காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்

author
10
0 minutes, 2 seconds Read
This entry is part 16 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா

     ‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது.  இதில் உண்மை இருக்கவே செய்கிறது.  ஆனால் இதுவே முழு உண்மையன்று.  தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது.  கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. எனினும், ஆண்-பெண்கள் மிக அதிக அளவில் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்ட இந்நாளில் அது மிகவும் பெருகிவிட்டது என்பதே உண்மை.

காதல் எவ்வாறு தோன்றுகிறது? ஒத்த மன அலைவுகள் உள்ள ஆண்-பெண்களிடையே தோன்றும் மனக்கவர்ச்சியே இதன் அடித்தளம் என்று கூறலாம். இது தவிர, புறத் தோற்றமும் சில காதல் உறவுகளில் பெரும் பங்கு வகிக்கவே செய்கிறது. வேறு சிலவற்றில் புறத் தோற்றம் மட்டுமே காதலின் அடிப்படையாகிறது.  ஆக, பொதுவாக எந்தக் காதலாக இருந்தாலும், உள்ளம் சார்ந்த ஈர்ப்பு, உடல்சார்ந்த ஈர்ப்பு ஆகிய இரண்டின் கலவையே காதலாய்க் கனிகிறது.  பின்னதன் பாதிப்பால் மட்டுமே – அதாவது புறத் தோற்றக் கவர்ச்சியின் விளைவாகவே – இளைஞர்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள்.  இத்துடன், மனம் சார்ந்த ஈர்ப்புகளும் இருக்குமாயின், அந்தக் காதல் உன்னதம் பெறுகிறது.

அதிலும், இப்போதெல்லாம், மிகப் பெரிய அளவில் வேற்று சாதியினரிடையே காதல் மலர்ந்து விடுகிறது.  ஒருவன் அல்லது ஒருத்தி இன்ன சாதி என்று கண்டுபிடித்த பிறகு நேசிக்கத் தீர்மானிப்பது இயல்பான காதல் ஆகாதுதானே! ஒருவர் பற்றி ஏதும் அறியாத நிலையிலும் சிலர் விஷயத்தில் ‘கண்டதும் காதல்’ ஏற்பட்டுவிடுகிறது. மனஅதிர்வுகளின் உடனடியான இந்த ஈர்ப்பை நாம் குறைத்து மதிப்பிடவோ கேலி செய்யவோ தேவையில்லை.

காதல் என்று சொல்லப்படும் உணர்வுதான் என்ன? ஒருவன் அல்லது ஒருத்தியைத் தவிர வேறு எவரையும் தொடுவதையோ அல்லது அந்த நபராலன்றி வேறு எவராலும் தொடப்படுவதையோ விரும்பாத மனநிலையே காதல் என்று எளிய விளக்கம் தரலாம். இந்த உணர்வைப் புரிந்துகொண்டு அதைக் கவுரவிப்பதற்குப் பதில் நம் நாட்டுப் பெரியவர்கள் என்ன செய்கிகிறார்கள்? அதைக் காலடியில் போட்டு மிதித்து, நசுக்கிக் காதலர்களின் உள்ளங்களை ரணகளப்படுத்தி விடுகிறார்கள்.   இப்படி இவர்கள் இதயமற்று நடந்து கொள்ளுவது சாதி வேறுபாடும் அந்தஸ்து வேறுபாடும் இருக்கும்போது மட்டும்தான். அல்லது இவற்றைப் பொருட்படுத்தாத பெற்றோர் கூட,  காதலிக்கப்படும் நபர் உதவாக்கரையாகவோ, கெட்ட நடத்தை உள்ளாராகவோ உறுதியாய்த் தெரிய வரும்போது தங்கள் மக்களின் வருங்கால நலன் கருதி எதிர்ப்பார்கள்தான்.  பின்னதில், பெரியவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை.

ஆனால், காதலிக்கப்படும் ஆண் அல்லது பெண் வேறு சாதியாக இருந்தால் – பிற நற்தன்மைகளும் தகுதியும் இருந்தாலும் – அந்நபரைப் புறக்கணிக்கப் பெற்றோர் தம் மக்களைக் கட்டாயப்படுத்துவது சாதிவெறி அல்லது தேவையற்ற சாதிப்பற்றால் மட்டும்தானே? ‘மெத்தப்படித்த மூஞ்சூறு’களும் இந்தப் போக்குக்கு விதைவிலக்காக இருப்பதில்லை. கல்விக்கும் சாதி வெறியினின்று  விடுபடுவதற்கும் துளியும் தொடர்பே இல்லை என்பதே பெருமளவில் உண்மையாகும்.

கலப்புமணத்தைக் காதலரின் பெற்றோர் எதிர்ப்பதற்குக் காரணம்  சாதிவெறியாக மட்டுமே இருக்கும் நிலையிலும், ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்பதே தங்கள் கருத்து  என்பதாய் இவர்கள் (தற்காலச் சூழ்நிலை, நாகரிகம் கருதிப் பொய்யாக)  ஒப்புக்கொண்டாலும், வேற்று சாதியில் மணம் புரிவதால் மாறுபடும் பழக்க வழக்கங்களின் விளைவாகப் பின்னாளில் சிக்கல்கள் எழும் என்பதாலேயே அதை ஏற்க மறுப்பதாய்ச் சொல்லுவது பச்சைப் பொய்! இது ஒரு நொண்டிச்சாக்கே ஒழிய உண்மையன்று.

சாதி உணர்வை வெல்ல முடியாவிட்டாலும், சாதி  வெறியையேனும் மனிதர்கள் – படித்த மனிதர்களேனும் – வெல்ல வேண்டுமல்லவா! நம் நாட்டில் – அதன் அனைத்துப் பகுதிகளிலும் –  இரண்டுமே இல்லை என்பது வெட்கக்கேடான உண்மை. சாதிகளை முற்றாக ஒழிப்பது இயலாத ஒன்றுதான்.  இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் ஆகலாம்.  ஆனால், சாதிவெறியையும், ‘நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்’ என்கிற உணர்வையயும், சாதிப்பற்றையும் வெல்லக்கூடிய அறிவேனும் நமக்கு இருக்க வேண்டாமா?

இதில் இன்னொரு வெட்கக்கேடு என்னவெனில், பெற்றோரை எதிர்த்து வேற்று சாதிப் பெண்ணை மணந்து வெளியேறும் இளைஞனின் தங்கைகளுக்குத் திருமணம் ஆவதில் அவ்வளவாய்ச் சிக்கல் இருப்பதில்லை.  ஆனால்,  பெற்றோரை எதிர்த்து இவ்வாறு செய்யும் ஒரு பெண்ணின் தங்கைகளுக்கு இலேசில் திருமணம் ஆவதில்லை. கலப்புமணம் புரிந்துகொள்ளும் பெண்களின் தங்கைகளுக்கென்று தனியாக ஒரு தராசு வைத்திருக்கிறார்கள்! இது என்ன இழவோ, புரியவில்லை!

வேறு சாதி என்பதால் தயக்கம் இருப்பின், அந்நபரைப்பற்றி அலசி, ஆராய்ந்து, தீர விசாரித்த பின் ஆட்சேபணைக்குரியவை  இல்லாதிருப்பின் பெற்றோர்கள் கலப்புமணத்துக்குச் சம்மதிக்கலாமே!  தாங்களாக ஏற்பாடு செய்கிற திருமணத்தில் விசாரிப்பது போல் இவர்கள் தங்களின் மக்கள் பாலுள்ள கவலையால் விசாரிப்பதை யார் வேண்டாம் என்கிறார்கள்?

தகுதியின்மை வெளிப்பட்டாலல்லாது, ‘காதல்’ என்று சொன்னாலே கையில் கட்டையை எடுத்துக் கொள்ளுவது என்ன நியாயம்?  அதிலும், பெண்ணின் பெற்றோர் எனில், அவர்கள் இந்தக் கேள்விக்குச் சொல்லும் பதில், பெரும்பாலும். ‘அவன் இவளோடு ஒழுங்காக வாழ்வான் / நன்றாக வைத்துக்கொள்ளுவான் என்பது என்ன நிச்சயம்?’ என்பதுதான்.

பெற்றோர்களே! நீங்கள் தேடிப் பார்த்துச் செய்து வைக்கிற திருமணம் மட்டும் என்ன வாழ்ந்தது ?

அண்மையில், ஒரு நாளிதழ் மணமுறிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டிருந்தது.  அதைச் சுட்டிக்காட்டிய ஒரு பெரியவர், ‘மொத்த மணவிலக்குகளில் 39% காதல் திருமணங்கள் தோற்றுப் போவதால் விளைவதாய்ப் போட்டிருக்கிறதே! காதலாவது, கத்திரிக்காயாஅது!’ என்று வாதிட்டார்.

‘சரி.  காதல் திருமணத்தோல்வியால் விளையும் மணமுறிவுகள் 39% தானே? மீதமுள்ள 61% பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்களின் தோல்வியல்லவா? அந்தக் கணக்கைப் பார்க்க எப்படித் தவறினீர்கள்?’ எனும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணமாயினும் சரி, காதல் திருமணமாயினும் சரி, திருமணம் என்பதே ஒரு சூதாட்டம்தான்! ஏனெனில், ஆணும் சரி, பெண்ணும் சரி, தொடக்கத்தில் தங்கள் உண்மையான தன்மைகளை மறைத்துப் பழகுகிறவர்களே. கொஞ்ச நாள் கழித்தே அவர்களது  உண்மையான உருவம் வெளிப்பட, அது காதல்மணமே யானாலும், தோற்றுப் போகிறது.  இது பெற்றோர் செய்துவைக்கிற திருமணத்துக்கும் பொருந்தும் தானே!

காதல் தோல்வியால், மனம் சிதைந்து, கட்டாயத் திருமணத்தை ஏற்க மனமின்றித் தங்கள் பொன்னான உயிரைச் சிலர் மாய்த்துக்கொண்டுவிடுகிறார்கள். இது முட்டாள்தனம்தான். ஆனால், பிடிக்காத நபருடன் மனம் ஒட்டாத நிலையில்  கடனுக்கு உயிர் வாழ்வதை விட, அந்த உயிரையே விட்டுவிட நினைக்கிற அளவுக்குச் சில காதலர்கள் மனமுடைந்து போகிறார்கள் என்றால், எத்தகைய ஆழமும் தீவிரமும் நிறைந்த உணர்வுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும் பெற்றோர்கள் என்ன பெற்றோர்கள்!  உண்மையில் இவர்கள் அன்பான பெற்றோர்கள்தானா?

இவர்கள் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்கள் யாவும் வெற்றி யடைவதாகவும், பெற்றோரை எதிர்த்து மணம்புரிந்துகொள்ளும் காதலர்களின் திருமணங்கள் யாவும் தோல்வியடைவதாகவும் இருந்தால் மட்டுமன்றோ பெரியவர்கள் தங்கள் மக்களின் காதலை எதிர்க்க வேண்டும்? வேறு  நியாயமான காரணம் ஏதுமின்றி,    சாதி வேறுபாட்டின் அடிப்படையில் மட்டும், காதலை எதிர்த்தல் “காட்டுமிராண்டித்தனம்” அல்லாது வேறென்ன?

 

jothigirija@live.com

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்சீக்கிரமே போயிருவேன்
author

Similar Posts

10 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் கிரிஜாக்கா,

    காதலின் அருமையை….இரண்டு வரிகளில் உணரச் செய்து விட்டீர்கள்.

    காதல் என்று சொல்லப்படும் உணர்வுதான் என்ன? ஒருவன் அல்லது ஒருத்தியைத் தவிர வேறு எவரையும் தொடுவதையோ அல்லது அந்த நபராலன்றி வேறு எவராலும் தொடப்படுவதையோ விரும்பாத மனநிலையே காதல் என்று எளிய விளக்கம் தரலாம்.

    நிஜத்தில் சொல்லப் போனால் நீங்கள் சொன்னது தான் காதலின் சூத்திரம். மிகவும் அழகாகவும், ஆழமாகவும் சொல்லி இருக்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது. கண்ணால் காண முடியாத காதல் என்னும் உணர்வு….எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத, சுயநலமற்ற ஒரு தியாக உணர்வு. இந்த உணர்வு இருந்தால் காதல் உயிரோடு இருக்கும். காதல் நுழைந்த இதயத்தில் மோகம் நுழையும் காமம் நுழையாது.உயிரைக் கூட துச்சமாக எண்ணிவிடும் காதல்..இந்த உணர்வு ஜீவனுக்கு உன்னதமானது. தெய்வீகமானது. புனிதமானது.

    காதல் என்றாலே கலப்புத் திருமணமும் “உள்ளேன் ஐயா ” என்று வருகை பதிவேட்டில் ஆஜர் தந்து விடும். இது போன்ற காதலால் வரும் சிக்கல்கள் பலவற்றையும் ஆராய்ந்து நீங்கள் சொல்லியிருப்பது ஒரு தெளிவான சிந்தனையைத் தருகிறது. இன்றும் வீட்டுக்கு வீடு..ஏதோ ஒரு விதத்தில் இது போன்ற பிரச்சனை, சிக்கலில் மாட்டிக் கொண்டு தவித்து மன உளைச்சலில் வாழும் குடும்பங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதன் காரணங்களை நீங்கள் மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    இப்போதெல்லாம்…உண்மைக் காதல் வன்முறைக் காதலாகவும் மாறி வருவதைத் தான் மனது ஏற்கத் தயங்குகிறது. காதலில் தற்கொலை…மறைந்து காதலால் கொலைகள் உருவாகி வருவது வருந்தத் தக்க விஷயம். இதில் பெற்றோர்களின் தலையீடு வேறு..நீங்கள் சொல்வது போல காதலுக்கு வெறும் சாதியைக் காரணமாக வைத்து எதிர்ப்பது சரியில்லை தான். அது காட்டுமிராண்டித் தனம் தான். காதலில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதைப் போல பிள்ளைகளின் மனமறிந்து பெற்றோர்களின் மனங்களும் மாறத் தான் வேண்டும். காலம் தான் பதில் சொல்லும்.

    நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    ஷாலி says:

    காதலும்-வீரமும் அன்றைய தமிழர் பண்பாடு என்பார்கள்.யாரும் மறுக்கவில்லை.ஆனால் இன்றைய காதலுக்கு பெரிதும் தூண்டுவது,தூபம் போடுவது ஒளி,ஒலி,அச்சு ஊடகங்களே! அன்று ஆயிரத்தில் ஓரிருவர் காதல் மணம் புரிந்த செய்தி கேட்டிருப்போம்.இன்று ஆயிரம் பேரும் காதலித்துத்தான் ஆக வேண்டிய கட்டாயத்தை, சினிமா,தொலைகாட்சி,எப் எம் ரேடியோக்கள் வலியுறுத்துவதை எவரும் மறுக்க முடியாது.
    காதலன்,காதலி (பாய் பிரண்ட்,கேர்ல் பிரண்ட்) எவருக்கேனும் இல்லாவிட்டால் அவன் கேலிப்பொருள்ளாக பார்க்கப்படுவதால்,
    ஏதாவதொரு பெண்ணைப்ப்பிடிக்க இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது.கிடைத்த பெண் நழுவிச்சென்றால்,ஆசிட்.கொலை,
    தற்கொலையில் காதல் அஸ்தமிக்கிறது.
    தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்,தங்கள் மகன் மற்றும் மகள்களுக்கு காதலிக்கச்சொல்லியே கல்யாணம் செய்கிறார்களா?இல்லையே! இவர்கள் தயாரிக்கும் ஒட்டுமொத்த தமிழ்ப் படமும் காதலை மட்டும் மையமாக வைத்து வெளிவருவது ஏன்? காதல் என்னும் கனி இயல்பாக இதயத்தில் கனிய வேண்டும். இங்கு வாலண்டைன் மற்றும் திரைப்பட வியாபாரிகளால் கார்பைடு எனும் வணிக கல் வைத்து பழுக்கவைக்கப்படுகிறது. தமிழ் ஊடகங்களின் டாஸ்மாக் காதல் அமோக விற்பனை. காசேதான் காதலடா… ஆதலினால் அனைவருமே காதல் செய்வோம்!

  3. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு,

    வணக்கம். இன்று பெரும்பாலும் உண்மையான காதலர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. எல்லாம் வியாபார நோக்கில்தான் இருக்கிறது. எளிதாக ஏமாற்ப்படுபவர்களும், ஏமாறுபவர்களையுமே காண முடிகிறது. ஆதாயம் தேடி வருவதல்ல காதல். அது போன்ற காதலை பெற்றோர் சம்மதிப்பதும் சரியல்லவே. அதேபோல் உண்மையான காதலுக்கு, சாதி, மதம் என்ற காரணங்கள் காட்டி தடை செய்வதும் வருத்தத்திற்குரிய விசயம்தான்.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. Avatar
    Dr.G.Johnson says:

    காதலின் அருமை தெரியாத காட்டுமிராண்டிகள் எனும் ஓர் அருமையான தலைப்பில் காதலை அலசி ஆராய்ந்துள்ளார் ஜோதிர்லதா கிரிஜா.
    இக்காலத்தில் காதல் பெருகிவிட்டது உண்மையே. அதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணம் என்பதும் உண்மையே. அதோடு கைத்தொலைப்பேசி, கணினி மூலமாக முகநூல், சேட் போன்ற நவீன சாதனங்களும் முக்கிய காரணங்களாகவும் அமைகின்றன. முன்பெல்லாம் நேரில் அல்லது கடிதமூலமே தொடர்புகொண்டு காதலித்தனர். இன்று உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வசதியுள்ளது.இதனால் காதலிப்பதும் எளிதாகிவிட்டது. இப்போதெல்லாம் பள்ளிப் பருவத்திலேயே காதலிக்கத் தொடங்கிவிட்டனர்! இதற்குக் காரணம் பாலியல் ஹார்மோன்கள் துரிதமாக இயங்குவது எனலாம். பாலியல் எழுச்சியை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகாலாக காதலிக்க தொடங்குகின்றனர். இத்தகைய காதல் முற்றிலும் புறத் தோற்றத்தால் உண்டான இனக்கவர்ச்சியே எனலாம். இதில் மனக்கவர்ச்சி ஓரளவு உண்டானாலும் காமமே மேலிடுகிறது. எதிர்காலம் பற்றி கவலை கொள்ளாதே இந்த இளம்பிராய காதல் பெரும்பாலும் நீடிப்பதில்லை. இதற்கு பெற்றோரின் எதிர்ப்பும் கண்டிப்பும் பிரிவும் பல காரணங்கள். இவ்வாறு தடைபடும் காதல் உடன் அடுத்த காதலாக . வேறொருவருடன் மலர்ந்துவிடுகின்றது. இதுவா காதல்?
    ஒருவன் அல்லது ஒருத்தியைத் தவிர வேறு எவரையும் தொடுவதையோ அல்லது அந்த நபராலன்றி வேறு எவராலும் தொடப்படுவதையோ விரும்பாத மனநிலையே காதல் என்று காதலுக்கு இலக்கணம் கூறியுள்ளார். ஆனால் இந்த காலத்தில் இது சாத்தியமா என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக மாறி வருகின்றது. இன்று அந்த ஒருவனுக்கும் ஒருத்திக்கும் முகநூல்மூலமாக நூறுக்கணக்கான ஆண் பெண் தொடர்புகள் உள்ளன. ஒரே நேரத்தில் காதலனுடனும் வேறொரு ஆடவனுடனும் முகநூலில் பேசிக்கொள்கிறார்கள். அதேபோல்தான் அவனின் நிலையும்! இதுபோன்ற ” நண்பர்களின் ” தொடர்புகள் நள்ளிரவிலும் நடைபெறுகின்றன. என்னுடைய காதலி நள்ளிரவில் வேறு ஆடவனுடன் இப்படி பேசிக்கொண்டிருந்தால் அதை நான் தவறாக எண்ணக்கூடாது என்பது இன்றைய காதல் இலக்கணம்!
    இன்று பெருகிவரும் காதலை யாராலும் கட்டுப்படுத்தமுடியாது. அதேபோல காதலித்து மணமுடித்து பின்பு ஓரிரு வருடத்தில் விவாகரத்து நடைபெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. இதுவே இன்றைய புதிய சமுதாய அமைப்பு எனலாம். இந்த கோலத்தில் அல்லது வள்ளலில் இதில் சாதி வேறுபாடு அல்லது அந்தஸ்து வேறுபாடு பார்த்து இந்த காதலை தடுக்க எண்ணுவது முட்டாள்தனமாகும். உலகில் வேறு இந்த நாட்டிலும் மதத்திலும் இல்லாத இந்த சாதி வேறுபாட்டை இந்தியர்கள் மட்டும் இன்னும் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவது அவர்களின் வடிகட்டிய அறியாமையையே காட்டுகிறது. என்னதான் படித்து பட்டங்கள் வாங்கியபோதும் தான் இன்ன சாதிக்காரன் என்று கூறிக்கொள்வது அவனின் உயர்வை அல்ல சிருமையையே காட்டுகிறது.
    ” சாதி இரண்டொழிய வேறில்லை.. ” என்று அவ்வை 2000 ஆண்டுகளுக்குமுன் சங்க காலத்திலேயே பாடிச்சென்றாரே! அதை இவர்கள் படித்து என்ன பயன்? ” சாதிகள் இல்லையடி பாப்பா ” என்று சென்ற நூற்றாண்டில் பாடினாரே பாரதி? என்ன ஆனது? பாரதிக்கு தரும் மதிப்பு இதுதானா?
    இன்னும் சாதி சாதி என்று அலையும் இந்தியர்களுக்கு இன்றோ இனி என்றோ விமோசனம் இல்லை என்பதே உண்மை!…டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    vj.premalatha says:

    we want ur novels for research. where will we get ? we are searching for more than 3 months. we condact many publishers.only shortstories are available.but we want novels. pl help me.

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Dear Smt. Vj. Premalatha,

    I am replying on behalf of Ms. Jothirlata Girija, as she has been moving to a new home as of today. She is thanking you for your Research Project initiative of her literary works both in Tamil and in English and will reply to you in a weeks time.

    PLease send your Email address, if you wish.

    With Kind Regards,
    S. Jayabarathan

    1. Avatar
      ஜோதிர்லதா கிரிஜா says:

      Dear Ms. Vj. Premalatha,

      I am replying on behalf of Ms. Jothirlata Girija, as she has been moving to a new home as of today. She is thanking you for your Research Project initiative of her literary works both in Tamil and in English and will reply to you in a weeks time.

      PLease send your Email address, if you wish.

      With Kind Regards,
      S. Jayabarathan

  7. Avatar
    punaipeyaril says:

    சாதி இரண்டொழிய வேறில்லை.. ” என்று அவ்வை 2000 ஆண்டுகளுக்கு –> அதனால் தான் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ஆணும் ஆணும் ,: பெண்ணும் பெண்ணும் இணைகிறார்களோ இப்போது…. அப்ப சாதி ஒழிப்பு அவுக செய்யுறாங்கன்னு தானே டாக்டர் அர்த்தமாகிறது…

  8. Avatar
    punaipeyaril says:

    காதலர்களில் உண்மைக் காதலர்கள் டுபாக்கூர் காதலர்கள் –> ஆறு வித்தியாசம் யாரவது சொல்லுங்கள்… பரிசு தரப்படும்..

  9. Avatar
    பூவண்ணன் says:

    உண்மை காதல்,பொய் காதல்,டுபாகூர்,infactuation ,பொருந்தா காதல் என பலரும் காதலை பார்க்கும் பார்வை வியப்பு தான்
    காதல் எனபது வீரம்,தைரியம்.அவ்வளவு தான்
    ஒரு பெண்ணை/ஆணை பார்த்து அவள் அழகில் மயங்கி அவளை நினைத்து உருகி கொண்டு அவளிடம் சொல்லாமல் ,அவளுக்கு வேறு ஒருவரோடு திருமணமானால் தண்ணி அடிப்பது காதல் அல்ல
    தனக்கு ஓரின சேர்க்கை தான் பிடித்திருக்கிறது என்று தன்னை போல எண்ணம் கொண்ட ஒருவரை தைரியமாக துணை ஆக்கி கொள்வதும் காதல் தான்
    தான் விரும்பும் பெண்ணை,ஆணை பார்த்து தைரியமாக தன ஆசையை தெரிவிப்பது தான் காதல் அதற்க்கு ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்,உயிருக்கே அச்சுறுத்தல் இருந்தாலும் அதை எதிர்கொள்வது தான் காதல்
    எந்த வீரனாலும் காதலிக்காமல் இருக்க முடியாது
    அதே போல எந்த கோழையாலும் காதலிக்க முடியாது (தான் விரும்பும் துணையிடம் காதலை வெளிபடுத்தாத,முயற்சிக்காத எதுவும் காதல் கிடையாது.முய்ரசிக்கா விட்டாலும் அவள்/அவன் நினைவாக வேறு துணை தேடாமல் வாழும் தைரியம் இருந்தால் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்
    ஒருவன் கோழையாக மாறும் போதே அவனிடம் இருந்து காதல் பிரிந்து விடுகிறது
    கோழைகளுக்கு வீரர்களை பார்த்தால் வரும் வெறுப்பு தான் அவர்களை கூட்டம் சேர்ந்து கொண்டு காதலர்களை எதிர்ப்பதில் நிறுத்துகிறது
    காதலனோடு ஒரு பெண்ணை பார்க்கும் போது,தன் இயலாமை தாழ்வு மனப்பான்மையை அதிகரிப்பதால் அவள் மேல் அளவு கடந்த ஆத்திரம் வருகிறது .இது சுற்றார்,உறவினர்,ஆசிரியர்,காவல்துறையினர்,பேருந்து ஓட்டுனர் அனைவருக்கும் பொருந்தும்

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *