ஜென் ஒரு புரிதல் – பகுதி 4

This entry is part 15 of 47 in the series 31 ஜூலை 2011

எனது பொருளாதார வசதிகளை எளிதாக வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் எனது அறிவையோ திறமையையோ வெளிப்படுத்த எனக்கு இணையான அல்லது என்னிலும் மிக்கவர் தேவை படுகின்றனர்.அவர்களிடமிருந்து அங்கீகரிப்பும் அரிதாக என்னை மேம்படுத்திக் கொள்ள விஷய தானமும் கிடைக்கின்றன.

அவர்களுள் ஒருவனாக நான் அறியப் பட்டவுடன் எங்களை விடவும் விவரமற்றோர் யாவருக்கும் என்னை வணங்கி ஏற்றல் கட்டாயமாகி விடுகிறது. இவ்வாறாக ஒரு புறம் ஒப்பாரும் மிக்காரும் மறுபுறம் கீழ் தளத்தில் வழியிலிகளுமாக ஒரு அறிவுஜீவ வழியில் நான் பயணப்படுகிறேன். காலப்போக்கில் அது சுற்றிச் சுற்றி வருவதும் என்னை இவர் யாவருக்கும் அப்பாற்பட்ட ஒன்றைத் தேடும் வாய்ப்பிலிருந்து விலக்கி விடுவதும் விளங்குகிறது. ஆனாலும் இந்த வசதியும் அப்பாற்பட்ட ஒன்றைத் தேடுவதிலுள்ள நிச்சயமின்மையும் என்னைப் பின்னுழுக்கின்றன. கையறு நிலையில் நான் மிகவும் முதிர்ச்சி அடைந்தவனாகக் காட்டிக் கொள்கிறேன்.

என்னை எவ்வளவோ தூரம் கொண்டு வந்த அறிவே அதன் கடிவாளமே என்னை உன்னதமான இலக்கை விட்டு விலக்கிப் பிடித்து இழுத்துச் சென்றது. கொஞ்சம் முயன்றதும் கிடைக்கும் குறுகிய அங்கீகரிப்பு எல்லையில்லாத உன்னத வழியில் போக எனக்குத் தடையாகி விட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘யோகா கென்கேகு’வின் பதிவுகளில் சிலவற்றைக் காண்போம்.

நீ உண்மையிலேயே விழிப்பு பெறும் போது
சம்பிரதாயமான உயர் தகுதி ஏதும் உனக்கில்லை
பன்மை இயங்குதலில் ஓயாத உன்னைச்
சுற்றியுள்ள உலகில் இதற்கான சுதந்திரம் இல்லை

தன்னையே மையப் படுத்தி தகுதியில் உயர்ந்து நிற்பது
சொர்க்க சுகவாசம் போல மகிழ்ச்சி தரும்
வானை நோக்கி எய்யும் அம்பைப் போல்
விசை நீங்கியதும் வீழ்ந்து விடும்
பிறகு எல்லாமே தலைகீழாகும்

தெளிவுள்ள பிரதிபலிக்கும் கண்ணாடி போலுள்ள மனத்தின்
பாதையில் தடைகளேதுமில்லை அதன் தேஜஸ்
பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு மணற் துகள் வரைக்கும்
ஒளியூட்டும்
வெளியெங்கும் விரவியிருக்கும் யாவையும் உன்
மனதில் பிரதிபலிக்கும் அது அகமும் புறமும் என்னும்
இருமைக்கு அப்பாற்பட்டுத்
தெளிவு படும்

மனம் என்னும் தளம் ஒரு ஆடியைப் போல
தூசி போல அதன் மேல் விந்தைகள் படிந்திருக்கும்
இரண்டுமே குறையுள்ளவை
குறையென்னும் தூசி நீங்கியதும்
மனம் விந்தைகள் இரண்டையும் மற
நாம் இயற்கையாகவே அசலாவோம்

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அண்ட்ரூ அகாஸ்ஸி என்னும் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஆரம்பம் முதல் ஓய்வு பெறும் வரை தான் டென்னிஸை விரும்பவில்லை என்றும் தனது தந்தையின் கட்டாயத்தில் தொடங்கிய டென்னிஸ் வாழ்வு புலி மேல் ஏறி விட்டது போல ஆகி விட்டது என்றும் வேறு வழி இன்றியே தொடர்ந்ததாகவும் கூறினார். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் இளையராஜா நாட்டுப்புற இசை, கர்னாடக மற்றும் மேற்கத்திய இசையிலும் திறம்பட இயங்கும் அபூர்வமான இசைக் கலைஞர். அவர் ஒரு வருடம் முன்பான பேட்டியில் சினிமாவில் தமது வாழ்க்கையே வீணாகி விட்டதாகக் குறிப்பிட்டார். சினிமா தவிர்த்து பல தனி ஆல்பங்களையும் அவர் வடிவமைத்தவர். வெற்றியின் மறு பக்கம் மட்டுமல்ல நடப்பு வாழ்க்கையில் பிறரின் எதிர்பார்ப்புகள் வழி நடத்த ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை எந்தத் தேடலும் இன்றித் தொடரும் கட்டாயம் மிகவும் துக்ககரமானது.

மீண்டும் ‘யோகா கென்கேகு’வின் வரிகளைப் பார்ப்போம்

மனம் என்னும் தளம் ஒரு ஆடியைப் போல
தூசி போல அதன் மேல் விந்தைகள் படிந்திருக்கும்
இரண்டுமே குறையுள்ளவை
குறையென்னும் தூசி நீங்கியதும்
மனம் விந்தைகள் இரண்டையும் மற
நாம் இயற்கையாகவே அசலாவோம்

நமது சொந்த வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி நம் மனம் உந்தும் ஆரோக்கியமான் தேடல்கள். அசலான தேடலின் துவங்கு புள்ளிகள் வேறு பட்டாலும் இறுதியில் ஆன்மீகத்தில் இணையும். ஜென் பற்றிய வாசிப்பில் நம் தேடலைத் தொடர்வோம்

சத்யானந்தன்

Series Navigationவிதி மீறல்தேர் நோம்பி
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *