்பதை
தான் எந்தப் பொறுப்பில்
இருக்கிறோம் என்பதை
சொந்த பந்தங்களை
அண்டை வீட்டுக்காரர்களை
முக்கியமாக வீட்டின் முகவரியை
தொலைபேசி எண்களை
வங்கிக் கணக்குகளை
வாகனத்தின் இலக்கங்களை
மொழியின் அவசியத்தை
உடையின் அலங்கோலத்தை
சாலை விதிகளை
வசிக்கும் ஊரின் பெயரை
திசைகள் நான்கு என்பதை
நேர்ந்த அவமானங்களை
உதாசீனப்படுத்திய உள்ளங்களை
பசியை மறந்து மயங்கி விழ
இறந்ததையும் மறந்து
நடந்து கொண்டிருக்கிறேன்.

பெருஞ்சுவர்

நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா
பணத்தின் பின்னால்
ஏன் ஓடுகிறோம் என்று
இலவசங்கள் என்றால்
ஏன் வாயைப் பிளக்கிறோம் என்று
அடுத்தவர் மனைவி மட்டும்
ஏன் அழகாய்த் தெரிகிறாள் என்று
கோயில்களில் ஏன்
க்யூ வரிசையில் நிற்கிறார்கள் என்று
சிக்னலில் பிச்சை எடுப்பவரின்
கதை என்னவென்று
வலியச் சென்று ஏன்
ஏமாறுகிறோம் என்று
சாலையில் எதிர்ப்படும் பெண்களை
ஏன் ஏக்கத்தோடு பார்க்கிறோம் என்று
மனிதன் என சொல்லிக் கொண்டு
ஏன் யந்திரம் போல்
நடந்து கொள்கிறோம் என்று
போதையில் ஏன்
கவலைகளை மறக்கிறோம் என்று
படுக்கையறையில் சாமி படம்
ஏன் திருப்பி வைக்கபட்டுள்ளது என்று
சுதந்திர நாட்டில்
சிறைவைக்கப்பட்டிருப்பது
உண்மையா இல்லையா என்று.

———————-
mathi2134@gmail.com

Series Navigationகவிதைகள்கவிதைகள்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *