டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்.

photoஅம்மா….நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை….அதான் மங்களத்துக்கு அவ்ளோ… தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக் கேட்டாள், சரி சரி…இந்த கேள்விக்கு நீங்க போய்ட்டு வந்து பதில் சொல்லுங்கோ போதும். ஒண்ணும் அவசரமில்லை…அதுவரைக்கும் இந்த பிரசாதத்தை….சாரி…சாரி….இந்த பிரசாத்தை யாரும் தூக்கிண்டு போயிட மாட்டா என்று கேலி செய்து சிரித்துக் கொண்டே கௌரி, மங்களத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சலானாள்.

பிரசாத்தும், கௌரியின் காதுபட…ம்ம்ம் நன்னாயிட்டு எல்லாருமா சேர்ந்து என்னை வெச்சு காமெடி பண்றேள்னு தெரியுது…நடத்துங்கோ…நானும் பார்க்கறேன் இதெல்லாம் எத்தற தூரம் போறதுன்னு….இன்னும் மிஞ்சிப் போனா ஒரு நாள் தானே…? என்று வருத்தமுடன் அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னவனைப் பார்த்துக்கொண்டே அங்கு வந்த காவேரி மாமி…..

அப்போ…நானும் வரலாமா? என்று சம்மனே இல்லாமல் ஆஜர் ஆனவளாக…பிரசாத்,நீங்க ஒரு நல்ல காரியம் பண்ணேள், மங்களம் வந்ததுமே எல்லா விஷயத்தையும் சொன்னாள் . அந்தக் குழந்தையை பகவான் உங்க கையில தான் ஒப்படைச்சிருக்கார். ஆனா ஒண்ணு, உங்களுக்குத் தான் இன்னும் கல்யாணமே ஆகலையே, நாளபின்ன இந்தக் குழந்தையோட உங்கள யார் ஏத்துப்பான்னு நீங்க யோசனையே பண்ணலையா? முதல்ல இந்தக் கதையைச் சொன்னால் கேக்கறவா நம்பணமே. இதுக்கெல்லாம் அவா வேற கதையெல்லாம் கட்டுவா. இதெல்லாம் உங்க லைஃப்புக்கு பெரிய ரிஸ்க் தான் என்றவள், ரஸ்க் சாப்பிடறா மாதிரி எடுத்துண்டுருக்கேள். போட்டும்….சரி…என்றவள் ‘எங்கே…குழந்தையை நான் பார்க்கட்டும்’, என்று தனது எந்த ஆவலையும் வெளிக் காட்டாமல், அவாள்ளாம் சாப்ட்டு கிளம்பியாச்சு .நீங்கள்லாம் சாப்பிட வாருங்கோ என்று பொதுவாக அழைத்துவிட்டு செல்கிறாள்.

சற்றுமுன் காவேரி மாமி சொன்னதை நினைத்துப் பார்த்த பிரசாத்.’கல்யாணத்துக்காகவெல்லாம் இந்தக் குழந்தையை நான் விட்டுத் தர முடியாது. இது என்னோட அம்மாவாக்கும்…அப்படி இந்தக் குழந்தை இல்லாமே ஒரு கல்யாணம், நேக்கு வேண்டாத்தது, சர்தான் போங்கோ மாமி…வெளில வந்து பாருங்கோ உலகம் எப்படி ஜெகஜ்ஜோதியா இருக்குன்னு . இந்த இருட்டு ரூமுக்குள்ள இருந்து இருந்தே உங்க மனசும் இருளடைஞ்சு போச்சு. ஏனோத் துருப்பிடிச்சும் போச்சுன்னு நினைக்கறேன். நீங்க என்ன வேணா சொல்லிகோங்கோ, ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்’.

பிரசாத்…..என்ன அப்படி ரொம்ப ‘டீப்பா திங்’ பண்றேள்? …..கௌரி கேட்டதும் தன் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ம்ம்ம்….
ம்ம்…நத்திங் கௌரி…ஜஸ்ட். என்று தன் மடியிலிருந்த கௌதமை லேசாக இறுக்கிக் கட்டிக் கொள்கிறான்.

ஹேய்….என்னாச்சு…? குழந்தை பாவம்…தாங்காது…அவனை என்கிட்டத் தந்துடுங்கோ பிரசாத்…நானே வெச்சிக்கிறேன்,,,என்று குழந்தையை வாங்கப் போக, அது வரமாட்டேன் என்பது போல தலையையும் கையையும் ஒடுக்கிக் கொண்டு பிரசாத்தின் கைகளுக்குள் இடுங்கிக் கொண்டு பின்பு ஒற்றைக் கண்ணால் மெல்ல கௌரி தன்னைப் பார்க்கிறாளா என்று பார்த்து விளையாடியது.அதைக் கண்ட பிரசாத்தின் முகத்தில் ஒரே பெருமிதம்.

டேய்…வால்பையா…இந்தப் பால்வாடிகிட்ட ஒட்டிண்டு என்கிட்டே வரமாட்டேங்கறயா? இரு இரு…இன்னும் ஒரே நாள் தான்…!நானும் பொறுத்துக்கறேன்…என்றவள், பிரசாத் ஊருக்குப் போனதும் ரெண்டுக்கும் பொறந்த நாள் வரது….என்ன பண்ணப் போறேனோ? சொல்லிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்ததும்,அங்கிருந்த புரோஹிதர் மாமா, தனது அலம்பிய ஈரக்கைகளைத் துடைத்துக் கொண்டே லெக்சர் கொடுக்க ரெடியாகி தொண்டையைக் செருமிக் கொண்டார்.

இப்போ சாப்பாடு கழிஞ்சு பின்னே ‘கயா’வுக்குக் கிளம்பறோம். அங்க போயிட்டு ராகவேந்திரா மடத்து மாத்வா சத்திரத்துல ராத்திரி தங்கறோம். பின்னே காலங்கார்த்தால எழுந்துண்டு பிண்டப் பிரதானம் கயா சிராத்தம் பல்குனி நதிக்கரையில பண்ணிட்டு, விஷ்ணு பாதத்தையும் பார்த்துட்டு, நேரா அக்ஷய வடத்துக்குக் கீழே பிண்டம் போட்டுட்டு, அங்க வேண்டிய தானங்கள் பண்ணுங்கோ. கயாவில் தானம் தான் பிரதானம். அது கழிஞ்சு நேராயிட்டு புத்த கயா…! பார்க்காத விடாதேங்கோ. புத்தருக்கு ‘ஞானம்’ கிடைத்த ‘போதிமரம்’ அங்க தான் இருக்கு…நீங்க கேள்விப்பட்ருப்ப்பேள்.அதுவும் கோயிலாக்கும். இதாக்கும் அஜெண்டா….சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ. அம்மாடி மங்களம்….கொழந்தைகளும் வராளோன்னோ..எல்லாரும் வரட்டும். ரொம்ப விசேஷமான ஷேத்திரமாக்கும் கயா. சொல்லி முடித்த புரோஹிதர்

அம்பி…கொழந்தை உங்கள நன்னாப் பிடிச்சுண்டான் …பாரேன் எத்ர நன்னாயிட்டு சமத்தா படுத்தாம உட்கார்ந்துண்டு இருக்கறதை என்று போற போக்கில் சொல்லிவிட்டு வெளியேறினார்.

பிரசாத்தின் மடியில் கெளதம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வாயில் ஜொள்ளு ஒழுக, கையில் ஒரு வடையை வைத்துக் கொண்டு அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி இருந்தான்.

அந்தக்கால சுவர்கடிகாரம் ‘டண் ….டண் ….டண் ….என்று மணி மூணாச்சு என்று அடித்துச் சொன்னது.

சாப்பிட இலை போட்டதும், சாப்பிட்ட இலையை எடுத்ததும் கூடத் தெரியாமல் நேரம் கழிந்தது.

கிளம்புமுன், காவேரி மாமி…மங்களத்திடம்…மங்களம்….உங்காத்துக்கா ……என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, பின்பு, கூட்டத்தோட கூட்டமா கண்டிப்பா என் தம்பி நாகராஜுக்கும் பிரியாவுக்கும் பிண்டம் போட்டுடுடி…அந்தக் கடனை நீ கழிச்சுடு. இந்தா இந்த பேப்பர்ல அவளோட கோத்ரம், நட்சத்திரம் எழுதி இருக்கேன் என்று நான்காக மடித்த காகிதத்தை நீட்டியவள், நோக்கும் எல்லாம் சரியாகும். ‘அப்போ…ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்கோ’ என்றவள் மங்களத்தின் காதருகில் சென்று ” நீ சித்ரா மாமி பக்கத்துலயே உட்கார்ந்துக்கோ, கௌரியோட குழந்தையை மட்டும் பார்த்துக்கோ…போதும்….வீணா அந்த பிரசாத்துகிட்ட பேச்சு வார்த்தை வெச்சுக்காதே…நான் சித்ரா மாமிட்டயும் சொல்லியாச்சு….அவன் ரெண்டுங்கெட்டான்…அசடாக்கும்..’சமத்து பத்தாது’ பார்க்கத் தான் ” ஆணழகா துப்பட்டிக் காரா” னாட்டமா இருக்கான் என்கிறாள்.

சரிம்மா..எல்லாம் நான் பார்த்துப்பேன்….கிளம்பறேன் என்றவள், எப்பவுமே ‘நல்லவாளுக்கு’ புத்திசாலிகள் வைக்கிற பேர் ‘அசடு’ தான் போல…நினைத்துக் கொண்டே வந்தவள், சந்து முனையில் தயாராயிருந்த வாகனத்துக்குள் ஏறி சித்ராவின் பக்கம் சென்று அமர்ந்து கொள்கிறாள் மங்களம்.

முன்சீட்டில் புரோஹிதர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பிரசாத்தை, “அம்பி..கொழந்தையை வெச்சுண்டு இங்க ஏன் இடிச்சுண்டு நீ கஷ்டப் பட்டு உட்கார்ந்துக்கறே….பின்னாடி வேண்ட இடம் இருக்கு பாரேன்…அங்க போங்கோ….எனக்கும் இங்க சௌகரியக் குறைச்சல்…என்றதும் , பிரசாத் அங்கிருந்து இறங்குகிறான்.

பின்னாடி சீட்டில் இருந்து கௌரி ‘கௌசிக்’கைப் பிடித்தபடியே, ‘இட்ஸ் ஓகே பிரசாத்…இங்கயே வந்துடு…இங்க இடம் இருக்கு’ என்று அழைக்கிறாள்.

பிரசாத் ஏறிக்கொண்டதும்,ஸ்கார்பியோ இவர்களை ஏற்றிக் கொண்டு கயாவை நோக்கி விர்ர்…..ரைந்தது.

வாரணாசியின் குறுகிய சந்துகளைக் கடந்து, புதிய தார் ரோட்டையும் கடந்து புறவழிச் சாலை வழியாக ஒரே நேர்கோட்டில் வேகம் பிடிக்கவும், குழந்தைகள் வண்டியின் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து விட்டார்கள். சித்ராவும், மங்களமும் தலையாட்டி பொம்மைகளாக தூக்கக் கலக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தாள்.

ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கௌரிக்கு, காய்ந்த புல்வெளி, காய்ந்த சோளக் கருதுச் செடியை கட்டிக் கட்டிப் போட்டிருந்த பரந்த வெளி, கோதுமைப் புல்லைக் கொண்டு பெரிய பெரிய உருளைகளாககக் கயிறு திரித்துக் கட்டி உருட்டப்பட்ட வைக்கோல் உருளைகள், பசுமையான கோதுமை வயல், நாலைந்து டர்பன் கட்டிய தலைகள், பசு மாட்டுக் கூட்டங்கள், தரை இறங்கிய சூரியன்….வினோதமாகப் பார்த்துக் கொண்டே வந்தவள்,பார்த்துச் சலித்தவளாக முகத்தைத் திருப்புகிறாள். பிரசாத் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு….புருவத்தை உயர்த்தி……என்னாச்சு? என்று சைகையில் கேட்கிறாள்.

நத்திங்…..கௌரி….என்று முணுமுணுத்தபடி பிரசாத் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான். அவன் மனம் வருந்தியது. ஆச்சு….திடீரென்று வந்த ஒரு தொடர்பு. இன்னும் ஒரே நாள் தான். இந்தப் பிரயாணத்துடன் முடியப் போறது. எனக்கு கௌரிட்ட
பேச முடியலை. ஏற்கனவே ஒரு தடவைச் சொல்லிப் பார்த்தாச்சு. மறுபடியும் சொன்னா, என் நினைப்புக்கு உண்டான மதிப்பு போயிடும். ஆனா, அவள் ஏன் தான் என்னை இந்த மங்களத்தை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றாளோ. அது என்னால முடியாதுன்னு நான் எப்படி சொல்வேன்? ஒரு காலத்துல மங்காவை விரும்பினது உண்மை தான். எப்ப அவள் “உன்னை கண்டால் எனக்குப் பிடிக்கலைன்னு’ சொல்லிட்டு போயாச்சோ…அந்தக்ஷணமே என் மனசுலேர்ந்து அந்த எண்ணமும் மாறியாச்சு. அழகைப் பார்த்து வந்த காதல் அவமானத்துல முடிஞ்சதும் எனக்கும் புத்தி வந்தது. இப்பக் கூட அவளைப் பார்த்தால் பாவம்னு தான் தோணறதே தவிர கல்யாணம் பண்ணிக்கணும்னு துளி கூடத் தோணவேயில்லையே.

இந்த நாலு நாள்ல நான் இந்தக் குழந்தைகளோட ரொம்ப மனசளவில் அட்டாச்டா இருந்துட்டேன். ஏதோ…நீயும் நானும் குழந்தைகளும், உன்னோட அம்மாவும் எல்லாருமே ஒரே குடும்பம் மாதிரி மனசுக்குள் ஒரு பிரமை.அது அப்படியே நிரந்தரமா ஆயிடாதான்னு மனசுத்துக்குள் ஒரு எதிர்பார்ப்பு. உன்னை நான் தானே வந்து முதன் முதலா பெண் பார்க்க வந்தேன்.அப்போ உங்க அப்பாவின் ஈகோவும், என் அம்மாவோட பேராசையும் மட்டும் விளையாடலைன்னா இந்த நிமிஷம் நீ தானே என்னோட வொய்ஃப். ‘காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனான்னு’ எங்கம்மா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவா. என் கதையும் அது மாதிரி ஆயாச்சு இப்போ. அதற்குள் உன்னோட வாழ்க்கேல நடந்து விட்ட அந்தப் பெரிய விபத்தின் அடையாளமாத் தான் இந்த இரட்டைக் குழந்தைகள். இந்த நாலு நாள்ல நானும் குழந்தைகளோட நன்னா ஒட்டிண்டுட்டேன். எனக்குத் தான் இப்போ கெளசிக்கையும் , கௌதமையும் விட்டுப் பிரிய மனசு கேட்காது. இப்போ கூட நீயே பாரேன்…..என்னோட ‘கௌரி கல்யாணி’ இப்போ உன்னோட மடியில், உன்னோட ‘கெளதம்’ என்னோட நெஞ்சுல சாஞ்சுண்டு தூங்கறான். நீயும் ‘எங்களை’ மிஸ் பண்ணுவே கௌரி. கண்டிப்பா மிஸ் பண்ணுவே. ஆனா…அதற்குள் ஒரு நல்ல முடிவு எடுக்க மாட்டியா? என்னால உன்னை என்னிக்குமே மறக்க முடியாது…..பிரசாத்தின் மனம் பேசிப் பேசித் தவித்தது. ப்ளீஸ் கௌரி…என்னைப் புரிஞ்சுக்கோயேன்….நினைத்தவன் கௌரியைப் பார்க்கிறான்.

அவள் குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

எங்கும் காரிருள்…புத்த கயாவைத் தாண்டி…கயாவுக்குள் செல்கிறது அவர்களது வாகனம்..

‘ஔர் கப் தக் ஜானா…?” என்ற கேள்விக்கு டாண் என்று டிரைவரிடமிருந்து பதில் வருகிறது….”ஆகயா ஸாப்…ஔர் தஸ் மினட்.”.

கௌரி…..இன்னும் பத்து நிமிஷம் தானாம்..வந்தாச்சாம்…எழுந்திருங்க…என்று ஸீட்டைத் தட்டி எழுப்புகிறான் பிரசாத்.

இருட்டுக்குள் அங்கங்கே சின்ன மண்ணெண்ணெய் விளக்குகள் ஏற்றி வைத்தபடி, காரிருளில் மூழ்கிக் கிடந்தது அந்த சின்ன கிராமம்.

வண்டி ஓரிடத்தில் வந்து நின்று மூச்சை நிறுத்தி பெருமூச்சு விட்டதும்.

‘உத்தாரோ…கயா….ஆகயா ‘ என்றபடியே டிரைவர் வண்டியை விட்டு இறங்கி ‘டப்’ பென்று கதவைச் சார்த்தியதும், சித்ரா விழித்துக் கொள்கிறாள்…என்னதிது? தமிழ்நாடு தோத்துடும் போலிருக்கே….வெளில ஒரே இருட்டுக்கும்பா இருக்கே.. டி…கௌரி…உன்னோட மொபைல் டார்ச்சைப் போட்டுண்டு இறங்கு…கொழந்தைகள் பத்திரம் சொல்லிக் கொண்டே இறங்கிய சித்ராவைத் தொடர்ந்து மங்களம் மெளனமாக இறங்கினாள். கௌரி இறங்கக் காலடி எடுத்து தரையில் வைத்ததும் மின்சாரம் வந்துவிட தெரு விளக்குகள் அடுக்கடுக்காக எரிந்து அந்தத் தெருவே பிரகாசமானது.

இதென்னடாது அதிசயமாருக்கு …? மங்களம் சொன்னதும், கௌரி கால் தரையில் பட்டதும் மின்சாரம் வந்துடுத்து என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

காக்கை உட்கார்ந்து பனம்பழம் விழுந்ததுன்னு சொல்வாளே….அதுபோல இருக்கு.சித்ரா சொல்லிக் கொண்டே…நடங்கோ…அங்க அவர் அதுக்குள்ள கிளம்பியாச்சு…’இந்தாங்கோ…மாமா….எங்கியாக்கும் ..? தனது கணீரென்ற குரலில் அழைத்த சித்ரா….’அம்மம்மா…..கால் நன்னா ரத்தம் கட்டிண்டு மறத்துப் போச்சே …சித்த நின்னு நிதானமாத் தான் போனா என்ன…இந்த மனுஷனுக்கு? .என்று ..அந்த புரோஹிதரை அழைத்தபடி பின் தொடர்ந்து நடக்கிறாள்.

காசியில்,காவேரி மாமி ‘சன் டிவி’ பார்த்துக் கொண்டே கொத்தவரங்காயை காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொண்டிருக்க, வாசலின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, ஏன்னா…யாரோ கதவத் தட்டறா…..நீங்க போய் பாருங்கோ….இந்த நேரத்துல யாராயிருக்கும்.. சாப்பாடு கேட்டுண்டு வந்தா, இப்ப ஒண்ணும் கிடையாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லி அனுப்பிடுங்கோ. அப்பறம் எங்கிட்ட வந்து “ஒரு உப்புமாவாவது கிளறிக் கொடேண்டீ “ன்னு சொல்லப்படாது. மங்களம் வேற இல்லை. ஏன்னா…..நான் சொல்லறத காதுல வாங்கிண்டு போங்கோ.

அட….சித்த அமைதியா இரேன்…யாருன்னு பார்த்துட்டு வரேன் முதல்ல….தோ …தோ …தோ …தோ …ன்னு வாயால எப்பப்பாரு கபடி ஆடீண்டு. வாய் நிறைய போட்டுக் குதப்பிக் கொண்டிருந்த வெத்தலையை புழக்கடையில் துப்பி விட்டு வந்தவர், பித்தளைப் பூண் போட்ட தேக்கு மரக்கதவை தள்ளித் திறந்ததும, இரண்டு பேர் தம்பதியாய் வந்துத் தயங்கியவாறு, இங்க… காவேரி மாமிங்கறது….என்று மென்மையான குரலில் கேட்டதும்,

ஆமாம்..இந்தாம்…. தான்…அதோ காவேரி மாமி……உள்ள வாங்கோ என்று அழைத்ததும்.

யாராக்கும்…..? என்று நறுக்கிய காய்த்தட்டை தள்ளி நகர்த்தியபடி எட்டிப் பார்த்துக் கேட்கிறாள் காவேரி.அவள் மனத்துள் ..”.அவாளை இப்போ என்னத்துக்கு இவர் உள்ளே வரச் சொல்லிக் கூப்பிடறார்….அதான் நான் சொன்னேனே..ஒண்ணுமில்லைன்னு” என்று நினைக்கிறாள்.

நாங்க….என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத் தயங்கியபடி, ம்ம்….நீயே சொல்லு.. என்று அவர் வந்திருந்த மாமியிடம் சொல்லிவிட்டு அமைதியாகிறார்.

யாரு சொன்னா என்ன இப்போ…? என்ற மாமி காவேரி மாமியைப் பார்த்து, நாங்க ஹைதராபாத்திலேர்ந்து இங்க வந்திருக்கோம். நாங்க நேத்து பிரயாகைக் காரியங்களை முடிச்சுட்டு, சிவமடத்துல ரமணிமாமாவை தம்பதி பூஜைக்காகப் போய்ப் பார்த்தோமா…, அப்போ தான் அவர் உங்காத்து அட்ரெசைத் தந்து எங்களை இங்க வந்ததும் கான்டாக்ட் பண்ணிக்கச் சொன்னார். அது வந்து….என்று தயங்கியதும்,

காவேரி மாமியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் சோலார் பல்ப் ஆட்டோமாடிக்காக பளிச்சிட, ஆமாம்….ஆமாம்…இன்னைக்கு கார்த்தாலயே நேக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாரே….சொல்லுங்கோ என்னவாக்கும் விஷயம்.? என்று ஆவல் ததும்ப கேட்டபடியே, இருங்கோ காப்பி கலந்து கொண்டு வரேன்….என்று எழப் போனவளை..,

அதெல்லாம் இருக்கட்டும்……மாமி நீங்க உட்காருங்கோ…அதாவது, நேரா விஷயத்துக்கே வந்துடறேன்…எதுக்கு வீணாச் சுத்தி வளைச்சுண்டு..என்ற பீடிகையோடு ஆரம்பித்தார் வந்திருந்தவர். எங்களுக்கு ஒரே பையன், 32 வயசாறது.ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டில ‘அமேசான்’ ஐடி கம்பெனி’ல தான் வேலையா இருக்கான்.கை நிறைய சம்பளம்.’மேதிபட்ண’த்துல சொந்தமா ஃபிளாட் , கார் எல்லாம் இருக்கு.. சொல்லிக் கொண்டே காவேரி மாமி கொண்டு வந்து கொடுத்த தண்ணீரைத் வாங்கிக் குடிக்கிறார்.

வந்திருந்த மாமி மேற்கொண்டு தொடருகிறாள்.

முதல்ல ஒரு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆச்சு. போன வருஷம் தலைச்சன் பிரசவத்துல குழந்தை நெஞ்சுமேலே எறிடுத்துன்னு சொன்னா…..அவ்ளோ தான்…பாக்குக் கடிக்கிற நேரம் தான்…அவாளால ரெண்டு உயிரையும் காப்பாத்த முடியலை.உள்ளயே குழந்தையும் போயிடுத்து. இப்பக் கூட எங்க வீட்டு மருமகப் பொண்ணுக்கும் அந்தக் கொழந்தைக்கும் சேர்த்து திதி கொடுக்கத் தான் இங்க வந்திருக்கோம்.

உங்க வீட்டுல கூட உங்க மகளுக்கு இப்படி ஒரு ‘கோரம்’ நடந்துச்சுன்னும் உங்க மக மங்களத்துக்கு நீங்க வரன் பாக்குறீங்கன்னு ரமணி மாமா சொன்னார். உங்களுக்கு சம்மதம்னா, மேற்கொண்டு இதைப் பத்தி பேசலாம். நாங்க இன்னும் ரெண்டு நாளு இங்க தான் கேதார்காட்-ல ‘குமரகுரு கெஸ்ட் ஹவுஸில்’ தங்கி இருக்கோம். இது எங்க பையனோட ஜாதகம், டீடெல்ஸ் எல்லாம் இருக்கு. உங்களுக்கு இஷ்டம் இருந்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்க…பையன் ரொம்ப நல்ல குணம்…யார் யாருக்கு எங்க பிராப்தம் இருக்கோ…..என்றபடி எழுந்து கொண்டார்கள்.

உங்க பொண்ணு….என்று வந்தவர்கள் இழுக்கவும், உள்ளிருந்த அறையிலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதும், மங்களத்தின் அப்பா ஓடிச்சென்று குழந்தையைத் தூளியிலிருந்து எடுத்து வந்து காவேரியின் மடியில் போட்டதும், காவேரி மாமி சுருக்கமாக மங்களத்தின் விஷயத்தை “எடிட்” செய்து சொல்லி முடித்தாள்.

வந்தவர்கள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, ‘மாமி….விதி யாரை விட்டது….? நாங்களும் எங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு கனவு கூடக் காணலை….எங்க மருமக தங்கமான பொண்ணு தான்…எங்களுக்குக் கொடுத்து வைக்கலை…அவ சீக்கிரமாப் போய்ட்டா, என்றவர் மங்களத்தின் போட்டோ, ஜாதகம் ஏதாவது.,,,

இந்தாங்க…என்று கொடுத்தவர் கூடவே,எங்க பொண்ணையும் ஒரு வார்த்தை கேட்கணும்….அவங்க இப்ப கயாவுக்குப் போயிருக்காங்க….நாங்க அவள் வந்ததும், கேட்டுட்டுத் தகவல் சொல்றோம்….இந்தக் குழந்தையை அவள் பிரிய மாட்டாள். அது உங்களுக்குப் பரவாயில்லையா? அப்பறம் நீங்களே பார்க்கறேளே…எங்களால ரொம்பப் பெரிசா ஒண்ணும் செலவு பண்ண முடியாது..ஏதோ உபாயமா…

போட்டோவைப் பார்த்தவர்களின் முகத்தில் பரம திருப்தி என்று எழுதி ஒட்டியிருந்தது. எங்களுக்கு வேற ஒண்ணுமே வேண்டாம்….மகாலட்சுமியாட்டமா பொண்ணைக் கொடுங்க போதும்…குழந்தையும் எங்களுக்கு ஓகே தான்.நாங்க தெலுங்கு பிராமணா…! அப்ப உங்ககிட்டேர்ந்து தகவல் எதிர்பார்ப்போம்…நாங்க வரோம்….என்று எழுந்து கொண்டவர்கள்,குழந்தையின் கையில் ஆயிரம் ருபாய் ஒற்றைத் தாளைத் திணித்துவிட்டு, தாம்பூலம் எடுத்துக் கொண்டு நிறைவான முகத்துடன் நம்பிக்கையோடு கிளம்பி விட்டார்கள்.

என்னடி…..காவேரி…இது? ..நம்ம மங்களத்துக்கு ஹைதராபாத்லேர்ந்து அதிர்ஷ்டம் வந்து கையை நீட்டறது. இது நடக்குமா?

என்ன நீங்க பாட்டுக்கு இது நடக்குமான்னு இழுத்துண்டு..? இதை கை நழுவ விடாமே எப்படியாவது நடத்தறோம்…!ஆமாம்…சொல்லிட்டேன். தெலுங்கோ, ஹிந்தியோ, மங்களத்துக்கு கல்யாணத்தை வேகம் பண்ணணும். அவா தான் குழந்தையோட ஏத்துக்கறேன்னு சொல்லிட்டாளே…பின்ன என்ன? என்னைப் பொறுத்தவரையில் நம்மாத்துக்கு கல்யாணம் வரப்போறதாக்கும் என்று சந்தோஷத்தில் நிறைவாகச் சிரிக்கிறாள் காவேரி மாமி.

இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துத் தோற்றுப் போன மங்களத்திடம், என்ன மங்கா…..தூக்கம் வரலியா? என்று கௌரி கேட்கிறாள்.

யாரது….? தூங்கறவங்களா இதைக் கேட்கிறது? அது சரி…..!

இங்க கொசுத் தொல்லை தாங்கலை அதான்….வேறொண்ணுமில்லை. நீங்க தூங்குங்க மங்களம்.

இல்ல.எனக்கும் தூக்கம் வரலை. மனசுல கொஞ்சம் பாரமா இருக்கு கௌரி. எல்லாம் இந்தப் பிரசாத்தைப் பத்திதான்.

அவரைப் பத்தி உங்களுக்கு ஏன் கவலை? ஆச்சரியமானாள் கௌரி.

கௌரி….உங்க கிட்டயாவது நான் கண்டிப்பா என் மனசைத் தொறந்து பேசணும் போல இருக்கு.

சொல்லுங்கோ மங்கா….என்னை நீங்க தைரியமா. நம்பலாம். உங்க ரகசியங்கள் பாதுக்காக்கப் படும்….லாக்கர் மாதிரி இந்த மனசு..!

குழந்தைக்குக் கதை சொல்வது போல எழுந்து உட்கார்ந்து கொண்டாள் மங்களம்.

எனக்கு முன்னமே பிரசாத்தைத் தெரியும்னு சொல்லிருக்கேன் இல்லியா? அவர் நான் வேலைப் பார்த்த ஆபீசில் தான் புதுசா வேலைக்குச் சேர்ந்தார்.

அதெல்லாம் எனக்கும் தெரியும். தெரிஞ்சுண்டேன். அதெல்லாம் தான் அவரும் மறந்தாச்சே. பின்ன என்னவாம்..?

அவர் மறந்தால் அது அவரோட பெருந்தன்மை. ஆனால் எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘அவனோட’ நினைவு தான் ஜாஸ்தி வரது. அன்னிக்கி அந்த அயோக்கியன் இவரைப் போட்டு அடிச்சதும், நானும் பேசாமே இருந்துட்டேன். அதுக்கெல்லாம் காரணமாய்ட்டும் இருந்துட்டேன். அதுக்கெல்லாம் பிராயச்சித்தமே கிடையாது.

ஏன் கிடையாது? நீ அவரைக் கல்யாணம் பண்ணிண்டு பிராயச்சித்தம் தேடிக்கலாமே.

அதாங்க, கௌரி சொல்ல வந்தேன். சாதாரணமா இருந்திருந்தால், நீங்க சொல்றதைப் போல செய்திருப்பேன். ஆனால்…இவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘அவன்’ எனக்கு செய்த துரோகமும்,ஒரு தப்புமே செய்யாத பிரசாத்தை அவன் அடிச்சு, உதைச்சுப் புரட்டி எடுத்தப்போ நான் பேசாமே இருந்தேன்.அது நான் இவருக்குச் நான் செய்த அநியாயம். இப்பக் கூட என் கண் முன்ன வந்து நிக்கிறது. இந்த மாதிரி எனக்குள் என்னை தெனம் தெனம் கொல்லற எண்ணத்தை கொஞ்சமும் போருட்படுத்தாமே, நான் அந்த ரௌடி கும்பல்ட்ட மாட்டீண்ட போது, இவருக்கு நான் செஞ்ச கெடுதலுக்குக் கிடைச்ச தண்டனையாத் தான் எடுந்துண்டேன்.

என் அம்மா எப்படியும் எனக்கு வேற இடத்தில் கல்யாணத்துக்குப் பார்த்துண்டு தான் இருக்கா…நானும் பண்ணிக்கத் தான் போறேன். ஆனால் நிச்சயமா இந்த பிரசாத் மட்டும் வேண்டாம் கௌரி. என்னால மறுபடியும் அவரோட வாழ்க்கையை வீணாக்க முடியாது. என் மனசாட்சியின் நித்திய மிரட்டலுக்கு என்னால பதில் சொல்ல முடியலை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனது குற்ற உணர்வு என்னை கொன்று திங்கறது. என்னோட மனப்போராட்டத்தை உங்க கிட்ட கொட்டினாத் தான் என் மனம் ஆறும்.

ஆயிரம் ‘சமம்’ வரலாம் கௌரி. ஆனால் ஆணுக்குப் பெண் ‘சமம்’ இல்லை தான். மனசளவில் மிகவும் கோழைகள். மதில் மேல் பூனை போல அன்புக்கும் உணர்வுக்கும் இடையில் சிக்கித் தவித்து…. கௌரி….எனக்கு பயமே இல்லாத ஒரு வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு. எந்தவித பயமும் இல்லாத ஒரு பரம சுதந்திர வாழ்க்கை…! அது இந்த உலகத்தின் எந்த மூலையில் கிடைத்தாலும் ஏத்துப்பேன். சந்தோஷமா இருப்பேன். இப்போ என் மனசு ரொம்ப சிக்கலில் இருக்கு கௌரி. உங்களைப் பார்த்ததுக்கு அப்பறமா தான் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு. பிரசாத் ரொம்ப நல்லவர். நீங்க அவரை மிஸ் பண்ணிடாதேங்கோ.

மங்களம்…உங்க உணர்வுகள் அத்தனையும் சரியானது தான்.நான் நல்லாப் புரிஞ்சுக்கறேன். பிரசாத் ரொம்ப நல்லவரா இருக்கலாம் மங்களம். ஆனா, எனக்குள்ள அவர் ஒரு சக நண்பராத்தான் தெரியறார். காதலைக் கட்டாயப் படுத்தி வரவழைக்க முடியாது. ஒரு வேளை எனக்குள்ளும் அவர் மேல் ‘ஈர்ப்பு’ வந்தால், அது தானே நிகழ்ந்தால், என்னிடம் யாரும் இத்தனை சொல்லவே வேண்டாம். அதற்கு அவசியமே இருக்காது.ஹி இஸ் ஜஸ்ட் எ நைஸ் ஃப்ரெண்ட் ஆஃப் மைன். தட்ஸ் இட்.

ஆனா கௌரி…ஒண்ணு நினைச்சுப் பார்த்தேளா? நாம வாழப் போறது ஒரே ஒரு வாழ்க்கை. நிரந்தரமே இல்லாத இந்த ஒரு வாழ்க்கைல,உங்களை நம்பிக் குழந்தைகள். நீங்களும், பிரசாத்தும் கல்யாணம் பண்ணிண்டால், மொத்தம் உங்க மூன்று குழந்தைகளும், அப்பா..அம்மா என்று குடும்பம் கிடைச்சுடும். நிம்மதியா வாழலாம்.. இல்லாட்டா, மூணு குழந்தைகளுமே ‘அம்மா இருக்கா’ அப்பா இல்லை….’அப்பா இருக்கா’ அம்மா இல்லைன்னு வாழ்நாள் பூரா ஒரு ஏக்கத்தோட தான் வாழணம். நீங்க ரெண்டு பேரும் மனசு வெச்சால்…உங்க குழந்தைகளோட எதிர்காலத்தை யோசிச்சு, அந்த ஏக்கத்தை நிரந்தரமாத் தீர்க்கலாம். யோசனை பண்ணிப் பாருங்கோ.இன்னைக்கு நீங்க எடுக்கும் எந்த முடிவுக்கும் , ஒரு பத்து வருஷம் கழிச்சா நீங்க சந்தோஷப் படறா மாதிரி இருக்கணம் கௌரி. வருத்தப் படறா மாதிரி இருந்துடக் கூடாது. அதான் சொல்றேன்.. அந்த மூணு குழந்தைகளுமே பாவம் தானே.

மங்களம்…நான் அந்தக் கோணத்தில் பார்க்கலை. யோசிக்கறேன். நீங்க என்ன சொல்லுங்கோ, என்கிட்டயிருந்து மறுபடியும் அதே தான்…’கட்டாயப் படுத்தி ‘காதலை’த் திணிக்க முடியாது.. என்றவள்…என்கிட்டயே ‘கவுன்சிலிங்கா’ என்று சிரித்துக் கொள்கிறாள்.

இப்ப நீங்க எதுக்காகவாக்கும் காசி வரைக்கும் வந்திருக்கேள்? உங்கப்பாவுக்காகத் தானே? ஒரு குடும்ப அமைப்புக்கு அப்பா…அம்மா…என்ற ரெண்டு சக்தியும் ரொம்பத் தேவை இல்லையா? அவர்களுக்காகவே இல்லைன்னாலும்….குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வுக்காக கண்டிப்பா குடும்பம் அவசியம். நீங்க நேத்து சொன்னேள்….உங்க ஆபீஸ்ல கல்யாணம் பண்ணீண்டு பிடிக்கலைன்னா விட்டுட்டு வந்துடுவான்னு……அப்படி விட்டுட்டுப் போறவாளுகும் உடனே தான் எதை இழந்தோம்னு தெரியாது. ஆனால்…பின்னாடி எப்பவாவது தோணும். அப்ப வருத்தப்படுவா. கண்டிப்பா வருத்தப் படுவா. நானும் இப்படியெல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்கறதுண்டு,

மங்களம்….இப்படி நன்னாப் பேசறியே, கண்டிப்பா உங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு. நீ பண்ற சமையலையும் தாண்டி…! அதே மாதிரி , நல்ல வரன் அமைஞ்சு உங்க குழந்தைக்கும் ஒரு குடும்பம் கிடைக்கணம். நாளைக்கு நான் ‘எங்கப்பா’ கிட்ட வேண்டிக்கறேன், உங்களுக்கும் சேர்த்து. இப்போ தூங்கலாமா….என்று கொட்டாவி விட்டபடி…..கண்ணைச் சுழட்றது என்கிறாள்.

சாரி..கௌரி…..உங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்….குட் நைட். என்று திரும்பிப் படுத்துக் கொள்கிறாள் மங்களம். ஒத்த மனங்கள் அவரவர் சுமையை இறக்கி வைத்த நிம்மதியில் மனம் லேசாக, படுத்ததும் உறங்கிப் போனாள் அவள்.

கோழி கூவும் முன்பே சத்திரம் விழித்துக் கொண்டு அவசரப் படுத்தியது. மனங்கள் கனக்க, கயாவில் பிண்டங்கள் போட்டு சிரார்த்தம் செய்யும் இடத்திற்கு செல்லும் போது தான் தெரிந்தது. மக்களின் நம்பிக்கையும், சிரத்தையும். எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம்,,,கூட்டம்..கூட்டம்…சிறிய சந்துகளில் நெருக்கமாக வெறும் தலைகள் நகர்ந்து செல்வது போலிருந்தது. அத்தனை முகங்களிலும் ஒரு இறுக்கம். பிரிவின் சோகம். ஆழ்ந்த துயரம், கண்கூடாகத் தெரிந்தது.

இங்கென்ன விசேஷம்…? இவ்ளோ கூட்டம் அலைமோதறது …? கௌரி தான் கேட்கிறாள்.

விசேஷமா…..பிண்டம் போடறது தான் இங்க விசேஷம். அதுக்குத்தான் இவ்ளோ கூட்டம். இப்பவாவது தெரிஞ்சுக்கோங்கோ …மனுஷா எவ்ளோ பேர் செத்துப் போயிருக்கான்னு…இன்னியோட இத்தனை பேருக்கும் விமோசனம் தான். ஆனா, மறுபடியும் நாளைக்கும் இத்தனை பேர் வந்துடுவா…இங்கயும் ஒரு சக்கரம் சுத்திண்டே இருக்கு… மங்களம் சொல்லிக் கொண்டே வருகிறாள்.

ஆள் உயர பசுமாடுகள் தடி தடியாய் மனிதர்களை இடித்துத் தள்ளிவிட்டு தான் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். தட்டுத் தட்டாக பிண்டங்கள் பசுக்களுக்கு வைக்கவும், அதற்கும் தடிமாடுகளின் நடுவே இடிமுட்டுகள். வினோதமாகத் தான் இருந்தது.
பல்குனி நதியைப் பார்த்ததும், மனதும் வறண்டு தான் போனது. வெறும் மணல் நீளமாக ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் தோண்டினாலும் போதும்…எங்கேர்ந்து தான் அவ்ளோ தண்ணி வருமோ….ஒரு ஊற்று வெளிப்படும் அழகும்…ஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு மண்ணுக்கடியில் நதி ஓடிக் கொண்டிருக்கிறதோ என்று நம்பத் தோன்றும் நிஜம்.

பிண்டங்கள் உருட்டி உருட்டி…கை ஓய்ந்து போய்விடும். மனம், தனக்குத் தெரிந்த இறந்து போன உறவுகளுக்கு,ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்து பிண்டம் வைத்து நிம்மதி அடையும் போதும் , விஷ்ணு பாதத்தில் பிண்டங்களைச் சேர்த்த போதும்,பிதிரர் காரியங்கள் ஆயாச்சு…என்று அக்ஷயவடம் அழைத்துச் சென்று, அந்த பிரமாண்டமான ஆலமரத்தின் அடியில் பிண்டங்கள் வைத்து விட்டு, மனதுக்குப் பிடித்த ஒரு இலையும், ஒரு பூவும், ஒரு காயையும் ‘இனி தொடமாட்டேன்’ என்று விட்டுவிட்டு….மானசிகமாக இறந்தவர்களை எண்ணி வேண்டிக்கொண்டு…..”எல்லாக் காரியங்களும் நன்னா பண்ணேள், எங்களுக்கு ரொம்ப திருப்தி..” புரோகிதர் சொல்வது கேட்டதும் தான் நிறைவாகிறது கயா சிரார்த்தம்..

பிராமண தானங்கள் முடித்துக் கொண்டு, மீண்டும் கயாவை விட்டு வெளியேறியதும், சித்ராவுக்கும், கெளரிக்கும் , பிரசாத்திற்கும், மங்களத்திற்கும் நிம்மதியான ஒரு பெருமூச்சு வந்தது. “மாத்வா மடத்தில்’ திவசம் செய்து விட்டு, சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது மணி மூன்றாகி விட்டது.

பெருத்த நிம்மதியுடன், வண்டியில் எறினார்கள் “புத்த கயா ‘ வை நோக்கி வண்டி விரைந்தது…..அலைச்சலும், அசதியும் அனைவரையும் வண்டிக்குள் அசத்தி விட….புத்த கயா ‘கார் பார்க்கிங்’ தளத்துக்குள் வந்து அவர்கள் வந்த வாகனம் நிற்கும் வரையில் அனைவரும் நித்திரையில் இருந்தார்கள்.

கயாவிலிருந்து வெறும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ‘புத்த கயா’ வைப் பார்த்த சித்ராவுக்கு, ஆச்சரியமான ஆச்சரியம். இந்த இடத்தைப் பாரேன்…! நாம எங்கோ சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ வந்திருக்கறா மாதிரி இருக்கு.எவ்ளோ சுத்தம், எவ்ளோ விஸ்தாரம்…பசுமை…அழகு…! சொல்லிக் கொண்டே நீள மான ரோட்டைக் கடந்து ‘புத்தர் கோவிலுக்குள்’ நுழையும் போது , அங்கு கூடமாக சீனர்கள், ஜப்பானியர்கள், மங்கோலியர்கள்…என வகை வகையான சுற்றுலா பிரயாணிகளைப் பார்த்து பிரமித்துப் போனவளாக, நாம இருக்கறது இந்தியா தானே..? சந்தேகமா இருக்கு…என்று கௌரியிடம் சொல்லிக் கொண்டாள் .

பெரிய மரத்தாலான ஒரு ஸ்தூபம்…அதைக் கட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தான் பிரசாத்.

இங்க என்ன பண்றேள்? சித்ரா ஆவலாகக் கேட்டதும், இதுவா..மாமி…இந்த மரத்தூணைக் கட்டிப் பிடிச்சால்..நம்ம எண்ணம் கைகூடுமாம். உங்களுக்கு ஏதாவது நிறைவேறாத கோரிக்கை இருக்கா? இருந்தா….ட்ரை பண்ணுங்கோ..!

ஏன் இல்லாமல்…நகருங்கோ….நானும் கட்டிப் பிடிச்சிட்டு வரேன்…என்ற சித்ரா, அந்தத் தூணுக்கு நேர் எதிரே தெரியும் விஸ்வரூப புத்தர் சிலையை, அது பிரம்மாண்டமாக தங்க நிறத்தில் தக தக வென்று ஜொலித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, மானசிகமாக ‘கௌரிக்கு நல்ல வாழ்க்கை அமையணும் – சீக்ரமா கல்யாணம் ஆகணும்’ என்று வேண்டிக் கொண்டே அந்தத் தூணைக் கட்டி தனது இரு கைவிரல்களையும் இணைத்துப் பிடித்தவள்…..”கை கூடித்து…..நினைத்தது கை கூடும்’ என்ற நிம்மதியாய் படிகள் இறங்கி கோவிலுக்குள் நுழைகிறாள் சித்ரா. கோவிலின் உள்ளே ஜில்லென்று ஏ ஸி..என்ன இது ரொம்ப ஆச்சரியமான கோவிலா இருக்கே.? .எங்க பார்த்தாலும், சுத்தம், அழகு.எங்க அந்த ‘போதி மரம்’.?.. என்று சத்தமாகக் கேட்கிறாள்.

அம்மா….இது எவ்வளவு அமைதியான இடம். எத்தனை பேர் அமைதியா தியானம் பண்ணீண்டு உட்கார்ந்திருக்கா. கொஞ்சம் மனசைக் கட்டுப் படுத்தி பார்த்துண்டே வா….அமைதியா…என்கிறாள் கௌரி.

போதி மரம்…! மரத்தை யாரும் தொட்டுவிடக் கூடாது என்பது போல அதைச் சுற்றி அமைந்த தங்க நிற கம்பி வேலி. சுற்றிலும் வழியெல்லாம் பளிங்குத் தரை. அங்கங்கே சிலர் அமைதியாக தியானத்தில் கண் மூடி அமர்ந்திருந்தனர். ஓரிடத்தில், அமைதியாக பிரசாத்தும் உட்கார்ந்து கொண்டிருக்க, அவன் மடியில் குழந்தை அமைதியாக மரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ராஜ வாழ்வையும், அழகான மனைவியையும், பிஞ்சு மகனையும் விட்டுவிட்டு இந்த மரத்தடியில் அமர்ந்திருந்த போது தானாமே , கௌதமருக்கு ‘ஞானம்’ கிடைத்தது. அவர் அமைதி தேட அவருக்கு ஞானம் கிடைத்தது. நானோ….பூனை வளர்த்த சாமியார் மாதிரி, கைக் குழந்தையோட எதைத் தேடுகிறேன். நினைவுச் சுழல்கள் சுழன்று கழல, முற்றிய தேங்காயுள் ஒட்டியிருந்த பருப்பு கழன்று உள்ளுக்குள் உருள ஆரம்பித்தது.தனது ஆற்றாமையும், இயலாமையும், வெறுமையும்,தனிமையும் ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று முணுமுணுக்க வைத்தது. எதற்கும் ஆசைப்படாதே பிரசாத்…எதற்கும்…என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டே இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் அமர்ந்திருக்க, அவனைப் பார்த்தவர்கள்…அவன் ‘தியானத்தில்’ இருப்பதாக எண்ணி அமைதியாக நிற்கிறார்கள்.
ஆனால் அவனது உள்ளம், குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தது.

மனக்கலக்கத்துடன் அவன் திடீரென்று விழித்துப் பார்க்கையில் ஒரு பெரியவர் அவனை ஆசீர்வாதம் செய்து விட்டுப் நடந்தார்.

வாங்கோ…கிளம்பலாம், சித்ராவின் குரல் கேட்டதும் எழுந்து கொண்டு அமைதியாக மீண்டும் ஒரு முறை புத்தரை தரிசனம் செய்து வேண்டிக் கொண்டே, அந்த ரம்மியமான கோயிலை விட்டு வெளியேறியதும் மனசு வெறுமையாய் இருந்தது பிரசாத்துக்கு.

வழி நெடுக பாதையோர வியாபாரிகள் நிறைந்திருக்க அழகான புத்தர் சிலை ஒன்றை வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டவன், மாமி, மங்களம் உங்களுக்கு ஏதாவது..? என்று கேட்டதும்….”அதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம்…..அந்தக் கடையில் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி வாங்கி சாப்டுட்டு போயிண்டே இருப்போம்…..சித்ராவின் நடையில் வேகம் இருந்தது.

அவசர அவசரமாக, இருட்டிடப் போறது….வானத்தை பாருங்கோ மேக மூட்டமா எப்ப வேணா மழை கொட்டும்ங்கறா மாதிரி இருக்கே..வேகம் காசி எத்தணம். கௌரி…அங்க என்னத்த வேடிக்கை பார்த்துண்டு நிக்கறே.? வாங்கினதெல்லாம் போதும், மழை கொட்டப் போறது….வா…வா…என்ற அதட்டலோடு, எல்லாரையும் ஒரு வழியா இழுத்து வண்டிக்குள் அடைச்சாச்சு.

வண்டி நகர்ந்து பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது….கண்முன்னே எதுவுமே தெரியாத அளவுக்கு ஒரு இருள்…காரிருள்..சூழ்ந்து கொண்டு, கண்ணாடி ஜன்னலை ‘பூம்….பூம்…” என்று காற்று அழுத்தித் தள்ளுவது போலிருக்க..வாகனத்தின் வேகம் குறைந்து குறைந்து தள்ளாடியதை உணர முடிஞ்சது.

என்னாச்சு…? திடீர்னு…குழப்பத்துடன் எல்லார் மனசிலும் ஒரே கேள்வி தான்.

“ஆந்தி ஆகயா சாப்…” கப் தக் சலேகா மாலூம் நஹி…! (புயல் வந்துடுத்து சார்…..எப்ப வரைக்கும் இருக்கும்னு சொல்ல முடியாது)
ஆனா இங்க அடிக்கடி இப்படித்தான் புயல் காத்து வீசும் என்கிறான் டிரைவர்.

ஐயய்யோ ……சித்ரா அலறுகிறாள். இதென்னடா வம்பாப் போச்சு…சரி அப்படியே வண்டியைத் திருப்பச் சொல்லுங்கோ…மாமா….புத்தா கோவிலுக்கே போயிடலாம். அங்க தங்கவாவது இடம் இருக்கு. ப்ளீஸ்…வண்டியைத் திருப்புங்கோ…. ரிஸ்க் வேண்டாம். எல்லாருமே ஒரே மாதிரி யோசித்து ‘வண்டியைத் திருப்பச் சொல்லி சொல்லவும்.

இப்போல்லாம் ஓடுற வண்டியைத் திருப்பவும் முடியாது…நிறுத்தவும் முடியாது..எதிரில் வேற வண்டி வந்தால் அவ்ளோதான்…..என்றெல்லாம் சொல்லி கொண்டே மெல்ல ஒட்டிக் கொண்டிருக்கிறான்…கூடவே மழையும் பிடித்துக் கொள்ள…. ஏதோ இருண்ட லோகத்தில் பிரயாணம் செய்வது போல, முதுகெலும்பு சில்லிட்டுப் போக,முகத்தில் பயத்தோடு அனைவரும் என்ன செய்வதென்றே புரியாமல் கைக்குக் கிடைத்ததை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, திடீரென்று வண்டி மொத்தம் தூக்கித் தூக்கிப் போட்டு ‘ஜிங்…ஜிங்…ஜிங்….’ என்று எழும்பி எழும்பி குதிக்க கௌரி பயத்தில், சீட்டிலிருந்து அப்படியே நிதானம் தவறி அருகிலிருந்த பிரசாத்தின் மீது குழந்தையோடு சாய்ந்தவள், அவனது மார்பில் மோதி…மோதி….மீண்டும் மோதாமல் இருக்க பிரசாத்தை அப்படியே பயத்தில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு முகத்தை அவனது நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அவளது கையும், உடலும் நடுங்கத் தொடங்கியது.

வெளியில் புயல் காத்து மணலை வாரிப் புகை மண்டலம் போல எழுப்பி எதிரில் என்ன இருக்கிறது என்றே புலப்படாத வகையில் ஒரே மூட்டமாக சூறைக் காற்று சுழன்று அடிக்கிறது. என்ன வேணா நடக்கலாம் என்ற பயம் மனத்தை பற்றிக் கொள்கிறது.குழந்தையை கட்டிக் கொள்கிறாள்.

மனத்தின் மரண ஓலம்…! அவளின் மன ரணங்கள் கண்ணீராய் வெளிப்பூச்செல்லாம் கரைத்து, நிர்மலமாக்கி அவனது சட்டையை ஈரமாக்கியது.

திடீரென நடந்து விட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல், அதே நேரத்தில் கௌரியை விலக்கி விடாமல், அப்படியே சேர்த்து பாதுகாப்பாக இறுக்கி அணைத்துக் கொள்கிறான் பிரசாத். தர்ம சங்கடம் என்ற சொல்லின் பொருளை இப்போது தான் பிரசாதால் உணர முடிந்தது.

சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட கௌரி, சற்று விலகிக் கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போய் மீண்டும் சாய்ந்து கொண்டாள். பிரசாத்தின் கன்னம் கௌரியின் தலை உச்சியில் பட்டு சாய்வாக அவளுக்குப் பாதுகாப்பாக அழுத்திக் கொள்ள கைகளால் குழந்தையை அழுத்திப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் பிரசாத்.

அங்கே….காதல் உருவாகவில்லை…காதல் மூச்சு விட்டது. உயிர்கள் ஒட்டிக் கொண்டது போல ஏதோ நிம்மதி இருவர் மனத்துள்ளும் ஒன்றாகக் குடிகொண்டது.

கடிகாரத்துள் இருக்குற மூணு முள்ளும் ஒண்ணோட ஒண்ணு சம்பந்தமே இல்லாமே இருந்தாலும், கூடவே தான் பாட்டுக்கு சுத்திண்டு இருக்குற நிமிட முள்ளு, சமயம் பார்த்து மத்த ரெண்டு முள்ளையும் சேர்த்து வெச்சுடும்…அந்த நிமிட முள்ளு தான் ஈர்ப்பு..! கௌரியின் மனம் என்னென்னவே எண்ணிக் கொண்டது.

பயத்தில் ‘அப்பா ….அப்பா..’ என்று அவள் முனகும் சத்தமும், ….முருகா..காப்பாத்து”என்ற சித்ரா போடும் கூப்பாடும் சேர்ந்து கொண்டது.

‘படா ஸ்பீட் பிரேக்கர் தா’…..சொல்லிக் கொண்டே டிரைவர் ஸ்டியரிங்கை வளைத்து இங்கேர்ந்து திரும்பிடவா….எனக்கும் பாதை சரியாத் தெரியலை என்றபடியே லாவகமாக அங்கிருந்த ஒரு வளைவில் வண்டியை ஒடித்துத் திருப்பி உடனே…வேகம் எடுக்கிறான். வண்டியின் வேகத்தை எதிர்க் காற்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

வண்டியின் விளக்கு வெளிச்சம் கூட அந்தக் காரிருளில் அடங்கிப் போகிறது. மழையின் ஆக்ரோஷ சத்தம், காதையடைக்க குளிரும் கூடச் சேர்ந்து கொள்கிறது. நெஞ்சோடு சேர்ந்து கொண்ட கௌரியை லேசாக விடுவித்த பிரசாத் குழந்தையைப் பாதுகாப்பாக அணைத்துக் கொள்கிறான்…..பயப்படாதே…கௌரி….ஒண்ணும் ஆகாது…இதெல்லாம் இங்க சகஜம்.தான் என்று சொன்னாலும், வார்த்தைகளினால் விவரிக்க முடியாத உணர்ச்சிகளால் கட்டுண்டு தவித்துக் கொண்டிருந்தான் பிரசாத்.

சித்ரா மாமியின் கைகளை ஆதவராகப் பற்றிக் கொண்ட மங்களமும், மாமி…கொஞ்ச நேரம் அமைதியா இருங்கோ..நமக்கு ஒண்ணும் ஆகாது…என்கிறாள். பிடித்திருந்த அவளது கைகளும் நடுங்கிக் கொண்டிருந்ததன.

அந்த அணைப்பு தந்த பாதுகாப்பிலிருந்து விடுபட்டு விட்டது போன்ற ஒரு தவிப்பை உணர்ந்தாள் கௌரி. நேற்று இரவு மங்களத்திடம் பேசிக் கொண்டிருந்தது காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்தது. அவள் சொன்னதெல்லாம் இப்போது சரி தான் என்று தோன்றியது.குழந்தைகளுக்காக மட்டுமில்லை…எனக்காகவும் தான் என்று எண்ணிக் கொண்டாள்.

கௌரிக்கு உடல் முழுக்க ‘நாண நரம்புகள்’ ஓடுவது போல உணர்ந்தாள். விழிகள் இரண்டும் ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் தாவித் தவித்தன. வண்ண மலர்களும், பட்டாம்பூச்சியும், கொட்டும் அருவியும், சோலைத் தென்றலும், ஒரு சேர அவளருகில் அமர்ந்திருந்தது போன்ற பிரமையில் இருந்தாள் அவள்.

பிரசாத்தின் நிலைமையோ அதற்கும் மேலே. அம்மே…அம்மே….என்று ஆனந்தக் கூத்தாடியபடி வானத்தில் மிதந்து கொண்டிருப்பது போலிருந்தான்.

பதவியும், ஃ பைல்களும் , கணினியும் , கைபேசியும்,,,என்று எதுவுமே இல்லாத வானவில்லின் விளிம்பைக் கடந்து இருவரும் கைகோர்த்த வண்ணம் பறந்து கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.

புயல் காற்றே இவர்களை மீண்டும் புத்த கயாவுக்குள் கொண்டு வந்து வண்டியை நிறுத்தியது போலிருந்தது வண்டி நின்றதும் தான் கௌரியும் பிரசாத்தை விட்டு தைரியமாக சற்று விலகி உட்கார்ந்து கொண்டாள் . புயலின் தாக்கம் குறையக் குறைய நிம்மதியாகப் பெருமூச்சு விட்ட டிரைவர், லேசாகக் கதவைத் திறந்து இறங்கி, ஒரு சுருட்டை எடுத்துப் பத்த வைகிறான்.

புகை இழுத்துக் கொண்டே, ‘கரமா கரம் சாய்…பீவோகே”…என்று உள்ளே எட்டிப் பார்த்துக் கேட்கிறான்.

சித்ரா உடனே…..’பீவோகே….பீவோகே…சீக்கிரம் பீவோகே’ .என்கிறாள்.

சுடச் சுட சின்னஞ்சிறு மண்குவளையில் ‘டீ ‘ யை ஆளுக்கொரு கையில் பிடித்துக் கொண்டு ரசித்துக் குடிக்கும் போது, கௌரியின் கண்கள் பிரசாத்தை ‘நேருக்கு நேராக’ சந்தித்து வெட்கம் கொண்டு குனிந்து கொள்கிறது. அவள் உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு.

அந்த அணைப்பு தந்த பாதுகாப்பிலிருந்து விடுபட்டு விட்டது போன்ற ஒரு தவிப்பு. நேற்று இரவு மங்களத்திடம் பேசிக் கொண்டிருந்தது காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்தது. அவள் சொன்னதெல்லாம் இப்போது சரி தான் என்று தோன்றியது..
காரணமே இல்லாமல் வெட்கம் வந்தது. அடிக்கடி பிரசாத் தன்னைப் பார்க்கிறானா என்று வேற பார்க்கத் தொடங்கினாள் கௌரி.
மனத்துக்குள், நேற்று அவன் சொன்ன, இன்னும் மிஞ்சிப் போனால் ஒரு நாள் தானே…நாம இப்படி ஒண்ணாச் சேர்ந்து இருப்போம்….என்ற வார்த்தை வந்து பயமுறுத்தியது. அவன் சொன்ன போது ரொம்ப சாதாரணமான விஷயமாய் இருந்தது. ஆனால் இப்போது அவளுக்குள் ஒரு உதறல்…..! உறவு இல்லை….அதனால் பிரிந்து தான் ஆக வேண்டும். பிரியப் போகிறோம் என்ற உணர்வே அவனுடனான ஈடுபாட்டை அதிகப் படுத்தியது. திடீரென்று தனக்குள் எதுவோ வந்து அவள் மனதை கவ்விக் கொண்டது போலிருந்தது.

காதலைக் கட்டாயப் படுத்த முடியாது. நிஜம் தான். ஆனால் அதையும் தாண்டி எதுவோ ஒன்று காதலைக் கண்ணுக்குக் காட்டி விட்டதே. இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் என்னை ஏற்க பிரசாத் முழு மனசோட சம்மதம் தருவாரா? மூன்று குழந்தைகளோட குடும்பம் நடத்தும் துணிவு எனக்கு இருக்கா? இருவர் இணைந்து வாழ்வதற்கு சில விதிமுறைகள் இருக்கே…அதை எப்படி சரி செய்வது? பலவித சிந்தனையில் உட்கார்ந்திருந்தவளை, நிர்மலமான வானம்……தெளிவைக் காண்பித்தது போலிருந்தது. அதை இங்கேயே இப்போவே செய்தால் என்ன? என்றும் நினைத்தவள்,

புரோஹிதர் மாமாவிடம் சென்று ஏதோ பேசிக் கொண்டிருந்தவள், கொஞ்சம் விசாரிங்கோ மாமா….நானும் அதற்குள் இங்க கேட்டுடறேன். என்று சொல்லி விட்டு அங்கிருந்த புத்தர் கோவிலின் அலுவலகத்திற்குள் நுழைகிறாள்.

அங்கிருந்து வெளியில் வரும்போது அவள் முகம் பிரகாசமாய் இருந்ததைக் கண்ட பிரசாத், கௌரி….என்ன விஷயம்…ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு புரியறது. சொல்லேன்…என்று அவள் முகத்தைப் பார்த்ததும்,

நான் மூணு குழந்தைக்கு அம்மாவா இருக்க சம்மதிக்கிறேன்..உன்னால் மூணு குழந்தைக்கு அப்பாவா இருக்க சம்மதமா? என்று வெட்கப் பட்டுக் கொண்டே கேட்டவளின், முகவாயை நிமிர்த்தி, “எனக்கு நாலு குழந்தைக்கு அப்பாவா இருக்க சம்மதம்” என்றுவிட்டு. புரிஞ்சுதா? என்று கண்கள் சிரிக்கச் சொல்லும் பிரசாத்தைப் பார்த்து வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் கௌரி.

கௌரி சொன்னதைக் கேட்டதும், கௌரி….கௌரி….தாங்க்ஸ் மா…..! எனக்கு இப்பத் தான் ஜீவன் வந்தா மாதிரி இருக்கு. புத்தர் கண்கண்ட தெய்வம்….இன்னும் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தான். அவன் மனம் சந்தோஷத்தில் குதித்தது.

நடப்பது நிஜமா…? எதையுமே நம்ப முடியாமல் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போன பிரசாத், மாமி….கௌரி…மனசு மாறிட்டா…கௌரி மனசு மாறிட்டா..இந்த புத்தர் முன்னாடியே கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு ஆசையாம்….என்று சித்ராவிடம் சொல்ல வருகிறான்..

புத்த கயால எல்லாருக்கும் ஞானம் கிடைக்கும்னு சொல்லுவா, இங்க வந்ததும் தான், இவளுக்கும் அஞ்ஞானம் விலகி ஞானம் வந்துடுத்து என்று மகிழ்ந்த சித்ரா. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு…., மங்களம்…இங்க வா…ஒரு விஷயம் .என்று மகிழ்ச்சியில் அழைக்கிறாள்.

அம்மா….காசில ராதா சில்க் எம்போரியத்துல நீ ஒரு அரக்கு கலர்ல ஒரு புடவை வாங்கினியே அதைக் கொண்டு வந்திருக்கியோ..அதை எனக்குத் தா. அப்டியே இங்கேர்ந்து ரெண்டு பூ மாலை மட்டும் வாங்கிக்கோ போதும். இங்கயே ஸ்ரீகாந்த் பாண்டேன்னு ஒரு புரோஹிதர் இருக்காராம். இந்த புத்தர் முன்னால, அரை மணி நேரத்தில் கல்யாணம் பண்ணி வைப்பாரம். நம்ம புரோஹிதர் மாமாவும் கூட இருக்கார். எனக்கென்னமோ இங்கயே என்னோட கல்யாணம் பிரசாத் கூட நடக்கணும்னு தோண்றது. பிரசாத்துக்கும் சம்மதம் தான் என்ற மகளைக் கட்டிக் கொண்டு, நேக்கும் சம்மதம் தான் என்கிறாள்.

அதன்பின் , எதிரில் இருக்கும் ‘காஷ்மீர்’ கடைக்குள் நுழைந்த சித்ராவும், மங்களமும், ரெண்டு ஜோடி வெள்ளி மெட்டிகளும், பிரசாத்துக்கு புத்தாடையும் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள்.

ஐந்தே நிமிடங்களில், கௌரியும் பிரசாத்தும் ‘திருமணக் கோலத்தில்’ அழகாகத் வந்து நின்றனர்.

அடுத்து நடந்ததெல்லாம் கனவு போல நகர்ந்தது கௌரிக்கு. அக்னி வளர்த்து,புரோஹிதர் வேத மந்திரங்கள் ஓத,மாங்கல்ய தாரணம் சொல்லவும்,மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிற்றை கௌரியின் கழுத்தில் அணிவித்து, வகிட்டில் குங்குமத் திலகம் வைத்து அக்னியை பிரசாத்தின் கரங்களைப் பற்றியபடி ஏழு முறைகள் சுற்றி வலம் வந்து..கால் விரலில் மெட்டி அணிவித்து,அனைவரின் ஆசீர்வாதத்துடன் பூ மழை தூவ திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நின்றபடி புத்தரை வணங்கி விட்டு, பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அனைவருக்கும் இனிப்புகள் கொடுக்கும் போது , அன்பும், அமைதியும், ‘சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரந்தரமாகட்டும்’ என்று புத்த பிக்கு ஒருவர் நின்று வாழ்த்திவிட்டுச் சென்றது அனைவரின் நெஞ்சமும் நிறைந்தது.

நடந்த கல்யாணம் நிஜமா.? என்று பலமுறைத் தன்னைத் தானே கிள்ளிப பார்த்துக் கொண்ட பிரசாத்தை….பார்த்துக் கொண்டே இருந்த கௌரி….நிஜமாகவே அவனைக் கிள்ளிவிட்டு…..”நம்பு…..நிஜம் தான் ..வலிக்கிறதா? ” என்று கேட்டுவிட்டு இந்த புத்தர் தான் நமக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார்…அதையும் நம்பு என்று சொல்லி வெட்கப்படுகிறாள்.

யாரோ கோவில் மணியை ஓங்கி அடிக்கவும்,அதிலிருந்து ‘ஆமாம்….ஆமாம்’ என்று சத்தம் வருகிறது.

ஒரு ஃபோட்டோகிராபர், காமெராவுடன் ஓடிவந்து….எல்லாரும் ஃபோட்டோவுக்கு நில்லுங்க, ஒன் மினிட் ஃபோட்டோ…என்றதும்,

கௌரியும், பிரசாத்தும் சிரித்துக் கொண்டு நின்றதை ஒரு ‘கிளிக்’ கவ்விக்கொண்டது,

சித்ராவும். கௌரியும் சேர்ந்து “கௌரி கல்யாணம்….வைபோகமே” என்று பாடும் போது ….மாமி ஒரு நிமிஷம்…” டௌரி தராத கௌரி கல்யாணம்….” னு சேர்த்துக்கோங்கோ….என்றதும், ம்ம்ம்…..என்று சிரித்து மகிழ்ந்தபடி ஆனந்தக் கண்ணீரோடு சித்ரா பாடிகொண்டே ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கிறார்கள்.

இதையெல்லாம் சந்தோஷமாக வேடிக்கை பார்த்தவர்கள் மெல்லச் சிரித்தபடி கலைந்து சென்றார்கள்.

புயலுக்குப் பின்னே அமைதியானது ‘புத்த கயா’ மட்டுமில்லை….கௌரியின் வாழ்கையும் கூடத்தான். மீண்டும் அவர்கள் வந்த வாகனத்தில் உரிமையோடு பிரசாத்தின் அருகில் மனைவியாய் கௌரி பிரசாத்தின் கரங்களை உரிமையோடு பிடித்துக் கொண்டு உட்கார்ந்ததும், வண்டியும் சந்தோஷமாக ஆடிக் கொண்டே கிளம்புகிறது.

மங்களம் மெல்லத் திரும்பிப் பார்த்து புன்னகை செய்கிறாள். அதில் நன்றியோடு பல விஷயங்கள் கலந்து இருந்தது.

உடனே..கௌரி, என் பொண்ணு ‘கௌரி கல்யாணிக்கும்’ நாங்க டௌரியே தராமல் உங்க பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைப்போமாக்கும்…..என்று சொன்னதும்,

‘சோலாப் பூரி….பேல்பூரி….ரகடா…பட்டீஸ்…என்று படபடக்கிறாள் மங்களம்….!

அப்டீன்னா…..என்னது ? என்று சித்ரா ஒன்றும் புரியாமல் விழிக்க,

“ஆசை….தோசை….அப்பளம்….வடை…” ன்னு சொல்றாம்மா மங்களம்…எப்டி பாரு…? என்று புருவத்தை உயர்த்தி கௌரி விளக்கம் சொன்னதும். வண்டியும், இவர்கள் சிரிப்பில் சேர்ந்து கொண்டு குலுங்கியது.

=======================================================சுபம்==========================================================

அன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கும்,
அன்பின் திண்ணை எழுத்தாளர்களுக்கும்,
அன்பின் திண்ணை வாசகர்களுக்கும்,

எனது பணிவான வணக்கங்கள்.

இந்தத் தொடர்கதையை முப்பது வாரங்களாக ‘திண்ணை’யில் வெளியிட்டமைக்கு திண்ணை ஆசிரியர்களுக்கும், அதே போல நான் அனுப்பிய “ஓ ….கங்கா மையா ” பாடலின் காணொளியை திண்ணையில் ஒலிக்கச் செய்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை இத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’இதுநாளும் இந்தக் கதையைப் படித்து தங்களது கருத்துக்களைப் பின்னூட்டமாக அளித்தவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து தங்களின் மேலான கருத்துக்களையும் , பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Series Navigation
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

19 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    நான் இந்த தொடரை படிக்கவில்லை. ஆனால், உங்களுக்கு சரளாமான நடையும் நேரமும் இருக்கிறது. தற்போது, இந்தியப் பெண்களும் சரி ஆண்களும் சரி எதுவுமே தவறில்லை, என்று எல்லாவற்றையும் ஒரு சட்டத்தில் அடித்து ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள்.
    ஆண் தன்மை பெண்களும், பெண் தன்மை ஆண்களும் அதிகமாகி விட்டார்கள்.
    பெண்ணிடம் பாசம் பொழியும் தந்தை அவளை எவனோ ஒரு ஆணுக்கு கீழ்படித்து அடிமையாகிப் போகும் ஜூவனாக இருக்கக் கூடாது என்று அவளை முழு சரி நிகர் சமான ஜூவனாக வளர்க்கிறார். தாயோ தன் மகனை கட்டுக்குள் வைத்து வளர்க்கிறாள். அதனால் தானோ இன்று வீரமான பெண்களும், கோழையான ஆண்களும் அதிகமாகிப்போனது.? ஏன் நீங்கள் இன்றைய “கே” கலாச்சாரத்தை வெகு சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கோஷம் போடும் சமூக சூழல் பற்றி ஒரு ஆழ் தொடர் எழுத முயலக் கூடாது…?

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///ஏன் நீங்கள் இன்றைய “கே” கலாச்சாரத்தை வெகு சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கோஷம் போடும் சமூக சூழல் பற்றி ஒரு ஆழ் தொடர் எழுத முயலக் கூடாது…? ///

    இப்படி எழுது, அப்படி எழுது என்று ஓவ்வாதபடி பிறர்க்குச் சொல்ல இந்த அறிவாளிக்கு என்ன உரிமை உள்ளது ?

    எதையாவது உளற வேண்டும் இப்படி.

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      ஜெயஸ்ரீ ஷங்கர் says:

      தங்களின் உடனடியான ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா.

      ஜெயஸ்ரீ ஷங்கர்

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    ஐயா, நான் சொன்னது ஒரு சரளாமான எழுத்து நடை கொண்டவருக்கு ஒரு யோசனை. அதை புறந்த்தள்ள அவருக்கு முழு உரிமை உள்ளது. எதற்கும் கருத்துச் சொல்லாதே என்பது தான் தாலிபான்கள் உலகம். நீங்கள் கருத்துச் சொல்லாதே எனும் போது தாலிபன் யார் என்று புரியும் என்று நினைக்கிறேன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      மூதறிஞரே,

      முகமூடி போட்டு சமூகத்துக்கு அஞ்சம் நீர் யார் “கே” பற்றி எழுது, ஏசுவைப் பற்றி எழுது என்று பிறரை ஆணை இட ?

      சி. ஜெயபாரதன்

  4. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    பேரறிஞர் திரு.புனைப்பெயரில் அவர்களுக்கு,

    தங்களின் அதிகப் படியான ‘நேரத்தை’ இப்படிப்
    படிக்காத கதைக்குப் பின்னூட்டம் போட்டு அக்கப்போர் செய்யலாமா?

    வாழைப் பழத்தில் ஊசி ஏற்றி, மோதிரக் கையால் குட்டும் வித்தை கற்றவரோ?

    அனைத்தும் அறிந்தவர், ஒளிந்து கொண்டு கவட்டையால திண்ணைக்குள்ள கல் வீசலாமா?

    என்னால் எதைப் பற்றி எழுத இயலும், எதை எழுத வேண்டும் என்றும்
    அதை எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியும்.

    வீணா..டென்ஷன் பண்றாங்கப்பா..!

    ஐயா சாமீ…..உங்களுக்குப் புண்ணியமாப் போட்டும்…
    பல பேரு (எல்லாம் எனக்குத் தெரிஞ்சவிங்க தேன்)…. என்னா எழுதியிருக்குன்னு ?
    பாக்கேல, இப்படி ஒரு ‘கோஸ்ட் கமெண்ட்டை’ படிச்சுப் போட்டு, ஆரு சும்மாருப்பாய்ங்க.?
    வாய்க்கு வந்தத பேசமாட்டாக ..? அப்பால கோடோனுக்கு சீல் வெச்சுருவாய்ங்கப்பு …!

    கடைசீல இப்படி வெட்டிப்புட்டீங்களே கட்பீசு..! யம்மா….இப்பவே கண்ணக் கட்டுதே..!

    நெசமாலும்..இப்பவாச்சும் .நிம்மதியா சாமி..!
    போங்க….போயி வேற யாராச்சும் மொய்யெழுத அமபுடுறாய்ங்களாண்டு பாருங்கப்பு…!
    உங்க மனசுக்குள்ள நெனச்சத எளுதிப்போட்டு, சும்மாருக்குற கண்ணுக்குள்ளாற மண்ணள்ளிப்
    போட்டுப்புட்டீங்களே …!

    ஐயாவுக்கு எங்கனக்குள்ள செல வைக்கோணம்? சொன்னாச் சவுகரியமாருக்கும்.

    டென்ஷன் பார்டி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      anniyan says:

      இப்பொழுது புரிகின்ரத ஏன் பலபேர்கள் இந்த மாதிரி கதை பக்கம் போவதே இல்லை என்று.

    2. Avatar
      புனைப்பெயரில் says:

      இது தான் உங்கள் நடையென்றால், சத்தியமாக நான் இந்தக் கோரிக்கையை உங்களிடம் வைத்திருக்க மாட்டேன். முன்பு திண்ணையில் சில பின்னூட்டங்களில் நீங்கள் மனம் தொடும் வகையில் சில விவாதங்கள் கண்டு வேறு தளத்தில் உங்களை வைத்திருந்தேன். பழைய பின்னூட்டங்களை நான் நேரமிருக்கையில் அது வேறு யாராவதா என்று பார்க்க வேண்டும். நிச்சயம் அது திருமதி.ப.சங்கரி அல்ல. எனது கோரிக்கை வைப்பதற்கான நிலையில் உங்கள் தளம் இல்லை. அதை வாபஸ் பெறுகிறேன். நான் சில மனோ தத்துவ நிபுணர்களுடன் பேசிய பொழுது தமிழ்கத்தின் சில ஊரில் நட்ந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் சொன்னதன் அதிர்வு ஒரு நல் எழுத்தாளர்களுடன் சொல்ல வேண்டி நினைத்திருந்தேன். ஞானி, மாலன், ஜெயமோகன் இந்த வகையறாவிற்கு சொல்ல வேண்டியதை, உங்களின் நடைப் பிரவாகம் கண்டு உங்களுக்கு வைத்தேன். அது சரி, பிரவாகம் எடுத்து ஓடுவதனால் மட்டும் ஓடுவது காவிரியாகவோ, கங்கையாகவோ இருந்திட முடியாத என என் ஞானக் கண் திறந்ததற்கு உங்களுக்கு கோடி நன்றி. எந்தப் பெயரிலில் எழுதினாலும் எழுத்துத் தான் நிற்கும். மூத்திரச் சுவரில் எவ்னோ எழுதியது தான், “இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை” என்பது. அவன் யாரென்று தெரியாது. ஆனால் , அவன் சொன்னது இன்றும் நிதர்சனம். 1330 எழுதியது திருவள்ளுவர் என்று தெரியும், அதில் எத்துனையை நாம் பின்பற்றியிருக்கிறோம். எத்துனை பய்ணங்களில் எவன் எவள் என்று தெரியாதோர் செய்த செயல்கள், “ஆணியை ரோட்டில் இருந்து தூக்கி விலகிப் போடுவது” “குழியில் போர்டு வைப்பது” .. எனப் பல நம் உயிர் காத்திருக்கின்றன். எவன்/எவள் என்று தெரியனும் என்று அடம் பிடிக்கிறோமா..? எப்படியோ, உங்கள் பிம்பம் உடைந்தது… இன்று தமிழகத்தில் ஆட்டிப் படைக்கு ஒரு விஷயத்தை பற்றிப் பேச இப்படி குய்யோ முறையும் என்ற எழுத்தாளர் கூட்டம், ஜெயகாந்தனின் கதைகளை படிக்க வேண்டும். இப்போது புரிகிறது ஜெயகாந்தன் தகுதி.. வணக்கம் ஜெயகாந்தன் அய்யா.. இன்னும் எங்கள் பெண்கள், பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டு, வாழ்க்கையில் மட்டுமல்ல… கதைகளிலும் தான்….

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        கதைப் புராணம் எழுதும் மூதறிஞர் புனை பெயரார் மதிப்புக்குரிய திண்ணைப் பெண் எழுத்தாளரைத் தாழ்வாகக் குறிப்பிடும் மதியீனத்தைப் பாருங்கள்.

        இவரது மதிப்பீடை யார் கேட்கிறார் ? யார் எடுத்தாளப் போகிறார் ?

        ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடும் இந்த ஞானிக்கு என்ன கலை, இலக்கிய ரசனை உள்ளது ?

        சி. ஜெயபாரதன்

      2. Avatar
        paandiyan says:

        அட விடுங்க ஸார். சொன்ன கருத்துக்கு மரியாதையாக பதில் சொல்ல தெரியவில்லை. பல வேடிக்கை மனிதர்கள் என்று விட்டு விடுங்கள்.

      3. Avatar
        ஜெயஸ்ரீ ஷங்கர் says:

        மதிப்பிற்குரிய புனைபெயரில் அவர்களுக்கு,

        எனது நெருங்கிய உறவினரிடம் இருந்து,எனக்கு வந்தது ஒரு ஃபோன்.
        “என்ன ஜெயா…’ திண்ணை’யில் உன் கதையின் முடிவும் ஃபோட்டோவும்..கூடவே
        ‘ஒருமாதிரியான’ பின்னூட்டமும்….! “உன் பெயர் வாசனை தூக்கறது”
        என்று சொல்லிவிட்டு கூடவே…இதெல்லாம் உனக்குத் தேவையா?
        வீணா இப்படிப் பேரைக் கெடுத்துண்டு நிக்கறே?
        பேசாமல் வீட்டை மட்டும் கவனிச்சுண்டு இருக்கக் கூடாதா? என்று
        அட்வைஸுடன் வைக்கப் பட்டது.

        என்ன செய்வது? இரண்டு நாட்கள் மன உளைச்சல்..! அந்த நிமிட நேர மன உளைச்சலில்
        நானும் பின்னூட்டமாக எழதிவிட்டேன்.

        பின்பு எனது தவறை உணர்ந்து கொண்டு, முதல் இரண்டு வரிகளை மட்டுமே அனுப்புவதாக இருந்தேன்,
        அதிலும், தவறுதலாக முழுமையாய் அனுப்பி விட்டேன்.

        செய்யும் எந்தத் காரியத்துக்கும் ஒரு பின்னணி காரணம் இருக்கும் என்பதை உணர்த்தவே,
        இந்தப் பின்னூட்டம்.

        நானும் அப்படியெல்லாம் எழுதி இருக்கக் கூடாது. என்னை மன்னியுங்கள்.

        மிக்க நன்றி.

        ஜெயஸ்ரீ ஷங்கர்.

      4. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        ///இன்னும் எங்கள் பெண்கள், பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டு, வாழ்க்கையில் மட்டுமல்ல… கதைகளிலும் தான்….///

        அடடா ! திண்ணைப் பெர்னாட் ஷா தமிழ் எழுத்தாளப் பெண்டிரைப் பற்றி தன் உன்னத கருத்தை கல்வெட்டாய் செதுக்கி விட்டார்.

        சி.. ஜெயபாரதன்

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஒரு பெண் எழுத்தாளரிடம் இது போன்ற விக்ஞாபனம் முன்வைப்பது லக்ஷ்மண ரேகையை மீறிய செயலாகக் கருதப்படலாம் என்று ஸ்ரீ புனைப்பெயரில் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். தவறான விக்ஞாபனம்.

    1. Avatar
      ஷாலி says:

      சில பேருக்கு வயசானாலே கூறு கெட்டுப் போயிடும். யாரிடம் எதைச் சொல்வது என்ற விவஸ்தை இருக்காது.இது வயோதிகத்தின் குற்றம்.சரி விடுங்க! இது திண்ணையில் புதுசு இல்லையே!

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க ஜெயஶ்ரீ,

    இவ்வாரம் வெளியாகி யுள்ள டௌரி இல்லா கௌரிக் கல்யாண நாவலின் முடிவுப் பகுதியை ஆத்மீகக் கலை உணர்வோடு உன்னத முறையில் புத்த கயா நிகழ்ச்சியாகப் படைத்துள்ளீர்கள்.

    சம்பவங்கள் நிஜமாகக் கண்முன் நிகழ்வது போல் ஆக்கிய உங்கள் எழுத்துத் திறமையை நான் மெச்சுகிறேன்.

    பாராட்டுகள் ஜெயஶ்ரீ.

    அடுத்த கதை என்ன ?

    சி. ஜெயபாரதன்

  7. Avatar
    paandiyan says:

    //What the hell is ‘vignabakam?”//
    விக்ஞாபனம் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று நீங்கள் நினைப்பது கூட நல்ல தமிழ் சிந்தனைதான். அதை விட அழகு நீங்கள் சந்தேகம் கேட்ட விதம். யாரு கண்டா ஆட்‌மிந் அவர்கள் இந்த நல்ல கமென்ட் கூட blog பன்னி , உங்களை ஊக்குவிக்கலாம்.

  8. Avatar
    Seetha Ram, says:

    /////எனது நெருங்கிய உறவினரிடம் இருந்து,எனக்கு வந்தது ஒரு ஃபோன்.
    “என்ன ஜெயா…’ திண்ணை’யில் உன் கதையின் முடிவும் ஃபோட்டோவும்..கூடவே
    ‘ஒருமாதிரியான’ பின்னூட்டமும்….! “உன் பெயர் வாசனை தூக்கறது”
    என்று சொல்லிவிட்டு கூடவே…இதெல்லாம் உனக்குத் தேவையா?
    வீணா இப்படிப் பேரைக் கெடுத்துண்டு நிக்கறே?
    பேசாமல் வீட்டை மட்டும் கவனிச்சுண்டு இருக்கக் கூடாதா? என்று
    அட்வைஸுடன் வைக்கப் பட்டது.
    என்ன செய்வது? இரண்டு நாட்கள் மன உளைச்சல்..! அந்த நிமிட நேர மன உளைச்சலில்//////
    I am Sorry Jaya, Keep Writing Pls.
    Luv,
    Seetha

  9. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்புள்ள அக்கா ,

    மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு?
    “கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கி விடாது”

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

    அன்புத் தங்கை.

    ஜெயா.

Leave a Reply to க்ருஷ்ணகுமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *