சாதி….!

author
0 minutes, 38 seconds Read
This entry is part 20 of 32 in the series 13 ஜனவரி 2013

மலை மங்கை

 

என் மனைவி சுமி போன்செய்திருந்தாள். இன்று கீதனை படசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்லும்படி. தனக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பதால் என்னைத்தான் மகன் கீதனை அழைத்துச்செல்லும்படி அன்புக்கட்டளை  இட்டிருந்தாள். இரண்டு மணித்துளிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு கீதனின் பாடசாலைக்கு விரைந்தேன். கீதன் அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை என்பது என்னைக்கண்டதும் அவன் முகம் மாறியதிலிருந்து என்னால் உணரமுடிந்தது.

“Where is mum? What happened to her? …” அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. கீதனுக்குப்பக்கத்தில் ஒரு சிறுமி நின்றிருந்தாள். அவளும் என்னைக்கண்டு மிரண்டாள். அவள் மிரட்சியும் பார்வையும் அவளும்கூட என்னை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.

“எங்கே அன்ரி? ..” சிறுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் தயங்கித் தயங்கி வெளிவந்தன. ஆனால் வார்த்தைகளை அவள்முடிக்கவில்லை. என்னிடமிருந்து பதிலையும் அவள் எதிபார்த்ததாக தெரியவில்லை.

“Bye Keethan .. Cherrio..” கூறிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

தனித்துவிடப்பட்ட கீதன் ஓடிவந்து புத்தகப்பையை ஒருபுறமாக காரினுள் எறிந்துவிட்டு முன் சீட்டில் எனதருகில் அமர்ந்து சீட் பெல்ட்டை பொருத்தினான். ஆங்கிலத்தில் கதைக்கும் என் மகன் கீதனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கதைக்கும் சிறுமியும் என் எண்ணத்தில் வந்து போனார்கள். கீதன் தமிழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடன் எப்பொழுதுமே தமிழில் தான் நாம் கதைப்போம். ஆனால் அவன் எம்முடன் ஆங்கிலத்தில்தான் பதில் கூறுவான். இத்தனைக்கும் கீதனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. முதலாம் ஆண்டு ஆரம்ப பாடசாலையில் பட்டிக்கிறான். தமிழ் நன்றாகதெரியும். ஆனால் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. நாம் இங்கிலாந்துக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன. இங்குதான் கீதன் பிறந்தான். வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். சுமியும் நானும் உயர் பதவிவகிக்கின்றோம். ஆனாலும் மனதில் ஒரு ஏக்கம். ஏப்படி கீதனை இங்குள்ள சூழலில் நல்லபடியாக வளர்த்தெடுப்பது என்பது, மற்றது இன்னுமொரு பிள்ளை பெற்றெடுப்பதா வேண்டாமா போன்ற யோசனைகள்.

”Dad ..” கீதனின் குரல். அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினம். என்ன கேட்கப்போகின்றான். யோசித்தபடி அவனைத்திரும்பிப் பார்த்து நான் முந்திக்கொண்டேன்.

“யார் அது? அழகான பிள்ளையாக இருக்கின்றாளே. உன்னுடன் படிக்கின்றாளா?”

“Still you are there .. that is Keetha my girl friend. She is studying with me in the same class” இது கீதன்.

“இம்.. அழகாகத்தான் இருக்கின்றாள். அவளையா கட்டிக்கப்போறாய்” தொடர்ந்தும் நான் தமிழில் கதைத்தேன். அப்பொழுதாவது தமிழில் கதைக்கமாட்டானா என்ற நப்பாசைதான். ஆனால் கீதன் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தும் கதைத்தான்.

“But dad, there is a problem …” அவளையா கட்டிக்கப்போகிறய் என்பதுபற்றித்தான் அவன் குறிப்பிடுகின்றான் என்பது தெரிந்ததும் அடக்கமுடியாமல் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. ஆனாலும் ஒருவாறு அடக்கிக்கொண்டேன். அதனைப்புரிந்து கொண்ட கீதன்..

“Dad it is not a laughing matter …”  அவன் மீண்டும் சீரியஸ் ஆனான்.

“Dad what is சாதி ?” சாதிக்கு ஆங்கில வார்த்தை அவனுக்கு தெரியவில்லையே என்பதை யோசித்து, அவனுக்கு சாதி என்றால் என்ன என்பது இன்னமும் புரியாத அப்பாவிதான் என்று சிறிது ஆறுதலாக இருந்தாலும் எங்கே இந்த சொல்லை தெரிந்துகொண்டான் என்பதை யோசிக்க எனக்கு சிறிது கடினமாக இருந்தது. இந்த சின்ன மனத்தில் சாதிபற்றி எண்ணத்தை ஊட்டியவர்கள் யார் என என்னால் யூகிக்க முடியவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க என் மனம ஒப்பவில்லை. மன்னிக்கவும் கூடாது.

“What ..?”  என்னை அறியாமலேயே கீதனுடன் கதைக்கும் பொழுது ஆங்கில வர்த்தை வந்துவிட்டதை எண்ணினேன். வெட்கமாக இருந்தது. இதற்கிடையில் வீடு வந்துவிட்டது. கேட்டவற்றை எல்லாம் மறந்தவனாக புத்தகப்பையையும் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான் கீதன். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. நடந்தவைகள் எல்லாம் ஒரு கனவுபோல் இருந்தது. மனச்சோர்வுடன்சோபாவில் சென்று அமர்ந்தேன். மனம் பின் நோக்கிச்சென்றது.

அப்போது நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில்  படித்துக் கொண்டிருந்தேன். முதன் முதலாக சுமியை அங்குதான் சந்தித்தேன்.  இரண்டாம் ஆண்டில் அவள்  படித்துக்கொண்டிருந்தாள். கண்டவுடன் அவளை எனக்கு நன்றாகவே பிடித்துவிட்டது. ஏன் பிடித்தது எதற்காக பிடித்தது என்பது எல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லை. ஆனால் அவளுடன் பழகப் பழக அவளைப்பற்றி  நிறைய தெரிந்து கொண்டேன்.  அவள் யாழ்பாணத்திலிருந்து  வந்து  இங்கு விடுதியில் தங்கியிருந்து படிப்பதும் தெரிந்தது. வசதியான குடும்பத்தில் பிறந்தவள் என்பதும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி என்பதும் எப்பொழுதுமே வகுப்பில் முதல் என்பதும் அவள் படிப்பு முடிய இன்னமும் இரண்டுவருடங்கள் செல்லும் என்பதும் தெரிந்துகொண்டேன்.  எனது இறுதியாண்டுப் பரீட்சையில் நான் திறமையாக சித்தியடைந்தபடியால் பல்கலைக்கழகத்திலேயே எனக்கு படிப்பிக்கும் தொழிலும் கிடைத்தது. திறமையாக சித்தியடைந்த தென்பதையோ அல்லது  அங்கு  வேலை கிடைத்ததென்பதையோ விட இன்னும் இரண்டுவருடங்களுக்கு சுமியுடன் பழக சந்தர்ப்பம் கிடைக்குமென்பதே அந்த நேரத்தில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. சுமிக்கு இறுதிப் பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு நாள் அவளை என் வீட்டிற்கு எனது பிறந்த நாளன்று வரும்படி அழைத்திருந்தேன். வீட்டிற்கு தகப்பனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகப்பனார் மூலம் விடுதியில் அனுமதிபெற்றே எனது பிறந்த நாளுக்கு என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது அந்த பண்பு எனக்கு நன்றாக பிடித்திருந்தது. எனது அவளை மணந்து கொள்ளும்விருப்பத்தை அன்றுதான் அவளுக்கு தெரிவித்தேன். உடனடியாக அதிர்ச்சி அடைந்தவள்ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு உடனடியாக பதில் தெரிந்தாகவேண்டுமா என்று கேட்டாள். அப்படியொன்றும் அவசரமில்லை யோசித்து பதில் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு ஒரு சில நாட்கள் பொறுத்திருந்தேன். சுமிக்கும் அதே எண்ணம் இருந்ததினாலும் முன் கூட்டியே தனது வீட்டாருக்கு சாடை மாடையாகத இதுபற்றி தெரிவித்து இருந்ததினாலும் மீண்டுமொருமுறை தன் வீட்டில் கேட்டுவிட்டு எனது விருப்பை ஏற்றுக்கொள்வதில் எதுவித தயக்கமும் அவளுக்கு ஏற்படவில்லை. சுமி பற்றி எனது விருப்பத்தை எனது வீட்டரிடம் சொன்னபொழுது அப்பா உடனடியாகவே உனது விருப்பமே எனது விருப்பம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார். ஆனால் அம்மாவோ இந்தியாவிலேயே தாம் தான் உயர்ந்த் சாதி என்பதுபற்றி பெருமை கொள்ளுபவர். சுமி பற்றி என்ன குலமோ கோத்திரமோ என்ற பேச்சை எடுக்கமுன்பாகவே அப்பா சொல்லிவிட்டார் சுமியின் அந்தஸ்த்து  எமது அந்தஸ்த்துக்கு குறைந்ததாக தெரியவில்லை. சுமியைப் பார்த்தால் எம்முடன் ஒத்துப்போகக்கூடியவளாக தெரிகின்றாள். குலம் கோத்திரம் என்பதெல்லாம் மனிதன் தனது சுய நலத்துக்காக உண்டாக்கியவை. குப்பையிலே போடு அவற்றை என்று அடித்துக் கூறிவிட்டார் அம்மாவுக்கு. பிறகென்ன, திருமணம் சிறப்பாக இந்தியாவில் நடந்தது என கூறவும் வேண்டுமா.

சுமியின் சொந்தக்காரர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்து எல்லாம் வந்திருந்ததினாலோ என்னவோ அம்மாவும் பிறகு குலம் கோத்திரம் பற்றி எல்லாம் கதைத்ததாக எனக்கு ஞாபகமில்லை.

இப்பொழுது நாம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டோம்.  இந்த எனது முப்பத்தியிரண்டு வருட வாழ்வில் ஒரு நாளாவது என்னை யாரும் என்ன சாதி என்று கேட்கவும் இல்லை. சாதி என்ற அடையாளத்தை எந்த ஒரு தேவைக்காகவும் பாவிக்கவுமில்லை. உத்தியோகமாகட்டுக்கும் அல்லது வேறு என்ன தேவைக்ககவும் சாதகமாகவோ அல்லது பதகமாகவோ பாவிக்கபடவுமில்லை. அப்படியிருக்கும் பொழுது இந்த சாதி என்ற ஒரு அடையாளம் தேவையா என்று நாமெல்லோரும் இந்த நிகழ்காலத்தில் சிந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியிருக்கும் பொழுது கீதாவிற்கு அவளின் அம்மா சாதி பற்றி கூறி அந்த சின்னஞ் சிறு மனசை அழுக்காக்குவதற்கு எப்படி  மனது வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படியும் ஒரு அம்மாவா?

தாம் தமிழன் என்ற அடையாளத்தைக் காப்பாற்ற இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை ஈழத்தில் காவு குடுத்துவிட்டு தமது உயிர் காக்க புலம் பெயர்ந்தது இங்கு வந்துவிட்ட பின்னரும் அந்த சாதி என்ற அடையளங்களை தூசு தட்டி தான் இன்னமும் பெரியவனென்று மார் தட்டுபவர்களை என்னவென்பது? நாம் என்ன சொன்னாலும் செய்தாலும் அவுஸ்திரேலியவிலுள்ள வெள்ளையர்களுக்கு நாம் என்றும் Dark skin people தான். என்னதான் வேற்றுமை அற்ற சட்டதிட்டங்கள் இங்கு இருந்தாலும் அவனுக்கு நாம் தாழ்ந்தவர்கள்தான். அவன் என்றுமே தங்களுக்கு வேண்டத்தகாதவர்களகவே எங்களைக் கருதுவான். அவன் மனத்திலிருந்து அந்த எண்ணத்தை என்றுமே மாற்றமுடியாது. ஒருவேளை நேரிடையாக அதனை அவன் வெளியில் காட்டாமல் இருக்கலாம்.

யோசித்துக்கொண்டிருந்த என்னை கீதனின் குரல் மீண்டும் இவ்வுலகத்துக்கு அழைத்துவந்தது. எனக்கு நன்றக தெரியும். தனது கேள்விகளுக்கு விடை கிடைக்காது விட்டால் மீண்டும் மீண்டும் நினைவு வரும் போதெல்லாம் கேட்டுவைப்பான். இன்னமும் அவன் மனத்தில் மீண்டும் அந்த கேள்வி இருக்கின்றதா என்பதை அறிவதற்காக “ அப்புறம் இன்றைக்கு என்ன புதிதாக படித்தாய்?” கேட்பதற்காக கேட்டுவைத்தேன்.

“Nothing new Dad, by the way you have not answered my question?” வேதாளம் மீண்டும் முருக்கமரத்தில் ஏறியது.

“கீதன் உனக்கு ஏன் Cast  பற்றி தெரியவேண்டும்” என்னை அறியாமலேயே பல்லைக்கடித்தேன்.

“Yes Dad, Keetha  mentioned cast or something like that. Keetha says that she will marry me only if I am a better cast than her. That’s is what Keetha’s amma told..” தொடர்ந்தான் கீதன்..

நான் ஊகித்தது சரிதான். கீதாவின் அம்மாதான் சிறுமி கீதாவின் மனதில் நஞ்சை விதைத்திருக்கின்றள்.

“Am I better cast than Keetha? How can we measure that? What type of ruler we need to use to measure the difference?”
கேள்விகளை அவன் அடுக்கிக்கொண்டே போனான். கீதனது கேள்விகள் இத்துடன் நிற்கப்போவதில்லை. புது விபரங்கள் ஒவ்வொன் ஒவ்வொன்றாக தெரிய வர ஒவ்வொரு கேள்விகள் புதிது புதிதாக வரும்.

சுமியின் கார் வசலில் வரும் ஓசை கேட்டதும் விடையை எதிர்பாராமலேயே அம்மாவை வரவேற்க ஓடிவிட்டான் கீதன். கீதனைக் கண்டதும் தான் சுமியின் முகத்தில் மகிழ்ச்சி. என்னில் அவ்வளவு நம்பிக்கையில்லை.  சிலவேளைகளில் நான் கீதனை அழைத்துவர மறந்திருப்பேனோ என்ற எண்ணமே அதற்கு காரணம். சுமி தனது நன்றியை முகத்தில் புன்முறுகலாக தவளவிட்டாள். நானும் என் பங்குக்கு நடந்தவைகளையும் கீதனின் கேள்விகளையும் அதற்குண்டான சந்தர்ப்பங்களையும் ஒன்றும் விடாமல் வருணித்துவிட்டேன். கீதாவின் அம்மாவை சுமிக்கு நன்றகவே தெரியுமாம். அவளும் யாழ்பாணம் தானாம். ஈழத்திலேயே ஒருத்தரை  அவரவருக்கு தெரியுமாம்.  அவளது பெயர் சுந்தரியாம். ஓரளவுக்கு சொந்தமுமாம்.

விளையாட்டுக்காக கீதாவிடம் ஒருவேளை சாதி பற்றி  கூறியிருந்தாலும் உள் மனத்திலுள்ள எச்சரிக்கை உணர்வுதான் அவளை அப்படிக் கூற வைத்திருக்கவேண்டும்  என்பது சுமியின் வாதம். கீதா பிற்காலத்தில் யாரையாவது விரும்பினாலும் இப்பொழுதே இவைகள் பற்றி கீதாவுக்கு சொல்லி அறியவைப்பது ஒரு பாதுகாப்பு  அத்துடன் பிடிப்பது புளியங்கொப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் சுந்தரி அப்படி கீதாவுக்கு சொல்லியிருப்பாள் என்று நம்பினாள் சுமி.  ஏனெனில் சுமி பல ஈழத்தமிழர்களுடன் பழகியிருக்கின்றாள். எப்படி அவர்களில் ஒரு சிலர் தூரநோக்குடன் சிந்தித்து திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள். யார் யாருடன் வலிந்து வலிந்து பழகுகின்றார்கள், யார் யாரை எல்லாம் விலக்கி வைக்கின்றர்கள் என்பதனை சாடை மாடையாக கவனித்திருக்கின்றாள்.  சில நாட்களுக்கு முன்னர் ஒரு Birthday Party க்குச் சென்றிருந்தோம். அங்கு சுந்தரியின் அண்ணன் குமாரும் வந்திருந்தான். எல்லோருக்குமே தெரியும். அவனது வாய் பொல்லாதது என்று. போதாதற்கு அவன் கட்டைப் பிரமச்சாரி. குடித்துவிட்டு அன்று அவன்  பண்ணிவிட்ட கூத்து என்னால் மறக்கமுடியாதது. அவன் வாயில் வந்தபடி பேசினான். தன்னைவிட்ட உயர்ந்த சாதி வேறுயரும் இல்லை என்றும் வேறு யார் யாரையோ எல்லாம் குறிப்பிட்டு அவர்களைப்பற்றி அவர்களது சாதியைப் பற்றி எல்லாம் இழிவாகக் கூறினான். குமாருக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை உள்ளது. அவ்வளவாக அவன்  படித்தவனல்ல. அவனுடன் படித்த பலர் இங்கிலாந்தில் மிக நல்ல நிலையில்இருக்கின்றர்கள். இவனைப் பொறுத்தவரையில் அவர்களெல்லாம் தன்னை விட சாதியில் குறைந்தவர்கள். அவர்கள் தன்னிலும்  பார்க்க நல்ல உயர்ந்தநிலையில் இருப்பதை இவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. தன்னால் சாதித்தது என்று சொல்ல அவனிடம் ஒன்றும் இல்லை. பிறப்பால் தன்னிடம் ஒட்டிக்கொண்ட சாதி ஒன்றினால் தான் அவர்களை அவனால் வெல்ல முடிகின்றது.

ஆனால் சுந்தரிக்கு என்னவந்தது. அவளுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை. அவ்வளவு வசதியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றள். அவளுக்கு என்ன வந்தது?

. கீதனின் கேள்விக்கு என்ன பதில் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் நான். எனது யோசனைகள் எங்கோ செல்வதை உணர்ந்த சுமி என்னைத் தனிமையில் விட்டுவிட்டு தன் வேலைகளைக் கவனிக்க சென்றுவிட்டாள்.

சாதி என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகியது? எப்படி எப்படி எல்லாம் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு இடங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதுபற்றி புத்தக வரைவிலக்கணங்களை கீதனுக்கு இலகுவாக இப்பொழுது என்னால் கூறிவிடமுடியும். ஆனால் பெரியவனாக வளர்ந்து விபரம் அறிந்து அவன் கேட்க இருக்கும் கேள்விகளே என்னை இப்பொழுதே பயமுறுத்துகின்றன. ஒரு ஆறுதல். அப்பொழுது அவனுக்கு தமிழும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். இப்படியான  எமது கலாச்சாரம் பற்றிய விபரங்களை தமிழில் விளங்கவைப்பது ஓரளவுக்கு இலகுவானது. ஆனாலும் எமது கலாச்சாரத்திலுள்ள விருப்புக்கு பங்கம் ஏற்படாது அவனுக்கு உண்மைகளை விளக்க வைக்கவேண்டும். அதுதான் எனக்குள்ளே இப்பொழுது ஏற்பட்டுள்ள தயக்கம். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ள  விரும்புகின்றேன்.

சாதி என்றால் என்ன? அது எப்படி எல்லாம் வளர்ந்தது என்பது பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டபின்கீதன் கேட்கவிருக்கும் நான் ஊகிக்கும் கேள்விகள் இவைகளாகத்தான் இருக்கும்.

“Dad சாதி என்பது ஆரம்பத்தில் மக்களை தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரித்து இருந்தார்களென்றும் இந்த நான்கு பிரிவுக்குள் அடங்காதவர்களை ஐந்தாவது பிரிவாக பிரித்திருந்தார்கள் என்றும் கூறியிருந்தீர்கள். அப்பொழுது எந்த ஒரு பிரிவும் மற்ற பிரிவுகளின் உயர்ந்ததோ அல்லது தாழ்வானதாகவோ கருதவில்லை என்றும் பின்னர்தான் படிப்படியாக உயர்வு தாழ்வு புகுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ 3000 க்கும் அதிகமான சாதியின் உட்பிரிவுகளாக அது வளர்ந்து விட்டதாகவும் கூறினீர்கள். அப்படியானால் அவை எல்லாம் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டதா? அவைகளை என்ன அடிபடையில் தரப்படுத்த போகின்றார்கள்?”  இது அவனது முதற் கேள்வியாக இருக்கலாம்.

அடுத்த கேள்வி இதுவாக இருக்கலாம். ”விஞ்ஞான கண்டுபிடிப்புகளெல்லாம் காலத்துக்குக்காலம் மீளாய்வு செய்யப்பட்டு முடிவுகளெல்லாம்மாற்றியமைக்கப் படுகின்றனவே. அப்படி உங்கள் சாதியையும் எப்போது சுருக்கி திருத்தி நவீனமயப்படுத்தப் போகின்றார்கள் அலது இல்லாது செய்யப்போகின்றார்கள்? இன்னமும் நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இந்த சாதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கப் போகின்ரறீர்கள்?” இதற்கு எனக்கு விடைதெரியாது.

“இப்போழுதெல்லாம் கலப்புத்திருமணங்களெல்லாம் சர்வ சாதாரணமாகவே நடைபெறுகின்றனவே. அப்படியானால் பிறக்கும் பிள்ளை அம்மா சாதியா அல்லது அப்பா சாதியா? அப்பாவினதும் அம்மாவினதும் சாதியின் சராசரியா? சராசரி பார்க்கும்போது அப்பாவின் சாதிக்கு கூடிய அலகளவு(weight) கொடுக்கப்பட வேண்டுமா?” பச்சையாக சொல்லவேண்டுமானால் அவன் கேள்வி இன்னமும்கடுமை யாக இருக்கலாம்.

“அம்மாவின் சாதியாகத்தான் பிள்ளை இருக்கவேண்டும். அம்மாதானே கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கூறுவது போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். அம்மாகூறித்தான் அப்பாவை பிள்ளைக்குத்தெரியும். அப்பாவின் சாதிதான் பிள்ளையின் சாதியாக கொண்டால் என்ன சாதி என விண்ணப்பப் படிவங்களில் போடவேண்டுமானால் அடைப்புக்குறியிற்குள் கேள்விக்குறிதான் போடவேண்டியேற்படும்” அவன் என்னத்தை சொல்லவருகின்றான் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.

“கலப்புத்திருமணத்தில் ஒருவர் வெள்ளையராக இருந்துவிட்டால் அவரது சாதியின் பெறுமதி வெறும் சைபரா அல்லது அனந்தமா? அவர்கள் பிள்ளையின் சாதி பெறுமதியை கணக்கிடுவதற்கு சமன்பாட்டில் எந்த பெறுமதியைப்போட வேண்டும்”

இதுவும் அவனது கேள்வியாகத்தான் இருக்கும். ”Dad சாதிப் பிரிவுகள் தொடர்ந்தும் இருப்பது உங்கள் சுமுதாய நன்மைக்காகத்தான் என்று சப்பை கட்டும் உங்கள் நண்பர்களெல்லாம் அதனை உலகெல்லாம் அறிமுகப்படுத்தலாமே. இதற்காக அவர்கள் ஒரு Project ஆரம்பித்து விஞ்ஞான ரீதியாக எப்படி எப்படி சாதியை புது மாதிரியாக வகுப்பது என்ன என்ன மூலக்கூறுகளின் அடிப்படையில் உயர்வு தாழ்வுகளெல்லாம் கண்டு பிடிப்பது பற்றி ஒரு Thesis எழுதி வெளியிடலாமே.”. அவன் கூற்றுக்கள் கேலியாக வெளி வருவதை என்னால் உணரமுடிகின்றது. ஊங்களால் உணரமுடிகின்றதா? இப்படியான கேள்விகள் கீதனிடமிருந்துதான் வரவேண்டும்என்பதில்லை. இன்றய இளைய தலைமுறைகள் யாரிடமிருந்தும் வெளிவரலாம்.  இப்பொழுதிருந்தே அவர்களுக்கு விடை சொல்ல உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

——————-

Series Navigationவால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)“சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *