தண்ணி மந்திரம்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 22 of 23 in the series 16 ஜூன் 2013

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்)

(70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு யாருமல்ல;அப்போது இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த என் இனிய தாயார்- அமீனா அஹ்மத்.மிக அண்மையில் தான் அந்தப் பழைய பத்திரிகையில் அவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது.அதன் பிறகு தொடராக அவர் எதையும் எழுதவில்லை என்பது துயரம் தந்தாலும் மீண்டும் இப்போதும் எழுத ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையை அவரது நேர்த்தியான மொழிக் கையாள்கை தருகிறது.

சமீலா யூசுப் அலி)

சல்மாவுக்கு காலெல்லாம் கொப்புளம்.டொக்டராவது ஆஸ்பத்திரியாவது? என்ன பீபி தாத்தாவுக்கு தெரியாத வைத்தியமா? நாடி பிடிக்காமலே அவவுக்கு விஷயம் எல்லாம் விளங்கிப் போய்விட்டது.அதாவது கண்ணூறு.

இந்த நோஞ்சான் சல்மாவுக்குப் பார்த்துத் தான் ஊரில் யாரும் கண்ணூறுப் பட வேண்டுமா? அவர்களுக்குக் கண்ணூறுப் பட்டுக் கொண்டிருப்பது தவிர வேறு வேலையே கிடையாதா, இதெல்லாம் கேட்டு பீபி தாத்தாவிடம் தப்பித்துக் கொள்ள முடியுமா? ஹாசிம் லெவ்வையிடம் ஒரு முட்டித் தண்ணீர் மந்திரித்துக் கழுவிப் போட்டு விட்டால் எல்லாம் சரியாப் போய்விடும் என்று ஒரே தீர்மானமாகக் கூறி விட்டா பீபி தாத்தா.

தண்ணி மந்திரிக்கிறதென்றால் இக்கால இளவட்டங்களுக்கு ஏதோ லேசு மாசான விஷயம் என்று தான் படும்.அதிலிருக்கின்ற சாத்து மாத்துக்கள், நுணுக்கங்கள் பீபி தாத்தாவுக்கல்லவா தெரியும்.தண்ணி மந்திரிக்கிறதென்றால் அதற்கு வெறும் கிணற்றுத்தண்ணீர் சரி வராது.பள்ளி வாசல் ஹவ்லில் தண்ணீர் எடுக்க வேண்டும்.அதுவும் அவ்வல் சுபஹிலே எடுக்க வேண்டும்.அது மட்டுமல்ல எடுக்கும் போது யாரோடும் ஒரு வார்த்தை மறந்தும் கதைக்கக் கூடாது. எனவே பீபி தாத்தா அதிகாலை 4 மணிக்கே நித்திரை விட்டெழுந்து பள்ளி வாசல் நோக்கிப் புறப்பட்டா.

கன்னங்கரிய இருட்டுக்குள்ளே அதுவும் கபுறுக்காட்டைத் தாண்டி பள்ளி ஹவ்லுக்குப் போவதென்றால் லேசான காரியமல்ல.இடையிடையே என்னென்ன பழைய ஜின் சைத்தான்கள் இருக்குமோ. இதை நினைக்கும் போது என்னதான் முரட்டுத் தைரியமுள்ள மனுஷியாயினும் பீபி தாத்தாவுக்கும் கொஞ்சம் நெஞ்சு ‘படக்கு’ என்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது.எதற்கும் இரும்பு கையிலிருந்தா ஒன்றும் நெருங்காது என்று சொல்லுவாங்க என்று ஒரு கையில் பேய் விரட்டக் கத்தியும் மறு கையில் செம்பு முட்டியுமாக வெளியே புறப்பட்டு விட்டா பீபி தாத்தா

 

தொழும் பழக்கம் பெரும்பாலும் இல்லாதபடியால் பீபி தாத்தாவுக்கு இவ்வளவு நேரகாலத்தோடு எழும்பிய அனுபவம் இல்லை.அத்தோடு கும்மிருட்டும் சேர்ந்து கொள்ளவே காற்றில் அசையும் ஒவ்வொரு புதரும் சிறகடித்துப் பறக்கும் ஒவ்வொரு வெளவாலும் அவவுக்கு ஜின்களாகவும் சைத்தான்களாகவுமே காட்சியளித்தன. எனவே என்றுமில்லாதவாறு அரையும் குறையுமாகப் பாடமுள்ள அத்தனை குர் ஆன் வசனங்களும் ஆச்சரியத்தக்க விதமாக பீபி தாத்தாவுக்கு ஞாபகம் வந்தன.அவை உரத்த சப்தங்களாக வெளிப்படவே இனந்தெரியாத சிறு பிராணிகள் பயந்து அங்குமிங்கும் ஓடத்தலைப்படவே மேலும் பல வசனங்களை ஓத வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

பள்ளியினுள்ளே இருந்த லாந்தர் விளக்கின் ஒளி ஹவ்லைச் சுற்றியிருந்த இருட்டை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தது.அப்பாடா ! ஒருவாறு கஷ்டப்பட்டு வந்து விட்டோம் என்று ஹவ்லோரம் போக காலைத் தூக்கி வைத்தாவோ இல்லையோ அவ்வளவு தான்.பீபி தாத்தாவின் சப்த நாடிகளும் அடங்கி விட்டன.ஹவ்லின் கடைக்கோடியில் குந்திய நிலையில் ஓர் உருவம்.இவ்வளவு ஓதல்கள் ஓதியும் ஒன்றும் பயன் தராமல் போய்விட்டதே.யாரோ பில்லி,பிசாசுகளை ஏவி விட்டிருக்கிறானோ தெரியாது.எதற்கும் ஹாசிம் லெவ்வையிடம் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே.சரி எதற்கும் இப்போது திரும்பிப் போகவும் முடியாது.என்ன செய்ய, வருவது வரட்டும் என்று பேய் விரட்டும் கத்தியை வேகமாக ஆட்ட ஆரம்பித்தா பீபி தாத்தா.

இதற்கிடையில் ;யாரு மோதினாரா’ என்ற சப்தம் அவ்வுருவத்திலிருந்தே கிளம்பியது.

முகிதீன் ஆண்டவருடைய காவல்.நல்ல காலம்.குரலிலிருந்து குந்தியிருப்பது சாட்சாத் ஹாசிம் லெவ்வையவர்களே என்று அறிந்த பீபி தாத்தா, முகிதீன் ஆண்டவருடைய பறகத்து,விஷயம் இவ்வளவு எளிதில் முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டே முன்னே நகர்ந்தா.பேசினாற் தான் காரியம் பழுதாய்ப் போய்விடும்.

ஹாசிம் லெவ்வை என்றால் ஊரே கலங்கி நிற்கும்.பேய்,பிசாசு,ஜின்,சைத்தான் ஒன்றும் அவரிடம் வாலாட்ட முடியாது என்பது மட்டுமல்ல எந்தக்காட்டிலுள்ள ஜின் சைத்தானையும் சிண்டைப் பிடித்து ஏவி விட்டு எந்த வேலையையும் அவர் செய்து விடுவார் என்பது ஊரவரது நம்பிக்கை.ஊரில் பெரிய பெரிய வியாதிகளுக்கு மட்டுமல்ல. சிறு தடிமற் காய்ச்சலுக்குக் கூட அவரிடம் போய் ஒரு காரியம் பார்த்து விட்டு அப்புறம் தான் ஆஸ்பத்திரி டொக்டரெல்லாம்.எனவே, பள்ளி வாயல்,கபுறுக்காடு முதலிய பயங்கரப் பிரதேசங்களில் இரவில் அகால வேலைகளில் உலவி, தனது அச்சமினமையையும் பேய் பிசாசின் மீதுள்ள ஆதிக்கத்தையும் ஊரவருக்கு எடுத்துக் காட்டுவது ஹாசிம் லெவ்வையின் வழக்கம்.அதன்படி தான் அன்றும் ஸுபஹுக்கும் முன்னே யாரும் வராத வேளையில்  பள்ளியில் நுழைந்து,ஊர் முழங்க கனைத்தல் இருமல்களோடு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வுழு எடுக்கக் குந்தியிருந்தார்.

இந்நிலையில் யாரோ மெல்லடி வைப்பது கேட்டுத்தான் யார் மோதினாரா என்றார். ஆனால் பதில் வராது போகவே கொஞ்சம் உற்றுப்பார்த்தார். என்ன? உருவத்தைப்பார்த்தால் ஏதோ கொஞ்சம் வித்தியாசமான தோற்றம் போல இருக்கிறதே என்று எண்ணி இன்னும் சிறிது விழித்துப் பார்த்தார்.உண்மையில் லெவ்வையவர்கள் அத்தகைய ஒரு தோற்றத்தை, தான் எப்போதாவது தனது யாதார்த்த வாழ்வில் சந்திப்போம் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

உடல் ஏகமும் மூடிய வெள்ளைத் துணி.ஒரு கையில் கத்தி, மறுகையில் உருண்டையான ஏதோ ஒரு பொருள்.பேசினால் பதிலில்லை! போதாக்குறைக்கு கத்தியை வேறு ஆட்ட ஆரம்பித்திருக்கிறது.இதையெல்லாம் கண்ட லெவ்வையவர்களின் அடிவயிற்றிலிருந்து ஏதோ குபீர் என்று மேலெழுந்து தொண்டையை இறுக்கிப்பிடிப்பது போன்றிருந்தது.

எனினும் சமாளித்துக் கொண்டு மீண்டும் யாரது என முழங்கினார்.ஊஹூம் பதிலில்லை…ஆனால் அவ்வுருவமோ கத்தியை உயர்த்திக் கொண்டு ஹவ்லை நெருங்குவது தெளிவாகத் தெரிந்தது.லெவ்வையவர்களின் சர்வாங்கமும் தன்னிச்சையாக வெட வெடவென்று டான்ஸ் ஆட ஆரம்பித்தது.

நாற்பது வருட காலம் பேய்களை விரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஹாசிம் லெவ்வையவர்கள் இப்போது தான் தனது வாழ்க்கையிலேயே ஓர் அசல் பேயை முழு உருவத்தோடும் சந்தித்திருப்பதாக உணர்ந்தார்.இத்தகைய ஓர் அனுபவம் அபார துணிச்சலுள்ள தன்னை இவ்வளவு மோஷமாகப் பாதித்து விடும் என்று அவர் துளி கூட எண்ணியிருக்கவில்லை.இனித் தாமதிக்க நேரமில்லை.பேய் பிசாசுகளைக் காட்டியே மக்களிடம் பிழைத்து வந்த தன்னை ஆண்டவனே தண்டிக்க இப்படியொரு பேயை ஏவிவிட்டானோ என்ற எண்ணம் அவருக்கேற்பட்டது.உடனே,ஆண்டவனே,என்னை இந்த முறை மட்டும் காப்பாற்றி விடு,இனி இந்த மாதிரியான காரியங்களில் தலையிடவே மாட்டேன் என்று மானசீகமாகப் பிரார்த்தனை புரிந்தார்,எனினும் தான் செய்திருக்கும் திருவிளையாடல்களுக்கு அவ்வளவு விரைவாக மன்னிப்புக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கில்லை.எனவே சகல நம்பிக்கைகளையும் இழந்தவராகக் குர் ஆன் வசனங்களை உரத்த குரலில் உச்சாடணம் பண்ண ஆரம்பித்தார்.

ஆனால் பேயோ இதற்கெல்லாம் மசியக் கூடிய ஒன்றாகக் காணப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க ஹவ்லை நெருங்குவதை அது விடுவதாகவும் இல்லை.

உடனே சட்டென்று லெவ்வையவர்களுக்கு ஒரு உபாயம் தோன்றியது,பிறந்த மேனியைக் கண்டால் பேய் அப்படியே பறந்து ஓடிப்போகும் என்று யார் சோல்லியோ கேள்விப்பட்டது அப்போது ஞாபகத்துக்கு வந்தது.அவ்வளவு தான்.லெவ்வையவர்களின் தொப்பி,ஷேர்ட் மட்டுமல்ல சாரமும் அரையில் போட்டிருந்த பெல்ட்,திறப்புக் கோர்வை சகிதம் சலார் என்று விழுந்தன.ஊஹூம் …லெவ்வையவர்களின் ஆடையில்லாத மேனியில் எந்த விஷேசத்தைக் கண்டும் அந்தப் பேய் அசைவதாக இல்லை.

என்ன செய்யலாம்.மரணத்துக்கு அவ்வளவு இலேசில் தயாராகிவிட முடியுமா? கடைசி உபாயம்.’அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்’ ஊரே முழங்க பாங்கு சொல்ல ஆரம்பித்தார் லெவ்வை.

கடைசியில், தான் மேற்கொண்ட அத்தனை உபாயங்களும் அந்த உண்மையான பேயிடம் செல்லாது போனதைக் கண்ட ஹாசிம் லெவ்வையவர்கள் தன்னை மறந்தார்.தன் நிலையை, தொழிலை மறந்தார். மரணம் தன் முன் நிழலாடுவதைக் கண்டு தான் செய்வதைக் கூட மறந்தார்.

‘என்னைக் காப்பாத்துங்கோ….பிசாசி…பிசாசி” என உரக்கக் கூவிக் கொண்டே தன்னால் ஆன மட்டும் வேகமாக ஒட ஆரம்பித்தார்,

அப்போது தான்’என்னத்தன் மாமா ஒவ்வளவு பயம்,நான் தான் தெரியல்லியோ…. பீபி ‘ என்று ஒரு கீச்சுக் குரல் எழுந்தது அவ்வுருவத்திடமிருந்து.

இவ்வார்த்தை ஹாசிம் லெவ்வையின் உள்ளத்திற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அவரை பிரேக் போட்டு நிறுத்தியது.அடுத்த கணம் ஹாசிம் லெவ்வை அவ்வுருவத்தை உற்றுப்பார்த்தாரோ இல்லையோ

“அடீ பண்டீ வேசே..ஒன்னைக் கீறி வளத்திற, இந்த இருட்டுக்குள்ளே பிசாசி மாதிரி வந்து என்னைப் பயமுறுத்தின.. “ என்று சொல்லிக் கொண்டே பாய்ந்தாரே பார்க்கலாம் பீபி தாத்தாவை நோக்கி.அவர் உள்ளத்திலே மூண்டிருந்த அவ்வளவு பயமும் நொடியில் அசுர கோபமாக மாறி விட்டது.

என்ன இன்று என்றுமில்லாதவாறு நேரகாலத்துடனே பாங்குச் சத்தம் கேட்கிறதே, அதுவும் மோதினாருடைய குரலும் அல்ல ஏதோ வித்தியாசமாக நடந்திருக்க வேண்டும் என்று எண்ணி ஓடோடி வந்த ஊர் ஜனங்கள் தக்க சமயத்தில் லெவ்வையவர்களைப் பிடித்து பீபி தாத்தாவைக் காப்பாற்றினார்கள்.

அடுத்த நாள் டொக்டர் வில்ஸனின் ஸ்டெதஸ்கோப் ஹாசிம் லெவ்வையவர்களின் நெஞ்சுப்பிரதேசம் எங்கும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தது.இந்த இலட்சணத்தில் பீபி தாத்தாவாவது தண்ணி மந்திரிக்கிறதாவது.

 

ஸைபுன்னிஸா

நன்றி அல்ஹஸனாத் 1973 நவம்பர்,டிஸம்பர் இதழ்கள்

 

Series Navigationமாய க்குகைகற்றுக்குட்டிக் கவிதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. says:

    எல்லா மதங்களிலும் இத்தகைய மூட நம்பிக்கைகள் உண்டு. 40 வருடங்களுக்கு முன்பு எழுதிய கதையென்றாலும், கதைக்கரு இன்றும் புதியதே. இந்த அம்மையார் தயவு செய்து தன் எழுத்தாற்றலைக் கைவிட்டுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply to கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *