க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன் இரண்டாம் தரமானவனே என்றெல்லாம் விமர்சன வேலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையே பேசிக் கொண்டு, ஆனால் தொடர்ந்து தெளிவான ரசனை அனுபவம் கொண்ட ஒரு விமர்சகராகவும் இயங்கியவர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். ஏறத்தாழ அவருடைய விமர்சனக் கட்டுரைகள் – பலரும் கருதுவதைப் போல அபிப்ராயக் கட்டுரைகள் – அடங்கிய 19 தொகுப்பு நூல்களைப் பட்டியலிட்டுள்ளார் நவீனகால இலக்கிய ஆராய்ச்சியாளர் பழ.அதியமான்(1). இந்த நூல்களைத் தமிழின் முதல் விமர்சனப் பிரக்ஞையைத் தூண்டிய புத்தகங்கள் எனக் கொண்டாடுகிறார் தஞ்சை பிரகாஷ்; (தஞ்சை பிரகாஷ்; கட்டுரைகள். ப.237). மேலும் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) என்ற விமர்சன நூலிற்காகவே சாகித்திய அகாதெமி பரிசும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பத்திரிக்கையாளர், புனைகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்தி எழுத்தாளர், இருமொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் தளத்தில் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்க அளவிற்குச் சாதனை செய்திருந்தாலும் காலமும் நவீனத் தமிழ் இலக்கியச் சூழலும் அவர் மேல் நிலைநிறுத்திய அடையாள முத்திரை விமர்சகர் என்பதுதான். அவர் விரும்பாத ஒரு பெயரினாலேயே அவர் அறியப்படுகிறார் என்பதே அவரது சிக்கலான வாழ்வின் புதிரைப் புலப்படுத்தக்கூடிய ஒன்றாகப் படுகிறது.

வாழ்வது என்பது வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் கலை இலக்கியம் குறித்து உரையாடல் நிகழ்த்துவதற்காகவும்தான் என்று முழு வாழ்க்கையையுமே பணையம் வைத்து ஆடிய அரிய ஓர் ஆளுமைப் பண்புதான் அவருடைய இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளைப் பெரிதும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது எனக் கருதுகிறேன். இப்படியான ஒரு வாழ்வுதான் தமிழ்ச் சூழலில் அவர் என்ன சொல்லுகிறார் என்கிற ஒரு கவனிப்பை ஏற்படுத்தி அவர் சொல்லும் அபிப்பிராயங்களுக்கு ஒரு விதமான விமர்சன அந்தஸ்தையும் அமைத்துக் கொடுத்தது எனலாம். மேலும் ‘அவர் ஆதாரங்களை வைத்துத் தமது தீர்க்கத்தரிசனங்களைக் கட்டுரைகள் ஆக்கவில்லை. அவருக்கு அவரே ஆதாரம். தன் சுயதேடலும் ரசனையுமே மூலம்’ (தஞ்சை பிரகாஷ்;, ப.257) என்கிற முறையில் எல்லாவற்றிலும் ஆதாரங்களைத் தேடும் மனித மூளை, அவரது ஆதாரங்களற்ற அபிப்பிராயங்களை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஏற்கக்கூடிய சூழல் தமிழில் உருவானது.

க.நா.சு விமர்சனத்தின் அடிப்படை அலகாக இயங்குவது எது என்று பார்த்தால் நல்ல இலக்கியங்களை அடையாளங்காட்டுவது; பிரதிக்கு அணுக்கமான வாசகர்களை உற்பத்தி செய்வது. இதை அவரே ஓரிடத்தில் இவ்வாறு பதிவு செய்கிறார்:-

நான் விமர்சனம் செய்வதன் நோக்கமே ஒரு சில நூல்களாவது ஒரு சில வாசகர்களை எட்ட வேண்டும் என்ற நோக்கில்தான். தமிழில் இன்னமும் நல்ல வாசகர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் அதிகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய வி~யம். நல்ல வாசகப் பரம்பரை இரண்டாயிரம், மூவாயிரம் என்று பெருக வேண்டும். இது மிகமிக அவசியம். (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், முன்னுரை)

எனவேதான் சுந்தர ராமசாமி ‘க.நா.சு ஒரு இலக்கிய சிபாரிசுக்காரர்தான்’ (சுவடு, தொ, ப.17) என்கிறார். இவ்வாறு நல்ல வாசகரை, நல்ல படைப்பாளியை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவைகளாக அவர் கண்டவற்றில் முதன்மையானது வெகுஜன பத்திரிக்கை ஆகும். இவர்கள்தான் எழுத்தை விற்கின்றவர்களாக மாறிய சூழலில், வாசகர்களின் பலவீனங்களைக் குறிவைத்து அவற்றைத் தங்களின் மூலதனங்களாக மாற்றிக் கொள்கிறார்கள். கல்கியையும், தொடர் கதைகளையும் இந்த நோக்கிலேயே விமர்சித்தார்.

சிரமப்படுவதைத் தவிர்க்கவே படிப்பிலும் எல்லோரும் விரும்புகிறார்கள். சிரமப்பட்டுப் படித்த தலைமுறைகளின் காலம் தீர்ந்து விட்டதா? இனி சினிமா, ரேடியோ, டெலிவிஷன் காலத்தில் உறங்கிக் கொண்டே பார்க்கலாம், கேட்கலாம் என்கிற நிலைதானா. (மேலது, ப.19)

இவ்வாறு வெகுஜன பத்திரிக்கை, வாசகர்களை எப்படி மாற்றி விட்டது என்று வருத்தப்படுவதைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளின் அளவு மீறிய இலக்கிய ஆதிக்கமும், பிரசுரக் கருத்தர்களின் நாணயமற்ற போக்கும்தான் வாசகர்களின் தரத்தைக் கீழ்நோக்கித் தள்ளிவிட்டது என்று பதிப்பாளர்களையும் விமர்சன வட்டத்திற்குள் இழுத்து வருகிறார்.

எந்தப் புஸ்தகத்தையும் வேண்டுமானாலும், புஸ்தகம் என்று எதை வேண்டுமானாலும் போட்டு எங்களால் லைப்ரரிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே மற்ற எந்த வழிகளிலோ லாபம் தருகிற வகையில் விற்க முடியும் என்று பெருமை பேசுகிற பிரசுரக்கர்த்தர்கள் தமிழில் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். (மேலது, ப.9)

எனவேதான் நேரப் போக்கிற்காகப் பயன்படும் எழுத்துக்களையும் பிரசுரங்களையும் பத்திரிக்கை எழுத்துக்கள் என்று தனியாக அடையாளப்படுத்திவிட வேண்டும் என்றும் அவைகளை இலக்கியத்தோடு போட்டுக் குழப்பக்கூடாது என்றும் கூர்மையான வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்தார்.

2

இலக்கியத்தின் தர வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். முறையாகக் கற்பவர்களுக்கு அவ்வளவாக ரசனை இருப்பதில்லை. (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக்.154-155) என்று பேசும் க.நா.சு பண்டிதர்களின் ரசனைக் குறைவு மட்டுமல்ல அவர்களின் பழமை குறித்த மோகமும் தனித்தமிழ் என்பது போன்ற மொழி குறித்த பார்வையும் நல்ல இலக்கிய ஆக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று தமிழ்த் துரோகி என்ற வசவுச் சொற்களையும் பொருட்படுத்தாமல் விடாமல் சுட்டிக்காட்டினார்.

…தமிழர்களுடைய பகுத்தறிவின்றிப் பழமை போற்றும் மனப்பான்மை, சமுதாய இனவெறிச் சூழ்நிலை, பார்ப்பனர்கள்தான் இனவெறிக்காரர்கள் என்பதில்லை. மற்ற இனத்தவரும் அதே வெறிக்குள்ளாவதை நாம் காண்கிறோமே… இன்னொன்று தூய தமிழ்வாதம். பண்டிதப் பேராசிரியர்கள் தமிழ் பற்றிப் பிரத்யேகமாகப் போற்றி வளர்த்து வரும் பொய்க் கதைகள். இந்த இரண்டு காரணங்களாலேதான் தமிழ் வளராது இருந்து விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது (மேலது, ப.11)

இவ்வாறு நவீனத் தமிழ் இலக்கியத்திற்குத் தமிழ்ப் பண்டிதர்கள் எவ்வாறு தடையாக அமைந்தார்கள் என்பதைப் பல இடங்களில் எழுதிக் கொண்டே போகிறார்.

3

க.நா.சு முன்மொழிந்த மற்றொரு முக்கியமான போக்கு விமர்சனத்தில் ஆங்கில, அமெரிக்கப் பாணிகளைப் பின்பற்றுவது ‘ஓர் அசட்டுத்தனமான மோஹம்’ என்ற கருத்தாகும். ஒரு மொழி இலக்கியத்தில் விமர்சனத்திற்கான வார்த்தைகள் அந்த மொழி மரபில், சிந்தனை மரபில் வந்தவையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றிற்கு அர்த்தம் இல்லை என்றார். இதற்காக அவர் வைக்கிற வாதங்கள் மிகவும் ஆர்வம்தரத்தக்கனவாக இருக்கின்றன.

1.    ஏற்கெனவே சிரு~;டி தத்துவம் சற்று சிக்கலானது. புரியாத விஷயங்களைக் கொண்டு (அதாவது மேலைநாட்டு விமர்சன வார்த்தைகளைக் கொண்டு) அதை விளக்க முற்பட்டு மீண்டும் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவானேன்.
2.    ஆங்கில, அமெரிக்கப் பாணிகளின் மேல் மட்டும் மோஹம் கொள்கிற இந்தத் தமிழர்கள் மற்ற ஐரோப்பிய மொழிகள் மற்றும் உலக மொழிகளிலும் விமர்சன நூல்கள் உண்டு தானே. அவற்றையும் ஏன் அறிய முயல்வதில்லை என்று கேட்கிறார்.
3.    எந்த விமர்சகனும் ஓரளவுக்கு முதல் நூல் அனுபவத்திற்கும் வாசகனுக்கும் குறுக்கே நிற்பவன்தான்.
4.    ஆங்கில, ஐரோப்பிய விமர்சன வார்த்தைகளை (அர்த்தம் தெரியாமலேயே முக்கால்வாசியும்) உபயோகிக்கும் விமரிசகன் வீணன்.

இதிலுள்ள அழகான முரண் என்னவென்றால் மேலைநாட்டு விமர்சனத்தை இங்கே கொண்டுவரல் ஆகாது; உள்நாட்டு மரபில் விமர்சன முறையை உருவாக்க வேண்டும் என வாதாடும் க.நா.சு அத்தகைய ஒரு அரிய முயற்சியை முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதற்குத் தேவையான பழமரபான இலக்கிய இலக்கணம் சார்ந்த முறையான கல்வி அவருக்குள் எந்த அளவிற்குக் கூடி வந்திருந்தது என்பது விவாதத்திற்குரியது. சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றாலும் முறையான தமிழ்க் கல்வி குறித்து அதுவும் தொல்காப்பியம் போன்ற பொருளிலக்கண நூல்கள், சங்க இலக்கியம் குறித்தெல்லாம் அவர் பெற்றிருந்த கல்வியறிவு விவாதத்திற்குரியதுதான். ஏனென்றால் க.நா.சு மட்டுமல்ல, மறுமலர்ச்சிக் கால நவீன எழுத்தாளர்கள் பலரும் ஆங்கில இலக்கியக் கல்வி மட்டுமே பெற்று வந்தவர்கள்தான்.(தஞ்சை பிரகா~;, ப.253) மேலும் பெரும்பாலும் பிராமண இனத்தைச் சார்ந்த  இந்த எழுத்தாளர்கள் அந்த இலக்கியங்களை நோக்கி நகரத் தேவையில்லாதபடியான ஒரு மனோபாவத்தை அறிந்தோ அறியாமலோ அவர்களே வளர்த்துக் கொள்ளும்படியாக அவர்களுக்கு எதிராகப் பண்பாட்டுத் தளத்தில் இங்கே மிகவும் தீவிரமாக இயங்கிய திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் அந்த இலக்கியங்களைக் கைப்பற்றித் தங்கள் அரசியல் அதிகார ஆதாயத்திற்கான கருவிகளாகவே மாற்றிவிட்டன. அதனால்தான் க.நா.சு இப்படி எழுதுகிறார்:-

சரி. இந்தப் பழசைத்தான் இப்படிப் பேசுகிறார்களே. அதைப் பற்றி இந்தத் தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்திருக்கிறார்கள்?  திரும்பத் திரும்ப முச்சங்கம், தொல்காப்பியம், திருக்குறள், சேக்கிழார்  என இல்லாததையும் இருப்பதையும் ஒரே மாதிரியாகப் பாடிக் கொண்டு தரம் தெரியாதவர்களாகக் குருடர்களாய்ச், செவிடர்களாய், ஊமையர்களாய் வாழ்கிறார்கள். (மேலது, ப.10)

க.நா.சு மட்டும் இன்றைக்குப் பார்க்க வாய்த்திருப்பது போலத் தமிழ்ப் பொருளிலக்கண நூல்களைத் தமிழ்க் கவிதையியலாக வாசித்துப் பழகி இருப்பாரேயானால் (அவருடைய பரந்த வாசிப்பிற்கு இது சாத்தியம்தான்) அவர் முன்வைத்த மரபார்ந்த தமிழ் விமர்சன முறைமை ஒன்று அந்தத் தொடக்க காலத்திலேயே உருவானாலும் உருவாகியிருக்கலாம். ஆனால் எல்லோரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். க.நா.சுவிற்கும் அதுதான் விதி. அவர் விமர்சன எழுத்து மூலம் சாதித்தது எல்லாம் தனது உலக இலக்கியம் என்னும் பரந்த வாசிப்பு மூலமாகவும் மொழிபெயர்ப்பு வேலைப்பாடு மூலமாகவும் இலக்கியத் தரம், உலகத் தரம் என்ற ஒரு பிரக்ஞையைத் தமிழர்கள் மனத்தில் விதைத்துக் கொண்டே இருந்ததுதான்.

இலக்கியத்தில் சராசரி பார்த்துப் பயனில்லை. அது சர்க்கார் இலாகா புள்ளிவிவர நிபுணர் பிறரைத் திருப்தி செய்வதற்காகச் செய்ய வேண்டிய வேலை. நமது சிகரங்கள் என்னவென்று கவனிப்பதே ரசிகனாக, வாசகனாக, விமர்சகனாக என் வேலை. (மேலது, ப.180)

இவ்வாறு இலக்கியத்தில் தரம் என்று ஒற்றைப் புள்ளியில் நின்று கொண்டு அமைப்பு, நிறுவனம், அரசியல் என்றெல்லாம் சாராமல் ஒற்றை மனிதராகவே ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் சலிக்காமல் நவீனத் தமிழ் இலக்கியக் களத்தில் இயங்கிய க.நா.சு.வின் முயற்சிகளைச் சோ~லிசத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான எழுத்துக்களின் ஓர் அம்சமாகவே கண்டார் கைலாசபதி. திறனாய்வுப் பிரச்சனைகள், (க.நா.சு குழு பற்றி ஓர் ஆய்வு) 1980. என்று அவரை விமர்சிப்பதற்காக ஒரு சிறு நூலையே தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் கைலாசபதி. அந்த அளவிற்கு எப்பொழுதுமே ஒரு அமைப்புரீதியாக இயங்குகிறவர்களுக்கு அமைப்பிற்கு வெளியே இயங்குகிறவர்களின் செயல்பாடு பெரிதும் எரிச்சல் ஊட்டுவதாக அமைவதும் அமைப்பு தரும் பலத்தில், விளம்பரத்தில் அமைப்பில் இருப்பவர்கள் ஆர்ப்பரிப்பது வெளியே இருப்பவர்களுக்கு அமைப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதும் இன்றும் தொடரத்தான் செய்கிறது. இதனாலேயே க.நா.சு.வின் எழுத்தில் சமூகப் பார்வை என்ற ஒன்று அறவே இல்லாது போயிற்றோ? மதமாய், சாதியாய், அதிகார மையங்களாய், குடும்பமாய், பொருளாதார அமைப்பாய், குற்றம் தண்டனை என விளையாடும் நீதிமன்றமாய்த் தன்னைச் சுற்றிச் சமூகம் என ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வே அற்ற எழுத்தாய் நீள்கிறது க.நா.சு.வின் கட்டுரைகள். ப+ரணச்சந்திரன் இதை இப்படிச் சுட்டிக் காட்டுகிறார்:-

க.நா.சு.வின் சமூக அக்கறை இலக்கிய விமர்சன வாயிலாக வெளிப்படவில்லை. விமர்சனம் என்னும் செயல்முறையே இலக்கியத்தைச் சமூக நிகழ்வாகக் காண்பதன் அடிப்படையில் உருவாகிறது. இது க.நா.சு ஒரு விமர்சகராக உயர முடியாமல் போன காரணம். (க.நா.சு.வின் விமர்சன ஆளுமை)

இப்படிச் சமூக வரலாறு, சமூகச் சிந்தனை வரலாறு என்பனவற்றைக் குறித்தெல்லாம் பெரிதும் கவனம் கொள்ளாது இலக்கியத்தின் தரத்தை, எல்லாம் கடந்த ஒரு புனிதப் பொருளாக அணுகியதால்தான் அவரது விமர்சனம் அபிப்பிராயம் என்ற நிலையிலேயே நின்று விட்டது. தரமான இலக்கியத்திற்கு எதிரான சக்திகளாக அவர் அடையாளம் கண்ட வெகுஜன பத்திரிக்கை, பண்டிதர்கள், மேலைநாட்டு மோகம், பழமைப்பற்று, சந்தைத்தனம் முதலியவற்றிற்குப் பின்னால் இயங்கும் அதிகார மையங்கள், சாதியச் செயல்பாடுகள், மூலதனத்தின் மூர்க்கம், மத நிறுவனங்களின் குறுகிய மனம் முதலியவற்றைக் குறித்தெல்லாம் அவர் மௌனம் காத்ததுதான் “அவரது விமர்சனம் எழுத்துலகில் எதிர்ப்புக்களை உண்டாக்கினவே தவிர, உரிய நியாயமான பலன்களை விளைவிக்கவில்லை” (சுவடு (தொ), ப.10) என்று வல்லிக்கண்ணன் போன்றோர் வைக்கிற மதிப்பீடு வலுப்பெற காரணமாகி விடுகிறது.
க.நா.சுக்குள் இவ்வாறு சமூகம் கடந்த ஒரு புனிதப் பொருளாக இலக்கியத்தை அணுகுகிற மன அமைப்பை, தமிழ்ச் சூழலில் அவர் காலத்தில் பின்காலனித்துவத்தின் ஒரு கூறாக வீச்சுடன் பரவிய நவீனத்துவத்தின் மூலமாகவே பெற்றார் எனக் கருதலாம். படைப்பாளியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய கற்பனாவாதத் திறனாய்வின் போக்கை விமர்சித்துப் பிரதியை மட்டும் முன்னிறுத்தியது நவீனத்துவம். கருத்துக்களால் ஆனது இலக்கியம் என்ற மரபார்ந்த பார்வைக்குப் பதிலாக வார்த்தையால் புனையப்படும் ஓர் அமைப்புதான் இலக்கியம் என்றது நவீனத்துவம். மேலும் உலகப் போரின் பின் விளைவுகள், தொழிற்புரட்சியின் தீய விளைவுகள் (நகரமயமாதல், வணிகமயமாதல், மதிப்பீடுகளின் சரிவு) முதலியன மனத்தை அலைகழித்தன. இந்நிலையில் ஒருவிதமான தப்பித்தல் உணர்வை வளர்க்கும் வணிக இலக்கியங்கள் பல உருவெடுத்தன. இச்சூழலில் தரமான தளத்தில் தப்பித்தல் உணர்வை அடைவதற்குப் பிரதியின் ஒவ்வொரு உறுப்புக்குள்ளேயும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது நவீனத்துவம். இவ்வாறு மனத்திற்கு ஒவ்வாத சமூகச் சூழல் நிலவியது நவீனத்துவம் வேகமாக வளர வாய்ப்பாக அமைந்தது. உலக இலக்கியங்களைப் பரந்த அளவில் ஆங்கிலம் வழி கற்ற க.நா.சு.வுக்குள்ளும் மேற்கண்ட இந்த நவீனத்துவம் உள்ளுணர்வாய்க் கலந்து கரைந்ததன் வெளிப்பாடுதான் க.நா.சு.வின் எழுத்து. எழுத்து மட்டுமல்ல வாழ்வும்தான். ஆனால் விமர்சனம் என்ற முறைமையில் எந்தத் தீமைகளுக்கு எதிராக எழுதினாரோ அதே தீமைகள் தமிழ் இலக்கிய வெளியில் இன்றும் பன்மடங்கு பெருகித் தொடர்வதுதான் நமது இருப்பின் பெரிய அவலம். எனவேதான் க.நா.சு இன்றும் தேவைப்படுகிறார்.

அடிக்குறிப்புகள்

1.    இந்திய இலக்கியம் (1984)
2.    இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
3.    இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
4.    இலக்கிய விசாரம் (ஒரு சம்பா~ணை) (1959)
5.    இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
6.    இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
7.    உலக இலக்கியம் (1989)
8.    உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
9.    கலை நுட்பங்கள் (1988)
10.    கவி ரவீந்திரநாத் தாகுர் (1941)
11.    சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
12.    தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
13.    படித்திருக்கிறீர்களா? (1957)
14.    புகழ்பெற்ற நாவல்கள் (இரண்டு தொகுதிகள்) (1955)
15.    புதுமையும் பித்தமும் (2006)
16.    மனித குல சிந்தனைகள் (1966)
17.    மனித சிந்தனை வளம் (1988)
18.    முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
19.    விமரிசனக் கலை (1959)

(சாகித்திய அகாதெமி 01.08.2012 அன்று சென்னையில் நடத்திய க.நா.சு நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை)

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *