தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 7 in the series 14 ஜூன் 2020

            வலைய வாளார மீதுதுயில விடாததான் மான

                  மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி

            அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக

                  அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே.              [111]

[வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]

      வளைந்து சுருண்டிருக்கும் அரவுப் படுக்கையில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் வைஷ்ணவியாகவும், பிறைச்சந்திரனைச் சூடிய சடாமுடி உடைய சிவபெருமானின் இடை மடியில் இனிதாக உறங்கும்  திகழ்கிறார் காளிதேவி.

=====================================================================================                            

             போர்பன தீம்புகையோ புராதனர் ஓமப்புகையோ!

            ஆர்ப்பன பல்லியமோ! அந்தர துந்துமியுமே.                 [112]

[போர்த்தல்=கவிந்திருத்தல்; புராதனர்=பழமையோர்; ஆர்ப்பு=முழக்கம்; பல்லியம்=பல இசைக்கருவிகள்; துந்துபி=ஒரு வாத்தியம்]

      காளிதேவியின் திருக்கோயிலைச் சூழ்ந்து கவிந்திருப்பது வழிபட வந்த பக்தர்கள் இட்ட நறுமணப் பொருள்களின் பகையோ? வழிவழியாய்ப் பழமையோர் செய்யும் வேள்வியின் புகையோ? திருக்கோயிலில்  முழங்குவது பலவகை வாத்தியங்களின் ஒலிகள் மட்டுமன்று; தேவர் உலகத்துத் துந்துபி என்னும் பேரிகையின் முழக்கமாகும்.

=====================================================================================                  

             பரவுவன யாமளமோ! பதினெட்டுப் புராணமே!

            விரவுவன பூதமோ! விண்முதல் ஐம்பூதமே.              [113]

[பரவுவன=பணிவன; யாமளம்=உமை வழிபாட்டு நூல்கள்; விரவுவன=பொருந்தி உள்ளன; பதினெட்டுப் புராணங்கள்=பிரமம்; பதுமம்; வைணவம்; சைவம்; பாகவதம்; நாரதீயம்; மார்க்கண்டேயம்; ஆக்கினேயம்; பவிடியம்; பிரம கைவர்த்தம்; இலிங்கம்; வராகம்; காந்தம்; வாமனம்; கூர்மம்; மச்சம்; காருடம்; வாயவியம்;]

      உமாதேவியைப் போற்றிப் பாடுவன, துதிப்பன, பரவிப் பணிவன அவரைப் பற்றிய வழிபாட்டு நூல்கள் மட்டுமன்று; பதினெட்டுப் புராணங்களுமாகும். தேவியின் திருக்கோயிலைப் பொருந்தி நிற்பன பூத கணங்கள் மட்டுமன்று; பஞ்சபூதங்களும் ஆகும்.

=====================================================================================

             ஆடுவன தோகையோ! அயன்ஊர்தி அன்னமுமே;

            பாடுவன பூவையோ! கின்னரங்கள் பலவுமே.             [114]

[தோகை=மயில்; அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; பூவை=நாகணவாய்ப்புள்; கின்னரம்=இசைக்கும் தேவர் உலகு சார்ந்த பறவை]

      தேவியின் திருக்கோயிலில் ஆடுவது முருகப்பெருமானின் வாகனமான மயில் மட்டுமன்று; பிரமனின் வாகனமான அன்னமும்தான்; அங்கே இசைத்துக் கொண்டிருப்பன நாகணவாய்ப்பறவைகள் மட்டுமல்ல; தேவருலகப் பறவையான கின்னரங்களும்தாம்;

=====================================================================================

             வனமலரே பூமாரி! வானக் கற்பகமலரே;

            கனசலமோ அபிடேகம்; கடவுள் கங்காசலமே.           [115]

[கனம்=மேகம்; சலம்=மழைநீர்; அபிடேகம்=திருமுழுக்கு]

      தேவியின் மீது பூமழையாகப் பெய்ய்யும் மலர்கள் இங்கு நந்தவனத் தோட்டத்தில் பூத்த மலர்களா? இல்லை; வானுலக்த்தில் இருக்கும் கற்பகமலர்கள். தேவியை  திருமுழுக்கு நீராட்டச் செய்வது மழைமேகம் சொரியும் நீரா? இல்லை; சிவபெருமானின் தலைமுடியிலிருந்து வரும் கங்கை நீராகும்.

=====================================================================================

            வயங்கு குழை மதியமோ! வாள் இரவிமண்டலமே

தயங்கு கவுத்துவமோபூண்! தனிச்சோதிக்கரமே.           [116]

[வயங்கு=விளங்கும்; குழை=காதணி; மதி=சந்திரன்; இரவி=சூரியன்; கவுத்துவமணி=விரும்பியதைத்தரும் சிந்தாமணி; சோதிச்சக்கரம்=துருவ மண்டலம்]

தேவியின் காதில் அணிகலனாக விளங்குவது சந்திரமண்டலம் மட்டுமா? இல்லை; சூரிய மண்டலமும்தான். அவர் மார்பில் அணிந்திருப்பது கவுத்துவமணி எனப்படும் சிந்தாமணி மட்டுமா? இல்லை துருவமண்டலமும்தான்.

====================================================================================

       சார்த்துவன கோசிகமோ! தனிபேழைத் தமனியமே!

       ஆர்த்துவன அறுசுவையோ! அந்தமிலா அமுதமே.       [117]

[சார்த்துதல்=சூட்டுதல்; கோசிகம்=உயர்ந்தவகைப் பட்டு; தமனியம்=பொன்; ஆர்தல்=அருந்துதல்; அந்தமிலா=முடிவில்லாத]

      தேவிக்கு சூட்டப்படுவது உயர்ந்த பட்டாடைகள் மட்டுமல்ல; தனிப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட பொன்னாலான புத்தாடைகளும் தாம். தேவி அருந்த நிவேதனமாகப் படைக்கப்படுவது அறுசுவை உணவு மட்டுமன்று. என்றும் முடிவே இல்லாத, சாகாமல் நிலையான வாழ்வளிக்கும் அமுதமே,

=====================================================================================

                          [தக்கயாகப் பரணி தொடர்ச்சி]

                   கொடும் புரிசை நேமியோ! கொற்றப் போர் நேமியே!

                  இடும் திலகம் மான்மதமோ! எண்திசைய மான்மதமே.   [118]

[திசை=மதில்; நேமி=சக்கரம்; கொற்றம்=அரசு; மான்மதம்=மானிலிருந்து எடுக்கப்படும் கஸ்தூரி; மான்=யானை]

      தேவியின் திருக்கோயிலைச்சுற்றி உள்ள மதிலைச் சக்கரவாளகிரி என்று சொல்லலாமா? இல்லை; அது அவளின் ஆணைச்சக்கரம். தேவியின் நெற்றித் திலகம் கஸ்தூரியோ? இல்லை எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளின் மதமாகும்.

=====================================================================================                  அடிச்சூட்டு நூபுரமோ! அரணங்கள் அனைத்துமே.

                  முடிச்சூட்டு முல்லையோ! முதற்கற்பு முல்லையோ.     [119]

[நூபுரம்=சிலம்பு; அரணம்=வேதம்; முல்லைக்குக் கற்பு என்னும் பொருளும் உண்டு]

      காளி தேவியின் திருவடிகளை அணிசெய்வது சிலம்புகள் மட்டும்தானா? இல்லை; வேதஙக்ள் எல்லாமே. அவர் திருமுடி சூடுவது கொடிமுல்லைப் பூ மட்டுமா? இல்லை. உயர்குணமாகிய கற்பாகும்.

====================================நிறைவு=========================================

             பேய்களைப் பாடியது

காளி தேவியைப் போற்றித் துதித்த தேவர் உலகத்துப் பெண்கள் அத்தேவிக்கு ஏவலர்களாக உள்ள பேய்களைப் பாடியதைச் சொல்லும் பகுதி அது.

============================================================================

      எல்லைநான் மறைபரவும் இறைமகளைச் சிறிதுரைத்தாம்

      தொல்லை நாயகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம்.      [120]         

இதுவரை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் போற்றும் தேவியின் புகழை நம்மால் முடிந்தவரை விரிவாக உரைத்தோம். இனி மிகப்பழமையான தேவியின் படைக்கலங்களான பேய்களைப் பற்றிச் சொல்லுவோம்.

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 3ஒளிவட்டம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *