ஜென் ஒரு புரிதல்- பகுதி 30

This entry is part 11 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சத்யானந்தன்

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது வசதியானதாக இருக்கலாம். அது திடமான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பதிவுகளில் ஞானம், மனித நேயம், பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் தெய்வத்தின் மீது கொண்ட பற்று இவை அனைத்தையும் காண்கிறோம். அத்வைதக் கூறுகளும் உள்ளன. தமது பதிவுகளில் புத்தர் தம்மைத் தாமே எப்படிக் குறிப்பிட்டுக் கொண்டார் என்பதை “ஒருவரை ஒருவர் தேடிய படி” என்னும் கவிதையில் காண்கிறோம். ‘ததாகத் ‘என்ற அந்தப் பெயருக்கான பொருளைக் கண்டால் ஒரே சொல்லில் ஆன்மீகத்தின் சாரம்சமே வந்துள்ளதைக் கண்டு வியக்கிறோம். ஜென் சிந்தனைத் தடம் ஒரு மறை நூல் அல்லது தண்டவாளம் போன்று வரையறுக்கப்பட்டதல்ல என்பது இவரை வாசிக்கும் போது தெளிவாகிறது.

ஆழ் சிந்தனை
__________

இன்று பௌர்ணமி
நாம் பிரார்த்தனையில் நட்சத்திரங்களை அழைப்போம்
மன ஒருமையின் சக்தி
பிரகாசமான ஒரு முனைப்பட்ட மனதால் பார்க்கப் படும் போது
பிரபஞ்சத்தையே அசைக்கிறது

அச்சப் பெருங்கடல் பூமியில்
வெள்ளமென மேலெழுவைத்காண
உயிரினங்கள் அனைத்தும்
இங்கே வந்துள்ளன

நள்ளிரவு மணியோசை கேட்டதும்
பத்து திக்கிலும் உள்ள ஒவ்வொருவரும்
கை கோர்த்து மகாகருணா* தியானத்தில் நுழைகின்றனர்

வாழ்க்கையின் காயங்களை
ஆற்றும் தூய நீரோட்டமாய்
நேயம் மனதினின்று ஊற்றெடுக்கும்

மனமென்னும் மலையின் ஆக உயர்ந்த சிகரத்தில் இருந்து
புண்ணிய நீர் நெல் வயல்களையும்
ஆரஞ்சுத் தோப்புகளையும் தாண்டிக்
கீழ் நோக்கிப் பெருகும்

ஒரு விஷப் பாம்பு புல்நுனியில் உள்ள இந்த
அமிழ்தத்தின் ஒரு துளியைப் பருக
அதன் நாக்கில் உள்ள விஷம் மறையும்

மாறனின் அம்புகள்
வாசப் பூக்களாய்ப்
பரிணமிக்கின்றன

என்ன வியப்பு! மருந்தாகும் அந்த நீர்
நிகழ்த்திய ஒரு வியக்கத்தக்க மாற்றம்
ஒரு குழந்தை தன் கையில்
நச்சுப் பாம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

அவலோகிதா** வின் காட்டு மரக் கிளையிலும்
அல்லது என் இதயத்திலும்
அந்த மூலிகை நீர் ஒன்றே

இன்றிரவு எல்லா ஆயுதங்களும் நம் காலடியில் வீழும்
தூசியாகும்

ஒரு மலர்
இரு மலர்கள்
லட்சம் சிறிய மலர்கள்
பச்சை வயல்களில் தோன்றும்

முக்தியின் கதவு
என் குழந்தையின் கள்ளம் கபடமற்ற
புன்னகையுடன் திறக்கும்

____
மகாகருணா* – தானே ஒன்று பட்ட ஒரு குழு எந்த அமைப்பாகவும் இல்லாமல் விவாதங்கள், தியானம் , மற்றும் ஐயம் போக்கும் சம்பாஷணைகளைச் செய்யும் முறைக்கு மகாகருணா என்று பெயர்.

அவலோகிதா**– போதிசத்துவரைக் குறிப்பது. நான்காம் நூற்றாண்டில் ஆண் வடிவில் வழிபடப்பட்ட அவரது வடிவம் படிப்படியாக மாறி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பல கைகளையுடைய பெண் தெய்வமாக, காக்கும் மற்றும் சக்திவடிவமானவளாக வழிபடப்பட்டு வருவது. இன்றும் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் மலேஷியாவில் காணப்படும்.
___________________________________________

பௌர்ணமி விழா
_____________
வடிவம் சூன்யத்துடன் மோதும் போது என்ன நிகழும்?
பார்வை பார்வைக்கு அப்பாற்பட்டதில் நுழையும் போது என்ன நிகழும்?
என்னுடன் வா நண்பா
நாம் ஒன்றாக கவனிப்போம்
இரு கோமாளிகள் வாழ்வும் மரணமும்
மேடை மீது நாடகம் செய்வதைப் பார்த்தாயா?
இதோ இலையுதிர் காலம் வருகிறது

இலைகள் முதிர்ந்து விட்டன
அவை பறக்கட்டும்
மஞ்சள் சிவப்பென வண்ண விழா
கிளைகள் அவற்றை
கோடையிலும் வசந்தத்திலும்
பற்றிக் கொண்டிருந்தன்
இன்று காலை விட்டு விட்டன
கொடிகளும் விளக்குகளுமாய்
பௌர்ணமி விழாவுக்கு எல்லோரும் இங்கே
வந்து விட்டார்கள்

நண்பா நீ எதற்காகக் காத்திருக்கிறாய்?
பிரகாசமான நிலா நம் மேலே ஒளிர்கிறது
மேகங்களும் இன்று இல்லை
விளக்குகளையும் தீயையும் பற்றி ஏன் விசனப்பட வேண்டும்?
இரவு உணவு சமைப்பதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்?
யார் தேடுகிறார்? யார் கண்டுபிடிக்கிறார்?
நாம் இரவு முழுவதும் நிலவை அனுபவிப்போம்

____________________________________________

ஒருவரை ஒருவர் தேடிய படி
___________________

குழந்தைப் பருவத்திலிருந்து
உலகம் போற்றுபவனே உன்னை நான் தேடுகிறேன்
என் முதல் மூச்சில் உன் அழைப்பைக் கேட்டேன்
பின் உன்னைத் தேடத் துவங்கினேன் அருள் பெற்றவனே
விபரீதமான பல வழிகளில் நான் நடந்திருக்கிறேன்
எத்தனையோ அபாயங்களை எதிர் கொண்டிருக்கிறேன்
விரக்தி, பயம், நம்பிக்கை, நினைவுகள் அனைத்தையும்
தாக்குப் பிடித்தேன்
கரடு முரடான காட்டு வழிகளில் போராடித் திரிந்து
விரிந்த பெருங்கடல்களில் பயணித்து
அதி உயரச் சிகரங்களைக் கடந்து
மேகங்களில் கலந்து மறைந்திருகிறேன்
தனியே மரணமுற்று
புராதனப் பாலைவனங்களின் மணல் வெளிகளில்
உயிரற்றுக் கிடந்திருக்கிறேன்
கற் கண்ணீர் துளிகளை
என் இதயத்தில் ஏந்தி இருக்கிறேன்
அருளாளனே நான் கண்ணுக்கெட்டா நட்சத்திரக் கூட்டத்து
ஒளியில் மின்னும் பனித்துளிகளை அருந்தும் கனாக் கண்டிருக்கிறேன்
சொர்க்க மலைகளில் என் காலடிகளை விட்டுச் சென்றேன்
‘அவிசி’ ***நரகத்திலிருந்து அலறி இருக்கிறேன்
அவநம்பிக்கைப் பித்தாகி
அவ்வளவு பசி அவ்வளவு தாகம்
லட்சக்கணக்கான பிறவிகளில்
நான் உன்னைக் காண ஏங்கினேன்
எங்கே பார்க்க வேண்டுமென்றறியாமல்
இருப்பினும் உன் அருகாமையை
ஒரு வியத்தகு நிச்சயத்துடன் உணர்ந்திருக்கிறேன்

நான் அறிவேன்
ஆயிரக்கணக்கான பிறவிகளில் நானும் நீயும் ஒன்றாகவே இருந்தோம்
நம்மிருவருக்கிடையே ஒரு எண்ணக் கீற்று மட்டுமே இடைவெளி
நேற்று நடை செல்லும் போது
பழைய பாதையில் இலையுதிர்கால இலைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டேன்
வாயிலுக்கு மேலே பிரகாசிக்கும் நிலவு ஒரு
பழைய நண்பரின் பிம்பமாய்த் திடீரெனத் தோன்றியது
எல்லா நட்சத்திரங்களும் நீ அங்கே இருக்கிறாய் எனக் கட்டியம் கூறின!
இரவு முழுவதும் நேய மழை பெய்தபடி இருந்தது
மின்னல் என் சாளரம் வழியே வெட்டியது
வானும் பூமியும் சமரிடுவது போல்
ஒரு புயல் வீசியது
இறுதியாக மழை நின்றது மேகங்கள் விலகின
நிலவு சாந்த ஒளி வீசி வந்தது
வானையும் பூமியையும் அமைதிப்படுத்தியபடி
நிலவின் கண்ணாடியில் பார்த்த போது
நான் தெரிந்தேன் அருளாளனே
என்ன விசித்திரம்! நீயும் தெரிந்தாய்

சுதந்திரம் என்னும் நிலவு
எனக்கு நான் இழந்தவை என எண்ணியிருந்ததையெல்லாம்
திரும்ப வழங்கி விட்டது
அந்த நொடியிலிருந்து
ஒவ்வொரு நொடியும்
ஒன்றுமே போய் விடவில்லை என்று கண்டேன்
திரும்பப் பெற ஏதுமில்லை
ஒவ்வொரு பூ, ஒவ்வொரு கல் ஒவ்வொரு இலையும்
என்னை அடையாளம் காண்கின்றன
நான் திரும்பும் இடமெல்லாம் உன் புன்னகையைக் காண்கிறேன்
பிறப்பில்லை மரணமில்லை என்னும் புன்னகை
நிலவென்னும் கண்ணாடியில் பார்த்த அதே புன்னகை
நீ மேரு மலை போல அங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்
என் மூச்சு போல அமைதியாய்
ஒருபோதும் ஜ்வாலை விடும் தீப்புயல் நிகழாதது போல
முழு சுதந்திரத்தில் அமைதியில் அமர்ந்த படி
இறுதியாக உன்னைக் கண்டுபிடித்தேன் அருளாளனே
என்னையே கண்டு பிடித்தேன்

அங்கே தான் அமர்வேன்
ஆழ்ந்த நீல வானம்
பனிமுடி சூட்டிய மலைகள் தொடுவான் மீது சித்திரமாய்
ஒளிரும் செங்கதிரவனும் மகிழ்வுடன் பாடும்
புண்ணியனே நீயே என் முதற் காதல்
அவ்வன்பு எப்போதும் தூயதாய், நிகழ்வில், புத்தம் புதியதாய்
இறுதியானது என அழைக்கப்படும் பிரியம் எனக்குத் தேவையில்லை
எண்ணற்ற தொல்லைமிகுந்த வாழ்வுகளின் ஊடாகப்
பெருக்கெடுக்கும் நலத்தின் மூலம் நீயே
உன் ஆன்மீக நீரூற்றின் நீர் என்றும் தூயது
தொடக்கம் போலவே
சாந்தியின், உறுதியின், அக விடுதலையின் ஆதி நீயே
நீதான் புத்தர், ததாகத்****
என் ஒருமுனைப்பான மனதுடன்
நான் என்னுள் உன் உறுதியையும் சுதந்திரத்தையும்
வளர்த்தெடுக்கும் சபதம் ஏற்கிறேன்
எண்ணற்றோருக்கு அதே உறுதியை சுதந்திரத்தை
இன்றும் என்றென்றும் அர்ப்பணிப்பதற்காக
________
‘அவிசி’ ***- நரகத்தின் பாதாளம்
ததாகத்****-என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வந்தவரும் போனவரும் ஆனவர் என்று பொருள். தமது பதிவுகளில் புத்தர் தம்மைத் தாமே நான் அல்லது புத்தர் என்று குறிப்பிடாமல் ததாகத் என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஆதாவது போனவரும் வந்தவருமான எண்ணற்ற மானுடப் பிறப்பு மற்றும் இறப்பில் தன்னை ஒரு கண்ணி என்றே புத்தர் நினைத்தார். அகம் கொள்ளவோ அவமானம் கொள்ளவோ ஏதுமின்றி மானுடம் உய்யும் வழி கண்ட அவர் தனது பெயர் என்னும் ஒரே சொல்லை ஆன்மீகத்தின் சாராம்சமாக்கியது எவ்வளவு ஆழ்ந்த படிப்பினை!

_____________________________

அலைகளின் தலையணையில் என் தலை
பெருக்கோடு நான் செல்கிறேன்
அகண்ட நதி
ஆழ்ந்த வானம்
அவை மிதக்கின்றன
மூழ்குகின்றன
நீர்க்குமிழிகளைப் போல்

_______________________________

நடந்தபடி தியானம்
______________
என் கையைப் பற்று
நாம் நடப்போம்
நாம் நடக்க மட்டுமே செய்வோம்
நம் நடையை நாம் அனுபவிப்போம்
எங்கேயும் சேருவதை எண்ணாமல்
சாந்தமாய் நட
மகிழ்ச்சியாய் நட
நமது அமைதி நடை
நமது ஆனந்த நடை

பிறகு சாந்த நடை என்று ஒன்றில்லை
என்று தெளிகிறோம்
சாந்தமே நடை
சந்தோஷ நடை என்று ஒன்றில்லை
சந்தோஷமே நடை
நாம் நமக்காக நடக்கிறோம்
நாம் ஒவ்வொருவருக்காகவும் நடக்கிறோம்
எப்போதும் கையோடு கை கோர்த்தபடி
ஒவ்வொரு நொடியும் நட அமைதியைத் தொடு
ஒவ்வொரு நொடியும் நட மகிழ்ச்சியைத் தொடு
ஒவ்வொரு அடியும் புதிய தென்றலை வீசச் செய்யும்
ஒவ்வொரு அடியும் ஒரு பூவை நம் காலடியில் மலர வைக்கும்
உன் காலால் பூமியை முத்தமிடு
பூமியின் மீது உன் அன்பையும் மகிழ்ச்சியையும் பதிவு செய்

பூமி பாதுகாப்பாய் இருக்கும்
நம்முள் நாம் பத்திரத்தை உணரும் போது

தாமரைத் துளி
__________

வானில் பூக்கள்
பூமியில் மலர்கள்
புத்தரின் இமைகளாகத்
தாமரைகள் மலரும்
மனிதனின் இதயத்தில்
தாமரைகள் இதழ் விரிக்கும்
தனது கரத்தில் அலங்காரமாகத் தாமரையை ஏந்தி போதிசத்துவர்
கலையின் பிரபஞ்சத்தைக் கொண்டு வந்தார்
வானென்னும் புல் வெளியில் நட்சத்திரங்கள்
முளைத்தன
புன்னகைகும் புதிய நிலவு மெலெழும்பி விட்டது
சாம்பல் நிறத் தென்னை மரம்
வானின் நடுவே நீள்கிறது
என் மனம் சூன்யத்தில்
இத்தன்மையுடன் வீடு திரும்பும்

______________________________________________

உள்ளே ஒன்றுபட்ட உறவு
___________________

நானே நீ நீயே நான்
“உள்ளே நாம் ஆக இருக்கிறோம்” என்று தெளிவாகவில்லை?
நான் அழகாக இருப்பதற்காக
நீ உனக்குள் பூக்களைப் பயிரிடுகிறாய்
என்னுள் உள்ள குப்பையை நான் பரிணமிக்கச் செய்கிறேன்
நீ துன்பப்பட்டாமலிருக்க
நான் உனக்கு ஆதரவு
நீ என்னை ஆதரிக்கிறாய்
நான் இவ்வுலகில் இருப்பது உனக்கு சாந்தியை முன்வைக்க
நீ இவ்வுலகில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை வ்ழங்க

நான் நாளை கிளம்புகிறேன் என்று சொல்லாதே
இன்றும் நான் வந்து கொண்டே இருக்கிறேன்
கூர்ந்து பார்: நான் ஒவ்வொரு நொடியும் வந்து
கொண்டே இருக்கிறேன்

வசந்தக் கிளையில் ஒரு மொட்டாக இருக்க
சிறு பறவையாக இன்னும் முழுதாகாத பிஞ்சுச் சிறகுகளுடன்
புதிய கூட்டில் கானம் பாட
ஒரு மலரினுள் பட்டாம் பூச்சிப் புழுவாக
கல்லினுள் ஒளிந்திருக்கும் நகையாக

நான் இன்னும் வந்து கொண்டே இருக்கிறேன்
அழவும் சிரிக்கவும்
நம்பவும் அச்சமுறவும்

என் இதயத்துடிப்பின் லயம்
உயிருடன் இருக்கும் அனைத்தின்
மரணமும் பிறப்புமாகும்

நதிநீர்ப் பரப்பின் மேல்
பரிணமித்துக் கொண்டிருக்கும் ஈசல் நான்
அதை விழுங்க இறங்கி வரும் பறவையும் நானே

சுனையின் தெள்ளிய நீரில்
நீந்தி மகிழும் தவளை நான்
தவளையைச் சத்தமின்றி
நகர்ந்து வந்து உணவாக்கும்
சாரைப் பாம்பும் நானே

உகாண்டாவின் குழ்ந்தை நான்
எலும்பும் தோலுமாய்
மூங்கிற் குச்சி போன்ற கால்களுடன்
உகாண்டாவுக்கு பேரழிவுப் போர்த்தடவாளங்கள்
விற்கும் ஆயுத வியாபாரியும் நானே

கடற்கொள்ளையனால் பாலியல் பலாத்காரத்துக்கு
ஆளாகிக் கடலில் குத்திதுத் தன்னை
மாய்த்துக் கொள்ளும் பன்னிரண்டு வயது அகதிச் சிறுமியும் நானே
பார்க்கவும் நேசிக்கவும் வக்கில்லாத
மனமுள்ள கடற்கொள்ளையனும் நானே

நான் “பொலிட் பீரோ” அங்கத்தினன்
என் கையில் ஏகப்பட்ட அதிகாரங்கள்
“லேபர் கேம்ப்” பில் என் மக்களுக்கு
ரத்தக் கடனைச் செலுத்த வேண்டிய மனிதனும் நானே

வசந்தம் போன்றது என் மகிழ்ச்சி
அன்பால் பூமியெங்கும் மலர்களைப் பூக்க வைக்கும்
நான்கு பெருங்கடல்களை நிரப்பும்
கண்ணீர் நதியும் நானே

என்னை என் உண்மையான பெயர்களைச் சொல்லி அழைப்பாயாக
அப்போது தான் என் அழுகையும் சிரிப்பையும் நான்
ஒன்றாகக் கேட்க இயலும்
மகிழ்ச்சியும் வலியும் ஒன்றே எனக் காண இயலும்

நான் விழித்தெழ வேண்டும்
என்னை என் உண்மையான பெயர்களைச் சொல்லி அழைப்பாயாக
அப்போது தான் என் இதயத்தின் கதவு திறந்திருக்கும்
நேயத்தின் கதவு

Series Navigationசுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்பழமொழிகளில் நிலையாமை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *