குளத்தங்கரை வாகைமரம்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

 

குளத்தங்கரை

வாகைமரம்

நான் விரல்பிடித்து நடந்த

இன்னொரு கரம்

 

உச்சிக்கிளையில்

கிளிகளின் கூச்சலில்

காட்சியும் கானமுமாய்

விடிகிறது என் காலை

 

பனம்பழம் சுட்டது

பட்டம் விட்டது

பதின்மக் காதலைப்

பகிர்ந்துகொண்டது

நட்புகள் பிரிவுகள்

முகிழ்ந்தது முடிந்தது

இன்னும் இன்னுமென்று

வாகையடியே

வாழ்க்கையானது

 

தாழப் பறக்கும்

தட்டான் பூச்சிகள்

தாவத் தயாராய்

தவளைகள்

முதுகு சொரியும்

வாத்துக்கள்

சுழிக்கும் மீன்கள்

கலையும் அலைகளில்

உடையும் முகில்கள்

அத்தனையும்

அதிகாலைத் தூறலில்

மனவெளி நனையும்

மந்தகார நினைவுகள்

 

வெளிநாடு செல்லும்

வேளை வந்தது

அழுதேன்

வாகையைத் தழுவி

‘வரட்டுமா’ என்றேன்

பொத்திவைத்த

மழை மிச்சத்தை

பூவாய்த் தூவியது

புறப்பட்டேன்

 

இன்று

நாற்பது ஆண்டுகள்

நகர்ந்துவிட்டன

குப்பைமேடானது குளம்

கண்ணீர் இலையுதிர்த்து

நிர்வாணமானது வாகை

கிளிகளின் குடும்பங்கள்

கொள்ளுப் பேரர்கள்

எங்கெங்கோ

எப்படியோ

 

நேற்று வந்த செய்தி

வேரடி மண்ணோடு

வீழ்ந்துவிட்டதாம் வாகை

 

அமீதாம்மாள்

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *