துண்டுத்துணி

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

 சுப்ரபாரதிமணியன்

 

“ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது..

“நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும்  இன்னிக்கும், நாளைக்கும் சும்மா இருக்கறது தானே. நெய்யி”

ராதிகா அப்பாவின் தறிப்பக்கம் வந்து உட்கார்ந்தாள்.

“அப்பா.. அக்கா, துண்டுத்துணி நெய்சா நீங்க கேக்கக் கூடாது. அதெ வித்து நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறதுக்கு காசு வெச்சுக்குவம்..”

ரங்கசாமி கண்களை இடுக்கிக் கொண்டு தறிக்குழியை பார்த்தார்.இருண்டு கிடந்தது. அது எப்போதும் இருண்டு பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.

“செரி.. நானென்ன கேக்கவா வர்ரேன்..”

“அப்புறம் எனக்கு  கம்மல் எப்ப வாங்கித்தர்ரீங்க..”

தலையைத் தூக்கியபடி கண்ணாடியை கழற்றினார் ரங்கசாமி. தறிஇயக்கம் நின்றது. வெளியே பார்த்தார். ரொம்ப நாளாய் ராதிகா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். முடியவில்லை. இம்மாதம் இம்மாதம் என்று தவணையில் சொல்லிக் கொண்டிருந்தார். காற்றின் திசை மாற்றிக் கொண்ட்து  போல அவரைக் கடந்து தறியுள் வந்து புகுந்தது. நாகமணியின் கம்மல்களில் எண்ணைய் கோர்த்துக்கொண்டதென்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ வாங்கணுன்னா வாங்கலாம்..ஆனா.”

“என்னப்பா ஆனா..”

“நெசவு ஸ்டிரைக் வரும் போலத் தோணுது. அருணாச்சலம் கூட சொன்னார். இன்னிக்கு சாயங்காலம் மேட்டுப்பாளையம் நெசவாளர் சங்கம் பக்கம் போகலாம்ன்னு இருக்கன். தர்மன் கூட வர்ரன்னு சொன்னார். போய் வெவரமா கேக்கணும். ஸ்டிரைக் ஏதாச்சும் இருந்துச்சுன்னு இருக்கற காசையும் செலவு பண்ணிட்டு என்ன பண்றதுன்னு பாக்கறேன். எதுக்கும் ராத்திரிக்கு சொல்லிர்ரனே.. ஸ்டிரைக் எதுவும் இல்லீன்னா வாங்கித் தர்ரேன்..”

ராதிகாவிற்கு முகம் இருண்டது. சுவற்றைப் பார்த்தாள். ssஅவளின் சின்னக் கனவு சுவற்று இருட்டில் எழுதப்பட்டது போல இருந்த்து.

“ஸ்டிரைக்காப்பா”

“சொன்னாங்க..”

“இப்பதா வரணுமா அது..”

“என்னோட அதிர்ஷடம் அவ்வளவுதா..” சர்ரென்று எழுந்து போனாள்.

“அப்பிடியெல்லா இல்லே”

“என்ன ரங்கசாமி எந்திரிக்கறையா.. மேக்கால போயிட்டு வர்லாம்” தர்மன் நூல் கட்டொன்றை தோளில் போட்டபடி நின்றிருந்தார்.

“இரு. வந்தர்ரென்..”

“வான்னா..என்ன”

“இரு வந்தர்ரன். புட்டா ஒண்ணு போட்டுகிட்டிருக்கன். எப்பிடி சட்டுன்னு எந்திரிச்சு வர்ரது..”

“சவுண்டம்மன் கூப்புட்டே வராத நம் சமூகம் இதிலெ நீயென்ன..”

 

தேவாங்கன் மும்முரமாக நெசவு நெய்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் சவுண்டம்மன் சிம்ம் வாகனத்தில் வந்து நின்றாள். அவனை வா என்றாள். அவன் நெய்வதில் மும்முரமாகவே இருந்தான்.

“யார்..”

“உன் குலதெய்வம் சவுண்டம்மன்”

“என்ன அவசர வேலையா.”

“நான் கூப்படற அவசரம் புரியலையா..”

“உம்ம்..”

“மொதல்லே எழுந்து வாப்பா.”

“இந்த ஒரு கூத்து படமர நெசவே முடிச்சர்றேன். கொஞ்சம் பொறு அம்மா”

“நான் வந்துக் கூப்புட உனக்கு வேலை அவ்வளவு பெரிசா போச்சா.”

“காலம் நேரம் பாக்காமெ நெய்சாதா கஞ்சி கெடைக்குதம்மா.”

“காலம் பூரா தறிக்குழிக்குள்ளயே கெட”

சாபமிட்டுப் போனாளாம். அதனால்தான் வீட்டில் எல்லோரும் உழைக்க தறிக்குழிக்குள்ளேயே நெசவாளன் உட்கார்ந்திருக்கிறான். ஜீவனத்திற்கான போராட்டம் அவனை ஓய்வில்லாமல் தறிக்குழிக்குள் உட்கார்ந்து அவனை நெய்யச் செய்கிறது.

அமாவாசையன்று நெய்கிற தொழிலை நிறுத்தி வழிபாடு செய்வதற்கென்று அமாவாசையன்று நெசவுக்கு விடுமுறை விடப்படுகிறது. அமாவாசை பூஜைக்கென்று யாராவது சொல்லி வைத்து விடுவார்கள். வழக்கமான பூஜை சாமான்களோடு ‘தளிகை’யாக பொங்கலும், புளிச்சாதமும் பூஜை நேரத்தில் இருக்கும்.

 

ர்மன்  “செரி. எந்திரிச்சா வா. மேக்காலத் தோட்டத்திலெ இருப்பன்” என்றபடி நகர்ந்து விட்டான். சேவற்கட்டு கோழி ஏதாவது ஊருக்குள் வந்திருந்தால் தர்மன் கிளம்பிப் போய்விடுவான். எப்பவாவது சந்தைநாளன்று தர்மனுடன் சேர்ந்து கொண்டு ரங்கசாமியும் பேருந்து ஏறி சேவல்கட்டுக்கு எளச்சி பாளையம் போய்வருவார். போன பலமுறைகள் வெறும் கையோடுதான் திரும்பியிருந்தார்கள். ஜெயிப்பும் இல்லை. வெலைக்கு கோச்சைக் கறியும் கிடைப்பதில்லை. போலீஸ் தொந்தரவுக்கு பயந்து ஓடிவர வேண்டியிருக்கும். “இந்த கெரகமே வேண்டாம்” என்று விட்டுவிட்டார். தர்மன் வார்த்தைகளுக்கு ஆறுதல் தருவது போல் அவனுடன் சேவல்கட்டு பற்றி நாலு வார்த்தை பேசிக் கொண்டிருப்பார்.

 

மல்லிகா சேலையை கத்தியில்  ‘அறுத்து’ தறிச்சட்டத்தின் மேல் போட்டாள். துண்டுத்துணியை செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொரு பாவுக்கும் குறிப்பிட்ட ஜந்து அல்லது ஆறு சேலைகளுக்கு மேல் நூல் இருந்தால் அது இருக்கும் வரை நெய்வர். அது துண்டுத்துணி எனப்படும். ஜந்து ரூபாய்க்கு நூல் கடைகளில் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். அல்லது பெண்கள் ஜாக்கெட்டிற்கு அந்த துண்டுத் துணியை உபயோகித்துக் கொள்வார்கள். நெசவாளர்கள் வீட்டுப் பெண்களின் பெரும்பான்மையான ஜாக்கெட்டுகள் இந்த துண்டுத்துணிகளாலேயே இருக்கும். பல வர்ணங்களில் மினுங்கும். வழக்கத்தைவிட சற்றே கெட்டியாக அடித்து நெய்வர் கனவுகளோடு நெய்யப்பட்டது போலிருக்கும்.

“அப்பா கலர் நூல் போட்டு நெய்யட்டுமா..”

“பாவுக்கலர் போட்டு நெய்சா விக்கலாம். போடறதுக்கு ஜாக்கெட் துணிக்காக வேணுமுன்னா கலர் நூல் போட்டுச்சு. எதுக்கும் பாவு கலர் நூலே போட்டு நெய்யி..”

“அப்பா ஸ்டிரைக் வந்துட்டா என்ன பண்றதுங்கறே நெனைப்பில்லியே இருக்கார் போலிருக்கு..”

“என்ன..” அவரின் பார்வை எதிர் சுவற்றிலேயே இருந்தது. சவுண்டியம்மன் உட்பட கடவுளர்கள் தென்பட்டனர்.

“துண்டுத்துணியெ விக்கலாமுன்னு சொல்ல வந்ததெ..’

மல்லிகா இதை கிண்டல் தொனியில் சொல்கிறாளா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. மல்லிகாவிற்கு ஒரு நிமிஷம் வருத்தமாய் இருந்தது. அப்பாவிடம் அப்படி கேட்டிருக்கவேண்டாம் என்று பட்டது. ஒருவித ஓய்வை உணர்பவர் போல் முகட்டைப் பார்த்தார். அம்மா முறத்ஹ்டுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து சோளத்தைப் புடைக்க ஆரம்பித்தாள்.

பொன்னு ஏதோ புத்தகத்தை எடுத்து வந்து படிக்க உட்கார்ந்தான். சிவப்பு எழுத்துக்களால் அது மின்னியது.

“பொன்னு..என்ன பண்றே..”

“படிக்கறேன்.”

“என்ன புக். கட்சி புக்கா இல்லே வேலை பரீட்சிக்கான புக்கா..”

“நாவல். தோழர் ஒருத்தர் தந்தார்..”

“புட்டா போடலாமான்னு..”

“சேலை அறுத்துப் போட்டுக் கெடக்குது. அப்புறம் எதுக்கு புட்டா.”

“துண்டுத்துணி நெய்யறான். ரெண்டு எடத்திலெ புட்டா போட்டா ஒரு ரூபா அதிகம் வரும்ன்னுதா..”

“துண்டுத்துணி வித்து என்ன பண்ணப் போறே..”

“ராதிகா சினிமாவுக்கு போலாமுன்னு சொன்னா.நீயும் வர்ரியா.  அம்மாவும் வருவாங்க ”

“நான் வர்லே. நீங்க பாக்கற படத்துக்கா.”

பொண்ணு தறியில் போய் உட்கார்ந்தான். ஜரிகை இழைகளை ‘புட்டா’ டிசைன் போட கத்தரித்தான். ஜிகினா தன் கைகளில் மினுங்கியது. பார்க்கச் சந்தோஷமாய் இருந்தது. முன்வாசல் வேப்பமரம் காற்றை வாரியிறைத்த்து. செம்பூத்து ஒன்றின் குரல் பக்கத்ஹ்டில் துல்லியமாய் கேட்டது.

“நீங்க பாக்கற படத்துக்கு நான் வர்ரதுன்னா கேக்கறே.. நீ படிச்சதுன்னாலே இது பேசறெ. நீயும் தறிக்குழியிலெ உக்கார்ந்திருக்கணும்..”

“உக்கார்ந்திருந்தா அந்த வாழ்க்கையும் சந்தோஷமாத்தா இருக்கும். இப்ப படிச்சிட்டு வேலையில்லாமெ இருக்கறது. இன்னம் சில புது அனுபவங்களதா..”

“செரி.. உங்க கட்சிக்காரங்க நாடகமெல்லா டவுன் ஹால்லே, சபால்லே எப்ப போடுவீங்க..”

“அங்க போடற நாடகங்களையெல்லா சாதாரண ஜனங்க பாக்க முடியலீன்னுதானே நாங்க தெரு நாடகங்களெ போடறம்.. சின்ன சின்ன விஷயங்கள் ஜனங்களுக்குப் போகணுன்னுதான..”

 

புட்டா டிசைன் போட ஆரம்பித்தார்கள். ரங்கசாமி எதுவும் பேசாமல்        கொஞ்ச நேரம் நெய்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப்பின் எதையோ யோசித்துக் கொண்டிருப்பவர் போல் எழுந்து போனார். செம்பூத்தின் குரல் பக்கத்தில் இன்னும் அலைக்கழிந்து கொண்டிருந்தது.

“அப்பாவுக்கு நீ பேசறது புடிக்கலே போல இருக்கு..”

“புடிக்காமெ இருக்கலாம். நான் படிச்சு பெரிய வேலைக்கெல்லாம் போய் பெருமை தருவன்னு நெனச்சிருப்பார். ஆனா  ரொம்பவும் கொடுமையா இருக்கு.  அப்பா யதார்த்தத்தை மெல்ல மெல்ல புரிஞ்சிட்டுதா இருக்கார்ன்னு நெனக்கிறேன்..”

”நீ படிக்கிற புத்தகங்கள், போடற வீதி நாடகம்.. இதெல்லாம் சும்மா இருக்காமெ பொழுது போக்கறதுக்குத்தானே..”

“பொழுது போகறதுக்குன்னா நான் எதையும் படிக்கலாம். படிக்காமெ சோம்பேறித்தனமா கூட இருக்கலாம். நான் இதெல்லாம் எதுக்கு படிக்கறம்கறது நல்ல கேள்விதா. பொழுதுபோக நாடகம் போடாமெ சிந்தனை பண்றதுக்கு எதுக்கு கஷ்டப்படறமுங்க. நல்ல கேள்விதா. பதில் சொல்றேன்..”

அவளைப்பார்த்து நிதானமாய் பதில் சொல்ல ஆரம்பித்தான்

“ செரி.. சேலை மடிக்கவாச்சும் செய்..”

“ஏதாச்சும் வேலை எடுக்கணும். நான் மாட்டன்னா சொன்னன்.”

சேலையை  ‘அறுத்து’ தறி மீது போட்டபின்பு உடனடியாக மடிப்பதுதான் நல்லது என்பார் ரங்கசாமி. சேலையை அறுத்துப் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் கழித்து மடித்தால் அதன் விறைப்புத்தன்மை போய்விடும். மடிக்காமல் கவனப்பிசகாய் இருந்துவிட்டால் சுருங்கி சற்றே கூழ் மாதிரி ஆகிவிடும். புட்டாவும், ஜமுளும் வெளிப்புறமாகத் தெரிகிற மாதிரி மடிக்க வேண்டும். அதை சேலையின் வர்ண இழைகளாலேயே கட்ட வேண்டும். ராதிகா மடித்த சேலையை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் மரப்பெட்டியில் வைப்பாள். அதை மிகுந்த கவனத்துடன் நிமிர்த்தி வைப்பாள். அதை மறுமுறை மடிக்க ஆரம்பித்தாலே அதன் மினுமினுப்பு குறைந்துவிடும். கொஞ்சம் விட்டால் தண்ணீரில் போட்ட்து போல் கூழாகிவிடும்.

 

அம்மாவின் கல்யாணப்பட்டுப்புடவை ஒன்று அப்படித்தான் ஆகிப்போயிருந்தது. ரொம்ப நாள் துவைக்கவில்லையென்று தண்ணீரில் போட்டதும்  கூழ் போலாகிவிட்ட்து.

 

பொன்னுவின் கையில் சாயமினுமினுப்பு தெரிந்தது. மின்மினிகளின் வெளிச்சக் கீற்றை பார்ப்பது போல் பார்த்தான். சேலை அழகாய் மடித்து நிமிர்த்தி வைக்கப்படிருந்தது. கோமாளியண்ணன் வீட்டில் கூட. சிறு ஜட்டி அயிட்டங்களுக்கு சாயம் போடுவர். பெரிய அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி சாயப்பொடி போடுவர். வெள்ளைத் துண்டுத் துணிகளை முக்கி காயப்போடுவர். மீதித் தண்ணீர் சாக்கடையில் மினுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கும். அரிக்கமேட்டு சாயம் பற்றி அவர் ஒரு தரம் சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

மாவாசை பூஜையில் சவுண்டம்மன் அலங்காரத்தில் மினுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கைகளில் இருந்த ஆயுதங்கள் பளபளப்பாய் இருந்தன. அவள் விக்ரகம் முன் படையில் பெரிய வாழை இலையில் விரிந்து கிடந்தது. அமாவாசையின் உச்சகால் பூஜையின் போது ‘தளிகை’ பொங்கலை விசுவநாதன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். செல்லமாக்கா மகன் வீட்டு தளிகை விசேசமானது என்று சொல்லிக் கொள்வார்கள். கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தனுப்புவார்கள். கோவிலின் சுற்றுச்சுவர் சமீபத்தில் கட்டப்பட்டதால் வீதியில் நடந்து செல்வோர் கண்களில் படமாட்டார்கள். பூஜை நேரத்தில் வீதியில் இருந்து ஏதாவது சத்தம் கேட்பதால் கவனம் குறைவது இல்லாமலிருக்கும். “இது எவ்வளவு வருசத்துக்  கனவு” என்றார் பூசாரி ராமசாமி.

“சாமி கனவும்  சீக்கிரம் நிறைவேறாதா..”

“சாமிக்கு கொடுக்கறதும் நீங்கதானே”

ராமசாமி செகடந்தாளியிலிருந்து வந்தவர். அந்த ஊரில் அவர் அப்பா தலைமுறைகளாய் பூஜை செய்து வந்தார். ஊரில் தண்ணீர் கஷ்டம். கவுண்டகளின் தோட்டத்திற்குப் போய்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இது எத்தனை நாளைக்கு என்று திருப்பூருக்குக் கிளம்பி வந்து விட்டார்கள்.

“வேற ஜாதிக்காரனுக்கு அடிமையா இருக்கறது புடிக்காமெ புதுசா இங்க வந்தவங்கதா தாஸ்தி” என்பார் அவர்.

ன்று அமாவாசை. மெழுகி கோவில் பளிச்சென்றிருந்தது. அமாவாசை வருகிறதென்றாலே சில தினங்களால் அந்த நாளை என்ன செய்யலாம், எப்படி கழிக்கலாம் என்று யோசிப்பார்கள். உள்ளூர் செளண்டியம்மன் கோவிலுக்கு போவர். ஜாதி விசேசங்கள் இருந்தால் இருப்பர்.  சிலர் சென்னிமலை, சிவன்மலை, பேரூர் என்று கிளம்புவர். மற்றபடி அமாவாசை கட்டாய ஓய்வு என்பது போல சினிமாவுக்குச் செல்வது பெரும்பான்மையோரின் கட்டாய பொழுது போக்காக மாறிப் போய் விட்ட்து..

அந்த அமாவாசை எல்லோருக்கும் ஸ்டிரைக் பற்றின நினைவாகவே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் நாலுமணிக்கு சவுண்டியம்மன் கோவில் நெசவாளர் சங்க கூட்டமிருந்தது.” எல்லாம் நல்லதா நடக்கும்” என்றார் பூசாரி ராமசாமி.பல சமயங்களில்  துண்டுத்துணியை சவுண்டியம்மனுக்கு அமாவசை பூசையின் போது பூசைத் தட்டில் வைத்து விடுவதுண்டு.ஏதாவது வேண்டுதல் கூடவே இருக்கும். அம்மா நாகமணி  முறத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ துண்டுத்துணி வித்த காசிலெ சினிமா போறப்போ அம்மாவையும் கூட்டிகிட்டுப் போகணும் “  நாகமணி  மெல்லச் சிரித்தபடி தறிக்குழியைப் பார்த்தாள்.முறம் கையிலிருந்து நழுவிப்போய் இப்போது பழம் புடவையொன்று வந்து விட்டது. அதன் கிழிசலில் இனி கவன்ம் போகும்.

” நான் இல்லாமியா. சிவாஜி படமா “

“ எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்தப்புறம் சினிமாவெல்லா இலவசமாயிருமா “

“ அப்பிடி ஆகுமா தெரியலே. நம்ம தரித்தரம் தீரதுக்கு ஏதாச்சும் பண்னுனா செரி  “

     நாகமணி தான் போட்டிருந்த நெசவு ஜாக்கெட்டைப் பார்த்துக் கொண்டாள். நிறம் மங்கி நசிந்து போயிருந்தது. இனி எப்பவாவது போடும்போது டர் என்று கிழிந்து விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான். அவள் அம்மா ஜாக்கெட் போட்டிருந்தாள். பாட்டி போட்டதில்லை.  நெய்யும் துண்டுத்துணியை  கைச்செலவிற்காக விற்கிற காலம் வந்து விட்ட எண்ணம் நாகமணியின் முகத்தைக் கறுக்கச் செய்தது. முகம் தண்ணீரில் போட்டு கூழாகிப்போன கல்யாணப்புடவை போலாகியிருக்கும் என நினைத்தாள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.

 

 

 

 

சுப்ரபாரதிமணியன்.,         8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.  /                9486101003 )

 

 

 

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *