தாட்சண்யம்

This entry is part 8 of 10 in the series 27-மார்ச்-2016

-எஸ்ஸார்சி

© Copyright 2008 Corbis Corporationபட்டுக்கோட்டையிலிருந்து என் ஆருயிர் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார்.
‘பட்னாகர் கவிதைகள் கொஞ்சம் மொழிபெயர்த்துக்கொடுங்க இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ‘ .
நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகின்றார். தமிழ் இலக்கிய இதழ் ‘இலக்கியச்சிறகு’..ஆங்கிலம் ‘ஷைன்’.
பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சில ஷைன் இதழில் வெளிவரவே அந்த ப்பிரதியோடு இலக்கியச்சிறகு ஒன்றும் அவருக்கு அனுப்பி விட்டார்கள். தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது.
அனேகம் பேருக்கு இப்படி இரண்டு இதழ்களும் சேர்த்து அனுப்புவதுண்டு.மேற்படி பட்டியலில் பட்னாகார் பெயரும் சேர்ந்துகொள்ளவே இரண்டு இதழ்களும் அவருக்கும் சென்றிருக்கிறது.பட்னாகர் குவாலியர் வாசி.அந்த வட மா நிலப்பெரு நகரில் எத்தனையோ தமிழர்கள்வாசம் செய்கிறார்கள்.அவர்களில் சில நண்பர்கள் பட்னாகருக்கும் இருக்கத்தானே செய்வார்கள்.அவர்களில் ஒருவரை தேடிப்பிடித்து இலக்கியச்சிறகினை கொடுத்துவிட்டிருக்கிறார் பட்னாகர். அந்த நண்பரும் அதைப்படித்துவிட்டு சும்மா இருந்துவிடவில்லை. ஆகா ஊகு என்று இலக்கியச்சிறகின் கனபரிமானங்களைப் பாராட்டியும் இருக்கிறார். ஆகவே தான் அந்த பட்னாகர் பட்டுக்கோட்டை ராமலிங்கத்திடம் தன் கவிதைகள் சிலதுகளை மொழிபெய்ர்த்து இலக்கியச்சிறகில் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள அது இப்போது என் வரைக்கும் வந்துவிட்டது.
நானும் சில பட்னாகர் கவிதைகளைத்தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தால் நல்லதுதானே என்று ‘ ஆகா மொழிபெயர்ப்பு செய்கிறேன்’ பதில் சொல்லிவிட்டேன்.ராமலிங்கம் கேட்டுக்கொண்டபடிக்கு ஒரு நான்கு கவிதைகளை ப் பொறுக்கித் தமிழாக்கி அனுப்பி வைத்தேன்..அவை அடுத்த இலக்கியச்சிறகு இதழில் வெளியாகின. எனக்கும் அந்த இதழ் வ்ழக்கம்போல் வந்தது.பட்னாகருக்கும் ஒரு பிரதி போயிருக்கத்தானே செய்யும்..பத்து நாட்கள் சென்றன.பட்னாகரிடமிருந்து எனக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது. வந்த அந்த தபால் கொஞ்சம் கனமாகவே இருந்தது.பிரித்த்ப்பார்த்தேன். பார்சல் உள்ளாக அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகளின் நான்கு தொகுப்புக்கள் இருந்தன.அத்தனையும் அதே பட்னாகர் எழுதியவை.கவிதை நூல்களுக்குள்.ஒரு கடிதம் ஒளிந்துகொண்டு இருந்தது.பிரித்துப்படித்தேன்.
நான் மொழிபெயர்த்து வெளியான கவிதைகள் தாங்கிய இதழை பட்டுக்கோட்டை ராமலிங்கம் பட்னாகருக்கு அனுப்பிவைத்ததாகவும்.அவை நன்றாகவந்திருப்பதாக தமிழ் படிக்கத்தெரிந்த அவர் நண்பர் அவருக்குப் படித்துக்காட்டியதாகவும் அவரே ஒரு ஆண்டு சந்தா தொகையினை ராமலிங்கத்திற்கு அனுப்பிவைத்துவிட்டதாகவும் மொழிபெய்ர்ப்பு செய்து கொடுத்த அதற்கு மிகவும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மனம் எனக்கு குதூகல்ம் ஆனது. எழுத்துப்பைத்தியங்களுக்கு மட்டும்தான் இந்த அல்ப திருப்திகள் விளங்கும் என்பார்கள்
. பட்னாகரின் கடிதத்தில் கடைசி வரியாக ஒரு விஷயம் இருக்கத்தான் செய்தது.’ நான் எனது நான்கு கவிதை நூல்களை இத்துடன் அனுப்பியுள்ளேன்.அவைகளில் மொத்தம் சுமார் நானூறு கவிதைகள் உள்ளன..அவைகளில் உங்களுக்குப்பிடித்த ஒரு நூறு கவிதைகளைத் தமிழாக்கித்தர வேண்டும்.சென்னையில் எனக்கு நண்பர்கள் உண்டு. அவை ஒரு நூலாக வெளிவருதல் என் பொறுப்பு..நீங்க்ள் எனக்கு மொழிபெயர்த்து உதவ வேண்டும்.’ கடிதம் முடிந்து இருந்தது.
ஒரு தலைவலி முடிந்து இன்னொரு தலைவலியில் அல்லவா மாட்டிக்கொண்டுவிட்டோம்.நான் ஏதும் கதைகள் எழுதுகிறேன். அவை பின் புத்தகமாக வெளிவர எத்தனையோ பெரிய பெரிய மனிதர்களைச் சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது. நாம் எங்கே அவர் அவர் காலை கெட்டியாப்பிடித்துக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில், எழுத்தாளர்களிடமிருந்து தங்கள் பொற்பாதங்களை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டு மட்டுமே இந்தப்பக்கத்து பதிப்பக உரிமையாளர்கள் நிமிர்ந்த நன்நடையில் உலாவருகிறார்கள்.
ஆக ஒரு விஷயம் மட்டும் ரொம்பவும் சரி. இந்த பட்னாகரே அது புத்தகமாக வெளிவருதல் தன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். முடிந்தவரைக்கும் ஒருகை பார்ப்போம்.ஒரு நூறு கவிதைகள் மொழிபெயர்த்துவிட்டு அவருக்கும் தகவல் தெரிவித்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். பட்டுக்கோட்டை ராமலிங்கம் சாருக்கும் இந்த விஷயம் கடிதத்தில் எழுதியிருந்தேன்.’புதிய சிக்கலில் நான் மாட்டிக்கொண்டு விட்டது குறித்து அவரும் எனக்கு வருத்தப்பட்டு ஒரு பதில் கடிதம் எழுதியிருந்தார்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் பட்னாகரின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.எனக்குப்பிடித்த கவிதைகளாகத் தேர்வு செய்தேன்.நான்கு கவிதைப்புத்தகங்களை அல்லவா அவர் அனுப்பி வைத்து இருக்கிறார். பிடிக்காத கவிதைகளே அனேகம் இருந்தன.சொல்லிவிட்ட விஷயத்தையே திரும்ப த் திரும்பச்சொன்னால் எனக்குக் கவிதைகள் சுவாரசியப்படுவதில்லை. அலுப்புத்தட்டி விடுகிறது.எப்படியோ நூறு கவிதைகள் பொறுக்கி எடுத்த நான் அவைகளைத் தமிழாக்கி விட்டேன்.திரும்பத் திரும்ப படித்து த்திருத்தினேன். அவ்வளவுதான் போதுமே குவாலியர் நகரத்து பட்னாகருக்கு நமது உழைப்பு.
மொழிபெயர்த்த கவிதைகள் தாங்கிய அந்த நூலுக்கு தலைப்பு என்ன வைப்பது என்று யோசித்து யோசித்து ‘காலம் மாறும்’ என்கிற தலைப்பு கிடைத்தது. ஒரு கவிதையின் தலைப்பும் அது.பொதுவுடைமைத் தத்துவத்தைச் செயலாக்கி உலகுக்கு ஒரு புதிய தரிசனத்தை வழங்கிய சோவியத் நாட்டின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை இருக்கவே செய்தது.அதனை ஒரு கவி என்கிற வகையில் பட்னாகரும் உணர்ந்துதானே இருக்கவேண்டும்.ஆக சோவியத் நாடு திரும்பவும் தன் இழந்த மகத்துவத்தை மீட்டு நிலை நிறுத்தத்தான் போகிறது. இந்தப் பெரிய சமாச்சாரத்தை சொல்லும் கவிதை ஒன்றை அந்த பட்னாகர் எழுதியிருந்தார். அதையே என் கவிதை நூலுக்குத்தலைப்பு என முடிவு செய்தேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு உண்டுதானே.மாகாளி அல்லவோ கடைக்கண் வைத்தாள். வந்ததுபார் ரஷ்ய வெளிச்சம் என்று தமிழ்க்கவிபாரதி வாழ்த்திச்சென்றானே அது இல்லை என்றாகிவிடுமா என்ன? அடிமனதில் எப்போதும் இப்படி ஒரு குறுகுறுப்பு..
எழுபதுகளில் சோவியத் பயணம் செய்துவிட்டு ‘மாஸ்கோவில் தமிழன்’ என்று ஒரு நூல் எழுதிய அன்றைய காங்கிரசுக்காரர் ஆதண்டார்கொல்லை தருமலிங்க.ராமச்சந்திரன் எனக்கு நல்ல நண்பர். சோவியத் சிதறுண்டு போகும் என்று ஆரூடம் எழுதிய அவரை நான் வெறுத்தேன். பொய் பேசுகிறார் என்று முடிவு கட்டினேன்.பின்னர் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் உங்களுக்குத்தெரியாதா என்ன?எல்லாம் காலம் நிகழ்த்திவிட்டது. மாகாளியை எங்கே போய் த்தேடி முறையிடுவது. கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி கதை தான். புதுக்கவிதை தாடிக்காரர் ந. பிச்சமூர்த்தி மீது எனக்குச்சின்ன வருத்தம்..’மனு வெள்ளம்போச்சி,மார்க்சு வெள்ளம் போகும்’ என்றல்லவா ஒரு கவிதை தந்தார்.மனு வெள்ளம் போகவேண்டும்தான் மார்க்சிய வெள்ளம் கூட அப்படியா என்ன?
பட்னாகருக்கு வந்துவிடுகிறேன்.
‘காலம் வெல்லும்’ என்கிற பெயர்வைத்து பட்னாகரின் நூறு கவிதைகளை மொழிபெயர்த்து வைத்தவுடன் பட்னாகருக்குத்தகவல் சொன்னேன்.
‘ எனக்கு புத்தகம் அச்சில் வரவேண்டுமே’ அவரிடம் பேசினேன்.
‘சென்னையில் எனக்கு தோழியர் உண்டு அவர்கள் விலாசம் தருகிறேன். அவர்களுக்கு நீங்கள் நேராகவே மொழிபெய்ர்த்தவைகளை அனுப்பிவையுங்கள்’
‘அவர்கள் இதனை புத்தகமாக வெளியிடுவதெல்லாம் செய்துவிடுவார்கள்தானே’
‘நிச்சயமாக.அவை ஒரு புத்தகமாவது என் பொறுப்பு.விடுங்கள்’
எனக்கு பட்னாகர் பதில் சொன்னார். மொழிபெயர்த்த நூறு கவிதைகளை அவர் சொல்படி அந்த சென்னை விலாசத்துக்கு அனுப்பி வைத்தேன். கவிதைகளை பெற்றுக்கொண்ட தோழியர் சென்னை மகளிர் கல்லூரி ஒன்றில் இந்திப்பேராசிரியர்.தமிழ் மொழியும் நன்கு அறிந்தவர் இவை பட்னாகர் எனக்குச்சொன்னவை. நான் சென்னைக்குப்போயா பார்த்துவிட்டு வந்தேன். சில நாட்கள் ஆகியது.
‘ஒரிஜனல் கவிதைகளை செராக்ஸ் எடுத்து அனுப்புங்கள்.அப்போதுதானே மொழிபெயர்ப்பு எப்படி வந்து இருக்கிறது என்பது எனக்குத்தெரியும்’ இப்படி எழுதிக்கொண்டு எனக்கு ஒரு கடிதம் சென்னையிலிருந்து வந்தது.
நாம் எழுதியவைகளை புத்தக மாக்கி வெளியிட தன் கை காசு செலவு செய்பவன் கடவுளுக்கு நேரானவன், அவன் எது சொன்னாலும் சரியேதான் என்று நான்கு கவிதைபுத்தகங்களில் பென்சிலால் மார்க் செய்துகொண்ட அந்தக்கவிதைகளை செராக்ஸ்கடைக்கு எடுத்துப்போய் நகல் எடுத்தேன். செராக்ஸ் எடுத்தவைகளைச் சுருட்டி கிருட்டி கொரியர் தபாலில் சென்னை முகவரிக்கு அனுப்பிவைத்தேன். என் வேலை முடிந்ததாய் எண்ணிக்கொண்டேன்.ஒரு வாரம் கழித்து எனக்கு மீண்டும் தபால் வந்தது.அனுப்பிய கவிதைகள் பத்திரமாய் சென்னையிலிருந்து எனக்குத்திரும்பி வந்தன.
‘நன்கு வந்திருக்கிறது மொழிபெய்ர்ப்பு. நீங்கள் தேர்ந்திட்ட கவிதைகள் அத்தனையும் ‘காலம் மாறும்’ என்கிற அந்த பெயரிலேயே அச்சிட்டுவிடலாம் .நீங்கள் முன்னுரை எழுதும்போது எனது பெயரை மறக்காமல் எப்படிக்குறிப்பிடவேண்டுமோ அப்படி குறிப்பிட்டுவிடுங்கள்.வேறு ஒன்றும் நான் எதிர்பார்ப்பதில்லை.புத்தகம் வெளியானதும் இரண்டு பிரதிகள் மட்டும் மறக்காமல் என் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அரசு நூலக ஏற்பு ஆணை வாங்கித்தருவது விஷயமாக அதுவும் நீங்கள் விருப்பப்ப்ட்டால் என்னோடு தொடர்புகொள்ளலாம்.நன்றி’
படித்துமுடித்தவுடன்.தலை கிர்ரென்றது.
பட்னாகருக்கு கொஞ்சம் கோபமாக ஒரு கடிதம் எழுதினேன். சென்னைப்பேராசிரியர் கவிதை நூல் வெளியிடுவதிலிருந்து தன்னைக்கழட்டி க்கொண்டு விட்டதை க்குறிப்பிட்டு இனி நான் மொழிபெயர்த்த அந்தக்கவிதைகளின் அச்சாக்கம் என்ன ஆவது என்கிறபடிக்கு. உடனே எனக்குப் பதில் கடிதம் வந்தது. அவர் எங்கே எனக்குப்பதில் எழுதப்போகிறார் என்று கூட நினைத்தேன். ஆனால் பதில் வந்ததே.
‘ஒன்றும் கவலை வேண்டாம். வேறு நல்லமனிதர் ஒருவர் கவிதைப் புத்தகம் அச்சிட்டு வெளியிட நிச்சயம் கிடைப்பார்.நான் தகவல் சொல்கிறேன்.என் புகைப்படம் ஒன்று இத்துடன் அனுப்பியுள்ளேன். கவிதை நூலின் முன் அட்டையில் இல்லை பின் அட்டையில் அது அச்சாகவேண்டும்.மறந்துவிடவேண்டாம் மிக முக்கியம்.பிற பின்’ எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.யாரிடம் போய் இது விஷயம் பகிர்ந்துகொள்வது.எப்படியாவது ஆகட்டும் என்று நான் மொழிபெயர்த்த கவிதைகள் மற்றபடி இது தொடர்பாக வந்துபோன கடிதங்கள் அத்தனையும் பரணையில் எடுத்துப்போட்டேன்.’கிடக்கட்டும் சனியன்’ என்று சொல்லிக்கொண்டேன்.நாட்கள் ஓடின. நண்பர் பட்டுக்கோட்டை ராமலிங்கத்துக்கும் நடந்தவைகள் அத்தனையும் தகவல் சொன்னேன்.
‘சிலர் இப்படித்தான். நல்லா கவிதைங்க எழுதுவாரு ஆனாலும் என்ன செய்ய’ இது அவர் தந்த குறுஞ்செய்தி கவி பட்னாகர் குவாலியர் நகரில் தனது நாற்பத்தைந்தாவது தொகுப்பு ஒன்றுக்கு என க்கவிதைகள் எழுதிக்கொண்டுமிருக்கலாம்.அவரிடமிருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை.பரணையில் இருப்பவைகள் எனக்கு மன உறுத்தல் தர ஆரம்பித்தன.அந்தக்கவிதைகள் கூட என்னிடம் பேசுமா என்ன? கொஞ்சம் பாருங்க நீங்க நெனச்சா புத்தகம் அச்சாகிடும்.மனசு வையுங்க’ இவைகளைச் சதா சொல்லிக்கொண்டே இருந்தன.
எப்படியோ பிய்த்துப்பிடிங்கி ஒரு பத்தாயிரம் ரூபாய் புரட்டிக்கொண்டு அருகிருக்கும் சிதம்பரம் நகர் சென்றேன். அது வன்னியர் தெரு என்றுதான் நினைக்கிறேன் அங்குள்ள தட்சிணாமூர்த்தி புத்தக அச்சகத்தாரிடபோய் நின்றேன். மொழிபெயர்த்த அந்தக் கவிதைகளை ஒப்படைத்தேன்.
மேலட்டைக்கு மும்பை பிரசித்தம் அந்த குதிரை சவாரி வீரசிவாஜி படம் ஒன்று என்னிடம் இருந்ததை மறக்காமல் ஒப்படைத்தேன்..பின்னட்டையில் பட்னாகர் புகைப்படம் வரவேண்டும் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
தவறுகள் சரிபார்க்க ஒறுமுறை சிதம்பரம் வன்னியர்தெரு அந்த தட்சணாமூர்த்தி அச்சகம் போனேன். பத்து நாள் கழித்து எனக்கு ‘காலம் மாறும்’ கவிதை நூல் முந்நூறு பிரதிகள் லோகல் லாரி பார்சலில் வீடு தேடிவந்தது.அச்சாகிய புத்தகத்தை தடவிப்பார்த்துக்கொண்டேன்.பின்பக்க அட்டையில் பட்னாகர் படம் லட்சணமாகத்தான் அச்சாகி இருந்தது. மீண்டும் என் வீட்டு அதே பரணையில் பட்னாகரின் கவிதைகள் ‘ காலம் மாறும்’ புத்தகங்கள் என மறு உருவம் கொண்டு துயிலத்தொடங்கின. கிறுக்கு மனம் விட்டால்தானே.
ஒரு பத்து புத்தகங்கள் எடுத்துக்கட்டி பட்னாகருக்கு தபாலில் அனுப்பிவைத்தேன். ஒருவர் ஏதோ இரண்டு புத்தகத்தை தபாலில் அனுப்பவேண்டுமென்று ஒரு முடிவோடு தபால் ஆபிசுக்குப்போனால் போதும். பார்சலைக்கட்டியது சரியில்லை என்பார்கள்,ஒட்டியது சரியில்லை என்பார்கள்,குவாலியர் உள் நாடா வெளி நாடா என்பார்கள். யாரும் திறந்து பார்க்கும்படிக்கு என்வெலப்பின் மூடிப்பக்கம் இருக்கவேண்டுமே என்பார்கள், விலாசம் தெளிவில்லை என்பார்கள்,பின்கோடு கூட எழுதவில்லையா என்பார்கள், அனுப்புனர் விலாசம் தெளிவாக எழுதிக்கொண்டுதான் வாங்களேன் என்பார்கள், பதிவஞ்சலா, வெறும் பார்சலா நூல அஞ்சலா, அச்சிட்ட புத்தகங்களா ஒன்றும் சரியாக எழுதவில்லை என்பார்கள் சரியானசில்லரையையாவது கொடுங்கள் தபால் அனுப்ப வந்துவிட்டீர்கள் என்பார்கள் நமக்கு ரசீது என்று ஒன்று கொடுப்பதற்குள் நம் முகத்தையே பார்க்காமல் எப்படித்தான் இவை அத்தனையும் செய்வார்களோ.
பட்னாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதனில் .புத்தகங்கள் பத்து அனுப்பியது சொல்லியிருந்தேன்.கடிதம் கிடைத்ததுதான் தாமதம் பட்னாகர் டெலிபோனில் பேசினார்.
‘புத்தகங்கள் வந்துசேரவில்லை.கொஞ்சம் பாருங்கள்.தபால் ஆபிசில் விசாரியுங்கள். உங்களால் முடியும் முடிந்தால் என் சரியான விலாசம் எழுதி சிரமம் பாராமல் பத்து பிரதிகள் வைத்து மீண்டும்ஒரு பார்சலை அனுப்பித்தாருங்கள்’ என்றார்.
அடுத்தவன் படும் சிரம்ங்கள் என்னவென்று கண்டே கொள்ளாமல் தன் காரியம் மட்டும் சாதிக்க நினைப்பவர்கள் நன்றாகக் கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு அய்யம். நண்பர் விழுப்புரம் பழமலய்தான் எனக்கு ப்பொட்டில் அரைந்தமாதிரி தகுவிடை சொன்னார்,’கையில பேனா எடுத்துட்டா அவன் எழுத்தாளன் ஆயிடுவான் மற்ற நேரம் அவன் சராசரியா மனுஷன். இல்ல அதுக்கும் தாழயும் போயிடுவான்’. பட்னாகர் விஷயத்திலும் அது சரி என நினைத்துக்கொண்டு மீண்டும் ஒரு பத்து புத்தகங்களைக்கட்டிக்கொண்டு தபால் ஆபிசுக்குப்போய் பட்னாகருக்கு அனுப்பி வைத்தேன். ஒருவாரம் சென்றது. பட்னாகர் மீண்டும் போனில் பேசினார்.’சார் இரண்டு பார்சல்களுமே ஒரே நாளில் எனக்குக்கிடைத்துவிட்டது.மிகுந்த நன்றி. முடிந்தால் புத்தகத்தை விமரிசனத்துக்கு அங்கு அங்கு தெரிந்த இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிவையுங்கள்.உங்களுக்கும் நல்லது’ என்று ஆலோசனை சொன்னார்.
படபட என வந்தது. எழுந்தேன்.
பரணையில் கிடந்த அத்தனைப்பிரதிகளையும் கீழிறக்கி ஒரே கட்டாகக்கட்டினேன். அதன் மேலே கோயம்புத்துர்ர் புத்தக விற்பனையாளர் ஒருவர் விலாசம் எழுதி, கொட்டை எழுத்துக்களில் ‘டு பே’ என்றும் எழுதினேன். அருகிலிருந்த பார்சல் லாரி அலுவலகம் சென்றேன். கோயம்புத்தூரில் அப்படி யார் என்று மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் அவர் நண்பர்தான் பார்சல்மீது அனுப்புனர் விலாசம் சரியாகவே எழுதி என் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு இருந்தேன். அவ்வளவுதான்..
கோயம்புத்தூரிலிருந்து தொலைபேசியில் என்னை யாரும் இதுவரை கூப்பிடவில்லை இது விஷயம் யார் கேட்டாலும் நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.

Series Navigationபிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் புகழ் – திரை விமர்சனம்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *