சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013
 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -13

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

படம் : 25, படம் : 26 & படம் : 27  [இணைக்கப் பட்டுள்ளன]
Inline image 1

சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை

 

பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல  மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச்  சண்டைகளும், இனச் சண்டைகளும், மாநிலச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும்  பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் காயப் படுத்திப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல்  கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைப் போருக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத்  தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும்  புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்!  இராமன் பிறந்த புனித பூமியான  அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் இந்து கோயில்  எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல்  மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதாரத் தேவன்  அல்லன் என்று பலமுறை பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த  தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்  போராட்டங்கள் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன்  வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!  புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து  மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர்  புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும்  இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது  வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, கல் வெட்டில் பொறிக்கத் தகுந்த எந்தப்  பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த  தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட  அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம்  பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரிய வில்லை.  கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத  நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப்  பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத  வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில்  அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச  பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும்  தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப்  பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும்  பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்  மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள்  காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல்  இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து  கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித்  தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற  காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல்  நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை  இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.  தெய்வத்தைத்  தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று  சொன்ன வுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங் களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க  வர்க்கத்தின் விதிகளையும், வரலாற்றையும் காட்டுகிறது!  எப்பொருள் யார்யார்வாய்  கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி,  கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத்  தவறு மில்லை!  தெய்வம் தொழாள் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும்  பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை  எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே.  அந்தக் காலத்துப் பெண்டிரின்  அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே,  வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி  யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை  மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க  வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச  பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து  இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை  நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில்  நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான்.  பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான்.  இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக்  கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன்  எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம்  செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும்  பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும்,  சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ  அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக்  குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர்,  விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம  கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில்  யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை.  அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன்,  இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி  முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை  திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின்  புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி  அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது  வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை  ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத  ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும்  தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய  பின், வால்மீகி இராம கதையில் ஈடுபாடு கொண்டு எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று  கருதவும் இடமிருக்கிறது.

Seetha 25Seetha 26Seetha 27

[தொடரும்]

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014திண்ணையின் இலக்கியத் தடம்-15ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரிஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்குஉடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்துதவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்நிர்வாணிமருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்புநீங்காத நினைவுகள் – 27திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறிசில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லைபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39என்னை ஆட்கொண்ட இசையும், நானும்கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

13 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், மாநிலச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் காயப் படுத்திப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். –> கடைந்த்தெடுத்த புளுகு மூட்டை. வந்தேறிகளாக வ்ந்த கிறிஸ்துவ பாதிரியார்களின் அராஜகம் , பிரித்தாளுதள், இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க ஏதுவாக ரயில், ரோடு என்று போட்டு அதை முன்னேற்றப் பாதையில் கொண்டு போகிறோம் என்று புளுகியது. உலகமெல்லாம், நிறவேற்றுமையின் உச்சத்தில் இருக்கும் அந்த வெளுப்பு இனம், இங்கிருந்த வேற்றுமைகளை பூதகரமாக்கியதே உண்மை. கறுப்பர்களை சங்கிலியில் போட்டு இழுத்து அடிமையாக்கி அவர்களின் பெண்களை மானப்பங்கப்படுத்தி கையில் பைபிளை கொடுத்து பாவிகள் என்ற இனம் ஆடிய ஆட்டமே இங்கு அதிகம். முன்னேற்ற விவசாயம் என்று ரசாயனத்தால் உணவையே விஷயாக்கியது அந்தக் கும்பல். சகிப்புத் தன்மை என்று சொரணை கெட்டு நாம் கிடந்ததால் தான் இந்நிலை.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //இங்கிருந்த வேற்றுமைகளை பூதகரமாக்கியதே உண்மை.//

      வேற்றுமைகள் இருந்தன என ஏற்றுக்கொள்வதற்கு பெரியமனது வேண்டும். புனைப்பெயரிலுக்கு ஒரு சபாஷ்.

      இங்கிருந்த வேற்றுமைகளைக்கண்டு அவைகளை இங்கிருந்தோரே களைய முயற்சித்திருந்தால், அந்நியர் புகுந்திருக்க மாட்டார். ராஜபுத்ர அரசர்களுக்குள் இருந்த வேற்றுமைகளால், அவ்வரசனின் ஒருவனே பாபரை அழைத்தான் என்பது வரலாறு.

      ஆயிரங்குண்டு ஜாதியெனில் அந்நியர் புகல் என்ன நீதி என்பது சரிதான். ஏன் ஆயிரம் ஜாதிகள் என்பதை கேட்கத்தவறுதல் அவற்றை ஏற்றல் எல்லாமே முதல்தவறுகள்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      புனை பெயராரே !

      வெள்ளைக்காரன் இந்தியாவில் நுழையா திருந்தால், இந்த நாடு ஆசியாவில் அடுத்தோர் இஸ்லாமிய தேசமாய், கஜினிஸ்தான் அல்லது பாபர்ஸ்தான் ஆகியிருக்கும்.

      இந்துஸ்தானாக இன்னும் இருந்திருக்க வெள்ளைக்காரனே காரணம்.

      இந்தியா ஒரு பாம்பாட்டி நாடாக ஆப்பிரிக்கா கண்டம் போல் அநாகரீகமாகப் போயிருக்கும். மிகவும் பிற்போக்கான நாடாக இந்தியா ஆகியிருக்கும்.

      சி. ஜெயபாரதன்

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    விக்ஞானம் என்ற கருப்பொருள் இல்லாத உங்களுடைய இரண்டாவது படைப்பாக இதை வாசித்துள்ளேன்.

    முதலாவது உங்களது மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம். தற்போது இந்த அலக்கிய படைப்பு.

    விக்ஞானம் என்ற விஷயம் மட்டிலும் தான் முறையான அணுகுமுறையுடன் எழுதப்படவேண்டும் என நீங்கள் கருதுவதாக எண்ண முகாந்திரமிருக்கிறது. இந்த இரண்டு படைப்புகளிலும் நீங்கள் எழுத விழையும் விஷயங்களைப் பற்றி ஒரு அடிப்படைப் புரிதல் கூட இல்லாது எழுத விழைகிறீர்கள்.

    இது மிகவும் தகைமையற்ற செயற்பாடு.

    ஆனால் மட்டற்ற மதக்காழ்ப்புடன் நீங்கள் கருத்துப் பகிரும் முறைமை இழிவானது. ஒரு புறம் ஹிந்து மத ஆதர்ச நாயகர்களை / நாயகிகளை உங்களது குறுகிய ஆப்ரஹாமியம் சார்ந்த கண்ணோட்டத்தில் இழிவாகச் சித்தரிக்க முனைகிறீர்கள். மறுபுறம் ஆப்ரஹாமிய அடாவடிப் பித்தலாட்ட முறைமைகளை — குழுவாகச் சேர்ந்து — கபள சோற்றில் பூஷணிக்காயை மறைக்கும் விதமாக — பூசி மெழுக முனைகிறீர்கள்.

    தொடரும் வாதங்களோ — கருப்பொருள் சார்ந்து இல்லாது — மதிக்கு விருந்தாகாது – ஹிந்துமதத்தை இழிவு செய்வது என்ற மையக்கருவை மட்டிலும் சார்ந்ததாக உள்ளது.

    ஆப்ரஹாமியம் சார்ந்த விஷயங்களை இதே போன்று சாரமில்லாது காழ்ப்பு மிக விமர்சிக்க முடியும் தான். ஆனால் முறையான சப்யதையில் பயிற்சி உள்ள படிக்கு — யஹூதிகளின் ஆராய்ச்சிகளின் படி மரியாளையோ ஏசுபிரானையோ இழித்துப் பழித்து ஒரு வ்யாசத்தை எழுதக் கை கூசுகிறது. இங்கே பதிவாகிய அடாவடிக்கருத்துக்களைப் பார்த்து சினமிகுந்து அப்படி ஒரு முயற்சி பற்றி எண்ணியது வாஸ்தவம் தான். ஆயினும் என் ஹைந்தவ சப்யதை அப்படிப்பட்ட ஒரு பழிக்குப்பழியை தடை செய்கிறது.

    உங்களுடைய தற்போது இருக்கும் வ்ருத்தாவஸ்தையில் — உங்களது ஹிந்துமதக்காழ்ப்பு மற்றும் ஆப்ரஹாமிய கண்மூடி ஆதரவு என்ற இரண்டையும் மீறி — ஒரு சமநிலைப்பார்வைக்கு உங்களால் வரமுடியுமா என்பது சம்சயமே. உங்களது மித்ரரான வைத்யர் ஸ்ரீ ஜான்சன் அவர்களது பார்வைகளில் சமநிலையை மிகுதியாகக் காணமுடிகிறது. ஆனால் ஆப்ரஹாமிய அடாவடித் தனங்களில் ருசி உள்ள அன்பர்கள் அவரது சமநிலையைக் குலைக்க கருத்துக்களைப் பகிர்ந்து அவரது சமநிலைப் போக்கை குலைக்க விழைவதைப் பார்க்க முடிகிறது.

    உங்கள் பரம மித்ரரின் செயல்பாட்டை அவதானிக்க விழைந்தால் உங்கள் அழகு தமிழில் உண்மையான மத நல்லிணக்க விஷயங்களை நீங்கள் பகிர்ந்து சமூஹத்திற்குப் பகிரலாம்.

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    இந்த படைப்பு சார்ந்து நான் எழுத விழைந்த தொகுப்பின் முதல் பகுதி கிட்டத்தட்ட தயாராக உள்ளது.

    என்னுடைய தொகுப்பை நான் முன்னர் சொன்னபடியல்லாது சற்று வேறு விதமாக அணுகியுள்ளேன்.

    முதற் பகுதியாக வால்மீகி ராமாயணம் எனப் புழக்கத்தில் உள்ள — ஆஸேது ஹிமாசலம் — ஹிந்துக்கள் போற்றித் துதிக்கும் நூலை – நீங்கள் பொய்க்கதை என்று இழித்துப் பழித்த விஷயத்தை ஆய்வுகள் சார்ந்து அணுகியுள்ளேன். இதில் பெரும்பகுதி ஆய்வாளர்களின் கருத்தையும் — என் புரிதலையும் — வாசகர்கள் முன் வைக்க விழைந்துள்ளேன். இது ஒரு விதத்தில் எதிர்வினை என்ற படிக்கு ஆகாது. மாறாக எனக்கும் வாசிக்கும் வாசகர்களுக்கும் இந்த விஷயம் சார்ந்த முறையான ஒரு புரிதலைப் பகிரும் ஒரு ப்ரயாசையாகவே இருக்கும்.

    என் அடுத்த தொகுப்பில் தாங்கள் தங்களுடைய அலக்கியப் படைப்பை படைக்க முனைந்ததில் உள்ள கருத்துத் திரிபுகள், இன த்வேஷ கருத்துப்பகிர்வுகள், ஹிந்துமதக்காழ்ப்பு போன்ற விஷயங்களை அணுக உள்ளேன். குரங்கு சமாசாரம், உங்களுடைய உரைநடையை உடைத்து உதிர்த்துப்போட்ட (கவிதை???????????) சீதாயணம் பற்றிய பகிரலில் *கேடுகெட்ட வண்ணான்* என்ற உங்களுடைய பாட்டிகதைக் கண்றாவி(நான் ஏற்கவொண்ணாதது – ஸ்ரீமான் புனைப்பெயரில் அவர்களாலும் கடுமையாக இடித்துறைக்கப்பட்டுள்ளது), சீதாபிராட்டியின் அந்தர்தானம் மற்றும் சிற்சில விஷயங்களை அணுக உள்ளேன். வால்மீகி ராமாயணம் சார்ந்து. தாங்கள் வால்மீகி ராமாயண நூற்களை தங்களது அனுபந்தத்தில் பகிர்ந்துள்ள படிக்கு. இயன்றால் கம்பநாட்டாழ்வாருடைய அபிப்ராயங்களையும் இரண்டாவது தொகுப்பில் பகிர விழைகிறேன்.

    தாங்கள் மேற்கொண்டு குறிப்பாக எந்த விஷயத்தைப் பற்றியாவது நான் ப்ரஸ்தாபிக்க வேணும் என்று எண்ணினால் பகிரவும். நான் அறிந்த விஷயம் என்றால் ப்ரஸ்தாபிக்க ப்ரயாசிக்கிறேன்.

    கடைசீ முறையாகக் கேழ்க்கிறேன். நீங்கள் உங்கள் அலக்கியப்படைப்பில் விவரித்த ராமகதையை மெய்யாக நடந்த விஷயமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தாங்கள் எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? அல்லது வழக்கம் போல — போகிற போக்கில் அடித்து விடப்பட்ட — உங்களது புளுகுமூட்டையில் இருந்து உதிர்ந்த புளுகா?

    எப்படியும் இருக்கட்டும்.

    உங்கள் வாழ்த்துக்களுடன் என்னுடைய தொகுப்பை சமர்ப்பிக்க விழைகிறேன் ஐயன்மீர்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    விடுதலை இந்தியாவில் நடக்கும் ஏராளமான சண்டைகளில் வெள்ளை நிற வந்தேறிகள் எங்கே குந்தி உள்ளார் ?

    சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    //கடைசீ முறையாகக் கேழ்க்கிறேன். நீங்கள் உங்கள் அலக்கியப்படைப்பில் விவரித்த ராமகதையை மெய்யாக நடந்த விஷயமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தாங்கள் எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? //

    “கடைசி முறையாகக் கேட்கிறேன்….இலக்கியப்படைப்பில்” என்றுதான் தமிழ் எழுதவேண்டும். கேழ்வி என்பது தமிழ் இல்லை. அது தமிழைப்பழித்தலே. திண்ணையோ பிறவாசகர்களோ கேடகத்தவறினால் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொண்டு திருமபத்திரும்பத் தமிழைபழித்தல் தகாத செயலாகும்.

    ராமகதை மெய்யாக நடந்தது என்று ஜயபாரதன் சொன்னாலும், கிருட்டிணக்குமார் சொன்னாலும் ஏற்கவியாலது. த்ரேயுத யுகத்தில் நடந்தது என நம்புகிறார்கள். அதாவது 75 லட்சம் ஆண்டுகளுக்கு முன். எனவே ராம கதையை எழுதிய அனைவரும் பிறர்வாய்க்கேட்ட கதையை எழுதினார்கள். மனிதன் உலகில் தோன்றியது அவ்வளவு காலத்திற்கு முன்பு கிடையாது. ஆக, நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கைகளுக்குத் தரவுகளும் ஆதாரங்களும் தேவையில்லை.

    ஜயபாரதன் தான் சமூஹத்தில் ஒரு உலாவும் கதையைத்தான் மறு சிருஷ்டி செய்கிறேன் என்றும் அப்படிப்பட்ட சிருஷ்டிகள் படைப்பாளிகளின் விருப்பத்தின்படியேதான் நடக்குமென்றும், ஷாலி எடுத்துக்காடியவாறு நூற்றுக்கணக்கான இராமாயணங்களுள் இதுவும் ஒன்று என்று முடித்திருந்தால் கிருட்டிணக்குமாரின் மனோவேதனைகளுக்கிடமிரா.

    இந்துக்களுள் தீவிர இந்துக்கள்தான் எழுதவேண்டுமென்போருக்கு, இந்தோனிசாவின் நாட்டுநாடகம் இதுவாகும். உலகத்திலே அதிக் இசுலாமியர்கள் உடைய நாடு. இராமாயணம் இந்திய காவியம். இந்துக்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.

    //என்னுடைய தொகுப்பை சமர்ப்பிக்க விழைகிறேன் ஐயன்மீர்.//

    வரவேற்கப்படவேண்டிய ஒன்று. விரைவில் வரட்டும் அதுவும் இதுமுன்னர் சொல்லப்பட்ட இராமாயணங்களில் மீள்பதிவாகத்தான் இருக்கமுடியும். சிருஷ்டி இல்லாவிடில் அப்படித்தான். சிருஷ்டியின் போது படைப்பாளி புதிதாகவும் ஏற்றியும் இறக்கியும் சொல்லலலாம். கம்பர் செய்ததது போல. தரவுகள் கேட்பது. ஏன் அப்படி எழுதினாய் எனக்கேட்பதெல்லாம் தாலிபானித்தனமாகும். அப்படி எவரும் கிருட்டிணக்குமாரின் இராம கதைக்குக் கேட்க மாட்டார்கள்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ சிருஷ்டியின் போது படைப்பாளி புதிதாகவும் ஏற்றியும் இறக்கியும் சொல்லலலாம். கம்பர் செய்ததது போல. தரவுகள் கேட்பது. ஏன் அப்படி எழுதினாய் எனக்கேட்பதெல்லாம் தாலிபானித்தனமாகும். \

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களோ ஜெயபாரதன் அவர்களோ ராமாயணம் என்று எழுதி இது நான் எழுதியது என்று சொன்னால் நான் ஏன் கேழ்க்கப்போகிறேன். அதைக் கேழ்வியெழுப்பினால் வேண்டுமானால் அது தாலிபானியம் என்று சொல்லிக்கொள்ளலாம்.

    வால்மீகி முனிவர் வால்மீகி ராமாயணத்தில் சொல்லாத விஷயங்களை ஜெயபாரதன் வால்மீகி ராமாயணத்தில் சொல்லியுள்ளது என்று புளுகடித்தால் அது கண்டிப்பாக கேழ்க்கப்படும்.

    அப்படிக்கேழ்வியெழுப்புதல் வால்மீகி ராமாயணம் என்ற இலக்கிய வாசிப்பில் அக்கறை உள்ளவர்களுக்கு அக்காவ்யத்தை மீள்வாசிப்புக்கும் தங்களுக்கு அக்காவ்யத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதாகவும் இருக்கும்.

    வால்மீகி ராமாயணம் என்ற காவ்யத்தை வெறுப்பவர்களுக்கு அக்காவ்யத்தை எப்படி இழிவு செய்தாலும் இனிக்கத் தான் செய்யும்.

    நான் இங்கு கேழ்விக்கு உட்படுத்தியது ஸ்ரீமான் ஜெயபாரதன் தான் எழுதியது மெய்யாலும் நடந்தது என்று சொன்னதைத் தான்.

    ஃபெர்னாண்டோ அவர்களே

    \ ராமகதை மெய்யாக நடந்தது என்று ஜயபாரதன் சொன்னாலும், கிருட்டிணக்குமார் சொன்னாலும் ஏற்கவியாலது. \

    பொளந்து கட்டி விட்டீரே ஜோ. வாழ்க சுவிசேஷம்.

    நான் எங்கே எப்போது ராமாயணக்கதை சரித்ரத்தில் நடந்த விஷயம் என்று சொன்னேன் இந்த தளத்தில் அல்லது வேறு தளத்தில் (நான் ஜோ மாதிரி தளத்துக்கு ஒரு பெயரில் உலாத்துவது கிடையாது) என்று நிரூபிக்க முடியுமா?

    ஆனால் அப்படி யாரேனும் சொன்னால் அதற்கு ஏதும் தரவுகள் சரித்ரம் சார்ந்து முன்வைத்தால் அது ராமபிரானாக இருந்தாலும் நான் சரித்ரத்தில் இல்லை என்று திண்ணமாக எண்ணும் ஏசுபிரானாக இருந்தாலும் அதைக் கறாராகப் பரிசீலனை செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். தேவரீரது பூர்வ அவதாரத்தில் இது சம்பந்தமான வ்யாசத்தில் தான் நாம் வேணமட்டும் விவாதித்துள்ளோமே.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு கிருஷ்ணகுமார்ஜி,

      உங்கள் பெற்றோர் வாழ்ந்ததற்கு வரலாற்று நூல் உள்ளதா ? வீர சாவர்க்கர் வாழ்ந்ததற்கு வரலாற்று நூல் உள்ளதா ?

      இந்துக்களின் அற்புத ஞான நூல் பகவத் கீதை கிருஷ்ண பரமாத்மா எழுதியது என்று வரலாறு உள்ளதா ? இந்தியாவில் பூர்வீக வரலாறு நூல்கள் எத்தனை உள்ளன ? வரலாற்று நூல் இல்லா விட்டால் இராமர், சீதா, பகவத் கீதா இல்லை என்று சொல்வது அறிவீனம் இல்லையா ?

      சி. ஜெயபாரதன்

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன்

    விக்ஞானம் என்பது எப்படி நுட்பமான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதோ

    அதேபோல் சரித்ர ஆய்வு என்பதும் பலவிதமான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதனைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சரித்ர ஆய்வுகளில் விக்ஞானமும் ப்ரயோகிக்கப்படுகிறது என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள். Carbon dating – இத்யாதி விக்ஞான ஆராய்ச்சி முறைகள் சரித்ரத்தில் காலக்ரமத்தை கணிக்க உதவுகின்றன.

    ஒரு நபர் ஒரு நூலில் ப்ரஸ்தாபிக்கப்பட்டிருப்பது என்பது அந்த நபரைப் பற்றி நாம் அறிய விழையும் பல ஆதாரங்களில் ஒரு ஆதாரம். சரித்ர நிகழ்வுகளை ஒற்றை ஆதாரங்களைக் கொண்டும் நிர்த்தாரணம் செய்ய முடியும் என்றாலும் பலப்பல சாரித்ர நிகழ்வுகள் பலப்பல ஆதாரங்களால் நிர்த்தாரணம் செய்யப்பட்டவை என்பதே நோக்கத் தக்கது.

    நான் உங்களிடம் கேட்டிருந்தது நீங்கள் சொல்லும் ராமாயணம் தான் *மெய்* என்பதற்கு ஆதாரம் என்ன என்பதுவே? எதன் அடிப்படையில் தாங்கள் அப்படி ஒரு முடிவை எட்டினீர்கள்? உங்கள் ஆதாரம் எது என்று தான் நான் வினவினேனே அல்லாது உங்கள் ஆதாரத்திற்கு அடிப்படை ஒரு நூலாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லியதில்லையே? உங்களுடைய ஒரு கருத்தாக்கம் எதன் ஆதாரத்தில் எழும்பியது என்பதனை நீங்கள் தான் விவரிக்க வேண்டும். அப்படி ஒரு விவரணம் கொடுக்க இயலவில்லை என்றால் *மெய்* என்று சொன்னது ஆதாரமற்ற விஷயம் என்று மட்டிலும் நிராகரிக்கப் படும் என்பதனை அறிக.

    ஏசுபிரான் என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததில்லை என்பதனை மிக விரிவாக அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (எ) காவ்யா வின் மித்ரரான சுந்தரவடிவேலு என்ற அன்பர் தனது வ்யாசங்களில் சரித்ர ஆதாரங்கள் சார்ந்து பகிர்ந்திருந்தார். உங்கள் கண்கள் மனது இரண்டையும் விசாலமாகத் திறந்து வைத்து கருத்துக்களை காய்தல் உவத்தல் இல்லாது அவதானிக்க விழையுங்கள்.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இந்துக்களின் அற்புத ஞான நூல் பகவத் கீதை கிருஷ்ண பரமாத்மா எழுதியது என்று வரலாறு உள்ளதா ? இந்தியாவில் பூர்வீக வரலாறு நூல்கள் எத்தனை உள்ளன ? வரலாற்று நூல் இல்லா விட்டால் இராமர், சீதா, பகவத் கீதா இல்லை என்று சொல்வது அறிவீனம் இல்லையா ? \

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்,

    பகவத் கீதை கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். இதை வ்யாச முனிவர் சொல்லி வினாயகப்பெருமான் எழுதினார் என்பது இதிஹாசம் / புராணசம் பகரும் விஷயம்.

    பகவத் கீதை கண்ணன் எழுதியது என்ற அபுரிதலை யார் உங்களுக்கு சொல்லியது? ஏசுபிரானைப் பற்றி அனைத்தும் தெரிந்த மதம் பிடிக்காத ஹிந்துவான உங்களுக்கு இது தெரியாதது வியப்பில்லை தான்.

    ம்……. “வ்யாசாய விஷ்ணு ரூபாய வ்யாச ரூபாய விஷ்ணவே” என்றதன் படி வ்யாச முனிவர் விஷ்ணுவின் அவதாரம் – வ்யாசரும் கண்ணனும் ஒன்றே – என்ற வாதத்தை முன்வைக்கலாம்.

    புராணங்களில் சொல்லப்பட்டவை பலவற்றை இன்று சரித்ர ஆராய்ச்சியாளர்கள் மற்ற பல சான்றுகளின் வழியே இவை சரித்ரத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம் தானா என ஆராய்ச்சி செய்கிறார்கள். அனைத்தும் சரித்ரம் என்றும் இவர்கள் ஏற்பதில்லை என்பதும் அனைத்தும் சரித்ரம் இல்லை என்று மறுப்பதும் இல்லை என்பதும் ஒரு பறவைப்பார்வையாக நான் அறிவது.

    ராமபிரான், சீதாபிராட்டி இவர்கள் எனக்குத் தெய்வம். இவர்களை நான் வணங்குகிறேன். இவர்கள் சரித்ரத்தில் இருந்தார்கள் என்று யாரேனும் சொன்னால் நிச்சயம் அதற்கு ஆதாரம் என்ன என்று கேழ்ப்பேன். ஆதாரங்கள் சார்ந்தே ஒரு நபரின் சரித்ர இருப்பை ஏற்பேன். celestial beings – என்று சொல்லப்படுபவர்கள் சரித்ரத்தில் இருக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் பிடிவாதம் பிடிப்பதில்லை.

    ஏசுபிரான் சரித்ரத்தில் இருந்த ஒரு நபர் இல்லை என்பது முறையான சரித்ர ஆராய்ச்சியால் நிரூபணம் ஆன விஷயம். பைபள் க்ரந்தத்தில் சுவிசேஷிகளின் முரண்படும் சாரித்ர குறிப்புகள், ஏசு என்ற நபர் இருந்ததாகச் சொல்லப்படும் சமகாலத்திய மற்றும் சற்றே பிந்தைய யஹூதிய பாகனிய சான்றுகளில் இப்படி ஒரு நபரைப் பற்றிய திண்ணமான ப்ரஸ்தாபம் இல்லாமை என மிகப்பல ஆதாரங்களால் ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது மிகவும் தீர்மானமாக நிர்த்தாரணம் செய்யப்பட்டுள்ளது.

    ஏசுபிரானை க்றைஸ்தவர்கள் தேவமைந்தன் என்றும் போற்றுகிறார்கள் எனவும் அறிவேன். அப்படியொரு கருத்தாக்கத்துக்கும் சரித்ரத்துக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஏசுபிரான் என்ற ஒரு விஷயத்தை க்றைஸ்தவர்கள் தேவ மைந்தனாக நம்புவதிலும் அதனையொத்து அத்புதங்கள் அவர் நிகழ்த்தியதையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். அதை ஏற்கிறேன். அதைப் போற்றவும் செய்கிறேன். ஆகவே தாங்களோ முகமூடி சுவிசேஷப்படையினரோ ஹிந்துக்கள் க்றைஸ்தவ த்வேஷம் உள்ளவர்கள் என்று ஜல்லியடிக்க முனைய வேண்டாம்.

    ஆனால் அவரை மனிதன் என்று நீங்கள் சித்தரிக்க விழைந்தால் சரித்ரத்தில் இருந்தவர் என்று சித்தரிக்க விழைந்தால் நிச்சயம் ஆதாரங்கள் கேழ்ப்பேன்.

    வினோதமான விஷயம்.

    தேவ மைந்தனான ஏசுபிரானை நீங்கள் ஆதாரம் சாராது சரித்ரத்தில் இருந்ததாகச் சாதிக்கிறீர்கள். ஹிந்துக்களுடைய கடவுளான விஷ்ணுவின் அவதாரமான ராமபிரானை மனிதன் என்று சித்தரிப்பது போதாது என்று இங்கும் சரித்ரம் என்று சொல்ல விழைகிறீர்கள். ஒன்று மட்டிலும் சொல்லிக்கொள்கிறேன். சரித்ரம் என்பது ஆதாரம் சார்ந்தது என்று புரிந்து கொள்ளுங்கள்.

    நம் சமகாலத்தில் இருக்கும் பல மனிதர்களது சாரித்ர இருப்புக்கு ஒன்றல்ல எண்ணிறந்த ஆதாரங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் துவங்கி ரேஷன் கார்டு, ஓட்டுனர் லைசன்ஸ், ஆதார் கார்டு …… இத்யாதி இத்யாதி…விதண்டாவாதம் செய்ய விழையாதீர்கள். ஆதாரம் என்பது ஏதோ ஒரு நூல் சார்ந்தது என்று நூல் பிடிக்காதீர்கள்.

    விக்ஞானம் போன்றே சரித்ரமும் மிகவும் நுட்பமான கோட்பாடுகள் அடங்கியது என்று புரிந்து கொள்ள முனையுங்கள். முறையாக வாதம் செய்யப் பழகுங்கள்.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. \

    \ வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. \

    மேற்கண்ட இரண்டு வாசகங்களும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களால் தன் அலக்கியப் படைப்பில் சொல்லப்பட்டவை.

    இரண்டு கருத்துக்களை அன்பர் அவர்கள் முன்வைக்கிறார்.

    தன்னால் சொல்லப்பட்ட விஷயம் ஒரு புனைவல்ல. கற்பனையல்ல . மெய்யாக நடந்த நிகழ்ச்சிகள் என்று சொல்லியுள்ளார்.
    என்ன ஆதாரம்? கால யந்த்ரத்தில் ராமாயண காலத்தில் ப்ரயாணம் செய்து நிகழ்வுகளை படம் பிடித்து வந்துள்ளதாக சொல்வாரா? இந்த தளத்தை வாசிக்கும் கற்றறிந்த வாசகர்களுக்கு முன் எந்த ஆதாரத்தில் இப்படி ஒரு கருத்தை அன்பர் அவர்கள் முன்வைத்துள்ளார்?

    சீதாயணம் என்ற அலக்கியம் ஒரு புனைவு என்று அன்பர் அவர்கள் சொல்லியிருந்தால் இந்தக் கேழ்வியே எழுந்திருக்காது.

    மூலநூலான வால்மீகி ராமாயணம் பின்னால் பலரால் பலமுறை மாற்றப்பட்டு பொய்க்கதையாய் மங்கிப் போனது என்று சொல்வதற்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் லவலேசமாவது ஒரு அடிப்படைப்புரிதலுடன் இந்த வாசகத்தைச் சொல்லியுள்ளாரா என்பதனை அவர் இந்த தளத்து வாசகர்கள் முன் வைக்கட்டும்.

    இப்படிப்பட்ட ஒரு கருத்து ஒரு அறிவுசார்ந்த விசாரம் மூலம் வைக்கப்பட்டுள்ளதா அல்லது வெறும் ஹிந்து மதக்காழ்ப்பு சார்ந்து வைக்கப்பட்டுள்ளதா என்பது — அறிவு பூர்வமாக — தர்க்க பூர்வமாக — இந்த கருத்தை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் அணுக விழைகிறாரா இல்லையா என்பதிலிருந்தே தெரியும்.

    ஒரு விஷயத்தைப் பற்றி விமர்சனம் செய்ய விழையும் முன் அதைப்பற்றி ஒரு அடிப்படைப் புரிதலாவது இருக்க வேண்டும் என்பது தகைமையுள்ள எந்த ஒரு மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் விஷயம். அப்படிப்பட்ட அடிப்படைப் புரிதலை இவர் பெற்றுள்ளாரா என்பதற்கு கீழ்க்கண்ட வினாக்கள் ஒரு பானையிலிருந்து எடுக்கப்படும் ஒரு சோற்றுப்பருக்கை பதம் போன்றவை. கேழ்விகள் :-

    1) வால்மீகி ராமாயணம் எனப்படும் 24000 ச்லோகங்கள் அடங்கிய மூலநூலை க்ரந்த லிபியிலோ, நாகரலிபியிலோ அல்லது தமிழ் அல்லது தெலுகு அல்லது அல்லது வேறெந்த லிபியிலோ ஒருமுறையாவது ஒரு சில ச்லோகங்களாவது அன்பர் அவர்கள் வாசித்ததுண்டோ? ச்லோகங்களின் பா முறைகளை அவதானித்ததுண்டா?

    2) மூலநூலை வாசிக்கவில்லையென்றால் ஆங்க்லத்திலோ அல்லது தமிழிலோ உள்ள எண்ணிறந்த மொழியாக்கங்களை வாசித்ததுண்டா?

    3)வால்மீகி ராமாயணம் பற்றிய படைப்பாய்வுகளில் சொல்லப்பட்ட விஷயங்களை வாசித்து உள்வாங்கி அதனை மூலநூலிலும் மொழியாக்கங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்களை உள்வாங்கி ஆய்வுக்கருத்துக்களை பரிசீலனை செய்ததுண்டா?

    புழக்கத்தில் இருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றிய படைப்பு சார்ந்த ஒரு விமர்சனம் வைக்கப்பட வேண்டுமானால் மேற்கண்ட ந்யாயமான கேழ்விகளுக்கு நேர்மறையான உத்தரங்கள் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட வேண்டும்.

    மிகவும் அடிப்படையான இந்த வினாக்களுக்கு கருத்து நேர்மையுடன் ஸ்ரீமான் ஜெயபாரதன் விடையளிக்கவில்லையெனில் அவருடைய கருத்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கருப்புக் கண்ணாடி அணிந்து சொல்லும் ஒரு மூதாட்டியுடைய கருத்தாக மட்டிலும் அணுகப்படும்.

    என்னுடைய முதல் தொகுப்பில் இந்த மஹாகாவ்யத்தை ஆய்ந்த ஆய்வாளர்கள் பலரின் கருத்துக்களையும் நிஷ்பக்ஷமாக முன் வைத்துள்ளேன் என்பதனையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். நாகர லிபியில் இந்த நூலை வாசித்திருக்கிறேன். மேலும் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ள விவிதமான பா முறைகளுடனும் பரிச்சயமுள்ளவன் என்ற படிக்கும் ஆய்வுக்கருத்துக்கள் சொல்லும் விஷயங்களை மூல நூல் சார்ந்தும் விரிவுரைகள் சார்ந்தும் உள்வாங்க முயன்றுள்ளேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வால்மீகி ராமாயணம் என்ற மூல நூல் பலரால் பலமுறை மாற்றப்பட்டு பொய்க்கதையாய் மங்கிப்போனது என்று அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் முன்வைத்த கருத்தை அணுகுகையில் …….

    வால்மீகி ராமாயணம் என்ற படைப்பு தொடர்ந்த மட்டற்ற இடைச்செருகல்களால் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதா என்பதே விசாரிக்கப்பட வேண்டிய கருத்து.

    ஆய்வாளர்கள் மூல நூலை வாசித்துப் பல ஆய்வுக்கூறுகள் மூலம் பரிசீலனை செய்ய விழைந்துள்ளார்கள்.

    ராமபிரான் சரித்ரத்தில் இருந்த ஒரு மானுடரா? என்பது முற்றிலும் வேறு விஷயம்.

    எனக்கு ராமபிரான் தெய்வம். விஷ்ணுவின் அவதாரம்.

    ராமபிரான் சரித்ரத்தில் இருந்த ஒரு மனிதர் என்ற கருத்தை யாரேனும் முன்வைக்க முனைந்தால் அதற்கான ஆதாரத்தையும் முன்வைக்க விழையலாமே.

    தான் சொல்லும் ராமகதை புனைவல்ல. கற்பனையல்ல என்றும் மெய்யாக நடந்த விஷயம் என்று சாதிக்க முயலும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ஆதாரங்கள் என்று ஏதேனும் முன்வைத்தால் நானும் அந்த ஆதாரங்களைப் பரிசீலித்து ராமபிரான் சரித்ரத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டா என்று நம் புரிதலை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ஒரு முறையான தர்க்க பூர்வமான ஒரு உரையாடலிலும் கருத்து நேர்மையுடனும் அன்பர் அவர்கள் தன் கருத்தை முன்வைத்திருந்தால்.

Leave a Reply to IIM Ganapathi Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *