திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 14 in the series 12 ஜூன் 2022

எத்தனையெத்தனை அவலங்கள்

அலைச்சல்கள்

அஞ்ஞாதவாசங்கள்

மதிப்பழிப்புகள் மரணங்கள்

மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க

மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்

கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து

நடந்துவந்த திரௌபதி

ஆங்கே யொரு கருங்கல்லில்

சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த

கோட்டோவியத்தில்

தன் கைகள் அண்ணாந்து

அபயம் தேடி உயர்ந்திருக்க

துகில் மறைக்காத மார்பகங்கள்

தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்

நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்

மார்பை மறைத்திருந்தது துகில்.

சுற்றுமுற்றும் பார்த்தாள்.

அது அரசவையில்லை.

கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை

யானை குதிரைச் சடலங்களைப்

பார்த்தாள்.

கண்ணீர் வழியத் தொடங்கியது.

தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற

உயிர்த்தியாகம் செய்தனரோ

அந்த மானம் அதோ கப்பலேற்றப்

பட்டிருக்கிறது.

தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்

நெளிவும்

தீர்க்கமான நீட்டலும்

ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.

ஆனாலுமென்ன

அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்

அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி

யோலம் எட்டா வெளியில்

அதேபோல்

இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்

தயாராகிக்கொண்டிருக்கும்

தூரிகைகள்.

Series NavigationPEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *