டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4

This entry is part 16 of 28 in the series 5 மே 2013
 

 

நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ….இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத  குறை தான்….எப்படிப் பேச்சாலயே உந்தித் தள்ளினார்  பார்த்தியோன்னோ …? நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? ரத்தம் கொதிச்சது…ஏற்கனவே நேக்கு ரத்தக் கொதிப்பு….இந்த மாதிரி அவமானமெல்லாம் என் வாழ்கையில வந்ததில்லை.நோக்கோசரம் நான் இப்போ இவர்கிட்ட இது மாதிரி  அவமானத்தையும் தாங்க வேண்டியதாப் போச்சு….உன்னைச்  சுமந்து பெத்தவளாச்சே……அதான்  நேக்கு நெஞ்சு கிடந்து அடிச்சுக்கறது….அந்தக் கடமை இருக்கோல்லியோ. இன்னம் உன் கல்யாணத்துக்காக நான் எங்கெல்லாம் வந்து நின்னு அவமானப் படணு மோ……எண்டே குருவாயூரப்பா…! சலித்துக் கொண்டே தனது புடவைத் தலைப்பால் முகத்தை ஒற்றி துடைத்துக் கொள்கிறாள் பிரசாத்தின் அம்மா.

டேய்…..பிரசாத்.. ஜில்லுன்னு ஒரு லெமன் க்ரஷ் வாங்கிண்டு வா போ….நேக்கு தலையைச் சுத்தறது அவளின் குரலிலேயே அலுப்புத் தெரிந்தது.

இதோ…போய் வாங்கீண்டு வரேன்…..என்று விரைகிறான் பிரசாத்.

சிறிது நேரத்தில் கையில் கூல் ட்ரிங்கோடு வந்தவன்….”இந்தா குடி….சரியாயிடும்…..” என்று நீட்டிக் கொண்டே….அம்மே….இதை நீ சகஜமா எடுத்துக்கோட்டியா என்ன இருந்தாலும் ….அவா பொண்ணப் பெத்தவாளாக்கும் …அப்படித் தான் இருப்பா. நீ மட்டும் போன வருஷம் கௌரியப்  பொண் பார்க்கப் போனப்போ நான் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் சும்மா இருக்காம ஒரு நீளமா லிஸ்ட் போட்டுச் சொன்னியே, இப்போ ஞாபகம் வரதோ ? பத்து பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், பாத்திரம் பண்டம்…சீர் செனத்தி..ன்னு அடுக்கீண்டே போனே…என் முகத்தை ஒரு தடவை மருந்துக்குக் கூட நீ   திரும்பிப் பார்க்கலே….ஏதோ கொள்ளைக் கூட்டக்காரியாட்டமா நீ கெட்டதைப் பார்த்ததும் நேக்கே பகீர்னது.

அவாளுக்கு மட்டும் என்ன குறைச்சல்? எனக்கு சமமா பெண்ணை படிக்க வெச்சிருக்கா….நல்ல இடத்தில் வேலையும் பார்க்கிறாள்…கௌரிக்கு அழகு, அறிவு, அந்தஸ்துன்னு எல்லாத்துலயும் எனக்கு சமானமா  இருக்கும் போது…அவாகிட்டப் போயி நீ காய்கறி மார்கெட்டுல பேரம் பேசறாப்பல பேசியே இருக்கப் படாது தெரியுமோ ? என்ன காலம் மாறினா என்ன, சட்டம் கிட்டம் வந்தாலும் தான் என்ன உங்களை யாராலும் திருத்தவே முடியாது. அதனாலத் தான் நிறைய பேர் இப்போ ஓடிப் போயி காதும் காதும் வெச்சாப்பல மாலையை மாத்தீண்டு வந்து அப்பா அம்மா முன்னாடி ஆசீர்வாதத்துக்கு மட்டும் வந்து நிக்கறா.

பெண்ணைப் பெத்தவா எல்லாரும் உங்களுக்கு கிள்ளுக்கீரையா..என்ன? ஒரு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னா நீங்க இப்படிக் கேட்டா அவா என்ன தான் பண்ணுவா? எல்லாரும் நம்மளைப் போலத் தானேம்மா? அவாத்தில் என்ன பண மரமா நட்டு வெச்சிருக்கா ? நீங்க ஓவியமா ஒரு பிள்ளையைப் பெத்துட்டேள்ன்னு கேட்ட பணத்தை பறிச்சுப் பறிச்சு தர?

அன்னிக்கு நீ கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் கேட்டே பாரு..அதுக்குத் தான் இன்னிக்கு இந்த வரவேற்பு…தானிக்கு தீனி சரிபோயிந்தி….!நீ கொஞ்சம் நேக்கோசரம் பொறுத்துக்கோ அம்மே…நான் எப்படியாவது கெளரியைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனாக்கும் .அதென்னமோ தெரியலை என்னால வேற எந்தப் பொண்ணையும் இனிமேல் எனக்கானவளா நெனச்சுக் கூடப் பார்க்க முடியலையாக்கும். நீ தப்பா எடுத்துக்கப் படாது கேட்டியா. எப்படியாவது கௌரியை நேக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடு. அது போறும் நேக்கு.அதுக்கோசரம் நான் இன்னும் எத்தனை வருஷமானாலும் கூட காத்துண்டு இருப்பேனாக்கும்.

லெமன் கிரஷ் உள்ளே போன தெம்பில் ஒரு “ஹஆ ….ஹஆ” என்று அடித் தொண்டையிலிருந்து  ஏப்பம் விட்டுவிட்டு, பிரசாத்…..நன்னருக்குடா நீ சொல்றது. போதும் போ….இப்பவே அவாத்தில் நமக்கு கிடைச்ச மரியாதையைப் பார்த்தியோன்னோ…? இது போதாதா நோக்கு…! எப்போ நாம ரொம்ப இறங்கிப் போறோமோ அவா நம்ம தலை மேல ஏறி உட்காருவா! அது தெரியாதா? என்னால இனிமேல் அவாத்துக்கு வந்து பேசக் கீச முடியாது. நீ என்ன வேணா பண்ணிக்கோ….அந்த மாமியவாவது ஓரளவுக்கு ஏத்துக்கலாம்….ரொம்ப சாது பாவம்….அவாத்து மாமாவை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது…என்ன ஒரு கர்வம்…பிடிவாதம்….தைரியம்.

..ஆனாலும் பெண்ணைப் பெத்தவாளுக்கு இவ்வளவு அழிச்சாட்டியம் ஆகாதுடா சாமி. அந்த மாமாகிட்ட அந்த மாமி என்ன பாடு  படறாளோ…..பாவம்.

அம்மே…அதப் பத்தி நோக்கென்ன ? நீ ஒண்ணு புரிஞ்சுக்கவே மாட்டேங்கறே. அந்தக் காலத்துல என்னோட அப்பாவாக்கும் உங்காத்துக்கு வந்து உன்னைப்  பொண் கேட்டு  உன்னை  உபாயமா கல்யாணம் பன்னீண்டு வந்தார்ன்னு நீ  அடிக்கடி சொல்லுவியே. அப்போ உங்காத்துக்கு அது எவ்வளவு பெரிய உதவியா இருந்ததுன்னு கூட நீ சொல்லியிருக்கே. இந்தக் காசு பணம் பங்களா எல்லாம் இப்போ வந்தது தானேம்மா…கார்த்தால ஆபீசுக்குப் போன அப்பா மாரடைப்புல  உயிரை விடுவார்னு நீயோ நானோ கனவுல கூட நினைச்சோமா ? எப்பேர்பட்ட இழப்பு அது நமக்கு. பகவான் புண்ணியத்துல அவரோட கவர்ன்மெண்ட் வேலை எனக்குக் கிடைச்சது. அப்பா போயி இந்த அஞ்சு வருஷத்துல நாம ஓஹோன்னு அந்தஸ்துல உசந்துட்டோம் தான்…நான் இல்லேங்கல்லே….ஆனாலும் மனசுல காருண்யம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுண்டு வந்ததை நீ அவாத்தில் அது வேணம் இது வேணம்னு கேட்டபோது தான் புரிஞ்சுண்டேன்.

அன்னிக்கு  நேக்கு ஒண்ணுமே வேண்டாம் உங்காத்து பொண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுங்கோ போதும்னு சொல்ல தைரியம் வரலை. எல்லாம் உன் மேல நான் வெச்சுருந்த நம்பிக்கை தான். அன்னிக்கு நீ தான் பேசிக் கெடுத்தே. இன்னிக்கு அத்தோட பலனைத் தான் நாம ரெண்டு பேருமே அனுபவிக்கறோம். சரி..போட்டும்….நான் அவாளுக்கு ஊருக்குப் போயி ஒரு லெட்டர் போடத் தான் போறேன். எதுல தடை அதிகம் இருக்கோ அதைத் தான் அடைய மனசு அதிகமா ஆசைப் படும்ன்னு சொல்லுவா..அது நிஜம் தான் இல்லையா…?

நீ இப்படி உயிரைக் கொடுக்கற அளவுக்கு அந்த பொண்ணு கிட்ட என்னத்தைக் கண்டியோ நேக்குத் தெரியலை…இப்படின்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கு நான் வாயையேத்  திறக்காமல் இருந்திருப்பேன். ஏதோ …ஆர்வக் கோளாறில் உளறிக் கொட்டிக் கிளறி மூடியாச்சு….உன்னோட பிடிவாதம்…..இப்போ இறங்கி வந்தேன்…இப்போ அவா உச்சாணிக் கொம்புல நிக்கறா. இந்தக் கல்யாணம்  நடக்கும்னு நேக்குத் தோணலை….!

ம்ச் …..நீ உன் திருவாயை வெக்காதே…..! உன்னால முடிஞ்சா…. நேக்கு ஒரு நல்லது நடக்க ஆசைப்பட்டு ஆசீர்வாதம் பண்ணு..அதை விட்டுட்டு நடக்குமா….நடக்காதான்னு……உன்னை இப்போ யாராக்கும்  கேட்டா..? நான் முடிவே பண்ணியாச்சாக்கும் கௌரியாக்கும் உன்னோட மாட்டுப்பொண்ணு…. நானாச்சு….அவாளாச்சு …!

என்னமோ பண்ணுடா….எண்ணம் போல வாழ்வாம்…..உன் எண்ணம் உனக்கு அவளைக் கொண்டு வந்து சேர்த்தால் நானும் தான் சந்தோஷப் படுவேன். பாப்போம்….என்ன நடக்கப் போறதுன்னு….நாம ஒண்ணு  நினைச்சால் தெய்வம் ஒண்ணு  நினைக்குமே.

அப்போ …இந்த விஷயத்துல தெய்வம் நினைக்கறதைத் தான் நானும் நினைக்கறேன்…கௌரி எனக்காக இண்டாக்கப் பட்டவளாக்கும்  கேட்டியா?

போடாப் பைத்தியம்….நீ மட்டும் இதைச் சொல்லீண்டு இருந்தாப் போறாது….புரிஞ்சுக்கோ…எண்டே குருவாயூரப்பா…..இவனுக்கு புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சோ என்னமோ….நீ தன்னே ரக்ஷிக்கணும் …! கிட்டாதாயின் வெட்டென மற….ன்னு சொல்லியிருக்கா….இவன் என்னடான்னா கிட்டாதுன்னு தெரிஞ்சும் அதையே கொண்டுவா….கொண்டுவாங்கறான்…….நான் என்னவாக்கும்  பண்ணுவேன்…? யாராக்கும் இவனுக்கு புத்தி சொல்வா? இவனை இப்படி ஆட்டிப் படைக்கிற அந்த கௌரியை நேக்குத் துளி கூடப் பிடிக்கலை…அப்படி என்ன தான் எழுதி ஒட்டியிருந்ததோ அந்தக் குருவி மூஞ்சில …..இவன் இப்படிக் கிடந்து தவிக்கறான்.அலுத்துக் கொள்கிறாள் பிரசாத்தின் அம்மா.

டெல்லி வந்து சேர்ந்த அன்றே கையோடு தன் மன ஆதங்கத்தை கடிதமாக எழுதி கௌரியின் அப்பாவுக்கு  அனுப்பி விட்டுத் தான் நிம்மதியாக மறுவேலை பார்க்கிறான் பிரசாத்.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கவும், தான் போட்ட கடிதத்துக்கு ஒரு பதிலும் இது வரை வராதது கண்டு விரக்தியில் பிரசாத் மனமுடைந்து போய் எதிலும் ஒரு பிடிப்பே இல்லாமல் இருப்பதைக் கண்டவள்..அன்று  காலை டிபன் நேரத்தில் தட்டில் இட்லியை பரிமாறியபடியே இன்னும் எத்தனை நாள் தான் நானே உனக்கு சமையல் பண்ணி போட்டுண்டு இருக்கறது….நேக்கும் தள்ளலை….காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்காமல்…..நீ இப்படி ஒத்தச் சக்கையா நிற்கறதைப் பார்த்தால் நேக்கு மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா…பிரசாத்….அவா போனா போட்டும்….நான் வேற வரன் பார்க்கறேன்….நோக்கென்ன குறைச்சல்…? நீ அந்தாத்துக்கு மாப்பிள்ளையாக் கிடைக்க அவாளுக்குக் கொடுத்து வெக்கலையாக்கும்…..அவாளை மறந்து போ…! இனிமேல் நோக்கு அவாளோட சங்காத்தமே வேண்டாம் , நான் அம்மா , சொன்னாக் கேளு.

அதல்லா…..நான் இவ்வளவு தெளிவா கடிதாசி போட்டும் அவாளுக்குப் புரியலைன்னா எப்படியாக்கும் அது ? ஒரு வரி….பதில் போட்ருக்கலாமே….! இட்லியை விண்டு சட்னியோடு சேர்த்து வாயில் போட்டபடியே சொல்கிறான் பிரசாத்.

இதுலயே தெரிஞ்சுக்கோ அவாளோட புத்திய….என்றவள்…உன்னை இந்த நிலையில் என்னால பார்க்க முடியாது…..பேசாம இன்னொரு பொண்ணைப் பார்த்து நான் வேகம் உன்னோட கல்யாணத்தை முடிக்கத் தான் போறேனாக்கும். நீ என்ன வேண்டாங்கறது.

அதொண்ணும் என்கிட்டே நடக்காது. இனி நீ யாரையும் பார்க்கண்டாம். நேக்கு கல்யாணமும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்… அருகில் இருந்த டம்பளர் தண்ணீரை அப்படியே எடுத்து தட்டில் கொட்டி கையைக் கழுவிக் கொண்டு கோபத்தோடு கையை உதறியபடியே  எழுந்து போகிறான் பிரசாத்.

என்னடா கோபம்….இப்போ உனக்கு? எதுவாயிருந்தாலும் எங்கிட்டக் காமி…போயும் போயும் அன்னத்துவேஷம் பண்ணி  சாப்பாட்டில் உன்னோட கோபத்தைக் காண்பிக்காதே …..என்னைச் சொல்லணும், நீ பாதி சாப்டுண்டு இருக்கும் போது நான் தான் அதுகளைப் பத்தி பேச்சை எடுத்தேன்….வாடா…வந்து உட்கார்ந்து சாப்ட்டுட்டுப் போ.

நான் ஒண்ணும் சாப்பாட்டில் என் கோபத்தைக் கோவிச்சுக்கலை…..நேக்கு எறங்கலை …..மனசு வேதனிக்கறது….புரிஞ்சுக்கோ…..என்று சொல்லிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்று முகத்தில் சளக்…சளக்… என்று தண்ணீரை வாரி அடித்துக்  கொண்டிருக்கும் போதே……அடுக்களையிலிருந்து தடா தடாலென்று பெரிய சத்தத்தோடு பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று  சேர்ந்து மோதி உருளும் சத்தம் கேட்கவும்……

அம்மே….அம்மே….என்னாச்சு அங்கே ? கேட்டுக் கொண்டே பதற்றத்துடன்  பிரசாத் விரைந்து வந்து பார்க்கும் போது , அடுக்களைக்குள் கால் வழுக்கியோ, எப்படியோ, அவனது அம்மா கீழே விழுந்து மயங்கிக்  கிடந்தாள்…..வேகமாக தன் இரு கைகளாலும் அம்மாவை அவன் தூக்கித் திருப்பும் போது……தலையில் அடிபட்டதற்கான அறிகுறியாக நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பிரசாத்தின் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. மனசு பூரா ஹாஸ்பிடல்,டாக்டர்,மருந்து, எண்டே அம்மே ….அம்மே…..அம்மே…எண்டே அம்மையாக்கும் …என்று அலறிக் கொண்டிருந்தது…..அத்தனை நேரம் அவனது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்த கௌரி எங்கோ பின்னால் தள்ளப் பட்டு மறைந்து போனாள். பிரசாத் சூழ்நிலைக் கைதியானான்.

கண்ணாடி முன்பு நின்று உதட்டில் லிப் க்ளாஸை தடவிக் கொண்டே உதட்டைக் குவித்து அப்படியே தனக்குப் பிடித்த ஒரு பாடலை

“ஐசி திவானிகி ……தேகி நஹி கஹின்…..மேனே……இசிலியே ….ஜானே ஜானா…. தீவானா….தேரா நாம் ரக்தியா…..ஆ…..நாம் ரக்குதியா….!”

இதமாக விசிலடித்தபடியே வெளியே வரும் மகளைப் பார்த்த சித்ரா……” ஏண்டி நோக்கு எத்தனை தடவை சொல்றது…..இப்படி ஆம்பளையாட்டமா விசிலடிக்காதேன்னுட்டு…..தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்…..போற இடத்தில் எங்களைத் தான் கோச்சுப்பா……பொண்ண வளர்த்த லட்சணத்தைப் பாருன்னு….”

ஆரம்பிச்சுட்டியா உன்னோட பிலாக்கணத்தை…..என்னை நீ சுதந்திரமாவே விடமாட்டியா….? நான் என்ன செஞ்சாலும் கூடவே வந்து  ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சுச் சொல்லாட்டா   நோக்குப் பொழுதே போகாதே….என்று எதையோ தேடிக் கொண்டே  சித்ரா இவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும்

“மேரா நசீப் ஹைன்…..ஜோ மேரே யார் மேய்ன்….ஹஸ்கே….ப்யார் ஸே..பேக்குஃபீ மேன் தீவானா…..மேரா நாம் ரக்குதியா……ஆ நாம் ரக்குதியா….!
என்று சத்தமாகப் பாடிக் கொண்டே  அங்கும் இங்கும் வேகமாக நடந்து கொண்டிருந்தாள் கௌரி. “இந்தாத்துல வெச்சது வெச்ச இடத்தில் இருக்காது…..எப்பப்பாரு…..தேடித் தேடி தான் எடுக்கணும்…..அதுக்குள்ள எங்க தான் கால் முளைச்சுப்  போகுமோ தெரியலை….” என்று சலித்தபடியே சொல்லும் கௌரியைப் பார்த்து…

ஆமா…இப்போ இப்படி அவசர அவசரமா எதையாக்கும் தேடறே….?

நான் சொன்னாப்பல உடனே எடுத்து நீ கையிலே கொடுத்துடப் போறியாக்கும்….! இன்னும் வேகமாக விசிலடிக்கிறாள் கௌரி.

அந்த நாராசத்தைக் கொஞ்சம் நிறுத்தேண்டி ……காது ஓட்டையாறது ……அமைதியாத் தேடு கிடைக்கும். இப்படி அரக்க பரக்க ஓடினா ஒண்ணும் கிடைக்காது…மகளைப் பார்த்து நையாண்டியாக சொல்லும் அம்மாவைக் கண்ணால் ஒரு முறை விட்டபடியே…….நானே நாழியாச்சுன்னு அவதிப் படறேன்…..இதுல நீ வேற……நேக்கு…!

ஆமா…..இந்தப்பா எங்கயாக்கும் போயிருக்கார் இந்தக் காலை வேளைல ….வாக்கிங்கா? அதும் இத்தனை நேரமா? என்றவள் எதையோ கண்ட திருப்தியில்…..இதோ இங்க நீட்டீண்டு இருக்கு…என்னோட ஐடி கார்ட் ரோப்…! இதைத் தான் இத்தனை நேரமாத் தேடிண்டு கெடந்தேன்….என்று இழுத்தவள் அத்தோடு சேர்ந்து ஒரு புத்தகமும் கையோடு வர…..ஆஹா……படிக்கிற கதை புத்தகத்துக்கு என்னோட ஐ டி கார்டு தான் புக் மார்க்கா கிடைச்சுதா இந்த அப்பாவுக்கு….நல்லவேளை இங்க வந்து தேடினேன்……இவரை என்ன செய்தால் தேவலை….அம்மா இங்க பாரேன்…..இந்த அப்பாவை….”தான் படிஞ்சுண்டு இருக்கற கதைக்கு என்னோட ஐடி கார்டை எடுத்து புக் மார்க்கா வெச்சுருக்கார்….என்று சொல்லிக் கொண்டே அதை இழுத்து  எடுத்துவிட்டு புத்தகத்தை தூக்கி அந்தப் பக்கமாக கீழே போடவும் அதிலிருந்து ஒரு கவர் தனியாக விழுந்தது.

ஐடி கார்டை தன்  கழுத்தில் மாட்டிக் கொண்டபடியே  புத்தகத்திலிருந்து வெளியே விழுந்த அந்தக் கவரைக் கையிலெடுத்துப் எங்கேர்ந்தாக்கும்  இந்தக் கடிதம்? அப்பாவுக்கு யாராக்கும்  எழுதி இருக்கா? என்று பார்க்கவும்…அதில் ஃப்ரம் பிரசாத், டெல்லி…..என்று இருந்ததைப் பார்த்ததும்….ஆச்சரியத்துடன் இவராக்கும் போன வருஷம் என்னைப் பார்த்துட்டு அத்தக் கொண்டா இத்தக் கொண்டான்னு ஒரு பட்டியல் போட்ட பார்டி…..என்று மனசுக்குள் எண்ணியபடியே, உள்ளிருந்து கடிதத்தை எடுத்துப் பிரிக்கிறாள் கௌரி. பத்து நாட்கள் முன்பு வந்திருந்த கடிதம் தனக்குத் தெரியவில்லையே…என்ற குழப்பத்தோடு….அப்படியே
“அம்மா…..அந்த டெல்லிக் காரார் கடிதம் போட்டிருக்காரே…..உனக்காவது  தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அம்மா சித்ராவின் அருகில் சென்று நீட்டுகிறாள் கவரை….கடிதம் மட்டும் கௌரியின் கரங்களில்.

அப்பா இப்படி ஒரு ரகசியப் பேர்வழியா ? பிரசாத் கடிதத்தை  மூடி  மறைத்து  என்ன கலாட்ட செய்றார் ?   அப்பா எனக்கு அப்பாவா? வில்லனா ?
இருந்தாலும் எனக்கு முன்னாடி அப்பாவியா நிற்பாரே…..!

ம்ஹும்……நேக்குத் தெரியாதே…..என்று ஆச்சரியத்துடன் கேட்ட சித்ரா   இது எப்ப வந்தது..? என்றபடியே எங்கிட்டத்தா… அந்த லெட்டரை நான் படிக்கட்டும்……என்று கௌரியைப் பார்த்து கேட்கவும்.

தந்தால் மட்டும் படிச்சுடுவியாக்கும்……எல்லாம் இங்கிலிஷில் எழுதியிருக்கார் …நானே எதேச்சையாய் இப்பத்தான் கண்டெடுத்தேன்….இன்னும் என்னெல்லாம் மறைஞ்சுண்டு இருக்கோ? என்றவள் கடிதத்தை மடித்து தனது கைபையில் போட்டுக் கொள்கிறாள் …வாசலில் காரின் ஹாரன் ஒலி கேட்கவும்….”மா….நான் கிளம்பறேன்…..சாயந்தரமா பேசலாம்” அப்பாட்ட இதைப் பத்தி நீ மூச்சுக் காட்டாதே……சொல்லிக் கொண்டே தனது ஷூவை மாட்டிக் கொண்டு வெளியேறுகிறாள் கௌரி.

கொஞ்ச நாளாவே இவரோட போக்கும் முகமும் சரியில்லையேன்னு நான் நினைச்சு  பயந்தது சரியாத்தான் இருக்கு. அந்த டெல்லிக்காரா என்னவோ லெட்டர் போட்டு இவரைக் கன்னாப் பின்னான்னு திட்டியிருப்பாளோ ..அதான் இவர் முகத்தில் ஈயாடலை. லெட்டர் வந்ததையே யார்ட்டயும் சொல்லலை. எங்கிட்ட கூட சரியாப் பேசலையே…இன்னைக்கு கார்த்தால போகும்போது கூட நாம நினைக்கறதெல்லாம்மா நடக்கறது…..ஈஸ்வரோ ரக்ஷதோ…ன்னு சொல்லிட்டு வெளிய போனவர் உடனே உள்ளே வந்து…கொஞ்சம் வெள்ளம் கொடேன் சித்ரான்னு கேட்டு தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு போனார். நான் கூட சகுன தடையோன்னு நினைச்சேன். அவர் மனசுக்குள்ள இந்தக் கடிதம் ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்குமோ….கௌரி வேற அப்பாட்ட இதைப் பத்தி மூச்சு விடாதேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா….சாயந்தரம் வரைக்கும்…..என்னால தாங்குமா தெரியலை…அவர் வரட்டும்….ரகசியமாக் கேட்டுக்கலாம்…என்று தனக்குள்ளே சமாதானமாகிறாள் சித்ரா. அப்போது பார்த்து டிவி சீரியலில் ஐந்தாறு பெண்கள் அமர்ந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த காட்சி ஓடிக்கொண்டிருந்தது……நேரங்கெட்ட நேரத்துல இது வேற….எப்பப்பாரு வீட்டுல ஒப்பாரி சத்தம் தான்…என்ன எழவு சீரியல் எடுக்கறாங்க…பீத்தாராண்டி சீரியல் என்று கோபம் வந்தவளாக எழுந்து டிவியை அணைத்துவிட்டு வாசல் கதவை மூடச் செல்கிறாள்.

காருக்குள் ஏறி அமர்ந்ததும் அதீத ஆவலுடன்…அப்படி என்ன தான் எழுதி இருக்கும் இந்தக் கடிதத்தில்….என்று எண்ணியவளாக கைப்பையிலிருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கிறாள்  கௌரி. கடிதம் அழகான ஆங்கிலக் கையெழுத்தில் எழுதப் பட்டிருந்தது.

மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு,

நமஸ்காரம்.

அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது தான். எனக்காக என் அம்மாவை மன்னியுங்கள். அவர்கள் சென்ற முறை நாங்கள் பெண் பார்க்க வந்திருந்த போது
எனது விருப்பம் அறியாமல் அவர்களாகவே அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அது இன்னும் தங்களின் மனதை விட்டு அகலவில்லை என்று புரிந்து கொண்டோம்.

அதனால் தான் நான் இந்த முறை…டௌரி எதுவும் கேட்கக் கூடாது என்று என் அம்மாவிடம் பேசி அழைத்து வந்தேன். அதற்கு காரணம் நான் உங்கள் மகள் கௌரியை மிகவும் நேசிக்கிறேன்.

யாரையும் பிடிக்காமல் போவதற்கு மட்டும் காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் ஒருத்தரை பிடித்துப் போவதற்குச் சொல்லக் காரணங்கள் இருக்காது.
அந்த விதத்தில் எனக்கு உங்கள் மகள் கௌரியைப் பார்த்ததும், அவளிடம் எதுவும் பேசாமலேயே அவளை மிகவும் பிடித்துப் போனது. எனது திருமணத்திற்காக நான் அம்மாவுடன் வந்து பார்த்த முதல் பெண் அவள். கௌரி என் வாழ்வின் துணையாக இருந்தால் நான்  மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்வேன். அந்த எண்ணத்தோடு தான் நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வந்தோம். ஆனால் உங்களுக்குத் தான் என் மனம் புரியவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி என்று புரிந்து  கொண்டேன்.

எங்களின் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு மட்டும் கோர இயலும்.  மன்னியுங்கள். எங்களின் மனங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

எதுவுமே முடிவு இல்லை. அது போலவே எந்த முடிவிலிருந்தும் ஒரு ஆரம்பம் உருவாகலாம்.

உங்களிடமிருந்து என் வாழ்வின் ஆரம்பமாக பதில் கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்போது என் வாழ்கையின் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது.

கெளரியிடம் என் அன்பைச் சொல்லவும்.

இப்படிக்கு
அன்புடன்
பிரசாத்.

கடிதத்தைப் படித்து முடித்ததும்……ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அறியாமல் திக் கென்று உள்ளுக்குள் உறைந்து அமைதியானாள் கௌரி.

பிரசாத்துக்கு பதில் கடிதம் என்ன எழுதலாம் என்று யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராக, சரி இன்னைக்கு வாக்கிங் போயிட்டு அங்கேயே உட்கார்ந்து விபரமா ஒரு பதிலை எழுதி அப்படியே போஸ்ட்ல போட்டுட்டு வந்துடலாம். என்றெண்ணியவராக மறக்காமல் பேப்பர் பேனாவுடன் கிளம்பினார் ஈஸ்வரன். நடக்கும் போதெல்லாம் எதை எப்படி எழதலாம் என்ற யோசனையோடு வழியைக் கடந்து கொண்டிருந்தார்.

அமைதியான இடத்தைத் தேடி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிரசாத்துக்கு கடிதம் எழுதி முடித்து விட்டு. வழக்கமாக வாக்கிங் போகும் வழியைக் கடந்து அருகிலிருந்த போஸ்ட் பாக்ஸில் கடிதத்தைச் சேர்த்து விட்டு “ஈஸ்வரோ ரக்ஷதோ….! எதுவுமே நம்ம கையில் இல்லை….எல்லாம் விதிப்படி நடக்கட்டும் என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே நிம்மதியுடன் திரும்பும்போது…..சந்துக்குள்ளிருந்து வேகமாக வந்த தண்ணிலாரி ஒன்று ஈஸ்வரனை இடித்துக் கீழே தள்ளி அதுவும் பத்தாதது போல பின் சக்கரத்தையும் அவர் மேல் ஏற்றி நின்றது.

ஈஸ்வரன் துவண்டு விழுந்து இறுதியாகத் துடித்து துடித்து துடிப்பு அடங்கிக் கொண்டிருந்தார்.

அதே சமயத்தில்,  க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈச்ச்….! என்று எதிர்பாராமல் ப்ரேக் போட்டு நின்றது கார். சுற்றிலும் மற்ற வண்டிகளும் நின்றுவிட……நிமிடத்தில் கூட்டம் ரோட்டை அடைத்துக் கொள்ள……கௌரி அலுத்துக் கொள்கிறாள்….”என்னாச்சுப்பா....?” என்று டிரைவரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு தன கைப்பையில் பத்திரமாக மடித்து வைத்துக் கொள்கிறாள். மனசு மட்டும் “அப்பா….ஏன் இந்த விஷயத்தை என்னிடம் மறைத்தார்?” என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

எதோ விபத்து போலத் தெரியுதும்மா…….தண்ணிலாரி நிக்குது…..அதுக்குக் கீழ தான்…..யாரையோ தூக்கிருச்சு போல……பொறம்போக்குப் பசங்க ஒழுங்கா ஓட்ட மாட்டானுங்க….தண்ணியப் போட்டுட்டு தண்ணி லாரி ஒட்டுனா வேற எப்படி போவும்.?…அவனும் தூக்கீட்டு நடக்கிறவங்களையும் தூக்கீடுவானுங்க……பரதேசிங்க அதுக்குள்ளார எங்கிட்டிருந்து தான் இம்புட்டு கூட்டம் வந்து சுத்தி வளைக்குமோ ….என்று சொல்லிக்கொண்டே பெரிதாக ஒரு ஹாரன் அடிக்கவும்.

ஹாரன் அடிச்சாப்புல போயிடுவியாக்கும்….ஒரு உசுரு அங்க ஊசலாடிக்கிட்டு கெடக்குது…..ஒனக்கு இன்னாத்துக்கு அவசரம் ?.இம்புட்டுப் பேரு நிக்கிறோமுல்ல…..வெளியிலிருந்து .ஒரு குரல் ஜன்னல் வழியாக டிரைவரைப் பார்த்துக் கேட்டது.

கௌரி மீண்டும் அந்தக் கடிதத்தை தனது கைப்பையிலிருந்து எடுத்து பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

ரோட்டில் ஒரே சல சலப்பு……போலீஸ்காரர்கள் ……எங்கிருந்தோ எண் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கு விரைந்து வந்து தண்ணி லாரியின் அடியில் அடிபட்டுக் கிடந்த கௌரியின் அப்பா ஈஸ்வரனைத் ஸ்ட்ரெக்சரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து ஹாரன் அடித்தபடியே கிளம்பி விரைந்தது.

அந்த சப்தத்தைக் கேட்ட கௌரி தன்னையறியாமல் நடந்தது எதுவுமே தெரியாமல் ” இப்போ இங்கே  அடிபட்டவருக்கு உயிருக்கு எந்த ஆபத்துமில்லாமல்  அவரைக்  காப்பாத்திடு ஆண்டவா.”…என்று மானசீகமாக வேண்டிக் கொண்டாள் .

(தொடரும்)

Series Navigationஆனந்தயாழ் – தங்கமீன்கள்துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஜெயஸ்ரீ ஷங்கரின் “டெளரி தராத கௌரி கல்யாணம் ” சுவையாகவே தொடர்கின்றது.

    பிரசாத்தின் தாய், கெளரியின் தாய் என அங்கும் இங்குமாக அவர்களின் ம்னநிலையை விவரித்துள்ள விதம் நன்று, பாவம் ஈஸவரன் -அவரின் விபத்தும் மரணமும் எதிர்ப்பாராததுதான்!

    கெளரி கடிதத்ததைப் படித்தபின் என்ன பதில் தருவாள் என்ற ஆவலைத் தூண்டிவிட்டு கதையைத் துண்டிதுள்ளார் கதாசிரியர்….பொறுத்திருந்து பார்ப்போமே …வாழ்த்துகள்!………….டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    திருப்பு முனைகளுடன், சுவையாக, விறுவிறுப்பாக நகர்கிறது. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *