கைப்பிடிச் சோறு

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 17 in the series 18 செப்டம்பர் 2016

 

ஹேமா 

பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. அங்கே தென்னை மரத்தினடியில் தேய்ப்பதற்காக காத்துக் கிடந்தது பாத்திரக் குவியல். மேலாக இருந்த குண்டானை காகம் தன் அலகால் சுரண்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் தெரிந்த நெருப்பவிந்த கல்லடுப்பில் கரிக் குண்டான் ஒரு பக்கமாய் சாய்ந்து கிடந்தது.

இப்போது அநேகமாக கணேசன் தட்டின் முன் உட்கார்ந்திருப்பான். சியாமளா அவனுக்கு இட்லிகளைப் பறிமாரிக் கொண்டிருப்பாள். பெரியவள் தலையை விரித்துப் போட்டபடி அம்மா வந்து பின்னி விடுவதற்காய் காத்துக் கிடப்பாள். முன்பெல்லாம் கோதாவரி நேராக உள்ளே சென்று வருபவளாக இருந்தாள். அப்போது அவளுடைய கணவன் திடமாய் இருந்தார். நிலையான வருவாய் இருந்தது. இவள் உண்டது போக மிகுதியாய் இருந்த உணவை வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எப்போது சாப்பாட்டிற்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்கவேண்டி வந்ததோ அதிலிருந்து மற்றவர்களின் வீட்டின் வாசற்படியேற தயக்கமாகி விட்டது அவளுக்கு. கணவர் இறந்த பின் அவளால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை  புரிந்துக் கொள்ளாமல் வயிறு அழிச்சாட்டியம் செய்தது.

மணி எப்படியும் எட்டரைக்கு குறையாமல் இருக்கும். இன்று என்ன இவ்வளவு நேரம்! பள்ளிக் கூடத்திற்கு நேரமாகிவிட்டதே! ‘சியாமளா இன்று நேரம் கழித்து எழுந்தாளோ என்னவோ!’ என்று வாய்க்குள் முனகியபடியே திண்ணையில் அமர்ந்தாள் கோதாவரி.

கோதாவரிக்கு இந்த கார்த்திகையோடு அறுபத்தி இரண்டு வயது முடிகிறது. இருந்த ஒரு பிள்ளை ஏழு வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து போக தம்பி வீட்டிற்கு அருகிலிருந்த இடத்தில் குடிசை போட்டு தங்கிக் கொண்டாள். முதியோர் பென்சனும் தம்பி  கொடுக்கும் சொற்ப பணமும் அவளது வாழ்க்கையை ஓட்ட போதுமானதாய் இல்லை. கஷ்ட ஜீவனத்தோடு நில்லாமல் இப்போது உடம்பு வேறு படுத்தத் தொடங்கி விட்டது. கழுத்தெலும்பு வலிக்கிறது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனால் தலை மேல் கனமாய் வைத்துத் தூக்கக் கூடாது என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் மாத்திரை கொடுத்தாள் டாக்டரம்மா. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நிதானம் தவறிப் போகிறது கோதாவரிக்கு.

தம்பியின் மனைவி கங்கா இருந்தவரை நாத்தியைத் தேடி வந்து மூன்று வேலை உணவையும் கொடுத்து விட்டுப் போவாள். வீட்டுப் பெண்ணின் வயிறும் மனமும் வாடினால் தன் குடும்பம் வாடும் என்ற அவளது நம்பிக்கை இவளது வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டது. நான்கு மாதங்களுக்கு முன் எதிர்பாரா விபத்தில் அவளும் போய் சேர்ந்து விட இப்போது தம்பியில் மருமகள் போடும் சோற்றை எதிர் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. கங்கா போனதற்கு தான் போய் சேர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள் கோதாவரி.

தெருவில் சைக்கிளை ஓட்டியபடி சென்ற பால்கார சேகர்  “என்ன அத்தை சாப்பிட்டாச்சா!” என்றான். “இல்லடாப்பா! எல்லாம் இனி தான்!” என்றாள். “ஓ! இன்னிக்கி என்ன வெரதமா” என்றவாறு சைக்கிளை மிதித்தபடி சென்றுவிட்டான். ‘அதொன்னு தான் கொறையா இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள் கோதாவரி. நன்றாய் இருந்த காலத்தில் சோமவாரத்திலிருந்து சனிக்கிழமை வரை ஏதாவது ஒரு விரதத்தைக் கடைபிடிக்கவே செய்திருந்தாள். அதனால் ஏதாவது பலன் இருந்ததா என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.

காலை வெயில் தெருவை இரக்கமின்றி சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பைப்பில் இன்னமும் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. திலகாவும், வசந்தியும் குழிக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னகூடையிலிருந்து தண்ணீரைக் கோரி தங்கள் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிறைய குடங்கள் இருந்தன. பள்ளிக் கூடத்திற்கு செல்லும், ரெட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டிக் கொண்டிருந்த இரு பெண்கள் பேசியபடி சைக்கிளில் கடந்துச் சென்றார்கள். அந்த தெருவிற்கு சொந்தமான ராமு நாய் இங்குமங்கும் அலைந்தபடியிருந்தது.

கோதாவரியின் மேல் வயிற்றிலிருந்து ஒரு பொறி போல கிளம்பிய பசி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றை ஆக்கிரமித்தது. தன் அரூபக் கைகளைத் தொண்டை வழியாக நீட்டி தலையை கிடுக்கிப் போட்டு இழுக்கத் தொடங்கியது. உள்ளே கரண்டி கிண்ணத்தில் தட்டப்படும் ஓசை கேட்டது. சாப்பிடுகிறார்கள் போல! சற்று நடந்துவிட்டு வரலாம் என்று உட்கார்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்தாள் கோதாவரி.

மகன் இறந்து, வருமானம் குறைந்த பின் இரண்டு மூன்று மாதங்கள் இருப்பதை வைத்து ஓட்டினாள் அவள். ஒண்டி கட்டைக்கு என்ன வேண்டி கிடக்குது என்று நினைத்தாள். செயலாய் இருந்த சமயத்தில் ஞாயிறு ஆனால் ஆடோ கோழியோ குழம்பில் கொதிக்கும். அதோடு ஏதேனும் ஒரு மீன் காரமான மசாலையில் முக்கியெடுக்கப்பட்டு பொறிப்பதற்காய் காத்துக் கிடக்கும். மகனுக்கு அதெல்லாம் இல்லாமல் ஞாயிறு விடியாது.

முதலில் நாக்கு தற்போதைய தரித்திர நிலைக்கு அடங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கத் தான் செய்தது. அப்போதெல்லாம் சாப்பாட்டு நேரத்தில் யார் வீட்டிற்காவது சென்று பேசத் துவங்குவாள் கோதாவரி. அவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கும் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பார்கள். ஆனால் இது நெடுநாள் நிலைக்கவில்லை. இவள் போகும் நேரம் ஆண்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இவளோடு பேசும் பெண் உணவைப் பற்றி முற்றிலும் மறந்து பேசிக்கொண்டிருப்பாள். அதற்கு மேல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் பட்டும் படாமலும் பதில் வரும். பிறகு அங்கிருக்க கோதாவரியாலும் முடியாது.

தொடக்க காலத்தில் இதெல்லாம் மனதிற்கு வலி தருவதாய் இருந்தது. எத்தனை பேருக்கு மீந்துப் போன உணவையெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வாள். அந்த நேரம் அவள் பார்வை, மாட்டிற்கு போடப்படும் பழைய உணவைக் கூட ஆராயத் தவறாது. ஒருநாள் பழையதாய்ப் போனால் தான் என்ன இட்லி கெட்டா போய்விடும் என்று நினைக்கத் துவங்கியிருந்த காலம் அது. ஆனால் அவளது நேரமோ என்னவோ, அந்தத் தெரு மக்கள் பழைய உணவையும் வீணாக்காமல் வத்தல் பிழிந்தோ அல்லது வேறு ஏதாவதாக உருமாற்றியோ உண்பவர்களாக மாறிப் போயிருந்தார்கள். இப்போது சற்று பரவாயில்லை. அவள் நாக்கு ருசியான உணவு வகைகளைத் தேடுவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்று வேளைகளாவது சாப்பிடத் தேவையாய் இருக்கிறது.

நேரம், வயிற்றுத் தீயை முந்தவிட்டு, பொறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்தது. ராமு நாயும் தானும் ஒன்றாகிவிட்டதாய் தோன்றியது கோதாவரிக்கு. அந்தத் தெருவில் சாப்பாட்டை எப்போதும் நினைத்துக் கொண்டே அலைபவர்கள், அதன் வாசனையால் தூண்டப்படுபவர்கள் தாங்கள் இருவரும் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

பசி உக்கிரமாகத் துவங்கியது. இன்னும் பத்து நிமிடத்தில் கணேசன் வெளியே வந்து விடுவான். எப்படியும் சாப்பிட்டியா அத்தை என்று விசாரிப்பான். பிறகு சியாமளாவைப் பார்த்து, ‘அத்தைக்கு நாலு இட்லி கொடு!’ என்பான். இட்லியின் சுவை இப்போதே நாவில் தெரிந்தது கோதாவரிக்கு.

கங்கா இறந்த கொஞ்ச நாளைக்கு பழக்கத்தின் காரணமாக உணவு கோதாவரியைத் தேடி வந்து கொண்டு தான் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல  தாமதமாய் வரத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே அவளது வயிறு பசியைக் கண்டதில்லை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஆண்கள் சாப்பிடுவதற்கு முன் உணவைத் தட்டில் போட்டு சாப்பிடும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. பழக்கமற்ற பட்டினியால் வயிறு இடும் ஓலம் தாங்க முடியவில்லை. அதனால் தம்பியின் வீட்டுத் திண்ணையில் சென்று காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி.

‘நீங்க வேணா பாருங்க! சாப்பிடற நேரத்துக்கு கரெக்டா வந்துடுவாங்க’ என்று சியாமளா சொன்னதாய் அமுதா ஒருமுறை சொன்ன போது நாண்டுக் கொள்ளலாம் போல தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. அந்த நேரம், மறுபடி அந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வைராக்கியமெல்லாம் கூட எழுந்தது. அதெல்லாம் அடுத்த சாப்பாட்டு வேளை வரை தான். பிறகு சியாமளா போடும் கைப்பிடி சோற்றை எதிர்பார்த்து அவளது ஐம்புலன்களும் தவமிருக்கத் தொடங்கிவிட்டன.

தன் குடிசைக்குச் சென்று ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்தாள் கோதாவரி. காற்றில் மிதந்த படி வந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் முள் வேலியில் சிக்கியிருந்தது. அதை விடுவித்து உள்ளே பார்த்துவிட்டு மறுபடி காற்றின் கைகளில் கொடுத்துவிட்டு தெருவிற்கு வந்தாள்.

இப்போது திலகா குடத்தை சுமந்தபடி தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாள். கிண்ணத்தில் இட்லியையோ எதையோ ஊட்டியபடி, குழந்தைக்கு ராமுவை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதோ பாரு… ஜூ, ஜூ, ஜூ… பாப்பா சாப்பிடலைன்னா நீ மொத்தத்தையும் சாப்பிட்டுடு,’ என்ற கையிலிருக்கும் உணவை போட்டுவிடுவது போல பாவனை காட்டினாள். அவள் கையிலிருந்து விழப்போகும் உணவுக்காக கண்களில் உயிரைத் தேக்கியபடி ராமுவும், அப்படி விழுந்தால் அதை ராமு உண்ணுவதைப் பார்க்க குழந்தையும், ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரியைப் பார்த்ததும் கைகளால் கிண்ணத்தை மறைத்துக் கொண்டு எதிர்புறம் திரும்பிக் கொண்டாள் சந்திரா. ராமுவும் இப்போது அந்தப் பக்கம் மூச்சிரைக்க ஓடிச் சென்று தரை சேரப் போகும் இட்லிக்காக மூச்சிரைக்க தவமிருக்கத் தொடங்கியது.

கேட் திறக்கும் சத்தம் கேட்ட கோதாவரிக்கு பக்கென்றானது. நேரமாகிவிட்டதோ! கணேசன் கிளம்பிவிட்டான் போல. இந்நேரம் திண்ணையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் கேட்டிருப்பான். அதுவும் இயற்கையாய் இருந்திருக்கும். இப்போது போனால் சாப்பாட்டுக்கு வந்தது போல தான் இருக்கும். ஆனாலும் மான ரோஷமெல்லாம் பாத்து ஒரு வேளை உணவை இழக்க  அவள் வயிறு தயாராக இல்லை. சற்றே வேகமாய் நடையை எட்டிப் போட்டாள்.

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் கணேசன். இவளைப் பார்த்ததும் பின்பக்கம் திரும்பி மகளின் ‘டை’யை சரியாக்க முற்பட்டாள் சியாமளா. வரப்போகும் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள மூச்சை உள்ளடக்கி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள் கோதாவரி. பெண்ணை வண்டியின் பின்னால் உட்கார வைத்து விட்டு வண்டியைக் கிளப்பிய கணேசன், ‘அத்தே! சாப்பிட்டுட்டு போங்க’ என்றான். அந்த சொற்கள் குளிர்ச்சியாய் செவி வழியே உள்ளே இறங்கி  நாவின் எச்சில் சுரப்பிகளை அவிழ்த்து விட்டது. நிச்சயமாகி விட்ட இந்த வேளையின் உணவு மற்ற எதையும் நினைக்க விட வில்லை. வயிறு பழக்கி வைத்த நாய் போல கர்ர்ர் என்றது. இன்னும் சற்று நேரத்தில் தனக்காக வரப்போகும் இட்லியைப் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி. குழந்தையைச் சுற்றிப் போடப்பட்ட கடைசி வாய் உணவை வேகமாய் விழுங்கிக் கொண்டிருந்தது ராமு.

Series Navigationடமில் வலர்க!!!கவி நுகர் பொழுது-9 அகிலா
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *