சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

[சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -12

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 Scene -23

 

Seetha 24

படம் : 23 & படம் : 24  [இணைக்கப் பட்டுள்ளன]

++++++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

 

[படம் : 1]

Scene -6 Seetha with Rama, Valmiki, Twins & brothers (1)

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை  அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ  விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர்  விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத  பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர்  என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை  ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை!  அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப்  போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த  பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான்  முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு  மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு  அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம்  அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில்  போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான்  கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப்  பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி  என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு  மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை  யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி!  கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும்  இடம் பெற முடியவில்லை இதுவரை!  ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சியே !

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு  என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி!  மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப்  போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற  மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத்  துறக்க வேண்டிய திருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த  வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள்  வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன்.  மகுடத்தைக் காப்பாற்ற வேண்டு மானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! ..  ஆம்! நிரந்தர மாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப்  பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில்  இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை  ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ?  நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு  தெரிய வில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

[ படம் : 2 ]

Scene -6 Rama leaves Seetha with Twins (1)

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று நான் கனவு கூடக்  காணவில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு  விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட  அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப்  பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவுக்குக் கொடுத்த தண்டனை,  பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில்  அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி!  பெயரை மாற்ற வேண்டாம்.  என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன  மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில்  என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே  வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே  இருக்கட்டும்.

பரதன்: [கோபத்தில்] அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டீர்கள்!  அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி  வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே  பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்!  அன்னையிடமிருந்து பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்!  உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக்  கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும்  புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க  வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம்  இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே  விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால்  தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத்  திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால்  உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும்  வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் நாங்கள் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க  அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப்  போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன  இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள்  புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று சொல்லி சீதாவை அழைத்துச்  செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம்  என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்!  அப்போது எல்லாரது பிரச்சனைகளும் தீரும்!  உங்கள் இராம கதைக்கு நானே முடிவை  எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) ….  அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு  வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை  வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து  விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு  காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!..  நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே  நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப்  பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான்  தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! …மீளாத உலகுக்கு !

[வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக்  குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க  ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாதாளப் பாறையில் அடிபட்டு  அவளது ஆத்மா பிரிகிறது].

[அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இராமன் கண்களில் நீர் பொங்கிச் சொட்டுகிறது]

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக  வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியு மென்று நான்  நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது  ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம  கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை  சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான்.  இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி  அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப்  பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர்  துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய  உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்!  வாழப் பிறந்தவர் நீங்கள் சாக வேண்டுமா ?

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும்  உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள்  நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை  வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தம பதி  என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு  மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு  பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர்  துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?

[படம் : 3]

Scene -6 Seetha kills herself

[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன்,  அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி  சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின்  துயரக் கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா,  குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

(நாடகம் முற்றிற்று)

[தொடரும்]

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

10 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    குரங்கு கை பூமாலை….. இதே மாதிரி இயேசு என்பவர் சாதாரண பிளாக் மேஜிக் தெரிந்தவர் என்று இவர் எழுதுவாரா?

  2. Avatar
    ஷாலி says:

    உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் கள் எனப்படும் தம்பூரி தாஸையாக்கள், கன்னட மொழியில் மேடைகளில் கதா கலாட்சேபங்களாக நடத்துகின்ற ராமா யணங்களிலும் சீதையை ராவணனின் மகள் என்றே பாடுகிறார்கள். அதற்கு கதை ஒன்றும் சொல்கிறார்கள். குழந்தை இல்லாத கவலையில் இருக்கிறார் கள் ராவணன்-மண்டோதரி தம்பதியர். இந்த வேண்டுதலை நிறைவேற்ற மாம்பழம் ஒன்றைத் தரும் சிவனிடம் பழத்தின் சதைப் பகுதியை மண்டோ தரிக்கு கொடுத்து விட்டு, கொட்டையை நான் சப்பிக் கொள்கிறேன் என்கிறான் ராவணன். ஆனால், சொன்னதற்கு மாறாக சதையை தான் தின்றுவிட்டு கொட்டையை மண்டோதரிக்கு கொடுக்கிறான். சிவனிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாததற்கு தண்டனையாக ஆணாக இருந்தும் கர்ப்பம் அடைகிறான் ராவணன். சரியான நிறை மாதத்தில் அவன் தும்மும்போது மூக்கு வழியாக பிறந்ததால் சீத்தம்மா என்று பெயர் வைக்கிறான். தம்பூரி தாஸையாக்கள் ராவணனை ரவுலா என்று அழைக்கின்றனர்.

  3. Avatar
    ஷாலி says:

    300 ராமாயணங்கள்.. 5 எடுத்துக்காட்டுக்கள்..’ என்னும் தலைப்பில் பண்டிதர் ஏ.கே.ராமானுஜன் தொகுத்து எழுதிய கட்டுரை அது. அய்யங்கார் பிரிவைச் சார்ந்த இவர் பிறந்தது மைசூரில். வரலாற்று அறிஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. 1993-ல் இயற்கை எய்தினார் ராமானுஜன். 2006-ல் இவரது கட்டுரை டெல்லி பல்கலைகழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமனையும் சீதையையும் பழிக்கின்ற இந்தக் கட்டுரையை நீக்க வேண்டும் என்று 2008-ல் பாரதிய ஜனதாவின் மாணவரணியான அகில பாரத வித்யார்த்த பரிஷத் திடமிருந்துதான் முதன் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணம் மட்டுமே சிறப்புடையது. மற்ற ராமாயணங்கள் ஏற்புடையவை அல்ல என்றனர். டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றும் பதிவானது. உயர்நீதி மன்றமோ, இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக் கழகத்துக்கு உத்தர விட்டது. சில நடைமுறைகள் மேற் கொண்ட பிறகு, இப்போது அகடமிக் கவுன்சில் கூடி வாக்கெடுப்பு நடத்தி, பாடத்திட்டத்திலிருந்து இக்கட்டுரையை நீக்கிவிட்டது.

  4. Avatar
    ஷாலி says:

    டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற் றுத் துறை பேராசிரியர்களில் ஒருவர் உபிந்தர் சிங். டாக்டரேட் பட்டம் பெற்று, பழங்கால இந்தியா பற்றிய பல புத்தகங்களை எழுதிய உபிந்தர்சிங், வேறு யாருமல்ல… பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள். பாடத் திட்ட கமிட்டியில் இவரும் இடம் பெற்றிருந் தார். யுனிவர்சிட்டி அகடமி கவுன்சிலிலும் இவர் இடம் பெற்றிருந்தார். பிரதமர் மகள் தான் ராமாயண பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தார் என்று பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் பிரச்சினையை கிளப்புமோ என்ற அச்சத்தினால் தான், அரசியல் நிர்பந்தம் காரணமாக அந்தப் பாகம் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சர்சை டெல்லி வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.

    அந்தக் கட்டுரையில் ஏ.கே.ராமானுஜன் சொல்வதென்ன?

    முன்னூறு விதமான ராமாயணம் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என ராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். முன்னூரா? மூவாயிரமா? இத்தனை ராமாயணங்கள் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்விக்கு ராமாயாணத்திலிருந்தே ஒரு கதையை பதிலாகத் தருகிறார் கட்டுரையாளர் ஏ.கே.ராமானுஜன்.

    சிம்மாசனத்தில் வீற்றிருந்த ராமனின் விரலிலிருந்து நழுவி விழுந்த மோதிரம் அப்படியே பூமிக்குள் புதைந்து விடுகிறது. “மோதிரத்தை எடுத்து வா…”என்ற ராமனின் கட்டளையை ஏற்று தன் உருவத்தை மிக மிகச் சிறிய தாக்கி, பூமியைத் துளைத்துக் கொண்டு செல்கிறான் அனுமன். பாதாள உலகம் வந்து விடுகிறது. அங்கிருந்த பூதகணங் களின் தலைவனிடம் மாட்டிக் கொண்ட அனுமன் விசாரிக்கப் படுகிறான். “பூமிக்குள் சென்ற ராமனின் மோதிரத்தைத் தேடியே நான் வந்திருக்கிறேன்…”என்று அனுமன் சொல்ல.. மோதிரங்கள் குவியலாகக் கிடந்த ஒரு பெரிய தட்டினை எடுத்து வருகிறது அந்த பூதம். “இதிலிருந்து ராமனின் மோதிரத்தை நீயே தேடி எடுத்துக்கொள்…”என்கிறது. எல்லாம் ஒரே மாதிரி இருந்த அந்த மோதிரங்களில் தேடி வந்த ராமனின் மோதிரம் எதுவென்று அனுமனுக்குத் தெரியவில்லை. அப்போது பூதங்களின் தலைவன் சொல்கிறான்… “ராம அவதாரங்கள் பல இருக்கின்றன. ஒவ் வொரு ராம அவதாரமும் முடியும் போது மோதிரம் தானாகவே கழன்று விழும். அப்படி நான் சேகரித்த மோதிரங்கள்தான் இவை. நீ பூமிக்கு திரும்பும் போது அங்கே ராமன் இருக்க மாட்டான். ஏனென்றால், அவன் இப்போது எடுத்த அவதாரம் முடிந்து விட்டது”என்று விளக்குகிறான்.

  5. Avatar
    ஷாலி says:

    சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ராமனைக் கொண்டாடு கின்றனர். ஆந்திராவில், ரங்கநாயகி அம்மாள் தொகுத்திருக்கும் ராமாயணக் கதைகளை தங்கள் வீட்டுக் கொல்லைகளில் அமர்ந்து கொண்டு பாடுகின்ற பிராமணப் பெண்களுக்கு, சீதையைப் பற்றிய கவலையே மிகுந்து காணப்படுகிறது. ராமனையே விஞ்சு கிறாள் என்று சீதையை உயர்த்திப் பிடிக்கின்றனர். ராமனைப் பழிவாங்குவதில் சூர்ப்பனகை காட்டும் தீவிரத்தையும் சிலாகித்துச் சொல்கின்றனர்.

    கதைக் களமும் வெவ்வேறாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “பௌத்த ஜாதகக் கதைகளின்படி பார்த்தால் தசரதனின் நாடு காசி..” என்கிறார், ராமாயணக் கதைகள் பலவற்றை அச்சிட்டிருக்கும் பதிப்பாசிரியரான பாலா ரிச்மேன். “கேரளா-வயநாடு பகுதிகளில் இருக்கின்ற மலைவாழ் மக்கள், இங்கே புல்லப் பள்ளியில் வால்மீகிக்கு ஆசிரமம் இருக்கிறது. வால்மீகியின் ஊர் புல்லப்பள்ளிதான். ராமாயண சம்பவங்கள் அத்தனையும் நடந்தது கேரளாவில்தான். இலங்கை என்பது இங்கே உள்ள ஒரு நீர் நிலையினைக் குறிக்கிறது. இதைக் கடந்தே ராவணனிடமிருந்து சீதையை மீட்டான் ராமன். அனுமன் கட்டிய பாலமும் இங்கே இருக்கிறது.” என்று நம்பியும் பாடியும் வருவதாகச் சொல்கிறார் கேரளாவில் உலவு கின்ற பல்வேறு கதைகளைத் தொகுத்து வரும் அஜீஸ்.

    “ராமாயண கதைக்கு மூலம் எது என்றே சொல்ல முடியாது. வால்மீகி காலத்திலேயே வேறு ராமாயணங்களும் இருந்திருக்கின்றன. எல்லா ராமாயணங் களையும் ஏதோ ஒன்றின் தழுவல் என்றோ, மொழி பெயர்ப்பு என்றோ உறுதியாகச் சொல்லி விட முடியாது. இவை அனைத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை ராமன் என்ற கதாபாத்திரத்தை உள்ளடக்கிய ராமாயணம் என்பதே..” என்கிறார் பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாபர்.

    “இதிகாசங்களில் பின்னாளில் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி விட்டார்கள் பிருகு பிராமணர்கள்…”எனச் சொல்கிறார் வரலாற்று அறிஞர் வி.எஸ்.சுக்தாங்கர்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*

    வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

    வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*

    படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

    வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

    வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

    வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். \

    உண்மை.

    இதை நூறு முறை ஜெபிப்பது வம்புக்குத் தான்.

    இங்கு பேசப்படும் கருப்பொருளில் ராமபிரானும் சீதாபிராட்டியும் கணவன் மனைவி என்றே உள்ளது..

    இந்தக் கருப்பொருளைப் பேசுவது வால்மீகி ராமாயணம்; பவபூதியின் உத்தரராம சரிதம் இன்னும் சில சம்ஸ்க்ருத காவ்யங்கள். தமிழிலும் உத்தரராம சரிதம் உண்டு. அதைப் பற்றிப் பேசினால் விதிவிலக்காக நீங்கள் கருப்பொருள் சார்ந்து வம்பில்லாமல் பேசுவதாக ஆகிவிடுமே.

    தேவையானது வம்பென்றால் கருப்பொருளைப் பற்றிப் பேசவே கூடாதே.

    யாரோ ஒரு அய்யங்கார் அல்லது பணிக்கர் எங்கோ எழுதியதை திரும்பத் திரும்ப ஜெபிப்பது வம்பு மட்டுமே. பௌத்த ராமாயணம் அல்லது ஜைன ராமாயணத்திலிருந்து இது வரை ஒரு பாடல் அல்லது ஒரு செய்யுள் இது வரை பகிரப்பட்டுள்ளது?

    இந்தக் கருத்துக்களை வம்புக்காக அல்லது வீம்புக்காக என்றில்லாத படிக்கு இருந்தால்…….

    இலக்கிய நயம் பற்றிப் பேசுவது நோக்கம் என்றால்…….

    இது வரை ஒரு hemistich ஆவது பகிரப்பட்டிருக்க வேண்டும்………

    ராகத்தைப் பற்றிப் பேசுகையில் வராகத்தைப் பற்றிப் பேசி……

    தாளத்தைப் பற்றிப் பேசுகையில் வேதாளத்தைப் பற்றிப் பேசி…..

    நானும் ராகத்தைப் பற்றித்தானே பேசினேன்…… நானும் தாளத்தைப் பற்றித் தானே பேசினேன் என்று கதைப்பதை என் சொல்வது..

    பொலிக! பொலிக!!!!!!!

    ம்…………ராஹுவும் கேதுவும் வக்ர தசையில் செல்கிறது!!!!!!!!!

    ரகுபதி ராகவ ராஜாராம்; ஸப் கோ ஸன்மதி தே பகவான்.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீமான் ஜெயபாரதன்

    நீங்கள் பகிர்ந்தது உத்தரராம சரிதத்தின் பகுதி.

    உத்தர ராம சரிதம் பேசும் எந்த ராமாயணமும் நீங்கள் கொலைவெறிமிக முன்வைத்த முடிவை முன்வைப்பதில்லை.

    உங்கள் கற்பனையில் நீங்கள் வடித்த சீதையை வாழ வைப்பதற்கும் கொலை செய்வதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.

    உங்கள் படைப்பை மெய் என்று *கதைத்திருந்தீர்கள்*. ஆனால் இதுவரை அந்த *மெய் ஞானத்தின்* source எது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறீர்கள்.

    ஆக இது புனைவே!!!!!!!

    இது புனைவின் நோக்கம் என்ன? முற்போக்குக் கருத்துக்களா? தெரியவில்லையே?

    ஸ்ரீமான் ஜெயபாரதனின் புனைவுப்படி சொல்லொணா துன்பத்துக்கு ஆளாகும் ஒரு ஸ்த்ரீ எடுக்க வேண்டிய முடிவு ஆத்ம ஹத்யை என்பதை அன்பர் அவர்கள் சமூஹத்துக்குச் சொல்ல விழைகிறாரா?

    உத்தரராம சரிதம் பேசும் காவ்யங்கள் முன்வைக்கும் முடிபை இந்தப் படைப்பு முன்னெடுக்கவில்லை; புனைவு என்ற படிக்கு முற்போக்கான ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. அப்படியானால்!!!!!!

    ஹிந்து மதக்காப்பியங்களை இழிவு செய்வது நோக்கமா? ஆம்………. அன்பர் அவர்கள் தன் படைப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் ……மேலும் உத்தரங்கள் மூலம் பகிர்ந்த விஷயங்கள் அதையே சுட்டுகின்றன.

    இது சரியல்ல.

  9. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு. கிருஷ்ணகுமார்ஜி

    ///அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!.. நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான் தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! …மீளாத உலகுக்கு !///

    எல்லாம் இழந்த சீதைக்கு மரணம்தான் முடிவு.அவள் யாருக்காக வனத்தில் இனி உயிர்வாழ வேண்டும் ?

    சி. ஜெயபாரதன்.

  10. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு. கிருஷ்ணகுமார்ஜி,

    ஒரு காலத்தில் இந்துக் குடும்பங்களில் கணவன் இறந்த பிறகு, மனைவியை உயிரோடு எரியும் தணலில் வீசிக் கொன்றார்களே, அது எந்த விதிமுறைப் படி நடந்தது ? அப்படிப் பெண்ணைக் கொல்வது நியாயமா ?

    ராஜஸ்தான் ராணா இறந்த பிறகு, ஊர் ஊராய்ச் செல்லும் பக்த மீராவைப் பிடித்து எரிதணலில் பொசுக்க அரசாங்க அதிகாரிகள் ஓடினர். ஆனால் அதை முன்பே அறிந்த பக்த கோடிகள் மீராவை ஒளித்து வைத்துக் காப்பாற்றினார்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *