ஜென் ஒரு புரிதல்- பகுதி 29

This entry is part 12 of 42 in the series 29 ஜனவரி 2012

கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும்.

அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால கட்டம் இது வரை எதிர் கொள்ளாத போராட்டமாக இருக்கும். அந்தத் தனிமை, தாயின் வயிற்றில் இருந்த நிலைக்கு ஒப்பாகும். முடிவில் ஒரு புதிய பிறவியாக வெளிவருவது போராட்டமே. ஆனால் அது வலிமையை நிரூபித்து வெல்வது அன்று. தெளிவில் நிலைப்பதே அது. என்ன தெளிகிறோம்? எப்படி அது நிகழும் என்பது குறித்த ஒரு ஒப்பற்ற பதிவைப் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் “ஸூ யுன்” னின் பதிவுகளில் காண்கிறோம். “தர்மத்தைத் தேடி” என்னும் கவிதை ஒரு திறவு கோலாகப் பேசும்.

என் மனதை நான் உற்பத்தி செய்த முதல் நாள் பற்றிய உணர்வுகள்
______________________________________________

அறுபது வருடங்கள் முன்பு “கர்மா” வினால் இழுக்கப்பட்ட நான்
வாழ்க்கையைத் தலை கீழாய்ப் புரட்டிப் போட்டேன்
நெடிதுயர்ந்த சிகரங்களை
எட்ட நேரடியாய் மலை ஏறத் தலைப் பட்டேன்
என் விழிகளுக்கிடையே ஒரு கத்தி தொங்கும்
முவ்வுலகும் தூயவை
வெற்றுக் கைகளில்
ஒரு கதிரருவாளை வைத்து
நான் நட்சத்திர வெளியை
சமன் செய்ய முயல்கிறேன்

‘அறியும் மனம் என்னும் பெருங்கடல்’ வற்றும் போது
முத்துக்கள் தாமே ஒளிர்ந்து வெளிப்படும்
அண்ட வெளி தூசியாய்த் தகரும் போது
நிலவு தன்னிச்சையாய்த் தொங்கும்
சொர்க்கத்தினுள்ளே வலை வீசி
நான் ‘டிராகனை’யும் ‘ஃபீனிக்ஸை”யும்
வசப்படுத்தினேன்
வான்வெளியில் நான் தனியே நடக்கிறேன்
இறந்த காலத்துடன் அதன்
மக்களுடன் இணைந்த படி

________________________________________________

வேட்கையைத் தாண்டிச் செல்லல்
_______________________
காட்டுத்தனத்தை விட்டு விடும்
முயற்சியில் காட்டின் ஒரு பகுதியாகி விட்டாய்
குரங்குப் பிடியை விடச் செய்யும் போராட்டமே
ஒரு முரட்டுப் பிடியாகும்
சரி எப்படி கட்டுப்பாடு வைத்து வேட்கையைத்
தாண்டிச் செல்லப் போகிறாய்?
உன் கண்களைத் திற
உன் மண்டை ஓட்டோடு பிறந்த
அதே இரண்டு கண்களைத் தான்…

________________________________

புத்தரின் இதயம்
___________
அலைகளைப் போல்
முன்னும் பின்னும் துரத்திச் செல்ல
வேண்டியதில்லை
கரை தாண்டி வடிந்தோடிய அதே
நீர்தான் ஓடுவதும்
திரும்பி சுற்றி தண்ணீரைத் தேடுவதில்
அர்த்தமில்லை
உன்னைச் சூழ்ந்து தண்ணீர்
எல்லா திசையிலும் ஓடுகிறது
புத்தரின் மனமோ மக்களின் மனமோ
வித்தியாசம் என்ன இருக்கிறது?

________________________________

“ஷாங்க்ஸி” யின் “டைபோ” மலையின் கண்ணாடிச் சுனை
_______________________________________
தண்ணீரும் என் மனமும் பூரணமான
சமநிலைக்கு வந்து விட்டன
சூரியனும் நிலவும் அதில் ஒளிரும்
இரவில் நீர் மட்டத்தில்
நிலவின் பெரிய முகத்தைக் காண்கிறேன்
இந்த பிம்பத்தின் அசலை நீ சந்தித்திருக்க மாட்டாய்
கீச்சிடும் எல்லா சத்தமும் நிசப்ததினுள் சென்று மறையும்
அவ்வப்போது பனியின் புகை கண்ணாடியின் மீது மிதக்கும்
அது என்னைச் சற்றே குழப்பும்
ஆனால் என் கரிசனங்களை மறப்பதை மறக்குமளவு அல்ல

________________________________________

தர்மத்தைத் தேடி
________________

தர்மத்தைத் தேடி நீ பத்தாயிரம் படிகள் ஏறி வந்து விட்டாய்
ஏடுகளில் இருந்து பிரதி எடுத்து பிரதி எடுத்து
எத்தனை பிரதிகள் எடுத்திருப்பாய்
‘டங்க்’ கின்* ஆழமும் “ஸங்க்”** கின் விரிவும்
பெரிய மூட்டையாய்
இதோ பார்! நான் உனக்கென ஒரு
காட்டுப் பூங்கொத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்
இப்பூக்கள் அவ்வேடுகளின் பொருளையே கொண்டவை
ஆனால் எடுத்துச் செல்ல லேசானவை

*’டங்க்’ வம்ச ஆட்சி காலம் கிபி 7ம் நூற்றாண்டில் இருந்தது.
யுவான் ஸ்வாங்க் இந்தியப் பயணம் செய்து பௌத்த கிரந்தங்களை
சீன மொழியில் கொண்டு வந்த நூல்கள் ‘டங்க்’ என்னும் மன்னர்
வம்சப் பெயருடன் பொருத்திக் குறிப்பிடப் பட்டுள்ளன.

**’ஸங்க்’ என்று குறிப்பிடப்படுவது ‘ஸங்க்’ வம்சம். இவர்களது காலம்
ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது. இவர்களுள் பதினோராம்
நூற்றாண்டின் தொடக்க 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ‘சென் ஸங்க்’
என்னும் அரசர் தாவோ மற்றும் பௌத்தத்தில் பிற மதங்கள் மீது
வெறுப்புக் காட்டும் பகுதிகளை நீக்கி ஏனயவற்றைத் தொகுக்கச்
செய்தார். இங்கே குறிப்பிடப் படுவது அந்த நூல்களே.

____________________________________________

இது ஓர் அழகிய உண்மை
__________________

இது ஓர் அழகிய உண்மை
துறவிகளும் சாதாரண மனிதரும்
தொடக்கம் முதலே ஒன்றே ஆவர்
என்ன வேறுபாடு என்றாய்வது
தாம்புக்கயிறு இருக்கும் போது
ஒரு நூலை இரவல் கேட்பது போல
ஒவ்வொரு தர்மமும் மனதில் அறியப் படுகிறது
மழைக்குப் பிறகு மலையின் வண்ணங்கள்
பளிச்சிடும்
விதியின் பிரமைகளுடன் நீ பரிச்சயமாகி விட்டால்
உன் மசிக் கிணறு
பிறப்பின் மரணத்தின் அனைத்தையும்
கொண்டிருக்கும்
_____________________________________________

Series Navigationநானும் நாகேஷ¤ம்நாய்ப்பிழைப்பு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *