தியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)

This entry is part 17 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

“If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying……!” Indira Gandhi.

 

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” – மகாகவி பாரதி.

 

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும்  அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின்  முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

 

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

 

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.

வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும்  அவருக்கு பெரும் பங்கு உண்டு”  என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

 

”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

 

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை!  இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

 

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.

ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி.  அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

 

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

 

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையும் உடன்  வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

 

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல்  தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

 

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி  ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும்  சிறப்பு

 

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

 

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

 

“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

 

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்”  தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

 

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

 

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

Series Navigationபொன் மாலைப்பொழுதுஅரவான்
author

பவள சங்கரி

Similar Posts

78 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    மிக் மிக மேலோட்டமான கட்சிக்காரன் எழுத்துப் போல் இருக்கிறது. இந்திரா காந்தி , ஏன் தாகூரின் சாந்திநிகேதனில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது முதல் அவரது வாழ்வு நேர்மையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஊழலை இந்திய அளவில் ஆழமாக வேர் ஊன்ற செய்வதற்கு இந்திரா காந்தியே காரணம். நகர்வாலா மரணம் பற்றி எழுதியிருக்க வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸிற்கு உள்ளும் வெளியுமாக முழுதாய் இந்திரா கடைபிடித்தார். சீக்கிய குழுக்களிடையே பிரித்தாள அவர் வளர்த்துவிட்டவர் தான் பிந்தரன்வாலே.. மேலும் எழுத்தாளார் சொலிறார், “காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. …” -என்று. தயைசெய்து எப்படி என்று விளக்கலாம். அன்று அவர் செய்த குழப்படிகேளே இன்று அஸ்ஸாம் கலவரம் வரை நீண்டிருக்கிறது. மேலும், தனக்கு அவார்ட் கிடைக்கும் இன்று இவர் முட்டாள்தனமாக தூக்கியெறிந்த கச்சத்தீவு இன்று தமிழர்களின் வேதனையின் நிரந்தர ஊற்று. பிடல் காஸ்ட்ரோ, அரபாத் போன்றோர்களை இவர் நேசம் பாராட்டினர்… ஆனால் இன்று என்றானது. இந்தியா முழுதும் இருக்கும் ஊழல் மற்றும் எதேச்சிகார சக்தி இவரால் வளர்க்கப்பட்டது. இவர் பிசாசாய் ஆடியதன் விளைவு எமெர்ஜென்ஸி எதேச்சிகாரம். மொரார்ஜி தேசாய், பெர்னாண்டஸ், ஜேபி போன்ற உன்னத தலைவர்கள் நோகடிக்கப்பட்டனர். காமராஜரை கோமாளியாக்கி வி வி கிரியை தனது சுயலாபத்திற்காக ஜெயிக்க வைத்தவர். நாட்டுடமை ஆக்கியது சாதனையெனில் பின் ஏன் அவரது கட்சியே தனியார் அமைப்புகளை இன்று உற்சாகப்படுத்துகிறது. மேலும் எழுத்தாளர், “பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்திய” என்கிறார். தயவு செய்து சிறு லிஸ்டாக கொடுத்தால் அலசலாம். இது கதையா..? இஷ்டத்திற்கு எழுத… சரித்திரம்… இவர் கொல்லப்பட்ட போது, பல்லாயிறம் சீக்கியர்கள் எரித்து , வெட்டி கொல்லப்பட்டார்கள், அதற்கு அப்புள்ளையாண்டான், ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் இருக்கத் தான் செய்யும்… ஆம் இவர் ஒரு ஆலமரம்.. தன் விழுதுகளைத் தவிர தனக்கு கீழ் ஒரு புல் பூண்டையும் முளைக்க விடாது. இந்திரா இந்தியாவிற்கு வந்த துரதிருஷ்டம். காமராஜர் செய்த முட்டாள்தனம், மொரார்ஜி தேசாய் வந்திருக்க வேண்டும், அக்காலகட்டத்தில், பிரதமராக.

  2. Avatar
    punaipeyaril says:

    நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும்– இந்த அளவுகோல் பற்றிச் சொல்லலாமே… இரண்டுமே இந்திராவிற்கு கிடையாது. இதில் ஏன் பாரதியை இழுக்க வேண்டும். தமிழகத்தில் அவர் காமராஜரை ஒழிக்க திமுக அதிமுக என மாறி மாறி ஆடிய ஆட்டம், ( எம் ஜி ஆர் , திண்டுக்கல் முதல் தேர்தலில் மாயத்தேவர் வென்ற போது காமராஜரின் பழைய காங் இரண்டாவது இடம், ) , வ.கம்யூ என்று ஒன்றை உருவாக்கியது, காஷ்மீரில் இவர் சமாதானம் ஏற்றினார் என்கிறீர்கள், ஆனால், மெரினாவில் ஜனதா கூட்டத்தில் “ நான் பரூக் அப்துல்லா, தி மோஸ்ட் வாண்டண்ட் பெர்சன் பை இந்திரா..? என்று பரூக் அப்துல்லா முழுங்கியது ஏன்… சோ போன்றோர் இந்திராவை எதிர்த்து அப்போது பெர்னாண்டஸிறு உதவியது ஏன். (திமுகவினர் அடித்து உதைக்கப்பட்டதால் தான் இங்கு எமெர்சன்சி கொண்டாடப்பட்டது :) ) , <நேர்கொண்ட பார்வை..” – எப்படி வி வி கிரி மனச்சாட்சி ஓட்டு படி ஜெயித்தார் என்சொல்லலாமே…?

    1. Avatar
      பவள சங்கரி says:

      மதிப்பிற்குரிய புனைப்பெயரில் அவர்களுக்கு,

      எந்த ஒரு அரசியவாதியோ, ஆட்சியாளர்களோ யாராக இருப்பினும், அவர்களுடைய செயல்பாடுகளை விருப்பு வெறுப்பின்றி நாம் பார்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் அனைத்து செயல்களையும் முழுவதுமாக ஆய்வு செய்வதுதான் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி சொல்வதற்கு உதவியாக இருக்கும். அவருடைய செயல்பாடுகாள் பத்துக்கு ஏழு பங்கு சரியாகவே அமைந்துள்ளன. நாம் எண்ணி, எண்ணி பெருமைப்பட வேண்டிய பாரதப் பிரதமர்களில் குறிப்பிடத்தக்கவர். உலகளவில் எந்த ஒரு நாட்டின் சரித்திரத்திலும், புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து, 24 மணி நேரத்தில் விடுதலை வாங்கித் தந்த தலைவர்கள் இதுவரை கிடையாது. அனைவரும் அறிந்த வியட்னாம் மற்றும் கொரியா போரும், ஆப்கானிஸ்தான் போரும் இன்றளவிலும் முடிவுக்கு வராத செயலாகவே உள்ளது. பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் போர் நடந்த போது போர்முனைக்கே நேரில் சென்று அங்கிருந்த நிலவரங்களை சுயமாக மதிப்பீடு செய்து அங்கிருந்த வீரர்களுக்கு உற்சாகமூட்டிவிட்டு, பாராளுமனறத்தில் வந்து உரையாற்றினார். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கவிஞர் வாஜ்பாய் அவர்கள் நான் பாரதப்பிரதமராக இந்திராவைப் பார்க்கவில்லை எனது பாரத மாதாவாகவே பார்க்கிறேன் என்று அவர் பாடிய கவிதையை நினைவுகூர்கிறேன்…

      1. Avatar
        பவள சங்கரி says:

        அன்பின் திரு புனைப்பெயரில்,

        மன்னர் மான்யம் ஒழித்தது, விவசாயப்புரட்சியின் மூலம் தன்னிறைவு ஏற்படுத்தியது, பாகிஸ்தான் போல பஞ்சாப் மாநிலமும், நம்மிடமிருந்து பிரிந்து போகாமல் காப்பாற்றியது, எமஜென்சியின் போது தீமைகளுக்கும் சரியாக ஒழுங்கு முறை பெரியநன்மை ஏற்பட்டதை மறுக்க இயலாது. இரும்புப் பெண்மணி என்று உலகமே போற்றும் அளவிற்கு தம்முடைய செயல்பாடுகளால் உயர்ந்து நின்ற ஒரு பாரதப் பிரதமரை பாராட்டுவதற்கு ஏன் தயக்கம். காமராஜர் பற்றி கூறினீர்கள். அன்னாரே தம் இறுதிக்காலத்தில் அன்னையாரோடு இணைந்து செயல்பட்டாரே… அரசியல் நோக்கில் பார்க்காமல், உண்மையான சேவை மனப்பான்மையோடு, தம் உயிரையும் பணயம் வைத்து, நாட்டிற்காக பணியாற்றியுள்ளவருக்கு காந்தியடிகளைப் போல இவருக்கும் பரிசாகக் கிடைத்தது சில குண்டுகள் தான். ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்

        அன்புடன்
        பவள சங்கரி

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          “காந்தியடிகளைப் போல இவருக்கும் பரிசாகக் கிடைத்தது சில குண்டுகள் தான். ஜெய்ஹிந்த்!”

          உங்களுக்கு காந்தி மீது தனிப்பட்ட கோபம் ஏதேனும் இருந்தால் அதை வெளிப்படையாக எழுதலாமே ? எதற்கு இப்படி அவரை கேவலமாக வதைக்க வேண்டும் ?

        2. Avatar
          punai peyaril says:

          காந்தியடிகளையும் இவரையும் ஒப்பிட்டு அவமானப்படுத்தாதீர்கள். இவர் நாட்டிற்காக பணியாற்றியதற்கு சுட்டுக்கொல்லப்படவில்லை… செருப்புக்கால்களும் பூட்ஸுகளும் பொற்கோவிலில் ஆடிய தாண்டவத்தின் பலன் அது. காங்கிரஸின் பிடி பஞ்சாபில் தளர்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இவர் விளையாடிய விளையாட்டின் விடை அது. சரி, இந்திராகாந்தியை அன்னையென்று சொல்லும் நீங்கள் காமராஜரை அப்பா, அல்லது பெரியப்பா, என்று சொல்லலாமே..? அன்னை என்பது புனிதமான சொல்.. அதை இந்திராகாந்திக்கு கொடுத்து அந்த வார்த்தையின் புனிதத்தை கெடுக்காதீர்கள். முதலில் நீங்கள் இந்திய அரசியலை ஆழ படியுங்கள். குறைந்தபட்சம் பழைய துக்ளக் இதழ்களை படித்தாலே உங்களின் வாயின் இதழ்கள் வழியே பத்திரிக்கை இதழ்களில் உண்மை எழுத முடியும். சூழ்ச்சியும் சூதும் நிறைந்த பரமபத ஆட்டத்தைத் தான் அவர் விளையாடினார். ஒரு தேர்தலில் அப்போதைய எங்களின் அகில தலைவி இந்திரா காந்திக்காக நான் ஒரு பகுதி வரவேற்பு பொறுப்பாளராக இருந்திருக்கிறேன்… அவர் ஒரு ஊழல் நெகோஸியேட்டர் என்பது பிடிபட எனக்கு இண்டியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள் உபயோகமாக இருந்தன. . இன்றைய சமூகம் கூகுளால் உண்மை உணரும் சமூகமாக வளரட்டும்…

          1. Avatar
            பவள சங்கரி says:

            அன்பின் திரு புனைப்பெயரில்,

            தங்களுடைய கருத்துரைகளுக்கு மனமார்ந்த நன்றிகள். பல விசயங்கள் அறியத் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

            அன்புடன்
            பவள சங்கரி

  3. Avatar
    Rama says:

    Is the author for real? This flattering article, for God sake, is about Indira Gandhi, the most corrupt PM of India. Reality check for the author. How about penning a piece on the simple, plain and honest life of Mr Lal Bhadur Shastri instead?
    I am sorry, to me IG was a selfish, egocentric, power hungry lady who brought dirty politics to India. Political morals went out of the window under her and political corruption became the norm.
    Unfortunately, we Indians are still paying the price. Her dynasty and the Italian connection are of the same mould. Even God cannot save India if we have opinionated well read educated people like the author heaping praise on the most destructive force to hit India since the independence.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் ரமா அவர்களே,

      வணக்கம். தங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி. பெருமதிப்பிற்குரிய லால்பகதூர் சாஸ்திரி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவள்தான் நானும். அவர் போன்ற தலைவர் இன்று நம்மிடையே இல்லையே என்று வருந்த வேண்டிய விசயம். ஆனால் இக்கட்டுரை அன்னை இந்திராவைப் பற்றியது மட்டும்.. எளிமையின் உரைவிடமான, செயல் வீரரான லால் பகதூர் சாஸ்திரி பற்றி மீண்டும் சிந்திப்போம். தலைவர்கள் மாறுகிறார்கள், ஊழல் என்றும் நிலைத்து நின்று கொண்டுதான் இருக்கிறது. ஊழல் என்பது எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய ஒரு அங்கமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.ஊழலை நான் எக்காரணம் கொண்டும் உறுதியாக ஆதரிக்கவில்லை. வாரிசு அரசியலைப் பற்றி எந்தக் கருத்தும் நான் கூறவில்லை, அதில் எந்த உடன்பாடும் எனக்கும் இல்லை.அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தமும் இல்லை. நான் எழுதியது திருமதி இந்திராகாந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மட்டுமே.. மிக்க நன்றி நண்பரே.

      அன்புடன்
      பவள சங்கரி

  4. Avatar
    paandiyan says:

    she is only person started the corruption in India without any fearness without give any respect to Law. whatver we are facing problem today is caue for Indira only. she is India’s worst Prime minister.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு பாண்டியன்,

      மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதற்கு, இனிப்பு வழங்கி கொண்டாடிய நாடு நம் இந்தியத் திருநாடு.. ஜெய்ஹிந்த்..

      அன்புடன்
      பவள சங்கரி

      1. Avatar
        punai peyaril says:

        அதற்கும் பாண்டியன் கருத்திற்கும் என்ன சம்பந்தம். காந்தியடிகள் இறந்ததற்கு அவரின் சுற்றியிருந்தவரோ இல்லை நட்பு வட்டாரமோ இல்லை அவரின் கருத்து ஒத்துப் போனவரோவா இனிப்பு கொடுத்தார்கள். பிடிக்காதவர்களில் சில மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் கொடுத்து கொண்டாடியிருக்கலாம். இந்த “காந்தி” என்ற பெயர் தரப்போகும் இம்ப்பாக்கிட்டிற்கு தானே இந்திரா அவரது கணவனிடம் , விஜயகாந்த் பாணியில் சொல்லியிருக்கலாம், – எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே அந்த ஃபேமில் நேம் ‘காந்தி’ தான் என்று.

  5. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அடுத்து என்ன ? ‘நேர்மையின் சின்னம்’ என்று செல்வி.ஜெயலலிதா பற்றிய கட்டுரையா ?

  6. Avatar
    Rama says:

    Thank your response author பவள சங்கரி.
    My point is this. Mrs IG was a politician first and foremost. You cannot separate her private life (of which we do not have any interest) from her very public political life. We all suffered under her tyrannic emergency rule which was brought on for one single purpose only. To hold on to the position of PM at whatever cost. Judges were superseded at her whim, her son got the free reins to rule the country in his own arrogant way and honest politicians like Jay Prakash Naraynan were jailed to tighten her grip on power. I won’t talk about censorship of the media and forced vasectomies on young men under her rule. The list is endless.
    I also abhor the sacred term ” Annai” being bestowed on to this corrupt lady(similar to calling EVR as ” Periyar”).
    Annai to whom? Hero worship of politicians, especially the corrupt one should stop.

  7. Avatar
    Ramki says:

    ஆசிரியர் குழுவிற்கு
    அப்பட்டமான கட்சி பிரச்சாரத்தை எல்லாம் வெளியிட துவங்கிவிட்டீர்களா?
    ராம்கி

  8. Avatar
    மலர்மன்னன் says:

    //அன்னாரே (காமராஜர்) தம் இறுதிக்காலத்தில் அன்னையாரோடு இணைந்து செயல்பட்டாரே…- ஸ்ரீமதி பவள சங்கரி//

    இது தவறான தகவல். சக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தும்,’தமிழ் நாடு-புதுச்சேரி நிலவரம் வேறு, மற்ற மாநிலங்களின் நிலைமை வேறு; இங்கு திராவிடக் கட்சிகளை வேரூன்றவிடுவது தவறு’ என்று அவர்களிடம் கூறி, நாட்டு நலனுக்காகத் தமது சுய கெளரவத்தையும் விட்டுக் கொடுத்து தமிழ்நாடு- புதுவை மாநில ஸ்தாபன காங்கிரஸ் 1973-ல் கோவையிலும் புதுவையிலும் நடந்த தேர்தல்களின்போது இந்திரா காங்கிரசுடன் இணைந்து செயல்படச் செய்தவர், காமராஜர். அந்தத் தேர்தல்களின்போது அண்ணா தி மு க வும் வலதுசாரி கம்யூனிஸ்ட்களும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. அவையே கூடுதல் வெற்றியும் பெற்றன. அதன் பிறகு காமராஜர் இந்திராவையும் அவரது கட்சியினரையும் முற்றிலும் புறக்கணித்தார். 1975-ல் இந்திரா காந்தி தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே நெருக்கடி நிலையை நம்மீது திணித்தபோது அதை வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை அவரது ஆதரவு நாளிதழான நவ சக்தி மட்டுமே வெளியிட்டது. தணிக்கை உத்தரவுக்குப் பணிந்து ஹிந்து உள்ளிட்ட எந்த நாளிதழும் காமராஜரின் கண்டன அறிக்கையை வெளியிடவில்லை. காமராஜர் அதனால் அதிர்ச்சி அடைந்தார். அதே ஆண்டு தமது காலத்திலேயே பத்திரிகைத் தணிக்கை என்னும் அரசியல் அக்கிரமத்தைக் காண நேர்ந்ததே என்று மனம் உடைந்தே இறுதி வரை இந்திரா காந்தியை மன்னிக்காதவராக 1975 அக்டோபர் 2 அன்றே மறைந்தார். தமிழ் நாட்டில் அப்போது ஆட்சி நடத்திய கருணாநிதி, தமிழ் நாட்டில் நெருக்கடி நிலையின் தீவிரத்தைக் குறைத்தமைக்காகவும் அரசியல் கட்சிகள் யாவும் பொதுக் கூட்டங்கள் நடத்தித் தத்தமது கருத்துகளை வெளியிடத் தங்கு தடையின்றி இடமளித்தமைக்காகவும், எந்த அரசியல் கட்சித் தலைவரையும் முக்கியஸ்தர்களையும் கைது செய்யாமல் விட்டு வைத்தமைக்காகவும் காமராஜர் கருணாநிதியை மனதாரப் பாராட்டினார். இதனை நான் நேரில் இருந்து கண்டு இது பற்றிப் பின்னர் ஒரு கட்டுரை எழுதினேன். அது பல இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. ”நல்ல வேளை, காமராஜர் என்னைப் பாரட்டினார் என்பதற்கு மலர் (என்னை அப்படித்தான் அனைவரும் அழைப்பது வழக்கம்) ஒரு சாட்சியாக இருக்கிறான்” என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார். ’இப்போது உண்மையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பது இந்தியாவுக்கு அல்ல, இந்திராவுக்குத்தான்’ என்று கடற்கரைக் கூட்டத்தில் நெடுங்செழியன் சொன்னதை நெடுங்செழியன் பாணியிலேயே நான் சொல்லிக் காட்டியதைக் கேட்டுக் காமராஜர் அடக்க மாட்டாமல் சிரித்தார். காமராஜர் அப்படிச் சிரித்து நான் பார்த்தது அதுவே முதலும் கடைசியும்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு மலர்மன்னன் ஐயா,

      வணக்கம். தங்களிடமிருந்து பல தெளிவான செய்திகளை அறிந்து கொண்டேன். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி.

  9. Avatar
    மலர்மன்னன் says:

    இந்திரா காந்தி அவர்களிடம் நான் காணும் சிறந்த அம்சம், “உங்களுடைய மெய்க் காவலர் குழுவில் சீக்கியரைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம்” என்று உளவுத் துறையினர் முன்னெச்சரிக்கை செய்த போதிலும், “அப்படி அவர்களை நான் ஒதுக்கி வைத்தால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றாகிவிடும், ‘நாம் பாரத நாட்டவர் அல்ல’ என்று சீக்கியர்களிடையே ஒரு சாரார் நடத்தும் பிரசாரத்தை உறுதிப்படுத்துவதுபோலவும் ஆகிவிடும்” என்று சொல்லித் தமது உயிரைத் துச்சமெனக் கருதித் தெரிந்தே சீக்கியர்களுக்குத் தமது மெய்க் காப்பாளர் குழுவில் இடம் கொடுத்தாரே, அந்தத் துணிவுதான். சீக்கியரை ஹிந்துஸ்தானம் புறக்கணிக்கவில்லை, ஒன்று போலவே கருதுகிறது என்று உலக அரங்கில் நிரூபிக்கத் தாமே ரத்த சாட்சியாய் சாய்ந்தாரே, அது என்ன சாதாரண விஷயமா?. பிந்தரன்வாலேயே வளர்த்துவிட்டு அரசியல் செய்தது மோசமான போக்குதான். ஆனால் பிந்தரன்வாலே கும்பல் கொட்டம் அடிக்க இடம் கொடுத்து சீக்கியர் பொற்கோயிலின் புனிதம் கெடச் செய்தது அவரல்லவே! இந்திரா காந்தியை மேலும் பாராட்டவும் காரணங்கள் உள்ளன. சிக்கிமை ஹிந்துஸ்தானத்துடன் இணைத்துக் கொண்டது, கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசம் என்ற தனி நாடாக மலர நமது ராணுவத்தை உள்ளே செலுத்தி 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரைப் போர்க் கைதிகளாகச் சிறைப் பிடித்து அதன் அகங்காரத்தை அடக்கியது, ஈழப் போராளிகளை ஊக்குவித்த தோடு இலங்கை அரசையும் நமது கட்டுக் குள்ளேயே வைத்திருந்தது, இவையும் அவரிடம் நான் கண்ட ஆளுமைகள். இவ்விரு விஷயங்களில் அவர் செய்த தவறு நமக்கு நிரந்தரமான பிரச்சினையை உண்டுபண்ணி விட்டது என்பதையும் சொல்லித்தானாக வேண்டும். கச்சத் தீவு பழைய ஆவண ஆதாரங்களின்படி நம்முடையதாக இருந்த போதிலும் பிற்காலத்தில் வரக் கூடிய இன்னல்களை உணராமல் இலங்கைக்கு அருகில் உள்ளது என்பதால் அதனை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டார், அப்படிப் பார்த்தால் அந்தமான் நிக்கோபர் தீவுகளும் மியன்மாருக்கு அருகில் உள்ளவைதானே என்று கருதிப் பார்க்கவில்லை. ஸிம்லா ஓப்பந்தத்தின் போதே காஷ்மீர் பிரச்சினைக்கு நமக்குச் சாதகமான முறையில் தீர்வு காண வாய்ப்பிருந்தும் அதைக் கோட்டைவிட்டார். அந்தச் சமயத்தில் 90 ஆயிரம் போர்க்கைதிகளாகத் தனது ராணுவத்தினர் இருந்த மானக் கேட்டிலிருந்து மீள பாகிஸ்தான் எதற்கும் தயாராகவே இருந்தது. சிறிதும் நம்பகத் தன்மையற்ற போக்கிரி அரசான பாகிஸ்தான் இன்று சிம்லா ஒப்பந்தம் என்பதாக ஒன்று இருப்பதையாவது நினைப்பதுண்டா? இவையெல்லாம் இந்திரா காந்தியால் விளைந்த மிகப் பெரிய கேடுகள். அவருடைய கட்சியைச் சேர்ந்த ஃபக்ருதீன் அலி அகமது தமது அஸ்ஸாம் பாக்பட் தொகுதியில் வெற்றி பெற கிழக்கு வங்க முஸ்லிம்களை ஊடுருவச் செய்து வாக்காளார்களாக்கிய பச்சை துரோகத்தையும் இந்திரா அனுமதித்தார். பிறகு அதற்குப் பரிசாக ஜனாதிபதி பதவியையும் அவருக்கு அளித்தார்! கிழக்கு பாகிஸ்தானாக வங்க தேசம் இருக்கையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு அங்கு குடியேறியிருந்த பிஹாரி முஸ்லிம்களும் ஹிந்துக்களைச் சிதைத்துச் சின்னா பின்னம் செய்து இன அழிப்புச் செய்தனர். கிழக்கு வங்க மக்கள் மதத்தால் இஸ்லாமியராக இருந்த போதிலும் மொழியாலும் கலாசாரத்தாலும் ஹிந்துக்களாகவே நீடித்தனர். எனவே அவர்களையும் முஸ்லிம்களாகக் கருதாமல் கொன்று குவித்தனர் என்றாலும், லட்சக் கணக்கில் இன அழிப்புக்கு இலக்கானவர்கள் கிழக்கு வங்க ஹிந்துக்களே. ஆனால் இது வெளியே தெரிந்தால் ஹிந்துஸ்தானத்தில் பெருங் கலவரம் வெடித்து விடும் என்று கருதி அந்த இன அழிப்பை இந்திரா காந்தி மூடி மறைத்துவிட்டார். நியாயப்படி அதை ஐக்கிய நாடுகள் அவைக்குக் கொண்டு சென்று பாகிஸ்தானைப் போர்க் குற்றவாளியாக நிறுத்தியிருக்க வேண்டும். இது இந்திரா காந்தி இழைத்த மிகப் பெரும் துரோகம் மேலும் தனது மருமகள் என்கிற ஒரே காரணத்திற்காக சோனியா என்கிற சந்தேகத்திற்குரிய இத்தாலியப் பிரஜையை பிரதமர் இல்லத்திலே சுதந்திரமாக நடமாடச் செய்தார். சோனியாவின் தந்தை இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கும் அதேசமயம் எதிர் முகாமைச் சேர்ந்த சோவியத் யூனியனுக்கும் உளவாளியாக இரட்டை வேலை செய்தவர் என்று பெயர் எடுத்தவர்! மேலும் இத்தாலி மாஃபியாக்கள் மண்டிய தேசம்! அவர்களுடன் தொடர்பு இல்லாத சர்வ தேச உளவாளிகள் இருக்க வாய்ப்பே இல்லை! நமது நாட்டை எப்ட்டிப்பட்ட சிக்கலில் மாட்ட வைத்துவிட்டுப் போய்விட்டார் இந்த இந்திரா காந்தி என்பதை எண்ணீப் பாருங்கள் ஸ்ரீமதி பவள சுந்தரி.
    -மலர்மன்னன் , ,

    1. Avatar
      seethaalakshmi says:

      பவளசங்கரிக்கு முதற்கண் நன்றி கூற விழைகின்றேன். திருமதி இந்திராகாந்திபற்றி அவர் எழுதியதால்தான் பலரும் எழுச்சிபெற்று நடந்தவைகளை இங்கே எழுத்திலே கொட்டிவிட்டார்கள். எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. திரு மலர்மன்ன்னின் நடுத்தர நிலையுடன் அமைந்த விளக்கங்கள் நான் தேடியவைகளுக்கு விடை கொடுத்தன.
      பொதுவாகப் பெண்களுக்கு திருமதி. இந்திராகாந்தி, செல்வி ஜெயல்லிதா ஆகியோரைப் பிடிக்கும். பெண் ஆட்சி பீட்த்தில் அமர்ந்திருப்பதை பெண் ரசிக்கின்றாள். ஒரு பெண் அரசியலில் முன்னேறி ஆட்சி பீட்த்தில் அமர்வது எளிதல்ல. அவர்கள் காட்டும் துணிச்சலைக் கண்டு பெண்கள் பிரமிக்கின்றோம். அதன்பின்னர் தவறுகளைக் காணும் பொழுது கூட கோபத்திற்குப் பதிலாக வருத்தமே தோன்றுகின்றது . தவறு என்பதை மறுத்தல் இயலாது. தொலை நோக்குடன் சிந்திக்காது நடந்துவிடும் செய்லகள் ஆட்சி பீட்த்தில் அமர்ந்த பலரும் செய்ததுண்டு. அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களும் அத்தகைய தவறுகளைச் செய்துவிடுவதுண்டு. அதன் விளைவால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொருகணமும் அனுபவித்துவருகின்றோம். உலக அரங்கில் எல்லா நாடுகளிலும் இத்தகைய தவறுகள் நடந்ததால் சீரமைக்க முடியாமல் உலகமே விழித்துக் கொண்டிருக்கின்றது.
      இந்த கட்டுரை எழுதியவரையும் இதற்கு பின்னூட்டம் எழுதியவர்கள் எல்லோருக்கும் நன்றி கூறுகின்றேன். நான் ஓர் வரலாற்று பிச்சி. சில சமயங்களில் இது போன்றவற்றை மீண்டும் நினைவு படுத்திப் பார்ப்பது நல்லது. பவள சங்கரிக்கும் நன்றி. தலைப்பில் தியாக தீபம் என்று சேர்த்திருக்க வெண்டாம். ஆனால் அன்னை என்று சேர்த்திருப்பது தவறல்ல. அன்னை, அம்மா என்பது பொதுவாக பெண்களை மரியாதை நிமித்தம் அழைப்பதுதான்
      சீதாலட்சுமி.

      1. Avatar
        punai peyaril says:

        ஒரு பெண் அரசியலில் முன்னேறி ஆட்சி பீட்த்தில் அமர்வது எளிதல்ல.— அது வேறு.. ’மம்தா பானர்ஜி “ தவிர ஒருவரும் அப்படி முன்னேறியது இல்லை. ஜெயலலிதாவிற்கு ஒரு எம் ஜி ஆர், மாயவதிக்கு ஒரு கன்சிராம் தேவைப்பட்டது , இந்திரா காந்திக்கு ஒரு நேரு, அன்னை கனிமொழிக்கு கருணாநிதி, என்று இருக்கிறது… கொடநாடு போயிட்டு வாருங்கள்….புரியும்,…

  10. Avatar
    மலர்மன்னன் says:

    மனிக்க வேண்டும், பவள சங்கரி. உங்கள் பெயரை சுந்தரி என்று குறிப்பிட்டுவிட்டேன். எப்படியும் நீங்கள் அகத்தளவிலும் தோற்றத்திலும் அவ்வாறே இருப்பீர்கள் என ஒரு தந்தைக்குரிய பாச உரிமையுடன் கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

  11. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீமதி பவள சங்கரி, உங்கள் கட்டுரையில் நிறையத் தகவல் பிழைகள் உள்ளன. ஆண்டுகள் வித்தியாசப்படுகின்றன. ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டுப் ப்ரசுரத்திற்கு அனுப்புங்கள். 1964-ல் நேரு மறைவிற்குப் பிறகு லால்பஹதூர் சாஸ்த்ரிதான் பிரதமர் பொறுப்பேற்றுத் தமது அமைச்சரவையில் இந்திராவுக்கு இடமளித்தார். இப்படி இன்னும் பல பிழைகள் உள்ளன.
    -மலர்மன்னன்

  12. Avatar
    சான்றோன் says:

    சரணடைந்த ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்களை கையில் வைத்துக்கொண்டு, சிம்லா ஒப்பந்தப்படியான எல்லைக்கோட்டைக்கூட வலியுறுத்தாமல் , பூட்டோவிடம் வீரர்களை திருப்பியளித்த இந்திராவின் புத்திசாலித்தனத்தை பவள சங்கரி போன்ற‌வர்கள்தான் மெச்சிக்கொள்ளவேண்டும்……..

    பஞ்சாபில் அகாலிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த இந்திராவால் வளர்த்துவிடப்பட்டவர்தான் பிந்தரன்வாலே………வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது அவ்வளவுதான்…….வளர்த்தது யார் குற்றம்?

    எமர்ஜென்சியின் பெயரால் இந்திராவும் ,சஞ்சய் காந்தியும் போட்ட பேயாட்டத்தை அப்படியே கடந்து செல்வதுதான் நடு நிலையா?

    தீட்டிய மரத்தில் [ காமராஜர் ] கூர் பார்த்த பாவம்தான் ,தலைமுறைகளை தாண்டியும் தண்டிக்கிறது……

  13. Avatar
    சான்றோன் says:

    நண்பர் புனை பெயரில் அவர்களே…….

    காமராஜர் தம் வாழ்வில் செய்த மாபெரும் தவறு அவர‌து புகழ்பெற்ற” கே ” பிளான்…….தம் மகளை உள்ளே நுழைக்க தடையாக இருக்கும் மூத்த தலைவர்களை ஓரங்கட்ட நேரு காமராஜரை கருவியாக பயன்படுத்திக்கொண்டார்…… நேருவின் மீதான அதீத விசுவாசத்தால் நேருவின் தந்திரத்தை புரிந்துகொள்ள காமராஜர் தவறி விட்டார்……

    லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவுக்குப்பிறகு ,தனக்கு கட்டுப்ப‌டாத மொரார்ஜி அவர்களை தேர்வு செய்வதை விட இந்திராவை தேர்வு செய்தால் தம் கைக்குள் இருப்பார் என்று காமராஜர் எண்ணினார்….. தேசத்தின் தலைவிதி அன்று மாற்றி எழுதப்பட்டது….[ காமராஜரின் தலைவிதியும் தான்…..]

  14. Avatar
    மலர்மன்னன் says:

    ’படா பேட் கிர்னேஸே தர்த்தி ஹில்தா ஹை’ என்று பெரிய மரம் சாயும்போது நிலம் அதிரும்தான் எனச் சமாதானம் சொல்லி, ஆயிரக் கணக்கான சீக்கியர்களை காங்கிரஸ் குண்டர்கள் கொன்று குவித்ததற்கு பிரதமர் பதவியை ஏற்ற சூட்டோடு சூடாக நியாயம் கற்பித்தவர் ராஜீவ் காந்தி. மெய்க் காப்பாளர் என்கிற நம்பிக்கைக்குரிய பதவியை இரு வெறி பிடித்த சீக்கியர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்காக சீக்கியர் அனைவரையும் தாக்கிக் கொன்ற அஹிம்சாவாதி கள்தான் கங்கிரஸ்காரர்கள்! சென்னையில் கூட ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் பல சீக்கியர் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன! சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்! ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை! முதல்வர் எம் ஜி ஆர் அமெரிக்க மருத்துவமனையில் நினவிழந்தநிலையிலேயே தமிழ் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்!
    -மலர்மன்னன்

  15. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்திரா காந்தி இந்தியப் பிரதமரில் பிறர் செய்யத் துணியாத பெரும் தீரச் செயல்களைச் செய்த தனித்துவப் பெண்மணி. அவரைப் போற்றுபவர் போற்றட்டும், தூற்றுபவர் தூற்றட்டும். அவர் ஐயமின்றி இரும்புப் பெண்மணிதான். அதுவும் துருப்பிடிக்காத இரும்பு (Stainless Steel).
    1. பங்களா தேசத்திற்கு விடுதலை பெற இந்திய ராணுவத்தை அனுப்பியது.
    2. காலிஸ்தான் தனிநாடு கலகக்காரரை ஒடுக்க இந்திய இராணுவத்தைக் சீக்கியர் பொன் ஆலயத்துக்கு அனுப்பியது.
    3. நாட்டுக் கொந்தளிப்பை நிறுத்த அவசரநிலைச் சட்டம் கொண்டு வந்து, முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்த பச்சை விளக்கு காட்டியது.
    இந்திரா காந்தி போல் ஓர் இரும்பு பிரதம மந்திரி பிறக்கவு மில்லை. பிறக்கப் போவது மில்லை.
    இந்திரா காந்தியைப் பற்றிச் சிறப்பாக எழுதிய பவள சங்கரிக்கு எனது இனிய பாராட்டுகள்.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “நாட்டுக் கொந்தளிப்பை நிறுத்த அவசரநிலைச் சட்டம் கொண்டு வந்து….”

      மதிப்பிற்குரிய திரு.ஜெயபாரதன்,

      அவர் நெருக்கடி நிலையை கொண்டுவந்தது எதனால் என்பது தேசமே அறிந்த விஷயம்.

      நீங்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் என்பது தெரியும். அதற்கிணையாக நகைச்சுவையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

      1. Avatar
        punai peyaril says:

        ஜெயபாரதன் -அவருக்கு சம கால மட்டுமல்ல இந்தியாவின் வரலாறே தெரியவில்லை. இந்திராவை பின் அரஸ்ட் செய்து கொண்டு சென்ற போது மேனகா ரயில்வே கேட் ஒன்றில் செய்த தர்ணா தெரியுமா..? சோனியா 18வருடங்கள் குடியுரிமை பெறமால் இந்திய பிரதமரின் வீட்டிற்குள் வலம் வந்தது தெரியுமா…? தோல்வி காலங்களில் ஊருக்கு ஓட நினைத்தது தெரியுமா…? நகர்வாலா பணம் கழவாடியது ஒரு அரசுடைமை வங்கியில் என்பது தெரியுமா..? எமெர்ஜென்சியில் தோன்றிய ஒரு தல தான் சுப்ரமணிய சாமி என்பது தெரியுமா…? அப்புறம், தஞ்சாவூரில் நிற்க வேண்டும் என்று எம் ஜீ ஆரிடம் கேட்டு பின் எம்.ஜி.ஆர் பின்வாங்க கர்நாடகா ஓடியது தெரியுமா..? அப்போது இந்திராவிற்காக கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம் பி, சைதாப்பேட்டை கோர்டில் ஒரு கேஸில் ஜாமின் பெற காங்கிரஸார் உதவியது தெரியுமா..? அந்த பெல்லாரி எம் பி பின் சுரங்க ஊழலில் மாட்டியது தெரியுமா…? அரசியல் நமது அடிவயிற்றுப் பிரச்சனை…எரியும் தனலால் அதில் நாம் இயங்க வேண்டும்… ஏ.சியின் சுகத்தில் மோகத்தில் வாழ்ந்த தலைவர்களுக்கு வால் பிடிக்க கூடாது.. தீஸ் ஜான் மார்க் போய் பாருங்கள்… கண்ணில் ரத்தம் வழியும்…

          1. Avatar
            punaipeyaril says:

            i paid full tax for my earning. i bring foreigh earnings to my country. i stood by my country when i was abroad. i declared full amount to pay high regn fee when we bought property. i never fought agri or farm land when i was NRI. people advice by being in the comfort that were created by others and do nothing for their root….. “Good for nothing people are better than BAD for Everything people…”

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நான் அணு ஆயுத ஆதரவாளன் அல்லன். ஆனால் பிரதமர் இந்திரா காந்தி “அணு ஆயுதச் சோதனையை” நடத்தி உலக வல்லரசுகளின் அடிவயிறை எதிர்பாராது கலக்கினார். இந்தியப் படைப்பலம் வல்லரசுகள் போல் வலுவானது என்று சீனாவுக்கும், அண்டைப் பாகிஸ்தானுக்கும்,அகில நாடுகளுக்கும் அறிவித்து அவர் ஓர் அபூர்வப் பிரதமராய்க் காட்டிக் கொண்டார். அந்த துணிவு வேறு எந்த இந்தியப் பிரதமருக்கும் வந்திருக்காது.
      துக்ளக் சோ முதல் ஞாநி போன்ற அறிவாளிகள் இந்திரா காந்தி பதவி ஏற்றவுடன் அவர் ஓர் “விதவை” என்பது உடம்பில் அரித்துக் கொண்டிருந்தது.
      சி. ஜெயபாரதன்.

  16. Avatar
    சான்றோன் says:

    இந்த வங்கதேசப்போர் வெற்றியை[?] வைத்துக்கொண்டு காங்கிரஸ் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை…….அப்படி அதில் நமக்கு என்ன வெற்றி கிடைத்தது என்றும் புரியவில்லை…..

    அன்று இந்திரா அனுமதித்த அகதிகள் வெள்ளம் தான் இன்று மேற்கு வங்கம் , அசாம் போன்ற மாநிலங்களில் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது…..[ இஸ்லாமியர்களே ஆயினும் , பாலஸ்தீனிய அகதிகளை எகிப்து , ஜோர்டான் , சிரியா போன்ற அண்டை நாடுகள் ஏற்பதில்லை…..]

    கிழக்கிலும் ஒரு எதிரியை ஏற்படுத்திக்கொள்ளவா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று ராஜாஜி ஒருவர் மட்டுமே கேட்டார்….. பிரியாமல் இருந்திருந்தால் இன்றுவரை அடித்துக்கொண்டே கிடந்திருப்பர்….. நாம் நிம்மதியாக இருந்திருக்க‌லாம்…….பிரித்து விட்டதன் பலன் , இன்று இருவரும் மத அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை தாக்குகிறார்கள்…..சொந்த செலவில் சூன்யம் என்பது இதுதான்……விலை மதிப்பில்லாத நம் வீரர்களை பலி கொடுத்து மட்டுமே மிச்சம்….. ஐ.எஸ். ஐ ஸ்பான்சர் செய்யும் பயங்கரவாதிகளின் தளமாக வங்க தேசம் மாறி வெகு காலம் ஆகிறது……….. ஹசீனா ஆட்சிக்காலத்தில் மறைமுகமாகவும் , கலீதா ஜியா வந்தால் வெளிப்படையாகவும் பயங்கரவாதிகள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்….. சுதந்திரம் பெற்றுக்கொடுத்த நமக்கு அவர்கள் காட்டும் நன்றியை பார்த்தீர்களா?

    வங்க தேச போரின் முடிவில் ஒரு லட்சம் பாகிஸ்தானிய வீரர்கள் நம்மிடம் சரணைந்திருந்தனர்….அவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து காஷ்மீர் பிரச்சினையை தீர்த்திருக்க‌லாம்…..[ காஷ்மீர் தலைவலியே நேருவின் கைங்கர்யம்தான் ]….வாய்ப்பை பயன்படுத்தாமல் , ஜுல்பிகர் அலி பூட்டோவின் நடிப்பில் மயங்கி இந்திரா அரிய வாய்ப்பை கோட்டை விட்டார்…… இதில் வெற்றி எங்கே வாழ்கிறதாம்?

  17. Avatar
    மலர்மன்னன் says:

    மேற்கில் ஒரு பாகிஸ்தானும் கிழக்கில் ஒரு பாகிஸ்தானும் இருந்தால் ஹிந்துஸ்தானத்திற்கு இரு புறமும் மண்டையிடிதான் என்று டாக்டர் அம்பேத்கர் முன்னரே எச்சரித்தார். மத அடிப்படையில் பிரிவினை என்றால் மத அடிப்படையிலும் மக்கள் இட மாற்றம் முழுமையாக நடைபெற்றுவிட வேண்டும் என்றும் எச்சரித்தார். இல்லையேல் ஹிந்துஸ்தானத்தில் மதக் கலவரத்திற்கு விமோசனமே இல்லை என்றார். அவரது எச்சரிக்கை நிரூபணமாகி வருகிறது. வங்க தேசம் உருவாக உதவியதன் பலனையும் ஸ்ரீ சான்றோன் சொல்வதுபோல் நன்றாக அனுபவித்து வருகிறோம். நமது நாட்டை இந்தக் காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்களும் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஒரு சிறிதும் உணர்ந்ததாகவே தெரியவில்லையே! நமது ராணுவம் வங்க தேசத்தில் சிந்திய ரத்தம் எல்லாம் விரையமாகிப்போனதே! இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இந்திராவின் புதல்வர் ராஜீவும் இதேபோல் நமது ராணுவத்தை இலங்கையில் காவு கொடுத்தார். பல இளம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், முடமாகி முடங்கினர். தலைக் குனிவுடன் தாயகம் திரும்பினர். நாங்கள் ஒரு கை கட்டப்பட நிலையில்தான் போராட வேண்டியிருந்தது என்று நமது தளபதிகள் தெரிவித்தனர். அவர்களை வர வேற்க மாட்டேன் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீர வசனம் பேசி தனது தேசத் துரோகத்தை வெட்கமின்றி வெளிப்படுத்தினார்! வேண்டாம், ஸ்ரீமதி பவள சங்கரி, தயை செய்து நேரு குடும்பத்தினர் வரலாற்றையெல்லாம் வரிசையாக எழுத ஆரம்பித்து விடாதீர்கள். என் இதயத்திலிருந்து ரத்தம் வழிய விடாதீர்கள்.பிரிவினை சமயத்தில் லாஹூர் சென்ற நேரு அங்கிருந்த ஹிந்துக்களிடம் உங்களுக்கெல்லாம் ஒன்றும் நேராது என்று பொய் வாக்குறுதி அளித்து அவர்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தார். எஞ்சிய ஹிந்துக்கள் குற்றுயிரும் குலை உயிருமாய் பஞ்சை பராரிகளாய் தில்லி வந்து சேர்ந்தார்கள்!
    -மலர்மன்னன்

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////ஸ்ரீமதி பவள சங்கரி, தயை செய்து நேரு குடும்பத்தினர் வரலாற்றையெல்லாம் வரிசையாக எழுத ஆரம்பித்து விடாதீர்கள். என் இதயத்திலிருந்து ரத்தம் வழிய விடாதீர்கள். பிரிவினை சமயத்தில் லாஹூர் சென்ற நேரு அங்கிருந்த ஹிந்துக்களிடம் உங்களுக்கெல்லாம் ஒன்றும் நேராது என்று பொய் வாக்குறுதி அளித்து அவர்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தார். எஞ்சிய ஹிந்துக்கள் குற்றுயிரும் குலை உயிருமாய் பஞ்சை பராரிகளாய் தில்லி வந்து சேர்ந்தார்கள்!/////
    இந்துக்கள் காயம் பட்டதற்கு நேருதான் காரணம் என்கிறார் திரு. மலர்மன்னன். பல லட்சம் இஸ்லாமியர் காயம் பட்டதற்கு யார் காரணம் ? ஜின்னாவா ?
    பிரிவினையின் பெருவிளைவால் மாண்ட, காயமடைந்த இஸ்லாமியர், இந்துக்கள் இழப்புக்கு மௌன்ட் பாட்டன் உட்பட பலர் காரண கர்த்தாக்கள்.
    இனிமேல் திரு. மலர்மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டும், இரத்தக் குளிர்ச்சி யூட்டும் தலைவரைப் பற்றி நாம் திண்ணையில் எழுதி வருவோம். அவருக்குப் பிடித்த தலைவர்கள் பெயரை எழுதினால் பவள சங்கரிக்கு உதவியாய் இருக்கும்.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      மலர்மன்னன் says:

      எனது தலைவன், நாயகன், நண்பன், எஜமானன் சகலமும் பாஞ்ச ஜன்ய சங்கம் ஊதி விழிப்பூட்டுகிற வாழும் மஹா புருஷன் ஸ்ரீ கிருஷ்ணன். எனது நாடி நரம்பு ஒவ்வொன்றையும் உயிர்த் துடிப்புடன் இயக்கும் ஞானாசிரியன்.
      -மலர்மன்னன்

    2. Avatar
      மலர்மன்னன் says:

      ஸ்ரீ ஜயபாரதன், நீங்களும் என்ன திராவிட அரசியல் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
      ஹிந்துக்கள் லாஹூரில் மட்டுமா அதுவும் வெறும் காயம் மட்டுமா பட்டார்கள்? நீங்கள் சம கால வரலாறு அறியவில்லை. பாகிஸ்தான் பிரிந்த பிறகும் சில மாதங்கள் வரை லாஹூர் முழு மாவட்டமும் பாகிஸ்தானில் சேர்க்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் லாஹூர் பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அங்கு லட்சக் கணக்கில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு இருந்தது. ஏனெனில் அதற்கான பேச்சும் வலுவாக இருந்தது. அப்போது ப்ரதமர் நேருவுக்கு லாஹூர் பாகிஸ்தானுக்குப் போய்விடும் என்று முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் பிரிவினை நடந்துவிட்டதால் இனி பிரச்சினை இருக்காது என்கிற குருட்டாம்போக்கில் நம்பி, லாஹூருக்கு ஒன்றும் ஆகாது அது ஹிந்துஸ்தானத்துடன்தான் இருக்கும் என்றெல்லாம் லாஹூர் சென்று ஹிந்துக்களை நம்ப வைத்தவர் நேரு என்பதை நீங்கள் அறிவீர்களா? எனது வாழ்க்கையே இது சம்பந்தமான ஆதாரங்களையெல்லாம் தேடிப் பிடித்து சேகரித்து வைத்திருப்பதிலேயே கழிந்து விட்டது!
      நேருவினால்தான் ஹிந்துக்கள் காயம் பட்டார்கள் என்று நான் எழுதியதாகச் சொல்கிறீர்களே, நான் நேருவினால்தான் என்று சொல்லியிருக்கிறேனா? ஏன் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகத் திரித்துப் பேசுகிறீர்கள்?
      ஹிந்துக்களின் உயிர்ச் சேதம், பொருட் சேதம், மானச் சேதம், அனைத்துக்கும் நேரு மட்டுமல்ல, ஜின்னா, காந்தி மற்றும் புருஷோத்தம் தாஸ் தாண்டன் ஜி தவிர மற்ற காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அனைவரும் காரணம்! காங்கிரசின் பதவி ஆசை காரணம்! தாண்டன் ஜி மட்டுமே பாகிஸ்தான் பிரிவினையின் பேரில்தான் சுதந்திரம் என்றால் அது வேண்டாம் என்று காரியக் கமிட்டியில் வாக்களித்த ஒரே புண்ணியவான்! காங்கிரஸ்காரர்தான். ஆனால் நிஜமான தேச பக்தர்!

      முஸ்லிம்கள் தரப்பில் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளையக் காரணம் backlash என்பார்களே அந்த பதிலடிதான்! தொடங்கியது முஸ்லிம்கள், திருப்பிக் கொடுத்தது ஹிந்துக்கள்! விஞ்ஞானத்துடன் ஹிந்துஸ்தானத்தின் உண்மை வரலாறு அறியவும் சிறிது நேரம் ஒதுக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.
      -மலர்மன்னன்

    3. Avatar
      சான்றோன் says:

      தேசப்பிரிவினையின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்களே…..அப்போது வெளியான பத்திரிக்கை குறிப்புகளை பார்த்தாலே நாம் இதை அறிந்து கொள்ள முடியும்….. திரு. ஹெச்.வி. சேஷாத்ரி அவர்கள் எழுதிய ” ” தேசப்பிரிவினையின் சோக வரலாறு ” எனும் நூலை படித்துப்பாருங்கள் ……..அவர் ஆர்.எஸ்.எஸ் காரர் அப்படித்தான் எழுதுவார் என்று நினைத்தால் டொமினிக் லாப்பியர் , லேரி காலின்ஸ் ஆகியோர் எழுதிய ” நள்ளிரவில் சுதந்திரம் ” எனும் நூலை படித்துப்பாருங்கள்……மேலோட்டமான பார்வைக்கே பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்கள் மட்டுமே என்பது புரியும்…… பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பல ரயில்கள் ஹிந்துக்களின் பிணங்களால் நிரம்பியிருந்தன….பல்லாயிரம் ஹிந்துப்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்……[ ராவல்பின்டிகற்பழிப்பு ]… இஸ்லாமியர்களுக்கு முழு மூச்சாக வக்காலத்து வாங்கிய காந்தியடிகளே கூட இதை மறுக்க முடியாமல் , பாதிக்கப்பட்ட பெண்களை ஹிந்து வாலிபர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்….. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதெல்லாம் வெறும் எதிர்வினைகள்…….அதையும் தடுத்தாட்கொள்ள நம் நாட்டில் காந்தி இருந்தார்…..உண்ணாவிரதம் என்ற எமோஷனல் பிளாக் மெயிலால் முஸ்லீம்களை காப்பாற்றினார்…….பாகிஸ்தானில் அப்படி யாருமில்லை……ஹிந்துக்கள் மாபெரும் இன அழிப்புக்கு ஆளாயினர்…..

  19. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ ஜயபாரதன்,
    நேரு குடும்பம் மீது உங்களுக்கு இருக்கும் தேவதா விசுவாசமும் பலவீனமும் எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கின்றன.
    1. பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் பேயாட்டம் போட்டபோது பல்லாயிரம் வங்க முஸ்லிம்களும்கூட எல்லை தாண்டி மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் குடியேறிவிட வழி செய்தவர் இந்திரா காந்தி. முக்தி வாஹினி என்ற பெயரில் ஆள் பலமும் ஆயுத பலமும் அளித்துக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஹிந்துஸ்தானத்தின் ராணுவத்தை முன்னதாகவே அனுப்பியிருந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். பல்லாயிரக் கணக்கான பாலியல் வன் கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். நமது தலையில் சுமத்தப்பட்ட பொருளாதாரச் சுமையும் இறக்கி வைக்கப்பட்டிருக்கும்.அனுப்புகின்ற அஞ்சல்களுக்கெல்லாம் கூடுதல் செலவு செய்ய நாம் வற்புறுத்தப்பட்டோமே, அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உலக அரங்கின் முன் பொறுமை காத்தோம் என்று காண்பித்துக்கொள்வதற்காகப் பல மாதங்கள் தாமதம் செய்து நமது ராணுவத்தை அனுப்பி இழப்பை ஏற்படுத்தியதை அறிவீர்களா? பாகிஸ்தான் ஏராளமான ராணுவத்தைக் கிழக்கு பாகிஸ்தானில் குவிக்கப் போதிய அவகாசம் அளித்ததால் அல்லவா நமது ராணுவத்தினர் அங்கு பெருமளவு இறக்க நேரிட்டது? கால தாமதத்தைத் தவிர்த்திருந்தால் நமது தரப்பில் உயிர்ச் சேதம், உடல் ஊனம், பொருட் சேதம் முதலானவற்றைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம் என்று பின்னர் ஃபீல்டு மார்ஷல் மானேக்‌ஷா சொன்னது உங்களுக்குத் தெரியுமா? பாவம் இந்திரா காந்தி, மகா பொறுமைசாலி, வேறு வழியில்லாமல்தான் இறுதியாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பினார் என்று உலகம் பாராட்ட வேண்டும் என்பதற்காக நாம் கொடுத்த விலை மிக மிக அதிகம் ஜயபாரதன்! சரி, அப்படி விலை கொடுத்ததால் என்ன பயன் அடைந்தோம்? வங்க தேசமும் இன்று ஒரு ஐ எஸ் ஐ, பயங்கரவாதிகள் கூடாரமாகப் பயன்பட்டு வருகிறது, ஸ்ரீ சான்றோன் சரியாகச் சொன்னதுபோல!
    2. சீக்கியர் பொற்கோயிலுக்குள் நமது ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியவரே இந்திரா காந்திதானே! மேலும் அங்கும் நமது ராணுவம் ஒற்றைக் கையுடன்தான் போரிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துப் பல வீரர்கள் அனாவசியமாக உயிரிழக்கவும் உடல் உறுப்புகள் இழக்கவும் காரணமானவர் இந்திரா காந்தி.
    3. நாடு கொந்தளிக்க வேண்டிய அவசியம் என்ன? அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்புச் சொன்ன பிறகு கெளரவமாகப் பதவி விலகாமல் தனது பதவிக்கு வந்த ஆபத்தை நாட்டுக்கே வந்த ஆபத்தாக நாடகம் ஆடி நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, நியாயமான நல்ல மனிதர்கள் எல்லாம் சிறையில் அடைபடவும், பலர் கொடுமைக்குள்ளாகவும் நேர்ந்ததைப் பாராட்டும் விவரம் அறிந்த மனிதர் எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தான்!
    3. அணு ஆயுத சோதனையால் நாம் அடைந்த பலன் உண்மையில் ஏழைகள் கோடிக் கணக்கில் வாழும் நாட்டை அணு ஆயுத சோதனை செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நாடுதான் எனப் பெயர் எடுக்கச் செய்து ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவியை நிறுத்திக் கொண்டதும் நம் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதும்தான்! அதனால் விளைந்த பொருளாதாரச் சுமையை ஏற்கத்தான் முதுகு கூனிய சாமானியப் பிரஜைகள் இருக்கவே இருக்கிறார்களே!
    ஆழ்ந்து சிந்தனை செய்து பார்த்தால் இதுவரை நமக்குக் கிடைத்த சிறந்த பிரதமர்கள் லால் பஹதூர் சாஸ்த்ரியும் மொரார்ஜி தேசாயும்தான். நமது துரதிருஷ்டம் அவர்களது ஆட்சி நீடிக்கவில்லை! அடல் பிஹாரி வாஜ்பேயி நல்ல மனிதர்தான். ஆனால் சிறந்த பிரதமர் என்று சொல்ல மாட்டேன். அவர் ஒரு கூட்டணி அரசின் பிரதமராகத்தான் இருந்தார் என்று சமாதானம் சொன்னாலும் நினைத்திருந்தால் அவர் எவ்வளவோ செய்திருக்க முடியும். குவாத்ரோச்சி விவகாரத்தில் சிக்கியிருந்த சோனியாவை அரசியலுக்கு வராமலே செய்திருக்கலாம். வாஜ்பேயிக்கு வயோதிகத்தால் வரும் நோய் நொடிகளால் சங்கடப்படும் சிரமம் மட்டும் உள்ளது. மற்றபடி வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. வாஜ்பேயி காலத்தில் அஸ்ஸாம், வட கிழக்கு மாநிலங்கள் பிரச்சினைக்கும் வலுவான தீர்வு கண்டிருக்கலாம். அயோத்தி விவகாரத்தையும் சுமுகமாகப் பேசியே தீர்த்திருக்க முடியும். பாப்ரி மண்டபம் நியாயப்படி ஷியாக்களுக்கே உரிமையானது. அதை ஸுன்னிகள் கவர்ந்துகொண்டனர். அங்கு மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்கு ஆலயம் எழுப்ப ஷியாக்களுக்கும் அஹமதியாக்களுக்கும் இன்றளவும் ஆட்சேபமில்லை. ஷியாக்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தி எல்லைக்கு அப்பால் நிலம் அளிப்பதாக உறுதி கூறி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ‌ஷியாக்களைக் கொண்டே ஸுன்னிகளைப் பின் வாங்கச் செய்திருக்க முடியும். இதையெல்லாம் யோசிக்க வாஜ்பேயியுக்கு அவகாசமே இல்லாமற் போயிற்று! மேலும் அவர் தேர்ந்துகொண்ட ஆலோசகரும் நம்பகமானவர் அல்ல!

    ஆக நாம் பெற்ற இரண்டே இரண்டு குறுகிய காலச் சிறந்த பிரதமர்கள் லால் பஹதூரும் மொரார்ஜியுமே!
    -மலர்மன்னன்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்தியாவின் தொழில்வள, விஞ்ஞான, வேளாண்மைத் துறைகள் பலவற்றை விருத்தி செய்து விடுதலை இந்தியாவை உலகின் முன் நிறுத்தியவர் பண்டித நேரு. அவர் தயாரித்த பல ஐந்தாண்டுத் திட்டங்களில் தோன்றிய கனரக யந்திரத் தொழிற்சாலைகள், பேரணைகள், தொழிற் துறைக் கல்லூரிகள், அணுமின்சக்தி திட்டங்கள், அண்ட வெளி ஆய்வுகள் இப்போது ஆலமரமாய் விழுதுகள் விட்டுப் பரவி யுள்ளன.
      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        மலர்மன்னன் says:

        ஆம், ஹிந்துஸ்தானத்தைப் பெரும் கடனாளியாக்கிக் கை ஏந்த வைத்தவர்! ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கெல்லாம் அடி பணிந்து அது நிர்ணயித்த விலைக்கு நமது பொருட்களை விற்று நம்மை நஷ்டப்பட வைத்தவர். காந்திஜியால் பதவி பெற்று காந்தியப் பொருளாதாரத்திற்கு வேட்டு வைத்தவர். சுற்றுப் புறச் சூழலைக் குட்டிச் சுவராக்கியவர். இந்தி சீனி பாய் பாய் என்று சொல்லியவாறு சீனாவுக்கு நமது பிரதேசத்தை தாரை வார்த்துக் கொடுத்தவர். நமது ராணுவ வீரர்கள் சரியான ஆடைகளோ காலணிகளோ, நவீன ஆயுதங்களோ இன்றி சீன பகாசூரனை எதிர்கொள்ள மாட்டாமல் பனிப் பிரதேசத்தில் மாண்டுபோகக் காரணமானவர். காஷ்மீர் பிரச்சினை என ஒன்றை உருவாக்கி இன்றளவும் நாம் துன்பமுறச் செய்பவர். அவரால் நமக்கு உருவான பிரச்சினைகளுக்கும் தொல்லைகளுக்கும் மரண மில்லை. அகவே நேருவுக்கும் மரணமில்லை! அவரதுி இரண்டுங் கெட்டான் சோஷலிசக் கோட்பாடுதான் நமது பொருளாதாரத்தை முன்னேற விடாமல் பின்தங்க வைக்தது. இன்று நாம் அடைந்துள்ள வளர்ச்சிக் கெல்லாம் அரசின் முட்டுக்கட்டைகளையும் மீறி தனியார் எடுக்கும் முயற்சிகள்தான் காரணம்! நேருவால் நமக்கு நேர்ந்த கேடுகளைச் சொல்ல ஆரம்பித்தால் நம் ரசனைக்குரிய இரா. முருகன் எழுதும் நாவலைவிட நீண்டுகொண்டே போகும். நமது விவசாயம் வீழ்ச்சியுற்றதற்குக் காரணமே பசுமைப் புரட்சிதான் என்பதை அந்த எம் எஸ் சுவாமி நாதனே ஒப்புக்கொண்டு பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டார்! ஆனால் இப்போதும் விவசாய ஆய்வாளராகவும் ஆலோசகராகவும் நமது வரிப்பணத்திலிருந்து ஏகப்பட்ட சம்பாத்தியம் செய்துகொண்டிருக்கிறார்! விசித்திரமான நாடு எங்கள் நாடு ஜயபாரதன்.
        -மலர்மன்னன்

      2. Avatar
        சான்றோன் says:

        திரு.ஜெயபாரதன் அவர்களே……,.

        நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்……என் தந்தை பத்தாம் வகுப்பு வரை படித்த எளிய வியாபாரி……காமராஜர் காலத்து காங்கிரஸ்காரர்……..காமராஜரைப்போலவே நேரு குடும்பத்தின்மீது தீராத விசுவாசம் கொண்டவர்….. படிக்கும் காலம் வரை நாங்களும் அப்படித்தான் இருந்தோம்…….படிப்பை முடித்து வேலைக்கு வந்த பிறகே நேரு குடும்பத்தின் திருவிளையாடல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது…..பிறகு அது தொடர்பான நூல்களை படித்து, பலரிடம் பேசி நேரு குடும்பத்தின் கோர முகத்தை அறிந்து கொண்டோம்…….அதன் பின் எங்கள் தந்தையோடு விவாதம் செய்வோம்…. நேருவும் அவரது குடும்பமும் இந்த நாட்டுக்கு விளைவித்த தீரா இன்னல்களை பட்டியலிடுவோம்…..எவ்வளவோ விளக்கம் அளித்தும் , இறுதி வரை அவரது கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை…..சமீபத்தில் மறைந்து விட்டார்…..அதிகம் படிக்காத எளிய மக்களை நேரு குடும்பம் எவ்வளவு தூரம் மயக்கி வைத்துள்ளது என்று நான் வியந்ததுண்டு…… ஆனால் இந்த கட்டுரை தொடர்பான உங்கள் கருத்தை படித்த பின்பு என் எண்ணம் மாறியது…….பெரும் அறிவியல் படிப்பு படித்து , பட்டம் பெற்று , அயல் நாட்டில் உயர் பதவியில் இருக்கும் உங்களைப்போன்றவர்களே இப்படி சிறுபிள்ளைத்தனமாக நேரு குடும்பத்தின் புகழ் பாடும் போது, படிப்புக்கும் பொதுஅறிவுக்கும் தொடர்பில்லை என்றே தோன்றுகிறது…..உங்களுக்கு இருப்பது வெறும் ராஜ விசுவாசம்……

        நாட்டுக்காக நேரு என்ன சாதித்தார் என்பதை மலர்மன்னன் ஐயா அவர்கள் பட்டியலிட்டு விட்டார்…..இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்…..

        ஆனந்த பவனம் எனும் ஒரு வீட்டை நாட்டுக்கு எழுதி வைத்து விட்டு நாட்டையே தம் பெயருக்கு பட்டா போட்டுக்கொண்டது நேரு குடும்பம்…..

        பெரும்பாலும் வெளி நாடுகளில் படித்த நேரு நம் தேசத்தின் பாரம்பர்யத்தையோ ,கலாச்சாரத்தையோ மதித்தவ‌ரில்லை…… அவர் பிரதமர் பதவி வகித்தபோது ,இந்தப்பதவியில் இருக்கும் கடைசி வெள்ளையன் நானென்று மவுண்ட் பேட்டனிடம் பெருமை அடித்துக்கொண்டவர்,……

        இந்தியாவுக்கு [ ஏன் உலகிற்கே] சற்றும் பொருந்தாத சோஷியலிசக்கொள்கையை நம் மீது திணித்தவர்…..அதனால் ஒரு காலத்தில் உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த நம் நாடு , இதர ஆசிய நாடுகளை விட பின் தங்க நேர்ந்தது……பொதுத்துறை நிறுவனங்களைப்பற்றி குறிப்பிட்டீர்கள்……போட்டியே இல்லாத தொழிலில் வெற்றி பெறுவது பெரிய விஷயமா?சகல துறைகளிலும் த்னியார் அனுமதிக்கப்பட்ட பின்பு நமது பொதுத்துறை நிறுவனங்கள்எவ்வளவுதூரம் பின் தங்கியுள்ளன என்பதை நீங்களே அறிய முடியும்…..பி.எஸ்.என்.எல் ஒரு நல்ல உதாரணம்…..

        ஐனூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒரு சிறு உரசல் கூட இல்லாமல் ஒன்றிணைத்தார் வல்லப்பாய் படேல் அவர்கள்…….தான் பிறந்த மாகாணம் என்பதற்காக காஷ்மீரை தம் பொறுப்பிலெடுத்துக்கொண்டார் நேரு……அவர் சொதப்பிய சொதப்பலால் உண்டான தலைவலி இன்றுவரை தீர வில்லை…. ஐ . நா . சபையில் இந்தியாவுக்கு கிடைக்க இருந்த வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை மறுத்தவர்….. இன்று நாம் அந்த அந்தஸ்தைப்பெற நாயாக அலையவேண்டியுள்ளது…..

        சோவியத்தின் காலனியாக இந்தியாவை மாற்றியவர் நேரு……..அதற்காக நம் நாடு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமல்ல……அணிசேரா நாடுகள் என்ற பெயரில் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து கொண்டு தெளிவாக சோவியத்துக்கு ஜால்ரா அடித்தார்……. சோவியத்துக்கு மாறாத விசுவாசம் காட்டிய நேரு குடும்ப‌த்துக்கு ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி மாதாமாதம் படியளந்தது மித்ரோகின் ஆவண‌ங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது…..சோவியத் வீழ்ந்த பிறகு உலகில் நமக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டது…….

        ஆசிய ஜோதி, சமாதானப்புறா போன்ற பட்டங்களுக்காக தேசத்தின் பாதுகாப்பை அலட்சியம் செய்தார் . ……..திம்மப்பா போன்ற தளபதிகள் ராணுவத்துக்கு நிதி கேட்டபோது நிர்தாட்சனயமாக மறுத்தார்….. அம்பேத்கர் உள்ளிட்ட பல தேசத்தலைவர்களின் எச்சரிக்கையை மீறி சீனாவுடன் நட்பு கொண்டார்…சூய் அன் லாயை நம் நாட்டுக்கு அழைத்து தோள் மீது கைபோட்டுக்கொண்டு இந்தி சீனி பாய் பாய் என்றார்….அவன் தன் நாட்டுக்கு திரும்பியவுடன் நம் மீது படையெடுத்து நம் நிலப்பகுதிகளை ஆகிரமித்துக்கொண்டான்…அவற்றை இன்றுவரை மீட்க முடியவில்லை…..அருணாசலப்பிரதேசத்தை காப்பாற்றிக்கொள்வதே பெரும் பாடாக உள்ளது…..

        ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர் எல்லாதுறையிலும் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை….இருப்பினும் சமகால வரலாற்றையேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…..ராஜ விசுவாசம் எனும் கண்ணாடியை கழட்டி விட்டு சரித்திரத்தை கவனியுங்கள்…….

  20. Avatar
    Rama says:

    Mr சான்றோன் , thank you for your comments. Kudos.
    “நீங்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் என்பது தெரியும். அதற்கிணையாக நகைச்சுவையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். ஜெயபாரதன்”
    Thank you Mr பொன்.முத்துக்குமார்.
    Shri Malrmannan, I was there at the meeting in Coimbatore during Emergency. Mr Cho Ramaswamy, Mr Kannadasan, Mr Palki Walla were the main speakers. They were bold in their speech,taking Indira Gandhi apart and courting arrest from the enormous police presence.Here I have to mention about one Mr Pattabhi Raman, a local Councillor, who stole the show with harsh criticism of IG with his dynamic speech.It was great occasion and sort of a wake up call to the society to stand up against tyranny.
    Bottom line: IG was the most corrupt, power hungry PM India ever had.Why not use the term Shrimathi IG instead of Annai and Thyaga Deepam? OH,When will we ever grow up? Politicians are there to serve the community. They are servants of the people.Stop worshiping them.

  21. Avatar
    மலர்மன்னன் says:

    Thnak you, Sri Raamaa, for the informtion. So far I know, nobody was sent to jail on that day for speaking against Indira Gandhi. Political Arrests started only after Jnauary 31, 1976, when DMK government headed by Karunanidhi was ousted. My book on Khilafat is being delayed, as I need some more costly books and you know where the problem lies!
    -Malarmannan

  22. Avatar
    paandiyan says:

    திரு மலர்மன்னன் சொன்னது போல இந்திராவின் துரோகத்தை பக்கம் பக்கமாக எழுதிகொண்டு போகலாம். பேசாமல் இந்த கட்டுரையை இப்படி முடித்து விடலாம் — இந்திராவா இந்திய — இந்தியாவ இந்திரா என்று கோஷம் எழுப்பிய / மக்களை முட்டாள் ஆக்கிய கூட்டத்தின் எச்சம் இல்லை சொட்சம் இன்னும் நிறையவ இந்தியாவில் இருகின்றது என்பது இங்கு தெளிவாக புரிகின்றது. மற்றபடி வாஜ்பாயி பற்றி இங்கு சொல்லவேண்டுமானால் அவருக்கு வேலை செய்துமுடிக்க நிறைய அவகாசம் வேண்டும், அது இல்லை.. ஆனால் குறைந்த காலத்தில் நிறைய சாதித்தவர் அவர்.இன்றைய பொருளாதார சரிவை பார்பவர்கள் அவரை பார்த்து பெருமை படலாம். வயதானலும் காபினெட் முடிவு இல்லமால் தாந்தோன்றித்தனமாக செய்ய அல்லது செயல்பட யாரையும் அனுமதிக்காதவர். உறுகாய் உழலில் கூட பிரதமர் என்று பேசப்பட்ட காலத்தில்,நமக்கு கிடைத்த நேர்மையானவர் அவர்.

  23. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ ஜயபாரதன், எவ்வளவு அழகான பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் என்னை ஏமாற்றிவிட்டீர்களே!
    லாஹூர் என்பதன் பெயர்க் காரணம் அறிவீர்களா? லவபுரி! அதாவது மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் திருக் குமாரர் லவனின் பெயரால் அமைந்த, அவர் உருவாக்கிய நகரம்! ஹிந்துக்களுக்கு எவ்வளவு முக்கியமான கலாசார நகரம் தெரியுமா? ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணந்து ஒற்றுமையாய் வாழ்ந்த ராம ராஜ்ய நகரம்! முஸ்லிம் லீக், காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அநியாயமாகப் பிளவுண்டு சீர்குலைந்த நகரம்! ஹிந்துக்களும் சீக்கியரும் வீடு வாசல், மானம் மரியாதை எல்லாம் இழந்து உயிர் தப்பி ஓடி வர நேர்ந்த நகரம்! பிரிவினையின் போது நகர நிர்வாகமும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கையில் இருந்தது. அவர்கள் ஹிந்துக்களும் சீக்கியரும் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்தார்கள்! ஆதாரம் உண்டு என்னிடம்! அதேபோல் மனிதாபிமானம் மிக்க சில முஸ்லிம்கள் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றி, அவர்கள் பத்திரமாக ஹிந்துஸ்தானம் திரும்ப உதவியதற்கும் என்னிடம் ஆதாரங்கள் உண்டு. லாஹூர் பஞ்சாபி முஸ்லிம்கள் அடிப்படையில் ஹிந்து கலாசாரத்தில் நாட்டம் மிக்கவர்கள். நமது சாஸ்த்ரிய சங்கீதத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைக் கொண்டாடுபவர்களும்தான்! அவர்களை மதத்தின் பெயரால் ஹிந்துக்களுக்கு எதிராகத் தூண்டி விட்டது ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்த முஸ்லிம் லீக் குண்டர்களே!
    -மலர்மன்னன்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்திரா காந்திக்கு உள்ள மனோபலம், சிந்தனை, எதிர்கால நோக்கு, வைராக்கியம், ஆளும் திறமை, தேசப் பற்று “மன்னன்” என்று பெயர் வைத்துக் கொண்டவருக்கு 50% கூட இல்லை என்பது என் கருத்து.

      தேசத்தை ஆட்சி செய்ய வெறும் வரட்டு பகுத்தறிவு மட்டும் போதாது.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        மலர்மன்னன் says:

        ஸ்ரீ ஜயபாரதன்,
        மலர் மன்னன் என்ற பெயர் அண்ணா அவர்களால் எனக்குச் சூட்டப்பட்டது நானாக வைத்துக் கொண்டது அல்ல! அண்ணா எனக்கு அப்படிப் பெயரிட்டபோதே அது மிகவும் நாடகத் தன்மையாக, செயற்கையாக இருப்பதாகத்தான் அபிப்பிராயப்பட்டேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற ஜனநாயகத்தை நினைவூட்டத்தான் சாதாரண ஆளான உன்னை மன்னன் என்று அழைக்கிறேன் என்று சமாதானம் சொன்னார். அவர் மீது எனக்கு உள்ள மரியாதையின் காரணமாக அவர் வைத்த பெயரையே நிரந்தரமாக்கிக்கொண்டேன்.
        கடுமையான கருத்தையும் மலர் போன்ற மென்மையுடன், ஒரு மன்னனுக்குரிய மிடுக்கான நடையில் எடுத்துச் சொல்லும் மலர்மன்னன் என்று அண்ணா அவர்கள் ஒரு முறை தமது திராவிட நாடு இதழில் எழுதினார்கள்.
        ஸ்ரீ ஜயபாரதன், நீங்கள் பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் கடுமையாக உழைத்துத் தமிழுக்கு அருந் தொண்டாற்றி வருகிறீர்கள். தமிழில் இவ்வளவு சிறப்பாக அறிவியல் கட்டுரைகளை எப்படி இவரால் எழுதமுடிகிறது என்று வியப்பேன். மிகவும் நுட்பமான, புரிந்துகொள்ளச் சிரமமான விஷயங்களையும் ஆனாயாசமாக விளக்கும் பேராற்றல் மிக்கத் தங்களின் தமிழ்ப் பணிக்கு என்றென்றும் தெண்டனிடுவேன். நீங்கள் என்னை எவ்வளவுதான் பரிகசித்தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். உங்கள் தொண்டைப் புகழ்ந்து விதந்தோதுவதையும் நிறுத்த மாட்டேன்!
        அன்பு கூர்ந்து எனது பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
        -மலர்மன்னன்

      2. Avatar
        சான்றோன் says:

        ஜெயபாரதன் அவர்களே….

        நாட்டை ஆண்டவர்களைப்பற்றி மட்டுமே பேச்சு…….மலர்மன்னன் ஐயா அவர்கள் நாட்டை ஆள முற்படவில்லை…..எனவே உங்கள் ஒப்பீடு சிறிதும் நியாயமற்றது…..

        வங்கதேசப்பிரிவினையை இந்திராவின் சாதனையாக முன் நிறுத்துகிறீர்கள்……ஒரு தேசத்தை ஆள்பவருக்கு குறைந்த பட்சம் சம கால வரலாறு தெரிந்திருக்க வேண்டும்…….கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்……பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்…..

        தேசப்பிரிவினைக்கும், வங்க தேசப்போருக்கும் அதிக கால வித்தியாசமில்லை….வெறும் இருபது வருடங்கள் மட்டுமே…… 1947 -ல் வங்கத்தில் [ ஒன்றிணைந்த இந்தியாவில்] சுஹ்ரவர்த்தி என்ற இஸ்லாமிய வெறியனின் தலைமையில் ” நேரடி நடவடிக்கை ” என்ற பெயரில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்….ஹிந்துப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்……ஹிந்துக்கள் பதிலடிகொடுக்க முற்பட்டபோது சுஹ்ரவர்த்தி காந்தியிடம் சரணடைந்தார்…….அவரையும் உடன் அழைத்துக்கொண்டு காந்தியடிகள் நவகாளி யாத்திரை சென்று ஹிந்துக்களை [மட்டும் ] அமைதிப்படுத்தினார்……

        இத்தனை காலம் உடன் வாழ்ந்து வந்த ஹிந்துக்களை , மதத்தின் பெயராலொரே நாளில் கொன்று குவித்த‌வர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதை அறிய வேண்டாமா? அவர்களுக்கு உதவி செய்யும் முன் சற்று யோசிக்க வேண்டாமா?

        இன்று என்ன நடக்கிறது? நம் உதவியால் சுதந்திரம் பெற்றவர்கள் நமக்கே துரோகம் செய்கிறார்கள்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ////ஸ்ரீ ஜயபாரதன், எவ்வளவு அழகான பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் என்னை ஏமாற்றி விட்டீர்களே! ///
      Who are you Mr. Malarmannan ? My God Father ????
      S. Jayabarathan

      1. Avatar
        மலர்மன்னன் says:

        ஜயபாரதன் என்ற அருமையான பெயரை வைத்துக்கொண்டு பாரதத்திற்கு நன்மைகளைவிடத் தீமைகளைப் பன்மடங்கு விளைவித்த தலைவர்களைக் கொண்டாடுகிறீர்களே என்கிற ஆதங்கத்தில்தான் என்னை ஏமாற்றிவிட்டீர்களே என்று எழுதினேன். அதற்காகச் சினம் கொண்டு நீ யார்? எனது ஞானத் தந்தையா என்று சீறி விழுவீர்கள் எனச் சிறிதும் எதிர்பர்க்கவில்லை.
        ஸ்ரீ ஜயபாரதன், வெறும் மக்கான எனக்குக்கூடப் புரியும் வகையில் தமிழில் மிகத் தெளிவாக நுட்பமான அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் மரியாதைக்குரிய தங்கள் மனதைப் புண்படுத்தி விட்டிருப்பேனாயின் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் பெரிய படிப்பெல்லாம் படித்து உயர் பதவிகள் வகித்து தற்போது ஓய்வு நேரத்தை அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றி வரும் கனவான். நானோ அடுத்த வேளை உணவுக்குக்கூட அவளே பார்த்துக் கொள்வாள் என்று குடும்பம் துறந்து வாழ்ந்து வரும் வெறும் ஆள். இடுப்பில் ஒரு துண்டு, மேலுக்கு ஒரு துண்டு இவ்விரு துண்டுகளே எனது உடை. நீங்கள் மதிப்பெண் போடுகிற அளவுக்கெல்லாம் எனக்குத் தகுதி கிடையாது. தயவு செய்து இப்படியெல்லாம் என்னை கெளரவித்து நாணமுறச் செய்யாதீர்கள்.
        பணிவன்புடன்,
        மலர்மன்னன்

  24. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த சஹோதரி ஸ்ரீமதி பவள சங்கரி

    ஒரு ஹிந்துஸ்தானப் பெண்மணி தேசத்தை ஆண்டார் என்பதில் நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். அது வரை சரி தான். ஆனால் எதிர் காலத்தில் தேசத் தலைவர்கள் பற்றி எழுதும் மற்றைய வ்யாசங்களில் நிறை குறை இரண்டும் சரியாக பக்ஷபாதமில்லாது எழுத விழையுங்கள். நீங்களூம் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி அம்மையாரும் மகிழும் படி ஆட்சி செய்த பல அல்லிராணிகள் சரித்ரத்தில் உண்டு என்றாலும் என் நினைவில் முக்யமாக நினைவுக்கு வருபவர்கள் ரஸியா சுல்தான் மற்றும் இஸ்ரேலின் ப்ரதமராக இருந்த கோல்டா மெய்ர் மற்றும் இங்கிலாந்து ப்ரதம மந்த்ரியான மார்கரெட் தாட்சர். கோல்டா மெய்ர் அம்மையார் பெரும் சாஹசக் காரர் என்பது மிக முக்யமானது. இஸ்ரேலை உருவாக்கிய சிற்பிகளான டேவிட் பென் குரியன் போன்ற சான்றோர்களுடன் தோளொடு தோள் கொடுத்து தேசத்தை உருவாக்கியும் உலகத்தில் இத்தேசத்தை மிக பலம் வாய்ந்த தேசமாக ஆக்கியதில் பெரும் பங்கு ஆற்றியவர்.

    இன்று பரங்கி கும்பினியர் தேசத்தை விட்டு அகன்ற நாள். மஹாத்மா காந்தியடிகள் மற்றும் அவரது ப்ரிய சிஷ்யர் பண்டித நேரு அவர்கள் ஹிந்துஸ்தானம் முழுதும் சென்று ஹிந்துஸ்தானம் பிளக்கப்படாது என்று பொய்க்கருத்துக்கள் பரப்பிய பின்னும் தேசப்பிரிவினைக்கு ஒப்புக்கொண்ட சோகத்தையும் பிரிவினையால் ரத்தம் சிந்தி தம் சொந்த ஊர்களை விட்டு வேறு பகுதிகளுக்கு ஹிந்துஸ்தான ஹிந்துக்களும் முஸல்மான் களும் புலம் பெயர நேர்ந்த அவலத்தையும் ஹிந்துஸ்தானம் பிளவு பட்டதையும் நினைவுறுத்தும் நாள். அகண்ட ஹிந்துஸ்தானம் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட ஹிந்துஸ்தானியர் நினைவு கொள்ள வேண்டிய நாள்.

    தேசப்பிரிவினைக்கு மஹாத்மா காந்தியடிகளும் காரணம் என்று தயங்காமல் கருத்து தெரிவித்த ஸ்ரீமான் மலர்மன்னனுக்கு நன்றி. காந்தியடிகளின் ராம நாம நிஷ்டை நான் போற்றும் ஒன்று. நான் மதிக்கும் கதா வாசக் ஸ்ரீ மொராரி பாபு அவர்களும் தன் ப்ரசங்கங்களில் இறக்கும் தருவாயில் காந்தியடிகள் ராம நாமம் சொன்னதாகக் கேட்டிருக்கிறேன். இது விவாதாஸ்பதமான விஷயம் தான். பின்னும் இறக்கும் தருவாயில் ராம நாமம் சொல்ல ஒரு வ்யக்தியால் முடிந்தது என்றால் அவர் மஹாத்மா தான் என்பது என் நம்பிக்கை. ஆம் இது நம்பிக்கை சார்ந்த விஷயம். காந்தி வணங்கிய ராமரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றத்தயங்காத புத்தி ஜீவிகள் காந்தியைப் பற்றி குற்றம் சொன்னால் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் போக்கு எங்கும் காணக்கிட்டுகிறது. அப்படியிருக்கையில் ராம பக்தரான மஹாத்மா காந்தியடிகளின் குறையை சப்ப்பை கட்டு கட்டாமல் பகிர்ந்தது நன்றே.

    அன்னை இந்திராகாந்தி. ஆம் அன்னை இந்திராகாந்தி செய்த உருப்படியான கார்யங்களில் ஒன்று பாகிஸ்தான் என்ற புளுகை உடைத்தது.
    ஹிந்துஸ்தான கலாசாரத்தில் பெண்மணிகளை அன்னையாகவும் சஹோதரியாகவும் பாவிப்பது அனைத்து ப்ரதேசங்களிலும் இருக்கும் பொதுவான விஷயம் தான். இதில் ஸ்ரீமான் ராமா அவர்கள் பிழை பார்க்க வேண்டாம். அடல்ஜீ அவர்கள் அன்னை இந்திராகாந்தியை துர்கா என்று புகழ்ந்ததாக ஒரு பொய் பரப்பப்பட்டு வருகிறது. பலமுறை அடல்ஜீ அவர்களே இதை மறுத்துள்ளார்.

    ஸ்ரீமான் மலர்மன்னன் மற்றும் ஸ்ரீமான் சான்றோன் இவர்கள் இருவரது பாங்க்ளாதேச பிரிவினை சார்ந்த கருத்தை வாசித்தேன். பாங்க்ளாதேசம் பிரியாதிருந்தால் கிழக்கிலும் மேற்கிலும் இவர்கள் அடித்துக்கொண்டு நாசமாயிருப்பார்கள் என்பது ஒரு கோணம் மட்டும் தான். விஷயத்தின் மற்றொரு கோணமும் உள்ளது. ஏதோ முஸல்மான் கள் ஒரே சமூஹம் என்றும் ஹிந்துக்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அடிப்படையில்லாத கற்பனையான ஒரு த்வேஷத்தை மட்டும் அடிப்படையாய் வைத்து உருவாக்கப்பட்டது பாகிஸ்தானம் என்ற உடோபியா. இஸ்லாம் மதம் என்ற அடிப்படையால் ஒரு சமூஹம் ஒரே தேசமாய் இருக்க இயலும் என்பது அண்டப்புளுகு என்பது உலகிற்கு பரைசாற்றப்பட்டது பாகிஸ்தானத்தைத் துண்டாடி பாங்க்ளாதேசம் உருவாக்கப்பட்டது. இதற்கு பங்களித்த அன்னை இந்திரா காந்தி ஸ்ரேயசுக்கு உரியவரே.

    பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்களிடம் 1971ல் பத்திரிக்கையாளர்கள் இருபத்து நாலு ஆண்டுகளில் ஒரே மதத்தின் பேரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானம் என்ற தேசம் பிரிந்தது ஆச்சரியமாக இல்லையா என கேட்டனர். அதற்கு அவர் இருபத்து நாலு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் பிரிந்தார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் இருபத்து நாலு ஆண்டுகளாக ஒன்றாக எப்படி இருந்தார்கள் என்பது தான் ஆச்சரியம் என பதிலிறுத்தார்.

    மீதியாய் உள்ள பாக்கி ஸ்தானத்திலும் பெருமைப்பட ஒன்றும் இல்லை. பாகி என்பது அமேரிக்க ஐரோப்பிய நாடுகளில் அவதூறான ஒரு சொல்லாடல்.ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுடஏன் ஷியா, ஸுன்னி, அஹமதியா, போரா, ஸூபி முஸல்மான் கள் மகிழ்ச்சியுடன் வாழ இயலுகிறது. த்வேஷத்தால் உருவாகி அதே த்வேஷத்தால் துண்டாடப்பட்டு இன்று இருக்கும் பாக்கி ஸ்தானத்தில் ஹிந்துக்களும் க்றைஸ்தவர்களும் கொடுமை செய்யப்படுகிறார்கள் என்பதெல்லாம் அடுத்தபடி தான். முஸல்மான் களும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது தான் உண்மை. ஸுன்னி முஸல்மான் கள் ஷியா முஸல்மான் களை கொன்று குவிக்கிறார்கள். பரேல்வி ஸுன்னி முஸல்மான் கள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் ஊர்வலம் நிகழ்த்தும் போதெல்லாம் தேவ்பந்தி ஸுன்னி முஸல்மான் கள் இவர்கள் ஊர்வலங்களீல் குண்டு வீசுவது ஒவ்வொரு வருஷமும் பாக்கி ஸ்தானத்தில் நிகழும் வைபவம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அஹமதியா முஸல்மான் களை கொடுமைப்படுத்துவதற்கு எல்லையே இல்லை. அஹமதியா முஸல்மான் கள் முஸல்மான் களே இல்லை என பாக்கி ஸ்தானத்து சர்க்கார் சட்டமிட்டுள்ளது. சிந்திகள் மற்றும் பஞ்சாபிகளை பலோசிஸ்தானத்திலிருந்து வெளியேறுமாறு பலோசிகள் மிரட்டுகிறார்கள். தார்-உல்-இஸ்லாம் என்ற இஸ்லாமிய தேசத்திற்கு செல்வதில் பெருமை கொண்டு ஹிந்துஸ்தானத்திலிருந்து சிந்த் மற்றும் மேற்கு பஞ்சாப் மாகாணத்திற்கு புலம் பெயர்ந்த ஹிந்துஸ்தான முஸல்மான் கள் இன்று ஆங்கு துயரப்படுவதில் எல்லையே இல்லை. பிரிவினையின் போது இங்கு வந்த சிந்தி, பஞ்சாப், மூல்தானி, பலோசி சரணார்த்தி ஹிந்துக்களை நாம் இன்று சரணார்த்திகள் (உருது பாஷையில் மொஹாஜிர்கள்) என அழைப்பதில்லை. ஆனால் இன்றும் பாக்கி ஸ்தானத்தில் இருக்கும் ஹிந்துஸ்தான முஸல்மான் களை மொஹாஜிர்கள் என அழைக்கினறனர். இவர்களின் மொஹாஜிர் க்வாமி மூவ்மெண்ட் கட்சித் தலைவரான அல்டாப் ஹுஸைன் அவர்கள் ஹிந்துஸ்தானப் பிரிவினை உலகத்தில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் தவறு என அப்பட்டமாக கூறியுள்ளார்.

    வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை (North western Frontier province – NWFP) பாக்கி ஸ்தானத்தில் இருந்து துண்டாட அமேரிக்கா திட்டமிட்டு வருகிறது என செய்திகள்.

    கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என ஒரு வசனம். ஹிந்துஸ்தான வங்கிகளில் உள்ள பணத்தை ஜனார்த்தன் புஜாரி என்ற மந்த்ரி மூலம் லோன் மேளா என்ற திட்டம் மூலம் கட்சிக்காரர்களுக்கு கடன் கொடுத்ததும் அவர்கள் பின்னர் கடன் பணத்தை ஏப்பம் விட்டதும் அதை பின்னாட்களில் தள்ளுபடி செய்ததும் கூட அன்னையாரின் துஷ்க்ருத்யங்களில் ஒன்று.

    இருபதம்ச திட்டம் அது இந்திராவின் திட்டம் என்றெல்லாம் பள்ளி நாட்களில் வானொலியில் எமர்ஜென்சி நாட்களில் விளம்பர பாட்டுகள் கேட்டது ஞாபகம் வருகிறது.

    சஞ்சய காந்தி விமான விபத்தில் இறந்த பின்னர் அன்னையார் தன் புத்ரனின் உடலைப் பார்க்குமுன்னர் ஏதோ கைக்கடிகாரத்தைத் தேடியதும் அன்னாட்களீல் பேசப்பட்ட செய்தி.

  25. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,
    உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கிழக்கு வங்க முஸ்லிம்கள் எல்லா முஸ்லிம்களையும்போல் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்கு அவர்களின் தாய்மொழி பிரதானம். உர்து மட்டுமே ஆட்சி மொழி, தொடர்பு மொழி என்று பாகிஸ்தான் சட்டம் இயற்றியபோது வீராவேசமாக மொழிப்போர் நடத்தியவர்கள் என்பதை அறிவீர்கள். 19905-ல் ஹிந்துக்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் பாடலைப் பாடி கொடிய அடக்குமுறைக்கு ஆளானவர்கள். நான் வந்தேமாதரம் பற்றி ஒரு விரிவான நூல் எழுதியுள்ளேன்(த்ரி சக்தி பதிப்பகம், சாஸ்த்ரிநகர், சென்னை 600 020 விலை ரூ 100/-) அதில் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் முழுமையாகப் பாடுவதில் தவறே இல்லை எனக் கட்டுரை எழுதிய கிழக்கு வங்க முஸ்லிம்கள் சிலர் பற்றி விவரித்திருக்கிறேன். இன்றும் வங்க தேசத்தின் அமார் சோனார் பங்ளா என்கிற தேசிய கீதம் ரவீந்திரர் எழுதியதுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களிடம் பிரபல முஸ்லிம் கவிஞர்கள் இருந்ததும் உங்களுக்குத் தெரியும். மேற்கு பஞ்சாப் முஸ்லிம்களுடன் கிழக்கு வங்க முஸ்லிம்களை வலுக் கட்டயமாக முடிச்சுப் போட்டதால்தான் ஹிந்து தர்மக் காவலர் குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் அவர்கள் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து இருந்ததுதான் ஆச்சரியம் என்றார். அவர்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அழிவார்கள் என்றுதானே சொல்கிறேன்? அதுதானே நடந்ததும்? இந்திரா காந்தி உதவியிருக்கக் கூடாது என்று சொல்ல வில்லையே! உதவியைத் தாமதப்படுத்தி விட்டார் என்றுதானே எழுதியிருக்கிறேன்?
    மேலும் இந்திரா காந்தியை துர்கையாக வரைந்தவர் ஓவியர் ஹுசைன்.
    இன்று வங்க தேசம் வஹாபி ஆதிக்கம் மேம்பட்டு எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது என்பதும் நீங்கள் அறிவீர்கள். பாகிஸ்தானுடன் உறவு வலுத்துவிட்டது. நமது கட்டுப்பாட்டில் வங்க தேசத்தை வைத்துக்கொள்ளத் தவறிவிட்டோம்.
    -மலர்மன்னன்

  26. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    திருமதி பவளசங்கரி, நான் பேசி அறிந்தவரை, நேரில் பழகியவனில்லை, ரொம்ப வெள்ளை மனதுடையவர். இந்திரா காந்தியைப் பற்றி, ஸ்கூலில் வியாசம் எழுதுகிற மாதிரி, தான் வியந்து போற்றும் ஒரு சரித்திர நாயகியைப் பற்றி ப்ரவசம்ப் பட்டு எழுதிவிட்டார். மகாத்மா காந்தியிலிருந்து ஜமீந்தார் வீட்டுச் செல்லப் பிள்ளை போன்ற அத்தனை குணங்களும் கொண்ட சஞசய் காந்தி வரை எல்லோரையும் நாம் போற்றிப் புகழ் பாடி அபிஷேகாராதனை செய்யும் குணத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம். எல்லோரும் விமர்சனத்துக்குரியவர்களே. காந்தியும் கஸ்தூரிபா வை அடக்கி ஆண்டவர் தான். முஸ்லீம்கள் கொல்லப்பட்ட நவ்காளிக்குத் தான் நடை பயணம் சென்றார். ஹிந்துக்கள் கொல்லப்பட்ட போது அஹிம்சை போதித்தார். சிலது சொல்வது அபச்சாரம் என்ற தர்மத்தை நாம் கடைப் பிடிக்கிறோம்.

    நல்ல வேளையாக, பவள சங்கரிக்கு இது ஒரு நல்ல அனுபவம். இந்திரா காந்தி, நேரு மகாத்மா பற்றியெல்லாம் கொஞ்சம் கூட தாக்ஷண்யம் பார்க்காமல் எப்படியெல்லாம் மறந்த உண்மைகளை, பவளசங்கரி அறியாத உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்கள் என்பதை பவள சங்கரி அறிந்து கொள்வார். ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் மனிதாபிமான கதை எழுதுகிறானே என்றதற்கு, நாம் நல்லதைத் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லும் வெள்ளை உள்ளம் அவருக்கு.

    இன்னும் ஒன்று. வசவசவெண்று சளைக்காமல் வாதிடும் காவ்யா, சுவனப்ரியன், பரமசிவம் எல்லாம் எங்கே காணோம்? பாப்பானைத் திட்ட, கழகத் தலைவர்களை பிரியாணி படைத்து பூஜிக்க வாய்ப்பு இருந்தால் தான் அவர்கள் வாய் திறப்பார்கள் போலும். இங்கு எவ்வளவு உரத்த மௌனம்.?

    1. Avatar
      Bala says:

      \இன்னும் ஒன்று. வசவசவெண்று சளைக்காமல் வாதிடும் காவ்யா, சுவனப்ரியன், பரமசிவம் எல்லாம் எங்கே காணோம்? பாப்பானைத் திட்ட, கழகத் தலைவர்களை பிரியாணி படைத்து பூஜிக்க வாய்ப்பு இருந்தால் தான் அவர்கள் வாய் திறப்பார்கள் போலும். இங்கு எவ்வளவு உரத்த மௌனம்.?\

      ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அர்ச்சகர் ஆகலாம், கருவறைக்குள் நுழையலாம், அவர்களுக்கு மட்டும்தான் அதற்குரிய குணவியல்புகள் இருக்கின்றன என்று சிலர் எழுதிக்கொண்டிருக்கும்போது நீங்கள் எங்கே போனீர்கள்?

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      தமிழ் நாட்டில் வரலாற்று நூல்கள் அபூர்வம். வரலாற்று நாயகர், நாயகிகளைப் பற்றி எழுதும் போது அவரது சீடரோ, தனி நபரோ நாயக /நாயகியைப் பற்றி முழுமையாக எழுத வேண்டும் என்ற கட்டாய மில்லை.
      அவரது நற்குணம், துர்குணங்களை எல்லாம் திரட்டிச் “சுய சரிதை” போல் எழுத வேண்டும் என்று சட்டம், விதி முறை அறிவிப்பது எழுதுவோர் எழுத்துரிமைத் தகர்க்கும்.

      இராம பிரான், மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, தந்தை பெரியார், இந்திரா காந்தி, வீர சாவர்க்கர், அண்ணாத்துரை, கருணாநிதி, மா.போ.சி, ராஜாஜி, காமராஜர், எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி முழுமையாக யார், யார் தமிழில் “வரலாறு” எழுதியுள்ளார் என்று சில பெயர்களைச் சொல்லுங்களேன்.
      சி. ஜெயபாரதன்.

  27. Avatar
    மலர்மன்னன் says:

    இஸ்லாம் அகிலம் என்பது வஹாபிசம். இது முஸ்லிம்கள் ஒரே இனம் என்னும் கருதுகோளை வலியுறுத்துவது. அதாவது தேசப் பிரிவுகள் கூடாது என்பது. இன்று பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இவை ஒரே தேசமாகிவிட வேண்டும் என்பது லட்சியம். ஆனால் நடக்கக் கூடியதா? இந்த அடிப்படையில் மேற்கு பாகிஸ்தான்-கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தைப் பற்றி யோசிக்க வேண்டுகிறேன்.
    வஹாபிஸம் பலவந்தமாக எங்கும் பரவி வருவது கவலைக் குரிய நிலைமை.
    -மலர்மன்னன்

  28. Avatar
    மலர்மன்னன் says:

    இந்திரா காந்தி தேடி எடுத்துப் போட்டுக்கொண்டது சாவிக் கொத்தை.
    தீரேந்திர பிரம்மச்சாரி விஷயமும் மறக்கக் கூடியதா? அவரும் விமான விபத்தில்தான் இறந்தார்!
    -மலர்மன்னன்

  29. Avatar
    knvijayan says:

    திரு.மலர் மன்னன் அவர்களிடம் ஒரு சந்தேகம்,1975 -அக்டோபர் 2 -இல் காமராஜர் மறைந்தார்,1976 -ஜனவரியில் dmk சர்கார் கவிழ்க்கப்பட்டது,காமராஜர் உயிரோடு இருக்கும்வரை தமிழ்நாட்டில் இந்திரா அடக்கிவாசித்தார் என எண்ணலாமா?

  30. Avatar
    punai peyaril says:

    சி எஸ் என்று ஒருத்தர் இருந்தார். அவர்களது தவறான நம்பிக்மையூட்டலில் இந்திரா நிறைய முட்டாள்தனம் செய்தார். காமராஜர் கைது செய்யப்படுவார் என்று கூட அப்போது பேச்சு இருந்தது. என்ன காரணம் எனினும் அப்போது கருணாநிதி கடுமையான , உறுதியான இந்திரா எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தார். அதைத் தான் பின்பு இந்திராவுடன் சர்க்கார் அமைக்கும் காரியமுடன் “இந்த கருணாநிதி எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அதில் உறுதியாக இருப்பான், நேருவின் மகளே வருக , நிலையான ஆட்சியைத் தருக “ என்ற பேச்சும், காமராஜர் தன் கையைப் பிடித்துக் கொண்டு தேசம் போச்சு தேசம் போச்சு என்று அழுததாக சொல்லும் பேச்சும் அடங்கும். சுவரஸியமான விடய்ம் அப்போதைய எம் பி யாக இருந்த சு.சாமி அப்போது அமெரிக்காவில் இருந்து தமிழகம் வழியாக பார்லிமெண்ட் போய் கையெழுத்துப் போட்டு பின் அமெரிக்க சென்றார். மேலும் பெர்னாண்டஸ் போறோர் தமிழகத்தில் பத்திரமாக இருக்க சோ, கருணாநிதி முக்ய காரணம். நம்மவர்கள் நேரத்திற்கு பஸ் வந்தது எமெர்ஜென்சி என்றும் , அரசு அலுவலகத்திற்கு 10மணிக்கு ஆள் இருந்தனர் என்பதையும் பெருமையாக சொல்வர். ஆனால், நடந்தது மிகப் பெரிய கொடுமையே… காமராஜரின் மரணத்திற்கு முக்ய காரணம் எமெர்ஜென்சி மன அழுத்தமே… ஆனால், நெடுமாறன் சிவாஜி மூப்பனார் போன்றோர் இந்திரா பக்கம் காமராஜர் மறைந்தவுடன் சாய்ந்தனர். அதையும் கருணாநிதியே , “கல்லறை ஈரம் காயும் முன்னே காங்கிரஸிற்குள் கலாட்டா…” என்றார். காமராஜர் மேல் ஒரு சிறு மரியாதை கலந்த பயமோ, இல்லை பயம் கலந்த மரியாதையோ இந்திராவிற்கு இருந்திருக்கலாம்… டில்லியில் இந்திரா ராஜீவ் நினைவகம்- சமாதி அல்ல – சென்றால் , இவர்கள் தான் காந்தியை விட முக்ய தலைவர்கள் என்ற தோற்றம் வரும். இவை இரண்டிற்கும் இணையாக அந்தமானில் இருப்பது போல் நேதாஜிக்கு நினைவகம் வேண்டும். நமது வாஞ்சிநாதனைப் பற்றி வடக்கத்திகாரனில் 99% பேருக்கு தெரியாது. இந்திரா காந்தி ஒரு கலாச்சார மேன்மையுள்ள நமது தமிழக எம் எல் ஏ வளர்மதி போன்றவர் தான்….

  31. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    பாலா,

    என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நான் குறிஒப்பிட்டவர்கள் ஏன் பதில் சொல்லவில்லை என்பது பற்றிச் சிந்தித்திருக்கலாம். அதெல்லாம் பற்றி உங்கள் சிந்தனை செல்லவில்லை. செல்லாது. ஏனெனில் உங்கள் சிந்தனையும் முனைப்பும் இளிச்சவாயன் என்று நீங்கள் நினைக்கும் ஒரு சாதியினரையே தாக்கி வீர தீர பராக்கிரமராய்விட்ட பிரமையில் ஆழ்வது. இது சிந்தனையில் வந்த பலம் அல்ல. பெரும்பான்மையில், போடும் கூச்சலில் உங்கள் கருத்து நிலைபெற்றுவிட்டதான மமதை. இங்கும் அது தான் நடக்கிறது. வைஷ்ணவ கோயில்களில் அய்யர் பட்டாசாரியராக முடியாது. மாத்வர் கோயிலில் அய்யங்கார் கர்ப்பக்கிரஹத்தில் நுழைய முடியாது. எந்த கர்ப்பகிரஹத்திலும் பூசை செய்பவர்களைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. பூசாரி இருக்கும் காளி கோயிலில் எந்த (உங்கள் சந்தோஷத்துக்கு) பாப்பானும் நுழைய முடியாது. தாழ்த்தப்பட்டவர்களை உள்ளொ நுழைய விடாது பெரும் போராட்டமே நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவு இருக்கும் இடத்தில் இன்னொரு பிரிவுக்கு இடம் இல்லை. வெட்டு குத்து நடக்கும். அது பற்றியெல்லாம் நீங்கள் மூச்சுக்கூட தவறிக்கூட விட்டு விடாதீர்கள். விட மாட்டீர்கள் எனக்குத் தெரியும். உலகம் அறியும். உங்கள் உயிரைப் பற்றி உங்களுக்குக் கவலை இராதா? பாப்பானை மாத்திரம் குறி வைத்துத் திட்டுவதில் தான் உங்கள் வீரமும், சாதி ஒழிப்பும் அடைபட்டுள்ளது. அந்த வரம்பை நீங்கள் தாண்டமாட்டீர்கள். நீங்கள் என்ன, ஈ.வே.ரா வே இஸ்லாமியனான தாழ்த்தப்பட்டவனி எப்படி நடத்துகிறான் என்பது பற்றி பேசியதில்லை. கிறித்துவர்கள் பேணும் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பே4சியதில்லை. அவருக்கும் தன் ஆயுட்காலம் நல்லபடியாக வாழ்ந்து உண்டு பாப்பானைத் திட்டிக்கொண்டு, சாதி ஒழித்த் தந்தை பெரியாராக புகழ் பெற வேண்டாமா?

    என்றைக்காவது நேர்மையா, உண்மையாக நீங்கள் சாதி ஒழிப்பைப் பற்றி சிந்தைக்கத் தொடங்குங்கள். அப்போது அது உங்களிடமிருந்து தொடங்கும். அது வரை உங்கள் பேச்சும் சிந்தனையும் நேர்மையற்றவை.

    கடைசியாக, எங்கள் ஊர் உடையாளூர், செல்வமாகாளி அம்மன் தான் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் குல தெய்வம். அங்கு பூசை செய்வது ஒரு பூசாரி. பரம்பரையாக நாங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதியினரும், நீங்கள் பகைக்கும் எங்கள் ஊர் பாப்பனுவளையும் சேர்த்து, அதில் என் பெற்றோரும் அடக்கம், எங்கே இருந்தாலும் ஊருக்கு வந்துவிடுவார்கள். அந்த ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு செல்லம் என்ற பெயர் கொண்ட பெண் உண்டு. சிவன் கோயில் உண்டு. பெருமாள் கோயில் உண்டு. இருப்பினும் குல தெய்வம் செல்வமாகாளி அம்மன் தான்.

    நான் என் பையனுக்கு முடியிறக்க, என் பேத்திக்கு முடியிறக்க தில்லியிலிருந்தும், பங்களூரிலிரு8ந்தும் உடையாளூர் போனோம். பூசைகள் செய்தது ஒரு பூசார். நைவேத்திய பொங்கல், வடை, சக்கரபொங்கள் எலலாம் செய்து கொண்டு வந்தது அந்த பூசாரி குடும்பம் தான்.

    இது ஏதாவது உங்கள் சிந்தனைகிகுள் புகுமா? ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துமா? எனக்கு நம்பிக்கையில்லை. உங்கள் பிரமைகளும் பகைமை உணர்வுகளும் தான் உங்களுக்கு வாழ்வளிக்கிறது. இல்லையெனில் மிகவும் சிறுமைப் பட்டுப் போவீர்கள்.

    வாழ்க்கை உண்மைகள் பற்றி உங்களுக்கு என்ன கவலை? உங்களிடம் தயாராக உள்ள வசவுகள். உங்களுக்கு பெருமை தருவதாக என்ணி மாய்ந்து போகிறீர்கள். நேர்மையற்ற வசவுகளும் இரைச்சல்களும் நிறைந்திருப்பதால் தான், சாதி ஒழிவதில்லை. அது ஒழிந்தால் திட்டுவது யாரை? பெரிமைப் பட்டுக்கொள்வது எதை வைத்து?

    1. Avatar
      Bala says:

      சாமிநாதன்,
      ‘அவரவர் அவரவர்க்கு விருப்பமான கருத்துகளையொட்டியே எழுதவோ, பின்னூட்டமிடவோ செய்வார்கள். இதைப் பற்றி ஏன் எழுதவில்லை, அதைப்பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி கேட்பது சரியில்லை’ என்னும் தொனியில்தான் என் பின்னூட்டம் அமைந்திருக்கிறது என்ற நினைப்பில் அந்தப் பின்னூட்டத்தை எழுதிவிட்டேன். வேறு பொருள்பட அமைந்துவிட்டதென்றால் தவறு என்பாலதே. என் பின்னூட்டத்துக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை.

      காவ்யா போன்றவர்களின் எழுத்துகளுக்கு நீங்கள் கொடுக்கும் அதே அடைமொழிக்கு உரித்தான உங்களுடைய பின்னூட்டத்தைப் படித்தவுடன் நாம் பொதுப்புத்திகளைப் பற்றிப் பேசுகிறோமா அல்லது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறோமா என்ற ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. (நான் தனிநபர் தாக்குதல்களில் இறங்கியதில்லை)

      என் பெயரைத் தவிர வேறெதுவும் தெரியாத நிலையில் நம் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறைமைகளை ஒப்பிட்டு முதுகில் தட்டிக்கொள்ளும் உங்கள் மமதையை என்னவென்பது?

  32. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தியப் பிரதமர் எவரும் பூரணப் பிரதமர் அல்லர். உன்னத மனிதர் உட்பட அனைவரும் குறைபாடு ஓரளவு இல்லாமல் அரசியலில் எவரும் ஆட்சி செய்ய முடிய வில்லை என்பது உண்மை. குறைபாடு இல்லாது இனியொரு பிரதமர் பிறக்கப் போவதுமில்லை. யார் ஆட்சி பீடத்தில் அமர்ந்தாலும் சில மக்களுக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகள் நேரத்தான் போகின்றன.
    ஆயினும் நற்குணம், துர்குணம், நற்செயல், துர்செயல், குறைபாடு, நிறைபாடு இவற்றை நிறுத்துப் பார்த்தால், நான் போற்றும் இந்தியப் பிரதமர் இருவர் : ஒருவர் பண்டித நேரு, அடுத்தவர் இந்திரா காந்தி.

    நண்பர் மலர்மன்னனுக்கும், சான்றோனுக்கும், ரமாவுக்கும், புனை பெயரானுக்கும் நேரு குடும்பத்தினரைப் பிடிக்கா விட்டால் என்ன ?
    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      punaipeyaril says:

      இது தான் ஜெயபாரதன் பிரச்சனையே… இங்கு நேரு குடும்பத்தை பிடிக்குதா இல்லையா என்பது பிரச்சனையில்லை… கொடுத்த பொறுப்பை எப்படி கையாண்டார்கள் என்பதே … நேருவை பொறுத்தவரை மேட்டுக்குடி மிராசுதாராய் மனோபாவத்துடனே இருந்தார். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இந்தியத் தீர்வு என்று நினைத்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்பந்த முன்னேற்றம் என்று ஒன்று உண்டு. உலகமெல்லாம் அணைகட்டினால் நாமும் கட்டுவோம் என்று தான் இருந்தார். கட்டிய அணைகளில் மின்சாரம் வந்ததே தவிர வேளான் பெருகவில்லை. அதனால் தான் இன்று, கலிஃபோர்னியா கிரேப்ஸ், ஆஸி ஓட்ஸ், யூரோ ஆலிவ், தாய்லாந்த் புளி, என்றானது. சரி, கட்சியிலாவது பரவலான மக்கள் இருந்தனரா..? எல்லா ஊர் பண்ணைகளும் காங்கிரஸ் தலைவரானர்கள்.. அதனால் தான் ராஜேஷ் பைலட் மகன், சிந்தியா குடும்பம், சரத்பவார் குடும்பம் என இருக்கிறது. மன்னர்கள் போய், பிரிட்டிஷார் போய், பண்ணைகள் ஆள்கிறார்கள். மொழிவழி மாநில பிரிப்பு என்று செய்து விட்டு, ஹிந்தி இணைக்கும் என்று நினைத்த முட்டாள்தனத்திற்கு ஈடேது…? ஹிந்தி இணைக்கும் என்றால், ஹிந்தி அதிகம் தெரிந்த பாகிஸ்தானியர் ஏன் பிரிந்தார்கள்…? இலவசக் கல்வி, சத்துணவு திட்டம் என்று யோசிக்க ஒரு சாதாரணக் கிராமத்தில் பிறந்த காமராஜருக்கு தோன்றிய அளவு இங்கிலாந்தில் படித்தவருக்கு ஏன் தோன்றவில்லை…? மாலை நேரத்து மயக்கம் தெளிய வேண்டும். இருளில் வாங்கினோம் , இன்று இணையத்தால் விடிவு வருகிறது… அதன் வெளிச்சத்தில் சில உண்மைகளை கண்ணைக் கசக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். யாராயிருந்தால் என்ன,…. ஆளும் பொறுப்பு என்பது சேவகப் பொறுப்பு… கடவுளையே இன்று கேள்வி கேட்டுப் பார்க்கும் காலம்…. என் வீட்டு வரவேற்பறையில் இந்திரா அலுவலகத்தி எடுத்த ஃபோட்டோ இருக்கிறது.. அது நினைவு.. அதற்காக உண்மை உணர்ந்த போது ஊருக்குச் சொல்லாமல் இருக்க முடியுமா…?

      1. Avatar
        S. Jayabarathan says:

        புனை பெயரான் !

        உமக்கு மன வலு இருந்தால் உமது உண்மைப் பெயரில் இந்திரா காந்தி பற்றியோ, பண்டித நேரு பற்றியோ, ஆதாரங்களுடன் குறைபாடு, நிறைபாடு இரண்டையும் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதிக் காட்டுவீரா ?
        சி. ஜெயபாரதன்

      2. Avatar
        S. Jayabarathan says:

        Someone asked Poet Iqbal who is Jinnah and who is Pandit Nehru.

        Iqbal replied: Jinnah is a politician, Pandit Nehru is a patriot.

        Iqbal is the Poet who coined the word “Pakistan.”

        Pandit Nehru is seen like a diamond crystal by his two great books: The Discovery of India and Glimpse of world History”.

        S. Jayabarathan

  33. Avatar
    Mayiladuthuraiyaan says:

    mika nalla vivaadhamedai. nalla pala karuthukal veli vandhu irrukkirathu. unnmai palanilaikalilum pala vidhangalilum thelivu paduthiyatharkku nandri.

  34. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    அன்புள்ள பாலா,

    உங்கள் பெயரைத் தவிர வேறு ஒன்று தெரியாத நிலையில்” என்று எழுதுவது அறியாமை தான். உங்கள் பெயர் என்னவாக இருந்தால் என்ன? காவ்யா என்று எழுதினால் அது புனைபெயர் போல பாலா என்பதும் புனைபெயராக இருக்கும். யார் கண்டது? அது பற்றிக்கவலை இல்லை எனக்கு. பாலா என்ற பெயரில் எழுதியவர் என்ன சந்தர்ப்பத்தில், யாருக்கு சார்பாக, யாரைக் கேள்வி கேட்டு எழுதுகிறார் என்பது தான் வேண்டும். உங்கள் சுயசரிதமோ, உங்கள் வாழ்க்கை விவரமோ, உங்களைப் பற்றிப் போலீஸ் விசாரணையோ அறிந்த பிறகு தான் நான் உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதில்லை. இங்கு யாரும் எவருக்கும் என்ன சந்தர்ப்பத்தில் என்ன எழுதுகிறார், அவர் எழுத்தின் சார்பு என்ன என்பது தெரிந்தால் போதும். அதற்குத் தான் பதில் எழுதப்படுகிறது.

    காவ்யா, பரம சிவம், சுவனப்பிரியன் போன்றோருக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு, என்னைக் கேள்வி கேட்ட நீங்கள், என் பதிலை எதிர்கொள்ளாமல் ஏன் நழுவுகிறீர்கள்? கூட்டத்தோடு சேர்ந்து கல்லெறிந்துவிட்டு, ஓடும் street urchin-ஆ நீங்கள்? மமதை எங்கிருந்து வந்தது என் பதிலில்?

    பொறுப்புடன் நீங்கள் யாருக்காக ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொண்டீர்களோ அதில் தொடர்ந்து நிறக மனமும் தீவிரமும் இல்லையென்றால், மமதை, அது இது என்று கல்லெறிந்து ஓடவேண்டாம்.

    ஓடி விடும் street urchin-ஐத் துரத்திக்கொண்டு ஓடும் மனம் எனக்கில்லை.

    பொது மேடைகளில் பொறுப்புடன் செயல்படுங்கள். உங்களூக்கென்று சுதந்திர சிந்தனையும் கருத்தும் தார்மீக நிலைப்பாடும் வேண்டும். கல்லெறிந்து விட்டு ஓடி ஒளிவது அழகல்ல.

    1. Avatar
      Bala says:

      சாமிநாதன்
      நான் பின்னூட்டமிட்டதற்கான நோக்கம் என்ன என்பதையும் அதற்கான என் வருத்தத்தையும் தெளிவாகக் கூறிவிட்டேன். இதன் பிறகும் நீங்கள் உங்களுடைய எந்தக் கேள்விக்குப் பதில் கேட்கிறீர்கள்?
      என் விவரங்களை அறிந்தபிறகுதான் எனக்குப் பதில் எழுதவேண்டும் என்று நான் எப்போது எங்கே எழுதியிருக்கிறேன் என்று தயவு செய்து கூற முடியுமா?

      என் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்கள் நுண்மான் நுழைபுலத்தால் கண்டாராய்ந்துவிட்டதான நினைப்பில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் சவால் விடுவது மமதையல்லாமல் வேறென்ன?
      {காவ்யா போன்றவர்கள் ஏன் இதைப் பற்றிக் கருத்துரைக்கவில்லை, ஏன் அதைப் பற்றிக் கருத்துரைக்கவில்லை என்று கேட்பது சரியில்லை என்பதுதான் என் கருத்து} காவ்யா என்ற பெயருக்குப் பதிலாக வெங்கட் சாமிநாதன் என்று போட்டுக்கொண்டாலும் இந்த என் கருத்தில் மாற்றமில்லை.

      இதற்குப் பின்னரும் உங்கள் கற்பனையில் உருவக்கிக்கொள்ளும் ஒரு பாலா என்னும் ரவுடியுடன் கட்டிப்புரள்வதுதான் உங்கள் விருப்பம் என்றால் நான் என்ன செய்வது, விலகி ஓடுவதைத் தவிர?

  35. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ உன்னத மனிதர் உட்பட அனைவரும் குறைபாடு ஓரளவு இல்லாமல் அரசியலில் எவரும் ஆட்சி செய்ய முடிய வில்லை என்பது உண்மை. குறைபாடு இல்லாது இனியொரு பிரதமர் பிறக்கப் போவதுமில்லை.\

    ஸ்ரீமான் ஜெயபாரதன், இந்த வ்யாசம் முழுதும் ஸ்ரீமதி இந்திராகாந்தியின் நிறைகளை மட்டும் பட்டியலிட்டு குறைகளை அறவே ஒதுக்கியதாய் அமைந்தது. அவ்வாறிருக்கையில் குறைகள் பட்டியலிடப்படுவது இயல்பே.

    \நண்பர் மலர்மன்னனுக்கும், சான்றோனுக்கும், ரமாவுக்கும், புனை பெயரானுக்கும் நேரு குடும்பத்தினரைப் பிடிக்கா விட்டால் என்ன ?\

    குறைகள் பட்டியலிடுபவரை “நேரு குடும்பத்தினரைப் பிடிக்காதவர்கள்” என ஏன் அடையாளப்படுத்துகிறீர்கள்? பண்டித நேருவிலும் ஸ்ரீமதி இந்திராகாந்தியிலும் உங்களுக்கு நிறைகள் அதிகம் தென்படுவது போன்றே மற்றையோருக்கு குறைகள் தென்படலில் என்ன தவறு.

    மஹாத்மா காந்தி அவர்களிடம் குறை காண்பவர்களை அவர்கள் காணும் குறையை விவாதம் செய்வதை விடுத்து அவர்களை “காந்தி வெறுப்பாளர்கள்” என சுட்டும் காந்தி பக்தர்களின் இணையப்போக்கையே இதிலும் காண்கிறேன்.

  36. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பண்டித நேரு, இந்திரா காந்தி செய்த நற்செயல்கள் பலரது கண்ணில் படவில்லையே. ஒருகண் பார்வைக்காரர் மற்றவரைக் குறை கூறுவது நியாமல்ல.
    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      punai peyaril says:

      கனடா , அமெரிக்காவில், ஊனமுற்றோர் அடையாளங்களை கேலிக்கோ தரக்குறைவாகவோ பயன்படுத்துதல் குறை சொல்லுதல் ஜெயில் தண்டனைக்குறிய குற்றம்… ஒரு கண் இல்லாமல் உலகை புரிந்து கொள்ள முடியும்… அதற்கு தேவை திறந்த மனது.

Leave a Reply to பவள சங்கரி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *